Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இறந்தவர்களுக்கான நம்பிக்கை பற்றி

இறந்தவர்களுக்கான நம்பிக்கை பற்றி

இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்

இறந்தவர்களுக்கான நம்பிக்கை பற்றி

இறந்தவர்களை மீண்டும் சந்திக்க முடியும் என்பதை மெய்ப்பித்துக்காட்ட குறைந்தபட்சம் மூன்று நபர்களை இயேசு உயிர்த்தெழுப்பினார். (லூக்கா 7:11–17; 8:49–56; யோவான் 11:1–45) உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி புரிந்துகொள்ள, முதலில் மரணம் ஏன் வந்தது, எப்படி வந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஏன் வியாதிப்படுகிறோம், ஏன் மரிக்கிறோம்?

மக்களின் பாவங்களை இயேசு மன்னித்தபோது அவர்கள் குணமடைந்தார்கள். உதாரணமாக, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவனை இயேசு சந்தித்தபோது, “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி,” பக்கவாத நோயாளியைப் பார்த்து “நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ” என்றார். (மத்தேயு 9:2–6) எனவே, வியாதிக்கும் மரணத்திற்கும் பாவமே மூலகாரணம். முதல் மனிதனான ஆதாமிடமிருந்தே பாவமுள்ள இயல்பை நாம் பெற்றோம்.​—லூக்கா 3:38; ரோமர் 5:⁠12.

இயேசு ஏன் மரித்தார்?

இயேசு பாவமே செய்யவில்லை. அதனால், அவர் மரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், நம் பாவங்களுக்கான விலையை செலுத்துவதற்காக அவர் தமது உயிரைக் கொடுத்தார். ‘பாவமன்னிப்பு உண்டாகும்படி’ தம்முடைய இரத்தம் ‘அநேகருக்காகச் சிந்தப்படும்’ என்று கூறினார்.​—மத்தேயு 26:⁠28.

“மனிதகுமாரனும் மற்றவர்களிடமிருந்து சேவை பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் அநேகருக்காகத் தம்முடைய உயிரை மீட்புவிலையாய்க் கொடுப்பதற்குமே வந்தார்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 20:​28, NW) தாம் செலுத்திய விலை மக்களை மரணத்திலிருந்து மீட்டதால் அதை “மீட்புவிலை” என்று அழைத்தார். அவர்கள் “வாழ்வு பெறுவதற்காக, அதுவும் நீடிய வாழ்வு பெறுவதற்காக வந்திருக்கிறேன்” என்றும் இயேசு சொன்னார். (யோவான் 10:​10, NW) இறந்தவர்களுக்கான நம்பிக்கையைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு, இப்போது அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இறக்கும்போது என்ன நேரிடுகிறது?

ஒருவர் மரிக்கும்போது என்ன நேரிடுகிறது என்பதை தம் நண்பன் லாசரு இறந்தபோது இயேசு விவரித்தார். அவர் தம் சீடர்களிடம், “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்ப [பெத்தானியாவுக்குப்] போகிறேன் என்றார். . . . அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக் குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச்” சொன்னார்.​—யோவான் 11:1–14.

லாசருவை இயேசு உயிர்த்தெழுப்பிய சமயத்தில் அவர் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகியிருந்தன. அந்தச் சமயத்தில், ‘அப்படி நேர்ந்தது, இப்படி நேர்ந்தது’ என்று லாசரு சொன்னதாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. மரித்திருந்தபோது அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார், அவருக்கு எதுவுமே தெரியவில்லை.​—பிரசங்கி 9:​5, 10; யோவான் 11:17–44.

இறந்தவர்களுக்கு என்ன நம்பிக்கை?

இறந்தவர்கள் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்புடன் மீண்டும் உயிர்பெற்று வருவார்கள். “காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது [இயேசுவின்] குரலைக் கேட்டு வெளியே வருவர்” என்று இயேசுவே சொன்னார்.​—யோவான் 5:​28, 29, பொது மொழிபெயர்ப்பு.

நம்மீதுள்ள அன்பின் காரணமாக கடவுள் இந்த நம்பிக்கையை அளித்திருக்கிறார். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று இயேசு சொன்னார்.​—யோவான் 3:16; வெளிப்படுத்துதல் 21:​4, 5. (w08 11/1)

கூடுதல் தகவலுக்கு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் 6-⁠ஆம் அதிகாரத்தைப் பாருங்கள் a

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.