Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடிப்பழக்கமும் ஆரோக்கியமும்

குடிப்பழக்கமும் ஆரோக்கியமும்

குடிப்பழக்கமும் ஆரோக்கியமும்

“சான்டே!” “சால்யூடே!” “ஸா வாஷ் ஷ்டாராய்வி!” “சுக் ஸுக் க்வே!” பிரான்சு, இத்தாலி, ரஷ்யா, வியட்நாம் போன்ற எந்த இடமாக இருந்தாலும் சரி, “ஆரோக்கியமாக இரு!” என்று நண்பர்கள் ஒருவரையொருவர் இவ்விதமாக வாழ்த்திய பிறகே குடிக்கத் தொடங்குவார்கள். ஆனாலும் வருத்தகரமாக, உலக முழுவதிலும் கோடிக்கணக்கான ‘குடி’மக்கள் மரணத்தை நோக்கியே பயணிக்கிறார்கள்.

அளவுக்குமீறி குடிப்பதால் முதலாவதாக ஆபத்தான நிலையைச் சந்திக்க நேரிடுகிறது, இரண்டாவதாக கேடு விளையும் நிலை ஏற்படுகிறது, கடைசியாக குடிக்கு அடிமையாகும் நிலை ஏற்படுகிறது. இப்படியாக பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முதலாவதாக, ஆபத்தான நிலை என்பது உடலுக்கு, மனதுக்கு, அல்லது சமுகத்துக்கு “ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு இடைவிடாமல் குடிக்கும் பழக்கம்” என உலக சுகாதார நிறுவனம் விவரிக்கிறது. மருத்துவ துறைகள் சிபாரிசு செய்திருக்கிற அல்லது அரசாங்கம் விதித்திருக்கிற அளவை மீறி குடிப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. இரண்டாவதாக, கேடு விளையும் நிலை என்பது குடித்துக்குடித்து உடலுக்கு அல்லது மனதுக்கு கேடு தேடிக்கொண்ட பிறகும் குடியை நிறுத்தாத, ஆனால் அதற்கு அடிமையாகாத நிலை. கடைசியாக, குடிக்கு அடிமையாகும் நிலை என்பது “குடிக்காமல் வாழ முடியாத நிலை.” குடிக்கு அடிமையானவர் மதுபானத்திற்காக ஏங்கித் தவிப்பார், குடியினால் பல பிரச்சினைகளை சந்திக்கிறபோதும் குடிப்பதை நிறுத்த மாட்டார், குடிப்பதை நிறுத்துவதால் ஏற்படும் சரீர உபாதைகளால் புழுவாய்த் துடிப்பார்.

நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, எந்தத் தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, இடைவிடாமல் குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதென்றால் அதன் ஆபத்துகளை நீங்கள் சந்தித்தே தீர வேண்டும். மதுபானம் உடலை எவ்வாறு பாதிக்கிறது? மிதமிஞ்சிய குடியால் என்னென்ன வியாதிகள் வருகின்றன? எவ்வளவு குடித்தால் ஒன்றும் ஆகாது என பொதுவாக கருதப்படுகிறது?

மன நலம்​—⁠ஆபத்தில்

ஏறக்குறைய எல்லா மதுபானங்களிலும் இருக்கிற எத்தனால் என்ற இரசாயன சேர்மம் ஒரு நியூரோடாக்ஸின் ஆகும். இது நரம்பு மண்டலத்தைச் சீர்குலைத்துவிடுகிற அல்லது அழித்துவிடுகிற அளவுக்கு சக்திபடைத்தது. சொல்லப்போனால் அளவுக்கதிகமாகக் குடிப்பவர்களின் உடலுக்குள் ஒருவித விஷமேறுவதால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உடலுக்குள் அதிகளவு எத்தனால் செல்லும்போது ‘கோமா’ நிலையும், கடைசியில் மரணமும் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, ஜப்பான் மாணவர்கள் மத்தியில் இக்கிநோமி என்றழைக்கப்படுகிற ஒருவித குடிப்பழக்கம்​—⁠மதுபானத்தை ஒரே மூச்சில் நிறுத்தாமல் குடிக்கும் ஒருவித குடிப்பழக்கம்​—⁠உள்ளது. இதனால் ஒவ்வொரு வருடமும் பல மாணவர்களின் உயிர் பறிபோகிறது. மதுபானத்தைக் கேடு விளைவிக்காத பொருட்களாக மாற்றும் சக்தி நம் உடலுக்கு இருக்கிறது. ஆனால் நம் உடல் ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் மதுபானத்தை அதிவேகமாக குடிக்கும்போது எத்தனால் நம் உடலிலேயே தேங்கி மூளையின் செயல்பாட்டைத் தாக்குகிறது. எப்படி?

பேச்சு, பார்வை, ஒத்திசைவு, சிந்தனை, நடத்தை இவையெல்லாமே மூளையிலுள்ள நரம்பு செல்களில், அதாவது முக்கிய செல்களில், நடக்கும் படுசிக்கலான இரசாயன தொடர் வினைகளையே சார்ந்திருக்கின்றன. உடலில் தேங்கியிருக்கும் எத்தனால் இந்த இரசாயன வினைகளில் மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. எப்படி? குறிப்பிட்ட சில நரம்புக் கடத்திகளின்​—⁠நரம்பு செல்களுக்கிடையே தகவல்களைப் பறிமாறச்செய்யும் இரசாயனங்களின்​—⁠வேலைகளை அடக்குவதன் மூலம் அல்லது அதிகரிப்பதன் மூலம் அதைச் செய்கிறது. இவ்விதமாக மூளையின் தகவல் பரிமாற்ற ‘நிலையங்களில்’ மாற்றங்கள் ஏற்பட்டு மூளை இயல்பாக இயங்க முடியாமல் போகிறது. அதனால்தான் ஒருவர் அதிகமாக குடிக்கும்போது, அவருடைய வாய் உளறுகிறது, கண் மங்குகிறது, கால் தடுமாறுகிறது, மதி கெடுகிறது; இவை அனைத்தும் குடிபோதையின் அறிகுறிகள்.

குடியே கதியென்று இருக்கும் ஒருவருடைய மூளையின் இரசாயனம், எத்தனாலின் விஷத்தன்மையை முறித்துவிட்டு நரம்பு செல்களை இயல்பாக இயங்கச் செய்யும் விதத்தில் மாறிவிடுகிறது. இதனால் மதுபானத்தை ஏற்றுக்கொள்ளும் திறன் அவருடைய உடலில் அதிகரிக்கிறது. அதாவது முன்பு எந்தளவு மதுபானம் அவரை அதிகமாக பாதித்ததோ அதே அளவு மதுபானம் இப்போது அவரை குறைவாகவே பாதிக்கிறது. மதுபானத்திற்குப் பழகிவிட்ட மூளை இப்போது மதுபானம் இல்லாமல் சரியாக வேலைசெய்ய முடியாத நிலை ஏற்படுகையில் ஒருவர் மதுபானத்திற்கு அடிமையாகிவிடுகிறார். இரசாயன இயக்கத்தைச் சமநிலைப்படுத்த அவருடைய உடல் மதுபானத்திற்காக தவியாய்த் தவிக்கிறது. அது கிடைக்காத நிலையில் அவருடைய மூளையின் இரசாயன இயக்கம் முற்றிலும் சீர்குலைகிறது. அதோடு கவலை, நடுக்கம், திடீர் வலிப்பு போன்ற பின்விளைவுகளும் ஏற்படுகின்றன.

அளவுக்கு மீறி மதுபானம் குடிப்பதால், மூளையில் இரசாயன மாற்றங்கள் ஏற்படுவதோடு செல்கள் சிதைந்து அழிந்து மூளையின் உருவே மாறிவிடுகிறது. குடிப்பதை நிறுத்தினால் ஒருவேளை கொஞ்சமாவது சீராவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் சில சேதங்களை சரிப்படுத்தவே முடியாதென்று தோன்றுகிறது. அதோடு, அறிவாற்றலிலும் நினைவாற்றலிலும் இன்னுமதிக பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிகிறது. ஆக, காலங்காலமாகக் குடித்துவருபவர்களின் மூளைதான் பாதிக்கப்படுகிறது என்று சொல்ல முடியாது. கொஞ்ச காலத்திற்கு அளவுக்கதிகமாக குடிப்பவர்களும்கூட பாதிக்கப்படலாம் என ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுவதாகத் தெரிகிறது.

கல்லீரல் நோயும் புற்று நோயும்

உணவை ஜீரணிப்பதில், நோய்தொற்றை எதிர்ப்பதில், ரத்த ஓட்டத்தை சீராக்குவதில், உடலிலிருந்து மதுபானம் உட்பட மற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து மதுபானத்தைக் குடிப்பதால் மூன்று கட்டங்களில் கல்லீரலுக்குச் சேதம் ஏற்படுகிறது. முதல் கட்டம்: கல்லீரல், எத்தனாலைக் கூறுபடுத்துவதால் கொழுப்பு சரியாக ஜீரணமாகாமல் அதிலேயே தேங்கிவிடுகிறது. இதற்கு பெயர் கல்லீரல் கொழுப்பேற்றம் (alcoholic steatosis, or fatty liver). நாளடைவில் கல்லீரலில் தீராத வீக்கம், அதாவது அழற்சி (hepatitis) ஏற்படுகிறது. மதுபானம் குடிப்பதால் நேரடியாகவேகூட கல்லீரல் அழற்சி ஏற்படுகிறது; அதுமட்டுமல்ல, பி மற்றும் சி கல்லீரல் அழற்சி வைரஸ்களை எதிர்க்கும் உடலின் சக்தியையும் குறைத்துவிடுகிறது. a இதற்குச் சிகிச்சை கொடுக்கப்படாவிட்டால் வீங்கிய செல்கள் வெடித்து அழிந்துவிடலாம். இன்னும் மோசமான நிலை என்னவென்றால், மரபணுவால் கட்டுப்படுத்தப்படும் செல்களின் இயற்கையான அழிவை (apoptosis) மதுபானம் தூண்டிவிடுவதாக தோன்றுகிறது.

கடைசி கட்டமாக கல்லீரல் கரணை நோய் (cirrhosis) ஏற்படுகிறது. படு மோசமான விதத்தில் கல்லீரல் மேன்மேலும் வீங்கி, அதன் செல்கள் சிதைவதால் சரிசெய்யவே முடியாத அளவிற்கு தழும்பை ஏற்படுத்தி விடுகிறது. மெத்தென்று இருக்க வேண்டிய கல்லீரல் காலப்போக்கில் கெட்டியாகிவிடுகிறது. இறுதியில் தழும்பு திசு (scar tissue), ரத்தத்தின் சீரான ஓட்டத்தைத் தடை செய்கிறது. அதனால் கல்லீரல் செயலிழந்துபோய் மரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஆரம்பத்தில் வெளியில் தெரியாத இன்னொரு பக்க விளைவையும் கல்லீரலில் மதுபானம் ஏற்படுத்துகிறது. அதாவது, புற்றுநோய் உண்டாக்குபவற்றை எதிர்ப்பதற்கான கல்லீரலின் சக்தியைக் குறைத்துவிடுகிறது. கல்லீரலில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய் ஆகியவற்றிலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை பன்மடங்கு அதிகரிக்கிறது. அதுமட்டுமா! வாயிலுள்ள சீதப்படலங்களை (mucous membranes) மதுபானம் பாதிப்பதால், புகைபிடிப்பவர்கள் அதிக ஆபத்தில் இருக்கிறார்கள்; ஏனெனில் புகையிலையில் உள்ள புற்றுநோய் உண்டாக்குபவை சுலபமாக வாய்க்குள் நுழைந்துவிடுகின்றன. தினமும் மதுபானம் குடிக்கிற பழக்கமுடைய பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஓர் ஆராய்ச்சியின்படி, குடிக்காத பெண்களைவிட ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கிளாஸுக்கு அதிகமாக மதுபானம் குடிக்கிற பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 69 சதவீதம் அதிகமாக உள்ளது.

நச்சுக் குழந்தைகள்

மிதமிஞ்சி குடிப்பதால் முக்கியமாக பிறவாத குழந்தைகளே படுபயங்கரமாக பாதிக்கப்படுகிறார்கள். “அளவுக்கு மீறி பயன்படுத்துகிற வேறெந்த போதைப்பொருளையும்விட மதுபானமே கருவில் வளரும் சிசுவை மிக அதிகமாகப் பாதிக்கிறது” என்று இன்டர்நேஷனல் ஹெரால்ட் டிரிபியூன் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் குடிக்கும்போது அவளுடைய கருவில் வளரும் சிசுவும் குடிக்கிறது. முக்கியமாக சிசு வளர்ந்துவரும் கட்டத்தில் மதுபானத்தின் விஷத்தன்மை நாசகரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. மதுபானம் சிசுவின் மத்திய நரம்பு மண்டலத்தைச் சீராக்க முடியாதளவு சேதப்படுத்துகிறது. நரம்பு செல்களின் வளர்ச்சி தடைபடுகிறது. சில செல்கள் சிதைகின்றன. மற்ற செல்களோ எக்குத்தப்பான இடங்களில் உருவாகிவிடுகின்றன.

அதன் விளைவாக ஃபீட்டல் ஆல்கஹால் சின்ட்ரோம் (FAS) ஏற்படுகிறது. இதுவே புதிதாய் பிறந்த குழந்தையின் மன வளர்ச்சி குன்றுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. FAS-ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூளைக் கோளாறு, மொழிக் கோளாறு, செவிக் கோளாறு, பார்வைக் கோளாறு, நடத்தை கோளாறு, சரீர மற்றும் மன வளர்ச்சி கோளாறு, அளவுக்கு அதிகமான சுட்டித்தனம் ஆகியவற்றுடன் போராட வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல, FAS-ஆல் பாதிக்கப்பட்ட அநேக குழந்தைகள் விகாரமான முகத்துடனும் பிறக்கிறார்கள்.

மேலுமாக, கர்ப்பமாக இருக்கும் தாய் மதுபானத்தைக் கொஞ்சம் குடித்திருந்தாலும்கூட பிறக்கும் குழந்தைக்கு சில குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவற்றில் மனக்கோளாறும் புத்திக்கோளாறும் உட்படும். “நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது அதிகமாக குடித்தால் மட்டுமே அல்ல, குறைவாக குடித்தாலும்கூட உங்கள் குழந்தை பாதிக்கப்படும்” என்று அன் ஸிடிரைஸ்கூத் என்பவர் குறிப்பிடுகிறார். இவர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஃபீட்டல் ஆல்கஹால் அண்ட் டிரக் யூனிட்டில் பேராசிரியராக இருக்கிறார். “கர்ப்ப காலத்தில் மதுபானம் கேடு விளைவிக்கிறது. எந்தளவு மதுபானம் குடித்தால் எந்த ஆபத்தும் வராது என்பதற்கு எந்த வரையறையும் நிர்ணயிக்கப்படவில்லை” என்று பிரஞ்சு தேசிய சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், ஆல்கால்​—⁠எஃபீ சுயர் லா சான்டே அறிக்கை செய்கிறது. எனவே, கர்ப்பமாக இருக்கும் பெண்கள், அல்லது கர்ப்பமாவதற்குத் திட்டமிடும் பெண்கள் குடிக்காமல் இருப்பதே நல்லது. b

ஆபத்தில்லா குடித்தல்

மதுபானம் விளைவிக்கிற வியாதிகள் அனைத்தும் இங்கு குறிப்பிடப்படவில்லை. “மதுபானத்தைக் கொஞ்சமாகக் குடித்தாலுங்கூட உடல் சேதமடைந்து சுமார் 60 வியாதிகள் தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது” என்று 2004-⁠ல் நேச்சர் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை சுட்டிக்காட்டியது. இதைக் கருத்தில் கொள்கையில், எந்த அளவு மதுபானம் ஆரோக்கியமாக இருக்க உதவும்? எப்போதாவது குடிக்கும் கோடானுகோடி மக்கள் உலக முழுவதிலும் எந்தக் கவலையுமில்லாமல் குடித்து மகிழ்கிறார்கள். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு குடிப்பதில் நிதானம் தேவை. ஆனால் நிதானம் என்றால்? அநேகர் அவர்களுடைய சொந்த அளவையே நிதானம் என நினைக்கலாம். தங்களுக்குப் போதை ஏறாதவரை குடிக்கலாம் அல்லது அதற்கு அடிமையாகாதவரை குடிக்கலாம் என்றெல்லாம் நியாயம் பேசலாம். என்றாலும், ஐரோப்பாவில் நான்கில் ஒருவருடைய (மதுபான) அளவு ஆபத்து விளைவிப்பதாகவே இருக்கிறது.

நிதானம் என்பதற்கு ஒவ்வொரு பிரசுரமும் ஒவ்வொரு விதமாக அர்த்தம் கூறுகிறது. ஆண்கள் ஒரு நாளைக்கு 20 கிராம் சுத்தமான ஆல்கஹாலை அல்லது இரண்டு ஸ்டான்டர்டு கிளாஸ் மதுபானத்தைக் குடிக்கலாம்; பெண்களோ 10 கிராம் ஆல்கஹாலை அல்லது ஒரு ஸ்டான்டர்டு கிளாஸ் மதுபானத்தைக் குடிக்கலாம், இதுவே நிதானம் என்று ஒரு பிரசுரம் சொல்கிறது. ஆண்கள் ஒரு நாளைக்கு மூன்று கிளாஸும் பெண்கள் இரண்டு கிளாஸும் குடிப்பதே “மிதமான அளவு” என்று பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள். “65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினர் ஒரு நாளைக்கு ஒரு கிளாஸுடன் நிறுத்திக்கொள்ளும்படி” c யு.எஸ். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆன் ஆல்கஹால் அப்யூஸ் அண்ட் ஆல்கஹாலிசம் மேலுமாக அறிவுறுத்துகிறது. இருந்தாலும் மதுபானம் குடித்த பிறகு நாம் எல்லாரும் ஒரேவிதமாக நடந்துகொள்வதில்லை. சில சமயங்களில் குறைவாக கருதப்படும் அளவுகூட மிக அதிகமாக ஆகிவிடலாம். உதாரணத்திற்கு “‘மூட்’ கோளாறுகள் மற்றும் திகில் கோளாறுகள் உடையவர்களுக்குச் சிறிதளவு மதுபானம்கூட தீங்கு விளைவிக்கலாம்” என்று மதுபானமும் ஆரோக்கியமும் குறித்து ஐ.மா. காங்கிரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பத்தாவது விசேஷ அறிக்கை (ஆங்கிலம்) குறிப்பிட்டது. ஒருவருடைய வயது, மருத்துவ பின்னணி, உடலமைப்பு ஆகிய அனைத்தையும் கருத்தில்கொள்வது அவசியம்.​—⁠“ஆபத்தைக் குறைத்தல்” என்ற பெட்டியைக் காண்க.

மிதமிஞ்சி குடிப்பவர்களுக்கு என்ன உதவி இருக்கிறது? பின்வரும் கட்டுரை இதற்கான பதிலைத் தரும். (g05 10/8)

[அடிக்குறிப்புகள்]

a பிரான்சில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, மிதமாக குடிக்கும் கல்லீரல் அழற்சி சி (HCV) நோயாளிகளைவிட மிதமீறி குடிக்கும் HCV நோயாளிகளுக்கு கல்லீரல் கரணை நோய் ஏற்பட இரண்டு மடங்கு அதிக வாய்ப்பிருக்கிறது. HCV நோயாளிகள் குடிக்கவே கூடாது. அப்படியே குடித்தாலும் மிகக் குறைவாகவே குடிக்கும்படி ஆலோசனை கொடுக்கப்படுகிறது.

b தாங்கள் குடிக்கிற மதுபானம் தாய்ப்பாலில் தேங்கிவிடுகிறது என்பதைப் பால் கொடுக்கும் தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பார்க்கப்போனால், இரத்தத்தைவிட தாய்ப்பாலிலேயே மதுபானம் அதிகமாகத் தேங்குகிறது. ஏனென்றால் இரத்தத்தைவிட பாலில்தான் அதிகமான தண்ணீர் கலந்திருக்கிறது, அது மதுபானத்தை உறிஞ்சிக் கொள்கிறது.

c “ஒரு கிளாஸ்” மதுபானம் என்பதன் அளவு இடத்துக்கு இடம் வேறுபடும் என்பதால் ஒரு கிளாஸிலுள்ள ஆல்கஹாலின் அளவும் வேறுபடும். எனவே குடிப்பதற்கு முன்பு இவையெல்லாவற்றையும் கருத்தில்கொள்வது அவசியம்.

[பக்கம் 5-ன் பெட்டி/படங்கள்]

வண்டி எடுப்பதற்கு முன் ஒரு ‘பெக்’?

கார்கள் தோன்றிய காலத்திலேயே குடிபோதையில் வண்டி ஓட்டுவதற்குத் தடையும் அமலுக்கு வந்தது. 1903-⁠ம் வருடம் டென்மார்க் நாடுதான் முதன்முதலில் இத்தடையை விதித்தது.

வெறும் வயிற்றில் நீங்கள் மதுபானம் குடிக்கும்போது அரை மணிநேரத்திற்குள்ளேயே உங்கள் இரத்தத்தில் மதுபான அளவு உச்சக்கட்டத்தை எட்டிவிடுகிறது. அநேகர் நினைக்கிறபடி, காபி குடிப்பது, சுத்தமான காற்றைச் சுவாசிப்பது, உடற்பயிற்சி செய்வது ஆகியவையெல்லாம் போதையைக் குறைக்க உதவாது. நேரம் போகப்போகத்தான் போதை குறையும். ஒரு ஸ்டான்டர்டு கிளாஸ் ஒயின், பியர், அல்லது மற்ற (விஸ்கி, ஜின், ரம் போன்ற) மதுபானங்களில் நீங்கள் எதைக் குடித்தாலும் இவை எல்லாவற்றிலும் ஒரேயளவு ஆல்கஹாலே உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். d

நீங்கள் சிறிதளவு மதுபானம் குடித்துவிட்டு வண்டி ஓட்டினாலும்கூட தடுமாற்றம் ஏற்படலாம். மதுபானம் உங்கள் கண் பார்வையை பாதிக்கும். அதனால் சாலையோர ‘ஸைன் போர்டுகள்’ சிறியதாக தோன்றும். ஓரப் பார்வை பாதிக்கப்படும். தூரத்தைக் கணக்கிடும் திறனும் தூரப்பார்வையும் குன்றும். மூளையின் தகவல் பரிமாறும் திறன், பிரதிபலிப்பு திறன், ஒத்திசைவுத் திறன் ஆகிய அனைத்துமே குறையும்.

நீங்கள் குடிக்காமல் வண்டி ஓட்டும் சமயத்தைவிட குடித்துவிட்டு வண்டி ஓட்டும் சமயத்தில் விபத்து நேரிட்டால் உங்களுக்கு மிகப் பலமாக காயம் ஏற்படலாம். அதுமட்டுமா, உடனடி அறுவை சிகிச்சை தேவைப்பட்டாலும் உங்கள் இருதயத்தையும் இரத்த ஓட்டத்தையும் மதுபானம் பாதித்திருப்பதால் நீங்கள் சிகிச்சையில் பிழைக்கும் வாய்ப்பும் குறைகிறது. “எனவே மதுபானத்தினால் அதிகம் சாகிறவர்கள் அளவுக்கதிகமாக குடித்துவிட்டு வண்டி ஓட்டும் டிரைவர்களே. அநேகருக்கு தெரியாவிட்டாலும் இதுவே உண்மை” என்று பிரஞ்சு தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது. ஆபத்துகளைத் தவிர்க்க அந்த அறிக்கை பின்வரும் ஆலோசனைகளைக் கொடுக்கிறது:

◼ குடித்துவிட்டு வண்டி ஓட்டாதீர்கள்.

◼ டிரைவர் குடிபோதையில் இருந்தால் அவருடைய வண்டியில் ஏறாதீர்கள்.

◼ குடித்துவிட்டு வண்டி ஓட்ட நண்பர்களை அல்லது பெற்றோரை அனுமதிக்காதீர்கள்.

[அடிக்குறிப்பு]

d பொதுவாக, ஒரு மணிநேரத்தில் சுமார் ஏழு கிராம் ஆல்கஹால் உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. ஒரு ஸ்டான்டர்டு கிளாஸ் மதுபானம் நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. மதுபானத்தில் பத்து கிராம் (0.35 ஔன்ஸ்) சுத்தமான ஆல்கஹால் இருந்தால் அதுதான் ஸ்டான்டர்டு கிளாஸ் மதுபானம் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. கிட்டத்தட்ட இதே அளவு ஆல்கஹால்தான் 250 மில்லிலிட்டர் பியரிலும், 100 மில்லிலிட்டர் ஒயினிலும் அல்லது 30 மில்லிலிட்டர் உடைய வேறெந்த மதுபானத்திலும் இருக்கிறது.

[படங்கள்]

இவை எல்லாவற்றிலும் ஏறக்குறைய ஒரே அளவு ஆல்கஹால்தான் உள்ளது

ஒரு பாட்டில் சாதா பியர் (330 மிலி-யில் 5% ஆல்கஹால்)

ஒரு பெக் சாராயம் (விஸ்கி, ஜின், வோட்கா) (40 மிலி-யில் 40% ஆல்கஹால்)

ஒரு கிளாஸ் ஒயின் (140 மிலி-யில் 12% ஆல்கஹால்)

ஒரு சின்ன கிளாஸ் மதுபானம் (70 மிலி-யில் 25% ஆல்கஹால்)

[பக்கம் 6-ன் பெட்டி]

மதுபான அடிமை​—⁠காரணம் மரபணுக்களா?

மதுபான அடிமைத்தனத்திற்கு ஒரு தீர்வுகாண நினைத்து, விஞ்ஞானிகள் மரபணுக்களை ஆராய்ந்திருக்கிறார்கள்; மதுபான அடிமைத்தனத்திற்கும் மரபணுக்களுக்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறார்கள். மதுபானத்திற்கு ஒருவர் பிரதிபலிக்கும் விதத்தை கட்டுப்படுத்துவதுபோல் தோன்றுகிற அநேக மரபணுக்களை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். என்றாலும், மதுபான அடிமைத்தனத்திற்கு மரபணுக்களை மட்டும் காரணம் சொல்ல முடியாது. அந்த மரபணுக்களை ஒருவர் பெற்றிருந்தாலும் அவர் கண்டிப்பாக அடிமையாவார் என்றும் சொல்ல முடியாது. சுற்றுச்சூழல் அம்சங்களும் அதற்குக் காரணமாக இருக்கலாம். அவற்றில் சில: தவறான வளர்ப்புமுறை, குடிகார குடும்பத்தினர்கள் அல்லது நண்பர்கள், சண்டைச் சச்சரவுகள், உணர்ச்சிப்பூர்வ பாதிப்புகள், மனச்சோர்வு, வலுச்சண்டைக்கு செல்லுதல், திகில் பிரியம், அதிகம் குடித்தும் போதை ஏறாத நிலை, அல்லது வேறு ஏதாவது ஒன்றுக்கு அடிமையாகிவிட்ட நிலை போன்ற அனைத்துமே முக்கிய காரணிகளாகச் சொல்லப்படுகின்றன. இவையும் மற்ற காரணங்களும் மதுபானத்திற்கு அடிமையாவதற்கு வழிவகுக்கலாம்.

[பக்கம் 6-ன் பெட்டி/படம்]

பிரான்சு:

சுமார் 50 லட்சம் பேர் மதுபானத்தை மிதமிஞ்சி பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அதில் 20-30 லட்சம் பேர் மதுபானத்திற்கு அடிமையானவர்கள்

நைஜீரியா:

1.5 கோடி நைஜீரியர்கள்​—⁠மொத்த ஜனத்தொகையில் 12 சதவீதத்தினர்⁠—⁠மட்டுக்குமீறி குடிப்பவர்கள் என்று டெய்லி சாம்பியன் என்ற லாகோஸ் செய்தித்தாள் குறிப்பிட்டது

போர்ச்சுகல்:

ஸ்ட்ராங்கான ஆல்கஹாலை மிக அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளில் போர்ச்சுகலும் ஒன்று. மொத்த ஜனத்தொகையில் பத்து சதவீதத்தினர் ‘மதுபானம் சம்பந்தப்பட்ட கொடிய பாதிப்புகளால்’ தவிக்கிறார்கள் என்று லிஸ்பன் செய்தித்தாள் பூப்லிகோ சொல்கிறது

அமெரிக்கா:

ஏறக்குறைய 1.4 கோடி அமெரிக்கர்கள்​—⁠மொத்த ஜனத்தொகையில் 7.4 சதவீதம்​—⁠“மிதமிஞ்சிய குடியால் பாதிக்கப்பட்டவர்கள் என சொல்லலாம்” என்று மதுபானமும் ஆரோக்கியமும் குறித்து ஐ.மா. காங்கிரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பத்தாவது விசேஷ அறிக்கை சொல்கிறது

[பக்கம் 8-ன் பெட்டி]

ஆபத்தைக் குறைத்தல்

குறைந்த ஆபத்துள்ள அளவுகள் என்பதாக கொடுக்கப்பட்டிருக்கும் பின்வரும் விவரிப்புகள், உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த மன நலம் மற்றும் போதைப்பொருள் அடிமைத்தனம் சம்பந்தப்பட்ட துறையால் பிரசுரிக்கப்பட்டது. ஆபத்தைக் குறைப்பது என்றால் ஆபத்தே கிடையாது என்று அர்த்தமல்ல. மதுபானத்திற்கு ஒவ்வொருவரும் வித்தியாசமான விதங்களில் பிரதிபலிப்பார்கள்.

◼ ஒரு நாளைக்கு இரண்டு ஸ்டான்டர்டு கிளாஸ் மதுபானத்திற்கு மேல் குடிக்கக்கூடாது. e

◼ வாரத்தில் இரண்டு முறையாவது மதுபானத்தைக் குடிக்காமல் இருங்கள்

பின்வரும் சந்தர்ப்பங்களில் ஒன்று அல்லது இரண்டு கிளாஸ்கூட அதிகமாக ஆகிவிடலாம்:

◼ வண்டி ஓட்டும்போது அல்லது மெஷினில் வேலை செய்யும்போது

◼ கர்ப்பமாக இருக்கும்போது அல்லது தாய்ப்பால் கொடுக்கும்போது

◼ சில குறிப்பிட்ட மருந்துகளைச் சாப்பிடும்போது

◼ குறிப்பிட்ட சில வியாதிகள் இருக்கும்போது

◼ குடிப்பதை கட்டுப்படுத்த முடியாதபோது

[அடிக்குறிப்பு]

e ஸ்டான்டர்டு கிளாஸ் மதுபானத்தில் பத்து கிராம் (0.35 ஔன்ஸ்) ஆல்கஹால் இருக்கும்.

[படத்திற்கான நன்றி]

ஆதாரம்: ஆபத்தான, கேடுவிளைவிக்கிற குடிக்கு சில சுருக்கமான ஆலோசனைகள்

[பக்கம் 9-ன் பெட்டி/படம்]

மதுபானம்​—⁠இதயத்திற்கு நல்லதா?

சிகப்பு ஒயினிலுள்ள இரசாயனங்கள் (polyphenols), இரத்த குழாய்களைச் சுருங்கவைக்கிற ஒரு இரசாயனத்தின் செயலைத் தடுப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

மேலுமாக, நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கவும் ஆல்கஹால் உதவுகிறது. அதோடு இரத்த உறைவை ஏற்படுத்தும் பொருட்களை குறைக்கவும் உதவுகிறது.

மதுபானத்தை கொஞ்சமாகவும் எப்பொழுதாவது ஒரு முறையும் குடித்தால்தான் ஏதேனும் பயன்கள் கிடைக்கும்; பார்டிக்கோ பாருக்கோ சென்று ஒரே இரவில் எக்கச்சக்கமாக குடித்தால் ஒரு பயனும் கிடைக்காது. ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸுக்கு மேல் மதுபானம் குடிப்பது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மிதமிஞ்சி குடிப்பது ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல இதய வீக்கம் ஏற்பட்டு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற இன்னும் பல ஆபத்துகளையும் விளைவிக்கிறது. எனவே மிதமிஞ்சி மதுபானம் குடிப்பதால் இதயத்திற்கு கிடைக்கும் பலன்களைவிட ஆபத்துக்களே அதிகம். ஆக, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்.

[பக்கம் 7-ன் படங்கள்]

மதுபானம் உங்களை எவ்வாறு பாதிக்கலாம்

மூளை

செல்களின் சிதைவு, நினைவிழப்பு, சோர்வு, வெறித்தனமான போக்கு

பார்வை, பேச்சு, ஒத்திசைவு ஆகியவற்றின் கோளாறு

தொண்டை, வாய், மார்பக, கல்லீரல் புற்றுநோய்

இதயம்தசை பலவீனம், இதயம் செயலிழந்துவிடும் வாய்ப்பு

கல்லீரல்கொழுப்பேற்றம், பிறகு வீக்கம், கடைசியில் கரணை நோய்

மற்ற ஆபத்துகள்

நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், சீழ்ப்புண்கள் ஏற்படுதல், கணைய வீக்கம்

கர்ப்பிணிகள்

முழு வளர்ச்சிபெறாத அல்லது குறைபாடுள்ள குழந்தைகள்

[பக்கம் 8-ன் படம்]

“அளவுக்கு மீறி பயன்படுத்துகிற வேறெந்த போதைப்பொருளையும்விட மதுபானமே கருவில் வளரும் சிசுவை மிக அதிகமாகப் பாதிக்கிறது”