Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் நோயை சமாளித்தல்

மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் நோயை சமாளித்தல்

மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் நோயை சமாளித்தல்

ஏவஸ் என்ற பெண்மணி தனியாக காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்; திடீரென்று அவருடைய பார்வை மங்க ஆரம்பித்தது. உடனடியாக காரை நிறுத்தினார். சில நிமிடங்களுக்குப் பிறகு பார்வை தெளிவடைந்ததும் மீண்டும் காரை ஓட்டிச் சென்றார்; களைப்புதான் இதற்குக் காரணமென எண்ணினார். நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு விடுமுறையின்போது, நடுராத்திரியில் தலைவலியால் துடிதுடித்துப் போய் எழுந்தார். மருத்துவமனைக்கு சென்று காட்டியபோது, தமனி அல்லது சிரை ஓரிடத்தில் விரிவடைந்திருக்கலாம் (aneurysm) என டாக்டர் சந்தேகித்தார். அதனால் அனால்ஜிஸிக் மாத்திரை ஒன்றை அவருக்கு கொடுத்து, அவரை ஆப்சர்வேஷனில் வைத்தார்.

மறுநாள் வலி இருந்த இடமே தெரியவில்லை. என்றாலும் தன் சக்தி முழுவதையும் இழந்துவிட்டதைப் போல் அத்தனை களைப்பாக உணர்ந்தார். ஒரு டம்ளர் தண்ணீரைக்கூட கையில் பிடிக்க முடியவில்லை, வலது பக்கத்தில் கூச்ச உணர்வும், எரிச்சலும் ஏற்பட்டதை உணர்ந்தார். அவரும் அவருடைய கணவரும் தங்கள் விடுமுறையை பாதியிலேயே முடித்துக்கொண்டு கவலையோடு வீடு திரும்பினார்கள். மறுநாள் காலையில் உணவு உண்கையில் முள்கரண்டியை ஏவஸால் கையில் பிடிக்க முடியவில்லை, அப்போது அவரது உடலில் வலது பக்கம் முழுவதும் தளர்ந்து போனதை உணர்ந்தார். மருத்துவமனைக்கு சென்றபோது டாக்டர்கள் பல்வேறு பரிசோதனைகளைச் செய்தார்கள், அதன் மூலம், ஸ்ட்ரோக்கால் அவர் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தார்கள். நான்கு வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவத்தைப் பற்றி அறியாத டாக்டர்கள் பரிசோதனைகளிலிருந்து எந்த முடிவுக்கும் வரமுடியாமல் திண்டாடினார்கள். பல மாதங்களுக்குப் பிறகு ஏவஸின் வலது பக்கம் பழையபடி நல்ல நிலைக்கு திரும்பியது. எனவே ஏதோவொரு விநோதமான வைரஸ்தான் தன்னைத் தாக்கியிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு ஏவஸ் வந்தார்.

இன்னும் நான்கு வருடங்கள் உருண்டோடின. ஒருநாள் வெள்ளிக்கிழமை காலை ஏவஸ் தூங்கி எழுந்திருக்கையில் இடது கண்ணில் பார்வை மங்கியிருந்தது. மன அழுத்தமே அதற்குக் காரணம் என அவரது டாக்டர் சொன்னார். ஆனால் ஞாயிற்றுக்கிழமைக்குள் அந்தக் கண் சுத்தமாகவே தெரியவில்லை. பயந்துபோய் அழ ஆரம்பித்த அவர் டாக்டரிடம் சென்றபோது உடனடியாக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஸ்டீராய்ட் சிகிச்சை அளிக்கப்பட்டபோது ஓரளவு பார்வை திரும்பியது. அதன் பின், எக்கச்சக்கமான பரிசோதனைகள் செய்யப்பட்டன; கடைசியாக ஏவஸுக்கு வந்திருக்கும் நோயை டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள். அவரை மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் (MS) என்ற நோய் தாக்கியிருந்தது.

மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் என்றால் என்ன?

மூளையும் தண்டுவடமுமுள்ள மத்திய நரம்பு மண்டலத்தில் (CNS) ஏற்படும் வீக்கம் சம்பந்தப்பட்ட தீராத வியாதிதான் இந்த MS. இதை, தன்தடுப்பாற்றல் வியாதி (autoimmune disease) என அநேக மருத்துவர்கள் கருதுகிறார்கள். தன்தடுப்பாற்றல் வியாதி என்ற சொற்றொடர், நோய் எதிர்ப்பு அமைப்பு தகாத விதத்தில் செயல்பட்டு உடலிலுள்ள சில திசுக்களைத் தாக்கும் வியாதிகளின் தொகுதியைக் குறிக்கிறது. MS நோய் வருவதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் வைரஸினால் ஏற்படும் தொற்றால் ஒருவேளை இது ஆரம்பமாகலாம் என கருதப்படுகிறது. விளைவு? நோய் எதிர்ப்பு அமைப்பின் கூறுகள் CNS-னின் நரம்பிழைகளை மூடியுள்ள நரம்பு உறையை (myelin sheath)​—⁠முக்கியமான கொழுப்பு பொருளை⁠—⁠தாக்குகையில் அதில் கடினமான திசுக்கள் ஆங்காங்கே தட்டை வடிவில் (plaques) ஏராளம் தோன்றுவதாக தெரிகிறது. எனவே நரம்பிழைகளின் மீது ஏராளமாக தோன்றும் கடின திசுக்களையே மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் என்ற பெயர் குறிக்கிறது.

நரம்பு உறை ஒருவகை மின் கடத்தாப் பொருள் (electrical insulation) போல செயல்பட்டு சில நரம்பிழைகளைப் பாதுகாக்கிறது. ஆகவே நரம்பு உறை சீரழிந்து வருகையில் மின் இயங்கு விசைகள் (electrical impulses) முற்றிலும் தடைபட்டுவிடலாம், அல்லது குறுக்காக பாயும் மின்சாரத்தைப் போல் அருகிலுள்ள நரம்புகளைத் தாக்கி இயல்புக்கு மாறான இயங்கு விசையை உண்டு பண்ணலாம். CNS-⁠ல் எங்கு வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஒரு நோயாளியிடம் காணப்படும் அதே அறிகுறிகளை மற்றொரு நோயாளியிடம் பார்க்க முடியாது. ஒரே நோயாளிக்கு CNS-⁠ல் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து ஒவ்வொரு முறை நோய் தாக்கும்போதும் வெவ்வேறு அறிகுறிகள் தென்படலாம். இருப்பினும், அந்த அறிகுறிகளில் பெரும்பாலும் களைப்பு, பலவீனம், கையோ காலோ மரத்துப் போவது, நடக்க இயலாமை, பார்வை மங்குவது, கூச்ச உணர்வு, எரிச்சல், சிறுநீர்ப்பை மற்றும் குடல் செயல்பாட்டில் தொந்தரவுகள், கவனக்குறைவு, நிதானத்தை இழப்பது போன்றவை அடங்கும். எனினும் ஆறுதலளிக்கும் ஒரு விஷயம், பெரும்பாலான நோயாளிகள் “முற்றிலும் செயல்பட முடியாதளவுக்கு படுமோசமடைவதில்லை” என ஐக்கிய மாகாணங்களிலுள்ள த நேஷனல் மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் சொஸைட்டி சொல்கிறது.​—⁠“MS-⁠ன் நான்கு முக்கிய வகைகள்” என்ற பெட்டியைக் காண்க.

இந்நோயின் அறிகுறிகள் வேறு நோய்களின் அறிகுறிகளைப் போலவே இருக்கும்போது அதை ஆரம்பத்திலேயே கண்டறிவது கடினமாக இருக்கலாம்; ஏவாஸின் விஷயத்தில் இதுதான் நடந்தது. ஆனால் திரும்பத் திரும்ப ஒரே விதமான அறிகுறிகள் தென்பட்டுக் கொண்டிருந்தால், அது என்ன நோயென்று பொதுவாக டாக்டர்கள் வெகு தெளிவாக தீர்மானித்து விடுவார்கள்.​—⁠“MS நோய்க்கே உரிய பரிசோதனைகள்” என்ற பெட்டியைக் காண்க.

உலகெங்கும் சுமார் 25 லட்சம் பேர் MS நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில், கனடாவை சேர்ந்த சுமார் 50,000 பேரும் ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த 3,50,000 பேரும் அடங்குவார்கள். ஐக்கிய மாகாணங்களில் வாரா வாரம் சுமார் 200 பேருக்கு இந்நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. a “உடலில் ஏற்படும் காயங்களுக்கு அடுத்ததாக, வாலிபத்திலிருந்து நடுத்தர வயதுவரை நரம்பு சார்ந்த குறைபாட்டிற்கு பெரும்பாலும் [MS-தான்] காரணமாக இருக்கிறது” என ஒரு மருத்துவ புத்தகம் சொல்கிறது. இது ஆண்களைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பெண்களை பாதிக்கிறது, பொதுவாக அவர்களில் ஆரம்ப அறிகுறிகள் 20 முதல் 50 வயதுக்குள் தென்படுகின்றன.

MS நோய்க்கு சிகிச்சை அளித்தல்

MS நோய் குணப்படுத்த முடியாத நோயாக உள்ளது; எனவே அது மோசமடையாமல் தடுப்பதன் மூலம் அல்லது மோசமடைவதை தாமதப்படுத்துவதன் மூலமும், அதன் அறிகுறிகளை கட்டுப்படுத்துவதன் மூலமும் அதற்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முயலுகிறார்கள். MS நோய் மோசமடையாமல் தடுப்பதற்காகவும் அல்லது அது மோசமடைவதைத் தாமதப்படுத்துவதற்காகவும் அதன் பாதிப்பின் கடுமையைத் தணிப்பதற்காகவும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன; அவற்றில் குறைந்தது இரண்டு வகை இன்டர்ஃபெரான்களும் (நோய் தடுப்பு செல்களால் தயாரிக்கப்படும் ஓர் இயற்கை புரோட்டீன்) க்ளேடிர்மர் அசிட்டேட் (Glatiramer acetate) என்ற மருந்தும் உள்ளன.

வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பின்னடைவுகள் (relapses) ஏற்படுகையில் குணப்படுதலைத் துரிதப்படுத்தவும் கார்ட்டிகோஸ்டீராய்ட்டு என அழைக்கப்படும் மருந்துகளைக்கூட டாக்டர்கள் சில நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கிறார்கள். எனினும், “நீண்ட காலத்திற்கு கார்ட்டிகோஸ்டீராய்ட்டு சிகிச்சை அளிப்பது பொதுவாக பரிந்துரை செய்யப்படுவதில்லை; ஏனெனில், இது எலும்பு மெலிதல், குடல் புண்கள், சக்கரை வியாதி உட்பட பல்வேறு உடல்ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தலாம்” என்கிறது மருத்துவ வெளியீடான த மர்க் மான்யுவல். மேலும் ஸ்டீராய்ட் சிகிச்சை முறையால் நீண்ட கால நிவாரணம் எதுவும் இருக்காது. எனவே இந்த நோயின் ஆரம்ப கட்டத்தில் இதற்கு சிகிச்சை அளிக்க சில டாக்டர்கள் விரும்புவதில்லை. b

மற்றொரு அணுகுமுறையாக, பாதிக்கப்பட்ட நரம்பு உறைகளை சரிசெய்வதற்கான வழிகளைக் கண்டறிவதில் சில ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட சில பரம்பரை-செல்களை (progenitor cells) சோதனைக்கூட ஆராய்ச்சியில் அவர்கள் அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார்கள்; அவை நரம்பு உறைகளை உற்பத்தி செய்யும் முழு வளர்ச்சியடைந்த செல்களை (mature myelin-​producing cells) பெருமளவு உருவாக்குபவை. இந்த இயற்கையான செயல்முறையை தூண்டிவிட அவர்கள் கற்றுக்கொண்டால் பாதிக்கப்பட்ட நரம்புகளை உடல் தானாகவே சரிசெய்து கொள்ளும்படி ஊக்குவிக்கலாம்.

MS நோயை சமாளித்தல்

சமாளிக்க முடியாமல் தாங்கள் திண்டாடும் பிரச்சினைகளில் ஒன்று களைப்பு என்பதாக MS நோயால் பாதிக்கப்பட்டுள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தெரிவிக்கிறார்கள். நோய் அறிகுறிகளை களைப்பு இன்னும் மோசமாக்கலாம்; இதனால் ஒருவர் தன் வேலையைக்கூட இழந்துவிடலாம், அல்லது வேலையே கிடைக்காமலும், அப்படியே கிடைத்தாலும் நிரந்தரமாக வேலை பார்க்க முடியாமலும் போகலாம். பிறகு, நோய்மீதுள்ள கட்டுப்பாட்டை மெல்ல மெல்ல இழப்பதாக அவர் உணரலாம். எனவே, மதிய வேளையில் களைப்பாக உணருகிறவர்கள் தங்கள் வேலைகளை காலையிலேயே சீக்கிரமாக முடித்துவிட்டு தவறாமல் மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடுவது உதவியாக இருப்பதைக் கண்டிருக்கிறார்கள். உதாரணமாக, ஏவஸ், நாள்தோறும் மதிய வேளையில் ஒரு மணிநேரம் ஓய்வெடுப்பதால் வாலண்டியராக முழுநேர ஊழியத்தை அவரால் செய்ய முடிகிறது.

MS நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் பராமரிப்பைப் பொறுத்ததில் “மன அழுத்தத்தைக் குறைப்பது, சமநிலையான உணவுத்திட்டம், திடீரென பெருமளவு எடை குறைவதை தவிர்ப்பது, போதுமானளவு ஓய்வு எடுப்பது உட்பட” உடல்நலத்தைப் பேணிக் காப்பதன் முக்கியத்துவத்தை ஹாரிசன்ஸ் பிரின்ஸிபில்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிஸின் வலியுறுத்துகிறது. மன அழுத்தம் விரைவில் பின்னடைவுகளை ஏற்படுத்தலாம் என பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். எனவே மன அழுத்தத்திற்கான குறிப்பிட்ட காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை தவிர்ப்பது தனிப்பட்டவர்களுக்குப் பயனளிக்கும்.

மறுபட்சத்தில், MS-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் அதிக வேலை செய்யாமலும், களைப்பு ஏற்பட்டு விடாமலும், அல்லது அதிக உஷ்ணத்திலோ குளிரிலோ பாதிக்கப்படாமலும் முடிந்த மட்டும் சாதாரணமான, சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ வேண்டும். பொருத்தமான உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். “தவறாமல் உடற்பயிற்சி செய்வது (உதாரணமாக, ஒரே இடத்தில் நிற்கும் சைக்கிள் ஓட்டுவது, டிரெட்மில் ஓட்டுவது, நீச்சலடிப்பது, உடலை நிமிர்த்தி நேராக்கும் உடற்பயிற்சிகள் செய்வது) பரிந்துரை செய்யப்படுகிறது; இருதயத்தையும் தசைகளையும் நல்ல நிலையில் வைப்பதற்காகவும், தசை இறுக்கத்தைத் தளர்த்துவதற்காகவும், உளவியல் ரீதியில் பயன்களை பெறுவதற்காகவும் நோய் முற்றிய நிலையிலுள்ளவர்கள்கூட உடற்பயிற்சி செய்யும்படி பரிந்துரைக்கப்படுகிறது” என்கிறது த மர்க் மான்யுவல்.

“நம் உடம்பைப் பற்றி நாம் நன்கு அறிந்து வைத்திருப்பது அவசியம். அசாதாரணமான களைப்பை நான் உணரும்போதோ, அல்லது கை, கால்களில் கூச்சம் ஏற்பட்டாலோ மரத்துப் போனாலோ ஓரிரு நாட்களுக்கு காரியங்களை மெதுவாக செய்ய வேண்டுமென்பதை புரிந்துகொள்கிறேன். இது வியாதியை சமாளிக்க எனக்கு உதவியிருக்கிறது” என்கிறார் ஏவஸ்.

MS-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனச்சோர்வும் சவாலாக அமையலாம்; ஆனால் இது நோயின் காரணமாகத்தான் ஏற்படுகிறது என்று சொல்ல முடியாது. ஆரம்பத்தில் நோயைக் கண்டறிந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சிக்குப் பின்பு, இந்த நோயாளிகள் எல்லாரும் பல்வேறு நிலைகளில் துக்கத்தை அனுபவிக்கிறார்கள். நோய் வந்திருப்பதை ஒப்புக்கொள்ள மறுப்பது, கோபம், விரக்தி, சோகம், என்ன செய்வது ஏது செய்வது என தெரியாமல் குழம்புவது போன்ற உணர்ச்சிகள் ஏற்படலாம். இந்த உணர்ச்சிகள் இயல்பானவையே, பொதுவாக இவை காலப்போக்கில் குறைந்துவிடும், பிறகு, எதார்த்தமாக சிந்திக்கும் நிலை ஏற்படும்.

ஒருவருக்கு இந்த நோய் வந்திருப்பது தெரிய வருகையில், அவருடைய குடும்பத்தாரும் நண்பர்களும் கவலைப்பட ஆரம்பிப்பது சகஜம்தான். எனினும் அவர்கள் அந்த நோயைப் பற்றி கற்றறிந்து கொள்வதற்கு முயற்சி எடுத்தால், அந்த சூழ்நிலையை உடனடியாக அவர்களால் சமாளிக்க முடியும், அதோடு பாதிக்கப்பட்டவருக்கு பக்கபலமாகவும் இருக்க முடியும். உதாரணமாக MS நோயால் உயிருக்கு ஆபத்தில்லை, அது தொற்று நோயல்ல, பரம்பரை வியாதியுமல்ல என்பதையெல்லாம் அறிவது மனதிற்கு இதமளிக்கும். ஆனால் இந்நோய் பரம்பரை வியாதியாக இல்லாவிட்டாலும் அது வருவதற்கு பரம்பரையும் ஒரு காரணமாக இருக்கலாம் என பதிவுகள் காட்டுகின்றன.

MS-ஆல் பாதிக்கப்பட்ட அநேகர் பயனுள்ள, சந்தோஷமான வாழ்க்கை வாழ்கிறார்கள். ஏவஸ், கடவுளுடனுள்ள தன் உறவாலும், பைபிள் தரும் எதிர்கால நம்பிக்கையாலும் கூடுதலான பலத்தை பெற்றிருக்கிறார். ஆம், பைபிள் சொல்கிறபடி, கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் கீழ், “வியாதிப்பட்டிருக்கிறேன்” என யாரும் சொல்லாதிருக்கும் அந்த நாளைக் காண அவர் ஆவலோடு காத்திருக்கிறார். (ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:3, 4) நீங்கள் MS நோயால் அல்லது வேறு ஏதாவதொரு மோசமான உடல் உபாதையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் ‘தேவவசனம் தரும் ஆறுதல்’ உங்கள் மனதையும் காப்பதாக, உங்கள் சோதனைகளை இன்னும் சிறந்த விதத்தில் சமாளிப்பதற்கு உதவுவதாக.​—⁠ரோமர் 15:4, NW. (g03 11/22)

[அடிக்குறிப்புகள்]

a இந்தியாவில் MS நோய் வெகு அரிதாகவே காணப்படுகிறது.

b MS நோயால் பாதிக்கப்பட்ட 50 முதல் 60 சதவீதத்தினர் விட்டமின்களையும், தாதுப்பொருட்களையும், மூலிகைகளையும் இன்னும் பிறவற்றையும் உட்கொள்வதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இவற்றில் சில இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை, மற்றவையோ அவர்களுக்கு எந்தப் பயனும் அளிப்பதில்லை, சொல்லப்போனால் ஆபத்தானவையாகக்கூட இருக்கலாம். எனவே வேறு சிகிச்சை முறைகளை அல்லது உணவுத்திட்டங்களை நோயாளிகள் பின்பற்றத் தொடங்கும் முன்பு அதில் உட்பட்டுள்ள ஆபத்துக்களை ஆராய்வது அவசியம்.

[பக்கம் 12-ன் பெட்டி]

MS-⁠ன் நான்கு முக்கிய வகைகள்

முதல் வகை: Relapsing-remitting என்ற இந்த வகையே எல்லாவற்றையும்விட அதிகமாக காணப்படுகிறது; ஆரம்ப அறிகுறிகள் தோன்றுகையில் 70 முதல் 80 சதவீத நோயாளிகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். பின்னடைவு ஏற்படும் காலப்பகுதிகளை, தற்காலிகமாக நோய் தணியும் காலப்பகுதிகளிலிருந்து தெளிவாக பிரித்தறிய முடியும்; அச்சமயங்களில் அறிகுறிகள் மறையலாம் அல்லது ஓரளவுக்கு குறையலாம். பின்னடைவுகளுக்கு இடையே நோய் மோசமடைவதற்கான எந்த அறிகுறியும் தென்படுவதில்லை.

இரண்டாவது வகை: Secondary progressive என்ற இரண்டாவது வகை, ஆரம்பத்தில் முதல் வகையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சுமார் 70 சதவீதத்தினருக்கு வருகிறது. அவர்களுக்குத் தொடர்ந்து பின்னடைவுகள் ஏற்படலாம், அதே சமயத்தில் நரம்புகளின் செயல்பாடு மெல்ல மெல்ல குறைந்துகொண்டே வரும்.

மூன்றாவது வகை: Progressive-relapsing என்ற இந்த மூன்றாவது வகை சுமார் 10 சதவீத நோயாளிகளைப் பாதிக்கிறது, இந்த விதமான MS, ஆரம்ப அறிகுறிகள் முதற்கொண்டே தொடர்ந்து மோசமடைந்து வரும். நோயாளிகள் படுமோசமான பின்னடைவுகளை சந்திக்கிறார்கள்; அதன் பிறகு உடல்நலம் தேறலாம், தேறாமலும் போகலாம். முதல் வகையைப் போல் அல்லாமல் பின்னடைவுகளுக்கு இடையே இந்த நோய் மோசமடைகிறது.

நான்காவது வகை: Primary progressive என்ற இந்த நான்காவது வகை, நோயாளிகளில் 10 முதல் 15 சதவீதத்தினரைப் பாதிக்கிறது. பின்னடைவுகளும் தற்காலிக குணமடைதலும் ஏற்படாமல் இந்த வகை நோய் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. எனினும், காலம் செல்ல செல்ல அதன் மோசமடையும் விகிதம் வேறுபட்டுக் கொண்டே வரலாம்; அந்த சமயத்தில், நோய் தற்காலிகமாக சற்று குணமாவது போல் தோன்றலாம். 40 வயதுக்குப் பின்பு MS-⁠ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பொதுவாக வருகிறது.

[படத்திற்கான நன்றி]

ஆதாரங்கள்: யு.எஸ். நேஷனல் மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் சொஸைட்டி மற்றும் மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் இன் கிளினிக்கல் பிராக்டிஸ் என்ற புத்தகத்திலிருந்து. எந்த ஆதாரத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் சதவீத எண்ணிக்கைகள் சற்று மாறுபடும்.

[பக்கம் 13-ன் பெட்டி]

MS நோய்க்கே உரிய பரிசோதனைகள்

மேக்னடிக் ரிசோனன்ஸ் இமேஜிங் (MRI): இன்று அதிக பயனுள்ள உருப்பட (imaging) முறைகளில் இது ஒன்று; மூளையின் நுட்ப விவரங்கள் அடங்கிய உருப்படங்களை MRI கொடுக்க முடியும். வெளியே தெரியாமல் மறைந்திருக்கும் MS-⁠ன் அறிகுறிகளை இந்த உருப்படங்கள் வெளிப்படுத்தலாம் அல்லது நோயாளிக்கு வந்திருப்பது MS நோய்தான், வேறு நோய் அல்ல என்பதை திட்டவட்டமாக ஊர்ஜிதப்படுத்தலாம்.

பெருமூளை தண்டுவட நீர் ஆய்வு (CSF): தண்டுவட பகுதியிலிருந்து CSF எடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு அமைப்பின் குறிப்பிட்ட கூறுகளும் நரம்பு உறை சிதைவதால் உண்டாகும் கூறுகளும் அசாதாரண அளவுகளில் உள்ளனவா என்பதை டாக்டர்கள் ஆராய்வார்கள்.

பிரதிபலிப்பை காண்பதற்கான பரிசோதனை: நரம்புகளின் சமிக்கைகள் நரம்புகளின் பாதைகள் வழியாக பயணிக்க சராசரியாக எவ்வளவு நேரமெடுக்கின்றன என்பது கம்ப்யூட்டர் உதவியுடன் கணக்கிடப்படுகிறது. 80 முதல் 90 சதவீதமான MS நோயாளிகளிடம் அசாதாரண பிரதிபலிப்பு காணப்படுகிறது.

[பக்கம் 14-ன் பெட்டி/படங்கள்]

MS நோயை சமாளித்தல்

ஆதரவு: புரிந்துகொள்ளுதலையும் ஆதரவையும் காட்டும் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் நெருக்கமான உறவை வைத்துக்கொள்வது ஆரோக்கியத்தை அளிக்கிறது. உதவி தேவைப்படுகையில் கேளுங்கள், தனிமைப்படுத்திக் கொள்வதைத் தவிருங்கள்.

ஒளிவுமறைவின்றி உரையாடுங்கள்: MS நோயையும் அதன் சவால்களையும் பற்றி ஒளிவுமறைவின்றிப் பேச மனமுள்ளவர்களாக இருப்பது மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ள செய்கிறது, நோயை சமாளிப்பதற்கான உதவியையும் நோயாளிக்கு அளிக்கிறது. மறுபட்சத்தில், உரையாட தயங்குவது, தவறாக புரிந்துகொள்ளப்படுவதற்கும் விரக்திக்கும் தனிமைப்படுத்திக் கொள்வதற்கும் வழிநடத்தக்கூடும்.

ஆவிக்குரிய தன்மை: ஆவிக்குரிய தன்மை நம் ஆரோக்கியத்துக்கு சிறந்ததென்றும், எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையான மனநிலையோடிருப்பது போன்ற பயனுள்ள குணநலன்களை வளர்க்கிறதென்றும் அநேக ஆதாரங்கள் காட்டுகின்றன. இது, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய [யெகோவாவுடைய] வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாக உள்ளது.​—⁠மத்தேயு 4:4.

நகைச்சுவை உணர்வு: MS-நோய் நகைப்புக்குரிய விஷயமாக இல்லாவிட்டால்கூட, சிரிப்பு உடலுக்கும் உள்ளத்துக்கும் உகந்த அருமையான சிகிச்சை முறையாகும்.

[படத்திற்கான நன்றி]

மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் இன் கிளினிக்கல் பிராக்டிஸ் என்ற புத்தகத்திலிருந்து.

[பக்கம் 11-ன் படம்]

MS நோய் பொதுவாக ஆண்களைவிட பெண்களை இரண்டு மடங்கு அதிகமாக தாக்குகிறது

[பக்கம் 13-ன் படம்]

தவறாமல் உடற்பயிற்சி செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் உகந்தது