Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சந்தோஷமான மணவாழ்விற்கு . . .

சந்தோஷமான மணவாழ்விற்கு . . .

சந்தோஷமான மணவாழ்விற்கு . . .

“புருஷன் தன் . . . மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.”​—⁠ஆதியாகமம் 2:24.

நம் படைப்பாளராகிய யெகோவா தேவன், ஓர் ஆணையும் பெண்ணையும் நிரந்தரமாக இணைக்கும் எண்ணத்திலேயே திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தார். அதனால்தான் ஆதியாகமம் 2:18, 22-24 இவ்வாறு சொல்கிறது: “தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.”

சந்தோஷம் நிறைந்த, நிலையான இல்லற வாழ்க்கையை உருவாக்குவது சுலபமல்லதான், ஆனால் முயற்சிசெய்தால் நிச்சயம் முடியும். அநேக தம்பதிகள் 50, 60 ஏன் அதற்கும் அதிகமான வருடங்கள் இல்லற வாழ்வில் சந்தோஷம் கண்டிருக்கிறார்கள். காரணம்? இவர்கள் தங்கள் துணைக்கு ‘பிரியமாக நடந்துகொண்டு’ மணவாழ்வில் சந்தோஷம் நிலைத்திருக்க தன்னலம் கருதாமல், எப்போதும் உழைக்கிறார்கள். (1 கொரிந்தியர் 7:33, 34) இதற்குக் கடுமையான முயற்சி தேவைப்படுகிறது. நேரத்தையும் முயற்சியையும் அர்ப்பணிக்க மனமுள்ளவராயிருந்தால் சந்தோஷம் மலரும் நிலையான மணவாழ்வை நீங்களும்கூட அனுபவிக்க முடியும்.

புளூபிரின்ட்டை கவனமாகப் பின்பற்றுங்கள்

நம்பகமான ஒரு கான்ட்ராக்டர் புளூபிரின்ட்டை பார்க்காமல் ஒருபோதும் கட்டட வேலையில் இறங்க மாட்டார். அதேபோல், சந்தோஷமான மணவாழ்க்கையைக் கட்டுவதில் வெற்றிபெற அதைக் குறித்து கடவுளுடைய புளூபிரின்ட் என்ன சொல்கிறது என்பதைக் கவனமாக ஆராய்வது அவசியம். கடவுளுடைய வார்த்தையான பைபிளில் அது உள்ளது. “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது சீர்திருத்தலுக்கு, . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.​—2 தீமோத்தேயு 3:16, 17.

இயேசு தம் சீஷர்களை நடத்தின விதத்திலிருந்து கணவன்மார்களும் மனைவிமார்களும் மணவாழ்வைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ளலாம். ஏன் அப்படிச் சொல்லலாம்? இயேசுவுக்கும் பரலோகத்தில் அவருடன் சேர்ந்து ஆட்சி செய்யப்போகிறவர்களுக்கும் இடையே உள்ள உறவை கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவுடன் பைபிள் ஒப்பிட்டுப் பேசுகிறது. (2 கொரிந்தியர் 11:2) இயேசு எப்போதுமே, கடுமையான சூழலிலும்கூட அவர்களிடம் உண்மைத்தன்மையோடு நடந்துகொண்டார். “முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.” (யோவான் 13:1) கருணைமிக்க தலைவரான இயேசு, தம்மைப் பின்பற்றினவர்களுடைய பலவீனங்களையும் குறைபாடுகளையும் எப்போதுமே மனதில் வைத்து செயல்பட்டார். ஒருபோதும் அவர்களுடைய சக்திக்கு மீறிய எதையும் அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை.​—யோவான் 16:12.

தமது நெருங்கிய நண்பர்கள் தம் மனதை நோகடித்தபோதுகூட இயேசு மிக மென்மையாக நடந்துகொண்டார். கோபப்பட்டு அவர்களைத் திட்டாமல் கடவுளைப் போலவே மனத்தாழ்மையையும் இரக்கத்தையும் காண்பித்து, அவர்களைச் சரிப்படுத்த முயற்சி செய்தார். (மத்தேயு 11:28-30; மாற்கு 14:34-38; யோவான் 13:5-17) எனவே, இயேசு அவர்களை மென்மையாக நடத்தின விதத்தையும் அதற்கு அவர்கள் பிரதிபலித்த விதத்தையும் நீங்கள் கூர்ந்து ஆராய்ந்தால் சந்தோஷமான மணவாழ்க்கையைக் கட்டுவதற்கு நடைமுறையான பாடங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.​—1 பேதுரு 2:21.

உறுதியான அஸ்திவாரத்தின் மீது கட்டுங்கள்

உங்கள் மணவாழ்வின் அஸ்திவாரத்தை பிரச்சினைகள் தாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது உங்கள் மணத்துணையுடன் உள்ள உறவின் பலத்தைப் பதம் பார்க்கும். சந்தோஷமான மணவாழ்வுக்கு உறுதியான அஸ்திவாரம் எது? அன்பின் அடிப்படையில் உண்மையாய் செய்யப்படும் ஒப்பந்தமாகும். அதன் முக்கியத்துவத்தை இயேசு இவ்வாறு வலியுறுத்திக் காட்டினார்: “அவர்களை இணைத்தவர் தேவன். எனவே, எவரும் அவர்கள் இருவரையும் பிரிக்கக்கூடாது.” (மத்தேயு 19:6, ஈஸி டு ரீட் வர்ஷன்) “எவரும்” என்ற அந்தச் சொல், ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக இருப்பதாக வாக்குறுதி அளித்த கணவனையும் மனைவியையும்கூட உட்படுத்துகிறது.

இப்படி ஒப்பந்தம் செய்கையில், தங்கள் நேரத்தையும், பணத்தையும், முயற்சியையும் எக்கச்சக்கமாய் செலவிட வேண்டியிருக்கும் என்பதால் அந்த ஒப்பந்தத்தைச் செய்யவே சிலர் பயப்படுகிறார்கள். இன்று, சொந்த செளகரியமே முக்கியமென கருதப்படுவதால் திருமண ஒப்பந்தத்தில் உட்பட்டுள்ள தியாகங்களைச் செய்ய யாரும் முன்வருவதில்லை.

திருமண ஒப்பந்தத்தை எது உறுதிப்படுத்தும்? “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபேசியர் 5:28, 29) ‘இணைந்திருப்பது’ என்பது உங்கள் சொந்த நலனில் அக்கறையாக இருப்பது போல உங்கள் மணத் துணையின் நலனிலும் அக்கறையாக இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. மணமானவர்கள் “நான்,” “என்னுடைய” என சிந்திக்காமல் “நாம்” “நம்முடைய” என சிந்திக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

உங்கள் மணவாழ்வில் வீசும் கடும் புயல்களை வெற்றிகரமாகச் சமாளிப்பது உங்களை அதிக ஞானமுள்ளவர்களாய் ஆக்கும். இந்த ஞானம் சந்தோஷத்தைத் தரும். ‘ஞானத்தைக் கண்டடைகிற மனுஷன் . . . பாக்கியவான்,’ அதாவது சந்தோஷமுள்ளவன் என்று நீதிமொழிகள் 3:13 குறிப்பிடுகிறது.

தீக்கிரையாகாத பொருள்களைப் பயன்படுத்துங்கள்

வீடு தரமாகவும் உறுதியாகவும் இருப்பதற்கு அது நன்றாய் கட்டப்பட்டிருக்க வேண்டும். எனவே, உங்கள் திருமண பந்தம் நிலைத்திருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அதைக் கட்டுங்கள். மணவாழ்வில் உங்கள் உண்மைத்தன்மைக்கு வரும் பயங்கரமான பரிட்சைகளை வெற்றிகரமாய் சமாளிக்க உதவும் தரமான பொருள்களால் அதைக் கட்டுங்கள். தாராள குணம், விவேகம், இரக்கம், கடவுள் பயம், அவர் தரும் ஞானம், அவருடைய சட்டங்களிடம் உண்மையான அன்பும் அவற்றிற்கான நன்றியுணர்வும், உண்மையான விசுவாசம் ஆகிய மதிப்புவாய்ந்த குணங்களைப் பொக்கிஷமாய் கருதுங்கள்.

சொத்து சுகங்கள், சொந்த முன்னேற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மணவாழ்வில் சந்தோஷமும் திருப்தியும் மலர்வதில்லை. அவை மனதிலும் இருதயத்திலுமே மலர்கின்றன. இந்த நற்குணங்களை பைபிள் சத்தியங்கள் உறுதிப்படுத்துகின்றன. “அவனவன் . . . இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்” என்ற அறிவுரை மணவாழ்வுக்குப் பொருந்துகிறது.​—1 கொரிந்தியர் 3:10.

பிரச்சினைகள் எட்டிப்பார்க்கையில்

ஒரு கட்டடம் நீண்டகாலம் நிலைத்திருக்க அதை அவ்வப்போது பராமரிக்க வேண்டும். அதேபோல், கணவனும் மனைவியும் எப்போதும் தங்கள் இலட்சியங்களை அடைவதற்கு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி, கனப்படுத்தி, மரியாதையுடன் நடத்தினால் அவர்களுடைய திருமண பந்தம் பலமாக இருக்கும். அப்போது சுயநலம் வேர்விடுவதில்லை, கோபமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

கடுமையான, தீராத கோபமும் விரக்தியும் மணவாழ்வில் அன்பையும் பாசத்தையும் குலைத்துவிடும். அப்போஸ்தலன் பவுல் கணவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கொடுத்தார்: ‘புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.’ (கொலோசெயர் 3:19) அதே நியமம் மனைவிகளுக்கும் பொருந்துகிறது. கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, அனுசரித்து, அன்பாக நடந்துகொள்ளும்போது சந்தோஷத்தையும் திருப்தியையும் அடைவார்கள். எதற்கெடுத்தாலும் சுருக்கென்று கோபப்படுவதையும் சண்டையை உசுப்பிவிடுவதுபோல் பேசுவதையும் தவிர்ப்பது நல்லது; அப்படி செய்வது பிரச்சினைகள் சண்டையில்போய் முடிவடைவதைத் தடுக்கும். பவுல் சொன்னபடி, “ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”​—எபேசியர் 4:32.

ஒருவேளை இயலாமை, விரக்தி, அல்லது தரக்குறைவாக நடத்தப்படுவதன் காரணமாக நீங்கள் சோர்வடைந்தால்? பிரச்சினை என்ன என்பதை உங்கள் துணையிடம் சாந்தமான முறையில் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். என்றாலும், சின்னச் சின்ன பிரச்சினைகளை அன்பினால் மூடுவது சிறந்தது.​—1 பேதுரு 4:8.

உங்கள் துணையிடம் என்ன கோபமிருந்தாலும் அவரிடம் “பேசுவதை மட்டும் நிறுத்திவிட வேண்டாம்” என்று சொல்கிறார் தன் 35 வருட மணவாழ்க்கையில் பல பிரச்சினைகளை எதிர்ப்பட்டிருக்கும் ஒரு கணவன். அதோடு, “நேசிப்பதை நிறுத்திவிட வேண்டாம்” என்றும் மணியான ஆலோசனை கூறுகிறார்.

சந்தோஷமான மணவாழ்வை நிச்சயம் உங்களால் கட்ட முடியும்!

சந்தோஷமான மணவாழ்வைக் கட்டுவது சுலபமல்லதான். இருந்தாலும், தம்பதிகள் தங்கள் திருமண பந்தத்திற்குள் கடவுளையும் சேர்த்துக்கொள்ள கடுமையாக முயற்சிசெய்ய தீர்மானமாக இருக்கும்போது சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் பெற முடியும். எனவே, உங்கள் குடும்பத்தின் ஆன்மீக தேவைகளுக்கு அதிக கவனம் செலுத்துங்கள்; உங்கள் மண துணைக்கு உண்மையாக இருப்பதில் உறுதிகாட்டுங்கள். சந்தோஷமான மணவாழ்க்கைக்குரிய முழு புகழும் கணவனையோ மனைவியையோ அல்ல, ஆனால் திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்த யெகோவா தேவனையே சேரும் என்று இயேசு சொன்னதை நினைவில் வையுங்கள். ‘தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.’​—மத்தேயு 19:6.

மேலும் அறிய

யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகம், வெற்றிகரமான, சந்தோஷமான மணவாழ்வைக் கட்டுவதற்கு நடைமுறை ஆலோசனைகளைத் தருகிறது. உலகெங்கும் ஆயிரக்கணக்கான தம்பதிகளுக்கு தங்கள் பந்தத்தை பலப்படுத்த இந்த ஆலோசனைகள் உதவியிருக்கின்றன.​—⁠இப்பத்திரிகையில் பக்கம் 32-ஐக் காண்க.

[பக்கம் 9-ன் பெட்டி]

சந்தோஷமான மணவாழ்க்கைக்கு எது உங்களுக்கு உதவும்?

◼ உங்கள் துணையுடன் சேர்ந்து கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் வாசியுங்கள், பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு உதவியையும், வழிநடத்துதலையும் கேட்டு கடவுளிடம் ஜெபியுங்கள்.​—⁠நீதிமொழிகள் 3:5, 6; பிலிப்பியர் 4:6, 7; 2 தீமோத்தேயு 3:16, 17.

◼ மணத் துணையிடம் மட்டுமே பாலுறவு ஆசைகளை வெளிப்படுத்துங்கள்.​—⁠நீதிமொழிகள் 5:15-21; எபிரெயர் 13:4.

◼ உங்கள் பிரச்சினைகளையும் கருத்து வேறுபாடுகளையும் பற்றி மனம்விட்டு, நேர்மையாக, அன்பான முறையில் பேசுங்கள்.​—⁠நீதிமொழிகள் 15:22; 20:5; 25:11.

◼ உங்கள் துணையிடம் சாந்தமாகவும், ஆதரவாகவும் பேசுங்கள்; கோபத்தில் பொரிந்துதள்ளாதீர்கள், நச்சரிக்காதீர்கள், கூர்மையான வார்த்தைகளால் மனதைக் குத்திக் கிழிக்காதீர்கள்.​—⁠நீதிமொழிகள் 15:1; 20:3; 21:9; 31:26, 28; எபேசியர் 4:31, 32.

◼ உங்கள் துணை தன் பொறுப்பை சரிவர செய்யாததுபோல் நீங்கள் நினைத்தாலும் பைபிளின் புத்திமதிக்கு மனத்தாழ்மையுடன் கீழ்ப்படியுங்கள்.​—⁠ரோமர் 14:12; 1 பேதுரு 3:1, 2.

◼ பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆன்மீக குணங்களை வளர்த்துக்கொள்ள கடுமையாக உழையுங்கள்.​—⁠கலாத்தியர் 5:22, 23; கொலோசெயர் 3:12-14; 1 பேதுரு 3:3-6.

[பக்கம் 7-ன் படங்கள்]

மணவாழ்வு சம்பந்தமாக பைபிளில் கடவுள் கொடுத்திருக்கும் புளூபிரின்ட்டை பின்பற்றுங்கள்

[பக்கம் 7-ன் படம்]

தன்னலமற்ற அன்பையும் உண்மைத்தன்மையையும் உறுதியான அஸ்திவாரமாகப் பயன்படுத்துங்கள்

[பக்கம் 8-ன் படங்கள்]

பயங்கரமான பரிட்சைகளைச் சமாளிப்பதற்கு ஆன்மீக குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்

[பக்கம் 8-ன் படங்கள்]

மணவாழ்வில் சந்தோஷம் பூத்துக்குலுங்க அதைப் பராமரிக்க வேண்டும்