Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் பெற்றோர் என்னை ஏன் புரிந்துகொள்வதில்லை?

என் பெற்றோர் என்னை ஏன் புரிந்துகொள்வதில்லை?

அதிகாரம் 2

என் பெற்றோர் என்னை ஏன் புரிந்துகொள்வதில்லை?

புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புவது மனித இயல்பேயாகும். நீ நேசிக்கும் அல்லது முக்கியமென எண்ணும் காரியங்களை உன் பெற்றோர் கண்டித்தால்—அல்லது அவற்றில் அக்கறையற்றிருந்தால்—நீ வெகு ஏமாற்றச் சோர்வுணர்ச்சியடையலாம்.

பதினாறு வயது ராபர்ட் தான் தெரிந்துகொள்ளும் இசையைத் தன் தகப்பன் புரிந்துகொள்கிறதில்லையென உணருகிறான். “அவர் செய்வதெல்லாம், ‘அதை நிறுத்து!’ என்று கூச்சலிட்டுச் சொல்வதே. ஆகையால் அதையும் அவரையும் நிறுத்திவிடுகிறேன்,” என்று ராபர்ட் சொன்னான். பெற்றோர் புரிந்துகொள்வதில்லையெனத் தோன்றுகையில், இளைஞர் பலர் தங்கள் சொந்தத் தனிமை உலகத்துக்குள் சங்கட உணர்ச்சியுடன் ஒதுங்கிக் கொள்கின்றனர். இளைஞரைப் பற்றிய ஒரு விரிவான ஆராய்ச்சியில், கண்டாராயப்பட்ட 26 சதவீதமான இளைஞர்கள், ‘பெரும்பான்மையான நேரம் நான் வீட்டைவிட்டு அகன்றிருக்க முயற்சி செய்கிறேன்,’ என்று ஒப்புக்கொண்டனர்.

இவ்வாறு பல வீடுகளில் இளைஞருக்கும் பெற்றோருக்குமிடையில் ஒரு மிகப் பெரிய பிளவு, அல்லது இடைவெளி இருந்துவருகிறது. இதை உண்டுபண்ணுவது எது?

“பராக்கிரமத்”துக்கு எதிராக “நரைமயிர்”

நீதிமொழிகள் 20:29 (தி.மொ.) பின்வருமாறு கூறுகிறது: “வாலிபரின் [அல்லது வாலிபப் பெண்களின்] அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்.” எனினும், இந்தப் பலம், அல்லது “பராக்கிரமம்,” உனக்கும் உன் பெற்றோருக்குமிடையில் எல்லா வகை போராட்டங்களுக்கும் அடிப்படையைப் போடக்கூடும். இந்த நீதிமொழி தொடர்ந்து சொல்வதாவது: “முதியோர் சிறப்போ அவர் நரைமயிரே.” உன் பெற்றோர் சொல்லர்த்தமாய் ‘நரைமயிருள்ளோராய்’ ஒருவேளை இரார், ஆனால் அவர்கள் உன்னைவிட முதியவரும் வாழ்க்கையை வேறுபட்ட முறையில் நோக்கும் போக்குடையோருமாய் இருக்கின்றனர். வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையும் மகிழ்ச்சியான முடிவைக் கொண்டில்லையென அவர்கள் விளக்கவிவரமாய்க் காண்கின்றனர். ஒருகாலத்தில் அவர்கள் இளைஞராயிருந்தபோது கொண்டிருந்த எண்ணங்களைச் சொந்தக் கசப்பான அனுபவம் திருத்தி மட்டுப்படுத்தியிருக்கலாம். அனுபவத்தினால் உண்டான இந்த ஞானத்தால்—“நரைமயிர்,” எனப்படுவதனால்—சில காரியங்களின்பேரில் உன் விருவிருப்பு உணர்ச்சியில் அவர்கள் ஒருவேளை சற்றும் பங்குகொள்ளமாட்டார்கள்.

இளைஞன் ஜிம் பின்வருமாறு சொல்கிறான்: “என் பெற்றோர் (பண நெருக்கடி காலத்தில் பிறந்த பிள்ளைகள்) முக்கியமான பொருட்களை வாங்க அல்லது அவற்றில் செலவிட பணத்தைச் சேர்த்து வைக்கவேண்டுமென உணருகின்றனர். ஆனால் நான் இப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். . . . நான் பேரளவில் பயணப்பட விரும்புகிறேன்.” ஆம், ஒருவனுடைய வாலிபப் “பராக்கிரமத்”துக்கும் அவனுடைய பெற்றோரின் “நரைமயிருக்”கும் இடையில் மிகப் பெரிய பிளவு இருக்கலாம். உடை, சிகை அலங்காரம், எதிர்பாலாரோடு நடத்தை, போதைப்பொருட்கள் மற்றும் சாராயத்தைப் பயன்படுத்துதல், பொதுக்கட்டுப்பாட்டு முறைகள், தோழர்கள், தேவைப்படும் வீட்டுவேலைகள் போன்றவற்றின் விவாதத்தின்பேரில் பல குடும்பங்கள் மிகக் கடுமையாய்ப் பிரிந்துள்ளனர். இந்தச் சந்ததிப் பிளவை இணைக்க முடியும். ஆனால் உன் பெற்றோர் உன்னைப் புரிந்துகொள்ளும்படி நீ எதிர்பார்ப்பதற்கு முன்னால், அவர்களைப் புரிந்துகொள்ள நீ முயற்சி செய்யவேண்டும்.

பெற்றோருங்கூட மனிதரே

“நான் சிறுவனாயிருந்தபோது, அம்மா ‘பரிபூரணர்’ எனக்கிருந்த எந்தப் பலவீனங்களும் உணர்ச்சிகளும் அவர்களுக்கில்லையென நான் இயல்பாய் உணர்ந்தேன்,” என்று ஜான் சொல்கிறான். பின்பு அவனுடைய பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டனர், இது அவனுடைய தாய் ஏழு பிள்ளைகளைத் தனிமையில் கவனித்துப் பராமரிக்கும்படி விட்டது. ஜானின் சகோதரி ஏப்ரல் பின்வருமாறு நினைவுபடுத்திக் கூறுகிறாள்: “எல்லாவற்றையும் செய்துமுடிக்க முயன்று என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்து அம்மா அழுததைக் கண்டது எனக்கு நினைவிருக்கிறது. அப்பொழுது நாங்கள் தவறான நோக்குநிலையைக் கொண்டிருந்ததை நான் உணர்ந்தேன். அவர்கள் எல்லாவற்றையும் எப்பொழுதும் சரியான நேரத்திலும் சரியான முறையிலும் செய்ய முடியாது. அவர்களுக்கும் உணர்ச்சிகள் இருந்தன அவர்களும் மனுஷிதான் என்று நாங்கள் கண்டோம்.”

உன் பெற்றோர் உனக்கு இருப்பதைப்போன்ற உணர்ச்சிகளுடன் இருக்கும் வெறும் மனிதரேயென தெளிவாக உணருவது அவர்களைப் புரிந்துகொள்வதைநோக்கி நீ எடுக்கும் பெரிய முன்னேற்றப்படியாகும். உதாரணமாக, உன்னைச் சரியானபடி வளர்ப்பதற்குத் தங்களுக்கு இருக்கும் திறமையைப் பற்றி அதிகச் சந்தேக உணர்ச்சி அவர்களுக்கு இருக்கலாம். அல்லது, நீ எதிர்ப்படும் ஒழுக்கச் சம்பந்த அபாயங்களாலும் சோதனைகளாலும் மனத்திகிலடைந்து சிலசமயங்களில் காரியங்களுக்கு மிகைப்பட்ட முறையில் எதிர்ச்செயலாற்றலாம். மேலும் உடல்சார்ந்த, பணசம்பந்த அல்லது உணர்ச்சிவச இன்னல்களோடு அவர்கள் போராடிக்கொண்டும் இருக்கலாம். உதாரணமாக, ஒரு தகப்பன் தன் வேலையை வெறுக்கலாமெனினும் அதைப்பற்றி ஒருபோதும் வருத்தம் வெளியிடாதிருக்கலாம். ஆகையால் தன் பிள்ளை, “பள்ளிப் படிப்பை என்னால் சமாளிக்க முடியாது,” என்று சொல்கையில், பரிவான உணர்ச்சியுடன் பதில் பேசுவதற்கு மாறாக, அவர், “உனக்கு என்ன நேர்ந்துவிட்டது? பிள்ளைகளே உங்களுக்குத் தண்டனைக் கொடுக்கப்படுகிறதில்லை!” எனக் கடுமையாய்ப் பதில் சொல்கிறார்.

“தனிப்பட்ட அக்கறை” எடு

இவ்வாறிருக்க உன் பெற்றோர் உணருவதை நீ எப்படித்தான் கண்டுபிடிக்கலாம்? ‘தனிப்பட்ட அக்கறையுடன் உன் சொந்தக் காரியங்களின்பேரில் மாத்திரமேயல்ல, தனிப்பட்ட அக்கறையுடன் மற்றவர்களுடையதன்பேரிலுங்கூட கவனத்தை வைத்து’ வருவதன் மூலமே. (பிலிப்பியர் 2:4, NW) பருவ வயதில் தான் எவ்வாறிருந்தார்களென உன் தாயைக் கேட்க முயற்சிசெய். அவர்களுடைய உணர்ச்சிகள், அவர்களுடைய இலக்குகள் யாவை? “தன்னுடைய உணர்ச்சிகள் சிலவற்றில் நீ அக்கறைகொண்டிருக்கிறாய் அவற்றின் காரணங்களைத் தெரிந்திருக்கிறாய் என அவள் உணர்ந்தால், உன்னுடையவற்றைப்பற்றி மேலுமதிகம் தெரிந்திருக்க முயற்சி செய்வாள் என்பதற்கு வாய்ப்புகள் உண்டு,” என்று டீன் பத்திரிகை சொல்லுகிறது. சந்தேகமில்லாமல் உன் தகப்பனைக் குறித்தும் இவ்வாறே இருக்கலாம்.

ஒரு சச்சரவு எழும்பினால், உணர்ச்சியற்றிருப்பதாக வீட்டிலுள்ளவர்களைக் குற்றஞ்சாட்டத் தீவிரப்படாதே. உன்னை நீயே பின்வருமாறு கேட்டுக்கொள்: ‘என் பெற்றோருக்குச் சுகமில்லையா அல்லது எதைப்பற்றியாவது கவலைப்பட்டுக்கொண்டிருந்தாரா? என் பங்கில் நான் நினையாமல் செய்த அல்லது சொன்ன ஏதோவொன்றின்பேரில் அவர் அல்லது அவள் மனவருத்தமடைந்துவிட்டாரா? நான் கருதுவதை அவர்கள் வெறுமென தவறாக புரிந்துகொள்கிறார்களா?’ (நீதிமொழிகள் 12:18) இவ்வாறு மற்றவர் நிலையில் நம்மை வைத்துப் பார்ப்பது சந்ததிப் பிளவை இணைப்பதற்கு நல்ல தொடக்கமாகும். இப்பொழுது உன் பெற்றோர் உன்னைப் புரிந்துகொள்ள செய்வதன்பேரில் நீ உழைக்கலாம்! எனினும், இளைஞர் பலர், இதை மட்டுக்குமீறி கடினமாக்குகின்றனர். எவ்வாறு?

போலியான இரு வாழ்க்கை நடத்துவது

பதினேழு வயது விக்கி தன் பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக ஒரு பையனுடன் இரகசியமாய்க் காதல் சந்திப்பு வைத்துக்கொள்வதன்மூலம் இதையே செய்துகொண்டிருந்தாள். தன் காதலன்பேரில் தான் கொண்டிருந்த உணர்ச்சிகளைத் தன் பெற்றோர் சற்றேனும் புரிந்துகொள்ளமாட்டார்களென அவள் நிச்சயமாயிருந்தாள். இயல்பாய், அவளுக்கும் அவர்களுக்கும் இடையிலிருந்தப் பிளவு விரிவாகியது. “நாங்கள் ஒருவரையொருவர் மகிழ்ச்சியற்றவர்களாக்கிக் கொண்டிருந்தோம், வீட்டுக்கு வருவதை நான் வெறுத்தேன்,” என்று விக்கி சொல்கிறாள். வீட்டைவிட்டு வெளியேற எதையாவது செய்யவேண்டுமென்பதற்காக தான் மணம் செய்துகொள்ளத் தீர்மானித்தாள்!

இவ்வாறே இளைஞர்கள் பலர் போலியான இரு வாழ்க்கைகள் நடத்துகின்றனர்—தங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் அவர்கள் தடைவிதித்தக் காரியங்களைச் செய்துகொண்டிருக்கின்றனர்—பின்பு தங்கள் பெற்றோர் ‘தங்களைப் புரிந்துகொள்கிறதில்லை’ என்று எண்ணிப் புலம்புகின்றனர்! நல்ல காலமாக, ஒரு முதிய கிறிஸ்தவ பெண் விக்கிக்கு உதவிசெய்தாள், அவள் விக்கியிடம் சொன்னதாவது: “விக்கி, உன் பெற்றோரைப்பற்றிச் சற்று எண்ணிப்பார் . . . அவர்கள் உன்னை வளர்த்தார்கள். இந்த உறவை நீ கையாள முடியாதென்றால், உன் சொந்த வயதானவனும் 17 ஆண்டுகளுக்குரிய அன்பை உனக்குள் வைக்காதவனுமான ஒருவனுடன் கொள்ளும் உறவை நீ எவ்வாறு கையாள முடியும்?”

விக்கி தன்னைத்தான் நேர்மையுடன் ஆராய்ந்து பார்த்தாள். தன் பெற்றோர் சரி எனவும் தன் சொந்த இருதயமே தவறு என்று அவள் சீக்கிரத்தில் உணர்ந்தாள். தன் காதலனோடு தன் கூட்டுறவை அவள் முடிவுசெய்துவிட்டு தனக்கும் தன் பெற்றோருக்கும் இடையிலிருந்தப் பிளவை இணைக்கத் தொடங்கினாள். இவ்வாறே நீயும் உன் வாழ்க்கையின் ஒரு முக்கிய பாகத்தை உன் பெற்றோரிடமிருந்து மறைத்துவைத்திருந்தால், அவர்களோடு நேர்மையாயிருக்க இது சமயமல்லவா?—“நான் என் பெற்றோரிடம் எவ்வாறு சொல்வது?” என்ற சேர்க்கை கட்டுரையைப் பார்க்கவும்.

பேசுவதற்கு நேரமெடு

‘அதுவே என் தந்தையோடு கொண்டிருந்த எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த சமயமாயிருந்தது!’ என்று ஜான் தானும் தன் தகப்பனும் ஒன்றாய்ச் சென்ற ஒரு பயணத்தைப்பற்றிக் கூறினான். “என் முழு வாழ்க்கையிலும் அவரோடு தனிமையில் ஆறு மணிநேரங்கள் நான் செலவிட்டதேயில்லை. ஆறு மணிநேரங்கள் போவதிலும் ஆறு மணிநேரங்கள் திரும்பிவருவதிலும். காரில் ரேடியோ எதுவும் இல்லை. நாங்கள் உண்மையில் பேசினோம். அது நாங்கள் ஒருவரையொருவர் புதிதாய்க் கண்டுபிடித்ததைப்போல் இருந்தது. நான் நினைத்ததைவிட அதிகம் அவருக்கு இருந்தது. அது எங்களை நண்பர்களாக்கியது.” அவ்வாறே—தவறாமல்—உன் அம்மாவுடன் அல்லது அப்பாவுடன் நன்றாய்ப் பேச ஏன் முயற்சி செய்துபார்க்கக்கூடாது?

இது மற்ற முதியோருடன் நட்புக்கொள்ளவும் உதவிசெய்கிறது. விக்கி பின்வருமாறு நினைவுபடுத்திக் கூறுகிறாள்: “முதியோரோடு எனக்கு முற்றிலும் ஒத்திசைவு கிடையாது. ஆனால் என் பெற்றோர் மற்ற முதியோருடன் கூட்டுறவு கொள்கையில் அவர்களோடு பின் ஒட்டிக்கொண்டு செல்லும்படித் தீர்மானித்திருந்தேன். காலப்போக்கில் என் பெற்றோரின் வயதாயிருந்த இவர்களோடு நான் நட்பை வளர்த்தேன், இது மேலுமதிக நிறைவான மனப்பான்மையை எனக்குக் கொடுத்தது. என் பெற்றோருடன் உரையாடுவதை எளிதாக்கிற்று. வீட்டில் சூழ்நிலை வியப்புத்தரும் முறையில் முன்னேற்றமடைந்தது.”

பல ஆண்டுகளின் அனுபவத்தால் ஞானம் பெற்றவர்களுடன் கூட்டுறவு கொள்வது, வாழ்க்கையின்பேரில் குறுகிய, மட்டுப்பட்ட நோக்கை ஏற்பதிலிருந்தும் உன்னைத் தடுத்து வைக்கும், உனக்குச் சரியிணையான இளைஞருடன் மாத்திரமே தோழமைகொண்டிருந்தால் அவ்வாறு நேரிடக்கூடும்.—நீதிமொழிகள் 13:20.

உன் உணர்ச்சிகளைத் தெரியப்படுத்து

“நான் நேரே என் இருதயத்திலிருந்து பேசுகிறேன் மேலும் என் உதடுகளிலிருந்து வரும் அறிவை நேர்மையாய்ப் பேசுகிறேன்,” என்று இளைஞன் எலிகூ சொன்னான். (யோபு 33:3, The Holy Bible in the Language of Today, by William Beck) உடைகள், நேரக் கட்டுப்பாடுகள், அல்லது இசை போன்ற இத்தகைய காரியங்களின்பேரில் நீ முரண்படுகையில் உன் பெற்றோருடன் இவ்வாறு பேசுகிறாயா?

இளைஞன் கிரெகரி தன் தாய் முற்றிலும் நியாயமற்றிருப்பதாக உணர்ந்தான். தன்னால் கூடியளவு வீட்டுக்கு வராமல் வெளியில் தங்கிவிடுவதன் மூலம் தங்களுக்கிடையில் உண்டான கோப சச்சரவை எதிர்த்துச் சமாளித்தான். ஆனால் பின்பு கிறிஸ்தவ மூப்பர்கள் சிலரின் அறிவுரையின்படி நடந்தான். அவன் சொல்வதாவது: “நான் உணரும் முறையைப்பற்றி அம்மாவுக்குச் சொல்லத் தொடங்கினேன். அவர்களுக்குத் தெரியுமென்று வெறுமென எண்ணிக்கொள்ளாமல் காரியங்களை நான் ஏன் செய்ய விரும்பினேன் என்பதை அவர்களுக்குக் கூறினேன். அடிக்கடி நான் என் இருதயத்திலுள்ளவற்றை வெளியில் ஊற்றி நான் தவறான எதையும் செய்ய முயலவில்லை என்பதையும், அவர்கள் என்னைச் சிறு பிள்ளையைப்போல் நடத்தினதனால் நான் எவ்வளவு மனச்சங்கட உணர்ச்சியடைந்தேன் என்பதையும் விளக்கினேன். அப்பொழுது அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள் காலப்போக்கில் காரியங்கள் பேரளவில் நலமடைந்தன.”

அவ்வாறே நீயும் ‘இருதயத்திலிருந்து நேரே பேசுவது’ தவறாக புரிந்துகொள்ளும் பலவற்றைத் தீர்ப்பதற்கு உதவிசெய்வதைக் காண்பாய்.

கருத்து வேற்றுமைகளைக் கையாளுதல்

எனினும், இது உன் பெற்றோர், காரியங்களை நீ கருதும் முறையில் உடனடியாகக் கருதுவார்களென்று பொருள்கொள்வதில்லை. ஆகையால் நீ உன் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும். “மூடன் தன் உள்ளத்தையெல்லாம் [மனத்தூண்டுதல்களை] வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.” (நீதிமொழிகள் 29:11) நீ கருதும் முறையின் தகுதிகளைச் சாந்தத்துடன் கலந்து பேசு. “மற்ற எல்லாருமே இதைச் செய்கிறார்கள்!” என்று விவாதிப்பதற்குப் பதில் விவாத அடிப்படைப் பொருள்களைப் பற்றியிரு.

சில சமயங்களில் உன் பெற்றோர் ‘இல்லை’ என்று சொல்லப்போகிறார்கள். இது அவர்கள் உன்னை விளங்கிக்கொள்கிறதில்லை என்று பொருள்கொள்வதில்லை. அவர்கள் வெறுமென துன்ப நிகழ்ச்சியை முன்னுணர்ந்து தடுக்க விரும்பலாம். “என் தாய் என்மீது கண்டிப்பாய் இருக்கிறார்கள்,” என்று 16-வயது பெண் ஒப்புக்கொள்கிறாள். “நான் எதையாவது செய்யக்கூடாதென்று அல்லது குறிப்பிட்ட நேரத்தில் [நான் கட்டாயம்] வீட்டுக்குள் வந்துவிடவேண்டுமென்று அவர்கள் சொல்கையில் எனக்கு மனச் சங்கடத்தை உண்டாக்குகிறது. ஆனால் உள்ளத்தின் ஆழத்தில், அவர்கள் உண்மையில் அன்பு காட்டுகிறார்கள். . . . எனக்குப் பாதுகாப்பளிக்கிறார்கள்.”

ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல் ஒரு குடும்பத்துக்குக் கொண்டுவரும் பாதுகாப்பையும் ஆழ்ந்த அன்பையும் விளக்குவது சொற்களுக்கு அப்பாற்பட்டது. இது, கடுந்துயரப்படும் காலங்களில் வீட்டை ஒரு புகலிடமாக்குகிறது. ஆனால் உட்பட்ட ஒவ்வொருவருடைய பங்கிலும் உண்மையான முயற்சி தேவைப்படுகிறது.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ இளைஞரும் பெற்றோரும் ஏன் அடிக்கடி முரண்படுகின்றனர்?

◻ உன் பெற்றோரை மேலும் நன்றாய்ப் புரிந்துகொள்வது எவ்வாறு அவர்களைப்பற்றிய உன் கருத்தைப் பாதிக்கலாம்?

◻ நீ உன் பெற்றோரை எவ்வாறு மேலும் நன்றாய்ப் புரிந்துகொள்ள முடியும்?

◻ போலியான இரு வாழ்க்கை நடத்துவது ஏன் உனக்கும் உன் பெற்றோருக்குமிடையிலுள்ள பிளவை மேலும் ஆழமாக்குகிறது?

◻ உனக்கு வினைமையான பிரச்னைகள் இருக்கையில் அவற்றைப் பெற்றோருக்குத் தெரியப்படுத்துவது ஏன் மிக நல்லது? அவற்றைப்பற்றி அவர்களுக்குச் சொல்ல நீ எவ்வாறு முயற்சி செய்யலாம்?

◻ உன் பெற்றோர் உன்னை மேலும் நன்றாய்ப் புரிந்துகொள்ள நீ அவர்களுக்கு எவ்வாறு உதவிசெய்யலாம்?

[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]

“தன்னுடைய [உன் தாயின்] உணர்ச்சிகள் சிலவற்றில் நீ அக்கறைகொண்டிருக்கிறாய் அவற்றின் காரணங்களைத் தெரிந்திருக்கிறாய் என அவள் உணர்ந்தால், உன்னுடையவற்றைப்பற்றி மேலுமதிகம் தெரிந்திருக்க முயற்சி செய்வாள்.”—டீன் பத்திரிகை

[பக்கம் 20, 21-ன் பெட்டி/படம்]

நான் என் பெற்றோறிடம் எவ்வாறு சொல்வது?

உன் உறவினரிடம் தவறை வெளியிட்டுத் தெரிவிக்கும் கடினமான காரியம் மனதுக்கு உகந்ததாயில்லை. இளைஞன் வின்ஸ் சொல்வதாவது: “என் பெற்றோருக்கு என்மீது மிகுந்த நம்பிக்கை இருந்ததென நான் எப்பொழுதும் உணர்ந்தேன், இது நான் அவர்களை அணுகுவதைக் கடினமாக்கிற்று ஏனெனில் நான் அவர்களுக்கு மனவருத்தம் உண்டாக்க விரும்பவில்லை.”

மறைத்துப்போடுவதற்குச் சாக்குப் போக்குகளைத் தேடும் இளைஞர்கள் அடிக்கடி மனச்சாட்சி குத்தும் கடும்வேதனைகளை அனுபவிப்பார்கள். (ரோமர் 2:15) அவர்களுடைய தவறுகள் தாங்கமுடியாத மிகக் கனமான “பாரச் சுமை”யாகிவிடக்கூடும். (சங்கீதம் 38:4) பெரும்பாலும் வேறு வழியற்று, அவர்கள் பொய்ச் சொல்வதனால் தங்கள் பெற்றோரை ஏமாற்ற வலுக்கட்டாய நிலைக்குள்ளாகின்றனர், இதனால் மேலுமான குற்றங்களைச் செய்கின்றனர். இவ்வாறு கடவுளுடன் தங்கள் உறவை இழக்கின்றனர்.

பைபிள் சொல்வதாவது: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” (நீதிமொழிகள் 28:13) 19 வயது பெட்டி சொல்வதுபோல்: “எப்படியும் யெகோவா எல்லாவற்றையும் பார்க்கிறார்.”

அந்தக் காரியம் வினைமையான குற்றம் உட்பட்டதாயிருந்தால், உன் குற்றத்தை ஜெபத்தில் அறிக்கையிட்டு, யெகோவாவின் மன்னிப்பைத் தேடு. (சங்கீதம் 62:8) அடுத்தப்படி, உன் பெற்றோரிடம் சொல். (நீதிமொழிகள் 23:26) அவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவம் உண்டு உன் தவறுகளைப் பின்னால் விட்டுவிட்டு அவற்றை மறுபடியும் செய்வதைத் தவிர்ப்பதற்கு அவர்கள் உனக்குப் பெரும்பாலும் உதவிசெய்ய முடியும். “அதைப்பற்றிப் பேசுவது உனக்கு உண்மையில் உதவிசெய்யும்,” என்று 18-வயது கிறிஸ் அறிவிக்கிறாள். “அதை உன் மனதிலிருந்து அகற்றிப் போடுவது முடிவில் பாரத்தைத் தணிக்கிறது.” உன் பெற்றோரிடம் எவ்வாறு சொல்வது? என்பதே பிரச்னை.

“ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை”யைப் பற்றிப் பைபிள் பேசுகிறது. (நீதிமொழிகள் 25:11; பிரசங்கி 3:1, 7-ஐ ஒத்துப் பார்.) இது எச்சமயம்? கிறிஸ் தொடர்ந்து சொல்கிறாள்: “இராச் சாப்பாட்டு நேரம் வரையில் நான் காத்திருக்கிறேன் பின்பு நான் அவரிடம் பேச வேண்டுமென அப்பாவிடம் சொல்கிறேன்.” பெற்றோர் ஒருவரைமட்டுமே கொண்டிருந்த ஒரு மகன் மற்றொரு நேரத்தைப் பயன்படுத்திப் பார்த்தான்: “படுக்கைநேரத்துக்கு முன்னால்தானே நான் வழக்கமாய் அம்மாவிடம் பேசுவேன்; அப்பொழுதே அவர்கள் பெரும்பாலும் ஓய்ந்த நிலையில் இருப்பார்கள். அவர்கள் வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தபோது, அலுத்து மனஅமைதியற்ற நிலையில் இருந்தார்கள்.”

நீ ஒருவேளை இதைப்போல் சொல்லலாம், “அம்மா அப்பா, ஒரு காரியம் எனக்கு மனக்கலக்கத்தை உண்டுபண்ணுகிறது.” உன் பெற்றோர் கவனிக்காது மிகுந்த வேலையாயிருப்பதாகத் தோன்றினால் என்ன செய்வது? நீ ஒருவேளை இவ்வாறு சொல்லலாம், “நீங்கள் அதிக வேலையாயிருப்பது எனக்குத் தெரிகிறது, ஆனால் ஒன்று என் மனதை உண்மையில் கலக்குகிறது. நாம் சற்றுப் பேசலாமா?” பின்பு பின்வருமாறு ஒருவேளை கேட்கலாம்: “பேசுவதற்கு மிக வெட்கப்பட்ட ஒன்றை நீங்கள் எப்பொழுதாவது செய்திருக்கிறீர்களா?”

இப்பொழுதே கடினமான பாகம் வருகிறது: அந்தத் தவறைப்பற்றித்தானே உன் பெற்றோருக்குச் சொல்வது. உன் பிழையின் வினைமையானத் தன்மையைக் குறைக்காமல் அல்லது மிக வெறுப்புண்டாக்கும் நுட்பவிவரங்கள் சிலவற்றை நிறுத்திவைத்துக்கொள்ள முயற்சி செய்யாமல் மனத்தாழ்மையுடனிருந்து “மெய்யைப் பேசு.” (எபேசியர் 4:25; லூக்கா 15:21-ஐ ஒத்துப்பார்.) இளைஞருக்கு மட்டுமே தனிப்பட்ட பொருள்தரும் சொல்லமைப்புகளையல்ல, உன் பெற்றோர் விளங்கிக்கொள்ளும் சொற்களைப் பயன்படுத்து.

இயல்பாகவே, உன் பெற்றோர் முதலில் மனவேதனையும் ஏமாற்றமும் தரும் உணர்ச்சியடைவார்கள். ஆகையால், உணர்ச்சிவேகப்பட்ட சரமாரியான சொற்களால் நீ தாக்கப்பட்டால் வியப்படையாதே அல்லது கோப வெறுப்படையாதே! அவர்கள் முன்பு கொடுத்த எச்சரிக்கைகளுக்கு நீ செவிகொடுத்திருந்தால், இந்நிலையில் நீ ஒருவேளை இருக்கமாட்டாய். ஆகையால் சாந்தத்துடன் இரு. (நீதிமொழிகள் 17:27) உன் பெற்றோர் சொல்வதற்குச் செவிகொடுத்துக் கேட்டு அவர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல். அவர்கள் எந்த முறையில் அவற்றைக் கேட்டாலும் பொருட்படுத்தாமல் சாந்தமாயிரு.

காரியங்களைச் சரிசெய்ய நீ உள்ளப்பூர்வமாய் ஊக்கங்கொண்டிருப்பது அவர்கள் மனதை ஆழமாய்ப் பாதிக்கும். (2 கொரிந்தியர் 7:11-ஐ ஒத்துப்பார்.) இருப்பினும், தகுதியான ஏதோ சிட்சையை ஏற்க ஆயத்தமாயிரு. “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷகரமாய்க் காணாமல் துக்ககரமாய்க் காணும்; பிற்காலத்திலோ அதில் பயிற்றப்பட்டவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத்தரும்.” (எபிரெயர் 12:11, தி.மொ.) மேலும் இது, உன் பெற்றோரின் உதவியும் முதிர்ச்சியுள்ள அறிவுரையும் உனக்குத் தேவைப்படும் கடைசி தடவையாயிராதெனவும் நினைவுபடுத்திக்கொள். அவர்களில் நம்பிக்கை வைத்துச் சிறிய பிரச்னைகளைப்பற்றியும் அவர்களுக்குத் தெரிவிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள், இவ்வாறு பெரிய பிரச்னைகள் வருகையில், உன் மனதிலுள்ளவற்றை அவர்களுக்குச் சொல்ல பயப்படமாட்டாய்.

[படம்]

உன் பெற்றோர் ஏற்பதற்குச் சாதகமான நல்ல மனநிலையில் இருக்கும் ஒரு நேரத்தைத் தெரிந்துகொள்