Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 23

கப்பர்நகூமில் இயேசு நிறைய அற்புதங்களைச் செய்கிறார்

கப்பர்நகூமில் இயேசு நிறைய அற்புதங்களைச் செய்கிறார்

மத்தேயு 8:14-17 மாற்கு 1:21-34 லூக்கா 4:31-41

  • இயேசு ஒரு பேயைத் துரத்துகிறார்

  • பேதுருவின் மாமியாரைக் குணப்படுத்துகிறார்

இயேசு தன் சீஷர்களான பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோரை மனிதர்களைப் பிடிப்பதற்குக் கூப்பிடுகிறார். ஓய்வுநாளில் அவர்கள் எல்லாரும் கப்பர்நகூமில் இருக்கும் ஜெபக்கூடத்துக்குப் போகிறார்கள். அங்கே இருக்கிற மக்களுக்கு இயேசு கற்பிக்கிறார். அவர் கற்பிக்கும் விதத்தைப் பார்த்து மக்கள் மலைத்துப்போகிறார்கள். ஏனென்றால், அவர் வேத அறிஞர்களைப் போல பேசாமல், அதிகாரத்தோடு பேசுகிறார்.

அந்த ஜெபக்கூடத்தில், பேய் பிடித்த ஒருவன் இருக்கிறான். அவன் இயேசுவைப் பார்த்து, “நாசரேத்தூர் இயேசுவே, உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? எங்களை ஒழித்துக்கட்டவா வந்தீர்கள்? நீங்கள் யாரென்று எனக்கு நன்றாகத் தெரியும், நீங்கள் கடவுளால் அனுப்பப்பட்ட பரிசுத்தர்!” என்று கத்துகிறான். உடனே இயேசு அவனைப் பிடித்திருந்த பேயிடம், “பேசாதே, இவனைவிட்டு வெளியே போ!” என்று அதட்டுகிறார்.—மாற்கு 1:24, 25.

அப்போது, அந்தப் பேய் அவனுக்கு வலிப்பு உண்டாக்கி, அவனைக் கீழே தள்ளுகிறது; தொண்டைகிழிய கத்துகிறது. ஆனால், “அவனைக் காயப்படுத்தாமல்” அவனைவிட்டு வெளியே போகிறது. (லூக்கா 4:35) ஜெபக்கூடத்தில் இருக்கிற மக்களுக்கு ஒரே ஆச்சரியம்! “இது என்ன? . . . அதிகாரத்தோடு பேய்களுக்கும் கட்டளையிடுகிறார், அவையும் கீழ்ப்படிகின்றனவே!” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள். (மாற்கு 1:27) இந்தச் செய்தி காட்டுத் தீ போல கலிலேயா எங்கும் பரவுகிறது.

இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஜெபக்கூடத்திலிருந்து சீமோனின் வீட்டுக்கு, அதாவது பேதுருவின் வீட்டுக்கு, போகிறார்கள். பேதுருவின் மாமியார் கடுமையான காய்ச்சலில் படுத்துக்கிடக்கிறாள். அவளுக்கு உதவி செய்யும்படி அங்கே இருக்கிறவர்கள் அவரிடம் கெஞ்சுகிறார்கள். அதனால் இயேசு அவள் பக்கத்தில் போய், அவள் கையைப் பிடித்துத் தூக்குகிறார். உடனே அவள் குணமாகிறாள். பிறகு, அவள் எழுந்து இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் பணிவிடை செய்கிறாள். ஒருவேளை, அவர்களுக்காக உணவைச் சமைத்துக் கொடுத்திருக்கலாம்.

சூரியன் மறையும் நேரத்தில், நோயாளிகளைக் கூட்டிக்கொண்டு மக்கள் பல இடங்களிலிருந்தும் பேதுருவின் வீட்டுக்கு வருகிறார்கள். சீக்கிரத்திலேயே, பேதுருவின் வீட்டு வாசலில் ஊரே திரண்டதுபோல் இருக்கிறது! நோயிலிருந்து குணமடைய எல்லாரும் விரும்புகிறார்கள். அதனால், ‘தங்களுடைய வீட்டில் பலவிதமான நோய்களால் அவதிப்பட்டவர்களை மக்கள் எல்லாரும் அவரிடம் கூட்டிக்கொண்டு வருகிறார்கள்; அவர்கள் ஒவ்வொருவர்மேலும் கைகளை வைத்து அவர் குணப்படுத்துகிறார்.’ (லூக்கா 4:40) இயேசுவைப் பற்றித் தீர்க்கதரிசனமாகச் சொல்லப்பட்டபடி, எல்லா விதமான நோய்களையும் அவர் குணமாக்குகிறார். (ஏசாயா 53:4) பேய்களையும் அவர் துரத்துகிறார். அந்தப் பேய்கள், “நீங்கள் கடவுளுடைய மகன்” என்று கத்திக்கொண்டு வெளியே வருகின்றன. (லூக்கா 4:41) ஆனால் இயேசு அவற்றை அதட்டி, அமைதியாக இருக்கும்படி சொல்கிறார். இயேசுதான் கிறிஸ்து என்று அந்தப் பேய்களுக்குத் தெரியும். கடவுளுக்குச் சேவை செய்வது போல் அந்தப் பேய்கள் வெளிவேஷம் போடுவதை இயேசு விரும்பவில்லை.