Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யாருடைய கைவண்ணம்?

தும்பிக்கை

தும்பிக்கை

● ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஒரு ரோபோட் கையை தயாரித்து வருகிறார்கள். இது அசாத்திய திறமை கொண்டது, எல்லா வேலைக்கும் பயன்படும். “இந்த ரோபோட் கை இப்போது தொழில்துறைகளில் பயன்படுத்தப்படுகிற எல்லா இயந்திரங்களையும் மிஞ்சிவிட்டது” என்று இதை உருவாக்கும் நிறுவனத்தில் நவீன இயந்திரங்களை வடிவமைக்கும் பிரிவின் மேனேஜர் சொல்கிறார். எதை மாதிரியாக வைத்து இதைத் தயாரித்தார்கள்? அவரே சொல்கிறார்: “தும்பிக்கையின் வடிவமைப்புதான்.”

கவனியுங்கள்: தும்பிக்கை கிட்டத்தட்ட 140 கிலோ எடையுள்ளது. “எல்லா வித வேலைகளையும் செய்வதில் தும்பிக்கைக்கு இணை இந்தப் பூமியில் வேறு ஒன்றுமே இல்லை” என்றுகூட சொல்வார்கள். யானை அந்தத் தும்பிக்கையை மூக்காக... வாயாக... கையாக... விரலாக... பயன்படுத்தும். அதன் வழியாக சுவாசிக்கும், முகரும், பருகும், பொருள்களை எடுக்கும், காது கிழிய பிளிரும்!

அதுமட்டுமா? தும்பிக்கை சுமார் 40,000 தசைநார்களால் ஆனது. எனவே, அதை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் வளைத்துக்கொள்ளும். ஒரு ரூபாய் நாணயத்தில் இருந்து கிட்டத்தட்ட 270 கிலோ எடையுள்ள பொருள்கள் வரை எதை வேண்டுமானாலும் தும்பிக்கையால் தூக்கும்!

இந்தத் தும்பிக்கையின் அமைப்பையும் அசாத்திய திறமைகளையும் காப்பியடித்து வீட்டிற்கும் தொழிற்சாலைக்கும் பயன்படும் தலைச்சிறந்த ரோபோட்டுகளைத் தயாரிக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிடுகிறார்கள். மேலே பார்த்த நிறுவனத்தின் பிரதிநிதி சொல்கிறார்: “சாதாரண ரோபோட்டைவிட புதுவிதமான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்திருக்கிறோம். இதன் மூலம், மனிதர்களும் இயந்திரங்களும் எந்த ஆபத்துமின்றி சேர்ந்து வேலை செய்யலாம். இப்படி ஒரு இயந்திரத்தை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவே இல்லை.”

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? யானையின் தும்பிக்கை வெறும் பரிணாம வளர்ச்சியா? இல்லை, படைப்பாளரின் கைவண்ணமா? (g12-E 04)