Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பயத்துடன் வாழ்தல்

பயத்துடன் வாழ்தல்

பயத்துடன் வாழ்தல்

ரோக்சானாவுக்கு a பகுதிநேர வேலை செய்ய விருப்பம், ஆனால் அதை கணவனிடம் சொல்ல அஞ்சுகிறாள். ஒருநாள் தன்னுடைய தாயாரைப் பார்த்துவிட்டு வருவதற்கு பஸ் செலவுக்காக கணவனிடம் பணம் கேட்டாள். அப்படி கேட்டதுதான் மிச்சம், உடனே ரோக்சானாவை வெளுத்து வாங்கிவிட்டார், அடி பயங்கரமாக இருந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டியதாகிவிட்டது. சதா பயத்திலேயே அவள் வாழ்கிறாள்.

ரோலான்டோவின் மனைவி எப்போதும் இரவு நேரத்தில் பொதுப் போக்குவரத்தில் வீட்டிற்கு வருவது வழக்கம். ஆனால் இப்போது அவளுடைய கணவரே காரில் அவளை அழைத்து வருகிறார். அக்கம்பக்கத்தில் ஏகப்பட்ட வன்முறை சம்பவங்கள் நடப்பதால், அவளுடைய பாதுகாப்பைக் கருதி ரோலான்டோ இப்படி செய்கிறார்.

தலைநகரத்தின் மையப்பகுதியில் ஐடே வேலை செய்கிறாள். ஒருநாள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஊர்வலமாக வந்த ஒரு கூட்டத்தில் மாட்டிக்கொண்டாள். அந்தக் கூட்டத்தினரோ கடைசியில் வன்முறையில் இறங்கிவிட்டனர். ஆகவே, இப்பொழுதெல்லாம் ஊர்வலத்தின் சத்தத்தைக் கேட்டாலே அவளுக்கு நெஞ்சு படபடக்கிறது. “நான் பாதுகாப்புடன் இருப்பதாக உணருவதில்லை. இங்கே வேலை செய்யவே எனக்கு இஷ்டமில்லை. ஆனால் என்ன செய்வது, வேறு வழி இல்லையே” என அவள் புலம்புகிறாள்.

ரோக்சானா, ரோலான்டோ, ஐடே ஆகிய மூவருமே பயத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இப்படி அவர்கள் பயப்படுவது ஏதோ நெருக்கடிநிலை காலத்தில் மட்டுமல்ல. இது அவர்களை சதா பாதித்து வருகிறது. மக்கள் பயத்தில் வாழ்கையில், தங்களுடைய சக்தியெல்லாம் உறிஞ்சப்பட்டது போல் உணரலாம். தாங்கள் விரும்புவதைச் செய்ய முடியாதபடி பயம் அவர்களை அணைபோட்டுத் தடுத்துவிடுகிறது, அவர்களுடைய சந்தோஷத்தைப் பறித்துவிடுகிறது. மக்களுடைய மனதை எப்போதும் பயம் ஆட்டிப்படைக்கலாம். வேறு வேலைகளில் கவனம் செலுத்துவதையும் தடுத்துவிடலாம்.

பயத்திலேயே வாழ்வது பெரும் அழுத்தத்தை உண்டாக்குகிறது. இது பெரும்பாலும் மனஉளைச்சலுக்கு வழிநடத்துகிறது, இது ஒருவருடைய ஆரோக்கியத்தையே அழித்துவிடலாம். “அழுத்தம் நோய்க்காப்பு மண்டலத்தை செயல்பட விடாமல் தடுத்துவிடுகிறது, கடைசியில் இது பெரும்பாலான வியாதிகளுக்குக் காரணமாகிவிடுகிறது” என ஒரு மருத்துவ இதழ் விளக்குகிறது. “நாளாக நாளாக உடல் சேதத்திற்குரிய அறிகுறிகள் தோன்றும், முக்கியமாக சம்பந்தப்பட்ட உடலுறுப்புகளில் அவை தோன்றும். உயர் இரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக நோய், வயிற்றுக் கோளாறுகள், வயிற்றுப் புண்கள், தலைவலி, தூக்கமின்மை, மனஉளைச்சல், கவலை ஆகியவை தோன்றும். இப்படியே நீண்ட காலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் கடைசியில் எதுவுமே செய்ய முடியாமல் முற்றிலும் தளர்ந்து போய்விடலாம்.”

இன்றைய உலகில், பயத்தில் வாழ்வது மக்களுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் பயமின்றி நிம்மதியாக வாழும் காலம் என்றாவது வருமா? (g05 8/8)

[அடிக்குறிப்பு]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.