Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நமக்கு கைகொடுப்பவர் இயேசு கிறிஸ்து

நமக்கு கைகொடுப்பவர் இயேசு கிறிஸ்து

நமக்கு கைகொடுப்பவர் இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்து பூமியில் இருக்கையில் மக்களுக்கு சகாயமளிக்க என்ன செய்தார் என்பதை விவரித்தால் இந்த பூமி கொள்ளாது. அது நூற்றுக்கு நூறு உண்மை. கண்கண்ட சாட்சி ஒருவர் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய எண்ணற்ற சம்பவங்களை விவரித்தபின் இவ்வாறு கூறினார்: “இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்.” (யோவான் 21:25) இயேசு பூமியில் இருக்கையில் அநேகத்தை செய்திருக்கிறார் என்பதால் நாம் இவ்வாறு கேட்கக்கூடும்: ‘பரலோகத்தில் இருக்கிற இயேசு எப்படி நமக்கு சகாயமளிக்க முடியும்? இயேசுவின் கனிவான இரக்கத்திலிருந்து நாம் இப்பொழுது நன்மையடைய முடியுமா?’

இக்கேள்விகளுக்கான பதில் இதமளிப்பதாயும் நம்பிக்கையூட்டுவதாயும் இருக்கிறது. பைபிள் நமக்கு இவ்வாறு சொல்கிறது: “கிறிஸ்துவானவர் . . . பரலோகத்திலேதானே இப்போழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.” (எபிரெயர் 9:24) அவர் நமக்காக என்ன செய்தார்? அப்போஸ்தலன் பவுல் அதை விளக்குகிறார்: “வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, [கிறிஸ்து] தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே [பரலோகத்திலே] பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.”​—எபிரெயர் 9:12; 1 யோவான் 2:⁠2.

அது எப்பேர்ப்பட்ட நற்செய்தி! இயேசுவின் மகத்தான வேலை இந்தப் பூமியுடன் நின்றுவிடவில்லை. அவர் பரலோகத்திற்குச் சென்றபின் அதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்ய முடிந்தது. எப்படியெனில், கடவுள் தம்முடைய தகுதியற்ற தயவினால் இயேசுவை, “பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே” ‘மக்கள் சேவகனாக’​—⁠பிரதான ஆசாரியராக சேவை செய்ய நியமித்தார்.​—எபிரெயர் 8:1, 2, NW.

“மக்கள் சேவகன்”

அப்படியானால், பரலோகத்தில் மனிதரின் மக்கள் சேவகராக இயேசு சேவை செய்வார். பூர்வ காலங்களில் இஸ்ரவேலில் இருந்த பிரதான ஆசாரியன் கடவுளுடைய வணக்கத்தாருக்கு பணிவிடை செய்தது போன்று அவரும் சேவை செய்வார். அந்தச் சேவை என்ன? பவுல் அதை இவ்வாறு விவரிக்கிறார்: “ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்; ஆதலால் செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் [உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவுக்கும்] அவசியம் வேண்டியதாயிருக்கிறது.”​—எபிரெயர் 8:3.

இயேசுவும்கூட ஏதோ ஒன்று செலுத்த வேண்டியிருந்தது. அது பூர்வ காலத்து பிரதான ஆசாரியன் செலுத்தியதைவிட மிக உயர்ந்தது. “காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தம்” பூர்வ இஸ்ரவேலை ஓரளவு ஆவிக்குரிய விதத்தில் சுத்திகரிக்குமானால், “கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!”​—எபிரெயர் 9:13, 14.

இயேசு விசேஷித்த மக்கள் சேவகனாகவும் இருக்கிறார். ஏனெனில் அவருக்கு சாகா வரம் அளிக்கப்பட்டுள்ளது. பூர்வ இஸ்ரவேலில் “அநேகர் ஆசாரியர்களாக சேவிக்க வேண்டியிருந்தது, ஏனெனில் அச்சேவையில் நிலைத்திருக்க மரணம் தடையாய் இருந்தது.” (NW) ஆனால் இயேசுவைப் பற்றியதென்ன? பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார். மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.” (எபிரெயர் 7:23-25; ரோமர் 6:9) ஆம், கடவுளுடைய வலது பாரிசத்திலே ‘எப்பொழுதும் உயிரோடிருந்து நமக்காக வேண்டுதல் செய்யும்’ மக்கள் சேவகன் நமக்கு இருக்கிறார். அது இப்பொழுது நமக்கு எப்பேர்ப்பட்ட அர்த்தமுடையதாய் இருக்கிறது என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

இயேசு பூமியில் இருந்தபோது, மக்கள் உதவிக்காக அவரிடம் கூடிவந்தனர். அவருடைய உதவியை நாடி சில சமயங்களில் அவர்கள் வெகுதூரம் பிரயாணம் செய்தனர். (மத்தேயு 4:24, 25) இப்போது இயேசு பரலோகத்தில் இருப்பதால் எல்லா மக்களும் எளிதில் அவரை அணுக முடியும். அதுபோலவே இயேசுவும் மக்கள் சேவகன் என்ற நிலையில் பரலோகத்திலிருந்து எச்சமயத்திலும் உதவ முடியும்.

இயேசு எப்படிப்பட்ட பிரதான ஆசாரியர்?

உதவும் குணமும் கனிவான இரக்கமும் இயேசு கிறிஸ்துவுக்கு இருந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை; இதை சுவிசேஷ பதிவுகளிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். என்னே சுயதியாக மனப்பான்மைமிக்கவர்! இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் அதிக ஓய்வு தேவைப்பட்ட சமயத்தில், அவர்கள் ஓய்வெடுக்க முடியாதவாறு தடங்கல்கள் வந்த பல சந்தர்ப்பங்களும் உண்டு. அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்கக் கிடைத்த இந்த அரிய தருணங்கள் பறிபோய்விட்டதாக எண்ணுவதற்கு பதிலாக தம்முடைய உதவியை நாடி வந்தவர்களைக் கண்டு ‘மனதுருகினார்.’ களைப்பாக, பசியாக, தாகமாக இருந்தபோதும்கூட, அவற்றை பொருட்படுத்தாமல் ‘அவர்களை அன்போடு ஏற்றுக்கொண்டார்.’ சாப்பாட்டைக்கூட பொருட்படுத்தாமல் பாவிகளுக்கு உதவினார்.​—மாற்கு 6:31-34; லூக்கா 9:11-17, NW; யோவான் 4:4-6, 31-34.

இரக்கத்தால் தூண்டப்பட்ட இயேசு, மக்களின் சரீர, உணர்ச்சிப்பூர்வ, ஆவிக்குரிய தேவைகளை நிறைவு செய்வதற்கு நடைமுறையான படிகளை மேற்கொண்டார். (மத்தேயு 9:35-38; மாற்கு 6:35-44) நிரந்தர துயர்தீர்ப்புக்கும் ஆறுதலுக்கும் வழியென்ன என்பதையும் கற்றுக் கொடுத்தார். (யோவான் 4:7-30, 39-42) உதாரணமாக, அவரே விடுக்கும் இந்த அழைப்பு எப்படி நம்மை சுண்டி இழுக்கிறது! “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.”—மத்தேயு 11:28, 29.

மக்களை இயேசு அதிகமாக நேசித்ததால் பாவமுள்ள மனிதருக்காக தம்முடைய ஜீவனையும் கொடுத்தார். (ரோமர் 5:6-8) அப்போஸ்தலன் பவுல் இதை இவ்வாறு விளக்கினார்: “தம்முடைய [யெகோவா தேவனுடைய] சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தாராகில், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பாரோ? . . . கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே.”​—ரோமர் 8:32-34.

அனுதாபம் காட்டும் பிரதான ஆசாரியர்

மனிதனாக இருக்கையில் இயேசு பசியையும், தாகத்தையும், களைப்பையும், கடும் துயரையும், வேதனையையும், மரணத்தையும் அனுபவித்தார். அவரே இப்படிப்பட்ட நெருக்கடிகளையும் தொல்லைகளையும் சகித்ததால், துன்புறும் மனிதரின் சூழ்நிலையை நன்றாக புரிந்துகொண்டு சேவை செய்ய விசேஷ விதத்தில் பக்குவப்படுத்தப்பட்டார். ஆகவே பவுல் இவ்விதமாக எழுதினார்: “[இயேசு] ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக் குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது. ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.”​—எபிரெயர் 2:17, 18; 13:8.

கடவுளிடம் நெருங்கி வர ஜனங்களுக்கு உதவ தமக்கு தகுதியிருக்கிறது, மனமுமிருக்கிறது என்பதை இயேசு மெய்ப்பித்து காட்டினார். இது, கண்டிப்பான, இரக்கமற்ற, மன்னிக்க மனமில்லாத கடவுளை, கெஞ்சிக் கூத்தாடி எப்படியாவது சம்மதிக்க வைப்பதாக அர்த்தப்படுத்துமா? உண்மையில் அவ்வாறு இல்லை. பைபிள் நமக்கு இவ்விதமாக உறுதியளிக்கிறது: ‘யெகோவா நல்லவரும், மன்னிக்கிறவருமா[யிருக்கிறார்].’ அது மேலுமாக கூறுகிறது: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (சங்கீதம் 86:5; 1 யோவான் 1:9) உண்மையில் இயேசுவின் கனிவான வார்த்தைகளும் செயல்களும் தம்முடைய தகப்பனின் பரிவு, இரக்கம், அன்பு போன்ற குணங்களைப் பிரதிபலிக்கின்றன.​—யோவான் 5:19; 8:28; 14:9, 10.

மனந்திரும்பும் பாவிகளுக்கு இயேசு எவ்விதமாக விடுதலையளிக்கிறார்? கடவுளைப் பிரியப்படுத்த உண்மையாக முயற்சிப்பதில் சந்தோஷத்தையும் திருப்தியையும் கண்டடைய அவர்களுக்கு உதவுகிறார். அபிஷேகம் பண்ணப்பட்ட சக கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில், பவுல் இந்த சூழ்நிலையை இவ்வாறு இரத்தினச் சுருக்கமாக கூறுகிறார்: “வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.”​—எபிரெயர் 4:14-16.

‘ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்கிறவர்’

தீராத வியாதி, குற்ற உணர்ச்சியால் மனப்புழுக்கம், கடும் சோர்வு, மன உளைச்சல் போன்ற பிரச்சினைகள் நம் சக்திக்கு மிஞ்சியவையாய் தோன்றலாம். அப்போது என்ன செய்யலாம்? ஜெபம் செய்யலாம். இது ஓர் அரிய சிலாக்கியம். இயேசுவுமே எப்போதும் ஜெபத்தில் சார்ந்திருந்தார். உதாரணமாக, மரிப்பதற்கு முந்தின நாள் இரவு, “அவர் அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.” (லூக்கா 22:44) கடவுளிடம் அதிக ஊக்கமாக ஜெபம் செய்வது எப்படி இருக்கும் என்பதை இயேசு நன்றாக அறிவார். அவர், “தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்[டார்].”​—எபிரெயர் 5:7.

தங்கள் ஜெபங்கள் ‘கேட்கப்பட்டு’ பலம் பெறும்போது மனிதர் எப்படி உணருவர் என்பதை இயேசு நன்கு அறிவார். (லூக்கா 22:43) மேலும் இவ்விதமாக வாக்கு கொடுத்தார்: “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். . . . கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.” (யோவான் 16:23, 24) ஆகவே, தம்முடைய அதிகாரத்தையும், நம் சார்பாக அளிக்கப்பட்ட மீட்கும் பலியின் மதிப்பையும் குமாரன் செயல்படுத்துவதற்கு கடவுள் அனுமதிப்பார் என்ற நம்பிக்கையோடு நாம் கடவுளிடம் வேண்டுதல் செய்யலாம்.​—மத்தேயு 28:18.

இயேசு பரலோகத்தில் தகுதியுள்ள ஸ்தானத்தில் இருப்பதால் தக்க சமயத்தில் தகுந்த உதவியை அளிப்பார். உதாரணமாக, நாம் ஒரு பாவம் செய்து அதற்காக உண்மையிலேயே வருந்துகிறோமென்றால் உறுதியளிக்கும் இந்த வார்த்தைகளிலிருந்து நாம் ஆறுதல் அடையலாம்: “நீதிபரரான இயேசுகிறிஸ்துவே பிதாவினிடம் நமக்குச் சகாயர்.” (1 யோவான் 2:1, 2, பொ.மொ.) பரலோகத்திலே நமக்குச் சகாயரும் நம்மைத் தேற்றுகிறவருமான அவர் நமக்காக வேண்டுதல் செய்வார். ஆகவே அவர் பெயரிலும், பைபிளுக்கு இசைவாகவும் செய்யப்படும் நம் ஜெபங்களுக்கு பதிலளிக்கப்படும்.​—யோவான் 14:13, 14; 1 யோவான் 5:14, 15.

கிறிஸ்துவின் உதவிக்கு மதிப்பு காட்டுதல்

குமாரன் மூலமாக கடவுளிடம் விண்ணப்பம் செய்வதைக் காட்டிலும் அதிகம் உட்பட்டுள்ளது. கிறிஸ்து தம்முடைய மீட்கும் பலியின் மூலமாக மனித குலத்தை “மீட்டதால்” அதை “விலைகொடுத்து வாங்கிய எஜமானர் ஆனார்.” (கலாத்தியர் 3:13; 4:5; 2 பேதுரு 2:1, NW) ஆகவே, கிறிஸ்து நமக்குச் செய்த எல்லாவற்றிற்காகவும் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். எவ்வாறு தெரிவிப்பது? அவரே நம் எஜமானர் என்பதை ஒப்புக்கொள்ளுவதன் மூலமும், பின்வரும் அவரது அழைப்புக்கு மகிழ்ச்சியுடன் செவிசாய்ப்பதன் மூலமும் தெரிவிக்கலாம்: “ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் சொந்தம் கைவிட்டு, தன் கழுமரத்தை அனுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.” (லூக்கா 9:23, NW) ‘சொந்தம் கைவிடுதல்’ என்பது வெறுமனே பேச்சளவில் கிறிஸ்துவுக்கே சொந்தம் என்று சொல்வதல்ல. ஆனால் கிறிஸ்து, “பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தா[ர்].” (2 கொரிந்தியர் 5:14, 15) ஆகவே மீட்கும் பொருளின்பேரில் மதிப்பு காட்டுவது நம்முடைய மனப்பான்மை, இலக்குகள், வாழ்க்கைப்பாணி போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும். ‘இயேசு கிறிஸ்து நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்ததற்கு’ நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் என்ற உணர்வு தானே இயேசுவைப் பற்றியும் அவருடைய அன்புள்ள தகப்பனாகிய யெகோவா தேவனைப் பற்றியும் அதிகமாக கற்றுக்கொள்ள நம்மைத் தூண்ட வேண்டும். நாம் விசுவாசத்தில் வளர்ந்து, கடவுளுடைய நன்மையான தராதரங்களின்படி வாழ்ந்து, “நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும்” இருக்க வேண்டும்.​—தீத்து 2:13, 14; யோவான் 17:3.

கிறிஸ்தவ சபையின் மூலமாக நாம் காலத்துக்கேற்ற ஆவிக்குரிய உணவையும், உற்சாகத்தையும், வழிநடத்துதலையும் பெறுகிறோம். (மத்தேயு 24:45-47; எபிரெயர் 10:21-25) உதாரணமாக, யாரேனும் ஆவிக்குரியவிதமாக வியாதிப்படுகையில் “சபையின் [நியமிக்கப்பட்ட] மூப்பர்களை வரவழைப்பா[ர்களாக].” யாக்கோபு அதற்கான நம்பிக்கையையும் சேர்த்துக் கூறுகிறார்: “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.”​—யாக்கோபு 5:13-15.

இதை விளக்க ஓர் அனுபவத்தைக் கவனியுங்கள்: தென் அமெரிக்க சிறையில் இருக்கும் ஒரு நபர், “இயேசு கிறிஸ்து ஆரம்பித்து வைத்த நல்ல வேலையை செய்து அதன்மூலம் மக்கள் கடவுளுடைய ராஜ்யத்தை அடைய உதவும் எல்லா யெகோவாவின் சாட்சிகளுக்கும்” போற்றுதல் காண்பித்து ஒரு சபையின் மூப்பருக்கு எழுதினார். அதில் அவர் தொடர்ந்து எழுதியதாவது: “உங்கள் கடிதம் கிடைத்ததும் நான் அதிக சந்தோஷமடைந்தேன். என் ஆவிக்குரிய மீட்பின்பேரில் உங்களுக்கு இருக்கும் அக்கறை என்னை அதிகமாக தொட்டது. மன்னிப்பைப் பெறுவதற்கு யெகோவா தேவன் விடுக்கும் அழைப்புக்குச் செவிகொடுக்க இன்னும் அதிக காரணத்தை அளித்தது. நான் 27 வருடங்களாக, பாவம், சூழ்ச்சி, சட்டவிரோதமான செயல்கள், ஒழுக்கக்கேடான பழக்கவழக்கங்கள், போலி மதங்கள் ஆகியவற்றால் தட்டுத்தடுமாறி திசைமாறிச் சென்றுகொண்டிருந்தேன். யெகோவாவின் சாட்சிகளுடன் அறிமுகமானபின் இப்பொழுது சரியான வழியைக் கண்டடைந்ததாக உணருகிறேன்! ஆகவே அதைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டியதுதான் என் கடமை.”

விரைவில் இன்னுமதிக உதவி

சீரழிந்துவரும் உலக நிலைமைகள், நாம் “மகா உபத்திரவம்” ஆரம்பிக்கப்போகும் காலத்தில், மிக மோசமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதற்கு தெளிவான அத்தாட்சியாகும். இப்போதே, எல்லா தேசத்திலிருந்தும் இனத்திலிருந்தும் பாஷைக்காரரிலுமிருந்தும் வரும் திரள் கூட்டம் ‘தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுக்கிறார்கள்.’ (வெளிப்படுத்துதல் 7:9, 13, 14; 2 தீமோத்தேயு 3:1-5) இயேசுவின் மீட்கும் பலியில் விசுவாசத்தை காட்டுவதன் மூலம் தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெறுகின்றனர். மேலும் கடவுளுடன் நண்பர்களாக நெருங்கிய உறவுக்குள் வருவதற்கும் உதவப்படுகிறார்கள்.​—யாக்கோபு 2:23.

ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்து, “[மகா உபத்திரவத்தில் தப்பிப் பிழைப்பவர்களை] ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார். தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.” (வெளிப்படுத்துதல் 7:17) அதன்பின் கிறிஸ்து பிரதான ஆசாரியராக தம் கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவார். கடவுளுடைய சிநேகிதர்கள் ஆவிக்குரிய பிரகாரமாயும், சரீரப்பிரகாரமாயும், மனதின் பிரகாரமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் ‘ஜீவத்தண்ணீருள்ள ஊற்றிலிருந்து’ முழுமையாக நன்மை அடைய அவர் உதவுவார். பொ.ச. 33-⁠ல் இயேசு சிறு அளவில் ஆரம்பித்து, பரலோகத்திலிருந்து இது வரையாக தொடர்ந்து செய்து வரும் சேவையை அப்போது பரிபூரணமாக செய்து முடிப்பார்.

ஆகவே கடவுளும் கிறிஸ்துவும் நமக்கு செய்தவற்றிற்காகவும் செய்து வருபவற்றிற்காகவும் தொடர்ந்து ஆழ்ந்த மதிப்பைக் காட்டுங்கள். அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு ஊக்குவித்தார்: “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் . . . நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”​—பிலிப்பியர் 4:4, 6, 7.

பரலோகத்திலே நமக்குச் சகாயராக இருக்கும் இயேசு கிறிஸ்துவுக்கு நீங்கள் போற்றுதலைக் காட்டுவதற்கு ஒரு சிறந்த வழி இருக்கிறது. ஏப்ரல் 19, 2000 புதன்கிழமையன்று சூரிய அஸ்தமனத்திற்குப்பின் உலக முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூர கூடிவருவார்கள். (லூக்கா 22:19) கிறிஸ்துவின் மீட்கும் பலிக்கு உங்கள் போற்றுதலை அதிகப்படுத்துவதற்கு இது ஓர் அரிய சந்தர்ப்பம். இரட்சிப்பைப் பெறுவதற்கு கிறிஸ்து மூலமாக கடவுள் செய்திருக்கும் அருமையான ஏற்பாட்டிலிருந்து நீங்கள் எவ்வாறு நித்திய நன்மையடையலாம் என்பதை அந்தக் கூட்டத்தில் கேட்பதற்கு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். இந்த சிறப்புக் கூட்டத்தின் சரியான நேரத்தையும் இடத்தையும் தயவுசெய்து உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

[பக்கம் 7-ன் படம்]

கடவுளிடம் ஊக்கமாக ஜெபிப்பது எப்படி என்பதை இயேசு அறிவார்

[பக்கம் 8-ன் படங்கள்]

நம்மால் கையாள முடியாத பிரச்சினைகளை சமாளிக்க கிறிஸ்து உதவுவார்

[பக்கம் 9-ன் படம்]

அன்பான மூப்பர்கள் மூலம் கிறிஸ்து உதவுகிறார்