Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் கேட்கவேண்டும் என்று அவர்கள் விரும்பும் நற்செய்தி

நீங்கள் கேட்கவேண்டும் என்று அவர்கள் விரும்பும் நற்செய்தி

நீங்கள் கேட்கவேண்டும் என்று அவர்கள் விரும்பும் நற்செய்தி

இயேசு பூமியிலிருந்தபோது, அவருடைய சீஷர்கள் அவரிடம் வந்து இவ்வாறு கேட்டார்கள்: “உம்முடைய வந்திருத்தலுக்கும் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்னவாயிருக்கும்?” அநேக தேசங்களை உட்படுத்தும் போர்களும் பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் அக்கிரமம் அதிகமாதலும் அநேகரை தவறாக வழிநடத்தும் பொய் மத போதகர்களும் அவரை உண்மையாக பின்பற்றுகிறவர்கள் பகைக்கப்பட்டு துன்புறுத்தப்படுதலும் அநேக ஆட்களில் நீதியினிடமாக அன்பு தணிந்துபோதலும் இருக்கும் என்பதாக அவர் பதிலளித்தார். இந்தக் காரியங்கள் நடைபெற ஆரம்பிக்கும்போது, அது கிறிஸ்துவின் காணக்கூடாத வந்திருத்தலையும் பரலோக ராஜ்யம் சமீபித்துவிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுவதாய் இருக்கும். இது செய்தியாக—நற்செய்தியாக இருக்கும்! எனவே அடையாளத்தின் பாகமாக இயேசு இந்த வார்த்தைகளைக் கூட்டினார்: “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”—மத்தேயு 24:3-14, NW.

சமீப காலத்திய உலக சம்பவங்கள் தங்களில்தாமே கெட்டவையாக இருக்கின்றன, ஆனால் அவை குறிப்பிட்டுக்காட்டுவது, அதாவது, கிறிஸ்துவின் வந்திருத்தல் நல்லதாக இருக்கிறது. ஆகவே இயேசு சொன்னார்: “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.” (லூக்கா 21:28) இந்தக் காரியங்கள் மிகப் பரவலாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த ஆண்டாகிய 1914-ல் நடைபெற ஆரம்பித்தன! அது புறஜாதியாரின் காலங்களின் முடிவையும் மனித ஆட்சியிலிருந்து கிறிஸ்துவினுடைய (ஆயிர ஆண்டு) ஆட்சியின் ஆரம்பத்திற்கு இடைப்பட்ட காலத்தின் ஆரம்பத்தையும் குறித்துக்காட்டியது.

இடைப்பட்ட காலம் ஒன்று இருக்கவேண்டும் என்பதை சங்கீதம் 110, வசனங்கள் 1 மற்றும் 2, வெளிப்படுத்துதல் 12:7-12 காண்பிக்கின்றன. அங்கே கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகைக்கு சமயம் வரும்வரையாக பரலோகத்தில் கடவுளுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருப்பார் என்று காட்டப்பட்டிருக்கிறது. பின்னர் பரலோகத்தில் போர் சாத்தான் பூமிக்குத் தள்ளப்பட்டு, பூமிக்கு ஆபத்தைக் கொண்டுவருவதிலும், கிறிஸ்து ஒரு தலைமுறைக்கும் அதிகமாக இராத ஒரு காலப்பகுதிக்கு சத்துருக்களின் மத்தியில் ஆட்சிசெய்வதிலும் விளைவடையும். அக்கிரமத்துக்கு முடிவான அழிவு அர்மகெதோன் யுத்தத்தில் உச்சக்கட்டத்தை அடையும் ‘மகா உபத்திரவத்தின்’ மூலமாய் வரும். இதைத் தொடருவது கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு சமாதான ஆட்சியாகும்.—மத்தேயு 24:21, 33, 34, NW; வெளிப்படுத்துதல் 16:14-16.

“மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு,” என்று பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) சிலர், மனித வரலாற்றில் இந்தக் காரியங்கள் முற்காலங்களில் சம்பவித்திருக்கின்றன என்பதாக இப்பொழுது வாதிடக்கூடும்.

இருப்பினும், வரலாற்றாசிரியர்களும் கருத்துரையாளர்களும் சொல்வதுபோல, 1914 முதற்கொண்டு அனுபவிக்கப்பட்டு வருவதைப்போன்ற காலம் பூமியில் முன்னொருபோதும் இருந்ததில்லை. ஆபத்துக்கள் எக்காலத்திலும் இருந்ததைவிட மிக அதிக பரவலாக இருக்கின்றன. மேலுமாக, கடைசி நாட்களைப் பற்றிய கிறிஸ்துவினுடைய அடையாளத்தின் மற்ற அம்சங்களைப் பொருத்ததில், இந்த உண்மைகள் ஆலோசிக்கப்பட வேண்டும்: கிறிஸ்துவின் வந்திருத்தலையும் ராஜ்யத்தையும் பற்றிய உலகளாவிய அறிவிப்பு வரலாற்றில் முன்சம்பவிக்காத அளவில் இருந்திருக்கிறது. பிரசங்கிப்பதற்காக யெகோவாவின் சாட்சிகள் மீது கொண்டு வரப்பட்டிருக்கும் துன்புறுத்தல் ஒருபோதும் ஒப்பிடப்பட முடியாததாக இருந்திருக்கிறது. அவர்களில் அநேக நூற்றுக்கணக்கானோர் ஹிட்லரின் சித்திரவதை முகாம்களில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இன்றுவரையாக யெகோவாவின் சாட்சிகள் அநேக தேசங்களில் தடையுத்தரவின்கீழ் இருக்கிறார்கள், மற்ற தேசங்களில் அவர்கள் கைதுசெய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, சித்திரவதைசெய்யப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இவை அனைத்தும் இயேசு கொடுத்த அடையாளத்தின் பாகமாக இருக்கின்றன.

வெளிப்படுத்துதல் 11:18-ல் முன்னுரைக்கப்பட்டவிதமாகவே, யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளுக்கு விரோதமாக ‘ஜாதிகள் கோபமுற்றிருக்கிறார்கள்,’ இது யெகோவாவின் ‘சொந்த கோபம்’ அந்த ஜாதிகளுக்கு விரோதமாக வெளிக்காட்டப்படும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதே வசனம் கடவுள் “பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்”பார் என்று சொல்கிறது. மனித வரலாற்றில் முன்னொருபோதும் உயிரைத் தொடர்ந்து காக்கின்ற பூமியின் ஆற்றல் அச்சுறுத்தப்பட்டது கிடையாது. இருப்பினும், இப்பொழுது அது வித்தியாசமாயிருக்கிறது! மனிதன் தொடர்ந்து பூமியை மாசுப்படுத்திக்கொண்டிருந்தால், அது குடியிருப்புக்குத் தகுதியற்றதாகிவிடும் என்பதாக அநேக விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். ஆனால் யெகோவா அதை ‘குடியிருப்புக்காகச் செய்து படைத்திருக்கிறார்,’ மாசுப்படுத்துகிறவர்கள் பூமியைக் கெடுத்து முடிப்பதற்கு முன்பாக அவர்களை ஒழித்துவிடுவார்.—ஏசாயா 45:18.

ராஜ்யத்தின்கீழ் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள்

இரட்சிக்கப்படும் அனைவருமே பரலோகத்தில் இருப்பதாக நினைக்கும் அநேக பைபிள் விசுவாசிகளுக்கு பூமியில் மனிதர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் குடிகளாக வாழும் எண்ணமே விநோதமாகத் தோன்றலாம். வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையானவர்கள் மாத்திரமே பரலோகத்துக்குச் செல்கின்றனர் என்றும் பூமியில் என்றுமாக வாழப்போகிறவர்கள் வரையறுக்கப்படாத எண்ணிக்கையான திரள்கூட்டம் என்றும் பைபிள் காண்பிக்கிறது. (வெளிப்படுத்துதல் 14:1-5; 7:9; சங்கீதம் 37:11, 29) கிறிஸ்துவின்கீழ் கடவுளுடைய ராஜ்யம் பூமியை நிரப்பி அதன் மீது ஆளுகைச் செய்யும் என்பது தானியேல் என்ற பைபிள் புத்தகத்திலுள்ள ஒரு தீர்க்கதரிசனத்தால் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துவின் ராஜ்யம் அங்கே யெகோவாவின் மலைபோன்ற பேரரசிலிருந்து பெயர்க்கப்பட்ட ஒரு கல்லாக பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. அது பூமியிலுள்ள வலிமையான தேசங்களைப் பிரதிநிதித்துவம்செய்யும் ஒரு சிலையை மோதி நொறுக்கிப்போடுகிறது. “சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.” தீர்க்கதரிசனம் தொடர்கிறது: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:34, 35, 44.

இந்த ராஜ்யத்தையும், வேத ஆதாரமுடைய சுத்திகரிக்கப்பட்டதும் அழகுபடுத்தப்பட்டதுமான பூமியில் நித்திய வாழ்க்கைக்கான நம்பிக்கையை பற்றியுமே யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறார்கள். இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் லட்சக்கணக்கானோரும் இப்பொழுது தங்கள் பிரேதக் குழிகளில் இருக்கும் அநேக லட்சக்கணக்கானோரும் அங்கே என்றுமாக வாழ்ந்திருக்கும் வாய்ப்பை உடையவர்களாக இருப்பர். பின்னர், கிறிஸ்து இயேசுவின் ஆயிர ஆண்டு ஆட்சியின்கீழ், பூமியைப் படைத்து அதில் முதல் மனித ஜோடியை வைத்தபோது யெகோவா கொண்டிருந்த அவருடைய ஆதி நோக்கம் நிறைவேறும். இந்தப் பூமிக்குரிய பரதீஸ் ஒருபோதும் சலிப்புத் தட்டுவதாய் இருக்காது. ஏதேன் தோட்டத்தில் ஆதாமுக்கு வேலை கொடுக்கப்பட்டிருந்தது போலவே, மனிதவர்க்கத்தினர் பூமியையும் அதிலுள்ள தாவர மற்றும் விலங்கு உயிர்களையும் பராமரிப்பதில் சவால்நிறைந்த வேலைகளைக் கொண்டிருப்பர். அவர்கள் “தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.”—ஏசாயா 65:22; ஆதியாகமம் 2:15.

இயேசு நமக்குக் கற்பித்துக்கொடுத்த ஜெபம் பதிலளிக்கப்படுகையில் இருக்கப்போகும் நிலைமைகளைக் காட்டுவதற்கு அநேக வேதவசனங்கள் அளிக்கப்படலாம்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:10) இருப்பினும், தற்சமயத்திற்கு இது ஒன்றே போதுமானதாக இருக்கட்டும்: “பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”—வெளிப்படுத்துதல் 21:3-5.

[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]

“கொடிய காலங்கள்,” ஆனால் “உங்கள் மீட்பு சமீப”மாகிக்கொண்டிருக்கிறது