Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விவாகத்துக்கு முன்னான பாலுறவுக்கு நான் மறுப்புத் தெரிவிப்பது எப்படி?

விவாகத்துக்கு முன்னான பாலுறவுக்கு நான் மறுப்புத் தெரிவிப்பது எப்படி?

அதிகாரம் 24

விவாகத்துக்கு முன்னான பாலுறவுக்கு நான் மறுப்புத் தெரிவிப்பது எப்படி?

டீன் என்ற பத்திரிகையினரால் நடத்தப்பட்ட நாடு முழுவதிலுமான ஒரு சுற்றாய்வுக் காண்பித்ததாவது, அதனுடைய வாசகர்களில் பெரும்பாலானோர் பின்வரும் கேள்வியைக் குறித்து தகவல் அறிய விரும்பினார்கள்: “பாலுறவு அழுத்தங்களுக்கு மறுப்புத் தெரிவிப்பது எப்படி?”

சங்கீதம் 119:9-ல் சங்கீதக்காரன் அதேபோன்ற ஒரு கேள்வியை எழுப்பினான்: “வாலிபன் [அல்லது இளம் பெண்] தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்?” அதற்கு விடை: “உமது [கடவுளுடைய] வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.” ஆனால் தலையறிவைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது. “ஒழுக்கயீமான பாலுறவைக் குறித்துப் பைபிள் என்ன சொல்லுகிறது என்பதை நீ உன் மனதில் அறிந்திருக்கிறாய். ஆனால் உன் இருதயம் அந்தக் காரணங்களை உன் மனதுக்கு பின்னாக தள்ளிக் கொண்டேயிருக்கிறதே” என்று ஒப்புக்கொண்டாள் ஓர் இளம் பெண். பொருத்தமாகவே சங்கீதக்காரன் தொடர்ந்து சொன்னான்: “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.”—சங்கீதம் 119:11.

இருதயத்தைக் காத்துக்கொள்

கடவுளுடைய வார்த்தைகளை உன்னுடைய இருதயத்தில் பொக்கிஷமாக வைத்துக்கொள்வதானது முதலில் நீ வேத வசனங்களையும் மற்றும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் வாசிப்பதைத் தேவைப்படுத்துகிறது. இது கடவுளுடைய சட்டங்கள் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவை என்பதை நீ நம்புவதற்கு உனக்கு உதவக்கூடும். மறுபட்சத்தில், பாலுறவைத் தூண்டக்கூடிய தகவல்களை வாசிப்பது, செவிகொடுத்து கேட்பது, அல்லது பார்ப்பது போன்ற காரியங்கள் “மோகத்தை” தீவிரமாக தூண்டிவிடுகின்றன. (கொலோசெயர் 3:5) ஆகவே இப்படிப்பட்ட தகவல்களை உறுதியாய் தவிர்த்துவிடு! மாறாக, கற்புள்ள மற்றும் சுத்தமான காரியங்களை ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிரு.

ஒருவன் கற்புள்ளவனாக தொடர்ந்து இருப்பானா என்பதானது ஒருவருடைய நெருங்கிய நண்பர்களின் மிகுதியான செல்வாக்கின் பேரில் சார்ந்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சி மேலுமாக காட்டியிருக்கிறது. சங்கீதக்காரன் சொன்னான்: “உமக்குப் [கடவுளுக்குப்] பயந்து உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.”—சங்கீதம் 119:63.

உன்னுடைய நண்பர்கள் உண்மையாகவே “கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொள்வதற்கு” முயற்சி செய்கிறவர்களா? நண்பர்களைத் தெரிந்தெடுப்பதைக் குறித்து ஜோயன்னா என்ற ஓர் இளம் பெண் இந்தக் கருத்தைச் சொல்கிறாள்: “நீங்கள் யெகோவாவை நேசிக்கக்கூடிய ஆட்கள் மத்தியில் இருந்தால், ஒழுக்கத்தைக் குறித்துப் பேசுகையில் அவர்கள் உணருவதைப் போன்றே நீங்களும் உணர ஆரம்பிப்பதை காண்பீர்கள். உதாரணமாக, ஒழுக்கயீனமான காரியம் அருவருப்பாயிருக்கிறது என்று அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்கையில் நீங்களும் அவ்வாறே உணர ஆரம்பிப்பீர்கள். மறுபட்சத்தில், நீங்கள் அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத ஆட்களுடன் இருக்கையில், வெகு விரைவிலேயே நீங்களும் அவர்களைப் போன்றே ஆகிவிடுவீர்கள்.”—நீதிமொழிகள் 13:20.

இருப்பினும், எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகளும் விவாக நோக்குடன் பழகுதலும் கற்புடன் இருப்பதற்கு மிகப் பெரிய சவாலை வைக்கின்றன. ராபர்ட் சொரென்சன் என்பவரால் நடத்தப்பட்ட நாடு முழுவதிலுமான ஓர் ஆராய்ச்சியைக் கவனியுங்கள். ஆய்வு செய்யப்பட்ட ஆண்களில் 52 விழுக்காடும் பெண்களில் 82 விழுக்காடும் தாங்கள் தொடர்ந்து பழகிவந்தவர்கள் அல்லது குறைந்தபட்சம் நன்கு அறிந்த மற்றும் அதிகம் விரும்பியவர்களுடன்தானே முதல் தடவையாக பாலுறவில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று அவர் கண்டார். நீ விவாகம் செய்துகொள்ளும் வயதை எட்டியிருந்தால் மற்றும் ஒருவரோடு பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் என்ன செய்வது? அந்த நபரோடு நன்கு அறிமுகமாகும் அதே சமயத்தில் கற்பைக் காத்துக்கொள்வது எப்படி?

விவாக நோக்குடன் பழகும்போது படுகுழிகளைத் தவிர்த்தல்

பைபிள் எச்சரிப்பதாவது: “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” (எரேமியா 17:9) எதிர்பாலினர் எவர் பேரிலாவது ஒருவர் இயல்பான கவர்ச்சியை உணரக்கூடும். ஆனால் நீங்கள் எவ்வளவு அதிகமாய் ஒன்றுசேர்ந்து இருக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாய் கவர்ந்திழுக்கப்படுவீர்கள். இந்த இயல்பான ஆசை உங்களுடைய இருதயத்தை வழிவிலகிப் போகும்படிச் செய்யக்கூடும். “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும் . . . வேசித்தனங்களும் புறப்பட்டு வரும்” என்று இயேசு கிறிஸ்து கூறினார்.—மத்தேயு 15:19.

அநேக சமயங்களில் ஓர் இளம் ஜோடி பாலுறவு சம்போகங்கொள்ள திட்டமிடுவதில்லை. a அநேகருடைய காரியங்களில் ஒரு ஜோடி கொஞ்சுதலில் ஈடுபடுவதினாலோ அல்லது காமஉணர்ச்சியைத் தூண்டிவிடும் விதத்தில் அந்தரங்க உடல் உறுப்புகளைத் தொடுவதினாலோ இது சம்பவித்திருக்கிறது. விவாகமின்றி தாயான ஒருத்தி ஒப்புக்கொண்டாள்: “எனக்கும் நான் அறிந்த பெரும்பாலான இளைஞர்களுக்கும், ஒவ்வொரு சமயமும் சற்று அதிகமாகச் செல்வதாக இருந்தது. முடிவில் நீங்கள் இனியொருபோதும் கன்னிகையாக இல்லை. சிறிதளவு கொஞ்ச நீங்கள் ஆரம்பிக்கிறீர்கள், என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணரும் முன்பே நீங்கள் நிறுத்த முடியாத ஒரு நிலைமைக்கு வந்துவிட்டீர்கள்.”

பாலுறவு ஒழுக்கக்கேட்டில் நீங்கள் விழுந்துவிடுவதைத் தவிர்ப்பதற்கு, உங்களுடைய இருதயம் உங்களை வழிநடத்த அனுமதிப்பதற்கு மாறாக, உங்களுடைய இருதயத்தை நீங்கள் வழிநடத்த வேண்டும். (நீதிமொழிகள் 23:19) அதை நீங்கள் எப்படிச் செய்யக்கூடும்?

வரம்பை நிர்ணயித்துக்கொள்: தான் முத்தமிடவும் மற்றும் கட்டித்தழுவவும் துவங்க வேண்டும் என்று தன்னுடைய காதலி எதிர்பார்ப்பதாக ஓர் இளைஞன் உணரலாம். ஆனால் உண்மையில் அவள் அதை எதிர்பார்க்காமலிருக்கக்கூடும். “அகந்தையினால் மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ [பரிமாறிக்கொள்ளுகிறவர்களிடத்திலோ, NW] ஞானம் உண்டு.” (நீதிமொழிகள் 13:10) ஆகவே நீ எதிர்பாலாரோடு பழகுவதற்கான சந்திப்பில் ஈடுபட்டிருந்தால், “ஆலோசனையைப் பரிமாறிக்கொள்வதன்” மூலமாக அந்தக் காரியத்தைக் குறித்து நீ எவ்வாறு உணருகிறாய் என்பதை அந்த நபர் அறிந்துகொள்ளட்டும். நேசத்தை வெளிக்காட்டும் காரியத்தில் ஞானமாக ஒரு வரம்பை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அதே சமயத்தில், குழப்பமான சமிக்கைகளை வெளிக்காட்ட வேண்டாம். உடலுறுப்புகள் தெரியும் வண்ணமாகவும் காம உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய விதத்திலும் ஆடைகளை அணிவது உங்களுடைய கூட்டாளிக்குத் தவறான செய்தியைக் கொடுக்கக்கூடும்.

தவறுசெய்யத் தூண்டும் சூழ்நிலைமைகளைத் தவிருங்கள்: மலைகளின் தனித்த இடத்துக்கு தன்னுடன் வரும்படியாக ஓர் இளம் கன்னிகையை அவளுடைய நேசன் அழைத்ததைக் குறித்து பைபிள் சொல்லுகிறது. அவனுடைய உள்ளெண்ணம்? முன் வசந்த கால அழகுகளை அவர்கள் அனுபவிக்கும் பொருட்டு, இருப்பினும், அந்த பெண்ணின் சகோதரர்கள் திட்டமிடப்பட்ட பயணத்தைக் குறித்து அறிந்து, கோபத்துடன் அதற்கு தடைப் போட்டார்கள். அவள் ஒழுக்கயீனமான மனச்சாய்வுள்ளவளாக இருப்பதாக அவர்கள் உணர்ந்ததன் காரணமாக அப்படிச் செய்தார்களா? அப்படியில்லை! ஆனால் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களின்போது எழும்பும் தவறு செய்ய தூண்டும் வல்லமையை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். (சாலொமோனின் உன்னதப்பாட்டு 1:6; 2:8-15) அதே போன்று, ஒரு வீட்டிலோ, ஒரு தனியறையிலோ, அல்லது ஒதுக்கமான இடத்தில் நிறுத்தப்பட்ட வாகனத்திலோ நீங்கள் எதிர்பாலார் ஒருவருடன் பழகும் சந்திப்பில் அவரோடு தனிமையில் இருப்பது போன்ற தவறுசெய்வதற்கு வழிநடத்தக்கூடிய சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

உன்னுடைய வரம்புகளை அறிந்துகொள்: மற்ற சமயங்களைக் காட்டிலும் பாலுறவு கவர்ச்சிகளுக்கு நீ இரையாகும் வாய்ப்பு மிகுதியாக இருக்கக்கூடிய சில சமயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, சில தனிப்பட்ட தோல்விகளாலோ அல்லது உன்னுடைய பெற்றோருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தாலோ நீ மனமுடைந்திருக்கக்கூடும். எப்படியிருப்பினும், இப்படிப்பட்ட சமயங்களின்போது நீ முக்கியமாய் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். (நீதிமொழிகள் 24:10) மேலும், மதுபானங்களைப் பயன்படுத்துவதிலும் ஜாக்கிரதையாயிரு. இப்படிப்பட்டவைகளுடைய செல்வாக்கின்கீழ் நீ உங்களுடைய சுய கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடும். “திராட்ச ரசமும் மதுபானமும் நல்ல உள்ளெண்ணத்தை எடுத்துப்போடும்.”—ஓசியா 4:11, NW.

மறுப்புத் தெரிவி, அதற்கேற்ப செயல்படு: உணர்ச்சி வேகங்கள் அதிகரித்து ஆபத்தை உண்டுபண்ணும் விதத்தில் தங்களுக்கிடையே நெருக்கம் ஏற்படுகிறது என்பதை அறிகையில் அவர்கள் என்ன செய்யக்கூடும்? அவர்களில் யாராவது ஒருவர் அந்த மனோநிலையை முறியடிக்கக்கூடிய ஏதாவதொன்றைச் சொல்ல வேண்டும் அல்லது செய்ய வேண்டும். டெப்ரா என்ற ஓர் இளம் பெண் தன்னுடைய காதலனோடு தனிமையிலிருக்கக் கண்டாள். அவன் அவளோடு “பேசுவதற்காக” காரை ஒரு தனிமையான இடத்தில் நிறுத்தினான். உணர்ச்சி வேகங்கள் அதிகரிக்க ஆரம்பித்தபோது டெப்ரா தன் காதலனிடம் சொன்னாள்: “இது அளவுக்கு மிஞ்சி போகிறதல்லவா? இதை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டாமா?” அது அந்த வேகத்தை முறித்துவிட்டது. அவன் உடனடியாக அவளை வீட்டிற்குக் கொண்டுச் சென்றான். இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் மறுப்புத் தெரிவிப்பதென்பது நீங்கள் செய்ய வேண்டியதாயிருக்கக்கூடிய மிகக் கடினமான காரியமாக இருக்கலாம். ஆனால் பாலுறவிற்கு இணங்கிவிட்ட 20 வயது பெண் சொன்னாள்: “நீங்கள் அதிலிருந்து விலகிக்கொள்ளவில்லையென்றால், பின்னால் வருத்தப்படுவீர்கள்!”

ஒரு காப்பாளரைக் கொண்டிருங்கள்: பழைய பாணியாக சிலரால் கருதப்பட்டபோதிலும், எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பின்போது உன்னுடன் சேர்ந்து வருவதற்கு காப்பாளர் ஒருவரைக் கொண்டிருப்பது ஒரு நல்யோசனையாக இருக்கிறது. “எங்கள் மீது நம்பிக்கையில்லாததுபோல் இது தோன்றுகிறதே” என்று சில இளம் ஜோடிகள் குறைகூறுகின்றனர். ஒருவேளை அப்படியும் இருக்கலாம். ஒருவர் தன்னில்தானே நம்பிக்கை வைப்பது ஞானமாக இருக்கிறதா? நீதிமொழிகள் 28:26 நேரிடையாகச் சொல்கிறது: “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.” எதிர்பாலார் பழுகுவதற்கான சந்திப்பின்போது உங்களுடன் ஒருவரை அழைத்துச் செல்வதன் மூலம் ஞானமாக நடந்துகொள்ளுங்கள். “காப்பாளர் ஒருவரை தன்னுடன் அழைத்துக்கொண்டு வரும் ஒருவனை நான் உண்மையிலேயே போற்றுகிறேன். என்னைப் போலவே அவனும் கற்புடன் இருக்க விரும்புகிறான் என்பதை நான் அறிந்திருக்கிறேன்,” என்று தெரிவித்தாள் டெப்ரா. “நாங்கள் ஏதாவது தனியாகச் சொல்ல நினைத்தால் அதில் எதுவும் கஷ்டமில்லை, வெறுமென மற்றவருடைய காது கேட்காத தூரம் சென்றுவிடுவோம். இப்படி செய்வதில் எந்த ஒரு சங்கடமிருந்தாலும், அது கொடுக்கக்கூடிய பாதுகாப்பு மதிப்பு வாய்ந்தது.”

கடவுளுடன் நட்புறவு

எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளை உணர்வுகளையுடைய ஒரு மெய்யான நபராக அறிந்து, அவருடன் ஒரு நெருக்கமான நட்புறவை வளர்த்துக்கொள்வது அவரைப் புண்படுத்தக்கூடிய செயல்களைத் தவிர்ப்பதற்கு உங்களுக்கு உதவும். திட்டவட்டமான பிரச்னைகளைக் குறித்து அவரிடம் உங்களுடைய இருதயத்தை ஊற்றுவது அவரிடம் நெருங்கி வரும்படிச் செய்யும். கற்புடன் நிலைத்திருக்க விரும்பும் பெரும்பாலான காதல் ஜோடிகள் உணர்ச்சி வேகங்களால் தாக்கப்படும் சமயங்களில் தங்களுக்குத் தேவையான பலத்தை அருளும்படிக் கேட்பதற்கு கடவுளிடம் ஒன்றுசேர்ந்து ஜெபித்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு “அசாதாரணமான வல்லமையைக்” கொடுப்பதன் மூலம் யெகோவா தாராள மனதோடே பிரதிபலிக்கிறார். (2 கொரிந்தியர் 4:7, NW) ஆனால் நீங்களோ உங்களுடைய பாகத்தைச் செய்ய வேண்டும். இருப்பினும், கடவுளுடைய உதவியோடும் ஆசீர்வாதத்தோடும் பாலுறவு ஒழுக்கக்கேட்டிற்கு நீங்கள் மறுப்புத் தெரிவிப்பது கூடிய காரியமாக இருக்கிறது என்பதில் நிச்சயமாயிருங்கள்.

[அடிக்குறிப்புகள்]

a ஓர் ஆய்வின்படி, இந்தச் செயலானது திட்டமிடப்பட்டதாயில்லாமல் தற்செயலாகவே சம்பவித்திருப்பதாக 60 விழுக்காடு பெண்கள் சொன்னார்கள்

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻பாலுறவு சம்பந்தப்பட்டதில் யெகோவாவின் சட்டங்களை போற்றிப் பாதுகாக்க உங்களுக்கு உதவ நீங்கள் செய்யக்கூடிய சில காரியங்கள் யாவை?

◻விவாகத்துக்கு முன்னான பாலுறவு சம்பந்தமான உங்களுடைய கருத்தை உங்களுடைய நண்பர்கள் எப்படிப் பாதிக்கக்கூடும்?

◻எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பின்போது எச்சரிக்கை அவசியம் என்பதாக நீ ஏன் நினைக்கிறாய்?

◻பாலுறவு ஒழுக்கக்கேட்டில் விழுந்துவிடுவதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள விவாக நோக்குடன் பழகும் சந்திப்பில் ஈடுபடும் ஒரு ஜோடி செய்யக்கூடிய காரியங்கள் சில யாவை?

[பக்கம் 193-ன் சிறு குறிப்பு]

“சிறிதளவு கொஞ்ச நீங்கள் ஆரம்பிக்கிறீர்கள் . . . ”

[பக்கம் 194-ன் சிறு குறிப்பு]

விவாக நோக்குடன் பழகுகையில், உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாதிருப்பதன் மூலம் ஒழுக்கமற்ற நடத்தையை தவிர்த்திடுங்கள்

[பக்கம் 195-ன் பெட்டி/படங்கள்]

எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பின்போது கற்புள்ளவர்களாக நிலைத்திருத்தல்

கட்டியணைப்பதற்கும் கொஞ்சுவதற்கும் வழிநடத்தக்கூடிய சூழ்நிலைமைகளைத் தவிருங்கள்

தொகுதியாக பலருடன் இருக்கையில் எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபடுங்கள் அல்லது ஒரு காப்பாளரைக் கொண்டிருங்கள்

கட்டியெழுப்பக்கூடிய விதத்தில் சம்பாஷணைகளை வைத்துக்கொள்ளுங்கள்

ஆரம்பத்திலிருந்தே, நேசத்தை வெளிப்படுத்துவதன் பேரில் வரம்புகள் கொண்டிருப்பதைக் குறித்து உங்களுடைய மனநிலையை உன் கூட்டாளி அறியட்டும்

அடக்கமான விதத்தில் உடுத்துங்கள் மற்றும் பாலுணர்ச்சிகளைத் தூண்டிவிடும் செய்கைகளைத் தவிருங்கள்

உங்களுடைய கற்பு ஆபத்திலிருப்பதாக நீங்கள் உணருகையில் உங்களை வீட்டிற்குக் கொண்டுபோக கேட்டுக்கொள்ளுங்கள்

சீக்கிரமாக விடைபெற்றுக்கொள்ளுங்கள்

நேரத்தோடே சந்திப்புகளை முடித்துக்கொள்ளுங்கள்

[படங்கள்]

விவாக நோக்குடன் பழகும் ஒரு ஜோடி மற்ற ஆட்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்தாத நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்

[பக்கம் 196-ன் படம்]

உணர்ச்சி வேகம் “உச்சக்கட்டத்திற்குச்” செல்லும்போது மறுப்பு தெரிவி! அதற்கேற்ப செயல்படவும் அறிவுள்ளவனாயிரு!