Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வியாதியிலிருந்து விடுதலை விஞ்ஞானம் மூலமா?

வியாதியிலிருந்து விடுதலை விஞ்ஞானம் மூலமா?

வியாதியிலிருந்து விடுதலை விஞ்ஞானம் மூலமா?

இன்றைய விஞ்ஞானம் வியாதியிலிருந்து விடுதலை அளிக்குமா? வியாதியில்லா உலகத்தைப்பற்றி ஏசாயாவிலும் வெளிப்படுத்துதலிலும் உள்ள பைபிள் தீர்க்கதரிசனங்கள், மனிதனால் அது சாத்தியமாகும் என்று குறிப்பிடுகின்றனவா? மருத்துவத் துறையின் மகத்தான சாதனைகளைப் பட்டியலிடும் சிலர் அது மனிதனால் சாத்தியமாகுமென நினைக்கிறார்கள்.

அரசாங்கங்களும் பொதுநல சேவை செய்யும் தனி நபர்களும் நிறுவனங்களும் இப்போது ஐக்கிய நாட்டு சங்கத்துடன் சேர்ந்து வியாதிகளை ஒழிக்கும் பிரச்சாரத்தில் என்றுமில்லாதளவு மும்முரமாய் இறங்கியிருக்கின்றன. உதாரணத்திற்கு, வளரும் நாடுகளிலுள்ள குழந்தைகளுக்குத் தடுப்பு ஊசி போடுவதில் ஒரு குழு கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதி என்ற அமைப்பு சொல்கிறபடி, உலக நாடுகளின் இலட்சியக் கனவு நிறைவேறினால், “2015-⁠ஆம் ஆண்டுக்குள், வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளில் வாழும் 7 கோடி குழந்தைகள் பின்வரும் வியாதிகளிலிருந்து உயிர் பிழைப்பதற்காக ஒவ்வொரு வருடமும் தடுப்பு மருந்துகளைப் பெறுவார்கள்: காசநோய், டிப்தீரியா, டெட்டனஸ், கக்குவான் இருமல், அம்மை, ரூபெல்லா, மஞ்சள் காய்ச்சல், ஹீமோஃபில்லஸ் இன்ஃபுளுவன்சா ‘பி’ ரகம், ஹெபடைடிஸ் பி, போலியோ, ரோட்டவைரஸ், நிமோகாகஸ், மெனிஞ்ஜோகாகஸ், ஜப்பானிய மூளைவீக்கம்.” வேண்டிய அளவு சுத்தமான தண்ணீர், சிறந்த ஊட்டச்சத்துமிக்க உணவு, சுகாதார கல்வி போன்று உடல்நலம் காப்பதற்கு அத்தியாவசியமானவற்றை அளிப்பதற்கும் பெருமுயற்சி எடுக்கப்படுகிறது.

எனினும், உடல்நல பராமரிப்புக்கான அடிப்படை வசதிகளைவிடவும் அதிகத்தை அளிக்க விஞ்ஞானிகள் ஆசைப்படுகிறார்கள். நவீன தொழில்நுட்பம் மருத்துவத் துறையில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தி வருகிறது. சுமாராக ஒவ்வொரு எட்டு வருடத்துக்கும் ஒருமுறை விஞ்ஞானிகளின் மருத்துவ அறிவு இரட்டிப்பாவதாகச் சொல்லப்படுகிறது. வியாதிகளை எதிர்த்துப் போராடுவதற்குப் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப சாதனைகளுக்கும், இலட்சியங்களுக்கும் பின்வருபவை சில உதாரணங்களே.

எக்ஸ்ரே படங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர்களாலும் ஆஸ்பத்திரிகளாலும் CT ஸ்கேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. CT என்பது கம்ப்யூட்டட் டோமோகிராஃபி என்பதன் சுருக்கமாகும். CT ஸ்கேன் எடுக்கும் கருவிகள் நம் உடலின் உட்புற பாகங்களை முப்பரிமாண எக்ஸ்ரே படங்களில் காட்டுகின்றன. இப்படங்கள் வியாதிகளைக் கண்டுபிடிப்பதற்கும் உடலிலுள்ள கோளாறுகளைப் பரிசோதிப்பதற்கும் உதவியாய் இருக்கின்றன.

கதிரியக்கத்தோடு சம்பந்தப்பட்ட ஆபத்துகள்பற்றி சில சர்ச்சைகள் நிலவுகிறபோதிலும் முன்னேறிவரும் இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். சிகாகோ பல்கலைக்கழக மருத்துவமனையின் கதிரியக்கத் துறை பேராசிரியரான மைக்கல் வானிர் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “கடந்த சில வருடங்களில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களை பார்த்தால் உங்கள் தலையே சுற்ற ஆரம்பித்துவிடும்.”

CT ஸ்கேன் கருவிகள் தற்போது துரிதமாகவும், துல்லியமாகவும் படம் எடுக்கின்றன; அதோடு, அதற்கு அதிக செலவும் ஆவதில்லை. விரைவாகப் படமெடுப்பது, ஸ்கேன் செய்யும் நவீன முறைகளில் உள்ள ஒரு முக்கியப் பயனாகும். குறிப்பாக, இருதயத்தை ஸ்கேன் செய்யும்போது இது அவசியமாய் இருக்கிறது. ஏனெனில், இருதயம் துடித்துக்கொண்டே இருப்பதால், பல எக்ஸ்ரே படங்கள் தெளிவற்றதாகவும், துல்லியமாய் கணிக்க முடியாததாகவும் இருந்தன. நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை விளக்குகிறபடி, புதிய கருவிகளை வைத்து ஸ்கேன் எடுப்பதற்கு தேவைப்படும் “நேரம், ஒரு வினாடியில் மூன்றில் ஒரு பாகமே, இருதயம் ஒரு முறை துடிப்பதற்கு முன்பே துரிதமாய் அது செயல்படுகிறது.” அதனால் இருதயத்தை தெளிவாக படமெடுக்க முடிகிறது.

ஸ்கேன் எடுக்கும் நவீன கருவிகளின் உதவியோடு, உடலுக்குள் இருக்கும் பாகங்களை மருத்துவர்களால் நுணுக்கமாகப் பார்க்க முடிகிறது. அதோடுகூட, குறிப்பிட்ட பகுதிகளில் நடக்கும் உயிர்வேதியியல் செயல்பாடுகளையும் அவர்களால் கவனிக்க முடிகிறது. புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்க இந்த முறையைப் பயன்படுத்தலாம்.

ரோபாட் மூலம் அறுவை சிகிச்சை நவீன ரோபாட்டுகள் இன்று விஞ்ஞான கற்பனைக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களாக மட்டுமே இல்லை; மருத்துவத் துறையைப் பொறுத்தவரையில் அவை பெரிதும் கைகொடுக்கின்றன. ரோபாட்டுகளின் உதவியோடு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. சில சிகிச்சைகளின்போது, அறுவை சிகிச்சை நிபுணர்கள் ரிமோட் கன்ட்ரோலைப் பயன்படுத்தி ரோபாட்டுகளின் பல கைகளை இயக்குகிறார்கள். இந்தக் கைகளில் கத்திகள், கத்தரிகள், காமராக்கள், சூட்டுக்கோல்கள் போன்றவையும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பிற கருவிகளும் இருக்கின்றன. பெரும் சிக்கல் வாய்ந்த அறுவை சிகிச்சைகளை வெகு துல்லியமாய் செய்வதற்கு இந்தத் தொழில்நுட்பம் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்குக் கைகொடுக்கிறது. “இந்த முறையைப் பயன்படுத்தும்போது, நோயாளிகளுக்குக் குறைந்தளவே இரத்தம் சேதமாகிறது, வலி அதிகம் இல்லாதிருக்கிறது, பெரும் சிக்கல்கள் ஏற்படாதிருக்கிறது, முழுவதுமாக அறுக்காமல் துளையிட்டு சிகிச்சை அளிக்கையில் குறைவான நாட்களே ஆஸ்பத்திரியில் தங்க நேருகிறது, அதோடு சீக்கிரத்திலேயே குணமாகிறது என்பதையெல்லாம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்” என நியூஸ்வீக் பத்திரிகை அறிக்கை செய்கிறது.

நேனோ சிகிச்சை நேனோடெக்னாலஜி என்ற முறையைப் பயன்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிப்பதுதான் நேனோ சிகிச்சை ஆகும். அதோடு, மிக நுட்பமான பொருள்களை வெகு திறமையோடு உருவாக்கும் தொழில்நுட்பமே நேனோடெக்னாலஜி ஆகும். இதில் பயன்படுத்தப்படும் அலகு நேனோமீட்டர் என்று அழைக்கப்படுகிறது; இது ஒரு மீட்டரில் நூறு கோடியில் ஒரு பகுதியாகும். a

அந்த அளவீடு எந்தளவு சிறியது என்பதைப் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? உங்களுக்கு உதவியாக இதோ சில விவரங்கள்: இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் பக்கத்தின் பருமன் சுமார் 1,00,000 நேனோமீட்டர், மனிதருடைய ஒரு முடியின் பருமன் சுமார் 80,000 நேனோமீட்டர். இரத்த சிவப்பணு ஒன்றின் விட்டம் சுமார் 2,500 நேனோமீட்டர். ஒரு பாக்டீரியா சுமார் 1,000 நேனோமீட்டரும், ஒரு வைரஸ் கிருமி சுமார் 100 நேனோமீட்டரும் நீளமுள்ளவை. உங்களுடைய டிஎன்ஏ-வின் விட்டம் சுமார் 2.5 நேனோமீட்டராகும்.

விஞ்ஞானிகள் சின்னஞ்சிறிய கருவிகளை உருவாக்கி அவற்றை மனித உடலில் செலுத்தி அறுவை சிகிச்சைகளைச் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லையென இத்தொழில்நுட்பத்தை ஆதரிப்பவர்கள் நம்புகிறார்கள். நேனோகருவிகள் என பொதுவாக அழைக்கப்படும் சிறிய ரோபாட்டுகள், திட்டவட்டமான கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும் விதத்தில் புரோகிராம் செய்யப்பட்ட மிக நுட்பமான கம்ப்யூட்டர்களைத் தாங்கிச் செல்லும். ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயம் என்னவென்றால், வெகு சிக்கலான அமைப்புடைய இந்தக் கருவிகள் 100 நேனோமீட்டர் அலகுகூட இல்லாத பொருள்களால் உருவாக்கப்படும் என்பதே. அதாவது, அவை இரத்த சிவப்பணு ஒன்றின் விட்டத்தைவிட 25 மடங்கு சிறியதாக இருக்கும்!

அவை சின்னஞ்சிறியவையாய் இருப்பதால், இரத்த நுண்குழாய்கள் வழியாகப் பயணித்து இரத்த சிவப்பணு குறைவுபடும் திசுக்களில் ஆக்ஸிஜனைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படலாம்; இரத்த நாளங்களில் உள்ள தடைகளையும் மூளை செல்களிலுள்ள கோளாறுகளையும் நீக்குவதற்கு உபயோகப்படுத்தப்படலாம்; வைரஸ் கிருமிகள், பாக்டீரியா ஆகியவற்றோடு தொற்றுக்குக் காரணமான மற்ற கிருமிகளைத் தேடிக் கண்டுபிடித்து அழிப்பதற்கும்கூட பயன்படுத்தப்படலாம்; என்றோ ஒருநாள் இவையெல்லாம் நடக்கும் என்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட செல்களில் நேரடியாக மருந்துகளைச் செலுத்துவதற்கும்கூட இந்த நேனோகருவிகள் பயன்படுத்தப்படலாம்.

நேனோ சிகிச்சையின் மூலம் புற்றுநோயைக் கண்டுபிடிப்பதில் பெருமளவு முன்னேற்றம் ஏற்படும் என்பதாக விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள். மருத்துவம், இயற்பியல், பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் ஆகிய துறைகளில் பேராசிரியராய் இருக்கும் டாக்டர் சாம்வெல் வைக்லைன் இவ்வாறு சொன்னார்: “புற்றுநோய்கள் சின்னஞ்சிறியதாய் உருவாக ஆரம்பிக்கும்போதே அவற்றைக் கண்டுபிடித்து, அவை உள்ள இடத்திலேயே சக்திவாய்ந்த மருந்துகளைப் பயன்படுத்தி, மோசமான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாதபடி சிகிச்சை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் முன்னொருபோதையும்விட இப்போது பெருமளவு அதிகரித்திருக்கின்றன.”

இது வருங்காலத்தைப் பற்றிய மனக்கோட்டை போல் தோன்றினாலும் நேனோ சிகிச்சையால் அந்தக் கனவை நனவாக்க முடியுமென விஞ்ஞானிகள் சிலர் உறுதியாக நம்புகிறார்கள். அடுத்த பத்தாண்டுகளுக்குள், உயிருள்ள செல்களை சீரமைப்பதிலும், ஒழுங்குபடுத்துவதிலும் நேனோடெக்னாலஜி பயன்படுத்தப்படுமென இத்துறையைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதை ஆதரிக்கும் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “20-ஆம் நூற்றாண்டில் சாதாரணமாய் காணப்பட்ட கிட்டத்தட்ட எல்லா நோய்களையும் கிட்டத்தட்ட எல்லா வலிகளையும் வேதனைகளையும் நேனோ சிகிச்சை நீக்கிவிடும்; அதோடு, மனிதன் நீண்டகாலம் திறம்பட செயல்படுவதற்கும் வழிவகுக்கும்.” இப்போதேகூட, ஆய்வுக்கூட ஆராய்ச்சியில் விலங்குகளுக்கு நேனோ சிகிச்சை அளிக்கும்போது கைமேல் பலன் கிடைப்பதாக விஞ்ஞானிகள் சிலர் கூறுகிறார்கள்.

ஜீனோமிக்ஸ் ஜீன் அமைப்பைப் பற்றிய ஆராய்ச்சியே ஜீனோமிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. மனித உடலிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான அநேக ஆக்கக்கூறுகள் நிறைந்திருக்கின்றன. இந்த ஆக்கக்கூறுகளில் ஒன்றுதான் ஜீன். நம்முடைய தலைமுடியின் நிறம் மற்றும் தன்மை, தோல், கண்ணின் நிறம், உயரம் ஆகியவற்றையும் நம்முடைய உடல் தோற்றத்தின் பிற அம்சங்களையும் நிர்ணயிப்பதற்கு நம் ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 35,000 ஜீன்கள் இருக்கின்றன. நம்முடைய உடலின் உள் உறுப்புகளுடைய தரத்தை நிர்ணயிப்பதிலும்கூட இந்த ஜீன்களுக்கு பங்கு உண்டு.

ஜீன்கள் சேதமடையும்போது அவை நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. சொல்லப்போனால், ஜீன்கள் சரிவர செயல்படாததாலேயே எல்லாவிதமான வியாதிகளும் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் சிலர் நம்புகிறார்கள். நம் பெற்றோர்களிடமிருந்து பரம்பரை சொத்தாக குறைபாடுள்ள ஜீன்கள் சிலவற்றைப் பெறுகிறோம். இன்னும் சில ஜீன்கள் நம் சுற்றுச்சூழலில் காணப்படும் தீங்குவிளைவிக்கும் பொருள்களால் சேதமடைகின்றன.

வியாதியை வரவைக்கும் பிரத்தியேக ஜீன்களை முன்னதாகவே அடையாளம் கண்டுகொள்ள முடியுமென விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்; அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பதாக கூறுகிறார்கள். உதாரணத்திற்கு, சிலருக்கு மட்டும் ஏன் புற்றுநோய் வருகிறது அல்லது ஒரு சிலரை மட்டும் ஏன் ஒருவகை புற்றுநோய் வீரியத்துடன் தாக்குகிறது போன்றவற்றை புரிந்துகொள்ள மருத்துவர்களுக்கு இது வழிசெய்யும். அதோடு, ஒரு மருந்து சில நோயாளிகளை மட்டும் ஏன் குணப்படுத்துகிறது என்பதையும் ஜீனோமிக்ஸ் தெளிவுபடுத்தலாம்.

ஜீன் பற்றிய அத்தகைய பிரத்தியேக தகவல் தனி நபர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப சிகிச்சை அளிப்பதற்கு வழிசெய்யலாம். இந்தத் தொழில்நுட்பத்தால் நீங்கள் எப்படிப் பயன் பெறலாம்? தனி நபர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப சிகிச்சை அளிப்பது என்ற கருத்து, உங்கள் உடலிலுள்ள ஜீன்களுக்கு ஒத்துப்போகும் விதத்தில் மருத்துவ சிகிச்சையை மாற்றிக்கொள்ளலாம் என்பதை அர்த்தப்படுத்துகிறது. உதாரணத்திற்கு, உங்களுடைய உடலிலுள்ள ஜீன்களை ஆராய்ந்தபோது, உங்களுக்கு ஏதோ ஒரு வியாதி வருவதற்கான சாத்தியமிருப்பது தெரிய வந்திருந்தால், அவ்வியாதிக்கான அறிகுறிகள் தென்படுவதற்கு வெகு முன்னதாகவே அதை மருத்துவர்கள் கண்டுபிடித்துவிட முடியும். உதாரணத்திற்கு, வியாதி வருவதற்கு முன்னதாகவே சரியான சிகிச்சையையும், நல்ல போஷாக்கையும், நடத்தை போக்கில் முறையான மாற்றங்களையும் செய்யும்போது, அந்த வியாதியை வரவிடாமல்கூட தடுக்க முடியுமென இத்தகைய சிகிச்சையின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

ஒருவேளை, மருந்துகள் ஒத்துக்கொள்ளாமல் நீங்கள் மோசமாய் பாதிக்கப்படுவீர்கள் என்றால் அதைக் குறித்துக்கூட கவனமாய் இருக்கும்படி மருத்துவர்களுக்கு உங்கள் ஜீன்கள் எச்சரிக்கை விடுக்கலாம். இந்தத் தகவல், உங்களுக்குச் சரியான வகை மருந்தை சிபாரிசு செய்வதற்கும், எந்தளவு மருந்தை உட்கொள்வது போதுமானது என்பதைத் தீர்மானிப்பதற்கும் மருத்துவர்களுக்கு உதவலாம். த பாஸ்டன் க்ளோப் என்ற செய்தித்தாள் இவ்வாறு கூறுகிறது: “2020-⁠க்குள், இன்று நாம் யாரும் எண்ணிப் பார்த்திராத அளவுக்கு [தனி நபர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப சிகிச்சை அளிப்பது] தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. சர்க்கரை நோய், இருதய நோய், அல்ஸைமர் நோய், உளச்சிதைவு நோய் போன்றவற்றிற்கும், நம் சமுதாயத்தில் பெரும்பாலோரின் உயிரைக் குடிக்கும் பிற வியாதிகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்காக ஜீன்களின் அடிப்படையில் தனி நபர்களுடைய தேவைக்கேற்ப புதிய மருந்துகள் தயாரிக்கப்படும்.”

எதிர்காலத்தில் சாதிக்கப்போவதாக விஞ்ஞானம் பலவற்றைப் பட்டியலிட்டிருக்கிறது; அந்தப் பட்டியலிலுள்ள சில தொழில்நுட்பங்கள் மட்டுமே மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. மருத்துவ அறிவு ராக்கெட் வேகத்தில் பெருகி வருகிறது. ஆனாலும், வெகு விரைவில் வியாதிகளை முற்றும் முழுமையாய் துடைத்தழிக்க முடியும் என்பதாக விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பதில்லை. தாண்ட முடியாததாய் தோன்றும் தடைகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன.

தாண்ட முடியாததாய் தோன்றும் தடைகள்

மனிதர்களுடைய நடவடிக்கைகள் வியாதியைத் துடைத்தழிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியை மந்தப்படுத்தலாம். உதாரணத்திற்கு, குறிப்பிட்ட சூழியல் அமைப்புகளை மனிதன் சேதப்படுத்துவது, புதிதுபுதிதாய் மோசமான வியாதிகளை வரவழைப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். வைல்ட்லைஃப் டிரஸ்ட் என்ற அமைப்பின் தலைவரான மேரி பேர்ல் என்பவர் நியூஸ்வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு விளக்கினார்: “1970-களின் மத்திபத்திலிருந்து எய்ட்ஸ், ஈபோலா, லைம் வியாதி, சார்ஸ் போன்ற 30-⁠க்கும் மேற்பட்ட புதிய வியாதிகள் தலைதூக்கியிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை வனவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருப்பதாக நம்பப்படுகிறது.”

மேலும், மக்கள் பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாகச் சாப்பிடுவதில்லை, அதற்குப் பதிலாக சர்க்கரை, உப்பு, கொழுப்புச் சத்துமிக்க உணவு ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். அதுமட்டுமல்ல, உடற்பயிற்சி செய்வது குறைந்திருப்பதும், உடல்நலத்திற்குக் கேடுவிளைவிக்கும் வேறு சில பழக்கவழக்கங்களும் சேர்ந்து இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகமாக வரக் காரணமாகின்றன. புகைபிடிப்பது இன்று அதிகரித்திருப்பதால் உலகெங்கும் லட்சக்கணக்கானோர் மோசமான உடல்நல பிரச்சினைகளையும் சந்திக்கிறார்கள், இறந்தும்போகிறார்கள். ஒவ்வொரு வருடமும் வாகன விபத்துகளில் சுமார் 2 கோடி பேர் படுகாயமடைகிறார்கள் அல்லது பலியாகிறார்கள். போராலும் பிற வன்முறை சம்பவங்களாலும் எண்ணற்றோர் கொல்லப்படுகிறார்கள், முடமாக்கப்படுகிறார்கள். மதுபானத்தையோ போதை பொருள்களையோ பயன்படுத்துவதால் லட்சக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அல்லாடுகிறார்கள்.

காரணம் எதுவாக இருந்தாலும், மருத்துவ தொழில்நுட்பம் இந்தளவு முன்னேறியிருக்கிறபோதிலும் சில வியாதிகள் எண்ணற்றோரின் உயிரைக் குடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. உலக சுகாதார அமைப்பு (WHO) சொல்கிறபடி, ‘வாழ்க்கையின் ஏதோவொரு கட்டத்தில் 15 கோடிக்கும் அதிகமானோர் மன அழுத்தத்தால் தவிக்கிறார்கள், சுமார் 2 கோடியே 50 லட்சம் பேர் உளச்சிதைவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள், 3 கோடியே 80 லட்சம் பேர் காக்காய்வலிப்பு நோயால் அவதிப்படுகிறார்கள்.’ ஹெச்ஐவி/எய்ட்ஸ், வயிற்றுப்போக்கு வியாதிகள், மலேரியா, அம்மை, நிமோனியா, காசநோய் ஆகியவை லட்சக்கணக்கானோருக்குப் பரவி, ஏராளமான பிள்ளைகளையும் வாலிப வயதினரையும் சாகடிக்கின்றன.

வியாதிகளைத் துடைத்தழிக்கும் முயற்சியில் தாண்ட முடியாததாய் தோன்றும் பிற தடைகளும் இருக்கின்றன. வறுமையும் திறமையற்ற அரசாங்கமும் இரு மாபெரும் தடைகள் ஆகும். சிறப்பாக செயல்படுகிற அரசாங்கமும் போதுமான நிதிவசதியும் இருந்திருந்தால் தொற்று நோய்களால் இறந்துபோகும் லட்சக்கணக்கானோரை சாவின் பிடியிலிருந்து காப்பாற்றியிருக்கலாம் என சமீப அறிக்கையில் WHO குறிப்பிட்டது.

விஞ்ஞான அறிவும் மருத்துவ தொழில்நுட்பத்தின் அசாதாரண முன்னேற்றங்களும் இந்தத் தடைகளைத் தாண்டுவதில் கைகொடுக்குமா? வியாதியில்லா உலகை நாம் விரைவில் காண்போமா? மேலே விளக்கப்பட்ட அம்சங்கள் தெளிவான பதிலைத் தருவதில்லை என்பது உண்மைதான். ஆனால், இக்கேள்விக்கு பைபிள் தெளிவான பதிலைத் தருகிறது. வியாதியில்லா உலகம் எதிர்காலத்தில் வரவிருப்பதைப்பற்றி பைபிள் தரும் தகவல் அடுத்த கட்டுரையில் விளக்கப்படும்.

[அடிக்குறிப்பு]

a முன்னடையாகச் சேர்க்கப்படும் “நேனோ” என்ற கிரேக்க வார்த்தைக்குக் குள்ளம் என்று பொருள்; இது ‘நூறு கோடியில் ஒரு பகுதியை’ குறிக்கிறது.

[பக்கம் -ன் பெட்டி/படங்கள்] 7]

எக்ஸ்ரே படங்கள்

மனித உடலின் தெளிவான, வெகு துல்லியமான படங்கள், வியாதியை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கு உதவலாம்

[படங்களுக்கான நன்றி]

© Philips

Siemens AG

ரோபாட் மூலம் அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சைக்கான கருவிகளைத் தாங்கிய ரோபாட்டுகள், பெரும் சிக்கல் வாய்ந்த அறுவை சிகிச்சைகளை வெகு துல்லியமாய் செய்ய டாக்டர்களுக்கு உதவுகின்றன

[படத்திற்கான நன்றி]

© 2006 Intuitive Surgical, Inc.

நேனோ சிகிச்சை

மனிதனால் உருவாக்கப்பட்ட மிக நுட்பமான கருவிகளைப் பயன்படுத்தி செல்லிலுள்ள கோளாறைக்கூட மருத்துவர்கள் சரிப்படுத்தலாம். இரத்த அணுக்களின் செயல்களைச் செய்கிற நேனோகருவிகளின் இந்தப் படம் ஓவியரின் கற்பனையில் உருவானது

[படங்களுக்கான நன்றி]

ஓவியர்: Vik Olliver (vik@diamondage.co.nz)/ வடிவமைப்பாளர்: Robert Freitas

ஜீனோமிக்ஸ்

தனி நபர்களின் ஜீன் அமைப்பை ஆராய்வதன் மூலம், வியாதிக்கான அறிகுறிகள் நோயாளிகளிடம் தென்படுவதற்கு முன்பாகவே அதைக் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்க முடியுமென விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்

[படத்திற்கான நன்றி]

குரோமோசோம்கள்: © Phanie/ Photo Researchers, Inc.

[பக்கம் -ன் பெட்டி] 8, 9]

வெல்ல முடியாத ஆறு விரோதிகள்

மருத்துவ அறிவும் அதோடு சம்பந்தப்பட்ட தொழில்நுட்பமும் என்றுமில்லாத அளவுக்கு முன்னேற்றப் பாதையில் வெற்றிநடை போடுகின்றன. இப்படிப்பட்ட வளர்ச்சியின் மத்தியிலும் தொற்று நோய்கள் படையெடுத்து வந்து உலகை சீரழித்து சின்னாபின்னமாக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. உயிரைக் குடிக்கும் வியாதிகளாக பட்டியலிடப்பட்டுள்ள ‘விரோதிகள்’ இன்னமும் வெல்ல முடியாதவையாகவே இருக்கின்றன.

ஹெச்ஐவி/எய்ட்ஸ்

சுமார் 6 கோடி பேர் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், சுமார் 2 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் செத்துமடிந்திருக்கிறார்கள். 2005-⁠ல் புதிதாக 50 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், 30 லட்சத்திற்கும் அதிகமானோர் எய்ட்ஸுடன் தொடர்புடைய பிரச்சினைகளால் கல்லறைக்குச் சென்றிருக்கிறார்கள். இப்படிப் பலியானோரில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பிள்ளைகள். பெரும்பாலான ஹெச்ஐவி நோயாளிகளால் தேவையான சிகிச்சையைப் பெறமுடிவதில்லை.

வயிற்றுப்போக்கு

ஒவ்வொரு வருடமும் சுமார் 400 கோடி பேர் இதன் கோரப்பிடியில் சிக்குவதால் இது ஏழைபாழைகளின் பரம விரோதி என விவரிக்கப்படுகிறது. மாசுபட்ட தண்ணீர் அல்லது உணவின் மூலமாக பரவும் பல தொற்றுநோய்களின் காரணமாகவோ சுத்தம் சுகாதாரம் இல்லாததன் காரணமாகவோ இது ஏற்படுகிறது. இந்தத் தொற்றுகளால் வருடாவருடம் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் சாவை சந்திக்கிறார்கள்.

மலேரியா

மலேரியாவால் ஆண்டுதோறும் சுமார் 30 கோடி பேர் பாதிக்கப்படுகிறார்கள். வருடத்திற்கு சுமார் 10 லட்சம் பேர், அதிலும் பெரும்பாலும் பிள்ளைகள் அதற்குப் பலியாகிறார்கள். இந்த நோயால், ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு குழந்தை ஆப்பிரிக்காவில் இறந்துபோகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) சொல்கிறபடி, “மலேரியாவுக்கு சாவுமணி அடிக்கும் உடனடி நிவாரணி எதையும் விஞ்ஞானம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை, அப்படிப்பட்ட ஓர் அருமருந்து எப்போதாவது கிடைக்குமாவென அநேகர் சந்தேகிக்கிறார்கள்.”

அம்மை

2003-⁠ல், 5 லட்சத்திற்கும் அதிகமானோர் அம்மை நோய் கண்டு மரணவாசலை அடைந்தார்கள். பிள்ளைகளின் சாவுக்கு காரணமான வியாதிகளில் முன்னணியிலிருக்கிற இந்த வியாதி வெகு விரைவில் தொற்றும் தன்மை படைத்தது. அம்மை வராமல் தடுப்பதற்கு உதவும் மிகச் சிறந்த, செலவுபிடிக்காத தடுப்பூசி கடந்த 40 வருடங்களாக புழக்கத்தில் இருக்கிறது. அப்படியிருந்தும்கூட, ஆண்டுதோறும் சுமார் 3 கோடி பேருக்கு அம்மை நோய் வருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

நிமோனியா

வேறு எந்தத் தொற்று நோயைவிடவும் இந்த நோயால்தான் ஏகப்பட்ட பிள்ளைகள் இறந்துபோகிறார்கள் என WHO சொல்கிறது. ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதுகூட ஆகாத சுமார் 20 லட்சம் பிள்ளைகளை நிமோனியா காவுகொள்கிறது. இவர்களில் பலர் ஆப்பிரிக்காவையும் தென்கிழக்கு ஆசியாவையும் சேர்ந்தவர்கள். உலகின் பல பகுதிகளில் மருத்துவ உதவி பெறுவதற்கு போதுமான வசதி இல்லாததால், பாதிக்கப்பட்ட ஆட்கள் உயிர் பிழைப்பதற்குத் தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற முடியாமலே போகிறது.

காசநோய்

2003-⁠ல், காசநோய் (டிபி) 17 லட்சம் பேரை காவுகொண்டது. எந்த மருந்துக்கும் மசியாத டிபி நோய் கிருமிகள் உடல்நல பராமரிப்பு அதிகாரிகளுக்குப் பெரும் கவலையை அளித்திருக்கின்றன. இதில் சில வகை கிருமிகளை டிபியை குணப்படுத்தும் எந்த முக்கிய நிவாரணியாலும் அசைக்க முடிவதில்லை. இந்த வகை நோய் கிருமிகள், சரிவர உடல்நலத்திற்குக் கவனம் செலுத்தாத அல்லது போதுமான சிகிச்சை பெற வசதியில்லா நோயாளிகளிடம் பெருகுகின்றன.

[பக்கம் -ன் பெட்டி/படம்] 9]

மலைபோல் குவியும் மாற்று மருந்துகள்

பொது மருத்துவத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், வேறு பல சிகிச்சை முறைகளை பொதுவாக ஏற்றுக்கொள்வதில்லை. அவை பாரம்பரிய சிகிச்சை அல்லது மாற்று மருந்து சிகிச்சை என பொதுவாக அழைக்கப்படுகின்றன. வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள மக்களில் பெரும்பாலோர் பாரம்பரிய சிகிச்சையையே முழுக்க முழுக்க நம்பியிருக்கிறார்கள். ஏழ்மைமிக்க பகுதிகளில் வாழும் அநேகர் பொது மருத்துவ சிகிச்சையைப் பெற வசதியில்லாதவர்களாய் இருக்கிறார்கள், மற்றவர்களோ பாரம்பரிய சிகிச்சை முறையையே விரும்புகிறார்கள்.

பணம் படைத்த நாடுகளில் மாற்று மருந்து சிகிச்சை முறைகள் கொடிகட்டிப் பறக்கின்றன. அவற்றுள் பிரபலமானவை: அக்குப்பஞ்சர், வர்ம மருத்துவம் (chiropractic), ஹோமியோபதி, இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம். இந்தச் சிகிச்சை முறைகளில் சில விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வுசெய்யப்பட்டு, சில வியாதிகளைக் குணப்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனினும், குறிப்பிட்ட சில சிகிச்சை முறைகள் எந்தளவு பயனுள்ளவை என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை. அதிகமதிகமானோர் மாற்று சிகிச்சை முறைகளை நாடுவதைக் காண்கையில், அவை எந்தளவு பாதுகாப்பானவை என்பதைக் குறித்து சில சந்தேகங்கள் எழும்பியுள்ளன. இந்தச் சிகிச்சை முறைகளுக்கு அநேக நாடுகளில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. இதனால் அங்கு தீங்கு விளைவிக்கும் கைவைத்தியமும், போலி மருந்துகளும் பெருகியிருக்கின்றன; போலி மருத்துவர்களும் புற்றீசல்போல் கிளம்பியிருக்கிறார்கள். போதுமான மருத்துவ பயிற்சி இல்லாதபோதிலும், நல்லெண்ணத்துடனேயே நண்பர்களும், சொந்தபந்தங்களும் பெரும்பாலும் மருத்துவம் சம்பந்தமாக அறிவுரை கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இவையெல்லாம் மோசமான விளைவுகளையும் பிற உடல்நல பாதிப்புகளையும்தான் ஏற்படுத்தியிருக்கின்றன.

இத்தகைய சிகிச்சை முறைகளுக்கு பல நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும், பொது மருத்துவ சிகிச்சை அளிக்கிற மருத்துவர்கள் மாற்று மருந்து சிகிச்சை முறைகளை வரவேற்கிறார்கள்; இத்தகைய சிகிச்சைகளை அளிக்கவும் முன்வருகிறார்கள். எனினும், இவற்றின் மூலமாக வியாதியில்லா உலகம் வரும் என்று எதிர்பார்ப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இருப்பதாய் தெரியவில்லை.