Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் எதை வாசிக்கிறேன் என்பது ஒரு பொருட்டா?

நான் எதை வாசிக்கிறேன் என்பது ஒரு பொருட்டா?

அதிகாரம் 35

நான் எதை வாசிக்கிறேன் என்பது ஒரு பொருட்டா?

சாலொமோன் ராஜா எச்சரித்தான்: “அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.” (பிரசங்கி 12:12) சாலொமோன் வாசிப்பைக் குறித்து உற்சாகமிழக்கச் செய்ய முயன்றுக்கொண்டில்லை; நீங்கள் தெரிந்தெடுப்பவர்களாக இருக்கும்படியே ஆலோசனைச் சொல்லிக்கொண்டிருந்தான்.

பதினேழாவது நூற்றாண்டு ஃபிரான்ஸ் நாட்டு தத்துவ ஞானி ரெனெ டெஸ்கார்ட்டஸ் சொன்னார்: “ஒருவர் நல்ல புத்தகங்களை வாசிக்கும்பொழுது அது கடந்த காலத்தில் வாழ்ந்த நல்லொழுக்கமுள்ள மனிதர்களோடு ஓர் உரையாடலைக் கொண்டிருப்பதைப் போன்றிருக்கிறது. நாம் இதை ஒரு தெரிந்தெடுக்கப்பட்ட உரையாடல் என்றும்கூட அழைக்கலாம்; இதில் அந்த ஆசிரியர் தன்னுடைய மிக உயர்ந்த எண்ணங்களை மட்டுமே தெரிவிக்கிறார்.” இருப்பினும், எல்லா எழுத்தாளர்களும் ‘உரையாடுவதற்குத்’ தகைமை வாய்ந்தவர்களாக இல்லை, அவர்களுடைய எல்லா எண்ணங்களும் “உயர்ந்தவையாகவும்” இல்லை.

ஆகவே அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்ட பைபிள் நியமம் மறுபடியும் வருகிறது: “கெட்ட கூட்டுறவுகள் நல்ல பழக்கங்களைக் கெடுக்கும்.” (1 கொரிந்தியர் 15:33, NW) ஆம், நீங்கள் கூட்டுறவு கொள்ளும் ஆட்கள் உங்களுடைய ஆள்-தன்மையைக் கட்டியமைக்கக்கூடும். நீங்கள் உங்களுடைய நண்பரைப்போன்று செயல்படவும், பேசவும் மற்றும் சிந்திக்கவும் ஆரம்பித்ததை உங்களில் காணுமளவிற்கு ஒரு நண்பனோடு அவ்வளவு அதிகமான நேரத்தை எப்பொழுதாவது செலவழித்திருக்கிறீர்களா? ஒரு புத்தகத்தை வாசிப்பதானது அதை எழுதியவரோடு உரையாடுவதற்கு அநேக மணி நேரத்தைச் செலவழிப்பதைப் போன்றிருக்கிறது.

மத்தேயு 24:15-ல் இயேசு சொன்ன நியமம் பொருத்தமானது: “வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்.” நீங்கள் வாசிப்பதைப் பகுத்தாராயவும் சீர்தூக்கிப் பார்க்கவும் கற்றுக்கொள்ளுங்கள். எல்லா மனிதரும் ஓரளவு ஒருதலைப்பட்ச மனச்சாய்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் உண்மைகளை எடுத்துக்காட்டும் அவர்களுடைய விவரிப்பில் முற்றிலும் நேர்மையுள்ளவர்களாக இல்லை. ஆகவே, நீங்கள் வாசிக்கும் அல்லது செவிகொடுக்கும் ஒவ்வொரு காரியத்தையும் சந்தேகத்திற்கிடமளிக்காமல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”—நீதிமொழிகள் 14:15.

முக்கியமாக ஒரு வாழ்க்கைத் தத்துவத்தை விவரிக்கும் எந்த ஒரு காரியத்தையும் வாசிப்பதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். உதாரணமாக இளமைப் பருவத்தினருக்குரிய பத்திரிகைகள், எதிர்பாலாருடன் பழகுவதற்கான சந்திப்புகள் முதற்கொண்டு விவாகத்திற்கு முந்திய பாலுறவு வரை ஒவ்வொரு காரியத்தின்மீதும் ஆலோசனைகளால் நிறைந்திருக்கின்றன. இருப்பினும், அவையாவும் ஒரு கிறிஸ்தவன் பொருத்த வேண்டிய ஆலோசனைகள் அல்ல. மிக முக்கியமான தத்துவ ஞான கேள்விகளை ஆழ்ந்து சிந்திக்கும் புத்தகங்களைப் பற்றியதில் என்ன?

பைபிள் எச்சரிக்கிறது: “லெளகீக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைக் கொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியமத்தைப் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.” (கொலோசெயர் 2:8) பைபிளும், இந்தப் புத்தகத்தைப் போன்ற பைபிள் சார்ந்த பிரசுரங்களும் அவற்றைவிட மிகவும் மேம்பட்ட ஆலோசனையை அளிக்கின்றன.—2 தீமோத்தேயு 3:16.

காதல் நாவல்கள்—இவற்றை வாசிப்பது தீங்கற்றதா?

காதல் நாவல்களை வாசிப்பதானது ஐக்கிய மாகாணங்களில் மட்டும் சுமார் 2 கோடி ஆட்களுக்குச் சார்ந்திருக்கும் பழக்கமாக ஆகியிருக்கிறது. கடவுள்தாமே மனிதனிலும் மனுஷியிலும் நேசிக்கும் மற்றும் விவாகம் செய்துகொள்ளும் ஆவலை வைத்தார் என்பது உண்மைதான். (ஆதியாகமம் 1:27, 28; 2:23, 24) பெரும்பாலான கதைகளில் காதல் என்பது முக்கியத்துவப்படுத்திக் காட்டப்பட்டிருப்பது ஆச்சரியமாக இல்லை. இது கட்டாயமாக ஆட்சேபணைக்குரியதல்ல. சில காதல் நாவல்கள் சிறந்த இலக்கியத்தின் அந்தஸ்தையும்கூட பெற்றிருக்கின்றன. ஆனால் இந்தப் பழைய நாவல்கள் நவீன தராதரங்களின்படி கிளர்ச்சியூட்டுவதாக இல்லை என்று கருதப்படுவதால் எழுத்தாளர்கள் ஒரு புதுவகையான காதல் நாவல்களை உருவாக்குவதை ஆதாயமுள்ளதாகக் கண்டிருக்கின்றனர். சிலர் கதைக்கு நாடக பாணியையும் சூழ்நிலைக்கேற்ற உணர்வையும் ஊட்டுவதற்கு சரித்திர அல்லது இடைக்கால பின்னணி அமைப்புகளை இன்னமும் உபயோகிக்கிறார்கள். இருப்பினும், சிறிதளவு மாற்றங்களோடு, இந்த நவீன காதல் நாவல்கள் பெரும்பாலும் முன்கூட்டியே சொல்லமுடிந்த ஒருவகை முறையைப் பின்பற்றுகின்றன: கதாநாயகர்களும் கதாநாயகிகளும் தங்களுடைய தளிர்க்கும் காதலுக்கு அச்சுறுத்தும் கடினமான தடைகளைத் தாண்டிச் செல்வது.

உதாரணமாக, கதாநாயகன் பலமுள்ளவனாகவும், எளிதில் வளைந்துகொடுக்காதவனாகவும், தன்னம்பிக்கையை வெளிக்காட்டுபவனாகவும் இருக்கிறான். இருப்பினும், கதாநாயகி, மென்மையானவளும் மற்றும் பலவீனமுள்ளவளுமாக இருப்பதுபோலவும், கதாநாயகனுக்கு 10 அல்லது 15 ஆண்டுகள் சிறியவளாக இருப்பதுபோலவும் தோன்றச் செய்கிறார்கள். அவன் அடிக்கடி அவளை அவமதிப்பாக நடத்தியபோதிலும், அவள் அடக்க முடியாதளவுக்கு அவனிடமாக கவர்ந்திழுக்கப்படுகிறாள்.

அநேக சமயங்களில் ஒரு போட்டிக் காதலன் இருப்பான். அவன் தயவுள்ளவனாகவும் பரிவுள்ளவனாகவும் இருந்தபோதிலும், அவன் கதாநாயகிக்கு கிளர்ச்சியூட்டவோ அல்லது அவளுடைய ஆவலைத் தூண்டவோ தவறுகிறான். ஆகவே அவள் தன்னுடைய உணர்வற்ற கதாநாயகனை இளகிய ஆத்துமாவாக வார்க்க அவளுடைய வசீகரிக்கும் கவர்ச்சியை உபயோகிக்கிறாள், அவன் இப்பொழுது தன்னுடைய நிலைத்திருக்கும் காதலை வெளிப்படையாக அறிவிக்கிறான். முந்திய எல்லாச் சந்தேகங்களும் தீர்க்கப்பட்டு மன்னிக்கப்படுகிறது. அவர்கள் பேரின்பத்தோடு விவாகம் செய்துகொண்டு, எப்போதும் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.

அன்பு, காதல் கதைகள் போன்றிருக்கிறதா?

இத்தகைய கற்பனை நிறைந்த கதைகளை வாசிப்பதானது உங்களுடைய நிஜ தன்மையின் காட்சியை மறைத்துப் போடக்கூடுமா? தன்னுடைய 16 ஆவது வயதில் காதல் நாவல்களை வாசிக்க ஆரம்பித்த போன்னி என்ற பெண் நினைவு கூருகிறாள்: “உயரமான, கறுத்த நிறமுள்ள, அழகுள்ள இளம் மனிதனும், கிளர்ச்சியூட்டுகிறவனும், வீறாப்பான ஆள்தன்மைக் கொண்டிருக்கிறவனுமான இளம் மனிதனுக்காக நான் நாடினேன்.” அவள் ஒப்புக்கொண்டாள்: “நான் ஓர் இளம் மனிதனோடு பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபட்டு, அவன் முத்தமிடவும் தொடவும் மறுப்பானேயானால், அவன் பரிவுள்ளவனும் தயவுள்ளவனுமாக இருந்தபோதிலும், சுவாரஸ்யமில்லாதவன், நான் நாவல்களில் வாசித்திருந்த கிளர்ச்சியை விரும்பினேன்.”

போன்னி தன்னுடைய விவாகத்திற்குப் பிறகும் காதல் கதைகளைத் தொடர்ந்து வாசித்தாள். அவள் சொல்கிறாள்: “நான் ஒரு நல்ல வீட்டையும் குடும்பத்தையும் கொண்டிருந்தபோதிலும் அது எனக்குப் போதுமானதாக இருக்கவில்லை. . . . நாவல்களில் மிகவும் வசீகரமான விதத்தில் விவரிக்கப்பட்டிருந்த துணிவான செயலையும், கிளர்ச்சியையும் மற்றும் உணர்ச்சியைத் தூண்டும் காரியங்களையும் நான் விரும்பினேன். என்னுடைய விவாகத்தில் ஏதோவொன்று தவறாக இருந்ததாக நான் உணர்ந்தேன்.” இருப்பினும், கணவன் தன்னுடைய மனைவிக்குக் கவர்ச்சியை அல்லது “கிளர்ச்சியைக்” காட்டிலும் அதிகத்தை அளிக்க வேண்டும் என்பதை மதித்துணர போன்னிக்கு பைபிள் உதவியது. அது சொல்கிறது: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்பு கூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.”—எபேசியர் 5:28, 29.

காதல் நாவல்களுக்குப் பொதுவாகக் கொடுக்கப்படும் நடைமுறைக்கு ஒவ்வாத முடிவுகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை எளிதில் தீர்த்துக்கொள்ளுதல் போன்ற மையப் பொருள்களைக் குறித்ததில் என்ன? அவை நடைமுறைக்கு அப்பாற்பட்டவை. போன்னி நினைவுகூருகிறாள்: “என்னுடைய கணவரோடு நான் கருத்து வேறுபாட்டைக் கொண்டிருந்தபோது, அவரோடு அதைக் குறித்து பேசுவதற்குப் பதிலாக, கதாநாயகியால் பயன்படுத்தப்பட்ட தந்திரங்களை நான் பின்பற்றினேன். கதாநாயகன் பிரதிபலித்த விதமாக என்னுடைய கணவர் பிரதிபலிக்காதபோது, நான் கோபமடைந்தேன்.” மனைவிகளுக்கான பைபிளின் ஆலோசனை அதிக நடைமுறையானதாக இல்லையா? அது சொல்கிறது: “மனைவிகளே, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.”—கொலோசெயர் 3:18.

பாலுறவு சம்பந்தமான பொருளடக்கம்

அக்கறைக்குரியவிதமாக, பாலுறவு சம்பந்தமான காரியங்களை வெளிப்படையாக விவரிக்கும் காதல் கதைகள்—சில நகரங்களில் பொது நூலகங்களில் கிடைக்கின்றன—அவை வளரிளமைப் பருவவயதினரால் பெரும்பாலும் வேண்டப்படுபவை. அவை உங்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடுமா? 18 வயதான காரென் விவரிக்கிறாள்: “உண்மையிலேயே இந்தப் புத்தகங்கள் தீவிரமான பாலுறவு சம்பந்தமான உணர்வுகளையும் அதைக் குறித்து அறிந்துகொள்ளும் ஆவலையும் என்னில் தூண்டின. கதாநாயகனோடு கதாநாயகி உணர்ச்சி ததும்பும் சந்திப்புகளில் ஈடுபட்டு, பரவசமூட்டும் சுபிட்சமான உணர்வுகளை அனுபவித்தபோது, அத்தகைய உணர்வுகளை நானும் அனுபவிக்க விரும்பும்படி என்னைத் தூண்டியது,” அவள் தொடர்ந்து சொல்கிறாள்: “ஆகவே நான் எதிர்பாலாருடன் பழகும் சந்திப்புகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அத்தகைய உணர்வுகளை மறுபடியும் உண்டாக்க முயன்றேன். இது என்னை வேசித்தனம் செய்ய வழிநடத்தியது.” ஆனால் அவளுடைய அனுபவம், அவள் வாசித்திருந்த மற்றும் கற்பனை செய்திருந்த கதாநாயகிகளின் அனுபவத்தைப் போன்றிருந்ததா? காரென் கண்டுபிடித்தது: “இத்தகைய உணர்வுகள் எழுத்தாளர்களின் மனதில் தோன்றுபவை, அவை உண்மையானவை அல்ல.”

பாலுறவு சம்பந்தமான கற்பனைகளை உண்டாக்குவது உண்மையில் சில ஆசிரியர்களின் உள்நோக்கமாக இருக்கிறது. காதல் நாவல்கள் எழுதும் ஆசிரியர்களுக்குப் பிரசுரிப்பவர் ஒருவர் கொடுக்கும் ஆலோசனைகளைக் கவனியுங்கள்: “பாலுறவு சம்பந்தமான சந்திப்புகள் கதாநாயகனின் முத்தங்களாலும் அரவணைப்புகளாலும் எழுப்பப்படும் தீவிர ஆசை மற்றும் பாலுறவு சம்பந்தமான உணர்வுகள் மீது ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்.” காதல் கதைகள் “கிளர்ச்சியையும், உணர்ச்சியையும், ஆழ்ந்த உணர்ச்சி மற்றும் சிற்றின்பம் சம்பந்தமான பிரதிபலிப்பையும் வாசிப்போரில் உண்டாக்க வேண்டும்” என்று எழுத்தாளர்களுக்கு மேலுமாக ஆலோசனைக் கொடுக்கப்படுகிறது. தெளிவாகவே, இத்தகைய காரியங்களை வாசிப்பதானது, “விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயங்களை அழித்துப்போடுங்கள்” என்ற பைபிளின் எச்சரிப்பைப் பின்பற்ற ஒருவருக்கு உதவாது.—கொலோசெயர் 3:5.

தெரிந்தெடுப்பவர்களாக இருத்தல்

ஒழுக்கயீனமான உணர்வுகளை எழுப்பக்கூடிய அல்லது கற்பனையான எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய நாவல்களைத் தவிர்ப்பது சிறந்தது. அதை விட்டுவிட்டு, வரலாறு அல்லது விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட வேறு விதமான புத்தகங்களை வாசிக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது? கற்பனைக் கதைகள் வரம்புக்கப்பாற்பட்டவை என்பதன் நிமித்தம் அல்ல, ஏனென்றால் சில கற்பனைக் கதைகள் பொழுதுபோக்கானவையாக மட்டும் இல்லாமல் கல்வி புகட்டுபவையாகவும்கூட இருக்கின்றன. ஆனால் ஒரு நாவல் பாலுறவு, மிருகத்தனமான வன்முறை, மாயவித்தைப் பழக்கங்கள் போன்றவற்றையோ அல்லது பாலுறவு ஒழுக்கக்கேடுள்ள, இரக்கமில்லாத, அல்லது பேராசையான “கதாநாயகர்களை”யோ முக்கியத்துவப்படுத்திக் காட்டுமேயானால், நீங்கள் அதை வாசிப்பதில் உங்களுடைய நேரத்தை வீணாக்க வேண்டுமா?

ஆகவே கவனத்தோடு செயல்படுங்கள். ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கு முன்பு, அதனுடைய அட்டையையும் வெளி உறையையும் கவனியுங்கள்; அந்தப் புத்தகத்தைக் குறித்து ஆட்சேபணைக்குரிய ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள். முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தபோதிலும் ஒரு புத்தகம் ஆரோக்கியமற்றதாக தோன்றுமேயானால், அந்தப் புத்தகத்தை விலக்கிவிடுவதில் உறுதியாயிருங்கள்.

மாறாக, பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் வாசிப்பதானது உங்களுக்கு உதவியாக இருக்கும், தீங்கு விளைவிக்காது. உதாரணமாக, அடிக்கடி இளைஞர்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்கும் பாலுறவு சம்பந்தமான காரியத்தை மனதிலிருந்து விலக்க, பைபிள் வாசிப்பது தனக்கு உதவியது என்று ஒரு ஜப்பானிய பெண் சொல்கிறாள். “நான் எப்போதும் பைபிளை என்னுடைய படுக்கைக்கு அருகில் வைப்பேன். தூங்கச் செல்வதற்கு முன்பு அதை வாசிப்பதில் கவனமாயிருப்பேன்” என்று அவள் சொல்கிறாள். “நான் தனிமையில் இருக்கும்போதும் செய்வதற்கு ஒன்றும் இல்லாத சமயங்களிலும் (படுக்கை நேரம் போன்ற சமயங்கள்) என்னுடைய மனம் சில சமயங்களில் பாலுறவு சம்பந்தமாக திரும்புகிறது. ஆகவே பைபிளை வாசிப்பது உண்மையிலேயே எனக்கு உதவுகிறது!” ஆம், பைபிளில் எழுதப்பட்டிருக்கும் விசுவாசமுள்ள மக்களோடு “உரையாடுவது” உங்களுக்கு உண்மையான ஒழுக்கநெறி உணர்வை அளிப்பதோடுகூட உங்களுடைய சந்தோஷத்தையும் அதிகரிக்கும்.—ரோமர் 15:4.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ நீங்கள் வாசிக்கும் காரியத்தில் ஏன் தெரிந்தெடுத்து வாசிப்பவர்களாக இருக்க வேண்டும்?

◻ ஏன் காதல் நாவல்கள் அநேக இளைஞருக்குக் கவர்ச்சியூட்டுகின்றன? அவற்றின் ஆபத்துகள் யாவை?

◻ பொருத்தமான வாசிக்கும் புத்தகங்களை நீங்கள் எப்படி தெரிந்தெடுக்கக்கூடும்?

◻ பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் வாசிப்பதனால் கிடைக்கும் சில நன்மைகள் யாவை?

[பக்கம் 287-ன் சிறு குறிப்பு]

நான் ஒரு நல்ல வீட்டையும் குடும்பத்தையும் கொண்டிருந்தபோதிலும் அது எனக்குப் போதுமானதாக இருக்கவில்லை . . . நாவல்களில் மிகவும் வசீகரமான விதத்தில் விவரிக்கப்பட்டிருந்த துணிவான செயலையும், கிளர்ச்சியையும் மற்றும் உணர்ச்சியைத் தூண்டும் காரியங்களையும் நான் விரும்பினேன். என்னுடைய விவாகத்தில் ஏதோவொன்று தவறாக இருந்ததாக நான் உணர்ந்தேன்”

[பக்கம் 283-ன் படம்]

ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருப்பதன் காரணமாக நீ தெரிந்தெடுப்பவனாக இருக்கவேண்டும்

[பக்கம் 285-ன் படங்கள்]

காதல் நாவல்கள் வாசிப்பதற்கு பரவசமூட்டுவதாக இருக்கலாம், ஆனால் அன்பு, விவாகம் இவற்றின் பேரில் ஒழுக்கத்திற்கடுத்த கருத்துகளை அவை கற்பிக்கின்றனவா?