Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

டிவி பைத்தியமாக இருந்த பிள்ளைகள்​—⁠டிவியை மறந்தார்கள்

நியு யார்க்கின் வட பகுதியில் உள்ள 16 நர்சரிகளில் ஐந்து மாத ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. டிவி பார்ப்பதற்குப் பதிலாக வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றிய எளிய பாடங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன. இதனால் பிள்ளைகள், “டிவி பார்ப்பது வாரத்திற்கு மூன்று மணிநேரம் குறைந்தது” என்பதாக த நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்தது. வாசிப்பது, சிறுசிறு டேபிள் விரிப்புகளைச் செய்வது, வீட்டில் உள்ள ஒவ்வொரு டிவி செட்டுக்குப் பக்கத்திலும் “நோ டிவி” என்ற போர்டை வைப்பது போன்றவற்றைச் செய்யும்படி அந்தப் பாடங்கள் கற்றுக்கொடுத்தன. அதன் பிறகு, டிவி அல்லது வீடியோ பார்க்காத நேரங்களில் என்னென்ன செய்யலாம் என்று பிள்ளைகளும்கூட ‘ஐடியா’ தர ஆரம்பித்தார்கள். பிள்ளைகளுக்குத் தினமும் கதைகள் வாசித்துக் காட்டும்படியும் சாப்பாட்டு நேரங்களில் டிவியை ஆஃப் செய்து வைக்கும்படியும் பெற்றோர்களுக்குச் சொல்லப்பட்டது. அந்த ஐந்து மாத ஆராய்ச்சியின்போது பெற்றோர்கள் ஒரு வாரம் முழுவதும் டிவியை ஆஃப் செய்துவைத்தார்கள், இப்படி இரண்டு முறை செய்தார்கள். தலைமை ஆய்வாளரான டாக்டர் பார்பரா டெனிசன் இவ்வாறு சொல்கிறார்: “ஆச்சரியம் என்னவென்றால், வேறு காரியங்களைச் செய்யும்படி சொல்லப்பட்டபோது பிள்ளைகள் அதை உடனடியாக ஏற்றுக்கொண்டார்கள்.” எனவே, டிவி பைத்தியம் பிடித்துள்ள பிள்ளைகளைச் சரிசெய்ய முடியாது என்று பெற்றோர்கள் நினைக்க வேண்டியதில்லை என்கிறார் அவர். (g05 9/22)

புகையிலையால் முழு உடலுக்கும் ஆபத்து

“புகைபிடிப்பதால் நுரையீரல்களுக்கும் தமனிகளுக்கும் மட்டும்தான் ஆபத்தா? இல்லை, எல்லாத் திசுக்களுக்குமே ஆபத்துதான்” என்று நியு சைன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறது. ஐ.மா. தலைமை மருத்துவ அதிகாரியான ரிச்சர்டு எச். கார்மோனா வெளியிட்ட ஓர் அறிக்கை, புகையிலையைப் பயன்படுத்துவதால் வரும் நோய்களைப் பட்டியலிடுகிறது. அவை: நிமோனியா, இரத்தப் புற்றுநோய், கண்புரை, ஈறு சம்பந்தப்பட்ட நோய், சிறுநீரகப் புற்றுநோய், கருப்பையின் வாய்ப்பகுதியில் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், கணையப் புற்றுநோய். “புகைபிடிப்பது உடலுக்குக் கெடுதல் என்பது நம் எல்லாருக்குமே காலங்காலமாகத் தெரிந்த விஷயம். ஆனால், நமக்குத் தெரிந்திருப்பதைவிட அதில் பயங்கரமான கெடுதல் இருப்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. சிகரெட் புகையிலுள்ள நச்சுப் பொருள்கள் இரத்தம் செல்கிற இடங்களுக்கெல்லாம் செல்கின்றன” என்கிறார் கார்மோனா. தார், நிக்கோடின் ஆகியவை குறைந்தளவில் இருக்கிற சிகரெட்டுகள் பாதுகாப்பானவை என்று நினைப்பவர்களுக்கு கார்மோனா இவ்வாறு சொல்கிறார்: “‘லைட்’ சிகரெட்டோ ‘அல்ட்ரா லைட்’ சிகரெட்டோ எந்த சிகரெட்டும் பாதுகாப்பானது கிடையாது.” பொதுவாக, புகைபிடிக்காதவர்களைவிட புகைபிடிப்பவர்கள், 13-14 வருடங்கள் முன்னதாகவே இறந்துவிடுகிறார்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டார். “புகைபிடிப்பதால் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உடலின் ஒவ்வொரு அங்கமும் பாதிக்கப்படுகிறது” என்று கார்மோனா சொன்னதை த நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. (g05 9/22)

தூங்கினால் கணக்குக்கு விடை காணலாம்

“இரவில் பதில் கிடைக்காத கணக்குக்கு மறுநாள் காலையில் சுலபமாகப் பதில் கிடைத்துவிடுவதை அநேகர் கண்டிருக்கிறார்கள், மூளை ஏதோ சத்தமில்லாமல் முழு இரவும் கணக்கு போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தது போல அவர்கள் உணருகிறார்கள்” என்று லண்டனின் த டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது. ஜெர்மனியில் உள்ள விஞ்ஞானிகள் இதுவே உண்மை என்பதற்கு தற்போது ஆதாரங்களைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவற்றை நேச்சர் என்ற பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் 66 வாலண்டியர்களுக்கு ஒரு கணக்கைப் போடுவதற்கு இரண்டு வழிகளைக் கற்றுக்கொடுத்து மூன்றாவது வழியை​—⁠சரியான விடை தரக்கூடிய சுலபமான வழியை​—⁠கற்றுக்கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். அதன் பிறகு சில வாலண்டியர்களை மட்டுமே தூங்க அனுமதித்து மற்றவர்களை விழித்திருக்கும்படி​—⁠இரவு முழுவதுமோ பகல் முழுவதுமோ விழித்திருக்கும்படி​—⁠சொன்னார்கள். “தூக்கம் சிறந்த பலன்களைத் தந்தது” என்று த டெய்லி டெலிகிராஃப் இந்த ஆராய்ச்சியைக் குறித்து அறிக்கை செய்கிறது. “விழித்திருந்தவர்களைவிட [தூங்கினவர்களால்தான்] மூன்றாவது வழியை இரண்டு மடங்கு அதிகமாகக் கண்டுபிடிக்க முடிந்தது.” தூங்கினவர்கள் பதில் கண்டுபிடித்ததற்குக் காரணம், அவர்கள் ஓய்வும் புத்துணர்ச்சியும் பெற்றதால் அல்ல என்பதை நிரூபிக்க விஞ்ஞானிகள் இன்னொரு சோதனையை நடத்தினார்கள். அதே இரண்டு தொகுதிகளுக்கும், இரவு முழுவதும் தூங்கின பிறகு அல்லது நாள் முழுவதும் வேலை செய்த பிறகு இன்னொரு கணக்கு கொடுக்கப்பட்டது. இம்முறை இரு தொகுதியினரின் திறமையிலும் வித்தியாசம் தெரியவில்லை. அப்படியானால், “மூளைக்கு ஓய்வு கொடுக்கப்படுவதால் கணக்குக்கு விடை கிடைப்பதில்லை. ஆனால் தூங்கும்போது மூளை தன்னைத்தானே சீரமைத்துக்கொள்வதால் விடை கிடைக்கிறது” என்று த டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. “எனவே, தூக்கம் என்பது ஆக்கபூர்வமாகக் கற்றுக்கொள்வதற்குரிய வழி” என்று கூறிமுடிக்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் உல்ரிக் வாக்னர். (g05 9/8)

சூதாடிகள் தங்களுக்குத் தாங்களே தடைவிதித்துக்கொள்கிறார்கள்

“பிரான்சில், சூதாட்டத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 3,00,000-லிருந்து 5,00,000-வரை என மதிப்பிடப்படுகிறது” என்று பிரான்சு நாட்டு செய்தித்தாளான லா பிகாரோ சொல்கிறது. என்றாலும், இந்தப் பழக்கத்தை விட்டுவிடவே இவர்களில் அநேகர் நினைக்கிறார்கள். பிரான்சில் 28,000 பேர், சட்டம் அங்கீகரித்துள்ள சூதாட்டத்தில் ஈடுபடாமலிருக்க தங்களுக்குத் தாங்களே தடைவிதித்துக்கொண்டார்கள். எப்படியெனில், குறைந்தது ஐந்து வருடங்களுக்குத் தாங்கள் சூதாட்ட கிளப்புகள் பக்கம் போக முடியாதபடி தடைவிதிக்குமாறு காவல்துறையிடம் கேட்டிருப்பதாக அந்தச் செய்தித்தாள் சொல்கிறது. இதுபோன்று 2,000-3,000 வேண்டுகோள்கள் ஒவ்வொரு வருடமும் தங்களுக்குக் கிடைப்பதாக பிரான்சு நாட்டு காவல்துறையினர் சொல்கிறார்கள். மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரித்திருப்பதாகவும் சொல்கிறார்கள். “புகையிலை போடுவது, குடிப்பது, போதைப்பொருள்களை எடுப்பது போன்றவை பொதுநலப் பிரச்சினைகளாகக் கருதப்படுவது போலவே” தங்களுடைய சூதாட்டப் பழக்கமும் கருதப்பட வேண்டும் என அநேக சூதாடிகள் விரும்புகிறார்கள் என லா பிகாரோ கூறுகிறது. (g05 9/8)

மசக்கைக்கு மருந்து, இஞ்சி

“மசக்கைக்கு சிறந்த மருந்து இஞ்சி” என்று ஆஸ்திரேலியன் செய்தித்தாள் சொல்கிறது. புதிய கர்ப்பிணிகள் தினமும் கிட்டத்தட்ட ஒரு கிராம் இஞ்சி சாப்பிட்டால் அவர்களுக்கு ஏற்படும் வாந்தியும் குமட்டலும் குறையும் என்று தென் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. நிறைய இடங்களில் இஞ்சிதான் காலங்காலமாக இந்தக் கோளாறுக்கு வைத்தியமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் இதன் மருத்துவக் குணம் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது இப்போதுதான். பொதுவாக, இந்த நோய்க்குத் தினமும் வைட்டமின் பி6 சாப்பிடுவது நல்லது என்றும் சொல்லப்படுகிறது. வைட்டமின் பி6-⁠க்கு இருக்கும் அதே சக்தி இஞ்சிக்கும் இருக்கிறதென்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (g05 9/8)

நூறு கோடி குழந்தைகள் அவதி

ஐக்கிய நாட்டு குழந்தைகள் நிதி நிறுவனத்தின்படி, நூறு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தங்களுக்குத் தேவைப்படுகிற எதுவுமே கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள் என்று த நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் நிறைய முன்னேற்றங்கள் செய்யப்பட்டு வந்தபோதிலும் போர்கள், எய்ட்ஸ், வறுமை போன்றவற்றால் அவை எதுவுமே பிரயோஜனமில்லாமல் ஆகிவிட்டன. 1990-⁠ம் ஆண்டுமுதல் நடந்த போர்களில்​—⁠அதில் 55 உள்நாட்டு போர்கள்⁠—⁠36 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள், அதில் ஏறக்குறைய பாதிக்குப் பாதி பிள்ளைகள்தான். இப்படிப்பட்ட நிறைய போர்களில் பிள்ளைகள் கலகக்காரர்களால் கடத்தப்படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள், அல்லது போர்களில் பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் மத்தியில் ஊட்டக்குறைவுதான் அதிகமாகக் காணப்படுகிறது, ஆரோக்கியம் என்ற பேச்சுக்கே இடமில்லை. 2003-⁠ல் 1.5 கோடி பிள்ளைகள் எய்ட்ஸ் நோயால் அநாதைகளாகத் தள்ளப்பட்டார்கள். 20 லட்சத்திற்கும் மேலான பிள்ளைகள் செக்ஸ் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்கள். ராணுவத்திற்காக ஆண்டுதோறும் 95,600 கோடி டாலர் (43,02,000 கோடி ரூபாய்) செலவிடப்படுகிற இடத்தில் வெறும் 4,000 முதல் 7,000 கோடி டாலர்வரை (1,80,000 கோடிமுதல் 3,15,000 கோடி ரூபாய்வரை) செலவு செய்தாலே வறுமையை ஒழித்துவிடலாம் என்று அந்த அறிக்கை சொல்கிறது. (g05 9/8)

ஆயுதங்களை விளையாட்டுப் பொருள்களாக மாற்றுதல்

பிரேசில் மக்களிடம் உள்ள ஆயுதங்களைக் குறைப்பதற்காக ஒரு திட்டம் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் தாங்களாகவே முன்வந்து ஒப்படைத்த ஆயுதங்கள் ஒவ்வொன்றுக்கும் 30 முதல் 100 டாலர்வரை (1,350-லிருந்து 4,500 ரூபாய்வரை) ஈடாகத் தரப்பட்டது. ஜூலைமுதல் டிசம்பர் 2004 வரை 2,00,000-⁠க்கும் அதிகமான ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டதாக ஃபோல்யா ஆன்லைன் அறிக்கையிடுகிறது. சாவோ பாலோ மாநிலத்தில் சேகரிக்கப்பட்ட ஆயுதங்கள் நொறுக்கப்பட்டு, கம்ப்ரஸ் செய்யப்பட்டு, உருக்கப்பட்டு, விளையாட்டுப் பொருள்களாக மாற்றப்பட்டு அந்நகரின் பூங்கா ஒன்றில் வைக்கப்பட்டன. அந்த ஆயுதப் பொருள்களை அழித்து செய்யப்பட்ட ஏற்றப் பலகை (சீசா), ஊஞ்சல், சறுக்கு மரம் ஆகியவை இப்போது அந்தப் பூங்காவில் இருக்கின்றன. “சமாதான சமுதாயத்தை உருவாக்குவதே இத்தகைய நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு முக்கிய காரணம்” என்கிறார் நீதித்துறை அமைச்சரான மார்ஸுயு டூமாஸ் பாஸ்டாஸ் என்பவர். (g05 9/22)