Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிணாமம் பைபிளுடன் ஒத்துப்போகிறதா?

பரிணாமம் பைபிளுடன் ஒத்துப்போகிறதா?

பரிணாமம் பைபிளுடன் ஒத்துப்போகிறதா?

மிருகங்களிலிருந்து மனிதனை உண்டாக்குவதற்கு கடவுள் பரிணாமத்தைப் பயன்படுத்தியிருக்க சாத்தியம் உள்ளதா? பாக்டீரியாக்கள் மீன்களாகவும், பின்னர் அவை ஒன்றன்பின் ஒன்றாக ஊரும் பிராணிகளாகவும் பாலூட்டிகளாகவும், கடைசியாக ஒரு வகை குரங்குகள் மனிதராகவும் உருவெடுக்கும்படி கடவுள் செய்தாரா? சில அறிவியலாளர்களும் மதத் தலைவர்களும் பரிணாமக் கோட்பாட்டை நம்புகிற அதே சமயம் பைபிளையும் நம்புவதாகச் சொல்கிறார்கள். பைபிளிலுள்ள ஆதியாகம புத்தகம் உருவகமாக எழுதப்பட்ட கதை என்கிறார்கள். நீங்கள் ஒருவேளை இப்படி யோசித்திருக்கலாம்: ‘மிருகங்களிலிருந்து மனிதன் உருவானான் என்ற கருத்து பைபிளோடு ஒத்துப்போகிறதா?’

நாம் யார், எங்கே போகிறோம், நாம் எப்படி வாழ வேண்டும் என்ற விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கு நாம் எப்படித் தோன்றினோம் என்பதைத் தெரிந்துகொள்வது அத்தியாவசியம். மனிதன் எப்படித் தோன்றினான் என்பதை அறிந்தால்தான், கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார் என்பதையும் மனிதனின் எதிர்காலத்திற்கு அவர் வைத்திருக்கும் நோக்கம் என்ன என்பதையும் புரிந்துகொள்ள முடியும். கடவுள்தான் நம் படைப்பாளரா என்பது நமக்கு உறுதியாகத் தெரியாவிட்டால் அவரோடு ஒரு நல்ல உறவை நம்மால் அனுபவிக்க முடியாது. ஆகவே, மனிதனின் ஆரம்பத்தையும் அவனுடைய தற்போதைய நிலைமையையும் அவனுடைய எதிர்காலத்தையும்பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று ஆராய்வோம். பரிணாமக் கோட்பாடு பைபிளுக்கு இசைவாக உள்ளதா என்பது அப்போது நமக்குத் தெரிந்துவிடும்.

ஒருவன் மட்டும் இருந்தபோது

மிருகங்களின் ஒரு தொகுதி படிப்படியாக மனிதர்களின் ஒரு தொகுதியாக உருவெடுத்ததாக பரிணாமவாதிகள் பொதுவாகச் சொல்கிறார்கள். இப்படிச் சொல்கையில், ஒரு காலப் பகுதியில் ஒரு மனிதன் மட்டும் தனியாக இருந்தான் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். ஆனால், முற்றிலும் வித்தியாசப்பட்ட ஒரு கருத்தையே பைபிள் தெரிவிக்கிறது. ஒரேவொரு மனிதனாகிய ஆதாமிலிருந்து நாம் உண்டானதாக அது சொல்கிறது. ஆதாம் நிஜமாக வாழ்ந்த ஒரு மனிதன் என்பதாக பைபிள் பதிவு தெரிவிக்கிறது. அவனுடைய மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயர்களும் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. அவன் என்ன செய்தான், என்ன பேசினான், எப்போது வாழ்ந்தான், எப்போது இறந்தான் ஆகிய அனைத்தும் அதில் விவரிக்கப்பட்டுள்ளன. படிப்பறிவற்றவர்களுக்கு சொல்லப்பட்ட வெறும் ஒரு கதையாக இயேசு அந்தப் பதிவைக் கருதவில்லை. நல்ல கல்வியறிவு பெற்றிருந்த மதத் தலைவர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்: ‘ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதை . . . நீங்கள் வாசிக்கவில்லையா?’ (மத்தேயு 19:3-5) பின்பு அவர் ஆதாம் ஏவாளைப்பற்றி ஆதியாகமம் 2:24-ல் பதிவாகியுள்ள வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்.

வரலாற்றில் நிஜமான ஒரு நபராக இருந்த இயேசுவைப் போலவே ஆதாமும் நிஜமாக வாழ்ந்த ஒருவர் என்பதாக பைபிள் எழுத்தாளரும் பொறுப்புள்ள சரித்திராசிரியருமான லூக்கா எடுத்துக்காட்டினார். இயேசுவின் வம்சாவழியைப் பட்டியலிடுகையில் முதல் மனிதனாகிய ஆதாம் வரைக்குமுள்ள தொடர்பை அவர் விவரித்தார். (லூக்கா 3:23-38) பிரபல கிரேக்க பள்ளிகளில் கல்வி கற்ற தத்துவமேதைகள் உட்பட பலர் இருந்த ஒரு கூட்டத்தில் பேசுகையில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: ‘உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் . . . மனுஷஜாதியான சகல ஜனங்களையும் . . . ஒரே இரத்தத்தினாலே [“ஒரே ஆளிலிருந்து,” பொது மொழிபெயர்ப்பு] தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச் செய்தார்.’ (அப்போஸ்தலர் 17:24-26) ஆம், நாம் “ஒரே ஆளிலிருந்து” வந்ததாக பைபிள் தெளிவாகக் கற்பிக்கிறது. அப்படியானால், மனிதனின் ஆரம்பத்தைக் குறித்து பைபிள் சொல்லும் கருத்து பரிணாமத்துடன் ஒத்துப்போகிறதா?

பரிபூரணத்திலிருந்து வழுவிய மனிதன்

பைபிளின்படி, யெகோவா முதல் மனிதனைப் பரிபூரணமாகப் படைத்தார். எதையும் குறைபாடுடன் படைப்பது கடவுளால் ஆகாத காரியம். படைப்பைப் பற்றிய பதிவு சொல்வதாவது: “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; . . . அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” (ஆதியாகமம் 1:27, 31) பரிபூரண மனிதன் எப்படி இருப்பான்?

பரிபூரண மனிதனுக்கு சுயமாகத் தெரிவு செய்யும் சுதந்திரம் இருக்கும்; கடவுளுடைய குணங்களை முழுமையாகப் பின்பற்றும் திறனும் இருக்கும். “தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்” என்பதாக பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 7:29) கடவுளுக்கு விரோதமாக ஆதாம் கலகம் செய்தான். அதன் காரணமாக, அவனும் அவன் சந்ததியும் பரிபூரணத்தை இழக்க நேர்ந்தது. பரிபூரணத்திலிருந்து மனிதன் தவறிவிட்டான் என்ற உண்மையானது, நாம் சரியானதைச் செய்ய விரும்புகிறபோதும் அடிக்கடி நமக்கு நாமே ஏமாற்றமளிக்கும் விதத்தில் நடந்துகொள்வதற்கான காரணத்தை விளக்குகிறது. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.”—ரோமர் 7:15.

பரிபூரண மனிதன் பரிபூரண ஆரோக்கியத்துடன் என்றென்றுமாக வாழ்வான் என பைபிள் சொல்கிறது. கடவுள் ஆதாமிடம் சொன்னதை வைத்து பார்த்தால், முதல் மனிதன் கடவுளுக்கு கீழ்ப்படிந்திருந்தால் அவன் மரணம் அடைந்திருக்கவே மாட்டான் என்று தெரிகிறது. (ஆதியாகமம் 2:16, 17; 3:22, 23) வியாதி அடையும் வாய்ப்போ கலகத்தனம் செய்யும் எண்ணமோ மனிதனிடம் இருந்திருந்தால் அவனைப் படைத்ததும் ‘மிகவும் நன்றாக’ இருந்ததாக யெகோவா அறிவித்திருக்க மாட்டார். பரிபூரணத்திலிருந்து வழுவிப் போனதாலேயே அதிசயிக்கத்தக்க விதத்தில் வடிவமைக்கப்பட்ட மனித உடல், குறைபாடுகளாலும் வியாதியாலும் பீடிக்கப்படும் நிலைக்குள்ளானது. இவை அனைத்தையும் வைத்து பார்க்கையில், பரிணாமக் கோட்பாடு பைபிளுக்கு ஒத்திசைவானதாக இல்லவே இல்லை. ஏனென்றால், பரிணாமம், இன்றைய மனிதனை உயர்நிலைக்கு முன்னேற்றமடைந்து வரும் மிருகமாகச் சித்தரிக்கிறது. பைபிள், இன்றைய மனிதனை பரிபூரண நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்த நிலைக்கு வந்திருப்பவனாகச் சித்தரிக்கிறது.

மனிதனை உருவாக்குவதற்காக கடவுள் பரிணாமத்தை பயன்படுத்தினார் என்ற கருத்து கடவுளுடைய சுபாவத்தைப்பற்றி பைபிள் விவரிப்பதிலிருந்து முற்றிலும் முரண்படுகிறது. பரிணாமத்தின் செயல்பாட்டை கடவுள் இயக்கினார் என்றால், இன்று மனிதகுலத்தை நோயிலும் வேதனையிலும் வாடும் நிலைக்குத் தள்ளியதும் அவர்தான் என்று அர்த்தப்படும். ஆனாலும், கடவுளைப்பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர். அவர்களோ தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; தவறு அவர்களுடையது.” (உபாகமம் 32:4, 5; NW) ஆகவே, பரிணாமத்தை கடவுள் செயல்படுத்தியதால் இன்று மனிதகுலம் துன்பத்தை அனுபவிக்கவில்லை. கடவுளுக்கு விரோதமாக ஒரு மனிதன் செய்த கலகத்தால், அவனும் அவனுடைய சந்ததியும் பரிபூரணத்தை இழந்ததன் விளைவாகவே துன்பம் தலைதூக்கியது. இதுவரை ஆதாமைப்பற்றி சிந்தித்த நாம் இப்போது இயேசுவைப்பற்றி சிந்திக்கலாம். இயேசுவைப்பற்றி பைபிள் சொல்லும் விஷயங்கள் பரிணாமத்துடன் ஒத்துப்போகின்றனவா?

பரிணாமம், கிறிஸ்தவம்—இரண்டிலுமே நம்பிக்கை வைக்க முடியுமா?

‘கிறிஸ்துவானவர் நமது பாவங்களுக்காக மரித்தார்.’ இது கிறிஸ்தவத்தின் அடிப்படை போதனைகளில் ஒன்று என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். (1 கொரிந்தியர் 15:3; 1 பேதுரு 3:18) இந்தக் கூற்று பரிணாமத்துக்கு ஒத்திசைவானதாக இல்லை. ஏன் என்பதைப் புரிந்துகொள்ளுமுன், பைபிள் நம்மை ஏன் பாவிகள் என்றழைக்கிறது, பாவத்தால் நமக்கு என்ன பாதிப்பு என்பதையெல்லாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

அன்பு, நியாயம் போன்ற கடவுளுடைய மகத்தான பண்புகளை நாம் இம்மி பிசகாமல் வெளிக்காட்ட முடியாது என்ற அர்த்தத்தில் நாம் எல்லாருமே பாவிகள். ஆகவேதான் பைபிள் சொல்கிறது: ‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானோம்.’ (ரோமர் 3:23) பாவமே மரணத்திற்கு காரணம் என்பதாக பைபிள் கற்பிக்கிறது. “பாவமே சாவின் கொடுக்கு” என்று 1 கொரிந்தியர் 15:56 (பொ.மொ.) சொல்கிறது. பாவத்தை நாம் மரபுவழியாகப் பெற்றிருப்பதும் வியாதிக்கு அடிப்படை காரணமாக அமைகிறது. வியாதிக்கும் நம் பாவமுள்ள நிலைமைக்கும் தொடர்பு இருப்பதாக இயேசு குறிப்பிட்டார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவனிடம் “உன் பாவங்கள் . . . மன்னிக்கப்பட்டது” என்று அவர் சொன்னதும் அவன் குணமடைந்தான்.—மத்தேயு 9:2-7.

இயேசுவின் மரணம் நமக்கு எப்படி உதவுகிறது? ஆதாமுக்கும் இயேசுவுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டை பைபிள் சுட்டிக் காண்பிக்கிறது. அது சொல்வதாவது: “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” (1 கொரிந்தியர் 15:22) ஆதாமிடமிருந்து நாம் சுதந்தரித்த பாவத்திற்கு ஈடுகட்டும் விலையாக இயேசு, தம் உயிரைத் தியாகம் செய்தார். இதன் விளைவாக, இயேசுவில் விசுவாசம் வைத்து அவருக்குக் கீழ்ப்படிகிற அனைவரும் ஆதாம் பறிகொடுத்ததைத் திரும்பப் பெற முடியும். அதாவது, முடிவில்லாமல் வாழும் எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கும்.—யோவான் 3:16; ரோமர் 6:23.

பரிணாமத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா? ‘ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறோம்’ என்பதை நாம் சந்தேகித்தால், ‘கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவோம்’ என்பதை நம்மால் எப்படி நம்ப முடியும்?

பரிணாமம் மக்களைக் கவர்வது ஏன்

பரிணாமம் போன்ற கோட்பாடுகள் பிரபலமாவதற்கான காரணத்தை பைபிள் வெளிப்படுத்துகிறது. அது சொல்கிறது: “அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.” (2 தீமோத்தேயு 4:3, 4) பரிணாமம் பொதுவாக அறிவியல் சொற்றொடர்களை வைத்து விளக்கப்பட்டாலும், உண்மையில் அது ஒரு மதக் கோட்பாடு. அது ஒரு வாழ்க்கை தத்துவத்தைப் போதிக்கிறது. கடவுளை நோக்கும் விதத்தையும் பாதிக்கிறது. மனிதகுலத்தின் சுயநலமான, தன்னிச்சையான மனச்சாய்வுகளை மறைமுகமாகக் கவர்ந்திழுக்கும் தன்மை அதற்கு உண்டு. பரிணாமத்தில் நம்பிக்கை வைக்கும் பலர் கடவுளையும் நம்புவதாகச் சொல்கிறார்கள். என்றாலும், எல்லாவற்றையும் படைத்தது கடவுள் அல்ல, மனித விவகாரங்களில் அவர் தலையிடுவதில்லை, மக்களை அவர் நியாயந்தீர்க்கப் போவதில்லை என்றெல்லாம் யோசிக்க அவர்கள் சற்றும் தயங்குவதில்லை. மக்கள் காதுகளுக்கு இனிமையாகத் தொனிக்கும் ஒரு போதனையாக அது இருக்கிறது.

பரிணாமவாதிகள் பெரும்பாலும் உண்மைகளால் தூண்டப்படாமல், ‘சுய இச்சைகளால்’ தூண்டப்படுகிறார்கள். பரிணாமத்தை ஒரு முக்கிய கோட்பாடாக பலரும் நம்பிவரும் அறிவியல் சமுதாயத்தினரிடையே பிரபலமாக வேண்டும் என்ற ஆசையால் அவர்கள் ஒருவேளை தூண்டப்படலாம். உயிரணுவில் பரிணாமம் ஏற்பட்டதாக கற்பிக்கிறவர்கள் சொல்லும் விஷயங்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதாக பேராசிரியர் மைக்கல் பீஹி குறிப்பிட்டார். இவர், உயிரணுக்களின் சிக்கலான செயல்பாடுகளை ஆய்வு செய்வதில் வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிட்ட உயிர்வேதியல் பேராசிரியர். உயிரணுவின் சின்னஞ்சிறிய மூலக்கூறில் பரிணாமம் நிகழ்ந்திருக்க முடியுமா? “உயிரணுவின் மூலக்கூறில் பரிணாமம் ஏற்பட்டதாகச் சொல்வதற்கு எவ்வித அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை. மூலக்கூறு பரிணாமத்தில் உண்மையான, சிக்கலான, உயிர்வேதியல் மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன என்றோ எப்படி நிகழ்ந்திருக்கலாம் என்றோ விளக்கும் பிரசித்திபெற்ற பத்திரிகைகள், விசேஷ இதழ்கள் அல்லது புத்தகங்கள் போன்ற அறிவியல் பிரசுரங்கள் எதுவுமே இல்லை. . . . டார்வினது மூலக்கூறு பரிணாமக் கோட்பாடு வெறும் வெட்டிப் பேச்சுதான்” என்பதாக அவர் எழுதினார்.

பரிணாமவாதிகளுக்கு எவ்வித அத்தாட்சி இல்லையென்றாலும் தங்கள் கருத்துகளை ஏன் அப்படித் தம்பட்டமடிக்கிறார்கள்? அதற்கு பீஹி தரும் விளக்கம் இதுதான்: “பிரபலம் வாய்ந்த, மதிப்பிற்குரிய அறிவியலாளர்கள் உட்பட அநேகர், இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு படைப்பாளர் இருக்கலாம் என்று யோசிக்கவே விரும்புவதில்லை.”

தங்களை புத்திமான்களாகக் காட்டிக்கொள்ள விரும்பும் அநேக மத குருமாரை பரிணாமக் கோட்பாடு வசீகரிக்கிறது. ரோமிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதத்தில் விவரிக்கப்பட்ட சிலரைப்போல் இவர்கள் இருக்கிறார்கள். பவுல் எழுதினார்: ‘தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; . . . காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரரானார்கள்.’ (ரோமர் 1:19-22) பொய் போதகர்களால் ஏமாற்றப்படாதிருக்க என்ன செய்யலாம்?

சான்றுகளின் அடிப்படையில் படைப்பாளர்மீது விசுவாசம்

விசுவாசத்திற்கு பைபிள் விளக்கம் தருகையில், சான்றுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அது சொல்வதாவது: “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” (எபிரெயர் 11:1) படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதன் பேரிலுள்ள அத்தாட்சியின் அடிப்படையில்தான் கடவுள்மீதான மெய்யான விசுவாசம் அமைய வேண்டும். அப்படிப்பட்ட அத்தாட்சியை எங்கே காணலாம் என்று பைபிள் சொல்கிறது.

கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட பைபிள் எழுத்தாளராகிய தாவீது இவ்வாறு எழுதினார்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மை துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.” (சங்கீதம் 139:14) நம் சொந்த உடல் மற்றும் உயிருள்ள மற்ற ஜீவிகளின் அதிசயமான வடிவமைப்பைக் குறித்து சிந்தித்துப் பார்க்க சற்று நேரம் எடுத்துக்கொண்டால் நம் படைப்பாளரின் ஞானத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப்போவோம். நம்மை உயிருடன் வைப்பதற்காக நரம்பு மண்டலம், செரிமான மண்டலம் போன்ற ஆயிரக்கணக்கான மண்டலங்கள் நமக்குள் ஒத்திசைந்து செயல்படுகின்றன; அவற்றிலுள்ள ஒவ்வொரு பாகமும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் சடப்பொருள்களுடைய செயல்பாட்டிலும் கணக்குத் தவறாத துல்லியமும் ஒழுங்கமைப்பும் காணப்படுகிறது. தாவீது இவ்வாறு எழுதினார்: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.”சங்கீதம் 19:1.

படைப்பாளரைப்பற்றி ஏகப்பட்ட சான்றுகள் பைபிளிலேயே உள்ளன. பைபிளிலுள்ள 66 புத்தகங்களும் ஒன்றுக்கொன்று முரண்படாமல் இருப்பதையும், அதன் ஒழுக்க நெறிகளின் மேன்மையையும், தவறாமல் நிறைவேறும் அதன் தீர்க்கதரிசனங்களையும் நேரமெடுத்து ஆராய்ந்து பார்த்தால் படைப்பாளர்தான் அதன் நூலாசிரியர் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் கிடைக்கும். பைபிள் போதனைகளைப் புரிந்துகொள்ளும்போது, அது உண்மையிலேயே படைப்பாளரின் வார்த்தை என்ற உறுதியைப் பெறுவீர்கள். உதாரணமாக, துன்பத்திற்கான காரணம், கடவுளுடைய ராஜ்யம், மனிதகுலத்தின் எதிர்காலம், மகிழ்ச்சியைப் பெறுவதற்கான வழி போன்ற பைபிள் போதனைகளை நீங்கள் புரிந்துகொள்கையில், கடவுளுடைய ஞானம் அதில் பளிச்சிடுவதைக் காண்பீர்கள். பவுலைப் போலவே நீங்களும் உணருவீர்கள். அவர் எழுதியதாவது: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!”—ரோமர் 11:33.

சான்றுகளை அலசி ஆராயும்போது உங்கள் விசுவாசம் வளரும்; நீங்கள் பைபிளை வாசிக்கையில் படைப்பாளரே உங்களிடம் பேசுவதை கேட்கிறீர்கள் என்பதில் உங்களுக்கு எவ்வித சந்தேகமும் இருக்காது. அவர் சொல்கிறார்: “நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.” (ஏசாயா 45:12) சகலத்தையும் படைத்தவர் யெகோவாவே என்பதை உங்களுக்கு நீங்களே நிரூபித்துக்கொள்வதற்காக முயற்சி எடுத்ததைக் குறித்து நிச்சயமாகவே ஒருபோதும் வருந்தமாட்டீர்கள்.(w08 1/1)

[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]

கல்வியறிவுள்ள கிரேக்கர்களிடம் அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: ‘தேவன் மனுஷஜாதியான சகல ஜனங்களையும் ஒரே ஆளிலிருந்து தோன்றப்பண்ணினார்’

[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]

பரிணாமம், இன்றைய மனிதனை உயர்நிலைக்கு முன்னேற்றமடைந்து வரும் மிருகமாகச் சித்தரிக்கிறது. பைபிள், இன்றைய மனிதனை பரிபூரண நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்த நிலைக்கு வந்திருப்பவனாகச் சித்தரிக்கிறது

[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]

“உயிரணுவின் மூலக்கூறில் பரிணாமம் ஏற்பட்டதாகச் சொல்வதற்கு எவ்வித அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை”

[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]

உயிர் ஜீவிகளின் அதிசயமான வடிவமைப்பு, நம் படைப்பாளரின் ஞானத்தைக் கண்டு மெய்சிலிர்க்க வைக்கிறது