Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படைப்பில் கடவுள் பரிணாமத்தை பயன்படுத்தினாரா?

படைப்பில் கடவுள் பரிணாமத்தை பயன்படுத்தினாரா?

படைப்பில் கடவுள் பரிணாமத்தை பயன்படுத்தினாரா?

“கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக் கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”​—⁠வெளிப்படுத்துதல் 4:11.

சார்ல்ஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை உலகெங்கும் பரவியபோது, பல “கிறிஸ்தவ” அமைப்புகள் கடவுள் நம்பிக்கையையும் பரிணாமக் கொள்கையையும் ஒன்றிணைக்க வழிதேடின.

இன்றும்கூட நிலைமை மாறவில்லை. ஏதோவொரு விதத்தில் பரிணாமத்தைப் பயன்படுத்தியே உயிரினங்களைக் கடவுள் படைத்தார் என்பதை ஏற்றுக்கொள்ள பிரபல “கிறிஸ்தவ” அமைப்புகள் தயாராக இருப்பதுபோலவே தெரிகிறது. இதையே சிலர் வேறு விதமாகக் கற்பிக்கிறார்கள். அதாவது, உயிரற்ற ரசாயனங்களில் இருந்து படிப்படியாக உயிர் தோன்றி, காலப்போக்கில் மனிதர்கள் உருவாகிவிடும் விதத்தில்தான் கடவுள் இந்தப் பிரபஞ்சத்தை புரோகிராம் செய்திருந்தார் என்பதாக அவர்கள் சொல்கிறார்கள். இவ்வாறாக, படைப்பிற்கும் பரிணாமத்திற்கும் முடிச்சுப் போடும் இந்தக் கோட்பாட்டை நம்புவோர், உயிரினங்கள் உருவாகும் இந்த வேலை ஆரம்பித்த பிறகு கடவுள் அதில் தலையிடவில்லை என்பதாகச் சொல்கிறார்கள். மற்றவர்களோ, பரிணாமத்தின் மூலமாக பெரும்பாலான தாவரங்களும் விலங்கினங்களும் உருவாக கடவுள் அனுமதித்தார்; ஆனால், அதன் படிப்படியான முன்னேற்றத்தில் அவ்வப்போது தலையிட்டு உதவியும் செய்தார் என்பதாக நினைக்கிறார்கள்.

பரிணாமமும் படைப்பும் இணைய முடியுமா?

பரிணாமக் கொள்கை பைபிள் போதனைகளோடு உண்மையிலேயே ஒத்துப்போகிறதா? பரிணாமம் உண்மையென்றால், முதல் மனிதனாகிய ஆதாம் படைக்கப்பட்டது பற்றி பைபிள் குறிப்பிடுவது ஏதோவொரு நன்னெறிக் கதையாக அல்லவா இருக்கும். அதை உண்மைச் சம்பவமாக எடுத்துக்கொள்ள முடியாதே! (ஆதியாகமம் 1:26, 27; 2:18-24) இந்த பைபிள் பதிவை இயேசு வெறுமனே கதையாகத்தான் கருதினாரா? “ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்” என்று இயேசு கூறினார்.​—மத்தேயு 19:4-6.

ஆதியாகமம் இரண்டாம் அதிகாரத்தில் படைப்பைக் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள தகவலை இயேசு இச்சந்தர்ப்பத்தில் மேற்கோள் காட்டினார். முதல் திருமணத்தைப் பற்றிய பைபிள் பதிவை ஒரு கட்டுக்கதையாக அவர் கருதியிருந்தால், திருமணத்தின் புனிதத்தன்மையைப் பற்றிய அவருடைய போதனைக்கு ஆதாரமாக அதைக் குறிப்பிட்டிருப்பாரா? நிச்சயம் குறிப்பிட்டிருக்க மாட்டார். ஆதியாகமப் பதிவு ஒரு நிஜ சம்பவம் என்பதை இயேசு அறிந்திருந்ததால்தான் அதை மேற்கோள் காட்டிப் பேசினார்.​—யோவான் 17:17.

படைப்பைக் குறித்து ஆதியாகமம் சொல்வதை இயேசுவின் சீஷர்களும் நம்பினர். உதாரணமாக, லூக்காவின் சுவிசேஷத்தில் இயேசுவின் வம்சாவளி ஆதாம் வரையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. (லூக்கா 3:23-38) ஆதாம் ஒரு கற்பனைக் கதாபாத்திரமாக இருந்திருந்தால், இந்த வம்சாவளிப் பட்டியலில் கற்பனைப் பெயர்கள் எப்போது நுழைந்தன? இந்த வம்சாவளியின் ஆணிவேரான ஆதாமே கற்பனைக் கதாபாத்திரம் என்றால், தாமே தாவீதின் வம்சத்தில் வந்த மேசியா என இயேசு சொன்னதற்கு நிரூபணமாக இருக்கிற அந்தப் பட்டியலை எப்படி நம்ப முடியும்? (மத்தேயு 1:1) சுவிசேஷ எழுத்தாளராகிய லூக்கா, தான் ‘ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்ததாக’ கூறியிருக்கிறார். படைப்பைக் குறித்து ஆதியாகமம் சொல்வதை அவர் நிச்சயமாகவே நம்பினார்.​—லூக்கா 1:3.

இயேசுமீது அப்போஸ்தலன் பவுலுக்கு இருந்த விசுவாசம் ஆதியாகமப் பதிவின் மேல் அவருக்கிருந்த நம்பிக்கையோடு தொடர்புடையதாக இருந்தது. அவர் இவ்வாறு எழுதினார்: “மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” (1 கொரிந்தியர் 15:21, 22) ஆதாமின் மூலமாகவே “பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது”; ஆதாம் மனிதவர்க்கத்தின் மூதாதை என்பது கற்பனை என்றால், அவனிடமிருந்து சுதந்தரித்த பாவத்தை நீக்க இயேசு சாக வேண்டிய அவசியமே இருந்திருக்காதே!​—ரோமர் 5:12; 6:23.

படைப்பைக் குறித்து ஆதியாகமம் சொல்வதை நம்பவில்லையென்றால், நம்முடைய கிறிஸ்தவ விசுவாசமே ஆட்டங்கண்டுவிடும். பரிணாமக் கொள்கையும் கிறிஸ்துவின் போதனைகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை. இவ்விரண்டையுமே இணைக்க முயன்றால் நம்முடைய விசுவாசம் பலவீனமாகி, தவறான “போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு” அலையத் தொடங்கிவிடும்.​—எபேசியர் 4:14.

உறுதியான அஸ்திவாரத்தின் அடிப்படையில் விசுவாசம்

பைபிள் பல நூற்றாண்டுகளாகவே விமர்சனத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகியிருக்கிறது. எனினும், அதிலுள்ள தகவல்கள் உண்மை என்பது திரும்பத் திரும்ப நிரூபணமாகியிருக்கிறது. சரித்திரம், உடல்நலம், அறிவியல் ஆகியவை சம்பந்தமாக அது தரும் தகவல்கள் உண்மையானவை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மனித உறவுகள் சம்பந்தமாக அது தரும் ஆலோசனைகள் நம்பகமானவை, எக்காலத்துக்கும் பொருந்துபவை. மனித தத்துவங்களும், கோட்பாடுகளும் பசும் புல்லைப் போல தழைத்து வளர்ந்தாலும் காலப்போக்கில் உலர்ந்துவிடும். ஆனால் கடவுளின் வார்த்தையோ “என்றென்றைக்கும் நிற்கும்.”​—ஏசாயா 40:8.

பரிணாமக் கொள்கை என்பது விஞ்ஞானத்தோடு தொடர்புடையது மட்டுமே அல்ல. இது மனிதர்களுடைய தத்துவ போதனைகளில் ஒன்று. இந்தப் போதகம் மலர்ந்து, பல பத்தாண்டுகளாக தழைத்து வந்தது. என்றாலும், சமீப ஆண்டுகளில், டார்வினின் பரிணாமக் கோட்பாடு படிப்படியாக பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஏனெனில், இயற்கையில் உள்ள வடிவமைப்பை நிரூபிக்கும் ஆதாரங்களை மறுப்பதற்கு பரிணாமத்தை ஆதரிக்கும் வல்லுநர்கள் பல்வேறு விளக்கங்களைக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். இந்த விஷயத்தைப் பற்றி இன்னுமதிகமாக ஆராயும்படி உங்களை ஊக்குவிக்கிறோம். இப்பத்திரிகையில் உள்ள மற்ற கட்டுரைகளையும் படிப்பதன்மூலம் நீங்கள் அதைச் செய்யலாம். அதோடு, இதே பக்கத்திலும் 32-வது பக்கத்திலும் காட்டப்பட்டுள்ள மற்ற பிரசுரங்களையும் நீங்கள் வாசித்துப் பார்க்கலாம்.

இவ்விஷயத்தைக் குறித்து ஆராய்ந்த பிறகு, கடந்த காலத்தைப் பற்றி பைபிள் குறிப்பிடும் விஷயங்கள் உண்மையானவை என்ற நம்பிக்கை உங்களுக்கு உறுதிப்படும். மிக முக்கியமாக, எதிர்காலத்தைக் குறித்து பைபிள் அளிக்கும் வாக்குறுதிகள் உண்மையானவை என்பதில் உங்கள் நம்பிக்கை பலப்படும். (எபிரெயர் 11:1) “வானத்தையும் பூமியையும் . . . உண்டாக்கின” யெகோவாவைத் துதிக்கவும் நீங்கள் தூண்டப்படுவீர்கள்.​—சங்கீதம் 146:6.

கூடுதலாக வாசிக்க

பைபிளை நம்புவதற்கான சில ஆதாரங்களைக் குறித்து இந்தச் சிற்றேடு சொல்கிறது

அறிவியல் அளிக்கும் கூடுதலான ஆதாரங்களை ஆராய்ந்து பாருங்கள், அக்கறையுள்ள கடவுள் ஏன் இந்தளவு கஷ்டத்தை அனுமதிக்​கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

“பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?” என்ற கேள்விக்கு இப்புத்தகத்தின் மூன்றாம் அதிகாரம் பதிலளிக்கிறது

[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]

படைப்பைப் பற்றிய ஆதியாகமப் பதிவை இயேசு நம்பினார். அவர் கட்டுக்கதையையா நம்பினார்?

[பக்கம் 9-ன் பெட்டி]

பரிணாமம் என்பது என்ன?

“பரிணாமம்” என்பதற்கு, “ஒரு குறிப்பிட்ட திசையில் ஏற்படும் மாற்றம்” என்று ஓர் அர்த்தம் உள்ளது. என்றாலும் அந்த வார்த்தைக்கு இன்னும் பல அர்த்தங்கள் உள்ளன. உதாரணமாக, உயிரற்ற பொருட்களில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றத்தைக் குறிக்க, அதாவது இந்தப் பிரபஞ்சம் உருவான விதத்தைக் குறிக்க இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, உயிருள்ளவற்றில் ஏற்படும் சிறு மாற்றங்களைக் குறிக்க, அதாவது தாவரங்களும் விலங்குகளும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக்கொள்வதைக் குறிக்கவும் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இவையெல்லாம் ஒரு புறமிருக்க, உயிரற்ற ரசாயனங்களில் இருந்து உயிர் தோன்றி, இனவிருத்தி செய்யும் செல்களாக மாறி, மெதுமெதுவாக அதிக சிக்கலான உயிரினங்களாக மாறியதாகச் சொல்லப்படும் கோட்பாட்டை விளக்க இவ்வார்த்தை மிகப் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு உருவான உயிரினங்களில் மனிதனே அதிக புத்திக்கூர்மையுள்ளவன் எனச் சொல்லப்படுகிறது. இந்த அர்த்தத்தில்தான் “பரிணாமம்” என்ற வார்த்தை இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]

விண்வெளியின் ஃபோட்டோ: J. Hester and P. Scowen (AZ State Univ.), NASA