Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தேவைகளைத் திருப்திசெய்ய இளைஞருக்கு உதவுங்கள்

தேவைகளைத் திருப்திசெய்ய இளைஞருக்கு உதவுங்கள்

தேவைகளைத் திருப்திசெய்ய இளைஞருக்கு உதவுங்கள்

இளைஞர் தங்களுடைய இலட்சியங்கள், ஆசைக்கனவுகள், பிரச்சினைகள் ஆகியவற்றைப்பற்றி யாரிடமாவது பேச விரும்புகிறார்கள். அவர்களுக்கு நல்ல நண்பர்களும் தேவைப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகையில் அவர்களுக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். இளைஞர்களின் இந்தத் தேவைகளைத் திருப்திசெய்ய பெற்றோர் உதவினால் ஆபத்தான உறவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கலாம்; ஏன், இன்டர்நெட்டில் காத்திருக்கும் ஆபத்தான உறவுகளிலிருந்தும் அவர்களை மீட்கலாம்.

◼ இளைஞர்கள் பேசவே விரும்புகிறார்கள். இளைஞர்கள் மனம்விட்டுப் பேச விரும்பாததுபோல், எதையுமே மூடிமறைத்துச் செய்வதுபோல் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அவர்கள் பேசவே விரும்புகிறார்கள். அதுவும் தங்களுடைய பெற்றோராகிய உங்களிடம் பேசவே விரும்புகிறார்கள். பெரிய விஷயமோ சிறிய விஷயமோ, எல்லாவற்றையும் உங்களிடம் சொல்ல விரும்புகிறார்கள். அதனால் இப்போது கேள்வி என்னவென்றால், அவர்கள் சொல்வதைக் கேட்க நீங்கள் மனமுள்ளவராகவும் தயாராகவும் இருக்கிறீர்களா?​—யாக்கோபு 1:19.

வாழ்க்கையில் உங்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கலாம்; அதற்கென்று, உங்கள் பிள்ளைகளிடம் பேசக் கிடைக்கும் பொன்னான வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள். வாழ்க்கையில் பல பிரச்சினைகளை நீங்கள் எதிர்ப்பட்டு வருவதால் உங்கள் பிள்ளைகளிடம் பேச நேரமே கிடைப்பதில்லையா? அப்படியென்றால், பைபிளின் இந்த அறிவார்ந்த ஆலோசனை குறித்து ஆழ்ந்து யோசிக்க இதுவே சரியான நேரம்: “அதிமுக்கியமான காரியங்களை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.” (பிலிப்பியர் 1:10, NW) உங்கள் கண்மணிகளைவிட முக்கியமான விஷயம் உங்களுக்கு இருக்க முடியுமா?

இளம்பிள்ளைகள் அறிவுரை கேட்க நண்பர்களிடம் செல்வார்களே தவிர பெற்றோர்களிடம் வரமாட்டார்கள் என சட்டென்று தப்புக்கணக்குப் போட்டுவிடாதீர்கள். 6 முதல் 12 வரையான வகுப்பைச் சேர்ந்த மாணவர்களில் 17,000-⁠க்கும் அதிகமானோரை வைத்து ஒரு சுற்றாய்வு நடத்தப்பட்டது. தங்கள்மீது அதிகமாய்ச் செல்வாக்கு செலுத்துவது பெற்றோர்களா, நண்பர்களா, பிரபலங்களா, மீடியாக்களா, ஆசிரியர்களா என அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களுடைய கணிப்பை 0 முதல் 5 வரையாகத் தரம் பிரிக்குமாறு சொல்லப்பட்டது. 0 என்பது, எந்தச் செல்வாக்குமே இல்லையென்பதையும், 5 என்பது, அதிகபட்ச செல்வாக்கையும் குறித்தன. அதில் கிட்டத்தட்ட பாதிப் பேர் தங்கள் பெற்றோரையே 5 எனத் தரம் பிரித்திருந்தார்கள்.

ஆகவே, உங்கள் பிள்ளையின் மதிப்பீடுகளையும் இலட்சியங்களையும் வடிவமைப்பதில் பெற்றோராகிய நீங்கள் முக்கியப் பங்கை வகிக்க முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. “நீங்கள் சொல்லும் எல்லாமே அவர்களுடைய மனதை எட்டிவிடாது, ஆனால் நீங்கள் அவர்களிடம் பேசவே இல்லையென்றால் அவர்களுடைய மனதை எட்டவே முடியாது” என்று ஒரு தாய் சொன்னார்.

◼ இளைஞருக்கு நண்பர்கள் தேவை. “பிள்ளைகள் இன்டர்நெட்டில் உரையாடும் விஷயங்களைப்பற்றி பொதுவாக பெற்றோருக்கு எதுவும் தெரியாது. சுருக்கமாகச் சொன்னால் அதில் அவர்களுக்கு அக்கறையே கிடையாது” என்று 15 வயதுப் பெண் சொல்கிறாள். குறிப்பாக, இந்தக் காலத்தில் பெற்றோர் அப்படி இருக்கக் கூடாது; பிள்ளைகளின் நண்பர்கள் யாராக இருந்தால் தங்களுக்கு என்னவென்று பெற்றோர் அலட்சியமாய் இருந்துவிடக்கூடாது. இன்டர்நெட்டிலும் சரி நேரிலும் சரி, உங்கள் பிள்ளைகள் யாருடன் நேரத்தைச் செலவிடுகிறார்களென உங்களுக்குத் தெரியுமா? பைபிள் இவ்வாறு சொல்கிறது: “தீய நண்பர்கள் நல்ல பழக்கங்களைக் கெடுப்பார்கள்.” (1 கொரிந்தியர் 15:33, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஆம், உங்கள் பிள்ளைகளின் கூட்டுறவில் நீங்கள் கண்ணும்கருத்துமாய் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

கவனிப்பு என்றால் பிள்ளைகளைக் கெட்ட சகவாசத்திலிருந்து காப்பாற்றுவது மட்டுமல்ல. பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்களும் தேவைப்படுகிறார்கள். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:20) எனவே, உங்கள் பிள்ளைகள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க நீங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். தங்கள் சிருஷ்டிகரை நினைவுகூருவதில் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழும் இளைஞர்கள் அந்த நல்ல நண்பர்கள் பட்டியலில் அடங்குகிறார்கள்.​—பிரசங்கி 12:1.

தம் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் யெகோவா தேவன் கவனமாயிருக்கிறார், நாமும் அவரைப் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும். (சங்கீதம் 15:1-5; எபேசியர் 5:1) உங்கள் பிள்ளைக்கு சொல்லாலும் செயலாலும் நீங்கள் கற்றுக்கொடுக்க முடிந்த ஈடிணையற்ற கலை, நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க கற்றுக்கொடுப்பதே.​—2 தெசலோனிக்கேயர் 3:6, 7.

◼ இளைஞர்களுக்குத் தேவை தங்களுக்கென ஓர் அடையாளம். இளைஞர்கள் தங்களுக்கே உரிய தனித்தன்மையை உருவாக்கிக்கொள்வது, அதாவது, மற்ற இளைஞர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டும் சில பிரத்தியேக குணங்களை வளர்த்துக்கொள்வது, அவர்களுடைய வளர்ச்சியின் ஒரு முக்கிய பாகமாய் இருக்கிறது. பைபிளின் ஒரு நீதிமொழி இவ்வாறு சொல்கிறது: “சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்.” (நீதிமொழிகள் 20:11, பொது மொழிபெயர்ப்பு) பெற்றோராக உங்களுடைய கடமைகளில் ஒன்று, உங்கள் பிள்ளைகளின் மனதில் நல்ல நியமங்களைப் பதிய வைப்பதாகும்.​—உபாகமம் 6:6, 7.

இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: தன் பிள்ளை வளர்ந்த பிறகு நேர்த்தியாக உடுத்தக் கற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் பெற்றோர் தங்கள் பிள்ளைக்குத் தினமும் உடை உடுத்திவிடுகிறார்கள். ஆனால், உடல் ஆரோக்கியத்துடன், 30 வயதில் உள்ள ஒரு நபருக்கு இன்னும் அவரது பெற்றோரே உடை உடுத்திவிட்டால் எப்படி இருக்கும்? நினைத்தாலே கொடுமையாக இருக்கிறது, அல்லவா? உடையின் உதாரணத்தைப் பயன்படுத்தி பைபிள் இவ்விதமாக நம்மை உற்சாகப்படுத்துகிறது: “புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்”; அதாவது, கிறிஸ்துவைப் போன்ற ஆள்தன்மையைத் தரித்துக்கொள்ளுங்கள். (கொலோசெயர் 3:10) உங்கள் பிள்ளைகளுக்கு அன்பான போதனையையும் ‘சிட்சையையும்’ அளிப்பதன்மூலம் அவர்கள் புதிய ஆள்தன்மையை வளர்த்துக்கொள்ள உங்களால் உதவ முடியும். (எபேசியர் 6:4) அவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆன பிறகு சுயமாகத் தீர்மானங்கள் எடுக்கையில், அவர்களாகவே விரும்பி ‘புதிய மனுஷன்’ எனும் ‘ஆடையைத்’ தரித்துக்கொள்வார்கள். அது உண்மையிலேயே அழகாகவும் இனிமையாகவும் இருப்பதை உணருவார்கள்.​—உபாகமம் 30:19, 20.

பின்வரும் கேள்விகளை உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுளுடைய வார்த்தையிலுள்ள நியமங்களைப்பற்றி என் பிள்ளைகள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? ‘தெளிந்தபுத்தியுடன்’ வாழ அவர்களுக்கு நான் எந்த விதத்தில் உதவ முடியும்?’ (தீத்து 2:12) மறுபேச்சின்றி கீழ்ப்படிகிற பிள்ளையாக உங்கள் பிள்ளையை வளர்க்க முயலாதீர்கள். சில பிள்ளைகள் தங்களுக்கு என்ன சொல்லப்படுகிறதோ அதை அச்சுப்பிசகாமல் செய்யலாம்; எதிர்த்துக் கேள்வி கேட்காமலோ, வாதாடாமலோ, அடம்பிடிக்காமலோ இருக்கலாம். ஆனால் இன்றைக்கு நீங்கள் செய்யச் சொல்வதை உடனே செய்கிற பிள்ளை, நாளைக்கு உலகம் செய்யச் சொல்வதையும் செய்யும். எனவே, பிள்ளைகள் தங்களுடைய “புத்தி”யை அதாவது, பகுத்துணரும் திறமையை வளர்த்துக்கொள்ளப் பயிற்றுவியுங்கள். (ரோமர் 12:1) பைபிளின் நியமங்கள் ஏன் சரியானவை, நம் எல்லாருக்கும் அவை எவ்வாறு பயனளிக்கின்றன என்பதைப் புரிய வையுங்கள்.​—ஏசாயா 48:17, 18.

தங்களுடைய சவால்களைச் சந்திக்க இளைஞருக்கு உதவிசெய்ய அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அந்த முயற்சி வீண்போகாது! உங்கள் பிள்ளைகளின் மனதில் நீங்கள் பதிய வைத்துள்ள பைபிள் நியமங்களின்படி அவர்கள் வாழ்ந்தால் உங்கள் முழு இருதயத்துடன் நீங்கள் இவ்வாறு சொல்ல முடியும்: “பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்.”​—சங்கீதம் 127:4.

[பக்கம் 9-ன் படங்கள்]

நல்ல, கிறிஸ்தவ நண்பர்களைத் தேர்ந்தெடுக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்