Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு நல்ல அப்பாவாக இருக்க

ஒரு நல்ல அப்பாவாக இருக்க

ஒரு நல்ல அப்பாவாக இருக்க

“பிள்ளைகளை உருவாக்குவது எளிது, ஆனால் ஒரு நல்ல அப்பாவை உருவாக்குவது எளிதல்ல.” மனதைக் கவரும் இந்த வாசகம் இகானமிஸ்ட் என்ற பத்திரிகையில், சீரழிந்து வரும் குடும்ப வாழ்க்கையைப் பற்றிய ஒரு கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வாழ்க்கையில் அநேக காரியங்கள் கடினமானவையாக இருந்தாலும் அவை எல்லாவற்றையும்விட கடினமான, அதே சமயத்தில் மிகவும் முக்கியமான ஒன்று உள்ளது. அதுதான் ஒரு நல்ல அப்பாவாக இருப்பது. தங்களுடைய குடும்ப நலனுக்கும் மகிழ்ச்சிக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் ஒவ்வொரு அப்பாமாரும் நல்ல அப்பாவாக இருக்க விரும்புவது அவசியம்.

ஏன் எளிதல்ல

நேரடியாக சொன்னால், இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களும் பிள்ளைகளும் வழிவழியாய் சுதந்தரித்த அபூரணமே. “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது” என பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 8:21) இதனால்தான், “என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்” என ஒரு பைபிள் எழுத்தாளர் ஒத்துக்கொண்டார். (சங்கீதம் 51:5; ரோமர் 5:12) சுதந்தரிக்கப்பட்ட பாவத்தினால் ஏற்படும் இந்த கெட்ட மனச்சாய்வு, ஒரு நல்ல அப்பாவாக இருப்பதற்குரிய அநேக முட்டுக்கட்டைகளில் ஒன்று மட்டுமே.

இந்த உலகமும்கூட ஒரு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஏன்? ஏனென்றால், இந்த ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது’ என பைபிள் சொல்கிறது; அவன் “பிசாசு என்றும் சாத்தான் என்றும்” அழைக்கப்படுகிறான். சாத்தானை ‘இப்பிரபஞ்சத்தின் தேவன்’ எனவும் பைபிள் அழைக்கிறது. ஆகவே, தம்மைப் போல தம்மைப் பின்பற்றுகிறவர்களும் இந்த ‘உலகத்தின் பாகமாக’ இருக்கக் கூடாதென இயேசு சொன்னதில் ஆச்சரியமில்லை.​—1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 12:9; 2 கொரிந்தியர் 4:4; யோவான் 17:16.

அப்படியானால், நம்முடைய அபூரணம், பிசாசாகிய சாத்தான், அவனுடைய ஆதிக்கத்தின் கீழிருக்கும் இந்த உலகம் ஆகியவற்றைக் குறித்து ஒரு தகப்பன் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது மிக மிக முக்கியம். இந்த முட்டுக்கட்டைகள் எல்லாம் ஏதோ கற்பனையானவையல்ல. அவை நிஜமானவை! ஆனால் இவற்றையெல்லாம் சமாளித்து எப்படி ஒரு நல்ல தகப்பனாக இருக்க முடியும்?

தெய்வீக முன்மாதிரிகள்

இந்த முட்டுக்கட்டைகளை எதிர்த்துப் போராடுவது எப்படி என்பதை ஒரு தகப்பன் பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளலாம். அருமையான முன்மாதிரிகள் அதில் உள்ளன. ‘பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே’ என்று சொல்லி ஜெபம் செய்ய தம் சீஷர்களுக்கு இயேசு கற்றுக் கொடுத்தபோது மிகச் சிறந்த முன்மாதிரி வைத்தவரை அடையாளம் காட்டினார். நம் பரலோக பிதாவைப் பற்றி பைபிள் வர்ணிக்கையில், ‘தேவன் அன்பாக இருக்கிறார்’ என சொல்கிறது. இந்த அன்பான முன்மாதிரிக்கு ஒரு மனித தகப்பன் எப்படி பிரதிபலிக்க வேண்டும்? “நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போல . . . அன்பிலே நடந்துகொள்ளுங்கள்” என அப்போஸ்தலன் பவுல் அறிவுறுத்தினார்.​—மத்தேயு 6:9, 10; 1 யோவான் 4:8; எபேசியர் 5:1, 2.

நீங்கள் ஓர் அப்பாவாக இருந்தால், கடவுள் தம் மகனிடம், அதாவது இயேசுவிடம் நடந்துகொண்ட விதத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை இப்போது கவனியுங்கள். இயேசு தண்ணீரில் முழுக்காட்டப்பட்ட போது வானத்திலிருந்து கடவுளுடைய சத்தம் உண்டானது என மத்தேயு 3:17 (NW) சொல்கிறது; அந்தச் சத்தம், “இவர் என்னுடைய மகன், மிகவும் நேசமானவர், இவரை அங்கீகரித்திருக்கிறேன்” என்று சொன்னது. இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

முதலாவதாக, ஒரு அப்பா யாரிடமாவது ‘இவன் என்னுடைய மகன்’ அல்லது ‘இவள் என்னுடைய மகள்’ என பெருமையோடு சொன்னால் அதைக் கேட்கும் ஒரு பிள்ளைக்கு எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். பெற்றோரின் கவனிப்பைப் பெறும் பிள்ளைகள், முக்கியமாக பாராட்டும் உற்சாகமும் பெறும் பிள்ளைகள் ஜோராக வளருவார்கள். இதனால் அப்பாவின் பாராட்டை பெறும் விதத்தில் நடந்துகொள்வதற்காக ஒரு பிள்ளை அதிகமதிகமாக முயலலாம்.

இரண்டாவதாக, “மிகவும் நேசமானவர்” என்று இயேசுவை குறிப்பிடுவதன் மூலம் அவர் மீது வைத்திருந்த பாசத்தை கடவுள் காட்டினார். இந்த வார்த்தைகள் இயேசுவின் மனதை நிச்சயம் நெகிழ செய்திருக்கும். அதுபோல, பிள்ளைகள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பதை உங்களுடைய வார்த்தைகள் மூலமும், உங்களுடைய நேரம், கவனிப்பு, அக்கறை மூலமும் காட்டினால் அவர்களும்கூட உற்சாக வெள்ளத்தில் திளைப்பார்கள்.

மூன்றாவதாக, கடவுள் தமது குமாரனிடம், “உம்மில் பிரியமாயிருக்கிறேன்” என்று சொன்னார். (மாற்கு 1:11) ஒரு அப்பா இப்படி சொல்வதும்கூட மிக முக்கியமான ஒன்று; அதாவது, தன்னுடைய பிள்ளைகளிடம் அவர்கள் தனக்குப் பிரியமானவர்கள் என சொல்வது முக்கியம். பிள்ளைகள் அடிக்கடி தவறு செய்கிறார்கள் என்பது உண்மைதான். ஏன், நாம் எல்லாருமேதான் தவறு செய்கிறோம். ஆனால், பாராட்டத்தக்க காரியங்களை உங்களுடைய பிள்ளைகள் செய்யும்போதோ சொல்லும்போதோ ஒரு தகப்பனாக அவர்களிடம் பிரியத்தைக் காட்ட வழி தேடுகிறீர்களா?

இயேசு தம் பரலோக தகப்பனிடமிருந்து நன்கு கற்றிருந்தார். அவர் பூமியில் இருந்தபோது, பிதா தம் பூமிக்குரிய பிள்ளைகள் மீது எத்தகைய அன்பு வைத்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தினார்; அதைத் தமது வார்த்தையிலும் முன்மாதிரியிலும் வெளிப்படுத்திக் காட்டினார். (யோவான் 14:9) இயேசு பிஸியாக இருந்தபோதும், டென்ஷனாக இருந்தபோதும்கூட பிள்ளைகளோடு உட்கார்ந்து பேசுவதற்கு நேரம் செலவிட்டார். “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்” என்று தம் சீஷர்களிடம் சொன்னார். (மாற்கு 10:14) தகப்பன்மாரே, யெகோவா தேவன் மற்றும் அவரது குமாரனுடைய முன்மாதிரியை நீங்கள் அப்படியே பின்பற்ற முடியுமா?

நல்ல முன்மாதிரி அத்தியாவசியம்

உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரி வைப்பது மிக முக்கியம். கடவுளுடைய சிட்சையை ஏற்றுக்கொண்டு அதன்படி நீங்கள் நடக்கவில்லை என்றால், உங்களுடைய பிள்ளைகளைக் “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்ப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சியெல்லாம் வீணாகி விடலாம். (எபேசியர் 6:4) இருந்தாலும், கடவுள் கொடுத்த இந்த கட்டளையை நிறைவேற்றும்போது உண்டாகும் எந்தத் தடையையும் அவருடைய உதவியோடு உங்களால் சமாளிக்க முடியும்.

முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த விக்டர் கூட்ஷ்மிட் என்ற ஒரு யெகோவாவின் சாட்சியின் உதாரணத்தை கவனியுங்கள். தன்னுடைய மத நம்பிக்கையைப் பற்றி பிறரிடம் பேசியதற்காக அக்டோபர் 1957-⁠ல் அவருக்கு பத்து வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தன்னுடைய மனைவி பலினாவையும் இரண்டு சிறிய மகள்களையும் விட்டுப் பிரிய வேண்டியதாயிற்று. சிறையில் இருக்கும்போது, வீட்டிற்கு லெட்டர் போட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது, ஆனால் கடவுளையோ மத சம்பந்தமான விஷயத்தையோ பற்றி அதில் எதுவும் எழுத அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் ஒரு நல்ல அப்பாவாக இருக்கவே விக்டர் தீர்மானித்தார்; கடவுளைப் பற்றி பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பது அதிக முக்கியம் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர் என்ன செய்தார்?

அவர் சொல்கிறார்: “யங் நேச்சரலிஸ்ட், நேச்சர் ஆகிய சோவியத் பத்திரிகைகளைப் பார்த்து அதிலுள்ள மிருகங்கள், மனிதர்கள் படங்களை ஒரு போஸ்ட் கார்டில் வரைந்து, அதோடு இயற்கையைப் பற்றிய ஒரு கதையையோ அனுபவத்தையோ எழுதி அனுப்பினேன்.”

பலினா இவ்வாறு கூறுகிறார்: “இந்த போஸ்ட் கார்டுகள் கையில் கிடைத்ததும் அதிலுள்ள படங்களையும் விஷயங்களையும் பைபிளோடு சம்பந்தப்படுத்திப் பார்த்தோம். உதாரணமாக, அழகான இயற்கை காட்சி, காடுகள் அல்லது ஆறுகளின் படம் போஸ்ட் கார்டில் இருந்தால் ஏசாயா 65-⁠ம் அதிகாரத்தை நான் வாசித்து காட்டுவேன்.” அந்த அதிகாரத்தில் இந்தப் பூமியை ஒரு பூங்காவனமாக மாற்றப்போவதைப் பற்றிய கடவுளின் வாக்குறுதிகள் உள்ளன.

விக்டரின் மகள் யூலியா இவ்வாறு சொல்கிறாள்: “அதற்குப்பின் மம்மி எங்களோடு உட்கார்ந்து ஜெபம் பண்ணுவாங்க, நாங்க எல்லாரும் அழுவோம். நாங்க நல்ல பிள்ளைங்களா வளருவதற்கு இந்த போஸ்ட் கார்டுகள் ரொம்ப உதவியாக இருந்தது.” இதனால், “என்னோட பொண்ணுங்க சின்ன வயசுலேயே கடவுள் மேல் ரொம்ப அன்பு வைத்திருந்தாங்க” என்று பலினா கூறுகிறார். இப்போது அந்தக் குடும்பம் எப்படி இருக்கிறது?

விக்டர் இவ்வாறு விளக்குகிறார்: “என்னுடைய ரெண்டு பிள்ளைகளையுமே கிறிஸ்தவ மூப்பர்களுக்குத்தான் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறோம். இப்போது அவங்க ரெண்டு பேருமே ஆன்மீக ரீதியில் பலமான குடும்பங்களாக அவரவர் பிள்ளைகளோடு யெகோவாவை உண்மையுடன் சேவித்து வர்றாங்க.”

சிறந்த முன்மாதிரி வைப்பதற்கு சாமர்த்தியம் மட்டுமல்ல, ஆனால் பெரும் முயற்சியும் தேவை. நல்ல முன்மாதிரி வைப்பதற்காக கஷ்டப்பட்டு முயற்சி செய்வதை பிள்ளைகள் பார்க்கையில் அவர்களுடைய உள்ளம் பூரிப்படைகிறது. முழுநேர ஊழியத்தில் பல வருடங்கள் செலவிட்ட ஒரு மகன் தன்னுடைய அப்பாவைப் பற்றி நன்றியுள்ளம் பொங்க இவ்வாறு கூறினார்: “சில சமயங்களில் டாடி வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் எங்கே சாயலாம் என்பது போல் அவ்வளவு டயர்டாக இருப்பாங்க, ஆனாலும் குடும்ப பைபிள் படிப்பு தவறாமல் நடக்கும்; இதனால் குடும்ப படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நாங்க புரிந்துகொண்டோம்.”

ஆகவே, ஒரு நல்ல அப்பாவாக இருப்பதற்கு சொல்லிலும் செயலிலும் சிறந்த முன்மாதிரி வைப்பது அத்தியாவசியம் என்பது தெளிவாகிறது. “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என பைபிளின் நீதிமொழி ஒன்று கூறுகிறது. இது எவ்வளவு உண்மை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீங்கள் சிறந்த முன்மாதிரி வைப்பது அவசியம்.​—நீதிமொழிகள் 22:6.

ஆகவே, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது மட்டுமே முக்கியமானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எதைச் செய்கிறீர்களோ, அதாவது நீங்கள் வைக்கும் முன்மாதிரியே முக்கியம். “நாம் விரும்புகிற விதமாக பிள்ளைகள் நடப்பதற்கு சிறந்த வழி நாமே அவ்வாறு நடந்து காட்டுவதுதான்” என சிறு பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான கனடா நாட்டு வல்லுநர் ஒருவர் எழுதினார். அப்படியானால், ஆன்மீக விஷயங்களுக்குப் பிள்ளைகள் மதிப்பு கொடுக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், நீங்கள் முதலில் மதிப்பு கொடுப்பது மிகவும் முக்கியம் என்பதில் சந்தேகமில்லை.

அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்!

உங்களுடைய நல்ல முன்மாதிரியை பிள்ளைகள் பார்க்க வேண்டும். அதாவது, அவர்களோடு நீங்கள் நேரம் செலவிட வேண்டும்​—⁠இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் என்றல்ல, ஆனால் அதிக நேரத்தை செலவிட வேண்டும். ‘நேரத்தை விலை கொடுத்து வாங்குங்கள்’ என்ற பைபிளின் ஆலோசனைக்கு கவனம் செலுத்துங்கள்; பிள்ளைகளோடு நேரம் செலவிடுவதற்கு, அதிக முக்கியத்துவம் இல்லாத காரியங்களை விட்டுவிடுங்கள். (எபேசியர் 5:15, 16, NW) சொல்லப்போனால், உங்களுடைய பிள்ளைகளைவிட வேறு எதுதான் உங்களுக்கு முக்கியம்? ஒரு பெரிய டிவியா, கோல்ஃப் விளையாட்டா, அழகான வீடா அல்லது உங்களுடைய வேலையா?

“இப்போதே கொடு, அல்லது பின்னால் கஷ்டப்படு” என்ற பழமொழி ஒன்றுண்டு. பிள்ளைகள் வளர்ந்த பின் ஊர் மேய்வது அல்லது ஆன்மீக காரியங்களுக்கு துளியும் மதிப்பு கொடுக்காமல் இருப்பது அப்பாமாருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. பிள்ளைகளுக்கு அப்பா ரொம்பவே தேவைப்பட்ட சமயத்தில் அந்த சின்னஞ்சிறிய பிள்ளைகளோடு இருந்து அவர்களை கவனிக்க தவறவிட்டதை நினைத்து அப்பாமார் புலம்புகிறார்கள்.

உங்களுடைய பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும் சமயம்தான், நீங்கள் செய்யும் தெரிவுகளின் பலாபலன்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டிய சமயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிள்ளைகள் “ஆண்டவர் அருளும் செல்வம்” என பைபிள் சொல்கிறது, கடவுள் தாமே உங்களிடம் ஒப்படைத்திருக்கும் செல்வம் அது. (சங்கீதம் [திருப்பாடல்கள்] 127:3, பொது மொழிபெயர்ப்பு) ஆகவே, அவர்களுக்காக நீங்கள் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்!

உதவி உண்டு

பிள்ளைகளுக்குப் பிரயோஜனமாக இருப்பதற்கு ஏற்ற உதவியைப் பெறுவதில் ஒரு நல்ல அப்பா ஆர்வம் காட்டுகிறார். தனக்கு குழந்தை பிறக்கப் போவதைப் பற்றி மனோவாவின் மனைவியிடம் ஒரு தேவதூதன் சொன்னபோது, கடவுளிடம் மனோவா இவ்வாறு ஜெபம் செய்தார்: “[அவர்] மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப் போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்ய வேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக.” (நியாயாதிபதிகள் 13:8, 9) இன்றுள்ள பெற்றோரைப் போலவே மனோவாவுக்கு எப்படிப்பட்ட உதவி தேவைப்பட்டது? நாம் பார்க்கலாம்.

தென் ஆப்பிரிக்காவில், கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரியும் ப்ரென்ட் பர்காயின் இவ்வாறு குறிப்பிட்டார்: “உங்களுடைய பிள்ளைக்கு நீதிநெறிகளை கற்றுக் கொடுப்பதுதான் நீங்கள் கொடுக்கிற மிகப் பெரிய பரிசு.” பிள்ளைகளுக்கு அப்படிப்பட்ட நீதிநெறிகளை கற்றுக்கொடுப்பதன் அவசியத்தை டெய்லி யோமியுரி என்ற ஜப்பானிய செய்தித்தாளின் அறிக்கையிலிருந்து தெரிந்துகொள்ள முடியும். அது இவ்வாறு குறிப்பிட்டது: “பொய் சொல்லக் கூடாது என்று 71 சதவீத ஜப்பானிய பிள்ளைகளுக்கு அவர்களுடைய அப்பாமார் சொல்லிக் கொடுத்ததே இல்லை என [ஓர்] சுற்றாய்வு காட்டுகிறது.” இது ஒரு வருத்தகரமான அறிக்கை அல்லவா?

நம்பகமான நீதிநெறிகளை யாரால் அளிக்க முடியும்? மனோவாவுக்கு உதவிய அதே நபர்தான்​—⁠கடவுள்தான்! உதவி அளிப்பதற்காக, கடவுள் தம் அருமை மகன் இயேசுவை போதகராக அனுப்பினார்; பொதுவாக, இந்த பெயரிலேயே அவர் அழைக்கப்படுகிறார். சிறு பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கு உதவியாக இயேசுவின் போதனைகள் அடங்கிய பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகம் இப்போது அநேக மொழிகளில் கிடைக்கிறது.

பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற இந்தப் புத்தகத்தில் கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையிலான நீதிநெறிகள் மட்டுமல்ல, அவற்றை விளக்குவதற்கு கேள்விகளோடு சித்தரிக்கப்பட்டுள்ள 160-⁠க்கும் அதிகமான படங்களும் உள்ளன. உதாரணமாக, “நாம் ஏன் பொய் சொல்லக்கூடாது?” என்ற 22-⁠ம் அதிகாரத்தில் உள்ள படம் இப்பத்திரிகையின் 32-⁠ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் அந்தப் படம் கொடுக்கப்பட்டுள்ள பக்கத்தில் “ஒரு பையன் தன் அப்பாவிடம் ‘நான் வீட்டிற்குள் பந்தை உதைத்து விளையாடவே இல்லை’ என்று சொல்லலாம். ஆனால் உண்மையில் அவன் பந்தை உதைத்து விளையாடியிருக்கலாம். ஆகவே அவன் அப்படி சொல்வது சரியா?” என எழுதப்பட்டுள்ளது.

“சொன்ன பேச்சைக் கேட்பது உனக்கு பாதுகாப்பு,” “ஆசையாக இருந்தாலும் தவறு செய்யக்கூடாது,” “அன்பைப் பற்றி ஒரு பாடம்,” “திருடவே திருடாதே!,” “பார்ட்டிகளுக்கு போவது கடவுளுக்குப் பிடிக்குமா?,” “கடவுளை எப்படி சந்தோஷப்படுத்துவது,” “நாம் ஏன் வேலை செய்ய வேண்டும்?” போன்ற அதிகாரங்களிலும் சிந்திக்க வைக்கும் பாடங்கள் உள்ளன. இவை இப்புத்தகத்திலுள்ள 48 அதிகாரங்களில் சிலவேயாகும்.

இப்புத்தகத்தின் முன்னுரையில் முடிவாக இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது: “எல்லா ஞானத்திற்கும் பிறப்பிடமாகிய நம் பரலோக தகப்பனாகிய யெகோவா தேவனிடம் பிள்ளைகள் முக்கியமாக வழிநடத்தப்பட வேண்டும். இதைத்தான் பெரிய போதகரான இயேசு எப்போதும் செய்தார். யெகோவாவுக்கு பிரியமான விதத்தில் வாழ்க்கையை வடிவமைத்து நித்திய ஆசீர்வாதங்களைப் பெற உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இந்தப் புத்தகம் உதவும் என மனதார நம்புகிறோம்.” a

ஆகவே, ஒரு நல்ல அப்பாவாக இருக்க, பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரி வைக்க வேண்டும், அவர்களோடு நிறைய நேரம் செலவிட வேண்டும், பைபிளில் காணப்படும் கடவுளுடைய தராதரங்களின்படி வாழ அவர்களுக்கு உதவ வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. (g04 8/22)

[அடிக்குறிப்பு]

a குடும்பங்களுக்கு உதவும் வகையில் யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டுள்ள பிற புத்தகங்கள்: என்னுடைய பைபிள் கதை புத்தகம், இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் மற்றும் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்.

[பக்கம் 8-ன் படம்]

சிறைவாசத்திலும் விக்டர் கூட்ஷ்மிட் ஒரு நல்ல அப்பாவாக திகழ்ந்தார்

[பக்கம் 8, 9-ன் படங்கள்]

விசுவாசத்தின் நிமித்தம் சிறையில் இருந்தபோது தன் பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்காக விக்டர் வரைந்த படங்கள்

[பக்கம் 9-ன் படம்]

1965-⁠ல் விக்டரின் மகள்கள்

[பக்கம் 10-ன் படம்]

பிள்ளைகளுக்கு அப்பாமார் ஆர்வமாக கற்றுக் கொடுக்க வேண்டும்