Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நோயை ஒழிப்பதில் வெற்றியும் தோல்வியும்

நோயை ஒழிப்பதில் வெற்றியும் தோல்வியும்

நோயை ஒழிப்பதில் வெற்றியும் தோல்வியும்

நோயாளியாக இருந்த தன் நண்பர் சாவின் விளிம்பைத் தொட்டுவிட்டதை ஆகஸ்ட் 5, 1942 அன்று டாக்டர் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் அறிந்தார். அவருக்கு தண்டுவட வீக்கம் (spinal meningitis) ஏற்பட்டிருந்தது; 52 வயதான தன் நண்பருக்கு ஃப்ளெமிங் அளித்த எல்லாவித சிகிச்சைக்கும் பலனின்றி அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நீலமும் பச்சையும் கலந்த ஒரு விநோதமான பூஞ்சணத்தால் உற்பத்தி செய்யப்படுகிற ஒரு பொருள் ஃப்ளெமிங்குடைய கண்ணில் தட்டுப்பட்டது. அதை அவர் பென்சிலின் என அழைத்தார். பாக்டீரியாவைக் கொல்லும் சக்தி அதற்கிருப்பதை அவர் கவனித்தார்; ஆனால் அதிலிருந்து சுத்தமான பென்சிலினை அவரால் பிரித்தெடுக்க முடியவில்லை. அதை வைத்து கிருமிநாசினிக்கான பரிசோதனையை மட்டுமே அவர் செய்து பார்த்தார். என்றாலும், 1938-⁠ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஹோவர்ட் ஃப்ளோரியும் அவருடைய ஆய்வுக் குழுவும் மனிதருக்கு அந்த பென்சிலின் மருந்தை ஏற்றி சோதித்துப் பார்ப்பதற்காக அதை போதுமானளவு தயாரிக்கும் படலத்தில் இறங்கினர். ஃப்ளோரிக்கு ஃப்ளெமிங் போன் செய்தார்; அவர் தன்னிடமிருந்த எல்லா பென்சிலினையும் அனுப்பி வைப்பதாக சொன்னார். அது ஃப்ளெமிங்குடைய நண்பரை காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பாக இருந்தது.

பென்சிலின் ஊசியை தசையில் போட்டும் பலன் கிடைக்கவில்லை, அதனால் ஃப்ளெமிங் அந்த மருந்தை தன்னுடைய நண்பரின் தண்டுவடத்திற்குள் நேரடியாக செலுத்தினார். நோய்க்குக் காரணமான நுண்ணுயிரிகளை அந்த பென்சிலின் அழித்துவிட்டது; சுமார் ஒரே வாரத்தில் அவர் முற்றிலும் குணமடைந்து ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்பினார். அப்போதுதான் ஆன்டிபயாட்டிக்குகளின் சகாப்தம் புலர்ந்தது, நோயை ஒழிக்கும் போராட்டத்தில் மனிதகுலம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியது.

ஆன்டிபயாட்டிக்குகளின் காலம்

ஆன்டிபயாட்டிக்குகள் முதன்முதலில் உற்பத்தி செய்யப்பட்டபோது, அவை அற்புத மருந்துகளாக தோன்றின. இதற்கு முன் பாக்டீரியா, பூஞ்சைகள், அல்லது பிற நுண்ணுயிரிகள் ஏற்படுத்திய குணப்படுத்த முடியாதிருந்த நோய்களையும் இப்போது வெற்றிகரமாக குணப்படுத்த முடிந்தது. இப்புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பால், மூளை உறையழற்சி, நிமோனியா, செங்காய்ச்சல் ஆகியவற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை மள மளவென்று குறைந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து நோய் தொற்றினாலே சாவுதான் கதி என்ற நிலை போய், அவ்வாறு தொற்றும் நோய்களெல்லாம் சில நாட்களுக்குள் குணப்படுத்தப்பட்டன.

ஃப்ளெமிங்கின் காலம் முதற்கொண்டு, இன்னும் அநேக ஆன்டிபயாட்டிக்குகளை ஆய்வாளர்கள் தயாரித்துள்ளார்கள், புதுப் புது ஆன்டிபயாட்டிக்குகளை இன்னும் கண்டுபிடித்துக் கொண்டுமிருக்கிறார்கள். கடந்த 60 ஆண்டுகளின் போது நோய்களை ஒழிக்கும் போராட்டத்தில் ஆன்டிபயாட்டிக்குகள் முக்கிய ஆயுதமாக இருந்திருக்கின்றன. ஜார்ஜ் வாஷிங்டன் இப்போது உயிரோடு இருந்திருந்தால், தொண்டை எரிச்சலுக்கு ஒரு ஆன்டிபயாட்டிக் கொடுத்து அவரை டாக்டர்கள் நிச்சயம் காப்பாற்றியிருப்பார்கள், ஒருவேளை ஓரிரு வாரங்களுக்குள் அவர் குணமடைந்திருப்பார். பலவிதமான தொற்று நோய்களிலிருந்து விடுபடுவதற்கு கிட்டத்தட்ட எல்லாருக்குமே ஆன்டிபயாட்டிக்குகள் உதவியிருக்கின்றன. இருந்தாலும், இந்த ஆன்டிபயாட்டிக்குகளுக்கும் சில குறைபாடுகள் இருப்பது யாவரறிந்த விஷயமாகிவிட்டது.

எய்ட்ஸ் அல்லது ஃப்ளூ போன்ற வைரஸால் தொற்றும் நோய்கள் ஆன்டிபயாட்டிக் சிகிச்சைகளுக்கெல்லாம் மசியாது. அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட சில ஆன்டிபயாட்டிக்குகள் சிலருடைய உடலுக்கு ஒத்துவராததால் அலர்ஜி ஏற்படுகிறது. பல்வேறு கிருமிகளைத் தாக்கும் ஆன்டிபயாட்டிக்குகள் நம் உடலுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை கொன்றுவிடும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் ஆன்டிபயாட்டிக்குகளை அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பயன்படுத்துவது ஒருவேளை பெரிய பிரச்சினையாக இருக்கலாம்.

வியாதியெல்லாம் சரியாகிவிட்டதென நினைப்பதாலோ ரொம்ப காலத்திற்கு மருந்து சாப்பிட வேண்டுமே என நினைப்பதாலோ டாக்டர் சொல்லியிருந்த காலம்வரை ஆன்டிபயாட்டிக் மருந்தை எடுத்துக்கொள்ளாமல் இடையில் நிறுத்தும்போது அளவுக்கு குறைவாக பயன்படுத்துவதால் வரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால், உடலுக்குள் அத்துமீறி நுழையும் பாக்டீரியாவை இந்த ஆன்டிபயாட்டிக் அழிக்காமல் போய்விடலாம்; அதோடு, எதிர்க்கும் திறனுள்ள பாக்டீரியா தப்பித்துக்கொண்டு வேகமாக பெருகிவிடுகின்றன. டிபி நோய்க்கு சிகிச்சையளிக்கும் விஷயத்தில் இதுதான் அடிக்கடி சம்பவித்திருக்கிறது.

இந்தப் புதிய ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதில் டாக்டர்களும் சரி விவசாயிகளும் சரி குற்றமுள்ளவர்கள். “ஐக்கிய மாகாணங்களில் பெரும்பாலும் தேவையில்லாமலேயே ஆன்டிபயாட்டிக்குகளை பயன்படுத்தும்படி சொல்லப்பட்டிருக்கிறது, இன்னும் பல நாடுகளிலோ கணக்கு வழக்கில்லாமல் அவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கால்நடைகளின் வியாதியை குணப்படுத்துவதற்காக அல்ல, ஆனால் அவற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காகவே பெருமளவில் இந்த மருந்துகள் கொடுக்கப்பட்டன; நுண்ணுயிரிகளின் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு இதுவே முக்கிய காரணம்” என விளக்குகிறது மனிதரும் நுண்ணுயிரிகளும் என்ற புத்தகம். இதன் விளைவாக, “புதிய ஆன்டிபயாட்டிக்குகள் நமக்கு கிடைக்காமல் போய்விடலாம்” என அப்புத்தகம் எச்சரிக்கிறது.

ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்க்கும் நோய்க்கிருமிகளைப் பற்றிய இந்தக் கவலைகள் ஒருபுறமிருந்தாலும், 20-⁠ம் நூற்றாண்டின் கடைசி 50 ஆண்டுகள் மருத்துவத் துறை வெற்றி வாகை சூடிய ஆண்டுகளாக இருந்தன. கிட்டத்தட்ட எந்த நோயையும் முறியடிக்கும் மருந்துகளை மருத்துவ ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியும் என அப்போது தோன்றியது. நோய்களை வருமுன் தடுப்பதற்காக தடுப்பு மருந்துகளும் கொடுக்கப்பட்டன.

மருத்துவ விஞ்ஞானத்திற்கு கிடைத்த வெற்றிகள்

“மக்களின் நலனுக்காக நோய்த் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்திருப்பதே சரித்திரத்தில் அதிக வெற்றியை அளித்திருக்கிறது” என குறிப்பிட்டது 1999 உவர்ல்ட் ஹெல்த் ரிப்போர்ட். உலகெங்குமுள்ள மக்களுக்கு நோய்த் தடுப்பு மருந்துகளை அளிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளால் ஏற்கெனவே கோடிக்கணக்கானோரின் உயிரை பாதுகாக்க முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தடுப்பு மருந்து திட்டத்தின் மூலமே பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டிருக்கிறது; இந்த உயிர்க்கொல்லி நோய் 20-⁠ம் நூற்றாண்டில் நடந்த எல்லா போர்களிலும் மரித்த மொத்த ஆட்களைவிட அதிகமானோரை விழுங்கியுள்ளது. இதைப் போன்ற மற்றொரு திட்டம் போலியோவை ஏறக்குறைய ஒழித்துக்கட்டியிருக்கிறது. (“பெரியம்மை மற்றும் போலியோ மீது வெற்றிகள்” என்ற பெட்டியைக் காண்க.) இன்று பொதுவாக உயிரை அச்சுறுத்தி வரும் நோய்களிலிருந்து பாதுகாக்க அநேக குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

இன்னும் பல நோய்கள் பலரும் அறிந்திராத திட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. போதுமான சுகாதாரமும் சுத்தமான தண்ணீர் வசதியும் உள்ள இடங்களை தண்ணீர் மூலம் பரவும் காலரா போன்ற நோய்கள் அரிதாகவே பாதிக்கின்றன. அநேக நாடுகளில் டாக்டரிடமும் மருத்துவமனைகளுக்கும் செல்வதற்கான வசதி பெருகிவிட்டதால் பெரும்பாலான நோய்களை அவை உயிருக்கு ஆபத்து விளைவிப்பதற்கு முன்பே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிகிறது. ஊட்டச் சத்துள்ள உணவு, சிறந்த வாழ்க்கை சூழல், அதோடு உணவை சரியாக கையாளுவது, கெடாமல் பத்திரப்படுத்தி வைப்பது போன்றவை சம்பந்தப்பட்ட சட்டங்களை அமல்படுத்தியதும்கூட மக்களின் ஆரோக்கியம் மேம்படுவதற்கு காரணமாக இருந்திருக்கின்றன.

தொற்று நோய்களுக்கான காரணங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவுடன் அவற்றை பரவாமல் தடுப்பதற்கு மருத்துவ நிறுவனங்களால் நடைமுறையான படிகளை எடுக்க முடிந்திருக்கிறது. அதற்கு ஒரேவொரு எடுத்துக்காட்டை பார்க்கலாம். 1907-⁠ல் சான் பிரான்ஸிஸ்கோவில் ப்யூபோனிக் பிளேக் திடீரென பரவியபோது சிலரே அதற்கு பலியானார்கள். காரணம், எலிகள் மீதுள்ள உண்ணிகள் மூலம் அந்த நோய் பரவியதால் எலிகளை ஒழித்துக்கட்ட அந்த நகரில் தீவிர முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் இந்தியாவிலோ 1896 முதற்கொண்டு 12 ஆண்டுகளில் அதே நோய்க்கு கோடிக்கணக்கானார் பலியாகியிருந்தார்கள்; ஏனெனில் அதற்கான முக்கிய காரணம் அப்போது கண்டுபிடிக்கப்படாதிருந்தது.

நோயை முறியடிப்பதில் தோல்விகள்

சில குறிப்பிடத்தக்க போராட்டங்களில் வெற்றி கிடைத்திருப்பது உண்மையே. ஆனால், பொது சுகாதாரத்தைப் பொறுத்தவரை, பணக்கார நாடுகளில் மட்டுமே வெற்றி கிடைத்திருக்கிறது. குணப்படுத்த முடிகிற நோய்கள் இன்றும் கோடிக்கணக்கானோரை காவுகொள்கிறதென்றால், நிதிப் பற்றாக்குறையே அதற்கான ஒரே காரணம். ஏழை நாடுகளில் மக்கள் இப்போதும்கூட போதிய சுகாதாரம், மருத்துவ பராமரிப்பு, சுத்தமான தண்ணீர் இன்றி கஷ்டப்படுகிறார்கள். இந்த அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வது பெரும் பாடாகி விட்டது. ஏனென்றால் ஏழை நாடுகளில் உள்ள அநேகர் கிராமப்புறத்தை விட்டு பெருநகரங்களில் வந்து குவிகிறார்கள். இதனால் “பணக்கார நாட்டவரைவிட ஏழை நாட்டவரே, வியாதியால் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்” என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

மற்ற நாடுகளைவிட சில நாடுகள் மட்டும் இவ்வாறு நோயினால் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் சுயநலத்தினால் முன்யோசனையின்றி நடந்துகொள்வதே. “உலகை மிக மோசமாக பாதித்த உயிர்க்கொல்லி நோய்கள் சில [வளர்ந்த நாடுகளை விட்டு] மறைந்து விட்டன. . . . இவற்றில் சில ஏழைகள் வாழும் வெப்பமண்டல நாடுகளிலும் மிதவெப்ப பிராந்தியங்களிலும் மட்டுமே அல்லது பெரும்பாலும் அங்குதான் காணப்படுகின்றன” என குறிப்பிடுகிறது மனிதரும் நுண்ணுயிரிகளும் என்ற புத்தகம். பணக்கார நாடுகளும், மருந்து கம்பெனிகளும் நேரடியான நன்மையை பெற முடியாது என்பதால் இந்த நோய்களின் சிகிச்சைக்காக நிதி ஒதுக்க தயங்குகின்றன.

மனிதரின் பொறுப்பற்ற நடத்தையும்கூட நோய் பரவுவதற்கு ஒரு காரணமாகும். இந்தக் கொடுமையான உண்மைக்கு மிகச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் வைரஸ்; இது உடலில் சுரக்கும் திரவங்கள் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. சில ஆண்டுகளுக்குள் இந்தக் கொள்ளைநோய் உலகத்தையே வளைத்துப் பிடித்திருக்கிறது. (“எய்ட்ஸ்​—⁠இன்றைய கொள்ளைநோய்” என்ற பெட்டியைக் காண்க.) “மனிதன் தனக்குத்தானே இதை வருவித்துக் கொண்டான். இவ்வாறு சொல்வதால் மக்களின் ஒழுக்க நெறிகளை கேள்வி கேட்பதாக அர்த்தமில்லை, ஆனால் அதுதான் உண்மை” என கொள்ளைநோயியல் நிபுணர் ஜோ மெக்கார்மிக் ஆணித்தரமாக கூறுகிறார்.

மனிதர் இந்த எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் வைரஸை எப்படி தங்களை அறியாமலேயே மற்றவர்களுக்கு பரப்பியிருக்கிறார்கள்? த கம்மிங் பிளேக் என்ற புத்தகம் பின்வரும் காரணிகளை பட்டியலிடுகிறது: சமூக மாற்றங்கள்​—⁠முக்கியமாக பலருடன் பாலுறவு கொள்ளும் பழக்கம்​—⁠பால்வினை நோய்கள் பரவுவதற்கு வழிவகுத்துள்ளன, இது வைரஸ் நன்கு பெருகுவதற்கும் ஒருவரிடமிருந்து அநேகருக்கு தொற்றுவதற்கும் வசதியாக அமைந்துவிடுகிறது; வளரும் நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்கெனவே உபயோகித்ததும் கிருமிகள் தொற்றியதுமான ஊசிகள் பயன்படுத்தப்படுவது அல்லது போதை மருந்துகளை ஏற்றிக்கொள்வதற்காக இவ்வாறு ஏற்கெனவே உபயோகித்த ஊசிகளை பயன்படுத்துவது; உலகெங்குமுள்ள இரத்த தானம் மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகிற நிறுவனங்களும்கூட இரத்த தானம் செய்த ஒருவர் மூலமாக அதைப் பெற்றுக்கொள்ளும் அநேகருக்கு எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் வைரஸை கடத்துகின்றன.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக பயன்படுத்துவது எதிர்ப்புசக்திமிக்க நுண்கிருமிகள் உருவாகுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. இது மேன்மேலும் தீவிரமடையும் பெரிய பிரச்சினையாகும். புண் தொற்றுகள் வருவதற்கு காரணமான ஸ்டஃபைலோகாக்கஸ் பாக்டீரியாவை எளிதில் ஒழிப்பதற்கு பென்சிலினிலிருந்து எடுக்கப்படும் மருந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகள் இப்போது திறம்பட்டவையாக இல்லை. ஆகவே விலையுயர்ந்த, புது ஆன்டிபயாட்டிக் மருந்துகளை டாக்டர்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது; வளரும் நாடுகளிலுள்ள மருத்துவமனைகளிலோ அத்தகைய மருந்துகளை வாங்குவதற்கு போதிய பண வசதி இல்லை. புதுப் புது ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கும்கூட சில கிருமிகள் மசிவதில்லை, இதனால் ஆஸ்பத்திரி மூலம் பரவும் நோய்கள் சர்வ சகஜமாகி, உயிரையும் அபகரித்து விடலாம். தற்போது “நுண்கிருமிகளின் எதிர்ப்பு சக்தி எனும் கொள்ளைநோயை” நாம் எதிர்ப்பட்டுக் கொண்டிருப்பதாக ஐ.மா. அலர்ஜி மற்றும் தொற்று நோய்களின் தேசிய நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான டாக்டர் ரிச்சர்ட் கிராவ்ஸே வெளிப்படையாகவே கூறுகிறார்.

“இன்று நாம் அதிக முன்னேற்றம் அடைந்திருக்கிறோமா?”

இந்த 21-⁠ம் நூற்றாண்டின் துவக்கத்தில், நோய்களின் அச்சுறுத்தல் ஓயவில்லை என தெள்ளத் தெளிவாக தெரிகிறது. படுவிரைவாக பரவிவரும் எய்ட்ஸ், மருந்துகளுக்கு மசியாத கிருமிகள், டிபி, மலேரியா போன்ற அந்தக் காலத்து உயிர்க்கொல்லி நோய்களின் புதிய படையெடுப்பு இவையெல்லாம் நோய்களை ஒழிக்கும் போராட்டத்தில் இன்னும் வெற்றி கிட்டவில்லை என்பதையே காட்டுகின்றன.

“கடந்த நூற்றாண்டைவிட இன்று நாம் அதிக முன்னேற்றம் அடைந்திருக்கிறோமா?” என கேட்டார் நோபல் பரிசு பெற்ற ஜாஷுவா லிடர்பர்க். “பெரும்பாலான அம்சங்களில் நாம் முன்பிருந்ததைவிட மோசமான நிலையில்தான் இருக்கிறோம். கிருமிகளைப் பற்றி கவலைப்படாமல் இருந்துவிட்டோம், அதனால் இப்போது அவை நம்மைத் திருப்பித் தாக்குகின்றன” என்றும் அவர் சொன்னார். மருத்துவ விஞ்ஞானமும் உலகின் அனைத்து நாடுகளும் முழுமூச்சோடு எடுக்கும் முயற்சிகளால் தற்போதைய பிரச்சினைகளை சமாளிக்க முடியுமா? பெரியம்மை நோயைப் போல இன்று முக்கியமாக பரவிவரும் நோய்களையும் கடைசியில் ஒழித்துக்கட்ட முடியுமா? இக்கேள்விகளுக்கு பதிலை அடுத்த கட்டுரையில் காணலாம். (g04 5/22)

[பக்கம் 8-ன் பெட்டி/படம்]

பெரியம்மை, போலியோ மீது வெற்றி

இயல்பான விதத்தில் பரவும் பெரியம்மை கண்டிருந்த கடைசி நபரை அக்டோபர் 1977-⁠ன் இறுதியில் உலக சுகாதார நிறுவனம் (WHO) கண்டுபிடித்தது. ஆலி மாவ் மாலின் என்பவர் ஓர் ஆஸ்பத்திரியில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார்; அவர் சோமாலியாவைச் சேர்ந்தவர். அவரை இந்த நோய் கடுமையாக தாக்கவில்லை, எனவே ஒருசில வாரங்களுக்குள் அவர் நன்கு குணமடைந்தார். அவரோடு தொடர்பு வைத்திருந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இரண்டு ஆண்டுகளாக டாக்டர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஏனென்றால் “பெரியம்மை நோய் தொற்றியவர்” எவரையாவது கண்டுபிடித்தால் அவருக்கு ரூ. 50,000 சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் யாருமே தகுந்த அத்தாட்சிகளை அளித்து சன்மானம் பெறவில்லை. ஆகவே, “இந்த உலகம் பெரியம்மை நோயிலிருந்து விடுதலை பெற்றது” என மே 8, 1980-⁠ல் WHO முறைப்படியாக அறிவிப்பு செய்தது. அதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஓர் ஆண்டில் சுமார் 20 லட்சம் மக்களை இந்த பெரியம்மை காவுகொண்டது. சரித்திரத்தில் முதல்முறையாக, ஒரு பெரிய தொற்று நோய் விரட்டியடிக்கப்பட்டிருந்தது. a

பிள்ளைகளை முடமாக்கும் போலியோ, அதாவது இளம்பிள்ளைவாதமும்கூட இதேவிதமாக ஒழிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 1955-⁠ல் ஜோனாஸ் ஸால்க் என்பவர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை தயாரித்தார். அதைத் தொடர்ந்து ஐக்கிய மாகாணங்களிலும் பிற நாடுகளிலும் போலியோ தடுப்பு மருந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பிற்பாடு சொட்டு மருந்துகள் தயாரிக்கப்பட்டன. 1988-⁠ல் போலியோவை ஒழிப்பதற்கான ஓர் உலகளாவிய திட்டத்தை WHO ஆரம்பித்து வைத்தது.

“1988-⁠ல் இந்தத் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்த சமயத்தில் ஒவ்வொரு நாளும் 1000-⁠க்கும் அதிகமான குழந்தைகளை போலியோ முடமாக்கி வந்திருந்தது. ஆனால், 2001-⁠ல் ஒரு வருடத்திற்கே 1000-⁠க்கும் மிகக் குறைவான குழந்தைகள்தான் பாதிக்கப்பட்டன” என்று அப்போது WHO-வின் டைரக்டர் ஜெனரலாக இருந்த டாக்டர் க்ரோ ஹார்லம் ப்ரன்ட்லான் அறிவிக்கிறார். இப்போது பத்துக்கும் குறைவான நாடுகளில் மட்டுமே இந்த போலியோ காணப்படுகிறது. என்றாலும், இந்நாடுகளிலிருந்தும் இந்நோயை முழுமையாக ஒழிக்க வேண்டுமென்றால் இன்னும் அதிகமான நிதி தேவைப்படும்.

[அடிக்குறிப்பு]

a சர்வதேச தடுப்பு மருந்து திட்டம் மூலமாக ஒழிக்கப்பட வேண்டிய ஒரு நோயாக பெரியம்மை இருந்தது; ஏனெனில், எலிகள், பூச்சிகள் போன்றவற்றின் மூலமாக பரவும் நோய்களைப் போல் அல்லாமல் இந்தப் பெரியம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ் ஒருவரின் உடலுக்குள்ளேயே வாழ்கிறது.

[படம்]

ஓர் எத்தியோப்பிய சிறுவனுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது

[படத்திற்கான நன்றி]

© WHO/P. Virot

[பக்கம் 10-ன் பெட்டி/படம்]

எய்ட்ஸ்​—⁠இன்றைய கொள்ளைநோய்

உலகையே அதிரவைக்கும் ஒரு புதிய கொள்ளைநோயாக எய்ட்ஸ் உருவெடுத்துள்ளது. ஏற்கெனவே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்நோய் கண்டுபிடிக்கப்பட்டது முதற்கொண்டு ஆறு கோடிக்கும் அதிகமானோரை இது தொற்றியுள்ளது. இந்த எய்ட்ஸ் கொள்ளைநோய் இன்னும் அதன் “ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது” என மருத்துவ துறைகள் எச்சரிக்கின்றன. இந்நோய் தொற்றப்படுவோரின் விகிதம் “முன்பு நினைத்தைவிட கிடுகிடுவென ஏறிக்கொண்டு செல்கிறது,” அதோடு இந்நோய் அதிகமாக தாக்கியுள்ள நாடுகளில் விளைவுகள் படுமோசமாக உள்ளன.

“உலகெங்கும் இந்த எச்ஐவி வைரஸ்/எய்ட்ஸ் நோய் தொற்றி வாழ்வோரில் பெரும்பாலானோர் நன்கு உழைக்கும் வயதில் இருப்பவர்களே” என விளக்குகிறது ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கை. இதனால் தென் ஆப்பிரிக்காவிலுள்ள பல நாடுகள் 2005-ஆம் ஆண்டிற்குள்ளாக 10 முதல் 20 சதவீத வேலையாட்களை இழந்துவிடும் என நம்பப்படுகிறது. “ஆப்பிரிக்காவில் சகாராவின் தென் பகுதிகளில் இப்போது ஒருவரின் சராசரி ஆயுட்காலம் 47 வயது. எய்ட்ஸ் நோய் வந்திராவிடில் அது 62 வயதாக இருந்திருக்கும்” என அந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகள் எதுவுமே இதுவரை பலன்தரவில்லை. வளரும் நாடுகளில் எய்ட்ஸால் அவதிப்படும் 60 லட்சம் மக்களில் 4 சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சை பெறுகிறார்கள். தற்போது, எய்ட்ஸ் நோய்க்கு எந்த நிவாரணியும் இல்லை. இந்த நோயின் வைரஸ் தொற்றிய பெரும்பாலோர் சீக்கிரத்தில் இந்நோயால் பீடிக்கப்பட்டு பலியாவார்கள் என டாக்டர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

[படம்]

டி லிம்ஃபோசைட் செல்களை எச்ஐவி வைரஸ் தொற்றியுள்ளது

[படத்திற்கான நன்றி]

Godo-Foto

[பக்கம் 7-ன் படம்]

வெல்ல கடினமான ஒரு வைரஸை பரிசோதனைக்கூட பணியாளர் ஒருவர் பரிசோதிக்கிறார்

[படத்திற்கான நன்றி]

CDC/Anthony Sanchez