Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் தரும் செல்வம்

கடவுள் தரும் செல்வம்

கடவுள் தரும் செல்வம்

நீ ங்கள் கடவுளுக்கு உண்மையுள்ளவராய் இருந்தால், அவர் உங்களுக்குச் செல்வத்தைக் கொடுத்து ஆசீர்வதிப்பாரா? ஒருவேளை ஆசீர்வதிக்கலாம், ஆனால் அது நீங்கள் நினைக்கிற விதமான செல்வமாக இல்லாதிருக்கலாம். இயேசுவின் தாயான மரியாளை எடுத்துக்கொள்ளுங்கள். காபிரியேல் தூதன் அவருக்குத் தோன்றி, அவர் கடவுளுடைய ‘மகா தயவை’ பெற்றிருப்பதாகவும், கடவுளுடைய மகனைப் பெற்றெடுக்கப் போவதாகவும் சொன்னார். (லூக்கா 1:28, 30-32) ஆனாலும், அவர் வசதிபடைத்தவராக இருக்கவில்லை. இயேசு பிறந்த பிறகு பலிசெலுத்துவதற்கு, “ஒரு ஜோடி காட்டுப்புறாவை அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளை” மரியாள் அளித்தார்; ஏழை எளியவர்கள் யெகோவாவுக்கு வழக்கமாகக் கொடுக்கிற பலிகளே அவை.லூக்கா 2:24; லேவியராகமம் 12:8.

மரியாள் வசதியற்றவராக இருந்ததால், அவர் கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெறவில்லை என்று அர்த்தமா? நிச்சயம் இல்லை; தன்னுடைய சொந்தக்காரரான எலிசபெத்தைச் சந்திக்க அவர் சென்றிருந்தபோது, “எலிசபெத் கடவுளுடைய சக்தியினால் நிரப்பப்பட்டு, ‘பெண்களுக்குள்ளே நீ [மரியாள்] ஆசீர்வதிக்கப்பட்டவள்; உன் வயிற்றிலுள்ள சிசுவும் ஆசீர்வதிக்கப்பட்டது!’” என்று சொன்னார். (லூக்கா 1:41, 42) ஆம், கடவுளுடைய அன்பு மகனைப் பூமியில் பெற்றெடுக்கும் பாக்கியத்தை மரியாள் பெற்றார்.

இயேசுவும்கூட செல்வந்தராக இருக்கவில்லை. அவர் ஏழ்மையான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தது மட்டுமல்லாமல், பூமியிலிருந்த காலமெல்லாம் ஏழையாகவே வாழ்ந்தார். ஒரு சமயம் தம்முடைய சீடனாவதற்கு விரும்பிய ஒருவரிடம், “குள்ளநரிகளுக்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குத் தங்குமிடங்களும் உள்ளன; மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை” என்றார். (லூக்கா 9:57, 58) ஆனாலும், இயேசு கிறிஸ்து இந்தப் பூமிக்கு வந்தது, தம்முடைய சீடர்கள் மாபெரும் செல்வந்தராவதற்கு வாய்ப்பளித்தது. இதை அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “அவர் . . . உங்களுக்காக ஏழையானார்; தம்முடைய வறுமையினால் உங்களைச் செல்வந்தர்களாக்குவதற்காக அப்படியானார்.” (2 கொரிந்தியர் 8:9) எவ்வகையான செல்வத்தை இயேசு தம் சீடர்களுக்குக் கொடுத்தார்? இன்று நாம் எப்படிப்பட்ட செல்வத்தைப் பெற்றிருக்கிறோம்?

எப்படிப்பட்ட செல்வங்கள்?

ஒரு பணக்காரன் கடவுளைவிட பணத்தையே நம்புவதால், அது விசுவாசத்திற்குப் பெரும்பாலும் தடையாக இருக்கிறது. “பணக்காரர்கள் கடவுளுடைய அரசாங்கத்திற்குள் போவது எவ்வளவு கடினம்!” என்று இயேசு சொன்னார். (மாற்கு 10:23) அப்படியானால், இயேசு தம் சீடர்களுக்குக் கொடுத்த செல்வம் பொருள் செல்வமாக இருக்க முடியாது.

சொல்லப்போனால், முதல் நூற்றாண்டிலிருந்த பெரும்பாலான கிறிஸ்தவர்கள் வசதியற்றவர்களாகவே இருந்தார்கள். பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவன் பேதுருவிடம் பிச்சை கேட்டபோது, அவர் “தங்கமும் வெள்ளியும் என்னிடம் இல்லை, ஆனால் என்னிடம் இருப்பதை உனக்குத் தருகிறேன்: நாசரேத்தூர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் சொல்கிறேன், எழுந்து நட!” என்று பதிலளித்தார்.—அப்போஸ்தலர் 3:6.

கிறிஸ்தவச் சபையிலிருந்த பெரும்பாலோர் ஏழைகளாக இருந்தார்கள் என்பதைச் சீடனாகிய யாக்கோபுவின் வார்த்தைகளும் காட்டுகின்றன. அவர் இவ்வாறு எழுதினார்: “என் அன்பான சகோதரர்களே, கேளுங்கள். இந்த உலகத்தில் ஏழைகளாக இருப்பவர்களை, விசுவாசத்தில் செல்வந்தர்களாகவும் தம்மீது அன்பு காட்டுகிறவர்களுக்குத் தாம் வாக்குறுதி அளித்த அரசாங்கத்தின் வாரிசுகளாகவும் இருப்பதற்குக் கடவுள் தேர்ந்தெடுத்தார், அல்லவா?” (யாக்கோபு 2:5) அதுமட்டுமல்ல, கிறிஸ்தவச் சபையின் பாகமாவதற்கு, “மனித கண்ணோட்டத்தில் . . . ஞானிகளாகவோ செல்வாக்குள்ளவர்களாகவோ உயர்குடியில் பிறந்தவர்களாகவோ” இருந்த அநேகர் அழைக்கப்படவில்லை என அப்போஸ்தலன் பவுலும் சொன்னார்.1 கொரிந்தியர் 1:26.

இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்குப் பொருள் செல்வத்தைக் கொடுக்கவில்லை என்றால், வேறென்ன செல்வத்தைக் கொடுத்தார்? சிமிர்னா சபைக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், “நீ உபத்திரவப்படுகிறாய் என்றும், வறுமையில் கஷ்டப்படுகிறாய் என்றும் எனக்குத் தெரியும்; ஆனாலும் நீ பணக்காரனாக இருக்கிறாய்” என்று தெரிவித்தார். (வெளிப்படுத்துதல் 2:8, 9) சிமிர்னாவிலிருந்த கிறிஸ்தவர்கள் வறியவர்களாக இருந்தபோதிலும் தங்கத்தையோ வெள்ளியையோவிட விலைமதிப்புள்ள செல்வத்தைப் பெற்றிருந்தார்கள். கடவுள் மீதுள்ள விசுவாசம், அவருக்கு உண்மையாய் இருப்பது ஆகியவையே அவர்கள் பெற்ற செல்வங்கள். விசுவாசம் விலைமதிப்புள்ளதாய் இருப்பதற்குக் காரணம், அது ‘எல்லாரிடமும் இல்லை.’ (2 தெசலோனிக்கேயர் 3:2) விசுவாசம் இல்லாதவர்கள் உண்மையில் கடவுளுடைய பார்வையில் ஏழைகள்.வெளிப்படுத்துதல் 3:17, 18.

விசுவாசத்தால் கிடைக்கும் செல்வம்

விசுவாசம் வேறு என்ன விதங்களில் விலைமதிப்புள்ளது? கடவுள்மீது விசுவாசம் உள்ளவர்கள், அவருடைய ‘கருணை, சகிப்புத்தன்மை, நீடிய பொறுமை’ ஆகிய செல்வங்களிலிருந்து நன்மை அடைகிறார்கள். (ரோமர் 2:4) அவர்கள் இயேசுவின் மீட்புப் பலியில் விசுவாசம் வைப்பதால், தங்கள் ‘மீறுதல்களிலிருந்து மன்னிப்பையும்’ பெறுகிறார்கள். (எபேசியர் 1:7) மேலுமாக, ‘கிறிஸ்துவின் போதனையிலிருந்து’ ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். (கொலோசெயர் 3:16) அவர்கள் விசுவாசத்தோடு கடவுளிடம் ஜெபிக்கையில், “எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம்” அவர்களுடைய இருதயத்தையும் மனதையும் காத்துக்கொள்கிறது; இது அவர்களுக்குத் திருப்தியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது.பிலிப்பியர் 4:7.

கடவுள்மீது அவருடைய மகன் இயேசு கிறிஸ்து மூலமாய் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு, இந்த எல்லா நன்மைகளோடுகூட முடிவில்லா வாழ்வைப் பெறும் அருமையான எதிர்பார்ப்பும் உள்ளது. இயேசு கிறிஸ்து சொன்ன பின்வரும் வார்த்தைகள் நம் எல்லாருக்கும் நன்கு தெரிந்ததே: “கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மீது அன்பு காட்டினார். (யோவான் 3:16) கடவுளையும் அவருடைய மகனையும் பற்றி ஒருவர் நுட்பமாக அறிந்து கொள்ளும்போது அந்த அருமையான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. அதைப் பற்றி இயேசு இவ்வாறு சொன்னார்: “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும் நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்.”யோவான் 17:3.

கடவுள், முக்கியமாக ஆன்மீக ரீதியில் நம்மை ஆசீர்வதித்தாலும், அதன் மூலம் உணர்ச்சி ரீதியிலும் உடல் ரீதியிலும்கூட நாம் நன்மை அடைகிறோம். உதாரணமாக, பிரேசில் நாட்டைச் சேர்ந்த டாலைடியோ என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி அவர் தெள்ளத் தெளிவாக அறிந்துகொள்வதற்கு முன்பு அவருக்குக் குடிப்பழக்கம் இருந்தது. அதனால், குடும்பத்தில் பயங்கரமான குழப்பங்கள் உண்டாயின. அதுபோக, அவர் பணத்திற்கும் திண்டாடினார். பின்னர், அவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தார்; அதனால், அடியோடு மாறிவிட்டார்.

பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள், கெட்ட பழக்கங்களை விட்டுவிட டாலைடியோவுக்கு உதவின. அவர் ஆன்மீக ரீதியில் அந்தளவுக்கு முன்னேறியதால், “குடிப்பதற்காக பார் பாராகச் சென்றுகொண்டிருந்த நான் இப்போது ஊழியத்திற்காக வீடு வீடாகச் செல்கிறேன்” என்று சொன்னார். அவர் முழுநேர ஊழியராக ஆகியிருந்தார். அப்படிப்பட்ட மாற்றத்தால், அவருடைய உடல்நிலை தேறியதோடு பணக்கஷ்டமும் தீர்ந்தது. அவர் இவ்வாறு சொன்னார்: “குடிப்பதற்குச் செலவிட்ட பணத்தை இப்போது கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக அல்லது எனக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காகச் செலவிடுகிறேன்.” அவர் ஆன்மீகச் சிந்தை உள்ளவர்களுடன் பழகுவதால் நிறைய நல்ல நண்பர்களும் அவருக்குக் கிடைத்திருக்கிறார்கள். கடவுளைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் கனவிலும் நினைத்துப் பார்த்திராத நிம்மதியையும் திருப்தியையும் அவர் இப்போது அனுபவிக்கிறார்.

யெகோவாமீது விசுவாசத்தை வளர்த்துக்கொள்வதால் வாழ்வு வளம்பெறும் என்பதற்கு மற்றொரு உதாரணமாகத் திகழ்பவர் ரேனாடோ. அவருடைய புன்னகை பூத்த இனிய முகத்தைப் பார்த்தால், அவர் பிறப்பிலேயே அநீதியைச் சந்தித்தவர் என்பதை நம்பவே முடியாது. அவருடைய அம்மா, பிரசவித்த கையோடு அவரைத் தூக்கியெறிந்து விட்டார். அவரைப் பையில் வைத்து ஒரு பெஞ்சுக்கு அடியில் போட்டுவிட்டார். உடம்பெல்லாம் கீறல்களும் காயங்களுமாக தொப்புள்கொடி அறுக்கப்படாமல் கிடந்தார். அவ்வழியே நடந்து சென்ற இரண்டு பெண்கள் பெஞ்சின் கீழே உள்ள பை அசைவதைப் பார்த்தார்கள். யாரோ பூனைக்குட்டியை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என அவர்கள் முதலில் நினைத்தார்கள். ஆனால், அதில் ஒரு பச்சிளங்குழந்தையைப் பார்த்ததும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக எடுத்துச் சென்றார்கள்.

அந்தப் பெண்களில் ஒருவர் யெகோவாவின் சாட்சி; அவர் ரீட்டா என்ற மற்றொரு யெகோவாவின் சாட்சியிடம் இந்தக் குழந்தையைப் பற்றி சொன்னார். ரீட்டாவுக்கு நிறைய முறை குழந்தைகள் செத்துப் பிறந்திருக்கின்றன; அவருக்கு ஒரேவொரு பெண் குழந்தை மட்டுமே இருந்தது. ஓர் ஆண் குழந்தை வேண்டுமென அவர் ரொம்ப ஆசைப்பட்டார். அதனால், ரேனாடோவைத் தத்தெடுத்தார்.

ரேனாடோ சிறுவனாக இருந்தபோதே தான் அவனுடைய அம்மா இல்லையென ரீட்டா சொல்லிவிட்டார். ஆனாலும், அவனை அன்போடும் பாசத்தோடும் வளர்த்தார்; பைபிள் நெறிகளை அவனுடைய மனதில் பதிய வைப்பதற்கு அரும்பாடு பட்டார். அவன் வளர்ந்ததும், பைபிள் விஷயங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தான். சற்றும் நம்ப முடியாத விதத்தில் தான் காப்பாற்றப்பட்டதை நினைத்து நினைத்து அவன் நெகிழ்ந்து போனான். சங்கீதக்காரன் தாவீதின் பின்வரும் வார்த்தைகளை வாசிக்கும்போதெல்லாம் அவனுடைய கண்கள் குளமாகின்றன: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.”—சங்கீதம் 27:10.

யெகோவா செய்த எல்லாவற்றிற்கும் நன்றிக்கடனாக 2002-ல் அவன் ஞானஸ்நானம் பெற்றான். மறு வருடமே முழுநேர கிறிஸ்தவ ஊழியராக ஆனான். தன்னுடைய சொந்த அம்மா, அப்பா யாரென்று அவனுக்கு இன்னும் தெரியாது, தெரியாமலே போய்விடலாம். என்றாலும், அன்பும் அரவணைப்பும் தருகிற தகப்பனான யெகோவாவைப் பற்றி அறிந்து அவர்மேல் விசுவாசம் வைப்பதை தான் பெற்ற மிகப் பெரிய பரிசுகளில் ஒன்றாக ரேனாடோ கருதுகிறான்.

உங்கள் வாழ்வு உண்மையிலேயே வளம்பெற நீங்களும்கூட கடவுளோடு நெருங்கிய பாசப் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள ஏங்கலாம். கடவுளாகிய யெகோவாவோடும் அவருடைய மகனோடும் அப்படிப்பட்ட பிணைப்பைப் பணக்காரர், ஏழை என்ற பாகுபாடின்றி எல்லாராலும் ஏற்படுத்திக்கொள்ள முடியும். அது பொருள் செல்வத்தைத் தராது, ஆனால் இவ்வுலகிலுள்ள அத்தனை பணத்தாலும் தர முடியாத மனநிம்மதியையும் திருப்தியையும் தரும். ஆம், நீதிமொழிகள் 10:22-ல் உள்ள வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.”

தம்மை அண்டி வருவோரிடம் யெகோவா தேவன் மிகுந்த அக்கறை காட்டுகிறார். “ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்” என்று அவர் சொல்கிறார். (ஏசாயா 48:18) நல்ல உள்நோக்கத்தோடும் மனப்பான்மையோடும் தம்மை அண்டி வருவோரை அபரிமிதமாய் ஆசீர்வதிப்பதாக அவர் வாக்குக் கொடுக்கிறார். “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.”—நீதிமொழிகள் 22:4. (w09 09/01)

[பக்கம் 6-ன் சிறுகுறிப்பு]

கடவுள்மீதுள்ள விசுவாசம் நிம்மதியையும், திருப்தியையும், மகிழ்ச்சியையும் தரும்

[பக்கம் 5-ன் படம்]

இயேசுவின் குடும்பத்தார் ஏழையாக இருந்தபோதிலும் கடவுள் அவர்களை அபரிமிதமாக ஆசீர்வதித்தார்