Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மற்றவர்கள் தங்கள் பிரச்சினைகளைச் சொல்லும்போது நான் என்ன செய்ய வேண்டும்?

மற்றவர்கள் தங்கள் பிரச்சினைகளைச் சொல்லும்போது நான் என்ன செய்ய வேண்டும்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

மற்றவர்கள் தங்கள் பிரச்சினைகளைச் சொல்லும்போது நான் என்ன செய்ய வேண்டும்?

“அந்தப் பொண்ணு என்னோட ஸ்கூலில்தான் படிக்கிறாள். அவளோட அப்பா அம்மா விவாகரத்து செய்யப் போறாங்களாம், அந்தப் பிரச்சினைகளுக்கு நடுவிலே அவள் எல்லாப் பாடத்திலும் ரொம்ப கம்மியான மார்க் வாங்க ஆரம்பிச்சா. தன்னோட குடும்பப் பிரச்சினைகளைப் பத்தி எப்பவுமே என்கிட்டே வந்து சொல்லுவா.”​—⁠ஜேன், வயது 14.

“என்கூடப் படிச்ச பொண்ணு, ஒரு பையனோடு உடலுறவு வைச்சுக்கிட்டதா என்கிட்டே மனம்விட்டுச் சொன்னா. கர்ப்பமானதும், கருவைக் கலச்சிட்டா. இது எதுவும் அவளோட அப்பா அம்மாவுக்குக்கூடத் தெரியாது.”​—⁠மைரா, வயது 15.

உங்கள் நண்பனிடமோ பள்ளித் தோழனிடமோ நீங்கள் பேசிக் கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அவன் திடீரென “ஒரு பிரச்சினையைப் பற்றி மனம்விட்டு உங்களிடம் சொல்கிறான். a ஒருவேளை டீனேஜர்களுக்கே உரிய பிரச்சினைகளான உடைகள், பணம், தோற்றம், நண்பர்கள், மதிப்பெண்கள் போன்றவற்றில் ஏதோவொன்று அவனை வாட்டுகிறது. அல்லது அதைவிடச் சமாளிக்க முடியாத பெரிய பிரச்சினைகளும் ஒருவேளை அவனுக்கு இருக்கலாம்.

எவ்வளவு பயங்கரமான பிரச்சினைகளை இளைஞர்கள் எதிர்ப்படுகிறார்கள் என்பதை அமெரிக்காவில் நடக்கும் காரியங்கள் காட்டுகின்றன. “இளைஞர்களில் 8 சதவீதத்தினரிலும், பிள்ளைகளில் (சிலர் 4 வயதிற்குட்பட்டவர்கள்) 2 சதவீதத்தினரிலும் மனச்சோர்விற்கான அறிகுறிகள் தென்படுவதாக தேசிய மனநல மையங்கள் கணக்கிட்டுள்ளன” என்று நியூஸ்வீக் பத்திரிகை குறிப்பிடுகிறது. “அமெரிக்காவில், ஒவ்வொரு வருடமும் 15-19 வயதிற்குட்பட்ட பெண்களில் ஆயிரத்திற்குத் தொண்ணூற்றேழு பேர் என்ற கணக்கில், அதாவது பத்து லட்சம் டீனேஜ் பெண்கள் வருடந்தோறும் கர்ப்பமாகிறார்கள். இவற்றில் 78 சதவீதம் எதிர்பாராமல் நிகழும் கருத்தரிப்புகளாகும்” என மற்றுமொரு புள்ளிவிவரம் காட்டுகிறது. மேலும், லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆட்டங்காணும் குடும்பச் சூழ்நிலைகளில் வாழ்கிறார்கள். பலர் கொடூரமாக நடத்தப்படுகிறார்கள் அல்லது பாலியல் துஷ்பிரயோகத்திற்குப் பலியாகியிருக்கிறார்கள். ஐ.மா.-வில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் டீனேஜர்களில் பாதிப்பேர் மனம்போல் குடித்து வெறித்திருக்கிறார்கள். திடுக்கிடச் செய்யும் எண்ணிக்கையான இளைஞர் மோசமான உணவுப் பழக்கங்களுக்கு அடிமைகளாகி இருக்கிறார்கள்.

தங்கள் உள்ளத்தின் உணர்வுகளைக் கொட்டித் தீர்ப்பதற்கும், நம்பி ஒரு காரியத்தைச் சொல்வதற்கும் ஏற்ற ஒருவர் இளைஞர்களுக்குத் தேவை என்பதில் சந்தேகமில்லை. பெரும்பாலும் தங்கள் வயதுக்காரர்களில் ஒருவரைத்தான் அவர்கள் முதலில் நாடுகிறார்கள். அந்த நண்பராக ஒருவேளை நீங்கள் இருந்தால் உங்கள் பங்கில் என்ன செய்ய வேண்டி வரலாம்? அதுவும் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால் கட்டாயம் உங்களைத் தேடிவருவார்கள். நடத்தையில் ‘மாதிரியாகவும்’ நியாயத்தன்மை உள்ளவர்களாகவும் இருக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு பைபிள் கட்டளையிடுகிறது. (1 தீமோத்தேயு 4:12; பிலிப்பியர் 4:5, NW ) எனவே மற்ற இளைஞர்கள்​—⁠அவர்கள் கிறிஸ்தவர்களாக இல்லாவிட்டாலும்​—⁠உங்கள் மீதே நம்பிக்கை வைக்க விரும்பலாம். அப்படியென்றால் அத்தகைய சூழ்நிலைமைகளை எப்படிச் சமாளிப்பீர்கள்? அல்லது அவர்கள் உங்களிடம் சொன்ன சில பிரச்சினைகளில் உங்களால் உதவ முடியாது என்று உணர்ந்தால் என்ன செய்வீர்கள்?

நன்கு செவிகொடுப்பவராக இருங்கள்

“மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:7) தன்னுடைய பிரச்சினைகளைப் பற்றி ஒருவர் உங்களிடம் பேச விரும்பினால், அவருக்குச் செவிகொடுத்துக் கேட்பதே நீங்கள் செய்யும் சிறந்த காரியமாகும். சொல்லப்போனால், ‘ஏழையின் கூக்குரலுக்குச் செவியை அடைத்துக்கொள்வதை’ பைபிள் கண்டனம் செய்கிறது. (நீதிமொழிகள் 21:13) அந்தப் பிரச்சினையைப் பற்றி உங்களிடம் பேசுவதற்கு முன் ஒருமுறைக்குப் பலமுறை அவர் யோசித்துப் பார்த்திருப்பார். எனவே செவிகொடுத்துக் கேட்க நீங்கள் மனமுள்ளவராக இருந்தால் மட்டுமே அவர் தயக்கமின்றி பேசுவதற்குத் தூண்டப்படுவார். “என்னிடம் யாராவது பேச வந்தால் எப்போதுமே தயங்காமல் பேச சொல்வேன். அவர் மனதில் இருப்பதை கொட்ட வைத்து அவருடைய உணர்ச்சிகளை முதலில் புரிந்துகொள்வேன்” என ஹைரம் என்ற கிறிஸ்தவ இளைஞர் சொல்கிறார். “சில சமயத்தில் யாரிடமாவது மனம்விட்டுப் பேசினாலே போதும்னு தோணும்” என்று வின்சென்ட் குறிப்பிடுகிறார்.

அதனால், தன்னுடைய பிரச்சினைகளை நீங்கள் தீர்த்து வைப்பீர்கள் என்று உங்கள் நண்பர் எதிர்பார்க்க மாட்டார். அவருக்கு வேண்டியதெல்லாம்​—⁠அவர் சொல்வதைச் செவிகொடுத்துக் கேட்கும் ஒருவர். எனவே செவிகொடுத்துக் கேளுங்கள்! அக்கம்பக்கத்தில் நடக்கும் காரியங்கள் உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப இடங்கொடுக்காதீர்கள். தேவையில்லாமல் இடையிடையே பேசாதீர்கள். அருகிலிருந்து அவர் சொல்வதைக் கேட்டாலே போதும். அதுவே அவருக்கு நீங்கள் செய்கிற மிகப் பெரிய உதவி. அதுதானே உண்மையில் அவர் மீது உங்களுக்குக் கரிசனை இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லும்.

அப்படியென்றால், நீங்கள் வாயே திறக்கக் கூடாது என்று அர்த்தமா? இது அவர் எப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார் என்பதைப் பொறுத்தது. அநேக சமயங்களில் நன்கு யோசித்துச் சொல்லும் தயவான பதில் பொருத்தமானதாய் இருக்கும். (நீதிமொழிகள் 25:11) உதாரணமாக, உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு ஏதோவொரு துயரச் சம்பவம் நேர்ந்துவிட்டிருந்தால், வருத்தத்தைத் தெரிவிப்பது பொருத்தமானது. (ரோமர் 12:15) நீதிமொழிகள் 12:25 இவ்வாறு சொல்கிறது: “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.” ஒருவேளை அவருக்குத் தேவைப்படுவதெல்லாம் உங்களுடைய உற்சாகமூட்டும் வார்த்தைகள். அவர் எதிர்ப்படும் பிரச்சினையை அவரால் நிச்சயம் சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவியுங்கள். “நீங்க ஏன் இப்படி உணருரீங்கனு என்னால புரிஞ்சுக்க முடியுது,” அல்லது “இப்படியொரு பிரச்சினை உங்களுக்கு இருக்கிறத நினைச்சு ரொம்பவும் கவலைப்படரேன்” போன்ற வார்த்தைகளால் அவர் மீது கரிசனை இருப்பதையும் அவருக்கு நீங்கள் உதவ விரும்புவதையும் காட்டலாம்.

எனினும், நீதிமொழிகள் 12:18 இவ்வாறு எச்சரிக்கிறது: “பட்டயக் குத்துகள் போல் பேசுகிறவர்களும் உண்டு.” எனவே “இதெல்லாம் பெரிய ஒரு பிரச்சினையா,” “அதைப் பத்தியே மறந்திருங்க,” அல்லது “நீங்க அப்படி யோசிக்கிறதே தப்பு” என்றெல்லாம் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். நகைச்சுவையாக ஏதாவது சொல்லி பிரச்சினையை லேசானதாய் ஆக்க முயற்சி செய்யாதீர்கள். அப்படிச் செய்தால், நீங்கள் அவருடைய உணர்ச்சிகளை மதிக்கத் தவறுவதாக அவர் நினைக்கக்கூடும்.​—நீதிமொழிகள் 25:⁠20.

ஒருவேளை அவருக்கு எப்படி ஆறுதலளிப்பது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் என்ன செய்யலாம்? நேர்மையாக இருங்கள். அவருக்கு எப்படி ஆறுதலளிப்பது என்று தெரியவில்லை, ஆனாலும் அவருக்கு உதவ விரும்புகிறீர்கள் என்பதைத் தெரிவியுங்கள். “என்ன உதவி வேணும்னாலும் கேளு, நான் செய்யத் தயாராயிருக்கேன்!” என்று சொல்லுங்கள். ஆம், அவருடைய பாரத்தைக் குறைப்பதற்கு ஏதேனுமொரு நடைமுறை வழி இருக்கலாம்.​—கலாத்தியர் 6:⁠2.

அன்பான ஆலோசனை அளித்தல்

உங்கள் நண்பருக்கு ஆலோசனை தேவை என்று நீங்கள் நினைத்தால் என்ன செய்யலாம்? இளைஞராக இருப்பதால் உங்களுக்குப் போதிய அனுபவமில்லை என்பது உண்மைதான். (நீதிமொழிகள் 1:4) எனவே ஒவ்வொரு பிரச்சினைக்கும் உங்களால் ஆலோசனை கொடுக்க முடியாதிருக்கலாம். ஆனால் சங்கீதம் 19:7 இவ்வாறு சொல்கிறது: “கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை [“அனுபவமில்லாதவரை,” NW] ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.” ஆம், நீங்கள் ‘அனுபவமில்லாதவராய்’ இருந்தாலும்கூட, தேவையிலிருக்கும் உங்கள் நண்பருக்கு உதவ போதுமான பைபிள் நியமங்களை அறிந்து வைத்திருப்பீர்கள். (நீதிமொழிகள் 27:9) போதிப்பது போல் இல்லாமல், வெறுமனே பைபிளிலுள்ள சில குறிப்புகளை நீங்கள் ஏன் பகிர்ந்துகொள்ளக் கூடாது? எந்த பைபிள் நியமம் பொருத்தமாக இருக்குமென்று உங்களுக்குத் தெரியாவிட்டால், ஆராய்ச்சி செய்து பாருங்கள். பல ஆண்டுகளாக இப்பத்திரிகையில், “இளைஞர் கேட்கின்றனர் . . . ” என்ற பகுதி, வெவ்வேறு பொருட்களில் பைபிள் சார்ந்த அறிவுரைகளை வெளியிட்டிருக்கிறது. இத்தகைய தகவல்களின் இன்னொரு களஞ்சியம்தான் இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன்தரும் விடைகள் என்ற புத்தகம். b

ஒருவேளை உங்கள் அனுபவங்களை மற்றவர்களுக்குச் சொல்வது உதவியாக இருக்கலாம். சில நடைமுறையான ஆலோசனைகளும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். உங்களுடைய சொந்தக் கருத்துகளைத் திணிப்பதற்குப் பதிலாக, எது உங்களுக்கு உதவியது என்பதை விளக்குங்கள். (நீதிமொழிகள் 27:17) நபருக்கு நபர் சூழ்நிலைகள் வேறுபடுகின்றன என்பதை மனதில் வையுங்கள். உங்களுக்குப் பயனுள்ளவையாக இருந்தவை அடுத்தவருக்குப் பயனில்லாமல் போகலாம்.

உஷார்!

யெகோவாவுக்குப் பயப்படாதவர்களுடைய, கிறிஸ்தவ தராதரங்களை மதிக்காதவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்பதில் அதிக நேரத்தை வீணாக்காதிருங்கள். பைபிள் தராதரங்களுக்கு ஏற்ப வாழாததன் காரணமாக அவர்களுக்கு எக்கச்சக்கமான பிரச்சினைகள் இருக்கலாம். பைபிளின் ஆலோசனைகளை ஏளனமாகப் பார்க்கிறவர்களுக்கு உதவி செய்ய முயலுவது அவருக்கும் சரி உங்களுக்கும் சரி, ஏமாற்றத்தைத்தான் அளிக்கும். (நீதிமொழிகள் 9:7) கடைசியில் நீங்கள் முட்டாள்தனமான, அல்லது வேண்டாத பேச்சைக்கூட கேட்க வேண்டியிருக்கும். (எபேசியர் 5:3) உரையாடும்போது நீங்கள் தர்மசங்கடமான சூழ்நிலைமையில் இருப்பதாகத் தெரிந்தால், அவருக்கு உதவ முடியாத நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் அல்லது அந்த விஷயத்தைக் கேட்க உங்களுக்கு விருப்பமில்லை எனத் தைரியமாய் சொல்லிவிடுங்கள்.

எதிர்பாலார் ஒருவர் தன் அந்தரங்க உணர்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வரும்போது மிக ஜாக்கிரதையாய் இருங்கள். இருதயம் வஞ்சகமிக்கது என பைபிள் எச்சரிக்கிறது. (எரேமியா 17:9) நெருங்கிப் பழகுவது காதல் உணர்ச்சிகளைத் தூண்டிவிடலாம், கடைசியில் பாலியல் ஒழுக்கக்கேட்டில் போய் முடிவடையலாம்.

அதோடு, யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டு வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். உங்களால் கொடுக்க முடிந்த உதவியைவிட இன்னும் அதிக உதவி உங்களிடம் பேசிக் கொண்டிருப்பவருக்குத் தேவைப்படலாம் என்பதை மனத்தாழ்மையோடு ஒத்துக்கொள்ளுங்கள்.​—நீதிமொழிகள் 11:2.

மற்றவர்களுடைய உதவி தேவைப்படும்போது

உங்கள் நண்பருக்கு எப்படி உதவுவது என்பதைக் குறித்து முதலாவது நீங்களே கொஞ்சம் உதவி பெற்றுக்கொள்வது பல சந்தர்ப்பங்களில் சிறந்ததாக இருக்கும். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மைரா இவ்வாறு சொன்னாள்: “என் தோழிக்கு எப்படி உதவுவதென்றே எனக்குத் தெரியவில்லை. எனவே என் சபையிலிருந்த ஒரு மூப்பரிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அவளுக்கு உதவ சில சிறந்த ஆலோசனைகளைக் கொடுத்தார்.” ஆம், உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ சபைகளில் அனுபவமிக்க நபர்கள் இருக்கிறார்கள். (எபேசியர் 4:12, 13) அந்தப் பள்ளித் தோழி, பிரச்சினைகளை அவளுடைய பெற்றோரிடம் பேசுவதற்கு உற்சாகமூட்டும்படி அந்த மூப்பர் மைராவிடம் கூறினார். அவளும் மைரா சொன்னபடியே செய்தாள். “என் தோழியுடைய நிலைமை முன்னேறியிருக்கிறது. பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள இப்பொழுது அவள் ஆசைப்படுகிறாள்” என்று மைரா சொல்கிறாள்.

சக கிறிஸ்தவர் ஒருவர் உங்களிடம் ஓர் இரகசியத்தைச் சொன்னால் என்ன செய்வீர்கள்? உங்களால் முடிந்த எல்லா உதவியையும் நீங்கள் கண்டிப்பாக அவருக்குச் செய்ய வேண்டும். (கலாத்தியர் 6:10) அவர் யெகோவாவின் ஒழுக்க தராதரங்களைவிட்டு விலகிச் செல்வதாக நினைத்தால், அவரோடு “மெய்யைப் பேச” தயங்காதீர்கள். (எபேசியர் 4:25) நேர்மையாக இருங்கள், ஆனால் சுய நீதிமானாய் அல்ல. வெளிப்படையாகப் பேசுவதுதான் உண்மையான நண்பனுக்கு அடையாளம்.​—சங்கீதம் 141:5; நீதிமொழிகள் 27:⁠6.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் நண்பரை அவருடைய பெற்றோரிடமிருந்தோ, ஒரு மூப்பரிடமிருந்தோ, அவர் மதிக்கும் முதிர்ந்த கிறிஸ்தவர் ஒருவரிடமிருந்தோ உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு ஊக்குவிக்கலாம். கொஞ்ச காலம் கழித்தும் அவர் யாரிடமும் விஷயத்தைச் சொல்லவில்லை என்று தெரிந்தால், அவருக்காக நீங்கள் யாரையாவது அணுக வேண்டியிருக்கலாம். (யாக்கோபு 5:13-15) அதைச் செய்ய உங்கள் பங்கில் தைரியம் தேவைப்படலாம். ஆனால் அது அவர் மீது நிஜமாகவே அக்கறை இருப்பதையும், அவருக்கு மிகச் சிறந்ததைச் செய்ய நீங்கள் விரும்புவதையுமே காட்டும்.

நீங்கள் எல்லாருடைய பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை. ஆனால் யாராவது உங்களை நம்பி வரும்போது செய்வதறியாது திகைக்க வேண்டியதில்லை. நீங்கள் பெற்ற கிறிஸ்தவப் பயிற்சியைப் பயன்படுத்துங்கள். ஓர் உண்மையான ‘சிநேகிதனாய்’ நிரூபியுங்கள்.​—நீதிமொழிகள் 17:⁠17. (g05 1/22)

[அடிக்குறிப்புகள்]

a எளிமைக்காக பிரச்சினைகளைச் சந்திப்பவரை ஆண்பாலில் குறிப்பிடுகிறோம். ஆனாலும் இத்தகவல் இருபாலாருக்கும் பொருந்தும்.

b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 15-ன் படம்]

சில சமயம் ஆபத்தில் இருக்கும் நண்பரின் சார்பாக நீங்கள் உதவியை நாட வேண்டியிருக்கலாம்