Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் ஏன் அவ்வளவு வெட்கப்படுகிறேன்?

நான் ஏன் அவ்வளவு வெட்கப்படுகிறேன்?

அதிகாரம் 15

நான் ஏன் அவ்வளவு வெட்கப்படுகிறேன்?

“நான் எவ்வளவு மேன்மையான தோற்றமுள்ளவளென எல்லாரும் எனக்குச் சொல்கின்றனர்,” என்று ஓர் இளம் பெண் ஒரு செய்தித்தாளில் எழுதினாள். எனினும்: “ஆட்களிடம் பேசுவது எனக்குப் பிரச்னையாயிருக்கிறது. எவரிடமாவது பேசுகையில் அவர்கள் கண்களை நான் நோக்கினால், என் முகம் சிவந்துவிடுகிறது எனக்குள் முற்றிலும் மூச்சுத் திணருகிறது. . . . வேலைசெய்யுமிடத்தில் நான் எவரிடமும் பேசுகிறதில்லையாதலால் நான் எவ்வளவு ‘இறுமாப்புள்ளவளென’ பற்பல விதமாய் பேசப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். . . . நான் இறுமாப்புக்கொண்டில்லை, வெறுமென வெட்கப்படுகிறேன்,” என்று அவள் தொடர்ந்து கூறினாள்.

ஓர் ஆராய்ச்சியில் கேள்விகேட்கப்பட்டவர்களில் 80 சதவீதமானோர் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயம் வெட்கமுடையோராக இருந்தனர், 40 சதவீதமானோர் தற்போது தங்களை வெட்கமுடையோராகக் கருதினர். வெட்கப்படுவது நிச்சயமாகவே, பூர்வகாலங்கள் முதற்கொண்டு மனிதவர்க்கத்துக்குள் பொதுவாய் இருந்துவந்திருக்கிறது. மோசே இஸ்ரவேல் ஜனத்துக்கு முன்னால் கடவுளுடைய பிரதிநிதி பேச்சாளனாக செயல்படுவதற்கு வெட்கப்பட்டுத் தன்னால் இயலாதென தெரிவித்தானென்று பைபிளில் சொல்லியிருக்கிறது. (யாத்திராகமம் 3:11, 13; 4:1, 10, 13) மேலும் கிறிஸ்தவ சீஷன் தீமோத்தேயு தடையின்றிப் பேசி தன் அதிகாரத்தைத் தகுந்தபடி செலுத்த வெட்கமும் தயக்கமும் கொண்டிருந்தானெனத் தோன்றுகிறது.—1 தீமோத்தேயு 4:12; 2 தீமோத்தேயு 1:6-8.

வெட்கம் என்பது என்ன

வெட்கம் என்பது ஆட்கள் மத்தியில்—அன்னியர், அதிகாரத்திலுள்ளோர், எதிர்பாலார், அல்லது உன் சகாக்கள் மத்தியிலுங்கூட சங்கடமாக உணருவதாகும். அது தனக்கு ஆளானோரைப் பற்பல வழிகளில் பாதிக்கும் மிதமீறிய தன்னுணர்வு ஆகும். சிலர் மனசங்கடநிலைக்குள்ளாகின்றனர்; தங்கள் கண்களைக் கீழ்நோக்கிச் செலுத்தி இருதயம் படபடவென அடித்துக்கொண்டிருக்க, பேசமுடியாதவர்களாய் உணருகின்றனர். மற்றவர்கள் தங்கள் சமநிலையமைதியை இழந்து, விடாது பேசிக்கொண்டேயிருக்கின்றனர். இன்னும் சிலர் தைரியமாய்ப் பேசி தங்கள் எண்ணங்களை அல்லது விருப்பங்களை வாய்விட்டுரைப்பதைக் கடினமாய்க் காண்கின்றனர்.

எனினும், உண்மையில், ஓரளவு வெட்க உணர்ச்சியைக் கொண்டிருப்பதில் உடன்பாடான அம்சங்களும் இருக்கின்றன. அது அடக்கத்துடனும் மனத்தாழ்மையுடனும் சம்பந்தப்பட்டது, கடவுள் எதிர்பார்க்கும் மற்றும் பாராட்டும் காரியங்களில் ஒன்று ‘அவருக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதாகும்.’ (மீகா 6:8) வேண்டாதபோது பேசாது அடக்கஒடுக்கமாய்த் தோன்றுவதில் பயனுண்டு. அதிகாரத் தோரணையுடனும் மிதமீறி வலுச்சண்டைக்குச் செல்லும் போக்குடனும் இராததில் மேலுமான நன்மையுண்டு. வெட்கப்படும் ஆள் நன்றாய்ச் செவிகொடுத்துக் கேட்பவனாக பெரும்பாலும் மதிக்கப்படுகிறான். ஆனால் வெட்கம் நம்மால் இயலும் நம் உள்ளார்ந்த முழு ஆற்றலைப் பயன்படுத்துவதிலிருந்து நம்மைத் தடுத்து நிறுத்திவைத்து, நம்முடைய உறவுகளையும், வேலையையும், உணர்ச்சிகளையும் தீங்கான முறையில் பாதிக்கையில், அதைப்பற்றி ஏதாவது செய்வதற்குச் சமயமாய்விட்டது!

இந்தப் பிரச்னையை விளங்கிக்கொள்வது ஒரு நல்லத் தொடக்கமாகும். (நீதிமொழிகள் 1:5) வெட்கம் நீ எத்தகையோனென விவரிக்கிறதில்லை; அது உன் நடத்தையை, சூழ்நிலைமைகளுக்கு உன் பிரதிபலிப்பை, மற்றவர்களுடன் கொண்ட அனுபவங்களின்மூலம் நீ கற்று உறுதிப்படுத்தியுள்ள அந்த மாதிரியை விவரிக்கிறது. மற்றவர்கள் உன்னைப்பற்றி எதிர்மறையான தீர்ப்புகளைச் செய்கிறார்கள், அவர்கள் உன்னை விரும்புகிறதில்லையென நீ நினைக்கிறாய். மற்றவர்கள் உன்னைப்பார்க்கிலும் மேம்பட்டவர்கள் அல்லது மேலுமதிக இயல்பான நிலையில் இருக்கிறார்களென நீ நினைக்கிறாய். மற்ற ஆட்களிடம் விரித்துரைக்க நீ முயன்றால் காரியங்கள் முற்றிலும் தவறாய்விடுமென நீ நினைக்கிறாய். காரியங்கள் மோசமாய் முடியுமென நீ எதிர்பார்க்கிறாய், அவை பெரும்பாலும் அவ்வாறாகின்றன—ஏனெனில் நீ விறைப்பாகி உன் நம்பிக்கைகளுக்கு இசைவாய்ச் செயல்படுகிறாய்.

வெட்கம் உன் வாழ்க்கையைப் பாதிக்கும் முறை

பின்வாங்குவதாலும், முன்வந்துபேசாமலும், அல்லது உன்பேரில் நினைவை அவ்வளவாய் ஈடுபடுத்திக்கொண்டிருப்பதன் காரணமாக நீ மற்றவர்களுக்குக் கவனத்தைச் செலுத்தாமலும் இருப்பதால், நீ இறுமாப்புள்ளவன், சிநேகப்பான்மையற்றவன், சலிப்புற்றிருக்கிறாய், அல்லது கவலைப்படாதவன் அல்லது அறிவற்றவன் என்ற அபிப்பிராயம் மற்றவர்கள் மனதில் ஏற்படச் செய்வாய். உன் எண்ணங்கள் உன்பேரில் ஊன்றியிருக்கும் சமயத்தில் கலந்துபேசப்படும் காரியங்களில் மனதை ஊன்றவைப்பது கடினம். ஆகையால் நீ பெறும் தகவலுக்குக் குறைந்த கவனத்தைச் செலுத்துகிறாய். அப்பொழுது நீ மிக அதிகம் பயப்படுவது நடந்துவிடுகிறது—நீ முட்டாள்போல் தோன்றுகிறாய்.

சுருக்கமாய்ச் சொல்லவேண்டுமானால், வெட்கச் சிறைச்சாலை மதில்களுக்குப் பின்னால் நீ உன்னை அடைத்துப் பூட்டிக்கொண்டு சாவியை தூர எறிந்துவிட்டாய். வாய்ப்புகள் உன்னை வெறுமென கடந்துபோகவிடுகிறாய். உனக்கு உண்மையில் வேண்டாத விவரங்களை அல்லது சூழ்நிலைமைகளை நீ ஏற்கிறாய்—இதெல்லாம் ஏனென்றால் நீ வாய்விட்டுப் பேசி உன் கருத்தைவெளிப்படுத்திக் கூறுவதற்குப் பயப்படுகிறாய். ஆட்களைச் சந்தித்துப் பேசி புதிய நண்பர்களைச் சம்பாதிக்கும் மகிழ்ச்சியை அல்லது உன் வாழ்க்கையை மேம்படுத்தும் காரியங்களைச் செய்வதன் மகிழ்ச்சியை நீ இழந்துவிடுகிறாய். ஆனால் மற்றவர்களும் இழந்துவிடுகிறார்கள். எப்படியெனில் நீ உண்மையில் எப்படிப்பட்டவன் என்பதை அவர்கள் ஒருபோதும் அறிகிறதில்லை.

வெட்கத்தை மேற்கொள்ளுதல்

காலமும் முயற்சியும் நடத்தையை மாற்றமுடியும். முதலாவது, மற்றவர் உன்னை மதிப்பிடுவதைப்பற்றிக் கவலைப்படுவதை நிறுத்து. அவர் ஒருவேளைத் தன்னைப்பற்றியும் தான் சொல்ல அல்லது செய்யப்போவதைப்பற்றியும் சிந்திப்பதில் ஆழ்ந்திருக்கலாம். அவன் சிறுபிள்ளைத்தனமாய் உன்னைக் கேலி செய்தால், பிரச்னை அவனிடம் இருக்கிறதென விளங்கிக்கொள். “புத்தியிலான் தனது அயலானை இகழ்ந்துரைப்பான்.” (நீதிமொழிகள் 11:12, தி.மொ.) நண்பர்களாக இருக்கத் தகுதியுடையோர் வெளித்தோற்றங்களைக்கொண்டு அல்ல, நீ எவ்வகையான ஆள் என்பதைக்கொண்டே நியாயந்தீர்ப்பார்கள்.

மேலும் உடன்பாட்டுமுறையில் சிந்திக்க முயற்சிசெய். ஒருவரும் பரிபூரணர் அல்லர்; நம்மெல்லாருக்கும் அவரவருக்குரிய பலங்களும் பலவீனங்களும் இருக்கின்றன. காரியங்களை நோக்குவதற்கு வெவ்வேறு முறைகள் இருக்கின்றன, வெவ்வேறு விருப்புவெறுப்புக்களும் இருக்கின்றனவென நினைவுபடுத்திக்கொள். உன்னுடைய கருத்து வித்தியாசமாக இருப்பதால், வேறுபட்ட எண்ணம் ஓர் ஆளாக உன்னை வேண்டாமென தள்ளிவிடுவதைக் குறிக்கிறதில்லை.

மற்றவர்களை நியாயமாய்த் தீர்ப்புச் செய்யவும் கற்றுக்கொள். முன்னால் வெட்க உணர்ச்சிகொண்டிருந்த ஓர் இளைஞன் சொல்வதாவது: “நான் என்னைப்பற்றி இரண்டு காரியங்களைக் கண்டுபிடித்தேன் . . . முதலாவது, நான் மட்டுக்குமீறி என்னில் கருத்தூன்றியவனாய் இருந்தேன். நான் என்னைப்பற்றி மிதமீறி சிந்தித்துக்கொண்டிருந்தேன், நான் சொன்னதைக்குறித்து ஆட்கள் என்ன நினைத்தார்களென்பதைப்பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். இரண்டாவது, மற்ற ஆட்கள் கெட்ட உள்நோக்கங்கொண்டிருந்தனரென எண்ணினேன்—அவர்களை நம்பாமலும் அவர்கள் என்னைத் தாழ்வாக நோக்குவரென நினைத்துக்கொண்டுமிருந்தேன்.”

இந்த இளைஞன் யெகோவாவின் சாட்சிகளின் ஒரு கூட்டத்துக்கு வந்திருந்தான். “அங்கே நான் ஒரு பேச்சைக் கேட்டேன் அது உண்மையில் எனக்கு உதவிசெய்தது,” என அவன் நினைவுபடுத்திக் கூறுகிறான். ‘அன்பு நேசமனப்பான்மையுடன் பழகும் இயல்புவாய்ந்தது; உங்களுக்கு அன்பிருந்தால் பிறரைப்பற்றி மிக மோசமாயல்ல, மிக நல்லமுறையில் எண்ணுவீர்களென பேச்சாளர் எடுத்துக் காட்டினார். ஆகையால் பிறர் கெட்ட உள்நோக்கங்கள் கொண்டிருப்பதாக எண்ணுவதை விட்டொழிக்கக் கற்றுக்கொண்டேன்.அவர்கள் விளங்கிக்கொள்வார்கள், அவர்கள் தயவாய் இருப்பார்கள், அவர்கள் பரிவு காட்டுவார்கள்,” என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஆட்களை நம்பத் தொடங்கினேன். சிலர் ஒருவேளை என்னைத் தவறாகத் தீர்க்கலாமென நான் உணர்ந்தேன், ஆனால் அது அவர்களுடைய பிரச்னையென நான் இப்பொழுது உணர்ந்தேன்.’

“மேலும் செயல்முறையில் அன்பு காட்டத் தொடங்குவதற்கானத் தேவையையும்—என்னை மற்றவர்களுக்கு இன்னும் அளிக்கவும்—நான் கற்றுக்கொண்டேன்,” என அவன் விளக்கினான். “இதை நான் முதலில் இளையவர்கள்பேரில் முயற்சிசெய்தேன். பின்னால் மற்றவர்களை அவர்கள் வீட்டில் சந்திக்கத் தொடங்கினேன். அவர்களுடைய தேவைகளை உணருவதற்கும், அவர்களுக்கு உதவிசெய்யும் முறையில் எண்ணுவதற்கும் கற்றுக்கொண்டேன்.” இவ்வாறு லூக்கா 6:37, 38-லுள்ள இயேசுவின் அறிவுரையின் உண்மையை அவன் கற்றுக்கொண்டான்: “மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; . . . கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; . . . நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.”

தொடக்கம் செய்தல்

ஆகையால் பிறருடன் பேசிப்பழக—வாழ்த்துதல் கூறி உரையாடலைத் தொடங்கக்—கற்றுக்கொள். அது வானிலையைப்பற்றி ஒரு குறிப்பு சொல்வதைப்போல் அவ்வளவு எளிதாயிருக்கலாம். இதை நினைவில் வைத்துக்கொள்: உனக்கு 50 சதவீத பொறுப்பே இருக்கிறது. மீதிப் பாதி பொறுப்பு மற்ற ஆளுக்குரியது. பேச்சில் தடுமாறினால், கண்டனம் செய்யப்பட்டவனாக உணராதே. மற்றவர்கள் சிரித்தால், அவர்களுடன் சேர்ந்து சிரிக்கக் கற்றுக்கொள். “அது சரியாக வரவில்லை,” என்று சொல்வது உன்னை அமைதி அடையச் செய்து பேச்சைத் தொடர உனக்கு உதவிசெய்யும்.

செளகரியமான முறையில் உடை உடுத்து, ஆனால் உன் உடைகள் சுத்தமாயும் சுருக்கமின்றி தேய்க்கப்பட்டும் இருக்கும்படி பார்த்துக்கொள். நீ நன்றாய்த் தோற்றமளிக்கிறாயென்ற உணர்ச்சி இந்தக் காரியத்தில் உனக்கு ஏற்படும் பயத்தைக் குறைத்து அப்போது நடந்துகொண்டிருக்கும் உரையாடலில் மனதை ஊன்றவைக்க உதவிசெய்யும். நேராக நிமிர்ந்து நில்—எனினும் இயல்பான தளர்வுநிலையில் இரு. முகமலர்ச்சியுடனிரு, புன்னகைக்கொள். சிநேகப்பான்மையான கண்ணோக்குடன் மற்றவர் சொல்வதைத் தலையசைவினால் அல்லது வார்த்தையினால் ஒப்புக்கொள்.

மற்றவர்கள் முன்னிலையில் பேச்சுக்கொடுத்தல் அல்லது வேலைக்குப் பேட்டிகாண்தல் போன்ற கடினமான சூழ்நிலையை எதிர்ப்படுகையில், கூடியவரை நன்றாய்த் தயாரித்து வா. நீ சொல்லப்போவதை முன்னதாகவே பயிற்சிசெய்துகொள். பயிற்சிசெய்து பழக்கப்படுத்திக்கொள்வதனால் பேச்சுப் பிரச்னைகளை மேற்கொள்ளலாம் அல்லது குறைவுபடுத்தலாம். வேறு எந்தப் புதிய திறமைகளை அடைவதற்கும் நேரமெடுப்பதைப்போலவே இதற்கும் நேரமெடுக்கும். ஆனால் உடன்பாடான பலன்களை நீ காண்கையில் வெற்றிப்பெறுவதற்கு மேலும் ஊக்கப்படுத்தப்படுவாய்.

கடவுள் கொடுக்கக்கூடிய உதவியைக் கவனிக்கத் தவறக்கூடாது. பூர்வ இஸ்ரவேல் ஜனத்தின் முதல் அரசன் சவுல், முதன்முதல் வேதனையான வெட்கத்துடனிருந்தான். (1 சாமுவேல் 9-ம், 10-ம் அதிகாரங்கள்) ஆனால் செயல்படுவதற்கு நேரம் வந்தபோது, “கடவுளின் ஆவி அவன்மேல் வல்லமையோடு வந்து இறங்கினது,” அவன் ஜனங்களை வழிநடத்தி வெற்றிப்பெற்றான்!—1 சாமுவேல், அதிகாரம் 11, தி.மொ.

இன்று கிறிஸ்தவ இளைஞர்கள், கடவுளையும் அவர் வாக்களித்துள்ள நீதியுள்ள புதிய உலகத்தையும் பற்றிக் கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவிசெய்யவேண்டிய பொறுப்புடையோராய் இருக்கின்றனர். (மத்தேயு 24:14) இந்த நற்செய்தியைக் கொண்டுசென்று சர்வலோகத்தில் மிக உயர்ந்த அதிகாரியைப் பிரதிநிதித்துவம் செய்வது நிச்சயமாகவே தன்னம்பிக்கையைத் தூண்டி ஊக்குவித்து ஒருவன் தன் கவனத்தைத் தன்மீதூன்ற வைப்பதிலிருந்து விலக்க உதவிசெய்யும். அப்படியானால், நீ கடவுளை உண்மையுடன் சேவித்தால், அவர் உன்னை ஆசீர்வதித்து உன் வெட்க உணர்ச்சியை மேற்கொள்ள உனக்கு உதவிசெய்வார் என்று நிச்சயமாய் இருக்கலாம்.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ வெட்கம் என்பது என்ன, வெட்கப்படும் ஆள் மற்றவர் முன்னிலையில் எவ்வாறு நடந்துகொள்கிறான்? உன்னைப்பற்றியதில் இது ஓரளவு உண்மையாயிருக்கிறதா?

◻ மற்றவர்கள் மத்தியில் இருக்கையில் வெட்க உணர்ச்சியுள்ள ஆள் ஏன் நம்பிக்கை இழந்துவிடுகிறான்?

◻ வெட்கம் எவ்வாறு ஒருவருக்கு இழப்பை அனுபவிக்கும்படி செய்ய முடியும்?

◻ வெட்கத்தை மேற்கொள்ளும் வழிகள் சில யாவை? இந்த ஆலோசனைகளில் ஏதாவது உனக்குப் பயன்பட்டதா?

[பக்கம் 121-ன் சிறு குறிப்பு]

வெட்கப்படும் ஆள் நட்புறவுகளையும் வாய்ப்புகளையும் தவறவிடுகிறான்

[பக்கம் 124-ன் பெட்டி]

வெட்க உணர்ச்சியை உன்னால் மேற்கொள்ள முடியும்

மாற்றமடைய விரும்புவதாலும் மாற்றம் உண்மையில் சாத்தியமென நம்புவதாலும்

எதிர்மறையான எண்ணங்களின் இடத்தை நம்பிக்கையான செயலைக்கொண்டு நிரப்புவதால்

நடைமுறையான மற்றும் நோக்கமுள்ள இலக்குகளை உனக்கு வைப்பதால்

மனதைத் தளர்த்தி கவலையைச் சமாளிப்பது எவ்வாறென அறிவதால்

ஒரு நிலைமையை முன்னதாகவே பயிற்சிசெய்து பழகிக்கொள்வதால்

படிப்படியாய் வெற்றிப்பெறும் அனுபவங்களின்மூலம் நம்பிக்கையடைந்துவருவதால்

கருத்து வேறுபாடுகள் உண்டு மற்றவர்களும் தவறுகிறார்களென நினைவுகூருவதால்

திறமைகளைப் பெருக்கவும் புதியவற்றைக் கற்கவும் பயிற்சிசெய்வதால்

மற்றவர்களுக்கு அன்பு காட்டவும் உதவிசெய்யவும் முன்வந்து முயற்சிசெய்வதால்

நல்லத் தோற்றமளிக்கும் முறையில் உடையுடுத்தி நம்பிக்கையுடன் நடந்துகொள்வதால்

கடவுள் கொடுக்கும் உதவியில் திடநம்பிக்கை வைத்திருப்பதால்

கிறிஸ்தவ கூட்டங்களில் உட்பட்டு உன் விசுவாசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதால்

[பக்கம் 123-ன் படங்கள்]

மற்றவர்கள் தன்னைப்பற்றி அற்பமாய் எண்ணுகின்றனரென வெட்கப்படுபவன் கற்பனைசெய்கிறான்

[பக்கம் 125-ன் படம்]

பிறருடன் பேசிப்பழக—புன்முறுவல் செய்ய, வாழ்த்துதல்கூற, மற்றும் உரையாடல் நடத்த கற்றுக்கொள்