Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆவலோடு காத்திருங்கள்!

ஆவலோடு காத்திருங்கள்!

“அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு.”—ஆப. 2:3.

பாடல்கள்: 128, 45

1, 2. யெகோவாவுடைய மக்கள் ரொம்ப நாளாக என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

யெகோவா சொன்ன தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிச்சயம் நிறைவேறும் என்று அவருடைய மக்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள். உதாரணத்துக்கு, பாபிலோனியர்கள் யூதாவை அழிப்பார்கள் என்று எரேமியா காத்திருந்தார். அவர் எதிர்பார்த்தது கி.மு. 607-ல் நடந்தது. (எரே. 25:8-11) யெகோவா கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறும் என்று மீகாவும் எதிர்பார்த்தார். அதனால்தான், “நானோ யெகோவாவுக்காக எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்” என்று சொன்னார். (மீ. 7:7, NW ) நாடுகடத்தப்பட்ட யூதர்கள் யூதாவுக்கு திரும்பி வருவார்கள் என்று ஏசாயா சொன்னார். “அவருக்கு [யெகோவாவுக்கு] காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” என்று சொன்னார். (ஏசா. 30:18) பல நூறு வருஷங்களாக, கடவுளுடைய மக்கள் மேசியா வருவார் என்றும் ஆவலோடு காத்திருந்தார்கள்.—லூக். 3:15; 1 பே. 1:10-12. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

2 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும் என்று நாமும் ஆவலோடு காத்திருக்கிறோம். அந்த அரசாங்கத்தின் ராஜா இயேசு, இந்த உலகத்தில் இருக்கும் கெட்ட மக்களை அழித்துவிட்டு கடவுளுடைய மக்களைக் காப்பாற்றுவார். கஷ்டங்களுக்கு எல்லாம் முடிவு கொண்டுவருவார். (1 யோ. 5:19) அதனால், யெகோவாவுடைய நாள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். அதற்காகத் தயாராகவும் இருக்க வேண்டும்.

3. சிலர் ஒருவேளை எப்படி யோசிக்கலாம்?

3 இந்தப் பூமியில், யெகோவாவுடைய நோக்கம் நிறைவேற வேண்டும் என்று நாம் ஆவலோடு காத்திருக்கிறோம். (மத். 6:10) முடிவு சீக்கிரம் வரும் என்று ரொம்ப நாளாகக் காத்திருக்கும் சிலர், ஒருவேளை இப்படி யோசிக்கலாம்: ‘இந்த உலகத்தோட முடிவுக்காக நாம ஏன் காத்துக்கிட்டு இருக்கணும்?’

ஏன் காத்திருக்க வேண்டும்?

4. நாம் தொடர்ந்து காத்திருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

4 முடிவு சீக்கிரம் வர வேண்டும் என்று நாம் காத்திருப்பது ரொம்ப முக்கியம். ஏனென்றால், “விழிப்புடன் இருங்கள்,” ‘விழித்திருங்கள்’ என்றெல்லாம் இயேசு அவருடைய சீடர்களுக்குக் கட்டளை கொடுத்தார். (மத். 24:42; லூக். 21:34-36) யெகோவாவுடைய அமைப்பு இந்த விஷயங்களை நமக்குத் தொடர்ந்து ஞாபகப்படுத்துகிறார்கள்: ‘யெகோவாவின் நாளை மனதில் வைத்து அதற்காக ஆவலோடு காத்திருங்கள்;’ புதிய உலகத்தைப் பற்றி யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதியை எப்போதும் ஞாபகம் வையுங்கள்.2 பேதுரு 3:11-13-ஐ வாசியுங்கள்.

5. கடவுளுடைய நாளுக்காக நாம் ஏன் ஆவலோடு காத்திருக்க வேண்டும்?

5 முதல் நூற்றாண்டில் இருந்தவர்கள் யெகோவாவுடைய நாளுக்காகக் காத்திருந்ததைவிட நாம் இன்னும் அதிக ஆவலோடு காத்திருக்க வேண்டும். ஏன்? இயேசு சொன்ன அடையாளங்களை வைத்து பார்க்கும்போது, 1914-லிருந்து அவர் பரலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதோடு, ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தில்,’ அதாவது கடைசி நாட்களில் நாம் வாழ்கிறோம் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இயேசு சொன்னது போலவே, உலகத்தின் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகின்றன. அதேசமயம், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி இந்த உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. (மத். 24:3, 7-14) கடைசி நாட்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று இயேசு சொல்லவில்லை. அந்த நாள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதனால், நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

6. முடிவு நெருங்க நெருங்க உலகத்தின் நிலைமைகள் இன்னும் மோசமாகும் என்று நாம் ஏன் எதிர்பார்க்கலாம்?

6 ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டம்’ என்பது உலக நிலைமைகள் இன்று இருப்பதைவிட எதிர்காலத்தில் இன்னும் மோசமாகும் ஒரு காலத்தைத் குறிக்கிறதா? “கடைசி நாட்களில்” அநியாயமும் அக்கிரமமும் இன்னும் அதிகமாகும் என்று பைபிள் சொல்கிறது. (2 தீ. 3:1, 13; மத். 24:21; வெளி. 12:12) அதனால், உலக நிலைமைகள் இப்போது இருப்பதைவிட எதிர்காலத்தில் இன்னும் மோசமாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

7. கடைசி நாட்களில் உலக நிலைமைகள் எப்படி இருக்கும் என்று மத்தேயு 24:37-39 சொல்கிறது?

7 ‘மிகுந்த உபத்திரவத்துக்கு’ முன்பு எல்லா நாடுகளிலும் போர் நடக்கும், எல்லாரும் வியாதியால் கஷ்டப்படுவார்கள், மக்களுக்கு சாப்பாடே இருக்காது என்றெல்லாம் சிலர் நினைக்கலாம். (வெளி. 7:14) ஒருவேளை அப்படி நடந்தால், பைபிளை நம்பாத ஆட்கள்கூட பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதைப் புரிந்துகொள்வார்கள். ஆனால், இதைப் பற்றி இயேசு என்ன சொன்னார்? கடைசி நாட்களில் நிறைய பேர் இதற்கு “கவனம் செலுத்தவே” மாட்டார்கள், அவர்களுடைய தினசரி வாழ்க்கையிலேயே மூழ்கியிருப்பார்கள் என்று அவர் சொன்னார். (மத்தேயு 24:37-39-ஐ வாசியுங்கள்.) இதிலிருந்து என்ன தெரிந்துகொள்ளலாம்? ‘மிகுந்த உபத்திரவத்துக்கு’ முன்பு உலக நிலைமைகள் மோசமாகும்தான். இருந்தாலும், முடிவு நெருங்கிவிட்டது என்று மக்கள் நம்பும் அளவுக்கு அது ரொம்ப மோசமாகும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது.—லூக். 17:20; 2 பே. 3:3, 4.

8. நாம் விழிப்புடன் இருப்பதால் எதை உறுதியாக நம்புகிறோம்?

8 இயேசுவைப் பின்பற்றுபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றால், கடைசி நாட்களைப் பற்றி இயேசு சொன்ன அடையாளங்கள் எல்லாம் அவர்களுக்கு தெளிவாகத் தெரிய வேண்டும். (மத். 24:27, 42) இயேசு சொன்னது போலவே, கடைசி நாட்களைப் பற்றிய அடையாளங்கள் 1914-லிருந்து நிறைவேறி வருகின்றன. அதனால், நாம் இப்போது ‘இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தில்,’ அதாவது, கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உறுதியாக நம்புகிறோம். சீக்கிரத்தில், சாத்தானுடைய உலகத்தை யெகோவா அழிக்கப் போகிறார். அதை எப்போது செய்ய வேண்டும் என்பதையும் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்.

9. முடிவு சீக்கிரம் வரும் என்று நாம் ஏன் தொடர்ந்து காத்திருக்க வேண்டும்?

9 இயேசுவுக்குக் கீழ்ப்படிவதால்தான் முடிவு சீக்கிரம் வரும் என்று தொடர்ந்து காத்திருக்கிறோம். அதோடு, கடைசி நாட்களைப் பற்றி இயேசு சொன்ன அடையாளங்கள் எல்லாம் நிறைவேறி வருவதால் அப்படி செய்கிறோம். கேட்கிற எல்லாவற்றையும் நாம் கண்மூடித்தனமாக நம்புவதால் அல்ல, பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி வருவதைப் பார்ப்பதால்தான் முடிவு சீக்கிரம் வரப்போகிறது என்று நம்புகிறோம். அதனால், அந்த நாளுக்காக நாம் தயாராக இருக்க வேண்டும், எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்?

10, 11. (அ) விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இயேசு ஏன் சீடர்களிடம் சொன்னார்? (ஆ) முடிவு சீக்கிரம் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டுமென்று இயேசு சொன்னார்? (ஆரம்பப் படம்)

10 பல வருஷங்களாக, நம்மில் நிறைய பேர் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்து வருகிறோம், அவருடைய நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம். இருந்தாலும், யெகோவாவுடைய நாள் சீக்கிரம் வரும் என்று தொடர்ந்து காத்திருக்க வேண்டும். சாத்தானுடைய உலகத்தை இயேசு அழிக்க வரும்போது நாம் தயாராக இருக்க வேண்டும். இயேசு அவருடைய சீடர்களிடம் என்ன சொன்னார் என்று கவனியுங்கள். “இதெல்லாம் நடக்கப்போகிற காலம் உங்களுக்குத் தெரியாததால் எச்சரிக்கையுடன் இருங்கள், விழிப்புடன் இருங்கள். ஒருவர் வீட்டைவிட்டு தூரதேசத்திற்குப் புறப்பட்டுப் போகும்போது தன் அடிமைகளுக்கு அதிகாரத்தையும் அவனவனுக்குரிய வேலையையும் கொடுத்துவிட்டு, விழிப்புடன் இருக்கும்படி வாயிற்காவலனுக்குக் கட்டளையிடுகிறார். ஆகவே, விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால் வீட்டு எஜமான் வரும் நேரம் மாலையா, நள்ளிரவா, சேவல் கூவும் நேரமா, அல்லது விடியற்காலையா என்பது உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வரும்போது, நீங்கள் தூங்கிக்கொண்டிருக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குச் சொல்வதை எல்லாருக்குமே சொல்கிறேன், விழிப்புடன் இருங்கள்.”—மாற். 13:33-37.

11 இயேசு, 1914-ல் ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பதை அவரைப் பின்பற்றியவர்கள் புரிந்துகொண்டதால் முடிவு சீக்கிரம் வரும் என்று நம்பினார்கள். அதனால், சுறுசுறுப்பாக ஊழியம் செய்தார்கள். ஆனால், இயேசு எப்போது வருவதாக சொன்னார்? ‘சேவல் கூவும் நேரத்திலோ விடியற்காலையிலோ’ வருவதாக சொன்னார். இயேசு வரும்போது, அவரைப் பின்பற்றியவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது? தொடர்ந்து ‘விழிப்புடன் இருக்க’ வேண்டியிருந்தது. ஒருவேளை நாம் பல வருஷங்களாகக் காத்திருக்கலாம். அதனால், முடிவு சீக்கிரத்தில் வராது என்றோ நாம் வாழும் காலத்தில் வராது என்றோ அர்த்தம் கிடையாது.

12. ஆபகூக் யெகோவாவிடம் என்ன கேட்டார், அதற்கு யெகோவா என்ன சொன்னார்?

12 ஆபகூக் தீர்க்கதரிசி, எருசலேமுடைய அழிவைப் பற்றி பிரசங்கித்தார்; அது அழியும் என்று பொறுமையாகக் காத்திருந்தார். இவருக்கு முன், நிறைய தீர்க்கதரிசிகள் பல வருஷங்களாக எருசலேமின் அழிவைப் பற்றி பிரசங்கித்து வந்தார்கள். ஆபகூக் வாழ்ந்த காலத்தில் அநியாயமும் அக்கிரமமும் ரொம்பவே அதிகமாக இருந்தது. அதனால், “கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்?” என்று ஆபகூக் யெகோவாவிடம் கேட்டார். அழிவு எப்போது வரும் என்று யெகோவா ஆபகூக்கிடம் சொல்லவில்லை. இருந்தாலும், “அது தாமதிப்பதில்லை” என்று வாக்குக் கொடுத்தார். அதோடு, “அதற்குக் காத்திரு” என்றும் சொன்னார்.ஆபகூக் 1:1-4; 2:3-ஐ வாசியுங்கள்.

13. ஆபகூக் எப்படி யோசித்திருக்கலாம், அப்படி யோசித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

13 எருசலேமின் அழிவுக்காகக் காத்திருந்த ஆபகூக் பொறுமையை இழந்துவிட்டதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ‘எருசலேம் அழியும்னு ரொம்ப வருஷமா காத்துக்கிட்டு இருக்கேன். ஆனா, அழிவு வர்றதுக்கு இன்னும் ரொம்ப நாள் ஆகும் போல. அதனால, நான் இனிமேல் அதை பத்தி பிரசங்கிக்க மாட்டேன். வேற யாராவது அந்த வேலையை செய்யட்டும்’ என்று அவர் சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? யெகோவாவுடைய ஆதரவை அவர் இழந்திருப்பார். அழிவு வரும்போது அவர் தயாராக இருந்திருக்க மாட்டார்; அவருடைய உயிரையும் இழந்திருப்பார்.

14. யெகோவா நமக்கு கொடுத்த எச்சரிப்புகளுக்காக நாம் ஏன் நன்றியோடு இருப்போம்?

14 இப்போது நீங்கள் புதிய உலகத்தில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்: கடைசி நாட்களைப் பற்றி யெகோவா சொன்ன எல்லா தீர்க்கதரிசனங்களும் அப்போது நிறைவேறி இருக்கும். அதையெல்லாம் பார்க்கும்போது, யெகோவாவை இன்னும் அதிகமாக நம்புவீர்கள். அவர் கொடுத்திருக்கிற மற்ற வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேறும் என்று நம்புவீர்கள். (யோசுவா 23:14-ஐ வாசியுங்கள்.) யெகோவா சரியான நேரத்தில் அழிவைக் கொண்டுவந்ததற்காக அவருக்கு நன்றியோடு இருப்பீர்கள். முடிவுவரை காத்திருக்க தொடர்ந்து எச்சரிப்புகள் கொடுத்ததற்காகவும் அவருக்கு நன்றி சொல்வீர்கள்.—அப். 1:7; 1 பே. 4:7.

சுறுசுறுப்பாக ஊழியம் செய்யுங்கள்

சுறுசுறுப்பாக ஊழியம் செய்கிறீர்களா? (பாரா 15)

15, 16. நாம் ஏன் இன்று அவசர உணர்வோடு ஊழியம் செய்ய வேண்டும்?

15 யெகோவாவுடைய சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவருடைய அமைப்பு தொடர்ந்து நம்மை ஞாபகப்படுத்துகிறார்கள். அதனால், யெகோவாவுக்கு சுறுசுறுப்பாக சேவை செய்கிறோம்; அப்படி செய்வது எந்தளவு முக்கியம் என்பதையும் புரிந்துகொள்கிறோம். இயேசு சொன்ன அடையாளங்கள் எல்லாம் இப்போதே நிறைவேறி வருகின்றன என்பதையும் முடிவு சீக்கிரத்தில் வரப்போகிறது என்பதையும் நாம் உறுதியாக நம்புகிறோம். அதனால், வாழ்க்கையில் நாம் யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்கிறோம். அவருடைய அரசாங்கத்தைப் பற்றி தொடர்ந்து சுறுசுறுப்பாகப் பிரசங்கிக்கிறோம்.—மத். 6:33; மாற். 13:10.

16 வில்ஹெல்ம் குஸ்தால்ப் (Wilhelm Gustloff) என்ற ஒரு பெரிய கப்பல் 1945-ல் கடலில் மூழ்கியது. அதில், ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துபோனார்கள். ஆனால், கொஞ்சம் பேர் மட்டும் உயிர் தப்பினார்கள். அதில் நம் சகோதரியும் அவருடைய கணவரும்கூட உயிர் தப்பினார்கள். அந்தக் கப்பல் மூழ்கும்போது, “என் பெட்டி போச்சு. என் நகை எல்லாம் கப்பலுக்குள்ளயே மாட்டிக்கிச்சு. எல்லாமே போச்சு!” என்று ஒரு பெண் அழுது புலம்பியது நம் சகோதரிக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் அந்தக் கப்பலில் இருந்த சிலர், மற்றவர்களுடைய உயிரைக் காப்பாற்றுவதில் மும்முரமாக இருந்தார்கள். இவர்களைப் போல, நாமும் மக்களுடைய உயிரைக் காப்பாற்ற அவசர உணர்வோடு ஊழியம் செய்ய வேண்டும். அதற்காக நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். ஏனென்றால், சாத்தானுடைய உலகம் ரொம்ப சீக்கிரத்தில் அழியப்போகிறது.

நல்ல தீர்மானம் எடுங்கள், ஊழியத்தை அவசர உணர்வோடு செய்யுங்கள் (பாரா 17)

17. இந்த உலகத்துக்கு முடிவு எப்போது வேண்டுமானாலும் வரும் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?

17 சாத்தானுடைய உலகத்துக்கு முடிவு நெருங்கிவிட்டதையும் பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி வருவதையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. “பத்துக் கொம்புகளும் மூர்க்க மிருகமும்” மகா பாபிலோனுக்கு எதிராக, அதாவது பொய் மதத்துக்கு எதிராக, செயல்பட போகிறது என்று வெளிப்படுத்துதல் 17:16 சொல்கிறது. யெகோவாவே இந்த ‘எண்ணத்தை அவர்களுடைய [பத்துக் கொம்புகளும் மூர்க்க மிருகமும்] இருதயங்களில் வைப்பார்.’ இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால், இதெல்லாம் நடப்பதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது என்று நாம் நினைக்கக் கூடாது. (வெளி. 17:17) சாத்தானுடைய இந்தப் பொல்லாத உலகத்துக்கு முடிவு சீக்கிரம் வரப்போகிறது. “பெருந்தீனியாலும் குடிவெறியாலும் வாழ்க்கைக் கவலைகளாலும் உங்கள் இருதயம் பாரமடையாதபடிக்கு உங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; இல்லாவிட்டால், எதிர்பாராத வேளையில் அந்த நாள் திடீரென உங்கள்மீது கண்ணியைப் போல் வரும்” என்று இயேசு சொன்னார். இந்த வார்த்தைகளை நாம் எப்போதும் மனதில் வைக்க வேண்டும். (லூக். 21:34, 35; வெளி. 16:15) யெகோவா அவருக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நிச்சயம் உதவி செய்வார். அதனால், நாம் விழிப்புடன் இருந்து யெகோவாவுக்கு சுறுசுறுப்பாக சேவை செய்ய வேண்டும்.—ஏசா. 64:4.

18. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?

18 “என் அன்புக் கண்மணிகளே, உங்களுடைய மகா பரிசுத்த விசுவாசத்தை அஸ்திவாரமாகக் கொண்டு உங்களைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்; கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலோடு ஜெபம் செய்யுங்கள். எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள். அதேசமயத்தில், முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்துகிற நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்திற்காக ஆவலோடு காத்திருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. சாத்தானுடைய உலகத்தின் அழிவுக்காகக் காத்திருக்கும் நாம் இந்த வார்த்தைகளை எப்போதும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். (யூ. 20, 21) புதிய உலகம் சீக்கிரம் வரும் என்று நாம் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 1 மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களையும் அதனுடைய நிறைவேற்றங்களையும் பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில், பக்கம் 200-ல் பாருங்கள்.