Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

மூளைக்குப் பாரமா?

“ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வேலைகளைச் செய்வது மூளைக்குக் கஷ்டமாகிறது” என அறிக்கை செய்கிறது கனடாவில் வெளியாகும் டோரன்டோ ஸ்டார் என்ற செய்தித்தாள். ஒரே சமயத்தில் ஏகப்பட்ட வேலைகளைச் செய்யும்போது திறமை குறைவுபடுகிறது, பிழைகள் ஏற்படுகிறது, வியாதியும்கூட வருகிறது என்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. உதாரணமாக, அது “நினைவாற்றலைக் குறைக்கிறது, முதுகுவலியை ஏற்படுத்துகிறது, ஃப்ளூ, அஜீரணம் போன்ற வியாதிகள் வர காரணமாகிறது, பற்களையும் ஈறுகளையும்கூட சேதப்படுத்துகிறது.” ஐ.மா. உடல்நல தேசிய நிறுவனங்களின் ஆய்வின்படி, ஆட்கள் குறிப்பிட்ட வேலைகளைச் செய்யும்போது மூளையின் வெவ்வேறு பகுதிகள் தூண்டுவிக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் கார் ஓட்டும்போதே செல் போனில் பேசுவது போன்ற இரண்டு, மூன்று வேலைகளை ஒரே சமயத்தில் செய்ய முயலும்போது “உண்மையில் மூளையின் செயல்பாடு ஸ்தம்பித்துவிடுகிறது. மூளையால் அதைச் செய்ய முடிவதில்லை, அதைச் செய்யவும் மறுக்கிறது” என்கிறார் டாக்டர் ஜான் ஸ்லாட்கி; இவர் ஈமாரி பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணராவார். தாங்கள் செய்ய நினைக்கும் எல்லாவற்றையும் மூளையால் செய்ய முடியாது என்பதை ஆட்கள் புரிந்துகொண்டு, அதற்கேற்ப மெதுவாக செயல்பட வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். (g04 10/22)

“ஹை ஜம்ப்” சாம்பியன்கள்

“பூச்சிகளின் உலகில் ஒரு புதிய ஹை ஜம்ப் சாம்பியன்” என்று த டைம்ஸ் ஆஃப் லண்டன் என்ற செய்தித்தாள் ஃப்ராக்ஹாப்பர் (froghopper) என்ற ஒரு வகை பூச்சியைப் பற்றி அறிக்கை செய்கிறது. அந்தச் சின்னஞ்சிறு பூச்சியால் 70 சென்டிமீட்டர் உயரம் வரை தாவிக் குதிக்க முடியுமாம். இது, 180 மீட்டருக்கும் அதிக உயரமுள்ள வானளாவிய கட்டடத்தை ஒரு நபர் தாண்டிக் குதிப்பதற்குச் சமம்! அந்தப் பூச்சியின் பின்னங்கால் தசைகள் கவண் போல் செயல்படுகின்றன; இவை அந்தப் பூச்சி குதிக்க ஆரம்பிக்கையில் ஏராளமான உந்துவிசையை ஏற்படுத்துகின்றன; இதை மால்கம் பாரோஸ் என்பவர் அதிவிரைவு காமராக்களை வைத்துக் கண்டுபிடித்தார்; இவர் இங்கிலாந்தில், கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டியில் பேராசிரியராக இருக்கிறார். இவரது கணிப்பின்படி, ஃப்ராக்ஹாப்பர் குதிக்கையில் அது பூமியின் புவியீர்ப்பு விசையை 400 மடங்குக்கும் அதிகமாக எதிர்த்து செயல்பட வேண்டியிருக்கிறது; இது, ஒரு விண்கலத்தை வானில் செலுத்த தேவைப்படும் விசையைவிடவும் 130 மடங்கு அதிகமாகும்” என அந்தச் செய்தித்தாள் சொல்கிறது. (g04 10/8)

எத்தனையோ இளைஞருக்கு இருண்ட எதிர்காலம்

“மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தினர் 25 வயதுக்கும் குறைவானவர்களாக இருக்கிறார்கள், அதாவது சரித்திரத்திலேயே இளைய தலைமுறையினர் பெருமளவு இருக்கும் காலம் இது” என 2003-⁠க்கான ஐநா உலக ஜனத்தொகையின் நிலை அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த இளைஞர்களுக்கு என்ன எதிர்கால வாய்ப்புகள் உள்ளன? லண்டனில் வெளியாகும் தி இன்டிப்பென்டன்ட் செய்தித்தாள் சொல்கிறபடி, “சரித்திரத்திலேயே பெரும் எண்ணிக்கையில் இருக்கும் இளைய தலைமுறையினர், இதுவரை இல்லாதளவுக்கு இப்போது ஆபத்துகளை எதிர்ப்படுகிறார்கள்; எய்ட்ஸ், பிற பால்வினை நோய்கள், இளவயது திருமணம், கருத்தரித்தல், பிளவுபட்ட குடும்பங்கள், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது, வன்முறை ஆகியவற்றாலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாலும் அவர்கள் ஆபத்துகளை எதிர்ப்படுகிறார்கள் என ஐநா ஜனத்தொகை நிதியின் இயக்குநரான டாக்டர் தாரய்யா ஓபேட் சொன்னார்.” உதாரணத்திற்கு, புதிதாக ஹெச்ஐவி தொற்றப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். வளரிளமை பருவத்தினரில், ஒவ்வொரு 14 நொடிக்கும் ஒருவர் என்ற வீதத்தில் ஹெச்ஐவி தொற்றுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்திலும் சரி, பிரசவ காலத்திலும் சரி வயதுவந்தவர்களைவிட பருவ வயதினருக்கு மரண அபாயம் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 40 லட்சம் இளைஞர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. (g04 10/8)

40 வயதில் தாய்மை அடைவோர் அதிகரிப்பு

இத்தாலிய தாய்மார்கள் தங்கள் முதல் பிள்ளையைப் பெற்றெடுக்கும் சராசரி வயது அதிகரித்துள்ளது. 1980-⁠ல், 20 வயது நிரம்பிய இத்தாலிய பெண்களின் மத்தியில் பிள்ளைப்பேறு வீதம் ஆயிரம் பேருக்கு 74.3 ஆக இருந்தது, ஆனால் 2000-⁠ல் அந்த வீதம் 20.7-ஆக தடாலென சரிந்தது. அதே காலப்பகுதியில் 40 வயது பெண்களின் மத்தியில் பிள்ளைப்பேறு வீதம் ஆயிரம் பேருக்கு 12.2-லிருந்து 16.2-ஆக அதிகரித்தது. இந்தப் புள்ளிவிவரத்தை இத்தாலிய தேசிய புள்ளியியல் நிறுவனம் (ISTAT) தொகுத்தது, கோரீரே டேல்லா சேரா என்ற செய்தித்தாள் அதைப் பிரசுரித்தது; நீண்ட காலம் காத்திருந்து பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளும் போக்கு இருப்பதை இந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது. ISTAT-⁠ன்படி, “தங்களுக்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும், வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பதற்காக குழந்தை பெற்றுக்கொள்வதை ஜனங்கள் தள்ளிப்போடுகிறார்கள், அதுமட்டுமல்ல, தங்கள் சுதந்திரம் பறிபோகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அதைத் தள்ளிப்போடுகிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும், குழந்தையை அவர்கள் சுமையாகவும் இடைஞ்சலாகவுமே கருதுகிறார்கள்.” (g04 10/8)

கர்ப்பமாயிருக்கையில் அல்ட்ராசவுண்டு​—⁠ஜாக்கிரதை!

அமெரிக்காவிலுள்ள கர்ப்பிணிகளில் அநேகரிடம், “மலரும் நினைவுகளின் வீடியோக்கள்” இருக்கின்றன; இவை அல்ட்ராசவுண்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர்களுடைய பிறவாக் குழந்தைகளை மிகத் தெளிவாக படம்பிடித்த வீடியோக்கள் என FDA கன்ஸ்யூமர் பத்திரிகை அறிக்கை செய்கிறது. மிக அதிக அதிர்வெண்களை உடைய ஒலி அலைகளை உடலின் திசுக்களில் பாய்ச்சி எதிரொலிகளின் மூலம் கம்ப்யூட்டரில் பெறப்படும் உருவப் படங்கள்தான் அல்ட்ராசவுண்டு பிம்பங்கள் (சோனோகிராம்ஸ்). இந்த பிம்பங்கள் பதிவுசெய்யப்பட்டு, மலரும் நினைவு வீடியோக்களாக அல்லது படங்களாகத் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை தயாரித்துக் கொடுக்கும் கம்பெனிகள், அமெரிக்கா முழுவதிலுமுள்ள ஷாப்பிங் சென்டர்களில் மளமளவென முளைத்திருக்கின்றன. இவற்றில் பணிபுரிபவர்கள் மருத்துவமனைகளில் அல்ட்ராசவுண்டு செய்முறைகளின் மூலம் வயிற்றிலுள்ள சிசுவினுடைய பிம்பங்களைத் தயாரித்துக் கொடுப்பவர்களைப் போல் அல்ல. இவர்கள் பயிற்சியும் உரிமமும் பெறாதவர்களாய் இருக்கலாம். எனவே ஒலி அலைகளை இவர்கள் அதிகளவில் அல்லது அதிக நேரம் செலுத்திவிடலாம். எனவே, ‘மருத்துவ தேவை ஏற்பட்டால் தவிர மற்றபடி சிசுவின் பிம்பங்களை எடுப்பது ஆபத்தானது’ என FDA கன்ஸ்யூமர் பத்திரிகை சொல்கிறது. (g04 10/8)

கர்ப்பிணிகளைக் காக்கும் எப்சம் உப்பு

நீர்கலந்த மெக்னீசியம் சல்பேட்டை (எப்சம் உப்பு) பயன்படுத்தி அதிக செலவாகாத, எளிய சிகிச்சையை கர்ப்பிணிகளுக்கு அளிக்க முடியும்; இது உயிருக்கு ஆபத்தான பேறுகால வலிப்பு (Eclampsia) ஏற்படுவதை 50 சதவீதம் குறைக்க முடியுமென விளக்குகிறது லண்டனில் வெளியாகும் த டைம்ஸ் செய்தித்தாள். இந்தப் பேறுகால வலிப்பு, அதாவது வலிப்புகளை உண்டாக்கும் ஒருவகை ஆபத்தான உயர் இரத்த அழுத்தம், உலகெங்கும் வருடத்திற்கு 50,000-⁠க்கு அதிகமான கர்ப்பிணிகளையும் அவர்களது பிறவா பிள்ளைகளையும் கொன்றுவிடுகிறது. அமெரிக்காவில், பேறுகாலத்துக்கு முன்னாக ஏற்படும் வலிப்புகளுக்கு சிகிச்சையளிக்க இந்த மெக்னீசியம் சல்பேட் வருடக்கணக்கில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது, என்றாலும் மற்ற அநேக நாடுகளில் அது இந்தளவுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை; ஆரம்பத்திலேயே இத்தகைய சிகிச்சையை அளிக்காவிட்டால் பேறுகால வலிப்பு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, இங்கிலாந்தில், ஆக்ஸ்ஃபர்ட்டிலுள்ள, இன்ஸ்டிட்யூட் ஃபார் ஹெல்த் சையன்ஸஸ் என்ற நிறுவனத்தின் பன்னாட்டு மருத்துவர்கள் குழு, “33 நாடுகளிலுள்ள 10,000 பெண்களுக்கு இந்த உப்பைப் பயன்படுத்தி சோதிப்பதன் மூலம் பலன்களைக் கண்டறிய தீர்மானித்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு . . . சிகிச்சை அதிக பயனுள்ளதாய் இருப்பது தெள்ளத் தெளிவானதால் சோதனை சீக்கிரத்திலேயே நிறுத்தப்பட்டது; பேறுகாலத்துக்கு முன்னாக ஏற்படும் வலிப்புகளுக்கு மெக்னீசியம் சல்பேட்டை உபயோகித்து சிகிச்சை அளித்தது வலிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை 58 சதவீதம் குறைத்திருந்தது. மரணம் ஏற்படும் வாய்ப்பை 45 சதவீதம் குறைத்திருந்தது” என த டைம்ஸ் செய்தித்தாள் கூறுகிறது. இந்தச் சிகிச்சையைப் பெற “ஒரு பெண்ணுக்கு 220 ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது, . . . எனவே இந்தச் சிகிச்சையை வளரும் நாடுகளிலுள்ள பெண்களும் பெற முடியும்.” (g04 10/22)

டீனேஜர்களின் சாப்பாட்டு பழக்கங்கள்

“தங்களுடைய ‘ஷேப்பை’ பற்றி கவலைப்படுவதாலும், ஃபேஷன் மாடல்களையும் பிரபல நட்சத்திரங்களையும் போலிருக்க வேண்டுமென்ற ஆசையாலும் பள்ளி செல்லும் டீனேஜ் பெண்களில் அநேகர் சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறார்கள்” என லண்டனில் வெளியாகும் டெய்லி டெலிகிராஃப் சொல்கிறது. பிரிட்டனிலுள்ள ஸ்கூல்ஸ் ஹெல்த் எஜுக்கேஷன் யூனிட் என்ற நிறுவனம் 3,00,000 மாணவர்களின் சாப்பாட்டு பழக்கங்களை ஆய்வு செய்தது; அதன்படி, 14, 15 வயதுள்ள 40 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் “காலையில் சாப்பிடாமல் பள்ளிக்குச் சென்றார்கள். 1984-⁠ல் நடத்தப்பட்ட இதே போன்ற ஆய்வின் புள்ளிவிவரத்துடன் ஒப்பிடுகையில், இப்படிக் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.” மதிய உணவு சாப்பிடாதிருப்பவர்களின் எண்ணிக்கையும்கூட அதிகரித்துள்ளது; 1984-⁠ல் இது 2 சதவீதமாக இருந்தது, 2001-⁠ல் 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. சாப்பிடுவதில் ஏற்படும் பிரச்சினைகள், பசியில்லா உளநோய் (Anorexia Nervosa), பெரும் பசிநோய் (Bulimia) போன்ற விபரீதங்களில் போய் முடிவடைந்து விடலாம் என்பதால், மாணவியரின் எடையைக் கண்காணிக்கும்படி பள்ளி முதல்வர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. சாப்பாட்டைக் குறைத்துக் கொள்வதில் பையன்களும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த விஷயத்தில் இவர்கள் மத்தியிலும் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது; முன்பு 12, 13 வயதுள்ளவர்களில் 26 சதவீதத்தினரும் 14, 15 வயதுள்ளவர்களில் 21 சதவீதத்தினரும் எடையைக் குறைக்க ஆசைப்பட்டார்கள், ஆனால் இப்போதோ அவர்களது வீதம் முறையே 31 சதவீதமாகவும் 25 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. (g04 10/22)