Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

ஜெபத்தில் இயேசு ஏன் யெகோவாவை “அபா” என்று அழைத்தார்?

“அபா” என்ற அரமேயிக் வார்த்தை “அப்பா” என்ற அர்த்தத்தைத் தருகிறது. பைபிளில் இந்த வார்த்தை மூன்று இடங்களில் காணப்படுகிறது; அந்த மூன்று இடங்களிலும், ஜெபத்தில் பரலோகத் தகப்பனான யெகோவாவைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தை உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது?

தி இண்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “இயேசுவின் காலத்தில் அபா என்ற வார்த்தை, முக்கியமாகப் பிள்ளை தன் அப்பாவை அன்னியோன்னியத்தோடும் மரியாதையோடும் அழைப்பதற்கு அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப்பட்டது.” இது பாசத்தோடு அழைப்பதற்கான வார்த்தையாகவும் பிள்ளை கற்றுக்கொண்ட முதல் வார்த்தையாகவும் இருந்தது. இயேசு தம் தகப்பனிடம் மிக ஊக்கமாய் ஜெபம் செய்தபோது இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர் இறப்பதற்கு சில மணிநேரங்கள் முன்பு, கெத்செமனே தோட்டத்தில் ஜெபம் செய்தபோது “அபா, அப்பா” என்று யெகோவாவை அழைத்தார்.மாற்கு 14:36.

“கிரேக்க, ரோம காலத்திற்குரிய யூத இலக்கியங்களில் அபா என்ற வார்த்தை கடவுளுக்குப் பயன்படுத்தப்பட்டதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை; ஏனென்றால், இப்படிக் கடவுளை அன்னியோன்னியமாக அழைப்பது அவமரியாதைக்குரியதாகக் கருதப்பட்டிருக்க வேண்டும்” என்று மேற்குறிப்பிடப்பட்ட புத்தகம் தொடர்ந்து சொல்கிறது. இருந்தாலும், “இயேசு . . . இந்த வார்த்தையை ஜெபத்தில் பயன்படுத்தியது, கடவுளுடன் அவருக்கிருந்த மிக நெருக்கமான பந்தத்தை மறைமுகமாய் உறுதிப்படுத்தியது.” பைபிளில் இந்த வார்த்தை இன்னும் இரண்டு இடங்களில், அதாவது அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதங்களில், காணப்படுகிறது; இது, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் தங்கள் ஜெபங்களில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள் என்பதைக் காட்டுகிறது.—ரோமர் 8:15; கலாத்தியர் 4:6. (w09 4/1)