Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா உங்களோடு இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறீர்களா?

யெகோவா உங்களோடு இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறீர்களா?

“யெகோவாவின் ஊழியர்கள் அவருடைய வல்லமையைப் புரிந்துகொள்வார்கள்.”—ஏசா. 66:14, NW.

பாடல்கள்: 65, 26

1, 2. கடவுளைப் பற்றி சிலர் என்ன நினைக்கிறார்கள்?

நவம்பர் 2013-ல் ஒரு பெரிய புயல்காற்று பிலிப்பைன்ஸை தாக்கியது. புயல்காற்றினால் அங்கிருந்த நிறைய பகுதிகள் நாசமானதைப் பார்த்த ஒரு மேயர், ‘புயல் வந்தப்போ கடவுள் வேற எங்கயாவது போயிருக்கணும்’ என்று சொன்னார். மக்களுக்கு என்ன நடந்தாலும் அதைப் பற்றி கடவுளுக்குக் கொஞ்சம்கூட அக்கறை இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். நாம் என்ன செய்தாலும் சரி, கடவுள் அதை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார் என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள்.

2 இன்னும் சிலர், அவர்கள் செய்வதை எல்லாம் கடவுள் பார்ப்பதில்லை என்று நினைக்கிறார்கள். (ஏசா. 26:10, 11; 3 யோ. 11) அப்போஸ்தலர் பவுலுடைய காலத்தில் வாழ்ந்த மக்களும் அப்படித்தான் நினைத்தார்கள். அதனால்தான் பவுல் அவர்களைப் பற்றி இப்படி சொன்னார்: “கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு மனமில்லை . . . அவர்கள் எல்லா விதமான அநீதியும், பொல்லாத குணமும், கட்டுக்கடங்கா பேராசையும், தீமையும் நிறைந்தவர்களாக இருந்தார்கள்.”—ரோ. 1:28, 29.

3. (அ) நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்? (ஆ) யெகோவாவுடைய “கை” எதைக் குறிக்கிறது?

3 நாம் இந்த மக்களைப் போல கிடையாது; ஏனென்றால், நாம் செய்யும் எல்லாவற்றையும் கடவுள் பார்க்கிறார் என்பது நமக்கு தெரியும். ஆனால், யெகோவாவுக்கு நம்மீது அக்கறை இருக்கிறது என்று நம்புகிறோமா? கடவுளுடைய கரம், அதாவது “கை”, நம்மோடு இருப்பதைப் புரிந்துகொள்கிறோமா? பைபிளில் நிறைய இடங்களில், கடவுளுடைய “கை” என்பது அவருடைய வல்லமையைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தம்முடைய ஊழியர்களுக்கு உதவி செய்யவும், எதிரிகளைத் தோற்கடிக்கவும் யெகோவா அவருடைய வல்லமையைப் பயன்படுத்துகிறார். (உபாகமம் 26:8-ஐ வாசியுங்கள்.) அதோடு, சிலர் “கடவுளைக் காண்பார்கள் [அதாவது, பார்ப்பார்கள்]” என்று இயேசு சொன்னார். (மத். 5:8) இயேசு சொன்ன சிலரில் நாமும் ஒருவரா? நாம் எப்படிக் கடவுளை ‘பார்க்க’ முடியும்? யாரெல்லாம் கடவுளுடைய கரத்தை [அதாவது, வல்லமையை] பார்த்தார்கள், யாரெல்லாம் கடவுளுடைய கரத்தைப் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள சில பைபிள் உதாரணங்களைப் பார்க்கலாம். கடவுளுடைய கரம் நம்மோடு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள விசுவாசம் எப்படி நமக்கு உதவி செய்யும் என்பதையும் கற்றுக்கொள்ளலாம்.

கடவுளுடைய வல்லமையைப் புரிந்துகொள்ளாதவர்கள்

4. இஸ்ரவேலர்களின் எதிரிகள் யெகோவாவின் வல்லமையை ஏன் புரிந்துகொள்ளவில்லை?

4 பைபிள் காலத்தில், கடவுள் இஸ்ரவேலர்களுக்கு எப்படி உதவி செய்தார் என்பதைப் பார்க்கவும் அதைப் பற்றி கேள்விப்படவும் நிறைய பேருக்கு வாய்ப்பு இருந்தது. எகிப்தியர்களிடம் இருந்து இஸ்ரவேலர்களை விடுதலை செய்யவும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் ராஜாக்களைத் தோற்கடிக்கவும் யெகோவா நிறைய அற்புதங்களை செய்தார். (யோசு. 9:3, 9, 10) யெகோவா அவருடைய மக்களைக் காப்பாற்ற என்னவெல்லாம் செய்தார் என்பதை யோர்தானுக்கு மேற்கே இருந்த ராஜாக்கள் கேள்விப்பட்டார்கள், அதைப் பார்த்தார்கள். இருந்தாலும் அவர்கள் எல்லாரும் “ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலரோடும் யுத்தம்பண்ண ஏகமாய்க் கூடினார்கள்.” (யோசு. 9:1, 2) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் போர் செய்தபோது, யெகோவாவுடைய வல்லமையைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பு இருந்தது. யெகோவாவுடைய வல்லமையால், “ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது.” (யோசு. 10:13) ஆனால், இஸ்ரவேலர்களுடைய எதிரிகளின் ‘இருதயம் கடினமாவதற்கு’ யெகோவா அனுமதித்தார். அதனால், அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் போர் செய்தார்கள். (யோசு. 11:20) யெகோவா அவருடைய மக்களுக்காகப் போர் செய்கிறார் என்பதை அந்த எதிரிகள் ஏற்றுக்கொள்ளாததால் போரில் தோற்றுப்போனார்கள்.

5. ஆகாப் ராஜா எதைப் புரிந்துகொள்ளவில்லை?

5 யெகோவாவுக்கு இருந்த வல்லமையைப் புரிந்துகொள்ள கெட்ட ராஜாவான ஆகாபுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஒருசமயம் எலியா ஆகாபிடம், “என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும்” என்று சொன்னார். (1 இரா. 17:1) யெகோவாவுடைய கரம் எலியாவோடு இருந்ததால்தான் எலியா அப்படி சொன்னார். ஆனால், ஆகாப் அதைப் புரிந்துகொள்ளவில்லை. பின்பு, எலியா யெகோவாவிடம் ஜெபம் செய்தார். பரலோகத்தில் இருந்து நெருப்பை வர வைப்பதன் மூலம் யெகோவா அவருடைய ஜெபத்துக்குப் பதில் கொடுத்தார். இதையெல்லாம் ஆகாப் பார்த்தார். யெகோவா வறட்சியைப் போக்குவார் என்றும் மழையை வர வைப்பார் என்றும் எலியா ஆகாபிடம் சொன்னார். (1 இரா. 18:22-45) இதையெல்லாம் பார்த்தும்கூட ஆகாப் யெகோவாவுக்கு இருந்த வல்லமையைப் புரிந்துகொள்ளவில்லை. இந்த உதாரணங்களில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? யெகோவா அவருடைய வல்லமையை வெளிக்காட்டும்போது நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கடவுளுடைய வல்லமையைப் புரிந்துகொண்டவர்கள்

6, 7. கிபியோனியர்களும் ராகாபும் எதைப் புரிந்துகொண்டார்கள்?

6 கிபியோனியர்கள் மற்ற நாட்டு மக்களில் இருந்து வித்தியாசமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் யெகோவாவைப் பற்றியும் அவர் செய்த எல்லா விஷயங்களைப் பற்றியும் கேள்விப்பட்டார்கள். அதோடு, யெகோவாவுக்கு இருந்த வல்லமையைப் புரிந்துகொண்டார்கள். (யோசு. 9:3, 9, 10) அதனால், அவர்கள் இஸ்ரவேலர்களோடு சண்டை போடுவதற்குப் பதிலாக சமாதானமாக இருக்க விரும்பினார்கள். யெகோவாதான் இஸ்ரவேலர்களுக்காகப் போர் செய்தார் என்பதை அவர்கள் உண்மையிலேயே புரிந்துகொண்டார்கள்.

7 ராகாபும் யெகோவாவுடைய வல்லமையைப் புரிந்துகொண்டாள். அவள் ஒரு இஸ்ரவேல் பெண் கிடையாது. இருந்தாலும், யெகோவா அவருடைய மக்களை எகிப்திலிருந்து விடுதலை செய்ததைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாள். இரண்டு இஸ்ரவேல் வேவுகாரர்கள் அவளிடம் வந்தபோது, ‘கர்த்தர் [யெகோவா] உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுப்பார் என்று அறிவேன்’ என்று சொன்னாள். அவளையும் அவளுடைய குடும்பத்தையும் யெகோவா நிச்சயம் காப்பாற்றுவார் என்று ராகாப் நம்பினாள். யெகோவாமீது இருந்த விசுவாசத்தை ராகாப் செயலில் காட்டினாள். அப்படி செய்வது ஆபத்து என்று தெரிந்தும் ராகாப் அதை செய்தாள்.—யோசு. 2:9-13; 4:23, 24.

8. யெகோவாவுடைய வல்லமையை சில இஸ்ரவேலர்கள் எப்படிப் புரிந்துகொண்டார்கள்?

8 எலியா ஜெபம் செய்த பிறகு, பரலோகத்தில் இருந்து யெகோவாதான் நெருப்பை வர வைத்தார் என்று ஆகாப் நம்பவில்லை. ஆனால், அதைப் பார்த்த சில இஸ்ரவேலர்கள் யெகோவாதான் அதை செய்தார் என்று நம்பினார்கள். அதனால், “கர்த்தரே [யெகோவாவே] தெய்வம்” என்று சொன்னார்கள். (1 இரா. 18:39) யெகோவாவுடைய வல்லமையால்தான் இது நடந்தது என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்!

9. நம்மால் எப்படி யெகோவாவையும் அவருடைய வல்லமையையும் பார்க்க முடியும்?

9 நாம் சில நல்ல உதாரணங்களையும் கெட்ட உதாரணங்களையும் இதுவரை பார்த்தோம். இதிலிருந்து, ‘யெகோவாவைக் காண்பது’ அல்லது யெகோவாவுடைய வல்லமையைப் புரிந்துகொள்வது என்றால் என்ன என்று தெரிந்துகொண்டோம். யெகோவாவைப் பற்றியும் அவருடைய குணங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளும்போது, யெகோவாவின் வல்லமையை நம் ‘மனக்கண்களால்’ பார்க்க முடியும். (எபே. 1:18) அன்றும் சரி, இன்றும் சரி, யெகோவா அவருடைய மக்களுக்கு எப்படி உதவி செய்திருக்கிறார் என்பதை உண்மையுள்ள மக்கள் பார்த்திருக்கிறார்கள். இவர்களுடைய உதாரணங்களைப் படிக்கும்போது, நாமும் இவர்களைப் போலவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். கடவுள் இன்றும் மக்களுக்கு உதவி செய்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

கடவுளுடைய வல்லமை—இன்று

10. மக்களுக்கு யெகோவா உதவி செய்கிறார் என்பதற்கு என்னென்ன ஆதாரங்கள் இருக்கின்றன? (ஆரம்பப் படம்)

10 யெகோவா இன்றும் மக்களுக்கு உதவி செய்கிறார் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. கடவுளுடைய உதவிக்காக ஜெபம் செய்ததாகவும், அதற்குக் கடவுள் பதிலளித்ததாகவும் நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். (சங். 53:2) உதாரணத்துக்கு, பிலிப்பைன்ஸில் இருக்கும் ஒரு சின்ன தீவில் ஆலென் என்ற சகோதரர் ஊழியம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு பெண்ணை சந்தித்தார். ஆலென் ஒரு யெகோவாவின் சாட்சி என்று தெரிந்த உடனே அந்தப் பெண் அழ ஆரம்பித்துவிட்டார். அதைப் பற்றி ஆலென் இப்படி சொல்கிறார்: “யெகோவாவின் சாட்சிகள் யாராவது அவங்கள வந்து பார்க்கணும்னு அன்னைக்கு காலையிலதான் அவங்க யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சிருக்காங்க. சின்ன வயசுல அவங்க யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிச்சிருக்காங்க. கல்யாணத்துக்கு பிறகு, இந்த தீவுக்கு வந்துட்டதுனால அவங்களால தொடர்ந்து பைபிள் படிக்க முடியல. யெகோவா அவங்களோட ஜெபத்துக்கு உடனே பதில் கொடுத்ததை நினைச்சு அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.” பிறகு, ஒரு வருஷத்திற்குள் அந்த பெண் யெகோவாவுக்கு தன்னை அர்ப்பணித்தார்.

இன்று யெகோவா அவருடைய மக்களுக்கு உதவி செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறீர்களா? (பாராக்கள் 11-13)

11, 12. (அ) யெகோவா அவருடைய ஊழியர்களுக்கு எப்படி உதவி செய்கிறார்? (ஆ) ஒரு சகோதரிக்கு யெகோவா எப்படி உதவி செய்தார்?

11 கடவுளுடைய ஊழியர்கள் நிறைய பேர் ஒரு காலத்தில் சிகரெட், ஆபாசம், போதைப் பொருள் போன்ற கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்கள். அந்தப் பழக்கத்திலிருந்து வெளிவர யெகோவா உதவி செய்திருப்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். சிலர் அதைப் பற்றி இப்படி சொல்கிறார்கள்: ‘எங்களோட சொந்த சக்தியால் அந்த பழக்கத்தை எல்லாம் விடணும்னு திரும்ப திரும்ப முயற்சி செஞ்சோம். ஆனா, எங்களால முடியல. யெகோவாவோட உதவியால மட்டும்தான் அதை எல்லாம் விட முடிஞ்சது.’ அவர்கள் உதவிக்காக ஜெபம் செய்தபோது, யெகோவா அவர்களுக்கு ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ கொடுத்தார். அதனால்தான், அந்தக் கெட்ட பழக்கங்களிலிருந்து அவர்களால் வெளிவர முடிந்தது.—2 கொ. 4:7; சங். 37:23, 24.

12 சொந்த பிரச்சினைகளை சமாளிக்க யெகோவா அவருடைய ஊழியர்களுக்கு உதவி செய்கிறார். ஏமி என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். பசிபிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு சின்ன தீவில் மிஷனரிகளுக்கான வீட்டையும் ராஜ்ய மன்றத்தையும் கட்டும் நியமிப்பு ஏமிக்கு கிடைத்தது. அங்கு இருந்த கலாச்சாரம் வித்தியாசமாக இருந்தது. அடிக்கடி மின்சாரமும் தண்ணீரும் இல்லாமல் போய்விடும். தெருக்களில் எப்போதும் தண்ணீர் வெள்ளம்போல் ஓடும். வீட்டைப் பிரிந்து இருந்ததும் ஏமிக்கு கஷ்டமாக இருந்தது. அதோடு, அவர் ஒரு சின்ன ஹோட்டல் ரூமில் தங்கி இருந்தார். ஒருநாள், அவரோடு வேலை செய்துகொண்டிருந்த ஒரு சகோதரியிடம் கோபமாக பேசிவிட்டார். அப்படிப் பேசியதை நினைத்து அவர் ரொம்ப வருத்தப்பட்டார். அவருடைய ரூமுக்கு திரும்பிப்போனபோது அங்கு மின்சாரம் இல்லை. அப்போது, மனதில் இருந்ததை எல்லாம் கொட்டி உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தார். மின்சாரம் வந்த பிறகு, கிலியட் பட்டமளிப்பைப் பற்றிய ஒரு கட்டுரையை காவற்கோபுரத்தில் படித்தார். அவருக்கு இருந்த பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம் என்று அந்தக் கட்டுரையில் இருந்தது. ஏமி சொல்கிறார், “அன்னைக்கு ராத்திரி, யெகோவாவே என்கிட்ட பேசுன மாதிரி உணர்ந்தேன். அது, என்னோட நியமிப்பை தொடர்ந்து செய்றதுக்கு தேவையான உற்சாகத்தை கொடுத்தது.”—சங். 44:25, 26; ஏசா. 41:10, 13.

13. நற்செய்தியை சட்டப்பூர்வமாக்க யெகோவா அவருடைய மக்களுக்கு எப்படி உதவி செய்திருக்கிறார்?

13 ‘நற்செய்திக்காக வழக்காடி அதைச் சட்டப்பூர்வமாக்க’ யெகோவா அவருடைய மக்களுக்கு உதவி செய்திருக்கிறார். (பிலி. 1:7) உதாரணத்துக்கு, சில அரசாங்கங்கள் நம்முடைய பிரசங்க வேலையை நிறுத்த முயற்சி செய்தபோது நமக்கு இருக்கும் உரிமையை ஆதரித்துப் பேச நீதிமன்றங்களுக்குப் போயிருக்கிறோம். 2000-ல் இருந்து உலகம் முழுவதும் 268 உயர் நீதிமன்ற வழக்குகளில் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் மட்டும் (European Court of Human Rights) 24 வழக்குகளுக்கு வெற்றி கிடைத்திருக்கின்றன. யெகோவாவுடைய செயல்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.—ஏசா. 54:17; ஏசாயா 59:1-ஐ வாசியுங்கள்.

14. யெகோவா அவருடைய மக்களோடு இருக்கிறார் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் இருக்கிறது?

14 யெகோவா அவருடைய மக்களுக்கு உதவி செய்கிறார் என்பதற்கு மற்றொரு ஆதாரம், உலகம் முழுவதும் நடக்கும் பிரசங்க வேலை. (மத். 24:14; அப். 1:8) உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் ஒற்றுமையாக இருக்க யெகோவாதான் உதவி செய்கிறார். நம்மைப்போல் வேறு எந்த மக்களும் இவ்வளவு ஒற்றுமையாக இருக்க முடியாது! அதனால்தான் யெகோவாவை வணங்காத மக்கள்கூட, “உண்மையாகவே கடவுள் உங்கள் மத்தியில் இருக்கிறார்” என்று சொல்கிறார்கள். (1 கொ. 14:25) யெகோவா அவருடைய மக்களோடு இருக்கிறார் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. (ஏசாயா 66:14-ஐ வாசியுங்கள்.) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? யெகோவா உங்களோடு இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா?

யெகோவா உங்களோடு இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா?

15. சில நேரங்களில் யெகோவா நம்மோடு இருப்பதை நாம் ஏன் பார்ப்பதில்லை?

15 சில நேரங்களில், யெகோவா நம்மோடு இருப்பதை நாம் பார்ப்பதில்லை. அதற்குக் காரணம், நம்முடைய வாழ்க்கையில் வரும் பிரச்சினைகள்தான்! பிரச்சினைகள் வரும்போது, யெகோவா இதற்கு முன்பு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். ஒருசமயம், எலியாவுக்கும் இதுதான் நடந்தது. அவர் தைரியசாலியாக இருந்தாலும், யேசபேல் ராணி அவரை கொலை செய்ய நினைத்தபோது அவர் பயந்துபோனார். இதற்கு முன்பு யெகோவா அவருக்கு எப்படி உதவி செய்தார் என்பதை அவர் மறந்துவிட்டார். அவருக்கு ரொம்ப பயமாக இருந்ததால், ‘நான் சாகவேண்டும்’ என்று சொன்னார். (1 இரா. 19:1-4) உதவிக்காக எலியா என்ன செய்ய வேண்டியிருந்தது? அவர் யெகோவாவையே நம்பியிருக்க வேண்டியிருந்தது.—1 இரா. 19:14-18.

16. யெகோவா நமக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பதைப் பார்க்க நாம் என்ன செய்யலாம்?

16 யோபு பிரச்சினைகளிலேயே மூழ்கியிருந்ததால் தன்னுடைய சூழ்நிலையை யெகோவா பார்க்கும் விதமாகப் பார்க்கவில்லை. (யோபு 42:3-6) நாமும் பிரச்சினைகளின் காரணமாக யெகோவா நம்மோடு இருப்பதை பார்க்காமல் போய்விடலாம். அந்த சமயத்தில், யெகோவா நமக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பதைப் பார்க்க நாம் என்ன செய்யலாம்? நம்முடைய பிரச்சினைகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை ஆழ்ந்து யோசித்துப் பார்க்க வேண்டும். யெகோவா நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது, அவர் நமக்கு நிஜமானவராக இருப்பார். “என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது” என்று யோபு சொன்னதை போலவே நாமும் சொல்வோம்.

யெகோவாவுடைய வல்லமையைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவி செய்கிறீர்களா? (பாராக்கள் 17, 18)

17, 18. (அ) யெகோவா உங்களோடு இருக்கிறார் என்பதை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்ளலாம்? (ஆ) யெகோவா நமக்கு உதவி செய்கிறார் என்பதற்கு உதாரணம் கொடுங்கள்.

17 யெகோவா உங்களோடு இருக்கிறார் என்பதை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்ளலாம்? அதற்கு 5 உதாரணங்களைக் கவனியுங்கள். (1) பைபிளில் இருக்கும் உண்மைகளைத் தெரிந்துகொள்ள யெகோவா உங்களுக்கு எப்படி உதவி செய்தார் என்று யோசித்துப் பாருங்கள். (2) சபை கூட்டத்தில் கொடுக்கப்பட்ட ஒரு பேச்சு, “எனக்கே கொடுத்த மாதிரி இருக்கு!” என்று நீங்கள் சொன்னதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். (3) ஏதாவது ஒரு விஷயத்திற்காக நீங்கள் ஜெபம் செய்தபோது, யெகோவா எப்படிப் பதிலளித்தார் என்று யோசித்துப் பாருங்கள். (4) யெகோவாவுக்கு இன்னும் அதிகமாக சேவை செய்ய வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டபோது அவர் உங்களுக்கு எப்படி உதவி செய்தார் என்று யோசித்துப் பாருங்கள். (5) யெகோவாவுக்கு சேவை செய்ய தடையாக இருந்த வேலையை நீங்கள் விட்டபோது, “ஒருபோதும் உன்னைக் கைவிட மாட்டேன்” என்று யெகோவா சொன்னது எவ்வளவு உண்மையாக இருந்தது என்று யோசித்துப் பாருங்கள். (எபி. 13:5) யெகோவாவோடு நமக்கு நெருங்கிய பந்தம் இருக்கும்போது, அவர் நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார் என்பதை நம்மால் பார்க்க முடியும்.

18 கென்யாவில் இருக்கும் சாரா என்ற சகோதரி இப்படி சொல்கிறார்: “என்கிட்ட பைபிள் படிச்ச ஒரு பெண் ரொம்ப ஆர்வமா படிக்காத மாதிரி இருந்தது. அதனால, அந்த பெண்ணுக்கு தொடர்ந்து பைபிள் படிப்பை நடத்தணுமா வேண்டாமானு யெகோவாகிட்ட கேட்டேன். நான் ஜெபம் செஞ்சு, ‘ஆமென்’னு சொல்லி முடிக்கும்போது போன் அடிச்சது. அந்த பெண் எனக்கு போன் பண்ணி, ‘உங்களோடு கூட்டத்துக்கு வரட்டுமா?’னு கேட்டாள். எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது!” நம் வாழ்க்கையிலும் யெகோவா நமக்கு என்னவெல்லாம் செய்கிறார் என்பதைப் பார்த்தால் அவர் நம்மோடு இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வோம். ஆசியாவில் இருக்கும் ரோன்னா என்ற சகோதரி இப்படி சொல்கிறார்: ‘நம்ம வாழ்க்கையில யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்றார்னு தெரிஞ்சிக்கிறதுக்கு கொஞ்ச நாள் ஆகும். அப்படி தெரிஞ்சிக்கிட்டா, யெகோவா நம்ம மேல எவ்ளோ அக்கறையா இருக்கார்னு புரிஞ்சிக்க முடியும்.’

19. ‘கடவுளைக் காண’ நாம் வேறு என்ன செய்ய வேண்டும்?

19 “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 5:8) இதற்கு என்ன அர்த்தம்? நீங்கள் ஏதாவது தவறான விஷயத்தை செய்துகொண்டிருந்தால் அதை உடனே நிறுத்த வேண்டும். அதோடு, உங்களுடைய யோசனைகளும் நல்லதாகவே இருக்க வேண்டும். (2 கொரிந்தியர் 4:2-ஐ வாசியுங்கள்.) கடவுளை ‘பார்க்க’ வேண்டும் என்றால் அவரோடு உள்ள பந்தத்தைப் பலப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்று இந்தக் கட்டுரையில் பார்த்தோம். கடவுளை இன்னும் தெளிவாகப் பார்க்க விசுவாசம் எப்படி உதவி செய்யும் என்று அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.