Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவை எப்போதும் நம்புங்கள்!

யெகோவாவை எப்போதும் நம்புங்கள்!

“ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்.”சங். 62:8.

1-3. பவுலுக்கு யெகோவாமீது ஏன் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது? (ஆரம்பப் படம்)

முதல் நூற்றாண்டில், ரோமிலிருந்த கிறிஸ்தவர்கள் உயிருக்கு பயந்து வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். ஏனென்றால், ரோமர்கள் அவர்களைப் பயங்கரமாக சித்திரவதை செய்தார்கள். கிறிஸ்தவர்கள்தான் ரோம் நகரத்திற்கு தீ வைத்தார்கள் என்று ரோமர்கள் அவர்கள்மீது பழி போட்டார்கள். அதோடு, கிறிஸ்தவர்கள் மற்றவர்களை வெறுக்கிறார்கள் என்றும் அவர்கள்மீது குற்றம் சுமத்தினார்கள். நிறைய பேரை கைது செய்தார்கள். சிலரை மிருகங்களுக்கு இரையாக போட்டார்கள். சிலரை கழுமரத்தில் அறைந்து, இரவு வெளிச்சத்திற்காக அவர்களை அப்படியே உயிரோடு எரித்தார்கள். நீங்கள் அப்போது ரோமில் இருந்திருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்!

2 இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில்தான், அப்போஸ்தலன் பவுலை ரோமில் இரண்டாவது முறையாக சிறையில் அடைத்திருந்தார்கள். கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் யாராவது தனக்கு உதவி செய்வார்களா என்று பவுல் ஒருவேளை யோசித்து இருக்கலாம். ஏனென்றால், “முதல் தடவை நான் என்னுடைய தரப்பில் வாதாடியபோது, யாரும் எனக்குத் துணை நிற்கவில்லை; எல்லாருமே என்னைக் கைவிட்டார்கள்” என்று பவுல் சொன்னார். இருந்தாலும் அந்த கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க, பவுலுக்கு தேவையான சக்தியை இயேசு மூலமாக யெகோவா கொடுத்தார். அதனால்தான், “எஜமானர் என் பக்கத்தில் நின்று, எனக்குப் பலமூட்டினார்” என்று பவுல் சொன்னார். “சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் விடுவிக்கப்பட்டேன்” என்று சொன்னார்.—2 தீ. 4:16, 17. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

3 அந்தக் கஷ்டமான சூழ்நிலையை சமாளிப்பதற்கு யெகோவா தனக்கு எப்படி உதவி செய்தார் என்று பவுல் யோசித்து பார்த்தார். அதனால், இப்போது இருக்கிற சூழ்நிலையை மட்டுமில்லாமல் இனி வரப்போகிற கஷ்டமான சூழ்நிலையையும் சமாளிக்க யெகோவா நிச்சயம் உதவி செய்வார் என்று பவுல் நம்பினார். அந்த நம்பிக்கை இருந்ததால்தான், ‘பொல்லாத செயல்கள் எல்லாவற்றிலிருந்தும் நம் எஜமானர் என்னை விடுவிப்பார்’ என்று சொன்னார். (2 தீ. 4:18) சகோதர சகோதரிகளால் உதவி செய்ய முடியாமல் போனாலும், யெகோவாவும் இயேசுவும் கண்டிப்பாக உதவி செய்வார்கள் என்று பவுல் நம்பினார். இந்த விஷயத்தில் பவுலுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

யெகோவாவை ஏன் நம்பலாம்?

4, 5. (அ) யாரால் உங்களுக்கு எல்லா சமயத்திலும் உதவி செய்ய முடியும்? (ஆ) யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்த நீங்கள் என்ன செய்யலாம்?

4 உங்களுக்கு ஒரு பெரிய கஷ்டம் வந்தபோது, உதவி செய்வதற்கு யாருமே இல்லாத மாதிரியோ, தனியாக இருக்கிற மாதிரியோ நீங்கள் எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா? ஒருவேளை உங்களுக்கு வேலை போயிருக்கலாம், பள்ளியில் ஏதாவது பிரச்சினை வந்திருக்கலாம், வியாதி வந்திருக்கலாம், அல்லது வேறு ஏதாவது பெரிய பிரச்சினை வந்திருக்கலாம். அந்த மாதிரி சமயத்தில் நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டு இருக்கலாம்; ஆனால் அவர்கள் உதவி செய்யாமல் போனபோது அது உங்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கலாம். ஒருவேளை மற்றவர்கள் நமக்கு உதவி செய்தாலும் சில பிரச்சினைகளை நம்மால் தீர்க்கவே முடியாது. அப்போது என்ன செய்வது? “கர்த்தரில் [யெகோவாவில்] நம்பிக்கையாயிரு” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 3:5, 6) இந்த விஷயத்தை நாம் நம்பலாமா? நிச்சயம் நம்பலாம். ஏனென்றால், யெகோவா அவருடைய மக்களுக்கு உதவி செய்ததைப் பற்றிய பதிவுகள் பைபிளில் நிறைய இருக்கின்றன.

5 அதனால், மற்றவர்கள் உங்களுக்கு உதவி செய்யாமல் போனாலும் அவர்கள்மீது கோபப்படாதீர்கள். பவுலை மாதிரியே நீங்களும் யெகோவாவை முழுமையாக நம்புங்கள். அப்போது யெகோவாவுக்கு உங்கள்மீது எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வீர்கள். அதோடு, அவர்மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை அதிகமாகும், அவரோடு இருக்கும் பந்தமும் பலப்படும்.

நம்பிக்கை ரொம்ப முக்கியம்

6. ஒரு பிரச்சினை வரும்போது யெகோவாவை முழுமையாக நம்புவது ஏன் கஷ்டமாக இருக்கலாம்?

6 ஒரு பெரிய பிரச்சினையை நினைத்து நீங்கள் ரொம்ப கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் நீங்கள் செய்திருக்கிறீர்கள், உதவிக்காக யெகோவாவிடம் ஜெபமும் செய்திருக்கிறீர்கள். இனிமேல் அந்தப் பிரச்சினையை யெகோவா பார்த்துக்கொள்வார் என்று உங்களால் நிம்மதியாக இருக்க முடியுமா? யெகோவாவை நீங்கள் முழுமையாக நம்பியிருக்கிறீர்கள் என்றால் உங்களால் நிச்சயம் நிம்மதியாக இருக்க முடியும்! (சங்கீதம் 62:8-ஐயும்; 1 பேதுரு 5:7-ஐயும் வாசியுங்கள்.) யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற பந்தம் பலப்பட வேண்டுமென்றால், அவர்மீது நம்பிக்கை வைப்பது ரொம்ப முக்கியம். ஆனால், அவர்மீது நம்பிக்கை வைப்பது நமக்கு ஒருவேளை கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால், நம்முடைய ஜெபங்களுக்கு யெகோவா எல்லா சமயத்திலும் உடனடியாக பதில் கொடுப்பது கிடையாது.—சங். 13:1, 2; 74:10; 89:46; 90:13; ஆப. 1:2.

7. யெகோவா ஏன் நம்முடைய ஜெபங்களுக்கு எல்லா சமயத்திலயும் உடனடியாக பதில் கொடுப்பது கிடையாது?

7 யெகோவா ஏன் நம்முடைய ஜெபங்களுக்கு எல்லா சமயத்திலும் உடனடியாக பதில் கொடுப்பது கிடையாது? யெகோவா நமக்கு அப்பாவை போலவும், நாம் அவருக்குப் பிள்ளைகளைப் போலவும் இருக்கிறோம் என்று பைபிள் சொல்கிறது. (சங். 103:13) ஒரு அப்பா தன்னுடைய பிள்ளை கேட்கிற எல்லாவற்றையும் கொடுக்க மாட்டார். சிலசமயம் பிள்ளை, ஒன்றை வேண்டும் என்று சொல்லும், பின்பு வேண்டாம் என்று சொல்லும். அதனால் பிள்ளைக்கு என்ன கொடுக்க வேண்டும், அதை எப்போது கொடுக்க வேண்டும் என்று அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். ஒருவேளை, பிள்ளை கேட்கும் எல்லாவற்றையும் அப்பா உடனே கொடுத்துவிட்டால், பிள்ளைக்கு அப்பா வேலைக்காரர் மாதிரி ஆகிவிடுவார். நம்முடைய பரலோக அப்பா யெகோவா, நம்மை ரொம்ப நேசிக்கிறார். அதோடு, அவர் ரொம்ப ஞானமுள்ளவராக இருப்பதால் நமக்கு என்ன கொடுக்க வேண்டும், அதை எப்போது கொடுக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால், யெகோவா நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கும்வரை காத்துக்கொண்டு இருப்பது நல்லது.—ஏசாயா 29:16; 45:9-ஐ ஒப்பிடுங்கள்.

8. யெகோவா நமக்கு என்ன வாக்கு கொடுத்திருக்கிறார்?

8 ஒரு பிரச்சினையை நம்மால் எந்தளவு தாங்கிக்கொள்ள முடியும் என்று யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். (சங். 103:14) அதை தாங்கிக்கொள்வதற்குத் தேவையான சக்தியை அவர் நமக்கு கொடுப்பார். சிலசமயம், ‘இதுக்கு மேல இந்த பிரச்சனைய என்னால தாங்கிக்கவே முடியாது’ என்று நாம் நினைக்கலாம். ஆனால், தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ‘சோதனைகளை அனுமதிக்க மாட்டேன்’ என்று யெகோவாவே வாக்கு கொடுத்திருக்கிறார். அதோடு, சோதனையை சகித்துக்கொள்வதற்கு ‘வழிசெய்வதாகவும்’ வாக்கு கொடுத்திருக்கிறார். (1 கொரிந்தியர் 10:13-ஐ வாசியுங்கள்.) நம்மால் எவ்வளவு சகிக்க முடியும் என்று யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும் என்ற விஷயத்தை நாம் உறுதியாக நம்பலாம்.

9. ஜெபம் செய்த பிறகும்கூட யெகோவா உடனடியாக பதில் கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வது?

9 நாம் ஜெபம் செய்த பிறகும்கூட யெகோவா உடனடியாக பதில் கொடுக்கவில்லை என்றால் நாம் பொறுமையாகக் காத்துக்கொண்டு இருக்க வேண்டும். நமக்கு உதவி செய்ய அவரும் ஆர்வமாகக் காத்துக்கொண்டு இருக்கிறார் என்ற விஷயத்தை எப்போதும் ஞாபகம் வைக்க வேண்டும். அதனால்தான் பைபிள் இப்படி சொல்கிறது: “உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.”—ஏசா. 30:18.

‘சிங்கத்தின் வாய்’

10-12. (அ) குடும்பத்தில் ஒருவர் மோசமான வியாதியால் அவதிப்படும்போது அவரை கவனித்துக்கொள்வது ஏன் கஷ்டமாக இருக்கலாம்? (ஆ) கஷ்டமான சூழ்நிலையில் யெகோவாவை நம்பி இருக்கும்போது நமக்கும் அவருக்கும் இருக்கிற பந்தம் என்ன ஆகும்? விளக்குங்கள்.

10 ஒரு பெரிய பிரச்சினை வரும்போது, நீங்களும் பவுலை மாதிரியே ‘சிங்கத்தின் வாயில்’ சிக்கிக்கொண்டது போல உணர்கிறீர்களா? (2 தீ. 4:17) இந்த மாதிரி நேரத்தில், நீங்கள் யெகோவாவை முழுமையாக நம்புவது ரொம்ப முக்கியம். உதாரணத்திற்கு, உங்கள் குடும்பத்தில் இருக்கிற யாராவது தீராத வியாதியால் ரொம்ப கஷ்டப்படலாம். நீங்கள் அவர்களைக் கவனித்துக்கொண்டு வரலாம். ஞானத்திற்காகவும் பலத்திற்காகவும் நீங்கள் யெகோவாவிடம் ஜெபம் செய்திருக்கலாம். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) நீங்கள் படும் கஷ்டத்தை யெகோவா பார்க்கிறார், உங்கள் சூழ்நிலையை அவர் புரிந்து வைத்திருக்கிறார் என்று நினைக்கும்போது மனதிற்கு நிம்மதியாக இருக்கும் இல்லையா? உங்கள் பிரச்சினையை சகித்துக்கொள்வதற்கும் அவருக்கு உண்மையாக இருப்பதற்கும் யெகோவா உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வார்.—சங். 32:8.

11 சிலசமயம் யெகோவா உங்களுக்கு உதவி செய்யாததுபோல் தெரியலாம். அது போதாது என்று, ஒவ்வொரு டாக்டரும் ஒவ்வொரு மாதிரி சொல்லலாம். சொந்தக்காரர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று நீங்கள் ஒருவேளை எதிர்பார்த்து இருக்கலாம். ஆனால், அவர்கள் உங்களுக்கு இன்னும் கஷ்டத்தைக் கொடுத்துக்கொண்டு இருக்கலாம். இந்த மாதிரி சமயங்களில் தைரியமாக இருப்பதற்கும் யெகோவாவிடம் நெருங்கி போவதற்கும் முயற்சி செய்யுங்கள். (1 சாமுவேல் 30:3, 6-ஐ வாசியுங்கள்.) யெகோவா உங்களுக்கு உதவி செய்ததை சில நாட்களுக்குப் பிறகு நீங்கள் உணரும்போது, யெகோவாவுக்கும் உங்களுக்கும் இருக்கிற பந்தம் பலப்படும்.

12 இது எவ்வளவு உண்மையென்று சகோதரி லின்டா அவர்களுடைய அனுபவத்தில் புரிந்துகொண்டார்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) லின்டாவின் அப்பா-அம்மா ரொம்ப முடியாமல் இருந்தார்கள். அவர்கள் சாகும்வரை லின்டாதான் பார்த்துக்கொண்டார். லின்டா இப்படி சொல்கிறார்: “இந்த மாதிரி சூழ்நிலையில எனக்கும், என் கணவருக்கும், என் தம்பிக்கும் என்ன செய்றதுனே தெரியல. சில நேரங்கள்ல எங்களுக்கு உதவி செய்றதுக்கு யாருமே இல்லாத மாதிரி உணர்ந்தோம். ஆனா, இப்போ யோசிச்சு பார்த்தா யெகோவா எங்களுக்கு எப்பவும் துணையா இருந்திருக்கார்னு புரிஞ்சுக்கிட்டோம். என்ன செய்றதுன்னே தெரியாம இருந்தப்போ யெகோவா எங்களை பலப்படுத்தி இருக்கார், எங்களுக்கு தேவையானதை எல்லாம் கொடுத்து இருக்கார்.”

13. யெகோவாமீது நம்பிக்கை வைத்ததால் துயரமான சம்பவங்களை ராண்டா எப்படி சமாளித்தார்?

13 துயரமான சம்பவங்களை சமாளிப்பதற்கு யெகோவாமீது அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். இதற்கு ராண்டா என்ற சகோதரியுடைய அனுபவத்தைப் பார்க்கலாம். அவருடைய கணவர் ஒரு யெகோவாவின் சாட்சி கிடையாது. ராண்டாவை விவாகரத்து செய்ய வேண்டுமென்று அவர் முடிவு செய்திருந்தார். அதேசமயத்தில், ராண்டாவுடைய தம்பிக்கு லூப்பஸ் (lupus) என்ற மோசமான வியாதி இருக்கிறது தெரியவந்தது. சில மாதங்களுக்குப் பிறகு, அவருடைய தம்பியின் மனைவி இறந்துவிட்டார். இந்த சோகத்தை எல்லாம் அவர் சமாளித்து, அதிலிருந்து மீண்ட பிறகு ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். ஆனால், பயனியர் ஊழியம் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே, அவருடைய அம்மாவும் இறந்துவிட்டார். இத்தனை பிரச்சினைகளையும் ராண்டாவால் எப்படி சமாளிக்க முடிந்தது? அவர் சொல்வதைக் கவனியுங்கள்: “நான் யெகோவாகிட்ட ஒவ்வொரு நாளும் ஜெபம் செஞ்சேன். சின்ன சின்ன தீர்மானங்கள் எடுக்குறதுக்கு முன்னாடிகூட அவர்கிட்ட ஜெபம் செஞ்சேன். அதனால யெகோவாவை ஒரு நிஜமான நபரா என்னால பார்க்க முடிஞ்சது. என்னையோ மனுஷங்களையோ நம்புறதுக்கு பதிலா யெகோவாவை மட்டும்தான் நம்பணும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அந்த சமயத்துல எனக்கு தேவையான எல்லாத்தையும் யெகோவா பார்த்துக்கிட்டார். யெகோவா எப்பவும் என்கூடவே இருந்ததை என்னால உணர முடிஞ்சது.”

குடும்பத்தில் இருக்கும் ஒருவர் சபைநீக்கம் செய்யப்படும்போது யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது நமக்கு சவாலாக இருக்கலாம் (பாரா 14-16)

14. குடும்பத்தில் இருக்கிற ஒருவர் சபை நீக்கம் செய்யப்பட்டார் என்றால், ஒரு கிறிஸ்தவர் என்ன நம்பிக்கையோடு இருக்கலாம்?

14 இன்னொரு சூழ்நிலையையும் யோசித்துப் பாருங்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கிற ஒருவர் சபைநீக்கம் செய்யப்படுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். சபைநீக்கம் செய்யப்படுகிறவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிற ஆலோசனை உங்களுக்கு நன்றாகத் தெரியும். (1 கொ. 5:11; 2 யோ. 10) இருந்தாலும், அந்த நபரை நீங்கள் நேசிப்பதால் பைபிள் சொல்கிறபடி நடப்பது உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். ஒருவேளை, பைபிள் சொல்கிறபடி எல்லாம் நடக்க முடியாது என்றுகூட நீங்கள் நினைக்கலாம். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இருந்தாலும், பைபிள் ஆலோசனைக்கு கீழ்ப்படிய யெகோவா நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வார் என்று நம்புகிறீர்களா? யெகோவாவிடம் நெருங்கி போவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்குமென்று நினைக்கிறீர்களா?

15. ஆதாம் ஏன் யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் போனான்?

15 முதல் மனிதன் ஆதாமை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் போனாலும் தொடர்ந்து உயிர் வாழ முடியும் என்று ஆதாம் நினைத்திருப்பானா? இல்லை, நினைத்திருக்க மாட்டான்! ஏனென்றால், “ஆதாம் ஏமாற்றப்படவில்லை” என்று பைபிள் சொல்கிறது. (1 தீ. 2:14) அப்படியென்றால், ஆதாம் ஏன் யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் போனான்? யெகோவாவைவிட அவனுடைய மனைவியைத்தான் ஆதாம் அதிகமாக நேசித்தான். அதனால் அவள் கொடுத்த பழத்தை அவன் சாப்பிட்டான். யெகோவா சொல்வதைக் கேட்பதற்குப் பதிலாக அவனுடைய மனைவி சொல்வதைத்தான் ஆதாம் கேட்டான்.—ஆதி. 3:6, 17.

16. நாம் யாரை அதிகமாக நேசிக்க வேண்டும், ஏன்?

16 ஆதாமுடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? யெகோவாவைவிட குடும்பத்தில் இருக்கிறவர்களை அதிகமாக நேசிக்கக் கூடாது என்று தெரிந்துகொள்கிறோம். (மத்தேயு 22:37, 38-ஐ வாசியுங்கள்.) நாம் யெகோவாவை அதிகமாக நேசித்தால், குடும்பத்தில் இருக்கிறவர்கள் யெகோவாவை சேவிப்பதற்கு நம்மால் உதவி செய்ய முடியும். அவர்கள் இப்போது யெகோவாவை சேவித்தாலும் சரி சேவிக்காமல் இருந்தாலும் சரி, அவர்களுக்கு நம்மால் உதவி செய்ய முடியும். அதனால், யெகோவாவை அதிகமாக நேசியுங்கள். அவர்மீது இன்னும் அதிகமாக நம்பிக்கை வையுங்கள். சபைநீக்கம் செய்யப்பட்டவரை நினைத்து உங்களுக்கு வேதனையாக இருக்கிறதா? அப்படியிருக்கிறது என்றால், உங்கள் மனதில் இருக்கிற எல்லாவற்றையும் யெகோவாவிடம் கொட்டிவிடுங்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (ரோ. 12:12; பிலி. 4:6, 7) யெகோவாவிடம் இன்னும் அதிகமாக நெருங்கியிருங்கள். அப்போது, யெகோவாவை முழுமையாக நம்புவீர்கள்; அவருக்கு கீழ்ப்படியும்போது எப்போதுமே நல்லதுதான் நடக்கும் என்று தெரிந்துகொள்வீர்கள்.

நீங்கள் என்ன செய்யலாம்?

நற்செய்தியைப் பற்றி மற்றவர்களுக்கு மும்முரமாக சொல்லுங்கள் (பாரா 17)

17. நற்செய்தியை மற்றவர்களுக்கு மும்முரமாக சொல்லும்போது யெகோவா என்ன செய்வார் என்று நாம் எதிர்பார்க்கலாம்?

17 பவுல் ஏன் “சிங்கத்தின் வாயிலிருந்து” காப்பாற்றப்பட்டார்? ‘என் மூலம் பிரசங்க வேலை முழுமையாய் நிறைவேற்றப்படுவதற்காகவும், எல்லாத் தேசத்தாரும் அந்தச் செய்தியைக் கேட்பதற்காகவும் சிங்கத்தின் வாயிலிருந்து நான் விடுவிக்கப்பட்டேன்’ என்று பவுலே சொன்னார். (2 தீ. 4:17) யெகோவா நம்மிடமும் “நற்செய்தியை” பிரசங்கிக்கும் வேலையை ஒப்படைத்து இருக்கிறார். நாம் அவருடைய ‘சக வேலையாட்களாக’ இருக்கிறோம் என்று அவர் சொல்கிறார். (1 தெ. 2:4; 1 கொ. 3:9) அதனால், நாம் முடிந்தளவு நற்செய்தியைப் பற்றி மற்றவர்களுக்கு மும்முரமாக சொல்ல வேண்டும். அப்படி செய்யும்போது, யெகோவா நமக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுப்பார் என்று நம்புவோம். (மத். 6:33) அதுமட்டுமில்லாமல், யெகோவா நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கும்வரை பொறுமையாகவும் இருப்போம்.

18. யெகோவாவை நம்புவதற்கும் அவரோடு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்துவதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும்?

18 அதனால் ஒவ்வொரு நாளும், யெகோவாவிடம் இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்திக்கொண்டே இருங்கள். ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால் அப்படியே சோர்ந்து போய்விடாதீர்கள். யெகோவாவிடம் நெருங்கி போவதற்கான வாய்ப்பாக அதை நினைத்துக்கொள்ளுங்கள். பைபிளை படியுங்கள், படித்த விஷயங்களை ஆழமாக யோசித்துப் பாருங்கள். யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். அவருடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களுக்கு மும்முரமாக சொல்லுங்கள். இப்படி செய்யும்போது, இப்போது இருக்கிற பிரச்சினையை மட்டுமில்லாமல் இனிமேல் வரப்போகும் பிரச்சினையையும் உங்களால் சமாளிக்க முடியும். அதற்கு யெகோவா நிச்சயம் உதவி செய்வார் என்று நீங்கள் நம்பிக்கையாக இருக்கலாம்!

^ பாரா. 2 பவுல் நிஜமாகவே ‘சிங்கத்தின் வாயில்’ சிக்கியிருக்கலாம். அல்லது, சிங்கத்தின் வாயில் மாட்டிக்கொண்டது போன்ற கஷ்டங்களை அனுபவித்திருக்கலாம்.

^ பாரா. 10 வியாதியால் கஷ்டப்படுகிறவர்களுக்கும் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கிற சில கட்டுரைகள்: காவற்கோபுரம் மே 15, 2010 பக். 17-19, டிசம்பர் 15, 2011 பக். 27-30; விழித்தெழு! பிப்ரவரி 8, 1997, மே 22, 2000.

^ பாரா. 12 பெயர்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன.

^ பாரா. 14சபைநீக்கம்—ஓர் அன்பான செயல்” என்ற கட்டுரையை இந்த பத்திரிகையில் பாருங்கள்.

^ பாரா. 16 குடும்பத்தில் இருக்கிற யாராவது யெகோவாவைவிட்டு விலகும்போது அந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கலாம் என்று தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரைகளைப் பாருங்கள்: காவற்கோபுரம் செப்டம்பர் 1, 2006 பக். 17-21; ஜனவரி 15, 2007 பக். 17-20.