Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரே பரிகாரம்!

ஒரே பரிகாரம்!

ஒரே பரிகாரம்!

லாசரு என்ற பெயருடைய ஒரு மனிதனும் அவனுடைய சகோதரிகளான மார்த்தாளும் மரியாளும் பெத்தானியாவில் வசித்து வந்தார்கள்; இது எருசலேம் நகரத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஓர் ஊர். ஒருநாள் அவர்களுடைய நண்பரான இயேசு அங்கு இல்லாத சமயத்தில், லாசரு அதிக நோய்வாய்ப்பட்டு மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிடுகிறார். அவருடைய சகோதரிகள் மிகவும் கவலைப்படுகிறார்கள். இதைப் பற்றி இயேசுவுக்கு செய்தி சொல்லி அனுப்புகிறார்கள். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு இரண்டு நாள் கழித்து லாசருவைப் பார்க்க இயேசு புறப்படுகிறார். லாசருவை நித்திரையிலிருந்து எழுப்பப் போவதாக வழியில் தமது சீஷர்களிடம் கூறுகிறார். முதலில் சீஷர்களுக்குப் புரியவில்லை, அதனால், “லாசரு மரித்துப்போனான்” என்று இயேசு வெளிப்படையாகவே சொல்கிறார்.​—யோவான் 11:1-14.

லாசருவின் கல்லறையை இயேசு அடைந்தவுடன், முதலில் கல்லறையின் வாயிலை மூடியிருக்கும் கல்லை அகற்றும்படி சொல்கிறார். பின்பு சத்தமாக ஜெபித்துவிட்டு, ‘லாசருவே, வெளியே வா!’ என்று கட்டளையிடுகிறார். உடனே லாசரு வெளியே வருகிறார். ஆம், மரித்து நான்கு நாட்கள் ஆகியிருந்த இந்த மனிதர் உயிர்த்தெழுப்பப்பட்டார்.​—யோவான் 11:38-44.

உயிர்த்தெழுதல்தான் மரணத்திற்கு நம்பகமான ஒரே பரிகாரம் என்பதை லாசருவைப் பற்றிய இந்தப் பதிவு காட்டுகிறது. ஆனால், லாசரு உயிர்த்தெழுப்பப்பட்ட இந்த அற்புதம் உண்மையிலேயே நடந்ததா? பைபிள் இதை ஓர் உண்மைச் சம்பவமாக குறிப்பிடுகிறது. யோவான் 11:1-44-⁠ல் உள்ள பதிவை வாசித்துப் பாருங்கள்; அப்பொழுது, அதிலுள்ள விவரங்கள் எவ்வளவு தத்ரூபமானவை என்று தெரிந்துகொள்வீர்கள். அது நடந்ததை நீங்கள் மறுக்க முடியுமா? அப்படியானால், இயேசு கிறிஸ்துதாமே உயிர்த்தெழுந்ததைப் பற்றிய அற்புதம் உட்பட, பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள எல்லா அற்புதங்களும் உண்மையிலேயே நிகழ்ந்தனவா என்பதைக் குறித்து சந்தேகிக்கச் சொல்லுமே. “கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்” என பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:17) உயிர்த்தெழுதல் என்பது ஓர் அடிப்படை பைபிள் போதகம். (எபிரெயர் 6:1, 2) என்றாலும், “உயிர்த்தெழுதல்” என்ற இந்த வார்த்தை எதை அர்த்தப்படுத்துகிறது?

“உயிர்த்தெழுதல்” என்றால் என்ன?

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், “உயிர்த்தெழுதல்” என்ற வார்த்தை 40 தடவைக்கும் மேல் வருகிறது. “மீண்டும் எழுந்து நிற்பது” என்பதே இதற்குரிய கிரேக்க வார்த்தையின் நேர்பொருள். இதற்கு ஒப்பான எபிரெய வார்த்தை “இறந்தோர் மீண்டும் உயிர்பெறுவதைக்” குறிக்கிறது. ஒருவர் இறந்தபின் எது உயிர்த்தெழுப்பப்படுகிறது? அதே உடலாக இருக்க முடியாது, அது அழுகி மண்ணோடு மண்ணாகிவிடுகிறது. ஒருவருடைய அதே உடல் அல்ல, ஆனால் இறந்த அதே நபர் உயிர்த்தெழுப்பப்படுகிறார். ஆகவே உயிர்த்தெழுதல் என்பது தனிநபருடைய வாழ்க்கைப் போக்கை​—⁠அவருடைய குணங்களை, அவரைப் பற்றிய சரித்திரத்தை, அவருடைய அடையாளத்தைப் பற்றிய எல்லா நுட்பவிவரங்களை​—⁠மீண்டும் கொண்டுவருவதைக் குறிக்கிறது.

பரிபூரண ஞாபக சக்தியுடைய யெகோவா தேவனுக்கு இறந்தவர்களுடைய வாழ்க்கைப் போக்கை நினைவுகூருவது ஒரு பிரச்சினையே அல்ல. (ஏசாயா 40:26) யெகோவாவே உயிரின் ஊற்றுமூலராக இருப்பதால், மரித்துபோன அந்த நபருக்கு புதிய உடல் கொடுத்து அவரை மீண்டும் உயிருக்குக் கொண்டுவருவது சாதாரண காரியம். (சங்கீதம் 36:9) அதோடு, இறந்தோரை உயிர்த்தெழுப்ப யெகோவா தேவனுக்கு ‘வாஞ்சை இருப்பதாக’​—⁠மிகுந்த ஆவலும் ஏக்கமும் இருப்பதாக​—⁠பைபிள் கூறுகிறது. (யோபு 14:14, 15, NW) ஒருவரை மீண்டும் உயிருக்குக் கொண்டுவர அவருக்கு வல்லமை மட்டுமல்லாமல் ஆசையும் இருப்பதற்காக நாம் எவ்வளவு சந்தோஷப்பட வேண்டும்!

இறந்தவர்களை உயிர்த்தெழுப்புவதில் இயேசு கிறிஸ்துவும் முக்கிய பாகம் வகிக்கிறார். இயேசு தமது ஊழியத்தை ஆரம்பித்து ஓராண்டுக்கும் சற்றுப் பின்பு இவ்வாறு கூறினார்: “பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறது போல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.” (யோவான் 5:21) இறந்தோரை உயிர்த்தெழுப்பும் வல்லமையும் ஆவலும் இயேசு கிறிஸ்துவுக்கு இருப்பதை லாசருவின் அனுபவம் காட்டுகிறது, அல்லவா?

மரணத்திற்குப்பின் நமக்குள் இருக்கும் ஏதோவொன்று தொடர்ந்து உயிர் வாழ்கிறது என்ற கருத்தைப் பற்றியென்ன? சொல்லப்போனால், உயிர்த்தெழுதல் போதனையும் மனித ஆத்துமா அல்லது ஆவி அழியாது என்ற கருத்தும் முரண்பாடாக இருக்கின்றன. நமக்குள் இருக்கும் ஏதோவொன்று தொடர்ந்து உயிர் வாழ்கிறதென்றால், ஏன் உயிர்த்தெழுதல் அவசியம்? லாசரு இறந்தபோது, அவர் ஓர் ஆவி உலகில் தொடர்ந்து உயிர் வாழ்வதாக அவருடைய சகோதரி மார்த்தாள் நம்பவில்லை. அவளுக்கு உயிர்த்தெழுதலில் விசுவாசம் இருந்தது. “உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்” என்று இயேசு அவளுக்கு உறுதி அளித்தபோது, “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்” என மார்த்தாள் கூறினாள். (யோவான் 11:23, 24) உயிர்த்தெழுந்த லாசரு, மரணத்திற்குப் பின் வாழ்ந்ததைப் பற்றிய எந்த அனுபவங்களையும் சொல்லவில்லை. அவர் மரித்த நிலையில் இருந்தார். “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என பைபிள் கூறுகிறது. “நீ போகிற பாதாளத்திலே [அதாவது, மனிதகுலத்தின் பொது பிரேதக்குழியிலே] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”​—பிரசங்கி 9:5, 10.

அப்படியானால், பைபிள் கூறுகிறபடி, உயிர்த்தெழுதலே இறந்தவர்களுக்கு ஒரே பரிகாரம். ஆனால், இறந்துபோன அநேக ஆட்களில், யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள், எங்கே உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?

யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?

‘பிரேதக்குழிகளிலுள்ள [“ஞாபகார்த்தக் கல்லறைகளிலுள்ள,” NW] அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்டு . . . எழும்பும் காலம் வரும்’ என்று இயேசு கூறினார். (யோவான் 5:28, 29) இந்த வாக்குறுதியின்படி, ஞாபகார்த்த கல்லறைகளில் இருப்பவர்கள், அதாவது யெகோவாவின் ஞாபகத்தில் இருப்பவர்கள், உயிர்த்தெழுப்பப்படுவார்கள். இப்பொழுது, கேள்வி என்னவென்றால், இறந்தவர்களில் யார் உண்மையிலேயே கடவுளுடைய ஞாபகத்தில் உயிர்த்தெழுதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்?

பைபிள் புத்தகமான எபிரெயர் 11-⁠ம் அதிகாரம், கடவுளுக்கு உண்மையுடன் சேவை செய்த ஆண்களையும் பெண்களையும் பற்றி பட்டியலிடுகிறது. இவர்களும் சமீப ஆண்டுகளில் இறந்த உண்மை ஊழியர்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். கடவுளுடைய நீதியின் தராதரங்களைப் பற்றி ஒருவேளை அறியாததால் அதைக் கடைப்பிடிக்க தவறிய மக்களைப் பற்றியென்ன? அவர்களும் கடவுளுடைய ஞாபகத்தில் இருக்கிறார்களா? ஆம், அவர்களில் அநேகர் இருக்கிறார்கள்; ஏனென்றால் பைபிள் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பார்கள்.’​—அப்போஸ்தலர் 24:⁠15.

என்றாலும், இதுவரை வாழ்ந்த அனைவருமே உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள். ‘சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதல் . . . இருக்கும்.’ (எபிரெயர் 10:26, 27) சிலர் மன்னிக்க முடியாத பாவங்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் ஹேடீஸில் (அதாவது, மனிதகுலத்தின் பொது பிரேதக்குழியில்) அல்ல, நித்திய அழிவுக்கு அடையாளமான கெஹன்னாவில் இருக்கிறார்கள். (மத்தேயு 23:33, NW) ஆனாலும், யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள், யார் உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள் என நியாயந்தீர்ப்பதைக் குறித்து நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த நியாயத்தீர்ப்பு கடவுளுடையது. யார் ஹேடீஸில் இருக்கிறார்கள், யார் கெஹன்னாவில் இருக்கிறார்கள் என்பதை அவரே அறிந்திருக்கிறார். நம்முடைய பங்கில், கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக வாழ வேண்டும்.

பரலோகத்திற்கு யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே மிகவும் தனிச்சிறப்புமிக்க உயிர்த்தெழுதல். “அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.” (1 பேதுரு 3:18) அவருக்குமுன் வேறெந்த மனிதனும் இத்தகைய உயிர்த்தெழுதலைப் பெறவில்லை. ‘பரலோகத்திலிருந்திறங்கின . . . மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை’ என இயேசுவே கூறினார். (யோவான் 3:13) சொல்லப்போனால், ஆவி ஆளாக உயிர்த்தெழுப்பப்பட்ட முதல் நபர் இயேசுவே. (அப்போஸ்தலர் 26:23) அவருக்குப்பின் மற்றவர்களும் ஆவி ஆட்களாக உயிர்த்தெழுப்பப்பட்டார்கள். “அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்” என பைபிள் கூறுகிறது.​—1 கொரிந்தியர் 15:⁠23.

சிறு தொகுதியான ஆட்கள்​—⁠‘கிறிஸ்துவுக்குரியவர்கள்’​—⁠ஒரு விசேஷ நோக்கத்திற்காக பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். (ரோமர் 6:5) அவர்கள் கிறிஸ்துவுடன்கூட ‘பூமியின்மீது ராஜாக்களாக’ ஆட்சி செய்வார்கள். (வெளிப்படுத்துதல் 5:9, 10) அதோடு, அவர்கள் ஆசாரியர்களாகவும் சேவை செய்வார்கள், அதாவது முதல் மனிதனாகிய ஆதாமிடமிருந்து மனிதகுலம் ஆஸ்தியாக பெற்ற பாவத்தின் விளைவுகளை நீக்குவதில் இவர்களுக்கும் பங்குண்டு. (ரோமர் 5:12) கிறிஸ்துவுடன் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் ஆட்சி செய்பவர்கள் 1,44,000 பேர் ஆவர். (வெளிப்படுத்துதல் 14:1, 3) அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுகையில் எப்படிப்பட்ட உடலைப் பெறுவார்கள்? “ஆவிக்குரிய சரீரம்” கொடுக்கப்படும் என பைபிள் கூறுகிறது. அப்பொழுதுதான் பரலோகத்தில் அவர்கள் வாழ முடியும்.​—1 கொரிந்தியர் 15:34, 38, 42-45.

இவர்கள் எப்பொழுது பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? ‘கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது’ என 1 கொரிந்தியர் 15:23 (NW) பதில் அளிக்கிறது. கிறிஸ்துவின் பிரசன்னமும் இந்தப் பொல்லாத ‘உலகத்தின் முடிவும்’ 1914-⁠ல் ஆரம்பித்தது என்பதை அதுமுதல் நடைபெற்றுவரும் உலக சம்பவங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. (மத்தேயு 24:3-7) ஆகவே, உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுவது ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது என்ற முடிவுக்கு வருவது நியாயமாக இருக்கிறது. அப்படியென்றால், அப்போஸ்தலர்களும் ஆரம்பகால கிறிஸ்தவர்களும் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டுவிட்டார்கள் என்பதை இது குறிக்கிறது. ஆனால், இந்த உயிர்த்தெழுதலை மனித கண்களால் காண முடியாது. பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்யும் உறுதியான நம்பிக்கையுடன்​—⁠கடவுள் தந்த நம்பிக்கையுடன்​—⁠இப்பொழுது உயிர்வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்களைப் பற்றியென்ன? அவர்கள் ‘ஒரு இமைப்பொழுதில்,’ அதாவது இறந்தவுடனே, உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (1 கொரிந்தியர் 15:51) திரளான ஜனங்கள் பூமியில் வாழ உயிர்த்தெழுப்பப்படுவதற்கு முன்பே இந்தச் சிறு தொகுதியினரான 1,44,000 பேர் உயிர்த்தெழுப்பப்படுவதால், இது “ஆரம்ப உயிர்த்தெழுதல்” என்றும் ‘முதலாம் உயிர்த்தெழுதல்’ என்றும் அழைக்கப்படுகிறது.​—பிலிப்பியர் 3:10, NW; வெளிப்படுத்துதல் 20:⁠6.

பூமியில் வாழ யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?

இறந்தவர்களில் பெரும்பாலோர் இந்தப் பூமியில் மீண்டும் உயிர்பெற்று வருவார்கள் என பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 37:29; மத்தேயு 6:10) உயிர்த்தெழுப்பப்பட்டவர்களைப் பற்றிய அற்புதமான தரிசனத்தை விவரித்தபோது, அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.” (வெளிப்படுத்துதல் 20:11-14) மனிதகுலத்தின் பொது பிரேதக்குழியான பாதாளத்தில் இருப்பவர்கள் கடவுளுடைய ஞாபகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மரணத்தின் கோரப்பிடியிலிருந்து விடுதலை செய்யப்படுவார்கள். (சங்கீதம் 16:10; அப்போஸ்தலர் 2:31) உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு செய்யும் செய்கைகளுக்குத் தக்கதாக ஒவ்வொருவரும் நியாயந்தீர்க்கப்படுவார்கள். பின்பு மரணத்திற்கும் பாதாளத்திற்கும் என்ன ஏற்படும்? அவை “அக்கினிக் கடலிலே” தள்ளப்படும்; அதாவது ஆதாமிடமிருந்து மனிதர் ஆஸ்தியாகப் பெற்ற மரணம் இனிமேல் அவர்களைப் பாதிக்காது.

அன்பானவர்களை மரணத்தில் இழந்தவர்களுக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை எந்தளவு மகிழ்ச்சியான எதிர்பார்ப்பைத் தருகிறது என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! நாயீன் ஊர் விதவையின் ஒரே மகனை இயேசு உயிர்த்தெழுப்பியபோது, அவள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள்! (லூக்கா 7:11-17) இயேசு உயிர்த்தெழுப்பிய 12-வயது சிறுமியின் பெற்றோர்களுடைய உணர்ச்சிகளைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘உடனே அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.’ (மாற்கு 5:21-24, 35-42; லூக்கா 8:40-42, 49-56) கடவுளுடைய புதிய உலகில், அன்பானவர்களை வரவேற்பது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.

உயிர்த்தெழுதலைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வது இப்பொழுது நமக்கு எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தலாம்? “பெரும்பாலோர் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள், அதைப் பற்றி சிந்திப்பதையே தவிர்க்கிறார்கள்” என தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. ஏன்? பெரும்பாலோருக்கு மரணம் என்பது ஒரு புரியாப் புதிராகவே இருக்கிறது​—⁠அதனால் புரியாத ஒன்றைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறந்தவர்களின் உண்மையான நிலையைப் பற்றி தெரிந்துகொள்வதும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பெறுவதும் ‘கடைசி சத்துருவான மரணத்தை’ தைரியமாக எதிர்ப்பட உதவும். (1 கொரிந்தியர் 15:26) அதோடு, நெருங்கிய நண்பரையோ உறவினரையோ மரணத்தில் இழக்கும்போது உண்டாகும் வேதனையை தாங்கிக்கொள்ளவும் உதவும்.

எப்பொழுது மக்கள் பூமியில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? இன்றைக்கு இந்த உலகத்தில் வன்முறையும் சண்டை சச்சரவும் இரத்தம் சிந்துதலும் தூய்மைக்கேடும் நிறைந்திருக்கிறது. இறந்தவர்கள் இப்படிப்பட்ட ஓர் இடத்தில் உயிர்த்தெழுந்து வந்தால், அவர்கள் அனுபவிக்கும் எந்தவொரு மகிழ்ச்சியும் தற்காலிகமான ஒன்றாகவே இருக்கும். என்றாலும், சாத்தானுடைய கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தற்போதைய உலகிற்கு விரைவில் ஒரு முடிவைக் கொண்டுவருவதாக படைப்பாளர் வாக்குறுதி அளித்திருக்கிறார். (நீதிமொழிகள் 2:21, 22; தானியேல் 2:44; 1 யோவான் 5:19) இந்தப் பூமிக்கான கடவுளுடைய நோக்கம் சீக்கிரத்தில் நிறைவேறப்போகிறது. அதன்பின், கடவுள் உருவாக்கும் சமாதானமான புதிய உலகில், இப்பொழுது மரணம் எனும் நித்திரையில் இருக்கும் கோடிக்கணக்கானோர் தங்களுடைய கண்களைத் திறப்பார்கள்.

[பக்கம் 7-ன் படம்]

இறந்தவர்களில் பெரும்பாலோர் இந்தப் பூமியில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்