Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மரணம் அச்சந்தரும் நிஜம்!

மரணம் அச்சந்தரும் நிஜம்!

மரணம்—அச்சந்தரும் நிஜம்!

“மனிதன் பிறந்ததுமுதல் எந்தக் கணத்திலும் இறக்கும் சாத்தியம் இருக்கிறது” என பிரிட்டிஷ் சரித்திராசிரியர் ஆர்னால்டு டாயின்பீ எழுதினார். அவர் மேலும் இவ்வாறு எழுதினார்: “தவிர்க்க முடியாத இந்தச் சாத்தியம் ஒருநாள் நிஜமாகிறது.” அன்பான குடும்ப அங்கத்தினரையோ நெருங்கிய நண்பரையோ மரணம் தாக்கும்போது எவ்வளவு துக்கம்!

மரணம் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதருக்கு அச்சந்தரும் நிஜமாகவே இருந்து வந்திருக்கிறது. நமது பாசத்திற்கும் நேசத்திற்குமுரியவர் மரிக்கும்போது, நாம் நிர்க்கதியாய் நிற்பது போன்ற ஓர் உணர்வு நம்மைக் கவ்விக்கொள்கிறது. இந்தத் துயரம் எவ்வித பாகுபாடுமின்றி எல்லாரையும் வாட்டுகிறது, யாரையும் விட்டுவைப்பதில்லை. “துயரம் நம் அனைவரையும் மீண்டும் சிறுபிள்ளைகளாக ஆக்கிவிடுகிறது​—⁠படிப்பறிவில்லாத பாமரர்களிடமும் சரி அறிவுஜீவிகளிடமும் சரி, இதற்குப் பதில் இல்லை. மாபெரும் ஞானியும் ஒன்றும் அறியார்.” இப்படித்தான் 19-⁠ம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டுரையாளர் ஒருவர் எழுதினார். நாம் சிறுபிள்ளைகளைப் போல் மாறிவிடுகிறோம்​—⁠ஆதரவற்றவர்களாக, சூழ்நிலையை மாற்ற முடியாதவர்களாக ஆகிவிடுகிறோம். பண பலமிக்கவர்களாக இருந்தாலும் சரி அதிகார பலமிக்கவர்களாக இருந்தாலும் சரி, இந்த இழப்பை யாராலும் சரிக்கட்ட முடியாது. ஞானிகளிடமும் விடை இல்லை, அறிவுஜீவிகளிடமும் விடை இல்லை. பலவான்களும் அழுகிறார்கள், பலவீனர்களும் அழுகிறார்கள்.

பண்டைக்கால இஸ்ரவேல் அரசனான தாவீது தனது மகன் அப்சலோம் இறந்தபோது இப்படிப்பட்ட வேதனையைத்தான் அனுபவித்தார். அவன் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும், அவர் மிகவும் கலங்கி இவ்வாறு கதறினார்: “என் மகன் அப்சலோமே, என் மகனே! என் மகன் அப்சலோமே! உனக்குப் பதில் நான் இறந்திருக்கலாமே! அப்சலோமே! என் மகனே!” (2 சாமுவேல் 18:33, பொது மொழிபெயர்ப்பு) பலம் படைத்த எதிரிகளை அடிபணிய வைத்த வலிமைமிக்க அரசனால்கூட ஒன்றுமே செய்ய முடியவில்லை. தனது மகனுக்குப் பதிலாக, ‘கடைசி பகைவனாகிய சாவுக்கு’ முன் தானே சரணடைய விரும்பினார்.​—1 கொரிந்தியர் 15:⁠26, பொ.மொ.

மரணத்திற்குப் பரிகாரம் உண்டா? அப்படியானால், இறந்தவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? நம் அன்பானவர்களை மீண்டும் என்றாவது பார்ப்போமா? இந்தக் கேள்விகளுக்குப் பின்வரும் கட்டுரை பைபிளிலிருந்து பதில் அளிக்கிறது.