Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என்னை நான் ஏன் விரும்புகிறதில்லை?

என்னை நான் ஏன் விரும்புகிறதில்லை?

அதிகாரம் 12

என்னை நான் ஏன் விரும்புகிறதில்லை?

“நான் என்னைப்பற்றிச் சற்றும் நன்றாய் உணருகிறதில்லை,” என்று லூயிஸ் புலம்பினாள். நீயும், எப்போதாவது ஒருமுறை உன்னைப்பற்றிச் சலிப்பாய் உணருகிறாயா?

மெய்யாகவே, எல்லாருக்கும் ஓரளவு தன்மதிப்பு தேவை. அது “மனித வாழ்க்கைக்கு கண்ணியத்தைக் கொடுக்கும் மூலப்பொருள்,” என்றழைக்கப்பட்டிருக்கிறது. மேலும், “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல அயலானிடத்திலும் அன்புகூரு,” என்று பைபிளில் சொல்லியிருக்கிறது. (மத்தேயு 19:19, தி.மொ.) உன்னைப்பற்றி நீ சலிப்பாய் உணர்ந்தால், பெரும்பாலும் மற்றவர்களைப்பற்றியும் நீ சலிப்பாய் உணருவாய்.

‘நான் எதையுமே சரியாய்ச் செய்ய முடியாது!’

உன்னைப்பற்றி உனக்கு ஏன் இந்த எதிர்மறையான உணர்ச்சிகள் இருக்கின்றன? உன் வரம்புகள் உனக்கு ஏமாற்றத்தை உண்டாக்குவது ஒரு காரணமாயிருக்கலாம். நீ வளர்ந்துகொண்டிருக்கிறாய், அடிக்கடி தடுமாற்றமான ஒரு காலப்பகுதி ஏற்படுகிறது அதில் பொருட்களைத் தவறி கீழேபோடுவது அல்லது அவற்றின்மீது மோதிவிழுவது அனுதின தடுமாற்றமாயிருக்கிறது. பின்னும், ஏமாற்றங்களைச் சமாளித்து முன்னிலைக்கு திரும்பிவிடும் முதிர்ந்தவரின் அனுபவம் உனக்கு முற்றிலும் இல்லை. ஏனெனில் உன் “உள்ளப்பகுத்துணர்வு ஆற்றல்கள்” “பயன்படுத்துவதன் மூலம்” போதியளவு பயிற்றுவிக்கப்பட்டிராததால், நீ ஒருவேளை மிக ஞானமான தீர்மானங்களை எப்பொழுதும் செய்யமாட்டாய். (எபிரெயர் 5:14 NW) நீ எதையும் சரியாய்ச் செய்ய முடியாதென்று சில சமயங்களில் உணரலாம்!

உன் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை அடையத் தவறுவது தாழ்ந்தத் தன்-மதிப்பின் மற்றொரு காரணமாயிருக்கலாம். “பள்ளியில் நான் ‘A-’ (முதல் தரத்துக்குச் சற்றுக் குறைவை) எட்டியிருந்தால், என் பெற்றோர் ஏன் ‘A’ நிலையை (முதல் தரத்தை) எட்டவில்லை என்று கேட்டு நான் தோல்வியுற்றவன் என்று என்னிடம் சொல்கிறார்கள்,” என்று ஓர் இளைஞன் சொல்கிறான். நிச்சயமாகவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மிகச் சிறந்ததைச் செய்யும்படி துரிதப்படுத்துவது இயல்பானதே. நியாயமான எதிர்பார்ப்புகளை அடைய நீ தவறுகையில், அதைப்பற்றி உனக்குச் சொல்லப்படுமென நீ நிச்சயமாயிருக்கலாம். பைபிளில் கொடுத்துள்ள அறிவுரையானது: “என் மகனே [அல்லது மகளே], உன் தகப்பன் சிட்சைக்குச் செவிகொடு, உன் தாயின் சட்டத்தைப் புறக்கணியாதே.” (நீதிமொழிகள் 1:8, 9,  NW) சோர்வுணர்ச்சியடைவதற்குப் பதில், கண்டிப்பை ஏற்று முன்னேறிக்கொண்டுசெல், அதிலிருந்து கற்றுக்கொள்.

எனினும், பெற்றோர் நியாயமில்லாமல் மற்றவரோடு ஒப்பிட்டுக் குற்றப்படுத்திக்கொண்டிருந்தால் என்ன செய்வது? (“உன் மூத்த சகோதரன், பால் இருந்ததுபோல் நீ ஏன் இருக்கக்கூடாது? அவன் எப்பொழுதும் உயரிடத்தைப்பெற்ற மாணாக்கனாயிருந்தான்.”) இவ்வாறு ஒப்பிட்டுக் காட்டுவது, அந்தச் சமயத்தில் புண்படுத்துவதாகத் தோன்றினபோதிலும், பயனுள்ள குறிப்பை அடிக்கடி கொண்டிருக்கிறது. உன் பெற்றோர் வெறுமென மிகச் சிறந்ததை உனக்கு விரும்புகிறார்கள். அவர்கள் உன்பேரில் மிகக் கடுமையாய் இருப்பதாக நீ உணர்ந்தால், அவர்களோடு காரியங்களை அமைதியாய் ஏன் கலந்து பேசக்கூடாது?

தன்-மதிப்பைப் படிப்படியாய் வளர்த்தல்

குறைந்துகொண்டேபோகும் தன்-மதிப்பை நீ எவ்வாறு அழியாது காப்பாற்றலாம்? முதலாவது உனக்குள்ள ஆற்றல்களையும் நீ செலுத்தவேண்டிய பொறுப்புகளையும் நேர்மையுடன் கவனித்துப்பார். உன்னுடைய பொறுப்பு என்று நீ அழைப்பவற்றில் பெரும்பான்மையானவை முக்கியமல்லாத அற்பமானவையேயென நீ கண்டுபிடிப்பாய். எரிச்சலான மனநிலை அல்லது தன்னலம் போன்ற வினைமையான குறைபாடுகளைப்பற்றியதென்ன? இந்தப் பிரச்னைகளை மேற்கொள்ள மனச்சாட்சியுடன் படிப்படியாய்த் தொடர்ந்து உழைத்துக்கொண்டிரு, உன் தன்-மதிப்பு நிச்சயமாய் வளரும்.

மேலும், உனக்கு ஏற்கெனவே ஆற்றல்கள் இருப்பதன் உண்மையை மறந்துவிடாதே! சமைக்க அல்லது ஒரு கார் டயரைப் பொருத்த தெரிந்திருப்பது அவ்வளவு முக்கியமென நீ ஒருவேளை எண்ணமாட்டாய். ஆனால் பசியுள்ள ஓர் ஆள் அல்லது டயரைப் பொருந்த தெரியாமல் தவிக்கும் ஓட்டுநர் இக்கட்டிலிருக்கும் மோட்டார்கார் ஓட்டுபவர் இத்தகைய திறமைகளை நீ கொண்டிருப்பதற்காக உன்னைப் போற்றுவார்! உன் நற்பண்புகளைப் பற்றியும் எண்ணிப்பார். நீ படிப்பில் அக்கறைமிகுந்தவனா? பொறுமையுள்ளவனா? இரக்கமுள்ளவனா? தயாளமுள்ளவனா? தயவுள்ளவனா? இந்தப் பண்புகள் அற்பக் குறைபாடுகளை வெகுவாய் மிஞ்சிவிடுகின்றன.

பின்வரும் இந்தச் சுருக்கமான சரிபார்ப்பதற்குரிய பட்டியலைக் கவனிப்பதும் உதவியாயிருக்கும்:

சாத்தியமான இலக்குகளை வை: அடையமுடியாத மிக உயர்ந்த இலக்குகளையே நீ எப்பொழுதும் வைத்தால், மனக்கசப்பான ஏமாற்றத்தை அடையக்கூடும். எட்டக்கூடிய இலக்குகளை வை. தட்டெழுத்து போன்ற ஒரு கைத்திறமையைக் கற்பதைப்பற்றியதென்ன? ஓர் இசைக்கருவியை இயக்க அல்லது மற்றொரு மொழியைப் பேசக் கற்றுகொள். உன் வாசிக்கும் திறமையை அபிவிருத்தி செய் அல்லது அதிகப்படுத்து. தன்-மதிப்பு, சாதனையோடு சேர்ந்து உண்டாகும் பயனுள்ள விளைவு.

நல்ல வேலைசெய்: நீ கீழ்த்தரமான வேலைசெய்தால், உன்னைப்பற்றி நீ நன்றாய் உணரப்போவதில்லை. கடவுள் தம்முடைய படைப்பு வேலைகளில் மகிழ்ச்சிகொண்டார், அந்தப் படைப்பு வேலை சகாப்தங்கள் ஒவ்வொன்றின் முடிவின்போதும் “நல்லது” என்று கூறினார். (ஆதியாகமம் 1:3-31) நீயும், வீட்டிலோ பள்ளியிலோ என்ன வேலை செய்தாலும் அதைத் திறம்பட்டமுறையிலும் மனச்சாட்சியுடனும் செய்வதன்மூலம் மகிழ்ச்சிகொள்ளலாம்.—நீதிமொழிகள் 22:29-ஐ பார்.

மற்றவர்களுக்காகக் காரியங்களைச் செய்: நீ வெறுமென உட்கார்ந்துகொண்டு மற்றவர்கள் எல்லாக் காரியங்களையும் உனக்குச் செய்துகொண்டிருக்க விடுவதால் தன்-மதிப்பு உண்டாவதில்லை. ‘உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் மற்றவர்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்,’ அல்லது மற்றவர்களுக்கு வேலைக்காரனாயிருக்க வேண்டும் என்று இயேசு சொன்னார்.—மாற்கு 10:43-45.

உதாரணமாக, 17-வயது கிம் வேனிற்கால விடுமுறையில் ஒவ்வொரு மாதமும் 60 மணிநேரங்கள் மற்றவர்கள் பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்ளும்படி அவர்களுக்கு உதவிசெய்ய திட்டம்செய்தாள். அவள் சொல்வதாவது: “அது என்னை யெகோவாவிடம் மேலும் நெருங்கக் கொண்டுவந்திருக்கிறது. ஆட்கள்பேரில் உண்மையான அன்பை வளர்க்கும்படியும் எனக்கு உதவிசெய்திருக்கிறது.” இந்த மகிழ்ச்சியுள்ள இளம் பெண் தன்-மதிப்பில் குறைவுபட சாத்தியமில்லை.

உன் நண்பர்களைக் கவனமாய்த் தெரிந்தெடு: “என்னுடன் என் உறவு வெகு மகிழ்ச்சியற்ற ஒன்று,” என 17-வயது பார்பரா சொன்னாள். “என்னில் நம்பிக்கையுள்ள ஆட்களுடன் நான் இருக்கையில் நல்ல வேலை செய்கிறேன். என்னை ஓர் இயந்திரத்தின் பாகத்தைப்போல் நடத்துவோருடன் இருக்கையில், நான் முட்டாளாகிறேன்.”

அகந்தையுள்ள அல்லது அவமதிக்கும் ஆட்கள், நீ உன்னைப்பற்றிச் சங்கட உணர்ச்சியடையும்படி நிச்சயமாகவே செய்யலாம். ஆகையால் உன் நலத்தில் உண்மையில் அக்கறையுள்ள நண்பர்களை, உன்னை ஊக்குவித்து முன்னேறச் செய்யக்கூடிய நண்பர்களைத் தெரிந்தெடு.—நீதிமொழிகள் 13:20.

கடவுளை உன் மிக நெருங்கிய நண்பராக்கிக்கொள்: “யெகோவா என் கன்மலை என் கோட்டை,” என்று சங்கீதக்காரன் தாவீது உறுதியாய்க் கூறினான். (சங்கீதம் 18:2, NW) அவனுடைய நம்பிக்கை அவனுடைய சொந்தத் திறமைகளின்பேரில் இல்லை, யெகோவாவுடன் கொண்டிருந்தத் தன் மிக நெருங்கிய நட்பின்மீதே இருந்தது. இவ்வாறு, பின்னால் அவனுக்குத் துன்பம் ஏற்பட்டிருந்த சமயத்தில், அவன் தன் மன அமைதியை இழக்காமல் கடுமையான நிந்தனையைத் தாங்க முடிந்தது. (2 சாமுவேல் 16:7, 10) நீயும், “கடவுளிடம் நெருங்கிவந்து” இவ்வாறு உன்னில் அல்ல, யெகோவாவில் “பெருமைபாராட்ட”லாம்!—யாக்கோபு 2:21-23; 4:8, NW; 1 கொரிந்தியர் 1:30, தி.மொ.

பலன்தராத முயற்சிகள்

ஓர் எழுத்தாளன் பின்வருமாறு கூறினான்: “தன்னை எடுத்துக்காட்டும் செல்வாக்கற்றும் தன்-மதிப்பில் குறைவுபட்டும் இருக்கிற வளரிளம்பருவத்தினன் உலகத்தை எதிர்ப்பட சில சமயங்களில் போலி முன்தோற்றத்தை அல்லது புறத்தோற்றத்தை வளர்க்க முயற்சி செய்கிறான்.” சிலர் ஏற்கும் போலி புறத்தோற்றங்கள் பாகங்கள் பொதுவாய் அறியப்பட்டவையே: “பொல்லாத முரடன்,” வரைமுறையின்றி நெருங்கி பழகுபவள், கோமாளித்தனமாய் உடுத்தியுள்ள ஆட்டக்காரன் ஆகியவை. ஆனால் இந்தப் புறத்தோற்றங்களுக்குப் பின்னால், இத்தகைய இளைஞர்கள் இன்னும் தாழ்வு உணர்ச்சிகளோடு மல்லாடுகின்றனர்.—நீதிமொழிகள் 14:13.

உதாரணமாக, “சோர்வுணர்ச்சிகளைப் போக்க, (தாங்கள் விரும்பப்படுபவர்கள் என்ற உணர்ச்சியால்) தன்மதிப்பை அதிகரிக்க, நெருங்கிய உணர்வைப் பெறவும் மேலும், கர்ப்பந்தரிப்பதால், மற்றொரு மானிடனின்—அதாவது குழந்தையின்—அன்பையும் எதிர்ப்பற்ற ஏற்பையும் அடைய,” வரையறையற்ற ஆண்பெண் உறவில் மனம்போனபோக்கில் ஈடுபடுவோரைக் கவனித்துப்பார். (பருவ வயதினரின் சோர்வைச் சமாளித்தல்) மயக்கம் நீங்கிய ஒரு வாலிபப் பெண் பின்வருமாறு எழுதினாள்: “என் சிருஷ்டிகருடன் உறுதியான உறவை படிப்படியாய் கட்டியமைக்க முயற்சிசெய்வதற்கு மாறாக, ஆறுதலுக்காக நான் பாலுறவுக்குரிய நெருங்கியநிலையை ஏற்க முயன்றேன். நான் கட்டியமைத்ததெல்லாம் வெறுமையும், தனிமையும், மேலுமதிகச் சோர்வுமே.” அப்படியானால், இத்தகைய பலன்தராத முயற்சிகளைக் குறித்து எச்சரிக்கையாயிரு.

ஓர் எச்சரிப்பு வார்த்தை

கவனத்தைக் கவருவதாய், வேத எழுத்துக்கள் ஒருவன் தன்னைப்பற்றி மட்டுக்குமீறி உயர்வாய் நினைப்பதற்கு எதிராக அடிக்கடி எச்சரிக்கின்றன! ஏன்? ஏனெனில், நம்மில் மிகப்பலர், தன்னம்பிக்கை அடைய எடுக்கும் நம் முயற்சிகளில், வரம்புமீறிச் சென்றுவிடுவதால். பலர் தற்பெருமையுள்ளோராகி தங்கள் தேர்ச்சித்திறமைகளையும் ஆற்றல்களையும் அளவுக்கு மீறி மிகைப்படுத்திக் காட்டுகின்றனர். சிலர் மற்றவர்களைத் தாழ்த்துவதன்மூலம் தங்களை உயர்த்திக் காட்டுகின்றனர்.

முதல் நூற்றாண்டில், யூதருக்கும் புறஜாதியாருக்கும் (யூதரல்லாதவர்களுக்கும்) இடையில் இருந்துவந்தக் கடுமையான போட்டி மனப்பான்மை ரோமிலிருந்தக் கிறிஸ்தவ சபையைத் தொல்லைப்படுத்தியது. ஆகவே, கடவுளுடைய “தயவினால்”தானே அவர்கள் கடவுளுடைய இரக்கம்பெற்ற நிலைக்குள் “ஒட்டவைக்கப்பட்டு” இருந்தனரென்று அப்போஸ்தலன் பவுல் புறஜாதியாரை நினைப்பூட்டினான். (ரோமர் 11:17-36) சுய-நீதியுணர்வுள்ள யூதர்களும், தங்கள் அபூரணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஏனெனில், “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களா”னார்கள், என்று பவுல் சொன்னான்.—ரோமர் 3:23.

பவுல் அவர்களிலிருந்து தன்மதிப்பை அகற்றிப்போடவில்லை ஆனால் பின்வருமாறு கூறினான்: “எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல்,” இருக்கவேண்டும்.” (ரோமர் 12:3) ஆகையால் ஓரளவுக்கு தன்மதிப்பு “வேண்டிய”தாயிருந்தாலும், இதைக் குறித்து மட்டுக்கு மீறி ஒருவர் செல்லக்கூடாது.

டாக்டர் ஆலன் ஃப்ராமி கவனித்துக் கூறுகிறபடி: “தன்னைப்பற்றிப் போதியளவு தகுதியான எண்ணங்கொண்டிருக்கும் ஓர் ஆள் வருத்தமுள்ளவனாயில்லை, ஆனால் அவன் அடக்கமுடியா மீறிய மகிழ்ச்சிகொண்டிருக்க வேண்டியதில்லை. . . . அவன் தோல்வி மனப்பான்மையுடன் இல்லை, ஆனால் அவனுடைய நம்பிக்கையார்வ மனப்பான்மை கட்டுபாடற்று செல்வதில்லை. அவன் மடத்துணிவுடையவனாயும் இல்லை, குறிப்பிட்ட பயங்களற்றும் இல்லை . . . தான் எல்லாக் காலத்துக்கும் முதன்மையான வெற்றி வீரனும் அல்ல, அல்லது தான் எப்பொழுதும் முடிவில்லாத தோல்வியுமல்ல என்று அவன் தெளிவாய் உணருகிறான்.”

ஆகையால் மனத்தாழ்மையுடன் இரு. “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” (யாக்கோபு 4:6) உன் ஆற்றல்களை ஒப்புக்கொள், ஆனால் உன் குறைபாடுகளைக் கண்டுங்காணாமலிராதே. அதற்கு மாறாக, அவற்றைச் சரிசெய்ய தொடர்ந்து உழைத்துக்கொண்டிரு. இருப்பினும், அவ்வப்போது உனக்கு உன்பேரில் சந்தேகம் உண்டாகலாம். ஆனால் உன் தன்மதிப்பைப் பற்றியோ கடவுளுக்கு உன் பேரில் உள்ள அக்கறையைப் பற்றியோ ஒருபோதும் சந்தேகப்பட வேண்டியதில்லை. ஏனெனில், “ஒருவன் கடவுளில் அன்புகூர்ந்தால் அவன் அவரால் அறியப்பட்டிருக்கிறான்.”—1 கொரிந்தியர் 8:3.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ இளைஞர் சிலர் ஏன் தங்களைப்பற்றி எதிர்மறையான உணர்ச்சிகளைக் கொண்டிருக்கின்றனர்? அத்தகைய இளைஞர்கள் உணரும் முறைக்கு ஒப்பான உன்னுடைய உணர்ச்சிகளைக் கூற முடியுமா?

◻ உன் பெற்றோர் எதிர்பார்ப்பவற்றை நீ எவ்வாறு கையாளலாம்?

◻ தன்மதிப்பைப் படிப்படியாய் வளர்ப்பதற்குச் சில வழிகள் யாவை?

◻ தன்மதிப்பை வளர்ப்பதில் பலன்தராத முயற்சிகளில் சில யாவை?

◻ உன்னைப்பற்றி மட்டுக்குமீறி உயர்வாய் எண்ணாதபடி நீ ஏன் கவனமாய் இருக்கவேண்டும்?

[பக்கம் 98-ன் சிறு குறிப்பு]

தன்மதிப்பு “மனித வாழ்க்கைக்குக் கண்ணியத்தைக் கொடுக்கும் மூலப்பொருள்,” என்றழைக்கப்பட்டிருக்கிறது

[பக்கம் 99-ன் படம்]

நீ சோர்வுற்று, மற்றவரைவிடத் தாழ்ந்துள்ள உணர்ச்சியடைகிறாயா? அதற்கு ஒரு பரிகாரம் உண்டு

[பக்கம் 101-ன் படம்]

தற்புகழ்ச்சி அல்லது தற்பெருமை பேசுவோனாவது தன்மதிப்புக் குறைவை நீக்கும் பரிகாரமல்ல

[பக்கம் 102-ன் படம்]

நீ எதையுமே சரியாய்ச் செய்ய முடியாதென்று சில சமயங்களில் உணருகிறாயா?