Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரத்தத்தின் உண்மையான மதிப்பு

இரத்தத்தின் உண்மையான மதிப்பு

இரத்தத்தின் உண்மையான மதிப்பு

“நிறம், மதம், ஜாதி எதுவாக இருந்தாலும், மனிதர் அனைவருக்கும் உயிர்நாடியாக இருப்பது இரத்தமே.”​—⁠ஐக்கிய நாடுகளின் பொதுப் பேரவைத் தலைவர்.

இந்த வார்த்தைகளில் ஓரளவு உண்மை இருக்கிறது. மனித வாழ்வுக்கு இரத்தம் மிக மிக அவசியம். அது மதிப்புமிக்க ஒரு திரவம் என்பது உண்மைதான். இருந்தாலும் சிகிச்சைக்காக இரத்தத்தைப் பயன்படுத்துவது சரியானது, பாதுகாப்பானது என்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா?

நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இரத்தத்திற்கான பாதுகாப்பு விதிமுறைகள் நாட்டிற்கு நாடு முற்றிலும் வித்தியாசப்படுகிறது. இரத்தத்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பது அநேகர் நினைப்பதைக் காட்டிலும் அதிக ஆபத்தானது. அதோடு, மருத்துவர்களின் படிப்பு, திறமைகள், கருத்துகள் ஆகியவற்றிற்கு ஏற்ப அவர்கள் இரத்தத்தைக் கையாளும் விதமும் வேறுபடுகிறது. இருந்தாலும், அநேக மருத்துவர்கள் இரத்தமேற்றும் விஷயத்தில் படு எச்சரிக்கையுடன் செயல்படுகிறார்கள். பார்க்கப்போனால், இரத்தமின்றி சிகிச்சை அளிக்க விரும்பும் மருத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

எனவே இந்தத் தொடரிலுள்ள முதல் கட்டுரையின் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட கேள்வியை இப்போது சிந்திப்போம். இரத்தத்திற்கு ஏன் இவ்வளவு மதிப்பு? மருத்துவக் காரணங்களுக்காக இரத்தத்தைப் பயன்படுத்துவது எப்போதுமே சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கிறதென்றால் இரத்தம் மதிப்புமிக்கதாகக் கருதப்படுவதற்கு வேறு எதாவது காரணம் இருக்கிறதா?

படைப்பாளர் இரத்தத்தைக் கருதும் விதம்

மனிதகுலத்தின் மூதாதையான நோவா வாழ்ந்த காலத்தில் கடவுள் ஒரு முக்கியமான கட்டளையைக் கொடுத்தார். மிருகங்களின் மாமிசத்தைச் சாப்பிட மனிதர்களை அனுமதித்த அவர், அவற்றின் இரத்தத்தை உண்பதற்கு அவர்களை அனுமதிக்கவில்லை. (ஆதியாகமம் 9:4) இரத்தம் உயிருக்குச் சமானம் என்று அதற்கான காரணத்தையும் அளித்தார். ‘இரத்தத்தில் உயிர் இருக்கிறது’ என்றும் கூறினார். அவர் இரத்தத்தைப் புனிதமாகக் கருதுகிறார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிற உயிர் எனும் அருமையான பரிசை இரத்தம் அடையாளப்படுத்துகிறது. பைபிளில் அடிக்கடி இந்த நியமத்தைக் கடவுள் வலியுறுத்தியுள்ளார்.​—லேவியராகமம் 3:17; 17:10, 11, 14; உபாகமம் 12:16, 23.

சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ மதம் ஸ்தாபிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கு கடவுள் ஒரு கட்டளை கொடுத்தார். அதுதான் ‘இரத்தத்திற்கு . . . விலகியிருக்கும்படியான’ கட்டளை. நோய்நொடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக அந்தக் கட்டளை கொடுக்கப்படவில்லை. மாறாக, இரத்தத்தின் புனிதத் தன்மையை உணர்த்தவே அது கொடுக்கப்பட்டது. (அப்போஸ்தலர் 15:19, 20, 29) இரத்தத்தை சாப்பிடுவதற்குத்தான் கடவுள் தடை விதித்திருக்கிறார் என்பதாகச் சிலர் வாதாடலாம். ஆனால் ‘விலகியிருங்கள்’ என்பது, உண்பதை மட்டும் உட்படுத்துவதில்லை, இன்னும் அதிகத்தை உட்படுத்துகிறது. ஒருவேளை, மது அருந்தாதிருக்கும்படி மருத்துவர் நம்மிடம் சொல்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, மதுவைக் குடிக்கத்தானே கூடாது, நரம்பு வழியாக உடலில் ஏற்றிக்கொள்ளலாமே என்று நினைப்போமா? நிச்சயம் அப்படி நினைக்க மாட்டோம்.

இரத்தம் ஏன் அந்தளவு பரிசுத்தமானது என்பதற்கு பைபிள் கூடுதலான விளக்கம் அளிக்கிறது. இயேசு சிந்திய இரத்தம், மனிதகுலத்துக்காக அவர் அளித்த அவருடைய மனித உயிரை அடையாளப்படுத்தியது. இதுவே கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாக இருக்கிறது. இது பாவ மன்னிப்புக்கு வழிசெய்திருக்கிறது, நிரந்தரமாக வாழப்போகும் எதிர்பார்ப்பையும் அளித்திருக்கிறது. எனவே, ஒரு கிறிஸ்தவர் இரத்தத்திலிருந்து விலகியிருப்பதன் மூலம் இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தம் மாத்திரமே தன்னை மீட்டு தன் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதை விசுவாசிப்பதற்கு அத்தாட்சி அளிக்கிறார்.​—எபேசியர் 1:7.

பைபிளின் இந்தக் கட்டளைகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் கண்டிப்பாக கீழ்ப்படிகிறார்கள் என்பது யாவரறிந்த விஷயம். முழு இரத்தத்தையோ அதன் முக்கிய பகுதிகளான சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் ஆகியவற்றையோ அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இந்த முக்கிய பகுதிகளிலிருந்து எடுக்கப்படும் மற்ற கூறுகளையும், அந்தக் கூறுகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளையும் ஏற்றுக்கொள்வதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. எனவே, இந்த விஷயங்களின் பேரில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் தனிப்பட்ட விதத்தில் தீர்மானிக்கிறார்கள். சாட்சிகள் இரத்தமேற்றிக்கொள்ளாதிருப்பது அவர்கள் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதில்லை என்றோ தங்கள் உடல்நலத்திற்குக் கவனம் செலுத்துவதில்லை என்றோ உயிர்மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்றோ அர்த்தப்படுத்துகிறதா? நிச்சயமாகவே இல்லை! “உடல்நலம் குறித்து யெகோவாவின் சாட்சிகளின் கருத்து” என்ற பெட்டியைக் காண்க.

சாட்சிகள் பைபிள் நெறிமுறைகளுக்குக் கீழ்ப்படிவதால் மருத்துவ சிகிச்சைகளில் நல்ல பலன்களைப் பெற்றிருப்பதாக அநேக மருத்துவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் இரத்தத்திற்கான மாற்று மருந்துகளைப் பயன்படுத்துவதை ஆதரித்துப் பேசினார். அவர் இவ்வாறு சொன்னார்: “யெகோவாவின் சாட்சிகளுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே அதுதான் (இரத்தத்திற்கான மாற்று மருந்துகளைப் பயன்படுத்துவதுதான்) பாதுகாப்பான சிகிச்சை.”

மோசமான உடல்நல பிரச்சினைகளுக்கு எந்தச் சிகிச்சை சிறந்தது என்பதைத் தீர்மானிப்பது அதிக டென்ஷன் தரலாம். சரியான தீர்மானம் எடுப்பது ஒரு பெரிய சவாலாகவும் இருக்கலாம். சர்வசாதாரணமாக செய்யப்படும் இரத்தமேற்றுதல் பழக்கத்தைக் குறித்து நுரையீரல் மருத்துவ நிபுணரும் மருத்துவ இயக்குநருமான டாக்டர் டேவ் வில்லியம்ஸ் சொல்வதைக் கவனியுங்கள்: “மக்களுடைய விருப்பங்களை நாம் மதிப்பது மிகவும் அவசியம், . . . நம் உடலுக்குள் என்ன செலுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.” இவரது வார்த்தைகளுக்கு முன்பைவிட இப்போது அதிக அர்த்தம் இருக்கிறது.

[பக்கம் 11-ன் பெட்டி/படங்கள்]

ஹீமோகுளோபினிலிருந்து தயாரிக்கப்பட்டு ஆக்ஸிஜனைச் சுமந்துசெல்லும் திரவம்

இரத்தத்திலுள்ள ஒவ்வொரு சிவப்பு அணுவிலும் சுமார் 30 கோடி ஹீமோகுளோபின் மூலக்கூறுகள் உள்ளன. இந்த ஹீமோகுளோபின், முழு வளர்ச்சி அடைந்த ஒரு சிவப்பு அணுவின் கனஅளவில் மூன்றில் ஒரு பங்கு இருக்கிறது. இதன் ஒவ்வொரு மூலக்கூறிலும் குளோபின் என்ற புரதமும், இரும்பு அணுவைக் கொண்ட ஹீம் என்ற நிறமியும் உள்ளன. இரத்தத்திலுள்ள ஒரு சிவப்பு அணு நுரையீரல் வழியே செல்லும்போது, ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் சிவப்பு அணுவினுள் ஊடுருவி, அதிலுள்ள ஹீமோகுளோபின் மூலக்கூறுகளில் ஒட்டிக்கொள்கின்றன. சில வினாடிகளில், அந்த ஆக்ஸிஜன், உடல் திசுக்களுக்குள் சென்று செல்களை தொடர்ந்து இயங்கச் செய்கிறது.

தற்போது மனிதனின் அல்லது மாட்டின் சிவப்பு அணுக்களிலிருந்து ஹீமோகுளோபின் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஹீமோகுளோபின் வடிகட்டப்பட்டு அதிலுள்ள மாசு நீக்கப்படுகிறது. பின்னர் ரசாயன மாற்றம் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. அதன் பிறகு ஒரு கரைசலுடன் கலக்கப்பட்டு பாட்டில்களிலோ, பிளாஸ்டிக் பைகளிலோ அடைக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட திரவமே, ஹீமோகுளோபினிலிருந்து பெறப்பட்ட ஆக்ஸிஜனைச் சுமந்துசெல்லும் திரவம் (HBOC) என அழைக்கப்படுகிறது. பல நாடுகளில் இதற்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. ஹீம் என்ற நிறமியே இரத்தத்திற்குச் சிவப்பு நிறத்தைக் கொடுப்பதால், சிவப்பு அணுக்களை முக்கியப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த HBOC-யின் ஒரு யூனிட்டை எடுத்துப் பார்க்கும்போது, அது ஒரு யூனிட் சிவப்பு அணுக்களைப் போலவே இருக்கும்.

இரத்தச் சிவப்பு அணுக்களை ஃபிரிட்ஜில் வைத்து, சில வாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்; ஆனால் இந்த HBOC-யை அறை வெப்பநிலையில் வைத்து, பல மாதங்களுக்குப் பிறகும் பயன்படுத்தலாம். பொருத்தமற்ற இரத்த குரூப் காரணமாக தீவிர பிரதி விளைவுகள் ஏற்படும் அபாயமும் இத்திரவத்தில் இல்லை; ஏனெனில் செல் சவ்வும் அதோடு, செல்லின் தனித்தன்மையுள்ள ஆன்டிஜன்களும் இதில் இருப்பதில்லை. என்றாலும், இரத்தத்தின் பிற கூறுகளுடன் ஒப்பிட, இத்திரவத்தை ஏற்றிக்கொள்வது, மனசாட்சிக்குப் பயந்து இரத்தம் பற்றிய கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிய நினைக்கிற கிறிஸ்தவர்களுக்குப் பெரும் சவாலாகவே இருக்கிறது. ஏன்? HBOC இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படுவதால், இரண்டு வித ஆட்சேபணைகள் எழுப்பப்படலாம். அவற்றில் ஒன்று, இரத்தத்தின் முக்கிய பகுதியாகிய சிவப்பு அணுக்களின் வேலையையே HBOC செய்கிறது. இன்னொன்று, இரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கியக் கூறாக உள்ள ஹீமோகுளோபினிலிருந்தே HBOC தயாரிக்கப்படுகிறது. ஆகவே, இதையோ இதுபோன்ற பிற பொருள்களையோ தங்கள் உடலில் ஏற்றிக்கொள்வதைப் பற்றி கிறிஸ்தவர்கள் மிக முக்கியமான தீர்மானத்தை எதிர்ப்படுகிறார்கள். இரத்தத்தின் புனிதத்தன்மை குறித்து பைபிள் நியமங்களை அவர்கள் கவனத்தோடும் ஜெபத்தோடும் தியானிக்க வேண்டும். யெகோவாவுடன் ஒரு சிறந்த உறவைத் தக்கவைத்துக்கொள்ளும் ஆவலோடு, ஒவ்வொருவரும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் உதவியால் இத்தீர்மானத்தை எடுக்க வேண்டும்.​—⁠கலாத்தியர் 6:5.

[படம்]

ஹீமோகுளோபின் மூலக்கூறு

[பக்கம் 12-ன் பெட்டி/படம்]

சிபாரிசு செய்யப்படும் சிகிச்சை

“‘இரத்தமில்லா அறுவை சிகிச்சை’ செய்ய அதிகமதிகமான மருத்துவமனைகள் முன்வருகின்றன” என்று த உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை அறிக்கையிட்டது. “யெகோவாவின் சாட்சிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சிகிச்சை முறை . . . அந்தளவு பிரபலமாகிவிட்டதால் இப்போது மற்றவர்களுக்கும் இரத்தமில்லாமல் அறுவை சிகிச்சை செய்ய அநேக மருத்துவமனைகள் முன்வந்திருக்கின்றன” என்று அந்தப் பத்திரிகை சொல்கிறது. இரத்தமேற்றாமலே சிகிச்சை அளிக்கையில் அநேக நன்மைகள் உள்ளன, குறிப்பாக நோயாளிகள் அநேக விதங்களில் பயனடைகிறார்கள் என்பதை உலக முழுவதிலும் உள்ள மருத்துவமனைகள் கண்டுணர்ந்திருக்கின்றன. தற்போது, ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இரத்தமேற்றாமலே நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கிறார்கள்.

[பக்கம் 12-ன் பெட்டி/படம்]

உடல்நலம் குறித்து யெகோவாவின் சாட்சிகளின் கருத்து

யெகோவாவின் சாட்சிகள் முழு இரத்தத்தையோ இரத்தத்தின் முக்கிய கூறுகளையோ ஏற்றிக்கொள்ள மாட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. இந்த விஷயத்தில் அவர்கள் அனைவரும் உறுதியாக இருக்கிறார்கள். இவர்களில் சிலர் மருத்துவர்களாகவும் நர்ஸுகளாகவும் இருக்கிறார்கள். தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் அவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கிறார்களா? அல்லது கடவுள் பக்தி இருந்தாலே போதும், வியாதி குணமாகிவிடும் என்ற எண்ணத்தில் இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கிறார்களா? இந்த இரண்டு காரணங்களாலுமே அல்ல!

அவர்கள் தங்கள் உயிரை கடவுளிடமிருந்து கிடைத்த பரிசாகக் கருதுவதால் பைபிள் நெறிமுறைப்படி வாழ பிரயாசப்படுகிறார்கள்; பைபிள் ‘தேவ ஆவியினால் அருளப்பட்டிருப்பதாக’ நம்புகிறார்கள். (2 தீமோத்தேயு 3:16, 17; வெளிப்படுத்துதல் 4:11) கடவுளை வணங்குபவர்கள், உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடிய அல்லது உயிருக்கு ஆபத்து உண்டாக்கக்கூடிய பழக்கங்களான பெருந்தீனி, புகைபிடித்தல், புகையிலை உபயோகம், மிதமிஞ்சி குடித்தல், பொழுது​போக்காக போதைப் பொருள்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர்க்கும்படி பைபிள் அறிவுரை கூறுகிறது.​—⁠நீதிமொழிகள் 23:20; 2 கொரிந்தியர் 7:1.

நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமும், ஆரோக்கியமாக இருப்பதற்காக சில உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலமும் பைபிள் நியமங்களுக்கு இசைவாக நடந்துகொள்கிறோம். (மத்தேயு 7:12; 1 தீமோத்தேயு 4:8) யெகோவாவின் சாட்சிகள் நோய்வாய்ப்படுகையில் மருத்துவர்களை நாடுகிறார்கள், கிடைக்கக்கூடிய எல்லா மாற்று சிகிச்சை முறைகளையும் முயன்று பார்க்கிறார்கள்; இதன் மூலம் தங்கள் நியாயத்தன்மையை வெளிக்காட்டுகிறார்கள். (பிலிப்பியர் 4:5, NW) ஆம், ‘இரத்தத்திற்கு விலகியிருங்கள்’ என்ற பைபிளின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிவதாலேயே இரத்தமில்லா சிகிச்சை பெறுவதில் உறுதியாக இருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 15:29) அவர்கள் எடுத்திருக்கும் இந்தத் தீர்மானத்தினால் பொதுவாக நல்ல பலன்களையே பெற்றிருக்கிறார்கள்.