Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைகால் உலகின் மிகப் பெரிய ஏரி

பைகால் உலகின் மிகப் பெரிய ஏரி

பைகால் உலகின் மிகப் பெரிய ஏரி

ரஷ்யாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

காலங்காலமாக, தெற்கு சைபீரியா என்று இன்று அறியப்படுகிற தொலைதூரப் பகுதியில் வாழ்ந்த மங்கோலிய இன பழங்குடியினர் இந்த ஏரியைப் புனிதமாகக் கருதி வந்தார்கள். மிகப் பெரிய ஏரிகள் பல இருந்தாலும் இந்த ஏரிதான் உலகத்திலேயே மிக ஆழமான நன்னீர் ஏரி; ஏராளமான தண்ணீர் நிறைந்த ஏரி. இதற்கு வழங்கப்பட்ட பெயர்களில் பைகால் என்பதே இன்றுவரை நிலைத்திருக்கிறது. இந்தப் பெயருக்கு, “வளமான ஏரி” அல்லது “கடல்” என்று அர்த்தமாம். சொல்லப்போனால், இந்த ஏரி “மிகப் பெரியதாக இருப்பதாலும் விரைவாக ஆவியாவதாலும்” படகோட்டிகள் சில சமயம், “கடலுக்குப் போகிறேன்” என்று அதன் கரையோரங்களில் பேசிக்கொள்வார்கள்.

ரஷ்யர்களின் இருதயத்தில் பைகால் ஏரிக்கென்று ஒரு தனி இடம் உண்டு. “குழந்தை பருவத்திலேயே அனைவரும் கற்றுக்கொண்ட ஓர் இனிய இசை” என்று மாஸ்கோவைச் சேர்ந்த அறிவியலாளர் ஒருவர் அதை அழைத்தார். ஓர் அழகான இசைக்கு அநேக “குறியீடுகள்” இருப்பதுபோல, மனதைச் சொக்க வைக்கும் அழகிய கடற்கரைகள், பளிங்குபோன்ற தண்ணீர், எங்கும் காணமுடியாத பல்வகை உயிரினங்களின் கதம்பம் என எண்ணற்ற சிறப்பம்சங்கள் பைகால் ஏரிக்கு உண்டு.

பைகால் ஏரியின் மிக அகண்ட பகுதி, 636 கிலோமீட்டர் நீளமும் 80 கிலோமீட்டர் அகலமும் உடையது; விண்வெளியிலிருந்து இதைப் பார்க்கும்போது, பாதி திறந்திருக்கும் நீல நிறக் கண்ணைப்போல இருக்கிறது. உலகிலுள்ள மொத்த நன்னீரில் ஐந்தில் ஒரு பங்கு தண்ணீர் இங்குதான் இருக்கிறது. இது, வட அமெரிக்காவிலுள்ள ஐந்து மிகப் பெரிய ஏரிகளிலுள்ள மொத்தத் தண்ணீரையும்விட அதிகமாம்! பைகால் ஏரி 1,600 மீட்டருக்கும் அதிக ஆழமுள்ளது; ஒருவேளை இந்த ஏரி திடீரென வற்றிவிட்டால், அதை மீண்டும் நிரப்ப உலகிலுள்ள அனைத்து நதிகளின் தண்ணீரையும் ஒரு வருடத்திற்கு அதற்குத் திருப்பிவிட வேண்டியிருக்குமாம்!

கண்டங்களின் மோதல்

பூர்வ காலத்தில், யுரேஷியன் கண்டம் இந்திய துணைக்கண்டத்தோடு மோதியதால் பைகால் பிளவு உருவானது என்றும், பூமிக்கடியில் இருக்கும் மாபெரும் பாறைகள் அலுமினியத் தகடுபோல நசுக்கப்பட்டு, பூமியின் மேற்பகுதி தள்ளப்பட்டு, இமயமலை உருவானது என்றும் புவியியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். கண்டங்களின் இந்த மோதலால், சைபீரியாவில் ஆழமான பிளவுகள் ஏராளமாய் ஏற்பட்டதாக சிலர் கருதுகிறார்கள். இப்படி உருவான ஒன்றுதான் பைகால் பிளவு ஆகும். காலப்போக்கில், அருகிலிருந்த மலைகளிலிருந்து அரித்துக்கொண்டு வரப்பட்ட வண்டல் மண்ணால் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்தப் பிளவு நிரப்பப்பட்டது; அதன் பிறகு, நீர் நிரம்பி பைகால் ஏரியாக உருமாறியது. இப்பொழுது, 300-க்கும் மேற்பட்ட ஆறுகளும் சிற்றாறுகளும் இந்த ஏரியில் சங்கமிக்கின்றன. அங்காரா என்ற ஆறு மட்டுமே இங்கிருந்து உற்பத்தியாகி ஓடுகிறது.

உலகிலுள்ள பண்டைய ஏரிகளில் பலவற்றைப்போல, கசடுகள் நிறைந்ததாகவோ சேறும் சகதியும் மண்டியதாகவோ பைகால் ஏரி மாறிவிடவில்லை. ஏரிக்கடியில் இருக்கும் புவியோட்டின் மிருதுவான தட்டுகள் இன்னும் மெல்ல மெல்ல நகர்ந்து, பிளவை அதிகரித்துக்கொண்டு இருப்பதுதான் அதற்குக் காரணம் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். எனவே, ஏரி வண்டல் மண்ணால் நிரம்புவதற்குப் பதிலாக, ஒவ்வொரு வருடமும் அது ஆழமாகிக்கொண்டே போகிறதாம்! புவியோட்டின் தட்டுகள் நகருவது, ஏரிக்கடியிலிருந்து வெந்நீர் ஊற்றுகள் பீறிட்டு வருவதற்குக் காரணமாகிறது.

பைகால் ஏரிக்குள்ளே

பைகால் ஏரியின் மையப்பகுதியை படகில் கடந்து சென்ற சிலர் பயந்திருக்கிறார்கள்; ஏனென்றால், அந்தப் பளிங்கு போன்ற தண்ணீரில் பார்க்கையில் 150 அடி ஆழம்வரை இருப்பதெல்லாம் தெள்ளத்தெளிவாகத் தெரியும். ஏரியில் நிறைந்திருக்கும் எபிஷூரா என்ற மெல்லுடலி, ஏரியைத் துப்புரவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. அநேக ஏரிகளைப் பாழாக்கும் பாசிகளையும் நுண்கிருமிகளையும் கபளீகரம் செய்கிறது. இந்தத் ‘துப்புரவாளர்களுக்கு’ உதவிக்கரம் நீட்டுவதைப்போல், உயிரினக் கழிவுகள் அழுகிப்போவதற்கு முன் அவற்றை ஏரியில் உலாவிக்கொண்டிருக்கும் எண்ணற்ற நன்னீர் நண்டு இனங்கள் தின்றுவிடுகின்றன; அதனால், தண்ணீர் மிகவும் சுத்தமாக இருக்கிறது. சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் ஆய்வக பரிசோதனைக்காக ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஏரியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்தார்கள்; அந்தப் பாத்திரத்தால் தண்ணீர் மாசுபட்டுவிட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

பைகால் ஏரியின் தண்ணீர் பளிங்குபோல் இருப்பது உலகறிந்த உண்மை; அதோடு, அதில் பிராணவாயு மிக மிக அதிகமிருக்கிறது. சில ஆழமான ஏரிகளில் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்குப் பிறகு பிராணவாயு இருக்காது. இத்தகைய ஏரிகளில் உள்ள உயிரினங்கள் ஆழமற்ற பகுதிகளில் வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. ஆனால், பைகால் ஏரியில் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் செல்லும் நீரோட்டங்கள் வெகு ஆழம்வரை பிராணவாயுவை எடுத்துச் சென்று அதைத் தண்ணீரோடு இரண்டறக் கலந்துவிடுகின்றன. இதனால், ஏரி முழுவதும் உயிரினங்கள்தான்.

குளிர்ந்த, சுத்தமான அந்தத் தண்ணீருக்கு அடியில் ஒரு காடே செழிப்பாய் வளருகிறது. பச்சைப்பசேலென இருக்கும் கடற்பாசிகள் பவழப்பாறையைப்போல பரந்து விரிந்து, ஏராளமான குட்டி உயிரினங்களுக்கு அடைக்கலம் தருகின்றன. ஏரியின் வெந்நீர் ஊற்றுகளைச் சுற்றிலும் உஷ்ணத்தை விரும்பும் அநேக உயிரினங்கள் குடும்பம் குடும்பமாக கும்பலாய் குடியிருக்கின்றன. 2,000-க்கும் அதிகமான சின்னஞ்சிறு உயிரினங்கள் இந்த ஏரியில் வாழ்கின்றன; அவற்றில் 1,500 வகை உயிரினங்களை பைகால் ஏரியில் மட்டுமே காண முடியும்.

மீனவர்கள் பொக்கிஷமாகக் கருதும் ஓமல் என்ற ஆர்க்டிக் வெள்ளை மீனுக்கு பைகால் ஏரி பெயர்போனது. உலகில் வேறெங்கும் காணப்படாத மற்ற உயிரினங்களும் இங்கே உண்டு. ஒருவகையான தட்டைப்புழு, ஓர் அடிக்கும் அதிக நீளத்திற்கு வளருகிறது; அது மீன்களையே விருந்தாக்கிக்கொள்கிறது. ஒற்றைசெல் உயிரிகள்கூட மண் துகள்களில் வாழுகின்றனவே! கலமியாங்கா என்ற மீனுக்கு இந்த ஏரி பிரசித்தி பெற்றது; பைகால் ஏரியில் மட்டுமே காணப்படும் இந்த மீன், இங்கு வாழும் உயிரினங்களிலேயே சற்று விசித்திரமானது.

ஒளி ஊடுருவும் தன்மை படைத்த இந்தச் சிறிய கலமியாங்கா மீன், பல நிறங்கள் காட்டும் பகட்டுக்காரியாய் உலாவருகிறது. கிட்டத்தட்ட ஏரியின் அடிமட்டத்தில் இது வாழ்கிறது; முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதற்குப் பதிலாக குட்டி போடுகிறது. இதன் உடலில் மூன்று பங்கு கொழுப்பும், ஏராளமான ‘ஏ’ உயிர்ச்சத்தும் இருக்கிறது. அதிக அழுத்தமிருக்கும் 200 முதல் 450 மீட்டர் ஆழத்திலும்கூட இது தாக்குப்பிடிக்கிறது; என்றாலும், சூரிய ஒளி அதன்மீது படுகையில் அதன் உடல் கரைந்து, எலும்பும் கொழுப்பும் மட்டுமே மிஞ்சுகிறது. இந்த மீனைக் கண்டாலே, பைகால் ஏரியில் வாழும் கடல்நாய்களுக்கு வாயில் எச்சில் ஊறும். உலகிலேயே இவைதான் நன்னீரில் மட்டுமே வாழும் கடல்நாய்கள். இது பைகாலில் காணப்படும் உயிரினங்களிலேயே அதிக பிரசித்தி பெற்றது.

பருவகால மாற்றங்கள்

வருடத்தில் சுமார் ஐந்து மாதங்களுக்கு பைகால் ஏரி பனிக்கட்டியாய் உறைந்துவிடுகிறது. ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் பனிக்கட்டி ஒரு மீட்டருக்கும் அதிக பருமனுள்ளதாய் ஆகிவிடுகிறது. பார்ப்பதற்கு, பளபளப்பான கற்கள் பதிக்கப்பட்டதுபோன்று இருக்கிறது. சூரிய ஒளியில் தகதகவென மின்னும் ஜன்னல் கண்ணாடிபோல ஜொலிக்கிறது. பனிக்கட்டி மெல்லியதாக இருப்பதுபோல் கண்ணாமூச்சி காட்டுகிறது. அதன் மேல் நடந்துபோகிறவர்கள் ஏரிக்கடியில் இருக்கும் பாறைகளைப் பார்க்க முடிகிற அளவிற்கு தெளிவாக இருக்கிறது. உண்மையில், இந்தப் பனிப்பாறைகள் பொதுவாகவே அசாதாரண உறுதியோடு இருக்கின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே போர் நடந்தது. குளிர்காலத்தில் ரஷ்யப் படைகள் பனியைக் கடப்பதற்கு அதன்மீது ரயில் தண்டவாளங்களை அமைத்து, 65 ரயில் பெட்டிகள் வெற்றிகரமாக இழுத்துச் செல்லப்பட்டனவாம்!

ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜூன் மாதம் வரைக்கும் இடியோசை போன்று பெரும் சத்தத்தோடு பனிக்கட்டியில் விரிசல் விழுந்து, உடைந்து சிதறுகிறது. ஏரியிலிருந்து வந்தவண்ணமிருக்கும் இந்த ஓசையை ‘பனி இசை’ என்று உள்ளூர்வாசிகள் அழைக்கிறார்கள். அந்தப் பனி ஓசை, “சின்ன ஜாலராவின் மணியோசை போலவும் கூடையில் போடப்பட்டிருக்கும் பூனைகளின் முனகல் ஒலி போலவும்” இருப்பதாக இயற்கை அறிவியலாளர் ஜெரல்ட் டரல் எழுதினார். விரைவில், பருவ நிலையில் உஷ்ணம் அதிகரிக்கும்போது காற்றும் அலையும் சேர்ந்து பனிக்குவியலை மின்னும் பொற்குவியலாய் கரையில் வாரியிறைக்கின்றன.

ஏரியில் தண்ணீர் தட்டுப்பட்டவுடன் பறவைகள் மீண்டும் அதை நலம் விசாரிக்கத் திரும்பி வருகின்றன. டிப்பர் இனப் பறவைகள் போன்றவை குளிர் காலம் முழுவதும் அங்காரா நதியின் முகப்பிலேயே தங்கிவிடுகின்றன; ஏனென்றால், ஏரியின் அந்தப் பகுதிதான் உறைந்து போவதேயில்லை. பின்னர், அவை வாத்து, அன்னம் (whooper swans), சாம்பல் நாரை போன்ற நீந்தும் பறவைகளோடு சேர்ந்துகொள்கின்றன.

ஜூன் மாதம் ஏரிக்குச் செல்பவர்கள், பாறைகளில் திரள்திரளாக இருக்கிற முட்டைப்புழுக்களை தின்பதற்கு கரையோரம் வருகிற கரடிகளைப் பார்க்கலாம். இந்தப் முட்டைப்புழுக்கள் பின்னர் காடஸ் பூச்சிகளாக உருமாறும். கரடிகள் குதூகலமாய்த் தங்களுடைய நாக்கால் நக்கி அந்தப் பூச்சிகளைத் தின்கின்றன. அவற்றைச் சுற்றி ஒய்ங்... என்ற ரீங்காரத்துடன் பறக்கும் பூச்சிகளை அவை சட்டை செய்வதே இல்லை. இந்தச் சமயத்தில், கரடிகளின் கூட்டத்தால் கவரப்பட்டு, இரையை ருசிக்க ஏராளமான விலங்குகளும் பறவைகளும் கரையோரத்திற்குப் படையெடுக்கின்றன.

வசந்த காலத்தின் துவக்கத்திலும் கோடை காலத்திலும் கடற்பாசிகள் மெதுவாக வளர ஆரம்பிக்கின்றன; இவை, சிறிய உயிரினங்களுக்கு உணவாகின்றன; நீருக்கு பச்சை நிறம் பூசுகின்றன. என்றாலும், பொதுவாக கரையிலிருந்து பார்க்கும்போது பைகால் ஏரியின் தண்ணீர் நீலம் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்; நடுவே இருக்கும் தண்ணீர் ஒரு சமுத்திரத்தைப்போல அடர்த்தியான நீல நிறத்தில் காட்சியளிக்கும்.

மணல் குன்றுகளும் கம்பீரமாய்த் தோற்றமளிக்கும் கூர்மையான பாறைகளும் கரையோரம் இருக்கின்றன. பல விரிகுடாக்களும் நிலக் கூம்புகளும் மனதைக் கொள்ளைகொள்கின்றன. பரந்து விரிந்து கிடக்கும் பைகால் ஏரி, “மென்மையான ஒரு முத்தைப்போல தொடர்ந்து வர்ணஜாலம் புரிகிறது” என்று ஓர் எழுத்தாளர் அதை வருணிக்கிறார். நீர்ப்பரப்பும் வானமும் நிறம் மாறிக்கொண்டே இருக்கின்றன.

வருடத்தின் பிற்பகுதியில், ஏரியில் பெரும்பாலும் புயல் வீசுகிறது. இலையுதிர் காலம் வந்தால், சிலசமயம் ஏரியின்மேல் சூறாவளியின் மூர்க்கத்தோடு காற்று வீசுகிறது. அந்தக் காற்று சலனமற்று, அமைதலாயிருக்கும் நீர்ப்பரப்பை மின்னல் வேகத்தில் பயங்கரமாய்க் கொந்தளிக்கச் செய்து, 4 முதல் 6 மீட்டர் உயரத்திற்கு அலைகளை எழும்பி நிற்கச் செய்யலாம். வருடத்தின் மற்ற சமயங்களிலும்கூட, பெரிய பயணக் கப்பல்களையும் மீன்பிடி படகுகளையும் இந்தக் காற்று மூழ்கடித்துவிடுவதாகச் சொல்லப்படுகிறது.

கொட்டிக் கிடக்கும் இயற்கைக் காட்சிகள்

சைபீரியா கரடுமுரடான இடமாக இருப்பதால், அங்கிருக்கும் பைகால் ஏரியை பார்க்கும்போது யாரையும் நெருங்கவிடாத, உணர்ச்சியற்ற ராட்சதனைப் போன்று தோன்றலாம். ஆனால், உண்மையில் எக்கச்சக்கமான வனவிலங்குகளை வாரியணைத்து, விதவிதமான இயற்கைக் காட்சிகள் சூழ அது அமைந்துள்ளது. ஏரியைச் சுற்றி கம்பீரமாய் காட்சியளிக்கும் நான்கு மலைத்தொடர்கள் பனிமான்களுக்கும் அழிந்துவரும் சைபீரிய மலை ஆடுகளுக்கும் புகலிடமாகத் திகழ்கின்றன.

தாழ்வான பகுதிகளில் புல்வெளிகள் அமைந்துள்ளன. இந்த அடர்ந்த புல்வெளிகளில் சில, சைபீரியாவின் மலர் மெத்தைகள் என அழைக்கப்படுகின்றன. ஏனென்றால், விசித்திரமான பலரக காட்டுப் பூக்கள் இங்கே இருக்கின்றன. இந்தச் சமவெளியில் காணப்படும் அரிய பறவைகளில், நளினமாய் காட்சியளிக்கும் டெம்வசெல் என்ற ஒருவகை நாரை இனமும் ஆசியாவிலேயே மிகப் பெரிய பறவையான பஸ்டார்ட் பறவையும் உள்ளன.

பைகால் ஏரியைச் சுற்றி மண்டிக்கிடக்கும் அடர்த்தியான ஊசியிலைக் காடுகள் அதன் மற்றொரு சிறப்பு. இந்தக் காடுகள், பிரேசிலின் அமேசானின் மழைக் காடுகளைவிட இரண்டு மடங்கு பெரியவையாகும். அமேசான் காடுகளைப் போலவே, இவையும் உலகின் சுற்றுச்சூழலையும் சீதோஷ்ணத்தையும் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. பற்பல பறவையினங்கள் இங்கே குடியிருக்கின்றன. தன் துணையைக் கண்டுபிடிக்க ஒய்யாரமாய் நடனமாடி, பாட்டிசைக்கும் கேபர்கேலி என்ற ஒருவகை காட்டுக்கோழியும் இங்குள்ளது. பக்கம் 17-ல் காட்டப்பட்டுள்ள அழகான பைகால் குள்ளவாத்தும் அடிக்கடி ஏரிக்கு வந்துபோகிறது.

இங்கு காணப்படும் மிருகங்களில், கருநிற உரோமமுடைய பார்கஸீன் சேபல் என்ற பாலூட்டி குறிப்பிடத்தக்கதாகும். ஒருகாலத்தில் இவற்றின் பளபளப்பான உரோமத்திற்காக, இரக்கமின்றி இவை ஏராளமாய் வேட்டையாடப்பட்டன. இப்பொழுது, இயற்கை வள ஆர்வலர்களின் முயற்சியால் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த அழகிய பிராணியைப் பாதுகாக்கும் முயற்சியில், பார்கஸீன் இயற்கைவள பாதுகாப்பு நிறுவனம் பைகால் ஏரிக்கரைகளில் 1916-ல் உருவாக்கப்பட்டது. தற்போது, மூன்று தேசிய பூங்காக்களோடு ஏரியின் எல்லைகளில் அமைந்துள்ள மூன்று இயற்கைவள பாதுகாப்பு மையங்கள் பொதுமக்கள் சென்று பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

படைப்பின் ஆழத்தை ஆழ்ந்து சிந்தித்தல்

ஐநா கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் (UNESCO) உலக ஆஸ்தியின் பட்டியலில் பைகால் ஏரி இடம்பெற்றுள்ளது; இது பிரபல சுற்றுலா ஸ்தலமாகத் திகழ்கிறது. உலகெங்குமிருந்து ஒவ்வொரு வருடமும் சுமார் 3,00,000 சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குவிகிறார்கள். “பைகால் இயற்கைப் பிரியர்களின் இன்ப வனம், விடுமுறை கழிப்பவர்களின் சொர்க்கபுரி. வனப்பை சிந்தும் ஏரிக்கரைகள், காலார உலாவுதற்கு நடை பாதைகள், பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் பறவைகள், குதூகலமான படகுச் சவாரி ஆகியவை பைகால் ஏரியிடம் மக்களைக் கவருவதால், ஆசியாவில் அமைந்துள்ள மனம் கவரும் சுற்றுலா ஸ்தலங்களில் மிகச் சிறப்பானதாக உருவெடுக்கும் வாய்ப்பு இதற்குப் பிரகாசமாக உள்ளது” என்று ஒரு கட்டுரை குறிப்பிடுகிறது.

கடவுளுடைய ஒப்பற்ற ஞானத்தையும் வியப்பூட்டும் படைப்புகளையும் ஆழ்ந்து சிந்திக்க, இந்த ஏரி பொருத்தமான இடமாகும். இந்த அற்புதகரமான ஏரியைப் படைத்தவர் கடவுளே என்பதில் சந்தேகமில்லை. இந்த அற்புதமான ஏரியில் எக்கச்சக்கமான உயிரினங்கள் வாழ்வதற்கு வழிசெய்யும் ஒப்பற்ற இயற்கை வழிமுறைகளை வேறு யார் படைத்திருக்க முடியும்? “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!” என்ற வியந்து கூறிய பைபிள் எழுத்தாளரின் வார்த்தைகளையே பைகால் ஏரியின் கரையிலிருந்து பார்க்கும் எவருக்கும் சொல்லத் தோன்றும்.—ரோமர் 11:33.

[பக்கம் 16, 17-ன் பெட்டி/படம்]

நன்னீரில் மட்டுமே வாழும் கடல்நாய்

லட்சக்கணக்கான பைகால் கடல்நாய்களுக்கு பைகால் ஏரி புகலிடமாகத் திகழ்கிறது. ஆழத்தில் நீந்தும் மீன்கள் இவற்றுக்கு வருடம் முழுவதும் உணவாகின்றன. இங்கு மட்டுமே உயிர்வாழும் இந்தக் கடல்நாய்கள் எப்படி மத்திய சைபீரியாவுக்கு வந்து சேர்ந்தன என்று யாருக்கும் நிச்சயமாய்த் தெரியாது. இதன் நெருங்கிய இனம் 3,220 கிலோமீட்டருக்கு அப்பால் வாழ்கிறது.

பைகால் கடல்நாய்களுக்கு மிகப் பெரிய கண்களுண்டு, அவற்றின் சப்பையான முகத்தில் அவை அருகருகே அமைந்துள்ளன. உலகிலேயே இவைதான் மிகச் சிறிய கடல்நாய்கள்; இவை, 1.4 மீட்டர் வரை வளருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை தங்கள் நண்பர்களோடு சேர்ந்து கற்பாறைகளில் அமர்ந்து வெயில் காய்வது அடிக்கடி கவனிக்கப்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில், பெரும்பாலான கடல்நாய்கள் செய்யும் விதமாக ஒன்றையொன்று கடிப்பது, தள்ளிவிடுவது போன்ற இயல்பான சேட்டைகளை இவற்றிடம் காண முடிவதில்லை. சொல்லப்போனால், இந்த மென்மையான பைகால் கடல்நாய்கள்தான் உலகிலேயே தோழமை விரும்பும் கடல்நாய்களாக இருக்க முடியும்.

பைகால் கடல்நாய்கள், “சாந்தமாக, எளிதில் பதட்டப்படாத ரிங்க்ட் கடல்நாய்களைவிட மென்மையானவை. அறிவியல் ஆய்வுக்காகப் பிடிக்கப்படும்போதுகூட அவை கடிக்காமல் எங்களுடன் ஒத்துழைக்கின்றன” என்று அவற்றை ஆய்வு செய்யும் ஓர் உயிரியலாளர் சொன்னார். ஆழ்கடலில் முக்குளிப்பவர்கள், தண்ணீரில் தூங்கிக் கொண்டிருக்கும் கடல்நாய்களைப் பார்த்ததாக ஓர் ஆராய்ச்சிப் புத்தகம் கூறுகிறது. அவற்றைத் தொட்டபோதும், புரட்டிப் போட்டபோதும்கூட அவை விழித்துக்கொள்ளவில்லை என்று அந்த முக்குளிப்பவர்கள் கூறினார்கள்.

[படத்திற்கான நன்றி]

Dr. Konstantin Mikhailov/Naturfoto-Online

[பக்கம் 18-ன் பெட்டி/படம்]

நாடுகடத்த பயன்படுத்தப்பட்ட இடம்

யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் தங்களுடைய மத நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காததால் 1951-லிருந்து 1965 வரையான காலப்பகுதியில் பைகால் ஏரிப்பகுதிக்கு நாடு கடத்தப்பட்டார்கள். பிரஸ்கோவ்யா வலஸியாங்கா என்பவர் 1951-ல் பைகாலின் மிகப் பெரிய தீவான ஓல்கோனுக்குக் கொண்டு செல்லப்பட்டார். நாடு கடத்தப்பட்ட மற்ற சாட்சிகளோடு சேர்ந்து அவரும் வாயிற்றுப்பாட்டுக்காக வலைபோட்டு மீன் பிடிப்பதில் கடினமாக உழைத்தார். என்றாலும், இன்னொரு விதமான “மீன் பிடிக்கும்” வேலையிலும் இவர் ஈடுபட்டார். பைபிளைப் பயன்படுத்தி ஓல்கோன்வாசிகள் அநேகருக்கு கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்தார்.

பிரசங்க வேலை செய்ததற்காக பிரஸ்கோவ்யாவும் இன்னும் ஆறு சாட்சிகளும் 1953-ல் கைது செய்யப்பட்டார்கள். இவருக்கு 25 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர் விடுதலையான பிறகு, இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள யூஸால்ய-ஸீபீர்ஸ்கயா நகரிலிருக்கும் ஒரு சபையில் 2005-ல் மரணமடையும்வரை உண்மையோடு சேவை செய்தார். பைகால் பகுதியிலும் அதற்கு அருகில் இருக்கும் இர்குட்ஸ்க் நகரிலும் இப்போது யெகோவாவின் சாட்சிகளுடைய சுமார் 30 சபைகள் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன.

[பக்கம் 15-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ரஷ்யா

பைகால் ஏரி

[பக்கம் 16, 17-ன் படம்]

பைகால் ஏரியும் சாயன் மலைகளும்

[படத்திற்கான நன்றி]

Eric Baccega/age fotostock

[பக்கம் 17-ன் படம்]

பைகால் குள்ளவாத்து

[படத்திற்கான நன்றி]

Dr. Erhard Nerger/ Naturfoto-Online

[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]

Dr. Konstantin Mikhailov/Naturfoto-Online

[பக்கம் 18-ன் படங்களுக்கான நன்றி]

© Eric Baccega/age fotostock; Boyd Norton/Evergreen Photo Alliance