Skip to content

“இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”

“இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”

“இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”

இந்தச் சிறு புத்தகத்தின் அட்டையில் காட்டப்பட்டிருக்கும் சந்தோஷமுள்ள ஜனங்களைப் பாருங்கள். அவர்களில் ஒருவராக இருக்க உங்களுக்கு விருப்பமா? ஏன், கட்டாயமாகவே, என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஏனெனில் இங்கே, சகல மனிதவர்க்கத்தாலும் வாஞ்சிக்கப்படுகிற சமாதானமும் ஒற்றுமையும் இருக்கிறது. சகல ஜாதியாரையும் சேர்ந்த ஜனங்களான—கருப்பு நிறமுள்ள மனிதர், வெள்ளையர், மஞ்சள் நிறத்தார்—ஆகிய யாவரும் ஒரே குடும்பமாகக் கூடிக் குலாவுகிறார்கள். என்ன ஆனந்தம்! என்ன ஒற்றுமை! இந்த ஜனங்கள் அணு குண்டுகளிலிருந்து வெளிப்படும் விஷப்பொருளைக் குறித்தோ அல்லது பயங்கரவாதிகளின் பயமுறுத்தலைப் பற்றியோ கவலைப்பட்டுக் கொண்டில்லை என்பது தெளிவாயிருக்கிறது. யுத்த ஜெட் ஆகாயக் கப்பல்கள், இந்த அழகிய பூங்காவின் மேல் பரவியுள்ள சமாதானம் நிறைந்த வானங்களைச் சிதறடிப்பதில்லை. இங்கே போர்ச் சேவகர்களோ, டாங்குகளோ, துப்பாக்கிகளோ கிடையா. அமைதியையும் ஒழுங்கையும் நிலைநிறுத்த ஒரு போலீஸ் தடியுங்கூட இங்கு அவசியமில்லை. யுத்தமும் சட்ட விரோதமான காரியமும் இங்கே ஒன்றுமே இருப்பதில்லை. வீடு கிடையாமல் அலையும் கஷ்டம் இங்கில்லை. ஏனெனில், சொந்தமானது என்றழைக்கக்கூடிய அவரவருக்குரிய ஒரு அழகிய வீட்டை ஒவ்வொருவரும் உடையவர்களாயிருக்கிறார்கள்.

2 அந்தப் பிள்ளைகளைச் சற்றுப் பாருங்கள்! அவர்கள் விளையாட்டு, பார்ப்பதற்கு ஆனந்தமாயிருக்கிறது. விளையாடுவதற்கு எப்பேர்ப்பட்ட மிருகங்கள்! இந்தப் பூங்காவனத்தில் இரும்பு கம்பியடைப்பு அவசியமில்லை, ஏனெனில் மிருகங்கள் யாவும் மனிதவர்க்கத்துடனும், தங்களுக்குள் ஒன்றோடொன்றும் சமாதானமாயிருக்கின்றன. சிங்கமும் ஆட்டுக்குட்டியுங்கூட சிநேகமாகிவிட்டிருக்கின்றன. பகட்டழகு வாய்ந்த நிறமுள்ள பறவைகள் இங்குமங்கும் படபடவென்று சிறகடித்துப் பறந்து கொண்டிருப்பதைப் பாருங்கள். அவற்றின் அழகிய பாட்டுகள் பிள்ளைகளின் சிரிப்பொலியுடன் சேர்ந்து ஆகாயத்தை நிரப்பிக் கொண்டிருப்பதைக் கேளுங்கள். அடைத்து வைக்கும் கூண்டுகள் கிடையாதா? இல்லை. ஏனெனில், இந்த ராஜ்யத்தில் எல்லாம் சுயாதீனமும் எல்லையற்ற ஆனந்தமுமாகவே இருக்கிறது. இந்தப் பூக்களின் இனிய நறுமணத்தைச் சற்று முகருங்கள், சிறிய அலைகளுடன் புரண்டோடிக் கொண்டிருக்கும் அச்சிறிய ஓடையின் சல சலப்பைக் கவனித்துக் கேளுங்கள். உணர்ச்சியூட்டியெழுப்பும், மிதமாகப் படும் சூரிய வெப்பத்தை உணருங்கள். ஆ! அந்தக் கூடையிலிருக்கும் பழத்தை ருசிபார்த்தால் என்னமாயிருக்கும், ஏனெனில் அது பூமி விளைவிக்கக்கூடிய மிகச் சிறந்ததாகும், இந்த மகிமையுள்ள பூங்காவைப் போன்றத் தோட்டத்தில் காணப்படுவதும் அனுபவிக்கப்படுவதுமான எல்லாவற்றையும் போல் வெகு நேர்த்தியானதாகும்.

3 ‘ஆனால், சற்று நிறுத்துங்கள்,’ என்று யாரோ கூறுகிறார்கள். ‘முதிர்வயதான ஜனங்கள் எங்கே? இந்தச் சந்தோஷமுள்ள கூட்டத்தாரோடு சந்தோஷமனுபவிப்பதில் அவர்களும் பங்குகொள்ள வேண்டாமா?’ உண்மையில் இந்த முதிர் வயதான ஜனங்கள் அங்குதான் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மறுபடியும் வாலிபராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பூங்காவில் ஒருவரும் முதிர் வயதினால் இறப்பதில்லை. இப்பொழுது இளைஞராயிருப்பவர்கள் முதிர்ந்த மனித பருவத்திற்கு வளருகிறார்கள். பின் அதற்கு மேலும் கிழவர்களாகிறதில்லை. 20 வயதோ 200 வயதோ எவ்வாறிருந்தாலும் சரி, இந்தப் பூங்காவில் வாழும் லட்சக்கணக்கான ஆட்களாகிய இவர்கள் ஒவ்வொருவரும் பரிபூரண ஆரோக்கியத்தில் வாலிப வாழ் நிலைக்குரிய உற்சாகத்தில் களிகூருகிறார்கள். லட்சக்கணக்கானோர் என்று சொல்லுகிறீர்களா? ஆம் லட்சக்கணக்கானோர், ஏனெனில் இந்தப் பூங்காவனம் பூமியிலுள்ள ஒவ்வொரு தேசத்தினுள்ளும் விரிவாக்கப்பட்டிருக்கிறது. பியூஜியிலிருந்து ஆண்டீஸ் மலைகள் வரையாகவும், ஹாங்காங்கிலிருந்து மத்தியத்தரை பிரதேசம் வரையாகவும், நம்முடைய பூமியின் கடையாந்தரங்கள் வரையாகவும் உயிர்களாலும், சமாதானத்தாலும் அழகாலும் நிரம்பியிருக்கும். ஏனெனில், பூமி முழுவதும் ஒரு பரதீஸிய பூங்காவனமாக மாற்றப்பட்டிருக்கிறது. இது பூமியெங்கும் திரும்பப் புதுப்பிக்கப்பட்ட பரதீஸாக இருக்கும்.

4 ‘நம்ப முடிகிறதில்லை,’ என்று நீங்கள் சொன்னீர்களா? என்றாலும், முதலாவதாக, இதை நிரூபிக்கும் உண்மைகளைக் கவனியுங்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் தொந்தரவு நிறைந்தத் தற்போதைய காரிய ஒழுங்குமுறையின் அழிவைத் தப்பிப் பிழைத்து நம்முடைய அட்டைப் படத்தில் வர்ணித்திருக்கும் பரதீஸுக்குள் பிரவேசிக்க முடியும். a

பரதீஸை விளக்கிக் காட்டும் புத்தகம்

5 இந்த மகிமையுள்ள காரியங்கள் யாவும், இவற்றின் நிச்சயமும், ஒரு புத்தகத்தில் விளக்கிக் காட்டப்பட்டிருக்கின்றன. இது எழுதப்பட்ட எந்தப் புத்தகத்திற்கும் மேலாகச் சிறந்த மிக அதிசயமான ஒரு புத்தகம். இதுவே பைபிள் என்றழைக்கப்படுகிறது. இது மிகப் பழமையான புத்தகம். இதன் பாகங்கள் ஏறக்குறைய 3500 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டவை. அதே சமயத்தில் இது, தற்கால வாழ்க்கைக்கு நடைமுறையில் பின்பற்றக்கூடிய நேர்த்தியான புத்திமதிகளை அளிப்பதில் எல்லாவற்றிற்கும் மேலான நவீன புத்தகமாயிருக்கிறது. இதன் தீர்க்கதரிசனங்கள் எதிர்காலத்திற்குச் சந்தோஷ நம்பிக்கையை எழுப்புகின்றன. இதுவே சரித்திரம் முழுவதிலும் எல்லாவற்றையும்விடச் சிறப்பாய் விற்பனையாகும் புத்தகம். முழு பைபிளாக அல்லது முக்கிய பகுதிகளாக 200,00,00,000-க்கும் மேற்பட்ட பிரதிகள் சுமார் 1810 மொழிகளில் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன.

6 வேறு எந்தப் பரிசுத்தப் புத்தகமும், இப்பேர்ப்பட்ட விதமாய் உலக முழுவதும் விநியோகிக்கப்பட்டில்லை. மேலும் மற்றப் புத்தகங்களில் பெரும்பான்மை இதைப்போல் அவ்வளவு பழமையாயும் இல்லை. முகமதிய மதத்திற்குரிய குரான் 1,400-க்கும் குறைவான ஆண்டுகள் பழமையானது. புத்தரும் கன்பூசியரும் ஏறக்குறைய 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார்கள். அவர்கள் எழுதினவைகள் அந்தக் காலத்திலிருந்து இருக்கின்றன. ஷின்டோவின் வேதங்கள் தற்போதைய முறையில் இயற்றப்பட்டு 1,200 ஆண்டுகளே ஆகின்றன. மொர்மோனின் புத்தகம் 160 ஆண்டுகளே பழமையானது. பைபிள் விவரித்துக் கூறுவதைப்போல் 6,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நிகழ்ந்துவரும் மனித சரித்திரத்தை அவ்வளவு திருத்தமாய் இந்தப் பரிசுத்த புத்தகங்கள் எதுவும் கூற முடியாது. ஆகவே, முதல் மதத்தைப் பற்றி அறிந்துணர, நாம் பைபிளினிடமே செல்ல வேண்டும். இந்த ஒரு புத்தகமே, மனிதவர்க்கம் முழுவதற்கும் ஒரு சர்வலோகச் செய்தியைக் கொண்டிருக்கிறது.

7 பைபிள் செய்தியின் ஞானமும் அழகும் சகல ஜாதிகளிலும், சகல வகையான வாழ்க்கை நிலைகளிலுமிருக்கும் சிந்தனையுள்ள மனிதரால் போற்றப்பட்டிருக்கிறது. பிரசித்திப்பெற்ற விஞ்ஞானியும் புவி ஈர்ப்பு விதியைக் கண்டுபிடித்தவருமாகிய சர் ஐசக் நியுட்டன்: “பைபிள் உண்மையென்று உறுதிசாட்சி கூறப்பட்டதுபோல் எந்த விஞ்ஞானங்களும் கூறப்பட்டில்லை” என்று கூறினார். “எனக்கு சுயாதீனத்தைக் கொடு, அல்லது மரணத்தைக் கொடு” என்ற இந்த வார்த்தைகளுக்காகப் பிரசித்திப் பெற்ற அமெரிக்கப் புரட்சி தலைவர் பாட்ரிக் ஹென்ரியும்: “அச்சிடப்பட்ட மற்ற எல்லா புத்தகங்களுக்கும் மேலாக மதிப்புக்குரியது பைபிளே” என்று கூறினார். பெரிய இந்து ஞானியாகிய மோகன்தாஸ் K. காந்தியுங்கூட ஒரு முறை இந்தியாவின் பிரிட்டிஷ் ராஜ்யப் பிரதிநிதியிடம் பின்வருமாறு கூறினார்: “இந்த மலைப் பிரசங்கத்தில் கிறிஸ்து வைத்தப் போதனைகளில் உம்முடைய நாடும் என்னுடைய நாடும் ஒன்றுபடும்போது, நாம் நம்முடைய பிரச்னைகளைத் தீர்த்துவிட்டிருப்போம். நம்முடைய நாடுகளின் பிரச்னைகளை மட்டுமல்லாமல், உலக முழுமையின் பிரச்னைகளையும் தீர்த்து விட்டிருப்போம்.” காந்தி, பைபிளிலுள்ள மத்தேயு 5-7 வரையான அதிகாரங்களைக் குறித்துப் பேசினார். இந்த அதிகாரங்களை நீங்கள் தாமே வாசித்து, அவற்றின் சக்திவாய்ந்த செய்தியின் பேரில், நீங்கள் ஊக்கமும் உணர்ச்சியுமூட்டப்படுகிறீர்களா இல்லையா என்பதைப் பாருங்கள்.

பைபிள்கிழக்கத்திய புத்தகம் 

8 பொதுவாகப் பலரால் நம்பப்படுகிறதற்கு எதிர்மாறாக பைபிள் மேற்கத்திய நாகரிகப் படைப்புமல்ல, அது அந்த நாகரிகத்தைப் பெருமைப்படுத்துவதுமில்லை. ஏறக்குறைய பைபிள் முழுவதுமே, கிழக்கத்திய நாடுகளில் எழுதப்பட்டது. இதை எழுதின மனிதர் யாவரும் கிழக்கத்தியரே, புத்தருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, பொ.ச. மு. 1513-ல் மத்திய கிழக்கில் வாழ்ந்த மோசே, ஆதியாகமம் என்றழைக்கப்படும், பைபிளின் முதல் புத்தகத்தை எழுதும்படி கடவுளால் ஏவப்பட்டான். இந்தத் தொடக்கத்திலிருந்து, பைபிள், அதன் கடைசி புத்தகமான வெளிப்படுத்துதல் வரை, விடாமல் ஒரே பொருந்திய பொருளைப் பின்பற்றுகிறது. பைபிள், பொ.ச. 98-ல், புத்தருக்கு ஏறக்குறைய 600 ஆண்டுகளுக்குப் பின் முழுமையாக முடிக்கப்பட்டது. பைபிள் வெவ்வேறுபட்ட அறுபத்தாறு புத்தகங்களாலாக்கப்பட்டிருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? ஆம், பைபிள் தன்னில்தானே ஒரு நூல் நிலையமாக இருக்கிறது!

9 இவ்வாறு, மோசேயின் காலத்திலிருந்து 1,600 ஆண்டு காலத்திற்கு மேலாக, பைபிளின் பொருந்திய பதிவை எழுதுவதில் ஏறக்குறைய 40 மனிதர் பங்கெடுத்தார்கள். தாங்கள் எழுதினவைகள், அழிவுள்ள மனிதனுக்கு வெகு மேலாக உயர்ந்த ஒரு வல்லமையால் ஏவப்பட்டு வெளிப்படுத்தப்பட்டன என்று அவர்கள் சாட்சி கொடுத்திருக்கிறார்கள். கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினான்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; அவைகள் உபதேசத்துக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும் நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” b (2 தீமோத்தேயு 3:16) மேலும் அப்போஸ்தலனாகிய பேதுரு பின்வருமாறு விளக்கினான்: ‘வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதல்ல. தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.’—2 பேதுரு 1:20, 21; 2 சாமுவேல் 23:2; லூக்கா 1:70.

10 பைபிள் இந்நாள் வரையாக வந்திருக்கிற வழிவகையும் தனிப்பட கவனிக்கத்தக்கச் சிறப்புடையது. ஏறக்குறைய 500 வருடங்களுக்கு முன் அச்சடித்தல் கண்டுபிடிக்கும் வரையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பைபிளின் நகல்களைக் கையால் எழுதி எடுக்க வேண்டியதிருந்தது. பூர்வ காலங்களின் வேறு எந்த இலக்கிய படைப்புகளும் இவ்வளவு சிரத்தையுடன் நகல்கள் எழுதப்படவும், நகல்களிலிருந்து மறு நகல்கள் எழுதப்படவும் இல்லை. இது மறுபடியும் மறுபடியுமாக நகல்கள் எடுக்கப்பட்டன, ஆனால் எப்பொழுதும் வெகு கவனமாகச் செய்யப்பட்டன. நகல்கள் எழுதினவர்கள் ஒருசில சிறிய பிழைகளையே செய்தனர், இவற்றை ஒத்துப் பார்ப்பது, கடவுள் ஏவின மூல வாக்கியத்தை நிலைநாட்டியிருக்கிறது. கையாலெழுதப்பட்ட பைபிள் நகல்களின் பேரில், முக்கிய நிபுணரான சர் பிரெட்ரிக் கெனியன்; “வேதாகமங்கள் அவை எழுதப்பட்டபடியே உண்மையாய் நம் காலம் வரை வந்திருக்கின்றன என்பதன் பேரில் எவ்வாறாவது சந்தேகப்படுவதற்கேதுவான கடைசி ஆதாரமும் இப்பொழுது நீக்கப்பட்டுவிட்டது” என்று கூறுகிறார். கையால் எழுதப்பட்ட பைபிளின் அல்லது அதன் பாகங்களின் நகல்கள் இன்று ஏறக்குறைய 16,000 இன்னும் இருக்கின்றன. சில, கிறிஸ்துவுக்கு முன்பான இரண்டாம் நூற்றாண்டு முதற்கொண்டும் அழியாமல் இன்னும் இருக்கின்றன. மேலும் பைபிள், அது முதலாவதாக எழுதப்பட்ட மூல பாஷைகளாகிய எபிரேயு, அரமேயிக், கிரேக்க மொழிகளிலிருந்து ஏறக்குறைய பூமியின் சகல மொழிகளிலும் திருத்தமான மொழி பெயர்ப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.

11 பைபிள் பிழையுள்ளதென்று சொல்லி, சிலர் பைபிளின் மதிப்பைக் கெடுக்க முயன்றிருக்கிறார்கள். என்றபோதிலும், சமீப ஆண்டுகளில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர், பைபிள் நாடுகளிலுள்ள பூர்வகால நகரங்களின் பாழடைந்தச் சின்னங்களைத் தோண்டி எடுத்திருக்கிறார்கள். இவற்றில் அவர்கள் எழுதிவைக்கப்பட்ட பைபிளின் மிகவும் பழமையான விவரப்பதிவுகளில் குறிப்பிட்டுள்ள மனிதர் உண்மையில் வாழ்ந்தவர்கள், இடங்களும் உண்மையில் இருந்தவையென முடிவாய் நிரூபிக்கும் கல்வெட்டுப் பொறிப்புகளையும் மற்ற அத்தாட்சிகளையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். 4,000-த்திற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக நோவாவின் காலத்திலேற்பட்டதென்று பைபிள் கூறும் ஒரு பூகோள ஜலப்பிரளயத்தை நிரூபிக்கும் மிகுந்த அத்தாட்சிகளை அவர்கள் தோண்டியெடுத்திருக்கிறார்கள். தொல்பொருள் ஆராய்ச்சியாளராகப் பிரசித்திப்பெற்ற பிரபு மிக்காஸா இந்தக் குறிப்பின் பேரில் பின்வருமாறு கூறுகிறார்: “மெய்யாகவே ஒரு ஜலப்பிரளயம் இருந்ததா? . . . ஜலப்பிரளயம் மெய்யாகவே நேரிட்டது என்ற இந்த உண்மை உறுதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.” c

பைபிளின் கடவுள்

12 பைபிளைக் குறித்து சில மனிதர் பரியாசம் செய்திருப்பது போலவே, மற்றும் சிலர் சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருப்பதைக் குறித்துப் பரியாசம் செய்கிறார்கள். (2 பேதுரு 3:3-7) “கடவுளை நான் பார்க்க முடிகிறதில்லை, அவரில் நான் எப்படி நம்பிக்கை வைப்பது? மனிதனைவிட உயர்ந்தவரான காணக்கூடாத சிருஷ்டிகர் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு நிரூபணம் இருக்கிறதா? கடவுள் எல்லாவற்றிலும் வாசஞ்செய்கிறாரல்லவா?” என்று அவர்கள் சொல்லுகிறார்கள். வேறு சிலர்: “கடவுளோ புத்தரோ கிடையாது” என்கிறார்கள். என்றபோதிலும் நாமெல்லாரும் பூமிக்குரிய ஒரு தகப்பனின் மூலமாய் உயிர் பெற்றதைப் போலவே, நம்முடைய முதல் பெற்றோர் பரலோகத் தகப்பனிடமிருந்து அல்லது சிருஷ்டிகரிடமிருந்து உயிரைப் பெற்றார்கள் என்றும் அவருடைய சொந்த தனித்தப் பெயர் யெகோவா என்றும் பைபிள் காட்டுகிறது.—சங்கீதம் 83:17; 100:3; ஏசாயா 12:2; 26:4.

13 யெகோவா இரண்டு குறிப்பிடத்தக்க வழிகளில் தம்மை மனிதவர்க்கத்துக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். இதில் முக்கிய வழி பைபிளின் மூலமானது, இது அவருடைய சத்தியத்தையும் அவருடைய நித்திய நோக்கங்களையும் தெரியப்படுத்துகிறது. (யோவான் 17:17; 1 பேதுரு 1:24, 25) மற்றொன்று தம்முடைய சிருஷ்டிப்பின் மூலமானது. தங்களைச் சுற்றியுள்ள அதிசயமான காரியங்களைக் கூர்ந்து கவனிப்பதனால், சிருஷ்டிகராகிய கடவுள் ஒருவர் இருக்க வேண்டும், அவருடைய மாட்சிமைமிக்கத் தனி சுபாவம் அவருடைய கிரியைகளில் பிரதிபலிக்கிறது என்ற மதித்துணர்வுக்குப் பலர் வந்திருக்கிறார்கள்.—வெளிப்படுத்தின விசேஷம் 15:3, 4.

14 யெகோவா தேவன் பைபிளின் நூலாசிரியர். அவர் சதா நித்தியத்தினூடேயும் இருக்கும் மகா ஆவியானவர். (யோவான் 4:24; சங்கீதம் 90:1, 2) “யெகோவா.” என்ற அவருடைய பெயர், சிருஷ்டிகளைப் பொறுத்த அவருடைய நோக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அக்கிரமக்காரர்களை அழித்துத் தம்மை நேசிப்பவர்களைப் பரதீஸிய பூமியில் வாழக் கூடும்படி விடுவித்துக் காப்பதன் மூலம் அந்த மகாப் பெயரைச் சரியென நிரூபிக்க வேண்டுமென்பதே அவருடைய நோக்கம். (யாத்திராகமம் 6:2-8; ஏசாயா 35:1, 2) சர்வ வல்லமையுள்ள கடவுளாயிருப்பதால் இதைச் செய்ய அவருக்கு வல்லமையுண்டு. சர்வலோகம் முழுவதையும் உண்டாக்கின சிருஷ்டிகரான, அவர், ஜாதிகளின் சாதாரண கடவுட்களுக்கும் விக்கிரகங்களுக்கும் மேலாக மிக உயர்ந்தவர்.—ஏசாயா 42:5, 8; சங்கீதம் 115:1, 4-8.

15 சமீப நூற்றாண்டுகளில் விஞ்ஞானிகள் இந்தச் சிருஷ்டிப்பின் வேலைகளை ஆராய்ந்தறிவதற்கு மிகுதியான காலம் செலவிட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன முடிவுக்கு வந்திருக்கிறார்கள்? மின் துறையில் முதல் ஆராய்ச்சியாளரில் ஒருவரான பிரசித்திப்பெற்ற பிரிட்டிஷ் இயற்பியல் ஆய்வாளர் லார்ட் கெல்வின் பின்வருமாறு அறிக்கை செய்தார்: “எவ்வளவுக்கெவ்வளவு முழுமையான விஞ்ஞானம் ஆராய்ந்தறியப்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தூரமாக அது நம்மை நாத்திகத்திற்கொப்பான எவற்றிலிருந்தும் விலக்கிக்கொண்டு போகிறதென நான் நம்புகிறேன்.” ஐரோப்பாவில் பிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நாத்திகன் என்று பெயர் பெற்றபோதிலும் பின்வருமாறு ஒப்புக் கொண்டார்: “நாம் மங்கலாகத்தானே கண்டுணரக்கூடிய இப்பிரபஞ்சத்தின் அதிசய அமைப்பின் பேரில் சிந்தனை செய்வதும், இயற்கையில் வெளிப்படுகிற அந்த அறிவுத் திறமையின் ஒரு மிகச் சிறிய பாகத்தைத்தானேயும் தாழ்மையுடன் புரிந்துகொள்ள முயற்சி செய்வதும் . . . எனக்குப் போதுமானது.” அமெரிக்க விஞ்ஞானியும் நோபெல் பரிசுப் பெற்றவருமான ஆர்தர் ஹாலி காம்ப்டன் பின்வருமாறு சொன்னார்: “சிறிதுசிறிதாக வெளியாகும் ஒழுங்கமைந்த பிரபஞ்சம், சொல்லப்பட்ட எதற்கும் மேலாக மிகச் சிறந்த கெம்பீரக் கூற்றாகிய—‘ஆதியிலே தேவன்’ என்ற சத்தியத்துக்குச் சாட்சி பகருகிறது.” பைபிளின் ஆரம்ப வார்த்தைகளையே இவர் மேற்கோளாக எடுத்துக் குறிப்பிட்டார்.

16 பலத்தத் தேசங்களின் ஆளும் அதிபதிகள், விண்வெளியில் வெற்றிக் கண்டிருப்பதில், தங்களுடைய புத்திக்கூர்மையையும் விஞ்ஞான சாதனைகளையும் குறித்து பெருமை பாராட்டிக் கொள்ளலாம். ஆனால், பூமியைச் சுற்றி வரும் சந்திரனோடும், சூரியனைச் சுற்றிவரும் கிரகங்களோடும் ஒப்பிட, அவர்களுடைய விண்வெளி செயற்கை துணைக்கோள்கள் எவ்வளவு அற்பமானவை! ஒவ்வொன்றும் நம்முடைய சூரியனைப் போன்ற நூற்றுக் கோடிக்கணக்கான சூரியன்களைக் கொண்டுள்ள வானிலுள்ள நூற்றுக் கோடிக்கணக்கான பால்வீதி மண்டலங்களாகிய யெகோவாவின் சிருஷ்டிப்போடும் அவற்றை அவர் வகுத்து, விண்வெளியில் அளவிலா காலத்திற்குமாக அமைத்து வைத்திருக்கிறதோடும் ஒப்பிட அழிவுள்ள இந்த மனிதரின் அரும்பெரும் சாதனைகள் எவ்வளவு மிக அற்பமானவை! (சங்கீதம் 19:1, 2; யோபு 26:7, 14) யெகோவா மனிதரை வெறும் வெட்டுக்கிளிகளைப் போலும் பலத்த ஜாதிகளை “ஒன்றுமில்லாமை”போலும் கருதுவதில் ஆச்சரியமொன்றுமில்லை.—ஏசாயா 40:13-18, 22.

17 நீங்கள் ஒரு வீட்டில் வாழ்கிறீர்களா? ஒருவேளை அந்த வீட்டை நீங்கள் தாமே கட்டியிருக்க மாட்டீர்கள். அதைக் கட்டினவர் யாரென்றும் உங்களுக்குத் தெரியாது. எனினும் அதைக் கட்டினவரை நீங்கள் அறியாதிருக்கும் இந்தக் காரியம், அறிவுள்ள யாரோ ஒருவர் அதைக் கட்டினார் என்ற இந்த உண்மையை ஏற்றுக் கொள்வதிலிருந்து உங்களைத் தடுப்பதில்லை. அந்த வீடு, தானே தன்னைக் கட்டிக் கொண்டது என்று விவாதிப்பது அதிக முட்டாள்தனமாய்த் தோன்றும்! இந்தப் பெரிய பிரபஞ்சமும் அதிலுள்ள யாவும் கட்டப்படுவதற்கு எல்லையற்ற மகா அறிவு தேவைப்பட்டதனால், புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகர் ஒருவர் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருவது நியாயமாக இல்லையா? நிச்சயமாகவே, மதிகெட்டவனே “யெகோவா இல்லை” என்று தன் இருதயத்தில் சொல்வான்.—சங்கீதம் 14:1; எபிரெயர் 3:4.

18 நம்மைச் சுற்றியுள்ள மகிமையான அதிசயங்கள்—பூக்கள், பறவைகள், மிருகங்கள், மனிதன் என்றழைக்கப்படும் அதிசயமான சிருஷ்டிப்பு, உயிரையும் பிறப்பையும் பற்றிய அற்புதங்கள்—இவை யாவும் இவற்றை உண்டாக்கின காணக்கூடாத தனி முதன்மை அறிவுடையவருக்குச் சாட்சி பகருகின்றன. (ரோமர் 1:20) எங்கு அறிவு இருக்கிறதோ அங்கே மனம் இருக்கிறது. எங்கே மனம் இருக்கிறதோ அங்கே ஆள் இருக்கிறார். இந்த ஈடற்ற உயர் அறிவாற்றல், உயிர் வாழும் எல்லாவற்றின் சிருஷ்டிகருமே, உயிரின் ஊற்றுமான ஈடற்ற மகா உயர்ந்த ஆளுடையதே. (சங்கீதம் 36:9) மெய்யாகவே சிருஷ்டிகர், சகல துதிக்கும், அன்புக்கும் மரியாதையோடுங்கூடிய வணக்கத்திற்கும் தகுதியுடையவர்.—சங்கீதம் 104:24; வெளிப்படுத்தின விசேஷம் 4:11.

19 இரண்டாம் உலக யுத்தத்தின் கடின அனுபவங்களால் கடவுள் பேரிலுள்ள தங்கள் நம்பிக்கை தளர்வுற்றுப் போன சிலர் இருக்கிறார்கள். அச்சமயத்தில் ஒவ்வொரு நாடும் அது கத்தோலிக்க அல்லது புராட்டஸ்டாண்டு மதங்களையோ, கிழக்கத்திய மதங்களையோ எதைச் சேர்ந்ததாயிருந்தாலும், அதனதன் “கடவுளை” நோக்கிக் கூப்பிட்டது. “கடவுள்” இந்தத் தேசங்களில் சிலவற்றிற்கு வெற்றியைக் கொடுத்து மற்றவை தோல்வியடையும்படி அனுமதித்தார் என்று சொல்லக்கூடுமா? இந்தத் தேசங்கள் எதுவும் மெய்யான கடவுளை நோக்கிக் கூப்பிடவில்லை என்று பைபிள் காட்டுகிறது. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் தேசங்களுக்குள் ஏற்படும் குழப்பத்திற்கும் போர்களுக்கும் உத்தரவாதமுள்ளவராயில்லை. (1 கொரிந்தியர் 14:33) அவருடைய நினைவுகள், இந்தப் பூமியின் அரசியல், இராணுவ நோக்கைக் கொண்டுள்ள தேசங்களின் நினைவுகளுக்கு மேலாக வெகு தூரமளவாய் உயர்ந்தவை. (ஏசாயா 55:8, 9) இதைப்போலவே, உண்மையான மதத்திற்கும், யெகோவாவின் வணக்கத்திற்கும் இந்தத் தேசங்களின் போர்களோடு எவ்விதப் பங்குமில்லை. யெகோவா தேசிய கடவுட்களுக்கு மேலாக மிக அதிக உயர்ந்தவர். சகல தேசங்களிலுமுள்ள, சமாதானத்தை வாஞ்சிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடவுளாக இருப்பதில் யெகோவா ஒப்பற்றவராயிருக்கிறார். பைபிள் சொல்லுகிற பிரகாரம்: ‘கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல, . . . அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எந்த ஜாதியானாயிலும் அவர் அங்கீகாரத்துக்குரியவன்.’ (அப்போஸ்தலர் 10:34, 35, தி.மொ.) சகல தேசங்களிலும் நீதியினிடம் மனச்சாய்வுள்ள ஆட்கள் இப்பொழுது பைபிளைக் கற்றறிந்து, சகல மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகராகிய “சமாதானத்தைத் தரும்” உண்மையான கடவுளின் வணக்கத்தை ஆர்வத்தோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.—ரோமர் 16:20, NW; அப்போஸ்தலர் 17:24-27.

20 பைபிளைப் பின்பற்றுவதாக உரிமை பாராட்டும் கிறிஸ்தவ மண்டல மதங்களிலுள்ள பிரிவினைகளையும் மாய்மாலத்தையும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். அவர்கள் மேலும்: “பைபிளைக் கொண்டுள்ள தேசங்கள் அணு சக்தி போர்த்தளவாடங்களைச் சேகரிப்பதில் தீவிரமாய் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், நான் எப்படி பைபிளின் கடவுளை நம்பக்கூடும்?” என்கிறார்கள். உண்மை இதுவே, பைபிள் எப்பொழுதும் சத்தியமாக நிலைத்திருக்கிறது, ஆனால் கிறிஸ்தவ மண்டல தேசங்களே வடதுருவம் தென் துருவத்திலிருந்து எவ்வளவு தூரமாக விலகியிருக்கிறதோ அவ்வளவு மிகத் தூரமாக பைபிளின் கிறிஸ்தவத்திலிருந்து விலகிவிட்டிருக்கின்றனர். அவர்கள் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுவதாக உரிமைப் பாராட்டுவது மாய்மாலமே. அவர்களுக்கும் பைபிள் இருக்கிறது. ஆனால், அவர்கள் அதன் போதகங்களுக்குக் கீழ்ப்படிவதில்லை. ஹிரோஷிமாவின் மீது முதல் அணுகுண்டைப் போடும்படி கட்டளையிட்ட அமெரிக்க ஜனாதிபதி ஒரு தடவைப் பின்வருமாறு உணர்ச்சி ததும்பக் கூறினார்: உலகத்தின் இந்த ஆபத்தான தருவாயில் மனிதரை வழிநடத்த “ஆ, ஒரு ஏசாயாவோ அல்லது ஒரு பரிசுத்த பவுலோ இருந்தால்!” அவர் பைபிளின் ஏசாயாவுடன் ஒத்திருந்தால், அணுகுண்டை ஒருபோதும் போட்டிருக்க மாட்டார், ஏனெனில் ‘பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிக்க வேண்டும்’ என்று ஏசாயா வெளிப்படையாய்ச் சொன்னான். மேலும், பைபிளின் பவுலே: “நாங்கள் மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல. எங்கள் போராயுதங்கள் மாம்சத்துக்குரியவைகளல்ல,” என்று அறிவித்தான். (ஏசாயா 2:4; 2 கொரிந்தியர் 10:3, 4, தி.மொ.) எனினும் கிறிஸ்தவ மண்டல தேசங்கள் பைபிளின் ஞானமுள்ள ஆலோசனையைப் பின்பற்றுவதற்குப் பதிலாகத் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் ஒரு போர்த்தளவாடப் போட்டியில் உட்பட்டிருக்கின்றன. தாங்கள் பைபிளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் கிறிஸ்தவர்களென அவர்கள் உரிமை பாராட்டுவதெல்லாம் பொய்யே. கடவுளுடைய சித்தத்தைச் செய்யத் தவறுவதற்காக அவர்கள் கடவுளின் நியாயத்தீர்ப்பை எதிர்ப்பட வேண்டும்.—மத்தேயு 7:18-23; செப்பனியா 1:17, 18.

யெகோவாவின் சிருஷ்டிப்புகளும் அற்புதங்களும்

21 யெகோவா சிருஷ்டிக்கிறார், அவர் அற்புதங்களையும் செய்கிறார். தண்ணீர் இரத்தமாக மாறினதையும் சிவந்த சமுத்திரம் பிரிந்து நின்றதையும், இயேசுவின் கன்னிமை பிறப்பையும், பைபிளில் பதிவுசெய்துள்ள மற்ற அற்புதங்களையுங் குறித்து நீங்கள் எப்பொழுதாவது அதிசயப்பட்டதுண்டா? மனிதன், வரம்புக்குட்பட்ட அறிவாற்றலுள்ளவனாக இருப்பதனால், இந்த அற்புதங்களில் சில எப்படி ஏற்பட்டன என்பதை அவன் ஒருவேளை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டான். சூரியன் ஒவ்வொரு நாளும் உதயமாகி அஸ்தமனமாகும் அற்புதத்தை அவன் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாதது போலவே அவற்றைப் புரிந்துகொள்ள முடியாமலிருக்கலாம். மனிதன் சிருஷ்டிக்கப்பட்டது ஒரு அற்புதமாகும். தற்கால மனிதன் அந்த அற்புதத்தைப் பார்க்கவில்லை, ஆனால் அது நடந்தது என்பதை அவன் அறிந்திருக்கிறான். ஏனெனில், அதை நிரூபிக்க இன்று அவன் உயிருடனிருக்கிறான். மெய்யாகவே எல்லா உயிரும், பிரபஞ்சம் முழுமையுமே முடிவில்லா ஒரே அற்புதமாக அமைந்துள்ளன. ஆகவே, இன்று அதே அற்புதங்களுக்கு அவசியமிராவிடினும், கடவுள் குறிப்பிட்ட காலங்களுக்குக் குறிப்பிட்ட அற்புதங்களை நடப்பித்தார் என்று கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் சொல்லுகையில், நாம் சந்தேகிக்க வேண்டுமா?

22 யெகோவாவின் சிருஷ்டிப்புகள் யாவும் அற்புதமும் அதிசயமுமானவை. என்றபோதிலும், அவருடைய முதல் சிருஷ்டிப்பே எல்லாவற்றையும்விட மிக அதிசயமானது. அதுவே அவருடைய “முதற்பேறான” ஆவி குமாரனின் சிருஷ்டிப்பு ஆகும். (கொலோசெயர் 1:15) இந்தப் பரலோகக் குமாரன் “வார்த்தை” என்று பெயரிடப்பட்டார். இவர் சிருஷ்டிக்கப்பட்டு எண்ணற்ற யுகங்களுக்கப்பால், இந்தப் பூமிக்கு வந்து “மனிதனாகிய கிறிஸ்து இயேசு” என்றழைக்கப்பட்டார். (1 தீமோத்தேயு 2:5) அப்பொழுது அவரைக் குறித்துப் பின்வருமாறு சொல்லப்பட்டது: “அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள் தங்கினது. அவருடைய மகிமையைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அது பிதாவுக்கு இருக்கும் ஒரே பேறானவருடைய மகிமையைப் போன்றது; அவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவர்.”—யோவான் 1:14, தி.மொ.

23 யெகோவாவுக்கும் அவருடைய குமாரனுக்குமுள்ள உறவை, உரிமையாளரும்-மேலாளருமான ஒரு தகப்பனுக்கும் தொழிற்கூடத்தில் அவரால் வடிவமைக்கப்பட்ட பொருட்களை உருவாக்குவதில் உதவி செய்யும் அவரது மகனுக்கும் இடையேயுள்ள உறவுக்கு ஒப்பிடலாம். தம்முடைய ஒரே பேறான குமாரனும், உடன் உழைப்பாளியுமான இவர் மூலமாய் யெகோவா, மற்ற பல ஆவி சிருஷ்டிகளாகிய, கடவுளுடைய குமாரர்களைச் சிருஷ்டித்தார். பின்னால் இவர்கள், யெகோவாவின் கைதேர்ந்த வேலையாளன் பொருள் வகையான வானங்களையும், நாம் வாழும் இந்தப் பூமியையும் உண்டாக்குவதைக் கண்டு களிகூர்ந்தார்கள். இவை சிருஷ்டிக்கப்பட்டதைக் குறித்து நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால், யெகோவா உண்மையுள்ள ஒரு மனிதனைப் பின்வருமாறு கேட்டார்: “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.”—யோபு 38:4, 7; யோவான் 1:3.

24 காலப் போக்கில், யெகோவா இந்தப் பூமியில் உயிருள்ள பொருள் வகைகளாகிய செடிகளையும், மரங்களையும், பூக்களையும், மச்சங்களையும், பறவைகளையும், மிருகங்களையும் சிருஷ்டித்தார். (ஆதியாகமம் 1:11-13, 20-25) பின்பு கடவுள் தம்முடைய கைதேர்ந்த வேலையாளிடம்: “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; . . . தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.” (ஆதியாகமம் 1:26, 27) கடவுளுடைய முதன்மையான இயல்புக் குணங்களாகிய அன்பு, ஞானம், நீதி, வல்லமை ஆகியவற்றுடன் கடவுளின் ரூபத்திலும் சாயலிலும் சிருஷ்டிக்கப்பட்டிருந்ததனால், முதல் மனிதன் மிருகங்களுக்கு மேலாக வெகுவாய் உயர்ந்தவனாயிருந்தான். மனிதன் பகுத்தறிந்து முடிவு செய்யும் ஆற்றலுள்ளவன், எதிர்காலத்துக்காகத் திட்டமிடக்கூடியவன், மேலும் கடவுளை வணங்க அவனுக்கு அறிவுத் திறமை இருக்கிறது, இவற்றில் அவன் மிருகங்களைச் சேராதத் தனி வகுப்பில் இருக்கிறான். ஆய்ந்து முடிவுசெய்வதற்கு மிருகங்களுக்குப் பகுத்தறிவு இல்லை. அவை இயல்புணர்ச்சிகளால் வாழ்கின்றன. சிருஷ்டிகர் ஒருவர் இல்லை என்றும், தனிப்பட்ட நுட்பத் திறமைகள் நிறைவாய் அளிக்கப்பட்டிருக்கும் புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டியாகிய மனிதன், புத்தி நுட்பமில்லாத கீழ்த்தர மிருகங்களிலிருந்து படிப்படியாக உருமாறி உயர்ந்து வந்தான் என்றும் சொல்வது எவ்வளவு நியாயமற்றது!—சங்கீதம் 92:6, 7; 139:14.

25 கடவுள் மனிதனை, “கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தில்” வைத்தார். ஆதாமும் அவனுடைய மனைவியுமான இந்த இரண்டு மானிடர் மட்டுமே அப்போது அங்கிருந்த போதிலும், அது நம் புத்தகத்தின் வெளி அட்டைப் படத்திலுள்ள தோட்டத்தைப்போல் இன்பமான ஒரு தோட்டமாயிருந்தது. அந்த முதல் பரதீஸ், நோவாவின் நாளின் ஜலப்பிரளயத்தில் அழிக்கப்பட்டதால் இப்பொழுது இல்லை, ஆனால் மத்திய கிழக்கில் அது இருந்த இடம் ஒருவாறு அறியப்பட்டிருக்கிறது, எப்படியெனில் அதன் வழியாய் ஓடிக்கொண்டிருந்ததாக பைபிளில் பெயர் குறிப்பிட்டிருக்கும் சில நதிகள் இந்நாள்வரை இருக்கின்றன. (ஆதியாகமம் 2:7-14) இந்தத் தோட்டத்தை மையமாக உபயோகித்து, அதிலிருந்து வெளியே பரவி பூமி முழுவதையும் பண்படுத்தி, அதை பூகோளப் பரதீஸாக்க மனிதனுக்குச் சிறப்பான வாய்ப்பு இருந்தது.—ஏசாயா 45:12, 18.

26 கடவுளும் அவருடைய குமாரனும் வேலை செய்கிறவர்களாக இருப்பதுபோல், மனிதனும் இங்கே பூமியில் வேலை செய்வதற்குக் கடவுள் அவனுக்கு வேலையைக் கொடுத்தார். (யோவான் 5:17) முதல் மனிதனும் மனுஷியுமாகிய ஆதாம் ஏவாளுக்கு அவர் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள்.” (ஆதியாகமம் 1:28) இது மனிதன் பெருகி, பூமியை நிரப்பி, பின் மேலும் தொடர்ந்து பூமி நிறைந்து வழியும் வரையாகப் பெருகிக்கொண்டே போக வேண்டுமென்று அர்த்தங் கொண்டதா? இல்லை. எவராவது உங்களிடம் ஒரு கோப்பையில் தேனீர் நிரப்பும்படிச் சொல்லும்பொழுது, நீங்கள் அந்தத் தேனீர் மேசை மீதெங்கும் வழிந்தோடும் வரையாகத் தொடர்ந்து ஊற்றிக்கொண்டேயிருப்பதில்லை. நீங்கள் அந்தக் கோப்பையை நிரப்பிய பின், நிறுத்திவிடுவீர்கள். இவ்வாறே, “பூமியை நிரப்பு” என்று மனிதனுக்குக் கொடுத்த யெகோவாவின் கட்டளை, மனிதன் பூமியைச் செளகரியமான அளவில் நிரப்பச் செய்யும் அவருடைய நோக்கத்தையே குறிப்பிட்டது. பின்பு இங்கே பூமியில் மனிதவர்க்கம் விருத்தியாதல் நின்றுவிடும். இது, பரிபூரண மனித சமுதாயத்தில் எவ்வித பிரச்னையையும் அளிக்காது. பரிபூரணமற்ற மனிதவர்க்கத்தின் இன்றைய உலகத்தில்தானே அளவுக்கு மீறிய ஜனத்தொகை பிரச்னையை அளிக்கிறது.

கெட்ட காரியங்கள்கடவுள் ஏன் அவற்றை அனுமதிக்கிறார்? 

27 ஒரு பரதீஸிய பூமியை உருவாக்குவதே கடவுளுடைய நோக்கமானால் இந்தப் பூமி ஏன் இன்று இவ்வளவாய் அக்கிரமத்தினாலும் துன்பத்தினாலும் துக்கத்தினாலும் நிறைந்திருக்கிறது? கடவுள் சர்வ வல்லமையுள்ளவரானால், இந்த நிலைமைகளை ஏன் இவ்வளவு நீண்ட காலமாக அனுமதித்து வந்திருக்கிறார்? நம்முடைய எல்லாத் தொல்லைகளும் முடிவடையும் நம்பிக்கை ஏதாவது உண்டா? பைபிள் என்ன சொல்லுகிறது?

28 கடவுளுடைய ஆவிக்குமாரர்களில் ஒருவன், யெகோவாவின் ஈடற்ற அரசாதிகாரத்துக்கு அல்லது ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்தபோது மனிதவர்க்கத்துக்கு தொல்லைகள் தொடங்கினவென்று பைபிள் காண்பிக்கிறது. (ரோமர் 1:20; சங்கீதம் 103:22, NW Ref.Bi.,ftn.) மனிதன் சிருஷ்டிக்கப்பட்டதைப் பார்த்து ஆர்ப்பரித்தவர்களின் மத்தியில் இந்தத் தூதனும் இருந்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பின்பு இச்சையும் பெருமையும் அவனுடைய இருதயத்தில் வேர் கொண்டது. ஆதாமும் ஏவாளும் தங்கள் சிருஷ்டிகராகிய யெகோவாவை வணங்குவதற்குப் பதிலாகத் தன்னை வணங்கும்படிச் செய்ய வேண்டுமென்ற ஆசையினால் அவன் கவர்ந்திழுக்கப்பட்டான் குரலை மாற்றிப் பேசும் கலைஞன் பேசாத பொம்மையைக் கொண்டு பேசுவதுபோல் இந்தத் தூதன் ஒரு சர்ப்பத்தைக் கொண்டு பேசி, ஏவாளை, சர்வ வல்லமையுள்ள தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போகத் தூண்டினான். பின்னர் அவளுடைய புருஷனாகிய ஆதாமும் அவளைப் பின்தொடர்ந்து கீழ்ப்படியாமற் போனான்.—ஆதியாகமம் 2:15-17; 3:1-6; யாக்கோபு 1:14, 15.

29 அந்தக் கலகக்காரத் தூதன் “பழைய பாம்பு” என்று அழைக்கப்படலானான். (வெளிப்படுத்தின விசேஷம் 12:9; 2 கொரிந்தியர் 11:3) அவன் “எதிரி” என்றர்த்தங்கொள்ளும் சாத்தான் என்றும் “பழிதூற்றுபவன்” என்றர்த்தங்கொள்ளும் பிசாசு என்றும் அழைக்கப்படுகிறான். பூமியின் மீது யெகோவாவின் ஆட்சியின் நேர்மையையும் நீதியையும் அவன் சந்தேக விவாதத்துக்குள்ளாக்கி, இப்பொழுது சாத்தானாகிய தான் மனிதவர்க்கம் முழுவதையும் உண்மையான வணக்கத்திலிருந்து திருப்ப முடியுமென்று அவன் கடவுளை எதிர்த்து, சவால் விட்டான். யெகோவாவின் அரசாட்சியின் பேரில் எழுப்பிய இந்த விவாதம் சதா நித்திய காலத்துக்குமாகத் தீர்க்கப்படும்படி, கடவுள் சாத்தானுக்கு அவனுடைய சவாலை நிரூபிக்க முயற்சி செய்ய சுமார் 6000 ஆண்டுகள் அனுமதித்திருக்கிறார். கடவுள் மீது சார்ந்திராத மனித ஆட்சி மிகத் துக்ககரமாய்த் தோல்வியடைந்து விட்டிருக்கிறது. ஆனால் விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் மிகக் கடுமையான சோதனைகளின் கீழ், கடவுளுக்குத் தங்களுடைய உத்தமத்தைக் காத்து யெகோவாவைச் சரியென்றும் பிசாசைப் பொய்யனென்றும் நிரூபித்திருக்கிறார்கள். இவர்களில் இயேசு முதன்மையான முன்மாதிரியாக இருக்கிறார். (லூக்கா 4:1-13; யோபு 1:7-12; 2:1-6; 27:5) நீங்களுங்கூட உத்தமத்தைக் காத்துக் கொள்பவராக இருக்க முடியும். (நீதிமொழிகள் 27:11) ஆனால் சாத்தான் மட்டுமே நம்மைத் துயருறுத்தும் ஒரே சத்துரு அல்ல. வேறு என்ன சத்துரு இருக்கிறது?

சத்துருமரணம் 

30 கீழ்ப்படியாமைக்குத் தண்டனை—மரணம்—என்று கடவுள் அவர்களுக்குக் கூறியிருந்தார். இப்பொழுது முதல் மனுஷிக்குத் தீர்ப்பைக் கூறி யெகோவா சொன்னதாவது: “நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப் பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்.” மனிதனாகிய ஆதாமுக்கு: “நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்,” என்று கூறினார். (ஆதியாகமம் 3:16-19) கீழ்ப்படியாத இந்த ஜோடி மகிழ்ச்சிக்குரிய பரதீஸிலிருந்து பண்படுத்தப்படாத பூமிக்குள் வெளியேற்றப்பட்டார்கள், காலப்போக்கில் அவர்கள் மரித்துப் போனார்கள்.—ஆதியாகமம் 5:5.

31 பரிபூரண நிலையிலிருந்து தாங்கள் வீழ்ந்த பின்பே ஆதாமும் ஏவாளும் பிள்ளைகளைப் பிறப்பிக்கத் தொடங்கினார்கள். இன்றிருக்கும் சகல மனிதரும், அபூரண நிலையில் பிறந்த அவர்கள் சந்ததியார், ஆகவே, எல்லாரும் மரிக்கிறார்கள். பைபிள் எழுத்தாளரில் ஒருவன் இதைப் பின்வரும் வார்த்தைகளில் விவரிக்கிறான்: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும் எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று.” இந்தப் “பாவம்” என்பது என்ன? இது பரிபூரண அல்லது பூர்த்தி நிலையை அடைய தவறுதல் ஆகும். யெகோவா தேவன் அபூரணமான எதையும் அங்கீகரிப்பதில்லை அல்லது உயிருடன் வைப்பதில்லை. முதல் மனிதனாகிய ஆதாமிலிருந்து எல்லா மனிதரும் பாவத்தையும் அபூரணத்தையும் சுதந்தரித்திருப்பதனால், மரணம் அவர்களை “ஆண்டு கொண்டது.” (ரோமர் 5:12, 14) வீழ்ந்துபோன மனிதன் மிருகங்கள் சாகிற அதே முறையில் சாகிறான்.—பிரசங்கி 3:19-21.

32 இந்த “மரணம்” என்பது என்ன? மரணம் உயிருக்கு எதிரிடையானது, மனிதன் கீழ்ப்படிந்தால் பூமியில் முடிவற்ற வாழ்க்கையை அனுபவிக்கும் எதிர்பார்ப்பை கடவுள் மனிதனுக்கு முன்பாக வைத்தார். என்றபோதிலும், அவன் கீழ்ப்படியாமற் போனான். அதன் தண்டனையே மரணம், உணர்வற்ற நிலை, இல்லாமற்போதல் ஆகும். மனிதன் கீழ்ப்படியாமற் போய், மரித்தால் அவனுடைய வாழ்க்கையை ஆவிக்குரிய ஒரு பகுதிக்கோ அல்லது எரிகிற “நரகத்துக்கோ” மாற்றுவதைக் குறித்துக் கடவுள் ஒன்றுமே சொல்லவில்லை. “நீ சாகவே சாவாய்” என்றே கடவுள் மனிதனை எச்சரித்திருந்தார். மனித கொலை பாதகனாகிய பிசாசே, “நீங்கள் சாகவே சாவதில்லை,” என்று சொல்லி பொய்ப் பேசினான். (ஆதியாகமம் 2:17; 3:4; யோவான் 8:44) ஆதாமிலிருந்து எல்லா மனிதரும் சுதந்தரித்திருப்பது தூசியைப் போன்ற மரணமே.—பிரசங்கி 9:5, 10; சங்கீதம் 115:17; 146:4.

33 அப்படியானால் மரித்துப்போகும் மனிதனுக்கு எதிர்காலமொன்றுமில்லையா? அதிசயமான ஒரு எதிர்காலம் இருக்கிறது! இப்பொழுது மரித்தோராக இருப்பவர்களும் உட்பட, மனிதவர்க்கம் முழுவதற்கும் ஒரு பரதீஸிய பூமியைக் கொண்டுவரும் கடவுளின் நோக்கம் ஒருபோதும் தவறிப் போகாதென்று பைபிள் காட்டுகிறது. யெகோவா சொல்லுகிறார்: “வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி.” “என் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன்.” (ஏசாயா 66:1; 60:13) தம்முடைய அன்பின் மிகுதியால் யெகோவா, மனிதவர்க்க உலகம் தம்முடைய குமாரன் மூலமாய் ஜீவனடையக்கூடும்படி வார்த்தையாகிய அவரை இந்தப் பூமிக்கு அனுப்பினார். (யோவான் 3:16; 1 யோவான் 4:9) நாம் இப்பொழுது ஆராய வேண்டியதும் யெகோவா தம்முடைய குமாரன் மூலமாய் நிறைவேற்றுவதுமான மூன்று முக்கிய காரியங்கள் இருக்கின்றன. அவையாவன: (1) மரணத்தின் வல்லமையிலிருந்து விடுதலை அளிப்பது; (2) மரித்தோரை உண்மையில் உயிருக்குத் திரும்பக் கொண்டு வருவது; (3) சகல மனிதவர்க்கத்தின் மீதும் ஒரு பரிபூரண அரசாங்கத்தை ஸ்தாபிப்பது.

மரணத்திலிருந்து விடுதலை

34 பூர்வ காலங்களிலிருந்து கடவுளின் தீர்க்கதரிசிகள், மனிதனின் சாவாமையில் அல்ல, ஆனால் கடவுள் தங்களை மரணத்திலிருந்து ‘மீட்பார்’ என்பதில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். (ஓசியா 13:14) ஆனால் மனிதன் எப்படி மரணக் கட்டுகளிலிருந்து விடுவிக்கப்படக்கூடும்? யெகோவாவின் பரிபூரண நீதியைத் திருப்தி செய்ய, ‘ஆத்துமாவுக்கு ஆத்துமா, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ கொடுக்கப்பட வேண்டியதாயிருந்தது. (உபாகமம் 19:21) ஆகவே, ஆதாம் அறிந்து வேண்டுமென்றே கடவுளுக்குக் கீழ்ப்படியாததனால், மனித உயிருக்குரிய பரிபூரணத்தை இழந்து, மனிதவர்க்கம் அனைத்துக்கும் சுதந்தரிக்கப்பட்ட மரணத்தைக் கொண்டு வந்ததால், ஆதாம் இழந்ததைத் திரும்ப விலை கொடுத்து வாங்க, மற்றொரு பரிபூரண மனிதன் தன்னுடைய பரிபூரண உயிரை விலைமதிப்பாகச் செலுத்தி, ஆதாமுக்குப் பதிலாக ஈடு செய்ய வேண்டியதாயிருந்தது.

35 ‘சரிக்குச் சரி’ செலுத்தும் நியாயமான இந்த நியமம் சரித்திரம் முழுவதிலும் மிகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. சாதாரணமாக பயன்படுத்தப்படும் சொற்றொடர் “மீட்கும் பொருளைச் செலுத்துவது” என்பதாகும். மீட்கும் பொருள் என்பது என்ன? “ஒர் ஆளை அல்லது பொருளைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் ஒருவரிடமிருந்து அந்த ஆளை அல்லது பொருளை மீட்பதற்குச் செலுத்தும் விலையாகும். ஆகவே யுத்தக் கைதிகள் அல்லது அடிமைகள் விலை மதிப்புள்ள சரி ஈட்டுக்குப் பரிமாற்றமாக, விடுவிக்கப்படுகையில், மீட்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. . . . அந்தத் தரப்பினருக்குச் சரியீடு செய்வதில் மாற்றுப் பொருளாக அல்லது பரிமாற்றமாகக் கொடுக்கப்படும் எதுவும் அவனுடைய மீட்கும் பொருளாகும். d ஆதாம் பாவம் செய்தது முதற்கொண்டு, மனிதவர்க்கம் முழுவதும் அபூரணத்தினாலும் மரணத்தினாலும் கட்டப்பட்ட யுத்தக் கைதிகளை அல்லது அடிமைகளைப் போலிருக்கின்றனர். அவர்களை விடுவிப்பதற்கு மீட்கும் பொருள் ஒன்று கொடுக்கப்பட வேண்டும். மீட்கும் பொருளின் கிரயத்தின் தகுதியைக் குறித்து இப்பொழுதோ பிற்பாடோ எந்த வாக்குவாதத்தையும் தவிர்ப்பதற்கு ஒரு பரிபூரண மனித உயிரை, அதாவது, ஆதாமுக்குச் சரிசமமானதைப் பலிசெலுத்துவது அவசியமாயிருக்கும்.

36 எனினும் அப்படிப்பட்ட ஒரு பரிபூரண மானிட உயிரை எங்கே கண்டடைய முடியும்? பரிபூரணமற்ற ஆதாமின் சந்ததியாராக மனிதரும் பரிபூரணமற்றவர்களாகப் பிறந்திருக்கிறார்கள்: ‘அவர்களில் ஒருவனாவது, தன் சகோதரனை எவ்விதத்தினாலாவது மீட்டுக்கொள்ளவும் அவனுக்காக மீட்கும் பொருளைக் கடவுளுக்குக் கொடுக்கவும் முடியாது.’ (சங்கீதம் 49:6-8, தி.மொ) இந்தத் தேவைக்குப் பதிலளிக்க யெகோவா மனிதவர்க்கத்தின் பேரிலுள்ள தம்முடைய ஆழ்ந்த அன்பினால் தூண்டப்பட்டு, உண்மையில் தம்முடைய மிக அருமையான “முதற் பேறான” குமாரனை தேவைப்படும் அந்தப் பலியாவதற்கு அளித்தார். ‘அந்த வார்த்தை’யாகிய இந்த ஆவிக் குமாரனின் பரிபூரண உயிரை அவர் யூதக் கன்னிகை மரியாளின் கர்ப்பத்துக்கு மாற்றினார். இந்த வாலிப ஸ்திரீ கர்ப்பந்தரிந்து, ஏற்றக் காலத்தில் ஒரு குமாரனைப் பெற்றெடுத்தாள். அவர் “இயேசு” என்று பெயரிடப்பட்டார். (மத்தேயு 1:18-25) உயிரைப் படைத்தவர், நியாயமாகவே, இத்தகைய மகத்தான அற்புதத்தை நடப்பிக்க முடியும்.

37 இயேசு மனித பருவத்துக்கு வளர்ந்து, யெகோவாவுக்குத் தம்மைத் தாமே சமர்ப்பித்து முழுக்காட்டப்பட்டார். அப்பொழுது கடவுள், தம்முடைய சித்தத்தைச் செய்யும்படி அவருக்கு அதிகாரங் கொடுத்தனுப்பினார். (மத்தேயு 3:13, 16, 17) இயேசுவின் பூமிக்குரிய உயிர், பரலோகத்திலிருந்து வந்திருந்ததனால் அவர் பரிபூரணராக இருந்தார். அவர் அந்தப் பரிபூரண மானிட உயிரைப் பலி செலுத்தி, மனிதவர்க்கத்தை மரணத்திலிருந்து விடுவிப்பதற்கு அதை உபயோகிக்கலாம். (ரோமர் 6:23; 5:18, 19) அவர் சொன்ன பிரகாரம்: “நானோ அவைகள் ஜீவனைப் பெறவும் அபரிமிதமாய்ப் பெறவுமே வந்தேன்.” “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” (யோவான் 10:10, தி.மொ; 15:13) சாத்தான், இயேசுவை வாதனையின் கழுமரத்தில் கொல்லப்பட செய்தபோது, இயேசு, விசுவாசத்தை செயல்முறையில் காட்டும் மனிதர்கள் இந்த மீட்பின் ஏற்பாட்டின் மூலம் ஜீவனைப் பெறுவார்கள் என்பதை அறிந்து இந்தக் கொடூரமான மரணத்துக்குத் தம்மைக் கீழ்ப்படுத்தினார்.—மத்தேயு 20:28; 1 தீமோத்தேயு 2:5, 6.

திரும்ப உயிருக்குக் கொண்டுவருதல்

38 அவருடைய சத்துருக்கள் அவரைக் கொன்றபோதிலும், கடவுளின் குமாரன், பரிபூரண மனித ஜீவனுக்குரிய தம்முடைய உரிமையை ஒருபோதும் இழக்கவில்லை. ஏனெனில் அவர் கடவுளிடம் தம்முடைய உத்தமத்தை விடாமற் காத்திருந்தார். கல்லறையில் மரித்தவராக இருக்கையில், இந்த மிகுந்த மதிப்புள்ள பொருளை அதாவது மனித உயிருக்குரிய இந்த உரிமையை, மனிதவர்க்கத்தின் சார்பாக இயேசு எப்படி உபயோகிக்கக்கூடும். இங்கே யெகோவா மற்றொரு அற்புதத்தை நடப்பித்தார். அதன் வகையில் அதுவே முதலாவதாகும். இயேசு கல்லறையில் இருந்த மூன்றாம் நாளில் யெகோவா அவரை மரணத்திலிருந்து சாவாமையுடைய ஆவி சிருஷ்டியாக உயிர்த்தெழுப்பினார். (ரோமர் 6:9; 1 பேதுரு 3:18) இந்த உயிர்த்தெழுதலில் நம்பிக்கையை நிலைநிறுத்தும்படிக்கு, இயேசு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மனித சரீரங்களில் காணக்கூடிய உருவெடுத்து தம்முடைய சீஷர்களுக்குத் தோன்றினார், ஒரு சமயம் 500-க்கு மேற்பட்ட சீஷருக்குத் தோன்றினார். இவர்களில் எவருக்கும், பின்னால், மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவின் தோற்றத்தால் குருடாக்கப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் அவருடைய உயிர்தெழுதலின் அற்புதத்தைச் சந்தேகிக்க யாதொரு காரணமும் இல்லை.—1 கொரிந்தியர் 15:3-8; அப்போஸ்தலர் 9:1-9.

39 40 நாட்களுக்குப் பின்பு, உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு பரலோகங்களில் கடவுளின் சொந்த முன்னிலைக்கு ஏறிச் சென்றார். மனிதவர்க்கம் விடுதலை செய்யப்பட தம்முடைய பரிபூரண மானிட பலியின் விலைமதிப்பைச் செலுத்துவதற்கே அங்கு சென்றார். ‘இவரோ பாவங்களுக்காக ஒரே பலியை [என்றென்றைக்குமாக, NW] செலுத்தி . . . தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப் போடும் வரைக்கும் காத்துக் கொண்டிருக்கிறார்.” (எபிரெயர் 10:12, 13) இந்த மீட்பின் விலைக் கிரயத்தால் முதலாவது விடுதலை செய்யப்படுபவர்கள் ‘கிறிஸ்துவினுடையவர்களாகிய’ உண்மையுள்ள கிறிஸ்தவர்களின் “சிறு மந்தை” ஆவர். (லூக்கா 12:32; 1 கொரிந்தியர் 15:22, 23) இவர்கள் ‘மனுஷரிலிருந்து கொள்ளப்பட்டார்கள்,’ ஆகவே உயிர்த்தெழுதலில் இவர்கள் பரலோகங்களில் கிறிஸ்துவின் தோழர்களாகிறார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 14:1-5) எனினும், இப்பொழுது தங்கள் கல்லறைகளில் மரித்தோராகக் கிடக்கும் மனிதவர்க்கத்தின் பெருங்கூட்டமானவர்களைக் குறித்ததென்ன? நியாயத்தீர்ப்பு செய்யவும் உயிர் கொடுக்கவும், தன்னுடைய பிதா தனக்கு அதிகாரம் கொடுத்தாரென இயேசு பூமியிலிருந்தபோது சொன்னார். மேலும் அவர்: “இதைக் குறித்து ஆச்சரியப்படாதேயுங்கள். ஏனெனில் அந்த மணிநேரம் வருகிறது, அதில் ஞாபகார்த்தக் கல்லறைகளிலிருக்கும் யாவரும் அவருடைய குரலைக் கேட்டு வெளி வருவார்கள். . . . உயிர்த்தெழுதலுக்கு வருவார்கள்.” (யோவான் 5:26-29) பரதீஸ் பூமியில் அவர் இவர்களை உயிருக்குத் திரும்பக் கொண்டுவருவார்.

40 “இதைக்குறித்து ஆச்சரியப்படாதேயுங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளைக் கவனியுங்கள். அப்படியும் மரித்து வெகு காலமாகியிருக்கும் ஒருவனை எப்படி மரணத்திலிருந்து விடுவித்து திரும்ப உயிருக்குக் கொண்டுவர முடியும்? அவனுடைய உடல் தூசிக்குத் திரும்பிவிட்டதல்லவா? அந்த உடலை உண்டுபண்ணின அணுக்களில் சில செடிகளையும் மிருகங்களையும் போன்ற உயிருள்ள மற்ற பொருட்களுக்குள் உட்கிரகிக்கப்பட்டு அவற்றோடு ஒன்றுபட்டு போய்விட்டிருக்கக்கூடும். என்றபோதிலும் உயிர்த்தெழுதலானது, அதே இரசாயண மூல பொருட்களைத் திரும்பவும் ஒன்று சேரக் கொண்டுவருவதைக் குறிக்கிறதில்லை. அது அதே ஆளை, அவனுடைய அதே தனி சுபாவத்துடன் கடவுள் திரும்பவும் சிருஷ்டிக்கிறார் என்றே அர்த்தங் கொள்ளுகிறது. பூமிக்குரிய மூலப் பொருட்களிலிருந்து அவர் ஒரு புதிய உடலை வெளியே கொண்டு வருகிறார், அந்த உடலில் அந்த ஆள், தன் மரண நேரம் வரையில் படிப்படியாகக் கட்டியமைத்திருந்த அதே தனிப் பண்புகளை, பகுத்துக் காட்டுகிற அதே தன்மைகளை, அதே நினைவு பதிவை, அதே வாழ்க்கை மாதிரியை வைக்கிறார்.

41 ஒருவேளை நீங்கள் மிக அதிகமாய் நேசித்த உங்கள் வீடு எரிக்கப்பட்டுப் போன அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். எனினும், நீங்கள் சுலபமாக அதே வீடு திரும்பக் கட்டப்பட செய்யலாம், ஏனெனில், அதன் அருமையான எல்லா நுட்ப விவரங்களின் மாதிரி உங்கள் நினைவில் வெகுத் தெளிவாயிருக்கிறது. அப்படியானால், நிச்சயமாகவே, நினைவின் மூலக்காரணராகிய கடவுள், தாம் அவர்களை நேசித்ததனால், தம்முடைய நினைவில் வைத்திருக்கிற மனிதரைத் திரும்ப சிருஷ்டிக்க முடியும். (ஏசாயா 64:8) இதன் காரணமாகவே, பைபிள் “நினைவுச் சின்னக் கல்லறைகள்” என்ற இந்தப் பதத்தை உபயோகப்படுத்துகிறது. மரித்தோரைத் திரும்ப உயிருக்குக் கொண்டு வருவதற்குரிய கடவுளின் ஏற்றக் காலம் வரும்பொழுது அவர் அந்த அற்புதத்தை நடப்பிப்பார். முதல் மனிதனைச் சிருஷ்டித்ததில் அவர் ஒரு அற்புதத்தை நடப்பித்தது போலவே இதையும் செய்வார்—ஆனால் இந்தச் சமயம் அவர் அதை மேலும் பல தடவைகள் நடப்பிப்பார்.—ஆதியாகமம் 2:7; அப்போஸ்தலர் 24:15.

42 பூமியிலிருந்து இனி ஒருபோதும் மரித்துப் போகாத எதிர்நோக்குடன் கடவுள் மனிதவர்க்கத்தைத் திரும்பவும் உயிருக்குக் கொண்டுவருவார். ஆனால், பூமியில் நித்திய வாழ்க்கை எப்படிச் சாத்தியமாயிருக்கும்? அது சாத்தியமாயும் நிச்சயமாயும் இருக்கிறது, ஏனெனில், அது தெய்வீகச் சித்தமும் நோக்கமுமாகும். (யோவான் 6:37-40; மத்தேயு 6:10) இன்று மனிதன் பூமியிலிருந்து மரித்துப் போவதற்கு ஒரே காரணம் அவன் ஆதாமிலிருந்து மரணத்தைச் சுதந்தரித்ததேயாகும். எனினும் மனிதன் அனுபவித்து மகிழும்படி கருதப்பட்ட பூமியிலுள்ள எண்ணற்றப் பல வகையான அதிசய காரியங்களை நாம் கவனிக்கையில், நூறு ஆண்டுகளுக்கும் குறைந்த சுருக்கமான வாழ்நாள் மிக அதிகக் குறைவாயிருக்கிறது! கடவுள், மனுபுத்திரருக்கு இந்தப் பூமியைக் கொடுக்கையில், தம்முடைய சிருஷ்டிப்பின் மகிமைகளை, மனிதன் வெறும் நூறு ஆண்டுகளுக்கு அல்லது, ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மட்டுமே அல்ல, என்றென்றும் மகிழும்படி தொடர்ந்து வாழவேண்டுமென்றே நோக்கங் கொண்டார்.—சங்கீதம் 115:16; 133:3.

சமாதானத்தைக் கொண்டுவரும் பரிபூரண அரசாங்கம்

43 நம்முடைய முதல் பெற்றோர் கடவுளுடைய சட்டத்தைப் புறக்கணித்ததனால், மனித அரசாங்கம் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. பைபிள் சரியாகவே சாத்தானை “இந்தக் காரிய ஒழுங்கு முறையின் கடவுள்” என்று அழைக்கிறது. (2 கொரிந்தியர் 4:4, NW) மனித அரசாங்கங்களின் போர்களும், கொடுமைகளும், ஊழல்களும், நிலையற்றத் தன்மையும் இந்த உண்மையை நிரூபிக்கின்றன. இந்தக் குழப்பத்திலிருந்து விடுவித்து சமாதானத்தைக் கொண்டுவர சர்வதேச சங்கமும் ஐக்கிய நாட்டு சங்கமும் தவறிவிட்டன. மனிதவர்க்கம் ஒரு சமாதான அரசாங்கத்துக்காகக் கூக்குரலிடுகிறது. இந்தப் பூமிக்குப் பரதீஸைத் திரும்பக் கொண்டுவர நோக்கங்கொண்டுள்ள சிருஷ்டிகர் அந்தப் பரதீஸுக்கு ஒரு பரிபூரண அரசாங்கத்தையும் ஏற்பாடு செய்து கொடுப்பாரென்பது நியாயமாயிருக்கிறதல்லவா? இதையே, செய்வதற்கு யெகோவா நோக்கங் கொண்டிருக்கிறார். இந்த அரசாங்கத்தில் அவரைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசர் அவருடைய “சமாதானப் பிரவு”வாகிய கிறிஸ்து இயேசுவே, “அவருடைய ராஜாதிகாரப் பெருக்குக்கும் சமாதானத்துக்கும் முடிவில்லை.”—ஏசாயா 9:6, 7, தி.மொ.

44 இந்தப் பரிபூரண அரசாங்கம் பரலோகத்தில் இருக்குமென்று பைபிள் காட்டுகிறது. இந்த அனுகூலமான இடத்திலிருந்து, அரசர் இயேசு கிறிஸ்து பூமி முழுவதையும் நீதியால் பலன்தரத்தக்க முறையில் ஆட்சி செய்வார், மேலும், அந்தக் காணக்கூடாத பரலோக அரசாங்கத்தில் அவர் துணை அரசர்களையும் கொண்டிருப்பார். இவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களும், சோதனைகளினூடே அவரோடு நிலைத்திருந்தவர்களுமான உண்மையுள்ள மானிடருக்குள்ளிருந்து தெரிந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களிடமே அவர் பின்வருமாறு கூறுகிறார்: “ஒரு ராஜ்யத்துக்காக என் பிதா என்னுடன் உடன்படிக்கை செய்திருக்கிறபடியே, நானும் . . . உங்களுடன் ஓர் உடன்படிக்கை செய்கிறேன்.” (லூக்கா 22:28, 29, NW) மனிதவர்க்கத்திலிருந்து ஒருசிலர் மாத்திரமே, கிறிஸ்து இயேசுவுடன் அரசாளும்படி பரலோகத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். இது இன்று ராஜ்யங்களில் நடப்பதற்கு ஒப்பாயிருக்கிறது, அங்கே அரசியல் மேல் மன்றம் அல்லது பாராளுமன்றத்தில் ஆட்சி செய்ய ஒருசிலர் மாத்திரமே தெரிந்து கொள்ளப்படுகிறார்கள். இயேசு கிறிஸ்து 1,44,000 துணை அரசர்களை மாத்திரமே கொண்டிருப்பார் என்று பைபிள் காண்பிக்கிறது. ஆகவே கடவுளுடைய ராஜ்யம், அல்லது பரலோக அரசாங்கம், கிறிஸ்து இயேசுவையும் பூமியிலிருந்து பரலோகத்துக்குக் கொண்டு செல்லப்படும் 1,44,000 ஆட்களையும் கொண்டிருக்கிறது. (வெளிப்படுத்தின விசேஷம் 14:1-4; 5:9, 10) பூமியைப் பற்றி என்ன? அரசர் “பூமியெங்கும் பிரபுக்களை” நியமிப்பார் என்று சங்கீதம் 45:16 குறிப்பிடுகிறது. மனித “பிரபுக்கள்,” அல்லது அரசாங்கக் கண்காணிகள், நீதியின் நியமங்களுக்கு ஆழ்ந்த பயபக்தியுடன் நடப்பதனால் பரலோகங்களிலிருந்து நியமிப்பைப் பெறுவர்.—ஏசாயா 32:1-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.

45 இந்தப் பரிபூரண அரசாங்கம் எப்பொழுது, எப்படி ஸ்தாபிக்கப்படுகிறது? இயேசு, பூமியிலிருந்தபோது இந்த ராஜ்யமே அவருடைய போதகத்தின் முக்கிய பொருளாயிருந்தது. (மத்தேயு 4:17; லூக்கா 8:1) ஆயினும், ராஜ்யத்தை அவர் அந்தச் சமயத்திலோ அல்லது தாம் உயிர்த்தெழுப்பப்பட்ட போதே ஸ்தாபிக்கவில்லை. (அப்போஸ்தலர் 1:6-8) பரலோகங்களுக்குள் அவர் ஏறிப்போன போதுங்கூட, யெகோவாவின் குறிக்கப்பட்ட காலத்திற்காக அவர் இன்னும் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. (சங்கீதம் 110:1, 2; எபிரெயர் 1:13) அந்தக் குறிக்கப்பட்ட காலம் பொ.ச. 1914-ல் வந்ததென்று பைபிள் தீர்க்கதரிசனம் காட்டுகிறது. எனினும் எவராவது பின்வருமாறு கேட்கலாம்: 1914-ம் ஆண்டு, பரிபூரண அரசாங்கத்தைப் பார்க்கிலும் உலக இக்கட்டுகள் பெருகுவதன் தொடக்கத்தைக் குறித்ததல்லவா? அதுவே கவனிக்க வேண்டிய குறிப்பு! நாம் இப்பொழுது பின்னால் பார்க்கப் போகிற பிரகாரம் கடவுளுடைய ராஜ்யத்தின் வருகைக்கும் சமீப ஆண்டுகளின் கோர சம்பவங்களுக்கும் நெருங்கிய சம்பந்தமிருக்கிறது.

46 1914-க்கு முன்னால் ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகளாக தி உவாட்ச்டவர் பத்திரிகை (பூமியில் இப்பொழுது மிக அதிக விரிவாய் விநியோகிக்கப்படும் மத பத்திரிகை) 1914-ஐ பைபிள் தீர்க்கதரிசனத்தில் முன்குறித்து வைக்கப்பட்டுள்ள ஓர் ஆண்டென சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது. 1914-ல் இந்தத் தீர்க்கதரிசனங்கள் குறிப்பிடத்தக்க முறையில் நிறைவேற்றமடைய தொடங்கின. இவற்றில் ஒன்று, 1,900 வருடங்களுக்கு முன்பு இயேசுதாமே கூறின தீர்க்கதரிசனமாகும். அது இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவில் தோன்றுவதும், இயேசு அரசாதிகாரத்துடன் காணக்கூடாதவராக வந்திருப்பதை நிரூபிப்பதுமான அந்த “அடையாளத்தைப்” பற்றியதாகும். இந்த “அடையாளத்தைப்” பற்றி தம்முடைய சீஷர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்து அவர் பின்வருமாறு கூறினார்: “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.” (மத்தேயு 24:3, 7, 8) கவனத்தைக் கவரும் நிறைவேற்றமாக ‘உலகப்’ போர்களில் முதல்போர் 1914-ல் தொடங்கி, இதற்கு முந்திய 2,500 ஆண்டுகளில் நடந்திருந்த 900 யுத்தங்கள் மொத்தத்தையும்விட ஏழு மடங்குகள் அதிகப்பட்ட அழிவைக் கொண்டு வந்தது! துயர வேதனைகள் அப்போதிருந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 1914-லிருந்து இந்தப் பூமியை வருத்தும் யுத்த நாசம், உணவு குறைபாடுகள் அல்லது பெரும் பூமியதிர்ச்சிகளில் எதையாவது நீங்கள் அனுபவித்தீர்களா? அப்படியானால் நீங்கள் இந்தக் காரிய ஒழுங்கு முறையின் முடிவு காலத்துக்குரிய அந்த “அடையாளத்தை” நேரில் கண்ட சாட்சியாயிருக்கிறீர்கள்.—தானியேல் 12:4.

47 இரண்டாம் உலகப் போரின் மூலம் “துயர வேதனைகள்” மிகவும் அதிகரித்துவிட்டிருக்கின்றன. இந்தப் போர், முதல் உலகப் போரைப் பார்க்கிலும் நான்கு மடங்கு அதிக நாசத்தை உண்டுபண்ணினது, மேலும் தொடர்ந்து அணுசக்தி சகாப்தத்துக்குள் கொண்டுவிட்டு, இயேசு மேலுமாகச் சொன்ன தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறது: “பூமியில் . . . [வெளியேற வழியறியாமல், NW] ஜாதிகள் தத்தளித்து மனங்கலங்குவார்கள் . . . பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.” (லூக்கா 21:25, 26, தி.மொ.) பெருங் குற்றச்செயல்களும் துன்மார்க்கமும் அதிகரித்தல், பிள்ளைகளுக்குள் கீழ்ப்படியாமையும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் பெருகுதல், மேலும் தெய்வ பக்தியில்லாமையும் ஒழுக்கக்கேடும் வளருதல்—ஆகிய இந்தத் திகிலூட்டும் உற்பத்திகளும் இந்தத் தீய ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களைக்” குறிப்பதாக முன்னறிவிக்கப்பட்டிருக்கின்றன.—2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:12.

48 ஆயினும், இந்தப் பரலோக அரசாங்கம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டிருந்தால், பூமியில் இந்தத் துயரமெல்லாம் இருப்பதேன்? பிசாசாகிய சாத்தானே இதற்குப் பொருப்புள்ளவன், கிறிஸ்து ராஜ்ய அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டபோது, அவருடைய முதலாவது செயல், காணக்கூடாத பரலோகங்களில் சாத்தான் மீது போர் நடத்துவதாகும். இதன் விளைவாக, “உலகமனைத்தையும் மோசம் போக்குகிற” சாத்தான் தன் தூதர்களோடுங்கூட கீழே இந்தப் பூமிக்கு அருகில் தள்ளப்பட்டான். தன் அழிவு நெருங்க வருவதை அறிந்து, அவன், பூமியில் பெரும் துன்பங்களைக் கிளப்பிவிடுகிறான். “பூமிக்கும் சமுத்திரத்துக்கும் ஐயோ ஆபத்து! பிசாசு உங்களிடம் இறங்கிவிட்டான். தனக்குக் கொஞ்சங் காலந்தான் உண்டென்றறிந்து மிகுந்த கோபங் கொணடான்.”—வெளிப்படுத்தின விசேஷம் 12:7-9, 12. தி.மொ.

49 இந்த ஆபத்துகளுக்கு ஒரு முடிவு உண்டா? ஆம்!—சர்வ வல்லமையுள்ள கடவுளின் ராஜ்யமாகிய பரலோகத்தின் அரசாங்கம் தானே “பூமியைக் கெடுக்கிறவர்களைக் கெடுக்கிறதற்குச்” செயல்படுகையில் அது நடக்கும். (வெளிப்படுத்தின விசேஷம் 11:18; தானியேல் 2:44) தம்முடைய கைவேலைப்பாடாகிய இந்தப் பூமியைத் தங்கள் அணுசக்திக் கருவிகளைக் கொண்டு அழிக்க அரசியல் வல்லரசுகளையோ, பொய்க் கிறிஸ்தவர்களையோ, மற்ற எவரையோ கடவுள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். அதற்கு மாறாக, அவர் பின்வருமாறு அறிவிக்கிறார்: “என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம் பண்ணினேன்.” (செப்பனியா 3:8) பூமியில் சாத்தானைப் பின்பற்றும் யாவருக்கும் மீளமுடியா பேரழிவைக் கொண்டுவருவதற்கு யெகோவா, சர்வலோகத்தில் தாம் கட்டுப்படுத்தும் மாபெரும் சக்திகளைத் தம்முடைய கிறிஸ்துவின் மூலமாய் உபயோகிப்பார். இது அதன் பரிமாணத்தில், நோவாவின் காலத்து ஜலப்பிரளயத்துக்கு ஒப்பாக பூகோள அளவானதாய் இருக்கும்.—எரேமியா 25:31-34; 2 பேதுரு 3:5-7, 10.

50 பைபிளில், பொல்லாதத் தேசங்களின் இந்த அழிவு கடவுளுடைய அர்மகெதோன் யுத்தம் என்றழைக்கப்படுகிறது. (வெளிப்படுத்தின விசேஷம் 16:14-16) யெகோவாவையும் நீதியையும் தேடுகிற சாந்த குணமுள்ளவர்கள் மாத்திரமே, அர்மகெதோனைத் தப்பிப் பிழைத்துக் கடவுளின் சமாதான புதிய ஒழுங்குமுறைக்குள் பிரவேசிக்கக்கூடும். (செப்பனியா 2:3; ஏசாயா 26:20, 21) இவர்களைக் குறித்து பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:11) பூமியில் பரதீஸைத் திரும்பப் புதுப்பிக்கும் சிறப்பான வேலை அப்பொழுது தொடங்கும்!

பரதீஸுக்குள் பிரவேசிக்கப் படிப்பு

51 பரதீஸில் வாழ நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுடைய பதில் ‘ஆம்’ என்றால், தொல்லை நிறைந்த இன்றைய ஒழுங்குமுறையைப் பற்றியும் அதன் நெருங்கி வரும் அழிவைக் குறிப்பிடும் “அடையாளத்தைப்” பற்றியும் இயேசு பேசினபோது, “இவையெல்லாம் சம்பவித்துத் தீரும் வரை இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று,” மேலும் கூறினதை அறிவதில் நீங்கள் மனக்கிளர்ச்சியடைவீர்கள். 1914-ல் ‘வேதனைகளின் ஆரம்பத்தைக்’ கண்ட அந்தச் சந்ததியில், சிலராவது பூமியில் பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படுவதைக் காண உயிரோடிருப்பார்கள். (மத்தேயு 24:3-8, 34) ஆயினும், இன்று பெரும்பான்மையர் அழிவுக்குப் போகும் விசாலமான பாதையில் சென்று கொண்டிருப்பது வருந்தத்தக்க உண்மையாகும். (மத்தேயு 7:13, 14) அவர்கள் மாறுவதற்குச் சிறிது காலமே மீந்திருக்கிறது. சரியான நேரத்தில் யெகோவா எச்சரிப்பு கொடுத்ததற்காக நீங்கள் எவ்வளவு நன்றியுடனிருக்கலாம்! ஏனென்றால் நீங்கள் உயிரோடிருக்கவே யெகோவா விரும்புவதனால், சரியான நடவடிக்கைகளை எடுக்க அவர் உங்களுக்கு உதவி செய்வார்.—2 பேதுரு 3:9; எசேக்கியேல் 18:23.

52 உங்களுக்கு இப்பொழுது அவசரமாக தேவைப்படுவது திருத்தமான அறிவேயாகும். (1 தீமோத்தேயு 2:4; யோவான் 17:3) இதை நீங்கள் எங்கே பெறலாம்? இதை ஏதாவது ஒரு மதத்தில் கண்டடைய முடியுமா? ஒரு மலையின்மேல் எல்லா பாதைகளும் உச்சிக்குக் கொண்டு செல்வதுபோல், எல்லா மதங்களும் ஒரே இலக்கினிடமே வழிநடத்துகின்றனவென்று சில ஆட்கள் சொல்லுகிறார்கள். அவர்கள் எவ்வளவு தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்! மலை ஏறுபவர்கள், சரியான பாதையைக் கண்டு பிடிக்கும் பொருட்டு நிலப்படங்களைப் பயன்படுத்துகிறார்கள், மேலும் வழிகாட்டிகளைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுகிறார்கள். அதுபோலவே நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்திய மதம் ஒரே ஒன்றுதான் இருக்கிறது, அதைக் கண்டுபிடிக்க வழிநடத்துதல் தேவைப்படுகிறது.—அப்போஸ்தலர் 8:26-31.

53 உங்களுக்கு உதவி செய்யவே இந்தச் சிறு புத்தகத்தை யெகோவாவின் சாட்சிகள் அளிக்கிறார்கள். சில அடிப்படை பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்ள இது உங்களுக்கு ஏற்கெனவே உதவி செய்திருக்கிறதல்லவா? ஒவ்வொரு குறிப்பும் கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையில் ஆதாரங் கொண்டிருப்பதை நீங்கள் தாமே உறுதி செய்து கொண்டீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுது, உங்களுடைய இலக்கை நோக்கி முன்னேறுவதற்கு நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். பொதுவாயுள்ள சமுதாயத்தில் ஓர் இடத்தை ஏற்க ஓர் ஆளைத் தகுதியாக்குவதற்கு உலகப்பிரகாரமான தகுந்த படிப்பு தேவைப்படுவது போலவே, பரதீஸிய பூமியில் வாழ்வதற்குத் தப்பிப்பிழைத்திருக்கப் போகும் அந்தச் சமுதாயத்தில் இடம்பெறுவதற்கு ஒருவனை தகுதியாக்கச் சரியான பைபிள் படிப்பு தேவைப்படுகிறது. (2 தீமோத்தேயு 3:16, 17) நெருங்கிய நண்பர்கள் உங்களை எதிர்க்கச் செய்வதனால் அல்லது தன்னலப் பொருளாசைக்குரிய அல்லது ஒழுக்கங்கெட்ட வழிகளில் உங்களைக் கவர்ந்து உட்படுத்த முயலுவதனால், சாத்தான் உங்கள் கவனத்தை வேறு திசையில் திருப்ப முயற்சி செய்யலாம். சாத்தானுக்கு இடங்கொடுத்து விடாதீர்கள். உங்கள் பாதுகாப்பும் உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தினுடைய முழு எதிர்காலமும் நீங்கள் பைபிளை மேலும் தொடர்ந்து படிப்பதன் பேரில் சார்ந்திருக்கிறது.—மத்தேயு 10:36; 1 யோவான் 2:15-17.

54 தற்போது நீங்கள் பைபிள் படிப்பதை விட்டுவிடாமல், தொடர்ந்து படிப்பது மட்டுமல்லாமல், மேலும் கற்றுக்கொள்வதற்கு மற்றெரு வழியும் உண்டு. உங்களுடைய வட்டாரத்தில், பைபிள் கல்வியில் அக்கறையுள்ளவர்கள் உள்ளூர் ராஜ்ய மன்றக் கூட்டங்களுக்கு ஒழுங்காகச் செல்கிறார்கள். அங்கு வந்திருக்கும் அனைவரும் பைபிளிலிருந்து கொடுக்கப்படும் போதனையை மனதில் உட்கொண்டு மேலும் நல்ல ஆட்களாவதற்கு உள்ளப்பூர்வமாய் முயற்சி செய்கிறார்கள். புதியவர்களை அவர்கள் மனமார வரவேற்று: “நாம் யெகோவாவின் பர்வதத்துக்குப் [அவருடைய வணக்கத்துக்குரிய இடத்துக்குப்] . . . போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்,” என்று சொல்லுகிறார்கள். (ஏசாயா 2:3, தி.மொ.) பைபிள் கூட்டங்களுக்கு வருவதற்கு நல்ல காரணங்கள் எபிரெயர் 10:24, 25-ல் விளக்கப்பட்டிருக்கின்றன. அதில் எழுத்தப்பட்டிருப்பதாவது: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து, சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்; நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும்.”

55 நீங்கள் யெகோவாவின் அமைப்போடு கூட்டுறவுக் கொண்டுவருகையில், அந்த சூழ்நிலைமை ஆலயங்களிலும் சர்ச்சுகளிலுமிருந்து மிகவும் வேறுபட்டிருப்பதைக் காண்பீர்கள். அங்கு உங்களை அணுகி எவரும் காணிக்கை கேட்பதில்லை. புறங்கூறுவதோ சண்டை சச்சரவிடுவதோ இல்லை. குடும்ப மதிப்புநிலை அல்லது பொருளாதார நிலையின் காரணமாக வேறுபாடு காட்டப்படுகிறதில்லை. யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் தலைச் சிறந்து விளங்கும் குணம் அன்பாகும். முதலாவது யெகோவாவையும் அடுத்தப்படி மற்றவர்களையும் அவர்கள் நேசிக்கிறார்கள். இவை மெய்க் கிறிஸ்தவர்களின் அடையாளக் குறிகளாக இருக்கின்றன. (மத்தேயு 22:37-39; யோவான் 13:35) நீங்கள் தாமே அவர்கள் கூட்டங்ளுக்குச் சென்று இவற்றின் உண்மையை நேரில் கண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும். அவர்களுடைய ஒற்றுமை உங்கள் மனதைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை. 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சாட்சிகள் இருக்கிறார்கள். எனினும், உலகம் முழுவதிலும் சாட்சிகள் தங்கள் கூட்டங்களில் ஒரே நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றுகிறார்கள். ஒரே சமயத்தில் பல மொழிகளில் அச்சு செய்யப்படுவதன் காரணமாக, உலகம் முழுவதிலும் பெரும்பான்மையான யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய வாராந்தர கூட்டங்களில் ஒரே வேதபூர்வ விஷயங்களை ஒன்றுக்கொன்று ஒருசில மணி நேரங்களே வேறுபடும் சமயங்களில் படிக்கிறார்கள். பிளவுபட்ட இந்த உலகில், யெகோவாவின் அமைப்பின் ஒற்றுமை தற்கால அற்புதமாக இருக்கிறது.

56 யெகோவாவின் ஜனங்களோடு நீங்கள் ஒழுங்காக கூட்டுறவுக் கொள்கையில், “புதிய சுபாவத் தன்மையைத்” தரித்து “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகிய கடவுளுடைய ஆவியின் கனிகளை உங்களில் வளர்க்க வேண்டும். (கொலோசெயர் 3:10, 12-14; கலாத்தியர் 5:22, 23) இது ஆழ்ந்தத் திருப்தியை உங்களுக்குக் கொண்டுவரும். நீங்கள் சீரழிந்த உலகில் வாழ்வதாலும் உங்களுடைய சொந்த அபூரணத் தன்மைகளின் காரணமாகவும் அவ்வப்போது அடக்கி வெல்லவேண்டிய பிரச்னைகள் உங்களுக்கு ஏற்படக்கூடும். ஆனால் யெகோவா உங்களுக்கு உதவி செய்வார். அவரைப் பிரியப்படுத்த உள்ளப்பூர்வமாய்ப் பிரயாசப்படுகிறவர்களுக்கு அவருடைய வார்த்தை பின்வருமாறு உறுதியளிக்கிறது: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல் எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) நீங்கள் யெகோவாவின் அன்பினால் கவர்ந்திழுக்கப்படுவீர்கள், ஆகவே நீங்கள் அவருக்குச் சேவை செய்ய விரும்புவீர்கள். நீங்கள் எவ்வாறு உங்களுடைய வாழ்க்கையை இந்த அன்புள்ள கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, சிலாக்கியம் பெற்ற அவருடைய சாட்சிகளில் ஒருவராகலாம் என்பதைக் காண்பிக்க யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சி கொள்வார்கள். (சங்கீதம் 104:33; லூக்கா 9:23) ஆம், இது ஒரு சிலாக்கியமே. சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! யெகோவாவை வணங்குபவராக நீங்கள் இங்கே பூமியில் பரதீஸில் நித்தியமாய் வாழும் இலக்கை அடைய முடியும்.—செப்பனியா 2:3; ஏசாயா 25:6, 8.

57 ஆகையால் தொடர்ந்து படித்து, யெகோவா தேவனையும், அவருடைய குமாரனையும் நீதியுள்ள பரலோக அரசாங்கத்தையும் பற்றிய அன்பிலும் நன்றியோடுகூடிய மதித்துணர்விலும் வளர்ந்து கொண்டிருங்கள். கடவுளுடைய அரசாங்கத்தையும் மனிதவர்க்கத்தின் மேல் அது பொழியவிருக்கும் ஆசீர்வாதங்களையும் விவரித்துப் பைபிள் தீர்க்கதரிசனம் பின்வருமாறு கூறுகிறது: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள். தேவன் தாமே அவர்களோடேகூட இருப்பார்.” சுயநலமுள்ள, சீரழிந்த இன்றைய மனித ஆட்சிக்கு மிக அதிக மேலாக உயர்ந்திருக்கும் “தேவன்தாமே” அந்தப் புதிய ஒழுங்குமுறையில் தம்மை நேசித்து வணங்கும் யாவருக்கும் அன்பான தகப்பனாக மிக நெருங்கியிருப்பார். யெகோவா தேவனை வணங்கும் உண்மை வணக்கமாகிய, இந்த ஒரே மதம் மாத்திரமே அங்கிருக்கும், அல்லது வணங்குவோர், பிள்ளைகளுக்குத் தகப்பனிடமிருக்கும் அந்த மிக நெருங்கிய உறவை அனுபவித்து மகிழ்வார்கள். அவர் எத்தகைய அன்புள்ளத் தகப்பனாகத் தம்மைக் காண்பிப்பார்! “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்து போயின.”—வெளிப்படுத்தின விசேஷம் 21:3, 4.

58 இவ்வாறு பரிபூரண பரலோக அரசாங்கத்தின் கீழ் பரதீஸிய பூமையை ஸ்தாபிக்கும் இந்தப் பெரிய அற்புதம் நிறைவேற்றப்பட்டிருக்கும். நாளைக்கு சூரியன் உதித்து அஸ்தமனமாவது எவ்வளவு நிச்சயமோ அவ்வாறே இதுவும் அவ்வளவு நிச்சயமாயிருக்கிறது. ஏனெனில், வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவராகிய யெகோவா தேவனின் வாக்குகள், “சத்தியமும் உண்மையுமானவைகள்.” அவரே பரலோகத்திலுள்ள தம்முடைய சிங்காசனத்திலிருந்து பின்வருமாறு அறிவிக்கிறார்: “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்.”—வெளிப்படுத்தின விசேஷம் 21:5.

இந்தச் சிறு புத்தகத்தை விமரிசனம் செய்கையில் பின்வரும் கேள்விகளுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?

பைபிள் என்ன வழிகளில் தலைசிறந்தது?

கடவுளைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள்?

கிறிஸ்து இயேசு யார்?

பிசாசாகிய சாத்தான் யார்?

கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதித்திருக்கிறார்?

மனிதன் ஏன் சாகிறான்?

மரித்தோரின் நிலைமை என்ன?

மீட்கும்பொருள் என்றாலென்ன?

உயிர்த்தெழுதல் எங்கே, எவ்வாறு நடைபெறுகிறது?

ராஜ்யம் என்றாலென்ன? அது நிறைவேற்றப் போவதென்ன?

“இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைக்” குறிக்கும் அடையாளம் என்ன?

பரதீஸில் நித்திய வாழக்கைக்காக நீங்கள் எவ்வாறு ஆயத்தஞ் செய்யலாம்?

[அடிக்குறிப்புகள்]

a முன் பத்திகளில் சொல்லப்பட்டவற்றிற்கு ஆதாரமான பைபிள் வசனக் குறிப்புகள்: (1) அப்போஸ்தலர் 17:26; சங்கீதம் 46:9; மீகா 4:3, 4; ஏசாயா 65:21-23; (2) ஏசாயா 65:25; 11:6-9; 55:12, 13; சங்கீதம் 67:6, 7; (3) யோபு 33:25; ஏசாயா 35:5, 6; 33:24; சங்கீதம் 104:24; (4) ஏசாயா 55:11.

b மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிக்கப்படாத வசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டவை.

c Monarchs and Tombs and Peoples—The Dawn of the Orient, பக்கம் 25.

d Cyclopedia of Biblical, Theological and Ecclesiastical by J. Mc Clintock and J. Strong, Volume 8, page 908.

[கேள்விகள்]

1-4. (எ) நம்முடைய அட்டைப் படத்தின் என்ன அம்சங்களில் பங்கு கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சிதரும்? (பி) மகிமையுள்ள என்ன எதிர்நோக்கு இங்கே உங்களுக்கு நீட்டப்படுகிறது? (சி) இத்தகைய நம்பிக்கையை ஆதரிக்கும் சில பைபிள் வசனங்கள் யாவை?

5. (எ) எந்தப் புத்தகம் இந்தக் காரியங்களை விளக்கிக் காட்டுகிறது? (பி) என்ன முறைகளில் இது முதன்மையான புத்தகம்?

6. பரிசுத்தமாகக் கருதப்படும் மற்ற எழுத்துக்களிலிருந்து பைபிளை மேன்மையுடையதாய் வேறுபடுத்திக் காட்டுவது எது?

7. சிந்தனையுள்ள மனிதர் பைபிளைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறார்கள்?

8, 9. (எ) பைபிளை மேற்கத்திய புத்தகம் என்றழைப்பது ஏன் தவறு? (பி) பைபிள் எவ்வாறு எழுதப்பட்டது? எந்தக் காலப்பகுதியில் எழுதப்பட்டது? (சி) பைபிள் ஏன் ஒரு நூல் நிலையம் என்றழைக்கப்படலாம்? (டி) பைபிளை எழுத எத்தனை ஆட்கள் பயன்படுத்தப்பட்டனர்? (இ) பைபிளின் மூல காரணத்தைப்பற்றி இந்த மனிதர்களில் சிலர் என்ன சாட்சி கொடுத்தார்கள்?

10. (எ) பைபிள் நம் நாள் வரையாக எப்படி வந்தது? (பி) கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட மூல பைபிள் வாசகமே இன்னும் நம்மிடத்திலிருக்கிறது என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?

11. என்ன நவீன கண்டுபிடிப்புகள் பைபிள் பதிவோடு ஒத்திருக்கின்றன?

12. (எ) பரியாசக்காரர்கள் சிலர் கடவுளைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள்? (பி) பைபிள், கடவுளைத் தகப்பனாகக் குறிப்பிடுவதற்குக் காரணமென்ன? (சி) கடவுளுடைய பெயர் என்னவென்று பைபிள் காண்பிக்கிறது?

13. என்ன இரண்டு வழிகளில் யெகோவா தம்மை மனிதவர்க்கத்துக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்?

14. யெகோவாவைப் பற்றி பைபிள் நமக்கு என்ன சொல்லுகிறது?

15. சிருஷ்டிப்பைப் பற்றி புத்திக்கூர்மையுள்ள மனிதர்களின் ஆராய்ச்சிகள் என்ன முடிவுகளுக்கு வழிநடத்தியிருக்கின்றன?

16. இப்பிரபஞ்சம், எப்படி கடவுளுடைய படைப்பு ஞானத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது?

17. சிருஷ்டிகர் இருப்பதை நம்புவது ஏன் நியாயமாயிருக்கிறது?

18. கடவுள் ஓர் ஆள், அவர் துதிக்கப்படத்தக்கவர் என்று எது காண்பிக்கிறது?

19. (எ) போரில் கடவுள் வெற்றி தந்தாரென, ஏன் இன்று எந்தத் தேசமும் உரிமை பாராட்ட முடியாது? (பி) தேசங்களின் போர்களில் கடவுளுக்கு ஏன் யாதொரு சம்பந்தமும் கிடையாது?

20. கிறிஸ்தவ மண்டலம் கிறிஸ்தவத்துக்கு மாறாகவும் கடவுளை எதிர்ப்பதாகவும் இருப்பதை எது காண்பிக்கிறது?

21. கடவுளுடைய அற்புதங்களைச் சந்தேகிக்காமல் இருப்பது ஏன் நியாயமானது?

22. கடவுளுடைய முதல் சிருஷ்டிப்பை விவரியுங்கள்.

23. (எ) கடவுளுக்கும் அவருடைய குமாரனுக்குமுள்ள உறவை எவ்வாறு விளக்கலாம்? (பி) தம்முடைய குமாரன் மூலமாக யெகோவா என்ன சிருஷ்டித்தார்?

24. (எ) யெகோவாவின் பூமிக்குரிய எந்தச் சிருஷ்டிப்பு முதன்மையாய்ச் சிறந்து விளங்குகிறது? என்ன முறைகளில்? (பி) மனிதன் மிருகங்களிலிருந்து படிப்படியாக உருமாறி உயர்ந்து வந்தான் என்று சொல்வது ஏன் நியாயமற்றதாக இருக்கிறது?

25, 26. (எ) மனிதனுக்கு முன்பாக என்ன சிறப்பான எதிர்நோக்கு வைக்கப்பட்டது? (பி) பூமியில் ஜனத்தொகை அளவுக்கு மீறி பெருக்கமடையும் பிரச்னை ஏன் அங்கு இராது?

27. என்ன கேள்விகள் இப்பொழுது பதிலளிக்கப்பட வேண்டியிருக்கின்றன?

28. பரதீஸிய தோட்டத்தில் கலகம் எப்படிப் பிரவேசித்தது?

29. (எ) தீர்க்கப்பட வேண்டிய என்ன விவாதங்கள் எழும்பின? (பி) கடவுள் இந்தச் சவாலை எவ்வாறு எதிர்த்துத் தீர்க்கிறார்? (சி) சாத்தான் நிந்திப்பதை எதிர்த்துப் பதில் அளிப்பதில் நீங்கள் எவ்வாறு பங்கு கொள்ளலாம்?

30. கீழ்ப்படியாமையின் விளைவாக மனிதனுக்குக் கிடைத்தத் தண்டனையைப் பற்றி வேத எழுத்துக்கள் என்ன சொல்லுகின்றன?

31. “பாவம்” என்பது என்ன? இதன் விளைவாக மனிதவர்க்கத்திற்கு என்ன ஏற்பட்டது?

32. நாம் சுதந்தரித்திருக்கும் மரணத்தை பைபிள் எவ்வாறு விவரிக்கிறது,

33. (எ) மனிதவர்க்கத்திற்கும் இந்தப் பூமிக்கும் என்ன மகிமையுள்ள எதிர்காலம் வரவிருக்கிறது? (பி) யெகோவா தம்முடைய குமாரன் மூலமாய் நிறைவேற்றும் மூன்று முக்கிய காரியங்கள் யாவை?

34, 35. (எ) எப்படி மாத்திரமே மனிதன் மரணத்திலிருந்து மீட்கப்படக்கூடும்? (பி) மீட்கும் பொருள் என்பது என்ன?

36. மீட்கும் பொருளாக, ஒரு பரிபூரண மனித உயிரை யெகோவா எப்படி ஏற்பாடு செய்தார்?

37. உயிரை விரும்பும் சகல மனிதருக்கும் இயேசு தம்முடைய அன்பை எப்படிக் காட்டினார்?

38. கடவுளுடைய குமாரன் எவ்வாறு திரும்ப உயிருக்குக் கொண்டுவரப்பட்டார்? எது இதை நிரூபிக்கிறது?

39. (எ) இயேசு, தம்முடைய பலியின் விலைமதிப்பை எப்படி உபயோகிக்கிறார்? முதலில் யார் சார்பாக உபயோகிக்கிறார்? (பி) வேறு எந்தப் பெரிய அற்புதத்தைப் பற்றி இயேசு பேசினார்?

40, 41. (எ) திருத்தமாக “உயிர்த்தெழுதல்” எதைக் குறிக்கிறதென்று விளக்குங்கள். (பி) உயிர்தெழுதலைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதியில் நாம் ஏன் விசுவாசம் வைக்கலாம்?

42. பூமியில் நித்திய வாழ்க்கை ஏன் சாத்தியமாயும் நிச்சயமாயும் இருக்கிறது?

43. (எ) ஒரு பரிபூரண அரசாங்கம் தேவைப்படுவதேன்? (பி) இதைக் குறித்து யெகோவாவின் நோக்கமென்ன?

44. (எ) இந்த அரசாங்கம் எங்கே இருக்கும்? (பி) இது எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும்?

45, 46. (எ) பூமியில் இயேசுவின் போதகத்தின் முக்கிய பொருள் என்னவாக இருந்தது? (பி) பரிபூரண அரசாங்கம் ஏன் உடனடியாக ஸ்தாபிக்கப்படவில்லை? (சி) பொ.ச. 1914 எவ்வாறு தீர்க்கதரிசனத்திலும் உலக சம்பவங்களிலும் முக்கியமான ஆண்டாக இருந்தது?

47. “அடையாளத்தை” நிறைவேற்றும் சம்பவங்கள் சமீப ஆண்டுகளில் எவ்வாறு தீவிரமாகியிருக்கின்றன?

48. பூமியின் மேல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஆபத்துகளுக்கு யார் உத்தரவாதமுள்ளவன்? அவை 1914-லிருந்து அதிகரித்திருப்பதேன்?

49. (எ) “பூமியை கெடுக்கிறவர்களுக்கு” என்ன நேரிடும்? (பி) யெகோவா எவ்வாறு தம்முடைய “நியாயத்தீர்ப்பை” விரோதிகளின் மீது நிறைவேற்றுவார்?

50. (எ) “அர்மகெதோன்” என்பது என்ன? (பி) யார் மாத்திரமே அர்மகெதோனில் தப்பிப் பிழைப்பார்கள்?

51. இப்பொழுதே நீங்கள் செயல்படுவது ஏன் அவசியம்?

52. மதத்தைக் குறித்து ஞானமான தெரிவு செய்வதற்கு உங்களுக்குத் தேவைப்படுவது என்ன?

53. (எ) நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள நீங்கள் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்? (பி) சாத்தானிடமிருந்து வரும் என்ன சோதனைகளை நீங்கள் எதிர்த்து வெல்ல வேண்டியிருக்கலாம்?

54. கல்விக்காக, மேலுமான என்ன ஏற்பாட்டை யெகோவா உங்களுடைய வட்டாரத்தில் செய்திருக்கிறார்?

55. (எ) யெகோவாவின் அமைப்பு எவ்வகைகளில் மற்றவற்றிலிருந்து வேறுபடுகிறது? (பி) வேறு எந்த ஜனமும் இராத வண்ணமாய் யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு ஒற்றுமைப்பட்டிருக்கிறார்கள்?

56. (எ) யெகோவாவின் அமைப்போடு கூட்டுறவுக் கொள்வதிலிருந்து என்ன நன்மைகளை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்? (பி) பிரச்னைகள் எழும்புகையில், நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? (சி) உங்களுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக் கொடுப்பது ஏன் முக்கியம்?

57. (எ) புதிய ஒழுங்குமுறையில் கடவுளுக்கும் மனிதவர்க்கத்துக்குமிடையே என்ன மிக நெருங்கிய உறவு இருக்கும்? (பி) அப்பொழுது நீங்கள் அனுபவித்து மகிழக்கூடிய சில ஆசீர்வாதங்கள் யாவை?

58. யெகோவா “சகலத்தையும் புதிதாக்கு”வார் என்று நீங்கள் ஏன் நிச்சய நம்பிக்கையுடனிருக்கலாம்?

[பக்கம் 2-ன் படங்கள்]

இந்தப் புத்தகம் அனேக மொழிகளில் உலகம் முழுவதிலும் விநியோகிக்கப்படுவதற்காக இங்கு காண்பிக்கப்பட்டிருக்கும் உவாட்ச்டவர் அச்சு தொழிற்சாலைகளில் தயார் செய்யப்டுகிறது:

அமெரிக்கா

ஆஸ்திரேலியா

பிரிட்டன்

ஜெர்மணி

பிரேஸில்

ஜப்பான்

இத்தாலி

கானடா

[பக்கம் 13-ன் படங்கள்]

சிருஷ்டியாக, மனிதன் மிருகங்களைவிட மிக அதிகம் உயர்ந்தவன்

[பக்கம் 18-ன் படங்கள்]

இயேசு பரிபூரண மனிதனாகிய ஆதாமுக்கு ஈடாக இருந்தார்