Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘அவள் தன் இருதயத்தில் வைத்து, சிந்தனை பண்ணினாள்’

‘அவள் தன் இருதயத்தில் வைத்து, சிந்தனை பண்ணினாள்’

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

‘அவள் தன் இருதயத்தில் வைத்து, சிந்தனை பண்ணினாள்’

பொதி சுமக்கும் சின்னஞ்சிறிய கழுதைமீது ஒரே நிலையில் அமர்ந்து வந்த மரியாள் இப்போது சற்று சிரமப்பட்டு திரும்பி உட்காருகிறாள். அவள் சவாரி செய்ய ஆரம்பித்து பல நாழிகை ஆகிவிட்டது. சற்று முன்னால், தொலைதூர பெத்லகேமை நோக்கி யோசேப்பு அயராமல் நடைபோட்டுச் செல்கிறார். மரியாள் தன் வயிற்றுக்குள் இருக்கும் ஜீவன் தன்னைச் செல்லமாக உதைப்பதை மறுபடியும் உணர்கிறாள்.

இந்தச் சமயத்தில் மரியாளுக்குப் பேறுகாலம் நெருங்கியிருந்தது. அதனால்தான், அவள் “நிறைமாத கர்ப்பிணியாக” இருந்தாளென பொருள்பட கூறுகிறது பைபிள். (லூக்கா 2:​5, NW) இந்தத் தம்பதியினர் ஒவ்வொரு வயலையும் கடந்து சென்றபோது, ஏர் ஓட்டிச்சென்றுகொண்டிருந்த அல்லது நெல்மணிகளை நிலத்தில் பாவிக்கொண்டிருந்த விவசாயிகள் சிலர், ‘இந்த நிலைமையில எங்க கிளம்பிட்டாங்க இந்த அம்மா’ என்று புருவம் மேலிட அவர்களை ஏறிட்டுப் பார்த்திருக்கலாம். மரியாள் தன் சொந்த ஊரான நாசரேத்தைவிட்டு இவ்வளவு தூரம் வர என்ன காரணம்?

இந்த இளம் யூதப் பெண்மணி சில திங்களுக்கு முன்பு ஒரு பொறுப்பை பெற்றிருந்தாள். அது மனித சரித்திரத்திலேயே தனித்தன்மை வாய்ந்தது. மேசியாவை, கடவுளுடைய மைந்தனை, பெற்றெடுக்கும் பாக்கியமே அது! (லூக்கா 1:35) குழந்தையை ஈன்றெடுக்கும் காலம் நெருங்கிய சமயத்தில், இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இதற்கிடையில், விசுவாசப் பரீட்சைகள் பலவற்றை மரியாள் தன் வாழ்வில் சந்திக்கிறாள். ஆன்மீக ரீதியில் ஆணிவேர் போல் ஊன்றி நிற்க அவளுக்கு எது கைகொடுத்தது என்பதை இப்போது பார்க்கலாம்.

பெத்லகேமை நோக்கி

இப்படிப் பயணம் போவது யோசேப்பும் மரியாளும் மட்டுமல்ல. தேசத்திலுள்ள அனைவரும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டுமென அண்மையில்தான் அகஸ்து ராயன் ஆணை பிறப்பித்திருந்தான். எனவே, அவரவருடைய சொந்த ஊருக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. யோசேப்பு என்ன செய்தார்? ‘யோசேப்பு தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியால், . . . கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்’ என்று பதிவு சொல்கிறது.​​⁠⁠லூக்கா 2:1–5.

இத்தருணத்தில் ராயன் இப்படி உத்தரவிட்டது எதேச்சையாக நடந்த சம்பவமல்ல. பெத்லகேமில் மேசியா பிறப்பார் என சுமார் ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஒரு தீர்க்கதரிசனம் எழுதப்பட்டிருந்தது. நாசரேத்திலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் பெத்லகேம் என்ற பட்டணம் இருந்தது. ஆனால், மேசியா தோன்றும் ஊரோ ‘எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேம்’ என தீர்க்கதரிசனம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டது. (மீகா 5:2) தென் திசையில் வீற்றிருந்த அந்த பெத்லகேம் குக்கிராமத்திற்கு இன்றைய சாலைகள் வழியாகச் சென்றால் நாசரேத்திலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரம் மேல்நோக்கி பயணம் செய்ய வேண்டியிருக்கும். அந்த பெத்லகேமுக்குத்தான் யோசேப்பு போகவேண்டியிருந்தது. ஏனென்றால், அதுதான் அவருடைய முன்னோரான தாவீது ராஜாவின் பூர்வீகம்​—⁠யோசேப்பும் அவருடைய துணைவியாரும் அவருடைய வழி வந்தவர்களே.

யோசேப்பு எடுத்த முடிவுக்கு மரியாள் கட்டுப்பட்டாளா? இத்தனைக்கும், அவள் போகும் பயணம் ஒரு கடினமான பயணம். அது இளவேனிற்காலம் இருகரம் கூப்பி வரவேற்கும் சமயமாக இருக்கலாம். அதனால், வறட்சி கொஞ்ச கொஞ்சமாக மறைந்து சாரல் வீசலாம். இதுமட்டுமா? கலிலேயாவிலிருந்து பயணிக்கும்போது மேல் நோக்கி ஏறிச்செல்ல வேண்டும். ஏனென்றால், கடல் மட்டத்திலிருந்து 2,500-⁠க்கும் அதிகமான அடி உயரத்தில் பெத்லகேம் அமைந்திருந்தது​—⁠செங்குத்தான பாதையில் ஏறிச்செல்ல வேண்டிய கடினமான ஒரு பயணம், பல நாட்கள் எடுக்கும் பயணம்! போதாக்குறைக்கு, மரியாளும் நிறைமாதமாக இருக்கிறாள். ஆகவே, ஆங்காங்கே அடிக்கடி அமர்ந்து ஓய்வெடுக்க வேண்டும். இதனால், வழக்கமாக எடுக்கும் நாட்களைவிட அதிக நாட்கள் எடுக்கலாம். இப்படிப்பட்ட சமயத்தில் ஒரு பெண் தன்னுடைய தாய் வீட்டோடு இருக்கவே ஏங்குவாள். பிரசவ நேரத்தில், உற்றார் உறவினர் புடைசூழ இருப்பது அவளுக்கு ஒத்தாசையாக இருக்கும். இந்தப் பயணத்தை மேற்கொள்ள அவளுக்கு உண்மையிலேயே தைரியம் தேவைப்பட்டது.

இத்தனை இடையூறுகள் இருந்தபோதிலும், “மரியாளுடன் பெயர்ப்பதிவு செய்வதற்காக” யோசேப்பு சென்றதாக லூக்கா எழுதுகிறார். ‘நிச்சயிக்கப்பட்டபடியே [யோசேப்புக்கு மரியாள்] மணம்செய்து கொடுக்கப்பட்டாள்’ என்றும் அவர் குறிப்பிடுகிறார். (லூக்கா 2:​4, 5) மரியாள் முன்பு எடுத்த தீர்மானங்களுக்கும் இப்போது யோசேப்பின் மனைவியாக எடுக்கும் தீர்மானங்களுக்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. ஆன்மீகப் பாதையில் தன்னை வழிநடத்திச் செல்லும் தலைவனாக தன் கணவனைக் கருதினாள்; அவர் முன்மொழிந்த தீர்மானங்களை வழிமொழிந்து அவருக்கு உற்ற துணையாக இருப்பதன்மூலம் கடவுள் கொடுத்த பொறுப்பை நிறைவேற்றினாள். a இப்படியாக, தனக்கு வந்த விசுவாசப் பரீட்சையை கீழ்ப்படிதல் என்ற குணத்தால் வெற்றிகரமாகச் சந்தித்தாள்.

யோசேப்பின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடக்க மரியாளை வேறெதுவும் உந்துவித்திருக்கலாம்? பெத்லகேமில் மேசியா பிறப்பார் என்ற தீர்க்கதரிசனத்தை அவள் அறிந்திருந்தாளா? பைபிள் இதற்குப் பதிலளிப்பதில்லை, என்றாலும் அன்றைய மதத் தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்கலாம் என்ற உண்மையை நாம் ஒதுக்கிவிட முடியாது. (மத்தேயு 2:1–7; யோவான் 7:40–42) வேதவசனங்களை மரியாள் நன்றாகவே அறிந்திருந்தாள். (லூக்கா 1:46–55) மரியாள் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு பயணத்திற்கு ஒத்துக்கொண்டாளா அல்லது ராயனுடைய உத்தரவின் பேரில் அப்படிச் செய்தாளா அல்லது யெகோவா உரைத்த தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்காக அந்த முடிவை ஆதரித்தாளா அல்லது இந்த எல்லா விஷயங்களின் அடிப்படையில் பயணத்திற்கு சம்மதம் தெரிவித்தாளா என்று நமக்குத் தெரியாது. எப்படியிருந்தாலும் அவள் நமக்கு ஓர் ஆதர்ச முன்மாதிரி. தாழ்மையும் கீழ்ப்படிதலும் உள்ள ஆண்களையும் பெண்களையும் யெகோவா உயர்வாக மதிக்கிறார். நம் காலத்தில், கீழ்ப்படிந்து நடப்பதை பெரும்பாலோர் மதிக்காவிட்டாலும் மரியாளுடைய உதாரணம் எங்குமுள்ள உண்மை மனிதருக்கு கலங்கரைவிளக்கமாக உயர்ந்து நிற்கிறது.

கிறிஸ்துவின் பிறப்பு

குக்கிராமமான பெத்லகேமை தூரத்திலிருந்து கண்ட மாத்திரத்தில் மரியாள் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பாள். அறுவடைக்குக் காத்திருந்த ஒலிவமரத் தோப்புகளுக்கு விடைகொடுத்துவிட்டு (கடைசியாக அறுவடை செய்யப்பட்ட பயிர்களில் இதுவும் ஒன்று) மலைச்சரிவுகளில் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தபோது, இந்தச் சின்னஞ்சிறு கிராமத்தின் சரித்திரம் அவர்கள் மனதில் தெளிந்த நீரோடை போல் ஓடியிருக்கலாம். மீகா தீர்க்கதரிசி சொன்னது போல இது யூதாவின் பட்டணங்களிலேயே மிகவும் அற்பமான ஒன்றாக எண்ணப்பட்டாலும், ஆயிரமாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த போவாஸ், நகோமி, தாவீது ஆகியோருடைய பிறப்பிடமாக விளங்கியது.

அந்தக் கிராமம், மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்ததை மரியாளும் யோசேப்பும் கண்டார்கள். அநேகர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய அவர்களுக்கு முன்பாகவே அங்கு வந்துசேர்ந்திருந்தார்கள். ஆகவே, சத்திரத்தில் தங்குவதற்கு அவர்கள் இடமிருக்கவில்லை. b அந்தக் காரிருள் வேளையை கொட்டிலில் கழிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. இதுவரை அனுபவித்திராத ஒருவித வலியில் தன் மனைவி துடிப்பதைப் பார்த்து யோசேப்பின் மனம் எவ்வளவு தவியாய் தவித்திருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. இப்போது அந்த வலி இன்னும் தீவிரமாகிறது. எத்தனையோ இடமிருக்க, இந்த இடத்தில் அவளுக்குப் பிரசவ வேதனை வந்துவிட்டதே!

எந்தப் பெண்ணுமே மரியாளின் நிலையைக் கண்டு பரிதபிக்காமல் இருக்க மாட்டாள். ஆதாமிடமிருந்து வாழையடி வாழையாக வரும் பாவத்தின் காரணமாக பேறுகாலத்தின்போது பெண்கள் வேதனைப்படுவார்களென சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே யெகோவா அறிவித்திருந்தார். (ஆதியாகமம் 3:16) மரியாள் இதற்கு விதிவிலக்கு என்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை. மரியாளுக்கு ஏற்பட்ட பிரசவ வேதனையைப் பற்றி வர்ணிக்காமல், ‘அவள் தன் முதல் மகனைப் பெற்றெடுத்தாள்’ என்று கச்சிதமாக அதேசமயத்தில் கண்ணியமாக லூக்கா சொல்கிறார். (லூக்கா 2:7) கடைசியில் அவளுடைய தலைமகன் இந்த மண்ணின் மடியில் விழுந்துவிட்டார். மரியாள் தன்னுடைய வாழ்க்கையில் மொத்தம் ஏழு பிள்ளைகளையாவது ஈன்றெடுத்திருப்பாள். (மாற்கு 6:3) ஆனால், இவரோ தனிச்சிறப்பு வாய்ந்தவராய் இருப்பார். இவர் மரியாளுக்கு மட்டும் தலைமகன் அல்ல, யெகோவாவின் ‘எல்லாப் படைப்புக்கும் முதல் படைப்பாக,’ கடவுளுடைய ஒரே மகனாக இருக்கிறார்.​​⁠⁠கொலோசெயர் 1:​15, NW.

இந்த இடத்தில்தான் யாவரறிந்த ஓர் உண்மையை பதிவு சொல்கிறது: ‘பிள்ளையைத் துணிகளில் பொதிந்து, தீவனத் தொட்டியில் கிடத்தினாள்.’ (லூக்கா 2:​7, பொது மொழிபெயர்ப்பு) உலகெங்கும் காட்டப்படும் “கிறிஸ்மஸ் நாடகங்களும்,” ஓவியங்களும், காட்சிகளும் இந்தத் சம்பவத்திற்கு கற்பனை முலாம் பூசியிருக்கின்றன. ஆனால், நிஜத்தை சிந்தித்துப் பாருங்கள். பண்ணை விலங்குகளுக்கு தீனி போடும் தொட்டியில்தான் பிள்ளையை மரியாள் கிடத்தினாள். அப்படியானால், யோசேப்பும் மரியாளும் ஒரு கொட்டிலில்தான் தங்கியிருந்தார்கள். அங்கு சுத்தமான காற்றும் கிடையாது, சுகாதாரமும் கிடையாது​—⁠அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி. வேறு ஏதாவது நல்ல இடம் கிடைத்திருந்தால், பிள்ளையைப் பெற்றெடுக்க எந்தப் பெற்றோராவது இப்படிப்பட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்திருப்பார்களா? பெரும்பாலும், எல்லா பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த இடத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அப்படியிருக்கும்போது, யோசேப்பும் மரியாளும் கடவுளுடைய மகனுக்கு மிகச் சிறந்த இடத்தைத் தேர்ந்தெடுக்க இன்னும் எந்தளவு விரும்பியிருப்பார்கள்!

அவர்கள் தங்களுடைய இயலாமையை எண்ணி இடிந்துபோய் உட்கார்ந்துவிடவில்லை. தங்களிடம் இருந்ததை வைத்தே மிகச் சிறந்த விதத்தில் குழந்தையைக் கவனித்துக்கொண்டார்கள். உதாரணமாக, அந்தப் பச்சிளங்குழந்தை கதகதப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்க மரியாள் அதைத் துணிகளில் சுற்றி தீவனத் தொட்டியில் மென்மையாய் கிடத்தி தூங்கவைத்தாள். தன்னால் முடிந்த மிகச் சிறந்ததைக் குழந்தைக்குச் செய்யாமல், தற்போதைய சூழ்நிலையையே எண்ணி எண்ணி துவண்டுவிடவில்லை. எல்லாவற்றையும்விட ஆன்மீக ரீதியில் அந்தக் குழந்தையை சீராய் வளர்ப்பதே மிக மிக முக்கியம் என்பதை அவளும் யோசேப்பும் அறிந்திருந்தார்கள். (உபாகமம் 6:6–8) இன்று ஆன்மீக ரீதியில் கையேந்திக் கொண்டிருக்கும் இந்த உலகில், புத்தியுள்ள பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்குக் கடவுளுடைய வார்த்தையை ஊட்டி வளர்ப்பதற்கே அக்கறை காட்டுவார்கள்.

ஊக்கமளித்த சந்திப்பு

அங்கு நிலவிய அமைதியான சூழல் திடீரென மறைந்துபோனது. தாயையும் சேயையும் பார்ப்பதற்காக மேய்ப்பர் கூட்டத்தினர் ஆவலோடு கொட்டிலை நோக்கி ஓடிவந்தனர். அவர்களுடைய உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கிவழிந்தது, முகமோ செவ்வானம் போல் பிரகாசித்தது. மந்தையுடன் மலைச்சரிவுகளில் கிடைபோட்டிருந்த அந்த மேய்ப்பர்கள் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்திருந்தார்கள். c ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்த அந்தப் பெற்றோரிடம் சில கணம் முன்பு தங்களுக்குக் கிடைத்த அந்த அற்புதமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்கள். மலைச்சரிவில் இராப்பொழுதில் காவல் காத்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு தேவதூதன் எங்களுக்கு முன் தோன்றினார். அந்தத் தூதனைச் சுற்றிலும் யெகோவாவின் மகிமை சுடரொளி வீச, கிறிஸ்துவான மேசியா பெத்லகேமில் இப்போதுதான் பிறந்திருப்பதாக அவர் அறிவித்தார். அந்தப் பாலகனைத் துணிகளால் சுற்றி தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைப் பார்ப்பீர்கள் என்றார். பின்னர், இதைவிட வியத்தகு காட்சியைக் கண்டோம். தேவதூதர்களின் பரம சேனை தோன்றி, யெகோவாவின் மகிமையை ஒருசேர புகழ்ந்து பாடியதைக் கேட்டு மெய்சிலிர்த்துப்போனோம்!

தாழ்மையுள்ள இந்த மனிதர்கள் பெத்லகேமை நோக்கி ஓடோடி வந்ததில் ஆச்சரியமேதுமில்லை! அந்தத் தூதன் சொன்னது போலவே புதிதாய்ப் பிறந்த குழந்தை ஒரு கொட்டிலில் துயில்வதைக் கண்டு அவர்கள் வியந்திருப்பார்கள். சந்தோஷமான இந்தச் செய்தியை அவர்கள் தங்களுடைய மனதிலேயே பூட்டிவைத்துக்கொள்ளவில்லை. ‘தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை அனைவருக்கும் தெரிவித்தார்கள். மேய்ப்பர்கள் சொன்ன விஷயங்களைக் கேட்ட எல்லாரும் வியப்படைந்தார்கள்.’ (லூக்கா 2:​17, 18, NW) அந்தக் காலத்தில், மதத் தலைவர்கள் மேய்ப்பர்களை இழிவாகக் கருதினார்கள். ஆனால், தாழ்மையும் உண்மையும் உள்ள இந்த மனிதர்களை யெகோவா உயர்வாய்க் கருதினார். இந்தச் சந்திப்பு மரியாளின் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?

பிரசவம் முடிந்து அடித்துப்போட்டாற்போல் அயற்சியில் இருந்தாலும், அவர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் மரியாள் உன்னிப்பாக செவிகொடுத்து கேட்டாள். அதுமட்டுமா, “அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனை பண்ணினாள்.” (லூக்கா 2:19) இந்த இளம் மங்கை உண்மையிலேயே எல்லாவற்றையும் சிந்தித்துப்பார்க்கும் குணமுடையவள். தேவதூதர்கள் சொன்ன செய்தி மிகவும் முக்கியம் என்பதை அவள் அறிந்திருந்தாள். தன் மகனின் அடையாளத்தையும் முக்கியத்துவத்தையும் மரியாள் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் வேண்டுமென அவளுடைய கடவுளான யெகோவா விரும்பினார். அதனால்தான், அந்த வார்த்தைகளைக் காதில் வாங்கிக்கொண்டதோடு விட்டுவிடாமல் பின்வந்த காலங்களில் அவற்றைக் குறித்து மீண்டும் மீண்டும் அசைபோட்டு பார்ப்பதற்காக தன் இருதயத்தில் ஆழப் பதியவைத்துக்கொண்டாள். இறுதி மூச்சுவரை மரியாள் விசுவாசத்துடன் இருந்ததற்கு இதுவே முக்கிய காரணம்.

மரியாளின் முன்மாதிரியை நீங்கள் பின்பற்றுவீர்களா? ஜொலிக்கும் ஆன்மீக மணிக்கற்களை யெகோவா தம்முடைய வார்த்தையாகிய பைபிள் எனும் ஏட்டில் பதித்திருக்கிறார். அவற்றுக்கு நாம் செவிகொடுத்தால் தவிர அந்தச் சத்திய மணிக்கற்களிலிருந்து பயன்பெற முடியாது. அதனால்தான் தவறாமல் பைபிளை வாசிக்கிறோம். அதை வெறுமனே ஓர் இலக்கிய படைப்பாக கருதி வாசிக்காமல், கடவுளுடைய சக்தியினால் எழுதப்பட்ட வார்த்தையாக எண்ணி வாசிக்கிறோம். (2 தீமோத்தேயு 3:16) பின்பு மரியாளைப் போலவே நாமும் ஆன்மீக சங்கதிகளை நம் இருதயத்தில் ஆழப் பதித்து அவற்றைக் குறித்து சிந்தனை செய்ய வேண்டும். யெகோவாவின் ஆலோசனைகளை இன்னும் நன்றாய் நம் வாழ்வில் கடைப்பிடிப்பதற்கு பைபிளை வாசித்து அவற்றிலுள்ள விஷயங்களைத் தியானித்தால், நம் விசுவாசம் எனும் விருட்சம் ஓங்கி வளருவதற்குத் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுப்போம்.

மனதில் நிறுத்த இன்னும் சில சங்கதிகள்

மோசேயின் சட்டத்தின்படி எட்டாம் நாளில் மரியாளும் யோசேப்பும் அந்தக் குழந்தைக்கு சுன்னத்து செய்து, சொல்லப்பட்டபடியே அவருக்கு இயேசு என்று பெயரிட்டார்கள். (லூக்கா 1:31) பின்பு 40-⁠வது நாள் பிள்ளையை பெத்லகேமிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த எருசலேம் ஆலயத்துக்கு தூக்கிக்கொண்டு போனார்கள். ஏழை எளியோருக்காக சட்டம் கொடுத்த சலுகையின்படி இரண்டு காட்டுப் புறாக்களையோ புறாக்குஞ்சுகளையோ கொண்டுபோய் அங்கு சுத்திகரிப்பு பலியைச் செலுத்தினார்கள். மற்ற பெற்றோர்கள் வெள்ளாட்டுக்கடாவையும் ஒரு புறாவையும் பலி செலுத்துவதைப் பார்த்தபோது அவர்களுக்கு மனசங்கடமாக இருந்திருந்தால்கூட, அப்படிப்பட்ட உணர்வையெல்லாம் ஓரங்கட்டி வைத்திருப்பார்கள். எப்படியிருந்தாலும்சரி, அங்கு போயிருந்த சமயத்தில் அவர்கள் மிகுந்த ஊக்கம் பெற்றார்கள்.​—லூக்கா 2:​21-⁠24.

சிமியோன் என்ற வயதான மனிதர் அவர்களிடம் வந்து, மரியாள் தன் இருதயத்தில் பொக்கிஷமாகப் பூட்டிவைப்பதற்கு இன்னும் பல சங்கதிகளைச் சொன்னார். தான் இறப்பதற்கு முன்பு மேசியாவைப் பார்ப்பார் என்ற வாக்குறுதியை சிமியோன் பெற்றிருந்தார்; அந்தக் குழந்தை இயேசுவே முன்னறிவிக்கப்பட்ட மீட்பர் என்பதை யெகோவாவின் சக்தி அவருக்கு வெளிப்படுத்தியது. மரியாள் சகிக்க வேண்டியிருந்த வேதனையைக் குறித்தும் அவளுக்குச் சொன்னார். ஒரு பெரிய வாள் அவளுடைய இதயத்தில் ஊடுருவிப் பாய்வதைப் போல் அவள் உணருவாள் என்றும் சொன்னார். (லூக்கா 2:​25-⁠35) முப்பது ஆண்டுகளுக்குப்பின் அவளுக்கு நேரிட்ட அந்த வேதனையைத் தாங்கிக்கொள்வதற்கு, திகிலூட்டும் இவருடைய வார்த்தைகள்கூட உதவியிருக்கும். அன்னாள் என்ற பெயருடைய ஒரு தீர்க்கதரிசினி இளந்தளிர் இயேசுவைப் பார்த்து, எருசலேமுக்கு வரவிருந்த மீட்பை எதிர்பார்த்துக்கொண்டிருந்த எல்லாரிடமும் அவரைக் குறித்து பேசினாள்.​​⁠⁠லூக்கா 2:36–38.

மரியாளும் யோசேப்பும் அந்தக் குழந்தையை எருசலேமிலிருந்த யெகோவாவின் ஆலயத்திற்குக் கொண்டுவரத் தீர்மானித்தது எப்பேர்ப்பட்ட ஒரு நல்ல காரியம்! யெகோவாவின் ஆலயத்திற்கு தங்களுடைய மகன் வாழ்நாள் பூராவும் தவறாமல் வருவதற்கு இப்பொழுதே அவர்கள் நல்ல அஸ்திவாரம் போட்டார்கள். அங்கு போயிருந்தபோது யெகோவாவின் சேவைக்காக தங்களுடைய சக்திக்கு இயன்ற அனைத்தையும் கொடுத்து, அங்கிருந்து அறிவுரையையும் உற்சாகத்தையும் பெற்று வீடு திரும்பினார்கள். தியானிப்பதற்கும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் இருதயத்தில் ஆன்மீகக் காரியங்களை நிரப்பிக்கொண்டு, மரியாள் உண்மையிலேயே விசுவாசத்தில் புதுப்பலம் பெற்றவளாய் ஆலயத்திலிருந்து அந்தத் தினத்தில் திரும்பியிருப்பாள்.

இன்றுள்ள பெற்றோர் இந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதைப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது! யெகோவாவின் சாட்சிகளாய் இருக்கிற பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை வாரந்தவறாமல் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு அழைத்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய சக விசுவாசிகளுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளை அளித்து, தங்களால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறார்கள். இதனால் அவர்கள் புத்துணர்ச்சியையும் புதுத்தெம்பையும் பெற்று, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு அநேக நற்காரியங்களை மனதில் நிரப்பிக்கொண்டு வீடு திரும்புகிறார்கள். நீங்களும் அவர்களுடைய கூட்டங்களுக்கு வரும்படி அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். அப்படி வந்தால், மரியாளைப் போலவே உங்களுடைய விசுவாசமும் தழைத்தோங்கும். (w08 10/1)

[அடிக்குறிப்புகள்]

a இந்தப் பதிவுக்கும், முன்பு ஒருமுறை அவள் மேற்கொண்ட பயணத்தைப் பற்றிய பதிவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கவனித்தீர்களா? முன்பு, எலிசபெத்தைச் சந்திப்பதற்கு ‘மரியாள் புறப்பட்டு . . . சென்றதாக’ அந்தப் பதிவு வாசிக்கிறது. (லூக்கா 1:39) அந்தச் சமயத்தில், நிச்சயம் மட்டுமே செய்யப்பட்டிருந்ததால், யோசேப்பிடம் கேட்காமலேயே மரியாள் முடிவெடுத்திருப்பாள். ஆனால், இப்போது அவர்களுக்குத் திருமணம் ஆகியிருந்ததால் இந்தப் பயணத்தைக் குறித்து யோசேப்பே முடிவெடுக்க வேண்டியிருந்தது, மரியாள் அல்ல.

b அந்தக் காலத்தில் பட்டணத்துக்கு வரும் பயணிகளுக்கும், வணிகர் கூட்டத்தினருக்கும் தங்குவதற்கு இடமளிப்பது வழக்கம்.

c மேய்ப்பர்கள் அந்தச் சமயத்தில் மந்தைகளுடன் வெளியில் தங்கியிருந்தார்கள் என்பதை பைபிளின் காலக்கணக்கு உண்மையென நிரூபிக்கிறது: மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தைகளை வீட்டருகே பட்டியில் அடைத்திருக்கும் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்து பிறந்திருக்க முடியாது. மாறாக, அக்டோபர் மாத ஆரம்பத்தில்தான் அவர் பிறந்திருக்க வேண்டும்.