Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளை உடையவர்களாயிருப்பது—ஒரு பொறுப்பும் ஒரு பலனுமாம்

பிள்ளைகளை உடையவர்களாயிருப்பது—ஒரு பொறுப்பும் ஒரு பலனுமாம்

அதிகாரம் 7

பிள்ளைகளை உடையவர்களாயிருப்பது—ஒரு பொறுப்பும் ஒரு பலனுமாம்

பிள்ளைகளைப் பெற்றெடுத்தலானது மனக்கிளர்ச்சியடையவும் நிதான அமைதியடையவும் செய்கிற ஓர் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது மனிதவர்க்கத்திற்குள் நாள்தோறும் நடக்கிற ஒரு சம்பவமாக இருக்கிறதென்பது உண்மையே. என்றபோதிலும் ஒவ்வொரு பிறப்பும் வெகுவாய் வியப்புண்டாக்கும் கடுஞ் சிக்கலான செயல் முறைகளின் விளைவாக இருக்கிறது. இவற்றைப் பற்றி ஏதோ சிலவற்றை நாம் விளங்கிக் கொள்கையில், தேவாவியால் ஏவப்பட்ட சங்கீதக்காரன் பின்வருமாறு சொல்லும்படி ஏன் தூண்டப்பட்டான் என்பதை நாம் சற்று நன்றாக மதித்துணரக்கூடும்: “இதோ பிள்ளைகள் யெகோவாவினால் வரும் சுதந்தரம். கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.” (சங்கீதம் 127:3, தி.மொ.) என்ன நடக்கிறதென்பதைக் கவனியுங்கள்.

2ஆணிலிருந்து வரும் ஒரு விந்து உயிரணு பெண்ணிலுள்ள ஒரு கரு உயிரணுவுடன் ஒன்றாகச் சேர்ந்திணைகிறது. இந்த இரண்டு உயிரணுக்களும் ஒன்றாகி விடுகின்றன. இந்த ஒன்று பிரியத் தொடங்குகிறது. இது இரண்டாகிறது, அந்த இரண்டு நான்காகின்றன, அந்த நான்கு எட்டாகின்றன, கடைசியாக, இந்த ஓர் உயிரணு, ஒரு வளர்ந்த ஆளில், மதிப்பிடப்படுகிறபடி 60,000,00,00,00,000 (60 ஆயிரம் கோடி) உயிரணுக்களாகும் வரையாக இவ்வாறு நடக்கிறது! முதன் முதலில் இந்தப் புதிய உயிரணுக்களெல்லாம் ஒரே வகையானவையாக இருந்தன, பின்பு அவை—எலும்பு உயிரணுக்கள், தசை உயிரணுக்கள், நரம்பு உயிரணுக்கள், ஈரல் உயிரணுக்கள், கண் உயிரணுக்கள், தோல் உயிரணுக்கள், என்றவாறு மேலும் மேலுமான வெவ்வேறு வகைகளாக மாறத் தொடங்குகின்றன.

3இந்த இனப் பெருக்கு, வேறுபாடு பெருக்கு ஆகியவற்றின் விளங்காத மறை பொருட்களில் சில வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. என்றாலும் பல காரியங்கள் மறை பொருட்களாகவே இன்னும் இருந்து கொண்டிருக்கின்றன. அந்த முதல் உயிரணு பிரியத் தொடங்கும்படி செய்வது எது? இந்தப் பிரிதல் தொடர்ந்து கொண்டிருக்கையில் அந்த உயிரணுக்கள் வெவ்வேறுபட்ட பலவகைகளாக மாறத் தொடங்கும்படி செய்வது எது? இந்த வேறுபட்ட வகைகள், ஓர் ஈரல், ஒரு மூக்கு, ஒரு சிறிய கால்விரல் ஆகியவையாகும்படி விசேஷித்த உருவங்களிலும், பருமன்களிலும் இயக்கங்களிலும் தொகுதி தொகுதியாக ஒன்று சேர செய்வது எது? இந்த மாற்றங்கள் முன்னதாகவே திட்டமிடப்பட்ட காலங்களில் நிகழத் தொடங்குகின்றன. இந்தக் காலத் திட்டங்களை அடக்கியாளுவது எது? மேலும் தாயின் கருப்பையிலிருக்கும் இந்த வளர்ந்துகொண்டே வரும் கருமுளையானது, தாயினுடையதற்கு வேறுபட்ட பிறப்புமூல ஒழுங்கமைப்பையுடைய ஓர் உடலாயிருக்கிறது. தோலை இடம் மாற்றிப் பொருத்தி இணைப்பது அல்லது உறுப்புக்களை மற்ற ஆட்களின் உடலிலிருந்து எடுத்து இன்னொருவர் உடலில் பொருத்துவது ஆகியவற்றைப் போன்ற அந்நிய இழைமங்களை அவளுடைய உடல் இயல்பாய் ஏற்க மறுத்துத் தள்ளிவிடுகிறது. ஆனால் இந்தப் பிறப்பு மூல ஒழுங்கமைப்பின்படி அந்நியமாயிருக்கிற இந்தக் கருமுளையை இந்த உடல் ஏன் ஏற்காமல் தள்ளிவிடுகிறதில்லை, அதற்குப் பதிலாக ஏறக்குறைய 280 நாட்கள் அதை ஊட்டி வளர்க்கிறது?

4பெரும் வியப்புண்டாக்கும் இந்தச் செயல்கள் யாவும் கால அட்டவணையின்படி நடந்தேறுகின்றன, ஏனென்றால் அந்த விந்துவாலும் பெண்பாலணுவாலும் உருவாக்கப்பட்ட அந்த ஒரே உயிரணுவுக்குள் தானேயும் யெகோவா தேவன் அந்நிகழ்ச்சிகளுக்குரிய செயல் திட்டத்தை வரைந்திருந்தார். சங்கீதக்காரன் சிருஷ்டிகரிடம் பின்வருமாறு சொல்லுகிறபோது இதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறான்: “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது, என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.”—சங்கீதம் 139:16.

வளர்ச்சியும் பிறப்பும்

5இந்தக் கரு விரைவாக வளருகிறது. நான்காவது வாரத்திற்குள் அது, மூளை, நரம்பு மண்டலம், இரத்த மண்டலம் ஆகியவற்றை உடையதாயிருக்கிறது. மேலும் ஏற்கெனவே வைக்கப்பட்ட இரத்தக் குழாய்களின் மூலமாய் இருதயம் இரத்தத்தை இறைத்துக் கொண்டுமிருக்கிறது. ஆறு வாரங்களுக்கு உட்கருப்பையால் இரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது; பின்பு ஈரல் இந்த வேலையை எடுத்துக் கொள்ளுகிறது, கடைசியாக எலும்பு மச்சை இந்த வேலையை மேற்கொள்கிறது. ஐந்தாவது வாரத்தில் புயங்களும் கால்களும் உருவாகத் தொடங்குகின்றன; இன்னும் மூன்று வாரங்களில் கை விரல்களும் கால் விரல்களும் தோன்றுகின்றன. ஏழாவது வாரத்திற்குள், கண்கள், காதுகள், மூக்கு, வாய் ஆகியவற்றோடுகூட முக்கியமான தசைத் தொகுதிகளும் உருவாகி விடுகின்றன.

6யெகோவா தேவனிடம் பேசுகிறவனாய், இந்தச் சங்கீதக்காரன் மேலும் தொடர்ந்து: “நான் ஒளிப்பிடத்திலே . . . உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை,” என்று கூறுகிறான். (சங்கீதம் 139:15) ஒன்பதாம் வாரத்தில் எலும்புக்கூடு உருவாகையில் குருத்தெலும்பு எலும்பாக மாறுகிறது, மேலும், வளர்ந்து கொண்டுவரும் இந்தக் குழந்தை இப்பொழுது கரு என்பதற்குப் பதிலாகக் ‘கருப்பை சிசு’ என்று அழைக்கப்படுகிறது. “நீர்தாமே என் சிறுநீரகங்களை உருவாக்கினீர்.” (சங்கீதம் 139:13, NW) இதை ஆட்கொள்ளும் தெய்வீகச் செயல் முறைகள் நான்காவது மாதத்தில் நிறைவேறுகின்றன, இப்பொழுது இந்தச் சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டி தூய்மையாக்குகின்றன.

7இந்தப் பருவத்திற்குள்ளாக, இந்த வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தை அசையவும், திரும்பி சுருளவும் செய்கிறது அதன் உள்ளங்கை, அல்லது உள்ளங்கால் கூச்ச உணர்ச்சியை அடைகையில் தன் கைவிரல்களை அல்லது தன் கால்விரல்களை நெளிக்கிறது. பொருட்களை விரலையும் பெருவிரலையும் கொண்டு பிடிக்கிறது, தன் பெருவிரலைச் சப்புகிறது, இவ்வாறாக, பின்னால் தன் தாயின் மார்பில் பால் குடிப்பதற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய தசைகளுக்குப் பயிற்சியளிக்கிறது. அதற்கு விக்கல் எடுக்கிறது, இந்தக் குலுக்கலைத் தாய் உணருகிறாள். ஆறாவது மாதத்திற்குள் பல உறுப்புகள் நடைமுறையில் முழுமையாகிவிடுகின்றன. மூக்குத் துவாரங்கள் திறந்து விடுகின்றன, புருவங்கள் தோன்றிவிடுகின்றன, சீக்கிரத்தில் கண்கள் திறக்கும், காதுகள் இயங்கும், இவ்வாறாகக் கருப்பையிலுங்கூட அந்தச் சிசு பெரும் சத்தங்களால் திடுக்கிடக்கூடும்.

8நாற்பது வாரங்களில் பிள்ளைப்பேற்று வலி தொடங்குகிறது. தாயின் கருப்பை தசைகள் சுருங்குகின்றன, குழந்தை வெளியே உலகத்திற்குள் வரும் வழியில் இருக்கிறது. இந்தச் செயற்பாங்கில் அதன் தலை சில சமயங்களில் அமுக்கி உருகெடுக்கப்படுகிறது, என்றாலும், அதன் மண்டையோட்டு எலும்புகள் இன்னும் உறுதியாக ஒன்றுபட இணைப்படாமல் இருப்பதால், பிள்ளை பிறந்த பின்பு தலை அதன் இயல்பான உருவத்திற்குத் திரும்பவும் சரியாகிவிடுகிறது. இதுவரையாகத் தாய், அந்தக் குழந்தைக்காக எல்லாவற்றையும் செய்து வந்திருக்கிறாள்: பிராணவாயு, உணவு, பாதுகாப்பு, வெப்பம் ஆகியவற்றை அளிப்பதையும் மேலும் கழிவு பொருட்களை வெளியேற்றுவதையும் செய்து வந்திருந்தாள். இப்பொழுதோ குழந்தை இவற்றைத் தானே செய்ய வேண்டியதாயிருக்கிறது, விரைவில் செய்ய வேண்டும், அல்லது அது இறந்துவிடும்.

9நுரையீரல்கள் இரத்தத்திற்குள் பிராணவாயுவைச் செலுத்த குழந்தை சுவாசிக்கத் தொடங்க வேண்டும். ஆனால் இதைச் செய்ய மற்றொரு தீவிரமான மாற்றம் உடனடியாக நடந்தேற வேண்டும்: சுற்றி ஓடும் இரத்த ஓட்ட பாதை மாறவேண்டும்! கருப்பை சிசு கருப்பையில் இருந்தபோது அதனுடைய இருதயத்தின் சுவரில் ஒரு துவாரம் இருந்தது. இந்தச் சுவர் வலது மற்றும் இடது அறைகளைப் பிரித்து குழந்தையின் பெரும்பான்மையான இரத்தம் நுரையீரல்களை நோக்கி எப்பொழுதும் சென்று கொண்டிராதபடி வைத்து வந்தது. அவ்வாறு சென்று கொண்டிருந்த இரத்தத்தில் பெரும்பாகத்தை, நுரையீரல்களுக்குச் செல்லாதபடி ஒரு பெரிய இரத்தக் குழாய் பக்க வழியாய் எடுத்துச் சென்றது. கருப்பையில் இருக்கையில் ஏறக்குறைய 10 சதவீதமான இரத்தம் மாத்திரமே நுரையீரல்களின் வழியாய்ச் சென்றது; பிறந்த பின்பு எல்லா இரத்தமும் நுரையீரல்களின் வழியாய்ச் செல்ல வேண்டும். மேலும் உடனடியாக அவ்வாறு செல்ல வேண்டும்! இதை நிறைவேற்றுவதற்கு, குழந்தை பிறந்து ஒரு சில விநாடிகளுக்குள், அந்தப் பக்க வழியாய்ச் சென்ற அந்தப் பெரிய இரத்தக் குழாய் சுருங்கி ஒடுங்குகிறது, அதன் வழியாய்ச் சென்ற இரத்தம் இப்பொழுது நுரையீரலுக்குச் செல்லுகிறது. இதற்கிடையில், இருதயத்தின் சுவரில் இருந்த அந்தத் துவாரம் மூடிவிடுகிறது, இருதயத்தின் வலது பக்கத்திலிருந்து இறைக்கப்பட்ட எல்லா இரத்தமும் இப்பொழுது பிராணவாயு ஏற்றுவர நுரையீரல்களுக்குச் செல்லுகிறது. குழந்தை சுவாசிக்கிறது, இரத்தம் பிராணவாயு நிரப்பப்பட்டதாகிறது, வியப்பூட்டும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, குழந்தை உயிர் வாழ்கிறது! தேவாவியால் ஏவப்பட்ட சங்கீதக்காரன் அவ்வளவு அழகாய்ச் சுருக்கிச் சொல்லுகிற பிரகாரம்: “என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர், நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்.”—சங்கீதம் 139:13, 14.

10ஆ, எப்பேர்ப்பட்ட நன்றியறிதலுடன் இந்த விவாகத் தம்பதிகள் யெகோவா தந்த இந்தப் பரிசைக் கருதவேண்டும்! ஒரு மனித சிருஷ்டியை ஆம், இருவரின் பாகமாயிருக்கிற, என்றாலும் இருவரிலிருந்தும் வேறுபடுகிற ஒரு பிள்ளையை உண்டு பண்ணும் இந்த வல்லமையை! மெய்யாகவே, “யெகோவாவினால் வரும் சுதந்தரம்”!

இந்தச் “சுதந்தரத்தைக்” கவனித்துக் காப்பது

11பாலுறவுகள் விவாகத் தம்பதிகளுக்கே உரியதாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கவேண்டுமென்ற இந்தச் சட்டத்தை நிலை நாட்டும்படி யெகோவா தேவனைச் செய்வித்தது ஒழுக்க நெறி மட்டுமல்ல, பிள்ளைகள் பிறப்பதையுங்கூட அவர் மனதில் வைத்திருந்தார். ஒருவரையொருவர் நேசிக்கிற, மேலும் தங்கள் சந்ததியை நேசித்துப் பேணி, வளர்க்கக்கூடிய ஒரு தகப்பனும் தாயும் ஒரு பிள்ளைக்குத் தேவையாயிருக்கிறது. புதிதாகப் பிறந்த பிள்ளைக்கு வீட்டின் அனலும் பாதுகாப்பும் தேவையாயிருக்கிறது, அதோடு தன்னை விரும்பி, தன்னுடைய வளர்ச்சிக்கும் சுபாவத் தன்மையின் முன்னேற்றத்திற்கும் தேவையான சூழ்நிலைமையை அளிக்கும் ஒரு தகப்பனும் தாயும் தேவைப்படுகின்றனர். ஒரு குழந்தை வேண்டுமென்று எண்ணமிடுகிற ஒரு கணவனும் மனைவியும் தங்களைத் தாங்களே பின்வருமாறு கேட்டுக் கொள்ள வேண்டும்: நமக்கு ஒரு குழந்தை வேண்டுமா? அதன் தேவைகளை—உடல் சம்பந்தப்பட்டவற்றை மாத்திரமேயல்ல, உணர்ச்சி சம்பந்தமான மேலும் ஆவிக்குரிய பிரகாரமான தேவைகளையுங்கூட—நாம் அளிக்கக்கூடுமா? நாம் அதைச் சரியாய்ப் பயிற்றுவிப்போமா, அது பின்பற்றுவதற்குச் சரியான முன்மாதிரிகளை வைப்போமா? பெற்றோராவதனால் நமக்கு வரும் பொறுப்புகளை ஏற்கவும், அது உட்படுத்தும் தியாகங்களைச் செய்யவும் நாம் மனமுள்ளவர்களாக இருக்கிறோமா? நாம் பிள்ளைகளாயிருக்கையில், நம்முடைய பெற்றோர் நம்மைக் கட்டுப்படுத்தி வைத்ததாக நமக்குத் தோன்றியிருந்திருக்கலாம், ஆனால் நாம் பெற்றோராகையில், பிள்ளைகளை வளர்ப்பது உண்மையில் எவ்வளவு அதிக நேரத்தை எடுக்கும் திட்டமாயிருக்கிறதென்பதை நாம் காண்கிறோம். என்றபோதிலும் பெற்றோருக்கடுத்த பொறுப்புடன் கூட மிகுந்த சந்தோஷங்களும் வரக்கூடும்.

12பெற்றோராலோ இயற்கை செயற்பாடு சூழ்நிலைகளாலோ இந்தத் தீர்மானம் செய்யப்பட்டாய்விட்டது. மனைவியாகிய நீங்கள், கருத்தரித்திருக்கிறீர்கள். “யெகோவாவினால் வரும் சுதந்திரமாகிய” இதை நீங்கள் கவனித்துக் காப்பது தொடங்குகிறது. சில பொருட்களை நீங்கள் சாப்பிடவேண்டும், மற்றவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும் அல்லது மட்டுப்படுத்த வேண்டும். இரும்புச்சத்து a நிறைந்த உணவுகள் முக்கியமானவை, ஏனென்றால் கருப்பையில் குழந்தை, தன் பிறப்பிற்குப் பின் ஆறு மாதங்கள் வரையாக நிலைத்திருப்பதற்குப் போதுமான இரும்புச் சத்துவை சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறது. எலும்புகளைக் கட்டியமைப்பதற்கு உங்கள் குழந்தைக்குத் தேவைப்படுகிற சுண்ணாம்புச் சத்துவை அளிக்க உங்களுக்கு அதிகப்படியான பால் தேவை (பால்கட்டியுங்கூட நல்லது). மேலும் சமநிலையாய் மாவுப் பொருளை b உட்கொள்வது எடையில் மட்டுக்குமீறி அதிகரிப்பைத் தவிர்க்க உதவி செய்யும். நீங்கள் உங்கள் இருவருக்காகவும் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம் என்பது மெய்யே, என்றாலும் உங்களில் ஒருவர் மிக மிகச் சிறியவரே!

13நீங்கள் வாழும் முறையைச் சார்ந்ததாய், மற்ற அம்சங்களைக் கவனித்துப் பார்க்கலாம் அல்லது அதற்கு அவசியமிராது. வெறியூட்டும் குடிவகைகள் வெறியச் சத்துவை கருப்பை சிசுவுக்கு அனுப்புகிறது, ஆகையால் எச்சரிக்கை அவசியமாயிருக்கிறது, ஏனென்றால், மட்டுக்கு மீறியது, மனது மற்றும் உடல் சம்பந்த வளர்ச்சியைத் தடுத்து மந்தப் படுத்தக்கூடும். சில குழந்தைகள், தங்கள் தாய்மார்கள் கடும் குடிப்பழக்கமுடையோராய் இருந்ததன் காரணமாகக் குடிவெறியுற்றவையாய் பிறந்திருக்கின்றன. புகைத்தலானது கருப்பை சிசுவின் இரத்த ஓட்டத்திற்குள் புகையிலை நச்சுச் சத்துவைச் செலுத்துகிறது, மேலும் அதன் இரத்தத்தில் பிராணவாயுவுக்குப் பதிலாகக் கரிமோனாக்சைடு அதனிடத்தை எடுக்கும்படியும் செய்கிறது. இவ்வாறாக, அந்தச் சிசு பிறப்பதற்கு முன்பாகவேயுங்கூட, அது இயல்பான உடல் நலத்துடன் இருப்பதற்கான எதிர்பார்ப்புகள் சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதமாக்கப்படக்கூடும். தானாகவே ஏற்படுகிற கருச்சிதைவு, செத்துப் பிறக்கும் குழந்தைகள் ஆகியவை, புகைக்கும் பெண்களுக்குள்ளேயே மிக அடிக்கடி நடக்கின்றன. தாய் உட்கொண்ட, கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகச் செய்யும் வெறி மயக்கப் பொருட்கள், குழந்தை அந்தக் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக பிறக்கும்படி செய்யக்கூடும், மேலும் மருந்தாக உட்கொள்ளப்படும், கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகச் செய்யாத, சில போதைப் பொருட்களுங்கூட அபாயகரமாய் நிரூபிக்கக்கூடும். அநேகமாய்க் குழந்தையை முடமாக்கவுங்கூடும். மட்டுக்குமீறி காப்பி குடிப்பதுங்கூட ஏதோ சேதத்தை உண்டு பண்ணுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

14கூடுதலாக, தாயில் உணர்ச்சி சம்பந்தப்பட்ட நெருக்கடி அவளுடைய இயக்கு நீர் வேலையளவை மாற்றி, கருப்பையிலுள்ள சிசுவை மட்டுக்குமீறி சுறுசுறுப்பாக்கி, இதன் விளைவாக, புதிதாய்ப் பிறக்கும் பிள்ளை அமைதியற்றதாகவும் வெடுவெடுப்புள்ளதாகவும் இருக்கும்படி செய்விக்கக்கூடும். வளர்ந்து கொண்டிருக்கும் இந்தக் குழந்தை ‘அதன் தாயின் வயிற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டதாக’ இருக்கலாம். என்றாலும் அது தன்னைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்டதாய் இருக்கிறதென்று எண்ணுவது பிழையாக இருக்கும். தாயின் மூலமாய் அது பாதிக்கப்படக்கூடும்; அவளே, வெளியிலுள்ள உலகத்துடன் அதை இணைக்கும் அதன் ஒரே தொடர்பு இணைப்பாய் இருக்கிறாள், விளைவு நல்லதா கெட்டதா என்பதைக் குறித்ததில், இது அவளை முதல் நிலையாக “ஊர்தி ஓட்டுனரின் இருக்கையில்” வைக்கிறது. அவள் தன்னைத்தானே கவனிக்கும் முறையும் மேலும் சந்தர்ப்ப சூழ்நிலைமைகளுக்கு அவள் எப்படிப் பிரதிபலிக்கிறாள் என்பதும் இந்த வித்தியாசத்தை உண்டு பண்ணும். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் ஒத்துழைப்பு இதில் அவளுக்குத் தேவையாயிருக்கிறதென்பது, முக்கியமாய் தன்னுடைய கணவனின் அன்பும் கவனிப்பும் தேவைப்படுகிறதென்பது சொல்லாமலே தெரிந்து கொள்ளக்கூடியதாயிருக்கிறது.—1 சாமுவேல் 4:19-ஐ ஒத்துப்பாருங்கள்.

நீங்கள் செய்ய வேண்டிய தீர்மானங்கள்

15குழந்தை பிறப்பதை எங்கே வைத்துக் கொள்வீர்கள். மருத்துவமனையிலா வீட்டிலா? சிலருடைய காரியங்களில் ஒருவேளை தெரிவு செய்வதற்கு வாய்ப்பிராது. பல பகுதிகளில் மருத்துவமனைகள் இல்லாமலுங்கூட இருக்கலாம். மற்றப் பகுதிகளில் குழந்தை பிறப்பதை வீட்டில் வைத்துக் கொள்ளுவது அரிதாக இருக்கலாம், மேலும் மருத்துவச்சியைப் போன்ற அனுபவமுள்ள உதவி இல்லாமையின் காரணமாக எதிர்பாரா அபாய நிலைகள் ஏற்படக்கூடும். இயல்பான பிள்ளைப்பேறுவை நீங்கள் எதிர்பார்க்கக்கூடுமா அல்லது சிக்கல்களோடு கூடியதாக இருக்குமா என்பதை அறிய கருத்தரித்திருக்கும் காலத்தின்போது கூடியவரை ஒரு மருத்துவரால் சோதிக்கப்படுவது எப்பொழுதும் நல்லது.

16பேறு காலத்தின்போது மயக்க மருந்தை உட்கொள்ளப் போகிறீர்களா அல்லது இயல்பான பிள்ளைப் பேறுவைத் தெரிந்துகொள்வீர்களா? அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் சீர் தூக்கிப் பார்த்தப் பின்பு நீங்களும் உங்கள் கணவரும் தீர்மானிக்க வேண்டும். இயல்பான பிள்ளைப் பேறானது இந்த முக்கிய விளைவையுண்டாக்கும் சம்பவத்தில் கணவரை உட்படுத்தலாம். குழந்தை உடனடியாக அதன் தாயுடன் வைக்கப்படுகிறது. பிள்ளைப்பேறு சிக்கல்கள் இல்லாதிருக்குமென்று சோதனைகள் காட்டினால், இது கவலையுடன் சிந்திக்கப்பட வேண்டிய அனுகூலங்கள் என்பதாகச் சிலர் நம்புகிறார்கள். இயல்பான பிள்ளைப் பேற்றின் அந்தச் சமாதான நிலைமைகளின் கீழ் பிறந்த குழந்தைகள் குறைந்த உணர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும் குறைந்த உடல் உள சம்பந்தப்பட்ட நோய்களையும் உடையவையாக இருக்கின்றனவென்று சில ஆராய்ச்சியாளர்கள் விவாதிக்கிறார்கள்.

17இன்றைய உளவியல் என்ற ஆங்கில பத்திரிகை டிசம்பர் 1977-ன் வெளியீடு பின்வருமாறு கூறுகிறது:

“குழந்தையின் வாழ்க்கையின் அந்த முதல் ஆண்டு அவனுடைய பிந்திய மனோ மற்றும் உடல் வளர்ச்சியின் பேரில் நிலைத்திருக்கும் பயனை உடையதாயிருக்கக்கூடும் என்று உள நூல் வல்லுநர் பல பத்தாண்டுகளாக அறிந்திருக்கின்றனர். குழந்தையின் முதல் நாள்—ஒருவேளை அவனுடைய முதல் 60 நிமிடங்களுங்கூட—அதைப்போலவே மிக முக்கியமானதாயிருக்கிறதென்று தோன்றுகிறது. பிரசவத்திற்குப் பின்பு பிள்ளையினிடமாகத் தாய் உண்டாக்கும் உணர்ச்சி சம்பந்தப்பட்ட அன்பிணைப்பும், அவள் அவனுக்குக் கொடுக்கத் தொடங்குகிற அந்த வகையான கவனிப்பும், தனிப்பட்ட முறையில் முக்கியமானவையாக இருக்கின்றன. மேலும் அந்த முதல் மணி நேரங்கள் பிள்ளையினிடமாகத் தாயின் மனப்பான்மை, அவனிடமாக அவள் மேற்கொள்ளும் கடமைப் பொறுப்பின் உறுதி, தாய்மைப் பொறுப்பேற்பதற்கான அவளுடைய திறமை ஆகியவற்றை உருப்படுத்தியமைப்பதைக் குறித்ததில் மிக அதிகத்தைச் செய்பவையாக இருக்கின்றனவென்று சமீப ஆராய்ச்சிகள் தெளிவு படுத்திக் காட்டுகின்றன.

18பிரசவத்தின்போது தாய் பொதுவான மயக்க மருந்தை ஏற்காதிருப்பாளாகில், பிள்ளை விழிப்புடன் தன் கண்களைத் திறந்திருப்பதாக, சுற்றிலும் பார்த்து, அசைவுகளைப் பின்தொடர்ந்து, மனித குரல்கள் வருமிடமாகத் திரும்பும், முக்கியமாய் சற்று உயர் தொனியையுடைய பெண்ணின் குரலுக்கு உணர்வைத் தெரிவிக்கும். தாய்க்கும் பிள்ளைக்குமிடையில் கண் தொடர்பு விரைவில் நிலைநாட்டப்படக்கூடும். இது முக்கியமாயிருப்பதாகத் தோன்றுகிறது. சில ஆராய்ச்சிகளில், தாய்மார்கள் தங்கள் குழந்தை ஒருமுறை தங்களை நோக்கிப் பார்க்கத் தொடங்கினவுடனே தாங்கள் அதனிடம் வெகுவாய் நெருங்கியிருக்கும் உணர்ச்சியை அடைந்ததாக அறிவித்தனர். குழந்தை பிறந்தவுடனே தாயும் பிள்ளையும் உடலோடு உடல் தோலோடு தோல் தொடுவதாக நெருங்கியிருப்பது இருவருக்கும் பயன்தருவதாகக் கருதப்படுகிறது.

19மருத்துவமனைகளால் கவனிக்கப்படுகிற குழந்தைகளுக்கு உண்டாகிற பிரச்னைகள், சில சமயங்களில் குழந்தையினுடைய வாழ்க்கையின் முதல் சில மணி நேரங்களில் தோற்றத்தைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்படக்கூடுமென்று ஆராய்ச்சியாளர்கள் வற்புறுத்திக் கூறுகிறார்கள். பிறப்பின்போது, பொதுவான மருத்துவமனை கவனிப்பு முறை கொடுக்கப்பட்ட பிள்ளைகளையும் தங்கள் தாய்களுடன் உடனடியாக வைக்கப்பட்ட மற்றப் பிள்ளைகளையும் ஒத்துப் பார்த்தபோது, இயல்பான பிரசவத்தால் பிறந்த பிள்ளைகளே ஒரு மாதத்திற்குப் பின்பு மேம்பட்டவர்களாக இருந்தார்களென்று காட்டின. இன்றைய உளவியல் பின்வருமாறு கூறுகிறது: “இதற்கும் மேலாகக் கருத்தைக் கவருவதாய், தாய்மாருடன் நீடித்த தொடுநிலை கொடுக்கப்பட்ட பிள்ளைகள், ஐந்து வயதில், பொதுவான மருத்துவமனை முறைப்படி கவனிக்கப்பட்ட பிள்ளைகளைப் பார்க்கிலும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்த IQ, [அதாவது புத்திக் கூர்மையுடையவர்களாகவும்] மொழி பரீட்சைகளில் அதிக உயர்வான எண்களைப் பெற்றவர்களாகவும் இருந்தார்கள்.”

20என்றபோதிலும், இந்த எல்லாவற்றிலும் சந்தர்ப்ப சூழ்நிலைமைகள் கவனத்துடன் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டும். நம்முடைய முதல் மானிட பெற்றோர் நமக்கு அபூரணத்தையே பரம்பரை சொத்தாக விட்டுச் சென்றனர் என்ற இந்த உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. இது இன்று, “இயல்பான பிரசவத்திலிருந்து” அதன் இயல்பான தன்மைகளில் சிலவற்றைத் தவிர்க்க முடியாத வண்ணமாய்க் கொள்ளையிட்டு விடுகிறது. இவ்வாறு நம்முடைய சுதந்தரிக்கப்பட்ட குறைபாடுகள் சிக்கல்களை உண்டு பண்ணக்கூடும். (ஆதியாகமம் 3:16; 35:16-19; 38:27-29) உங்கள் தீர்மானங்கள் உங்களுடைய தனிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைமைகளாலும் உங்களுடைய காரியத்தில் எது மிக ஞானமானதென்று நம்புகிறீர்களோ அவற்றாலும் ஆட்கொள்ளப்பட்டும், மற்றவர்கள் “சிறந்த”தென்று குறிக்கோளாகக் கொண்டிருக்கிறதற்கு இசைய அது இருந்தாலும் சரி இராவிடினும் சரி, கவலையில்லை.

21உங்கள் குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் ஊட்டப் போகிறீர்களா? இதில் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பல அனுகூலங்கள் இருக்கின்றன. தாய்ப்பாலே குழந்தைகளுக்குப் பூரண உணவாயிருக்கிறது. அது செரிமானத்திற்கு எளிதாயிருக்கிறது, மேலும், தொற்றுநோய், குடல் சம்பந்த கோளாறுகள், சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஆகியவற்றிற்கு எதிராகவும் பாதுகாக்கிறது. முதல் ஒரு சில நாட்களுக்கு மார்பிலிருந்து வரும் முதற்பாலாகிய மஞ்சள் நிற திரவம் முக்கியமாய்ச் சிசுக்களுக்கு நல்லதாக இருக்கிறது ஏனென்றால் (1) அது கொழுப்புப் பொருட்களிலும் மாவுப் பொருட்களிலும் குறைவாக இருக்கிறது, ஆகவே எளிதில் செரிக்கக்கூடியதாயிருக்கிறது. (2) நோய்க்குட்படாதபடி தடுத்து வைக்கக்கூடிய அம்சங்கள் ஒரு சில நாட்களில் வரப்போகிற தாய்ப்பாலைப் பார்க்கிலும் இதிலேயே அதிக நிறைவாய் இருக்கின்றன. மேலும் (3) பிறப்பதற்கு முன்பாக இந்தச் சிசுவின் குடல்களுக்குள் சேர்ந்திருந்த அணுக்கள், சளி ஆகியவற்றை வெளிப்படுத்த உதவி செய்வதாய் இலேசாகக் குடலை இளக்குகிற பாதிப்பு இதற்கு இருக்கிறது.

22குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது தாய்க்கு நன்மை பயக்குகிறது. தாயில் இரத்தக் கசிவை இது குறைக்கிறது, ஏனென்றால் குழந்தை பாலைச் சப்புவது தாயின் கருப்பையைச் சுருங்கும்படி விரைவுபடுத்துகிறது. மேலும், இந்தச் சப்புதல் அதிகப் பாலை உண்டாக்கும்படி முலைகளைத் தூண்டி விரைவுபடுத்துகிறது. குழந்தைக்குக் கொடுக்கத் தங்களில் போதிய பால் இராதென்று பயந்த தாய்மார்கள் தங்களில் பாலுக்குக் குறைவில்லை என்று கண்டுபிடித்தார்கள். சிலருடைய காரியங்களில் ஒழுங்காய்த் தாய்ப்பாலை ஊட்டுவதானது பெண்பாலின் கருவணுக்கள் திரும்ப உண்டாகி மாதவிடாய் திரும்பத் தொடங்குவதைச் சிறிது காலந்தள்ளி வைக்கிறது, இவ்வாறு இந்த அளவுக்கு அது இயற்கை கருத்தடைக் கருவியாக இயங்குவதாயிருக்கிறது. “தாய்ப் பாலூட்டும் தாய்மார்களுக்குள் முலை புற்றுநோய் ஏற்படுவது குறைவாயிருப்பதாகக் காட்டுகிறது,” என்று அமெரிக்கன் புற்றுநோய் சங்கம் சொல்லுகிறது. தாய்ப்பால் ஊட்டுவதானது குடும்ப வரவு செலவு திட்டத்திற்கும் நன்மை பயக்குகிறது!

பிள்ளை வளர்ச்சி—இந்த அம்பை நீங்கள் எப்படிக் குறிபார்ப்பீர்கள்?

23“வாலிபத்தின் குமாரர் பராக்கிரமசாலி கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்கள். அவைகளால் தன் அம்பறாத் தூணியை நிரப்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான் [சந்தோஷமுள்ளவன், NW]”. (சங்கீதம் 127:4, 5, தி.மொ.) ஓர் அம்பின் மதிப்பானது அது வில்லைவிட்டுச் செல்கையில் எவ்வளவு நன்றாகக் குறிபார்க்கப்பட்டிருக்கிறதென்பனால் தீர்மானிக்கப்படுகிறது. ஓர் அம்பானது குறியிலக்கைத் தவறாமல் போய்க் குத்தும்படி கவனத்துடனும் திறமையுடனும் எறியப்பட வேண்டும். இதைப் போலவே, பெற்றோராக நீங்கள் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கப் போகிற வகையான வாழ்க்கைத் தொடக்கத்தின் பேரில் ஞானமாயும் ஜெபத்துடனும் நன்றாய் யோசித்துப் பார்க்க வேண்டியது மிக முக்கியம். அவன் அல்லது அவள் உங்கள் கவனிப்பை விட்டுச் செல்கையில் சமநிலையும் முதிர்ச்சியுமுள்ள முழு வளர்ச்சியடைந்தவனாக, மற்றவர்களால் மதிக்கப்படுகிறவனாகவும் கடவுளுக்குக் கனத்தைக் கொண்டு வருகிறவனாகவும் இருப்பானா அல்லது இருப்பாளா?

24குழந்தையின் கவனிப்பையும் பயிற்றுவிப்பையும் குறித்து அது பிறப்பதற்கு முன்பாகவே தீர்மானங்கள் செய்யப்பட வேண்டும். அடிப்படையாய்ப் பெற்றோரே முதற்பேறான குழந்தையின் முழு உலகமாக இருக்கின்றனர். அந்த உலகம் எப்படி இருக்கப்போகிறது? கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் பின்வரும் இந்த ஆலோசனையைப் பெற்றோர் தங்கள் இருதயத்திற்குள் ஏற்றிருக்கிறார்களென்று இது காட்டுமா: “சகல வித கசப்பும் மூர்க்கமும் கோபமும் கூக்குரலும் தூஷணமும் எவ்வித துர்க்குணத்தோடுங்கூட உங்களை விட்டு அகற்றப்படக்கடவது. ஒருவருக்கொருவர் தயாளமாயும் மன உருக்கமாயுமிருங்கள்; கிறிஸ்துவுக்குள் கடவுள் உங்களுக்கு மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்”? (எபேசியர் 4:31, 32, தி.மொ.) வீட்டு வாழ்க்கை எப்படிப்பட்டதாயிருக்கிறதோ அதுவே அந்தச் சின்னஞ்சிறு பிள்ளையில் பிரதிபலிக்கப்படும். உங்களுடைய குழந்தையின் உலகம் சமாதானமும் பாதுகாப்பும், அன்பும் அனலுமுள்ள ஒன்றாயிருக்கும்படி செய்ய முயலுங்கள். நெஞ்சார நேசிக்கப்படுகிற குழந்தை இந்தப் பண்புகளைத் தன்னில் உட்கொள்ளும், அவை அதன் உணர்ச்சிகளை அவற்றிற்கிசைய உருப்படுத்தியமைக்கும். உங்கள் உணர்ச்சிகளை அது உணர்ந்து கொள்ளும். உங்கள் முன்மாதிரிகளை அது பின்பற்றும். பிறப்பு மூலத்துக்குரிய நம்முடைய சிருஷ்டிகரின் சட்டங்கள், கருப்பையில் இந்தக் குழந்தையின் வளர்ச்சிக்காக அதிசயமான ஏற்பாடுகளைச் செய்திருந்தன; கருப்பைக்கு வெளியே நீங்கள் அதை எப்படி உருப்படுத்தியமைப்பீர்கள்? நீங்கள் ஏற்பாடு செய்யும் வீட்டு நிலைமைகளின் பேரில் அவ்வளவு அதிகம் சார்ந்திருக்கிறது. இது, உயிரணுவின் இணைமரபுக் கீற்றுகள் பாதிக்குமளவாகவே, அந்தக் குழந்தை என்ன வகையான ஆளாவான் என்பதைத் தீர்மானிக்கிறது. “நடக்கவேண்டிய வழியில் பிள்ளையைப் பழக்கு, முதிர்வயதிலும் அவன் அதை விடாதிருப்பான்.”—நீதிமொழிகள் 22:6, தி.மொ.

25ஓர் ஆணாகிலும் பெண்ணாகிலும் ஒரு தனி பசும்புல் இதழை உண்டுபண்ண முடியாது, ஆனால் இருவரும் ஒன்றாக அவர்கள் மற்றொரு மனிதனை ஆம், கருத்து வரம்பு கடந்த வண்ணமாய்ச் சிக்கல் வாய்ந்த, மேலும் பூமியிலுள்ள வேறு எந்த ஆளிலிருந்தும் வேறுபடுகிற ஒரு மனிதனை, உண்டு பண்ணக்கூடும்! ஆம், மலைத்துப் போக வைக்கும் ஒரு நிறைவேற்றமாயிருக்கிறது. என்றாலும், இது இவ்வளவு வியக்கத்தக்கதாயிருக்க, இன்று இத்தனையநேகம் பேர் இதோடு செல்கிற பொறுப்பின் பரிசுத்தத் தன்மையை நன்றியோடு மதித்துணரத் தவறுவது நம்புவதற்குக் கடினமாயிருக்கிறது! மக்கள் பூச் செடிகளை நட்டு, தண்ணீர் ஊற்றி அவற்றிற்கு உரம் போட்டு வளப்படுத்தி, களைகளைப் பறித்துப் பாதுகாக்கிறார்கள்—இதெல்லாம் ஓர் அழகிய தோட்டத்தை அடைவதற்கேயாகும். பிள்ளைகள் அழகியவர்களாவதற்கு நாம் அதைப் பார்க்கிலும் மிக அதிக நேரமும் முயற்சியும் எடுக்க வேண்டுமல்லவா?

26விவாகமான தம்பதிகள் பிள்ளைகளைக் கொண்டிருக்க உரிமையுடையவர்களாக இருக்கிறார்கள். அதற்குப் பொருத்தமாகவே அவர்களுடைய பிள்ளைகளும், வெறும் பெயரில் மட்டுமல்ல, உண்மையில் பெற்றோரைக் கொண்டிருக்கும் உரிமை உடையவர்களாக இருக்கிறார்கள். கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த ஒரு கிறிஸ்தவன், ஒருவரையாவது சீஷராக்க வேண்டுமென்ற நம்பிக்கையுடன் பைபிள் அறிவைப் பகிர்ந்து கொள்வதில் அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிடக்கூடும், என்றபோதிலும் எப்பொழுதும் வெற்றியடைகிறதில்லை. கிறிஸ்தவ பெற்றோர், ‘தங்கள் சொந்த பிள்ளைகளை யெகோவாவின் சிட்சையிலும் மனக் கட்டுப்பாட்டிலும் வளர்த்து வரும்படி’ அதைவிட அதிக நேரத்தை செலவிடவேண்டுமல்லவா? (எபேசியர் 6:4, NW) உயிரளிக்கிறவராகிய யெகோவா தேவனின் சிறந்த ஊழியனாக இருக்கும்படி ஒரு பிள்ளையை அவர்கள் வளர்த்து வருவார்களானால் அது வெகுவாக மகிழ்ந்து களிகூருவதற்குக் காரணமாயிருக்கிறதல்லவா? அப்பொழுது நிச்சயமாகவே, அந்த மகனை அல்லது மகளைத் தாங்கள் பெற்றெடுத்தது நிறைவாய்ப் பலன் தந்திருப்பதாக நிரூபிக்கும்.—நீதிமொழிகள் 23:24, 25.

27சங்கீதம் 128:3 பிள்ளைகளை ஒலிவச் செடிகளுக்கு ஒப்பிடுகிறது: “உன் வீட்டில் உன் மனைவி கனிதரும் திராட்சக் கொடிபோல் இருப்பாள்; உன் பந்தியைச் சுற்றிலும் உன் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல் இருப்பார்கள்.” (தி.மொ.) மரங்களைப் பழக்குவிப்பதன் மூலம் அவற்றைப் பல்வேறுபட்ட வழிகளில் உருப்படுத்தக்கூடும். சில மரங்கள் ஒரு மதிலையொட்டி தட்டையாக வளரும்படி செய்யப்படுகின்றன. மற்றவை தரைக்குமேல் தாழ்வாக விரிந்து பரவும்படி செய்யப்படுகின்றன. சில மரங்கள், ஜப்பானிய சிறு மரங்களைப் போன்று, அவற்றின் வேர்களைக் கத்தரித்து இறுக்கி வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவன் மூலம், சிறியவையாகவும் குட்டையாகவும் செய்யப்படுகின்றன. குழந்தையிலேயே கொடுக்கப்படும் பயிற்றுவிப்புங்கூட ஒரு பிள்ளையை எப்படி உருப்படுத்தி சீர்ப்படுத்தும் என்பதை அறிவுறுத்துவதாய் ஒரு பழமொழி பின்வருமாறு சொல்லுகிறது: “முளை எவ்வகையில் வளைந்திருக்கிறதோ அவ்வகையிலேயே மரமும் வளரும்.” ஒரு சமநிலையான மனப்பான்மை இங்கே தேவைப்படுகிறது. ஒருபுறத்தில் பிள்ளை நீதியுள்ள தராதரங்களுக்குப் பொருந்த நடக்கும்படி அதற்கு வழிநடத்துதல் தேவையாயிருக்கிறது. அதே சமயத்தில் அது வெளிப்படுத்த வேண்டிய சுபாவத்தன்மை இவ்வாறு தான் இருக்க வேண்டுமென்று பெற்றோர் முன்னதாகவே எண்ணி வைத்திருக்கும் ஏதோ ஒரு கற்பனை குறிக்கோளுக்கு இசைய பிள்ளை இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாது. ஓர் ஒலிவ மரம் அத்திப் பழங்களைக் கொடுக்கும்படி நீங்கள் செய்ய முடியாது. உங்கள் பிள்ளையைச் சரியான வழிகளில் பயிற்றுவியுங்கள், ஆனால், அதன் தனி மாதிரியான சுபாவமும் பரம்பரை வழியாய்ச் சுதந்தரித்த பண்பு திறமைகளும் இயல்பாய் வெளிப்படுத்தப்படுவதை அனுமதியாது முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட ஓர் உரு அச்சுக்குள் அதை வற்புறுத்தி உட்படுத்தாதீர்கள். நீங்கள் பிறப்பித்த இந்தப் பிள்ளையை அறிந்துகொள்ள உங்களுக்குக் காலத்தைக் கொடுங்கள். பின்பு, மென்மையான இளம் மரத்திற்குச் செய்வதைப் போல், உங்கள் பிள்ளையைச் சரியான போக்கில் பாதுகாத்து ஆதரிப்பதற்குப் போதிய பலமாயிருக்கிறதும், என்றபோதிலும் நன்மைக்கேதுவான அதன் முழு இயல் திறமையையும் பிள்ளை உபயோகித்து முன்னேற்றமடைவதை இறுக்கித் தடைப்படுத்தாதபடி போதிய கனிவானதாயிருக்கிறதுமான வழிநடத்துதலை அதற்குக் கொடுங்கள்.

யெகோவாவிடமிருந்து வந்த பலன்

28பூர்வ காலங்களிலிருந்த யாக்கோபு தன்னுடைய பிள்ளைகளின் கவனிப்புக்குத் தன்னுடைய கரிசனையைக் காட்டினான். ஒரு பயணத் திட்டம் முன் கொண்டு வரப்பட்டபோது, அதன் நடைவேகம் தன் பிள்ளைகளுக்குத் தாங்கக் கூடாததாக இருக்கலாமென்று யாக்கோபு உணர்ந்து, அதை எடுத்துரைத்தவனிடம் பின்வருமாறு கூறினான்: “பிள்ளைகள் இளம் பிள்ளைகள் என்றும், கறவையான ஆடு மாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம். என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னேபோம்; . . . எனக்கு முன் நடக்கிற மந்தைகளின் கால் நடைக்கும் பிள்ளைகளின் கால் நடைக்கும் தக்கதாக மெதுவாய் அவைகளை நடத்திக் கொண்டு வருகிறேன்.” இதற்கு முன்பாகத் தன் சகோதரனாகிய ஏசாவை சந்திக்கையில், “உன்னோடிருக்கிற இவர்கள் யார்?” என்று ஏசா கேட்டபோது, யாக்கோபு, பதிலாக “தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள்,” என்று சொன்னான். (ஆதியாகமம் 33:5, 13, 14) இன்று பெற்றோர், யாக்கோபு செய்ததைப் போல் தங்கள் பிள்ளைகளுக்கு இரக்கமுள்ள பரிவைக் காட்டவேண்டியது மட்டுமல்லாமல், அவன் அவர்களைக் கருதினதைப் போல்—யெகோவா அருளின தயவாகவும்—கருத வேண்டும். நிச்சயமாகவே, விவாகம் செய்வதற்கு முன்பாக, ஒரு மனிதன் தான் ஒரு மனைவியையும் பிள்ளைகளையும் ஆதரிக்கக்கூடுமா என்பதைக் கவலையுடன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். பைபிள் பின்வருமாறு புத்திமதி கூறுகிறது: “வெளியில் உன் வேலையை ஆயத்தஞ்செய்து வயலிலே செய்ய வேண்டியதை முடித்து பின்பு, உன் வீட்டைக் கட்டுவாய்.” (நீதிமொழிகள் 24:27, தி.மொ.) இந்த நடைமுறையான புத்திமதிக்கு இசைய ஒரு மனிதன் விவாகத்திற்கும் குடும்ப வாழ்க்கைக்குமுரிய ஆயத்தங்களை முன்னதாகவே செய்ய வேண்டும். அப்பொழுது, திட்டமிடப்படாத கர்ப்பம் தரித்தலுங்கூட மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படும், பண சம்பந்தப்பட்ட பாரமாக அஞ்சப்படாது.

29பிள்ளைகளைப் பெறும் இந்தக் காரியம் வெகு கவலையுடன் ஆழ்ந்து ஆலோசிக்கப்படுவதற்குத் தகுதியாயிருக்கிறதென்பது தெளிவாயிருக்கிறது. முதற்பேறுவைக் குறித்து மாத்திரமல்ல அதற்குப் பின் வரக்கூடிய குழந்தைகளைக் குறித்தும் இவ்வாறு சிந்தனை செலுத்த வேண்டும். தங்களுக்கு ஏற்கெனவே இருக்கிற பிள்ளைகளுக்கு உணவூட்டி, பராமரித்துப் பயிற்றுவிப்பதைப் பெற்றோர் கடினமாகக் காண்கிறார்களா? அப்படியானால் தங்கள் சிருஷ்டிகருக்கு மரியாதையும் அதோடுகூட அன்பாகிய இந்தத் தனிப்பண்பும், குடும்பத்தில் மேலுமான அதிகரிப்பைத் தாமதப்படுத்த தாங்கள் என்ன தன்னடக்கத்தைப் பிரயோகிக்கலாமென்று சிந்தித்துப் பார்க்கும்படி அவர்களை நிச்சயமாகவே தூண்டுவிக்கும்.

30உண்மையில், இந்தப் பிள்ளை யாருடையது? ஒரு கருத்தில் உங்களுடையது. ஆனால், மற்றொரு கருத்தில் இந்தப் பிள்ளை சிருஷ்டிகருக்கு உரியதாயிருக்கிறது. சிறு பிள்ளையாக நீங்கள் இருந்தபோது உங்கள் பெற்றோர் உங்களைப் பராமரிக்கும்படியான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களாக இருந்ததைப் போலவே, இந்தப் பிள்ளையைப் பராமரிக்கும்படியான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் பெற்றோர் வெறுமென தங்களுக்குப் பிரியமான ஏதோ ஒரு முறையில் உங்களை நடத்தும்படி நீங்கள் உண்மையில் உங்கள் பெற்றோரின் உடைமையாக இருக்கவில்லை; இந்தக் கருத்தில் உங்கள் பிள்ளையுங்கூட உங்கள் உடைமையாக இல்லை. கருத்தரிக்கும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தையோ, கருப்பையில் பிள்ளையின் வளர்ச்சியையோ பெற்றோர் வழிநடத்த அல்லது அடக்கியாள முடியாது. இதில் உட்பட்டுள்ள அதிசயமான வளர்ச்சி வழிமுறைகளை அவர்கள் பார்க்க அல்லது முழுவதும் விளங்கிக் கொள்ளவுங்கூட முடியாது. (சங்கீதம் 139:13, 15; பிரசங்கி 11:5) ஏதாவது உடல் சம்பந்தப்பட்ட அபூரணம் கருச்சிதைவை அல்லது பிள்ளை செத்துப் பிறப்பதை உண்டுபண்ணுகிறதென்றால் அவர்கள் அந்தச் செத்தப் பிள்ளையை உயிருக்குக் கொண்டு வர முடியாது. இவ்வாறாக, கடவுளே நம்மெல்லாருக்கும் உயிரளிக்கிறவர், நாமெல்லாரும் அவருக்கே உரியவர்கள் என்பதை மனத்தாழ்மையுடன் ஒப்புக் கொள்வது அவசியம்: “பூமியும் அதின் நிறைவும் உலகமும் அதின் குடிகளும் யெகோவாவினுடையவை.”—சங்கீதம் 24:1, தி.மொ.

31நீங்கள் இந்த உலகத்திற்குள் கொண்டு வருகிற பிள்ளைகளுக்காகப் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறீர்கள். மேலும் அவர்களை எப்படி வளர்க்கிறீர்கள் என்பதைக் குறித்ததில் நீங்கள் சிருஷ்டிகருக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாகவும் இருக்கிறீர்கள். அவர் இந்தப் பூமியைச் சிருஷ்டித்தார், அது குடியிருக்கப்பட வேண்டுமென்று நோக்கங்கொண்டார், மேலும் இந்த நோக்கத்தை நிறைவேற்றும்படி நம்முடைய முதல் பெற்றோரில் பிள்ளைகளைப் பிறப்பிக்கிற வல்லமையை முன்னேற்பாடு செய்து அமைத்தார். அவர்கள் அவரை விட்டு விலகிச் சென்றதே, வானத்திலும் பூமியிலும் சிருஷ்டிகளாலாகிய தம்முடைய குடும்பத்தின்பேரில் கடவுள் தம்முடைய பேரரசாட்சியை நேர்மையாய்ச் செலுத்துவதை எதிர்த்து சவால்விட்ட எதிரியின் சார்பில் அவர்களை வைத்தது. உங்கள் பிள்ளைகளைத் தங்கள் சிருஷ்டிகரிடமாக உத்தமத்தைக் காக்கும் ஆட்களாக வளரும்படி பயிற்றுவிப்பதன் மூலம், நீங்களும் உங்கள் குடும்பமும் அந்த எதிரியைப் பொய்யன் என்றும் யெகோவா தேவனே உண்மையுள்ளவரென்றும் நிரூபிக்கக்கூடும். நீதிமொழிகள் 27:11 சொல்லுகிற பிரகாரம்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.”

32உங்கள் பிள்ளைகளிடமாக உங்களுக்குள்ள கடமையை, கடவுளிடமாக உங்களுக்குள்ள பொறுப்போடுகூட நிறைவேற்றி வருவதானது, வாழ்க்கை, உண்மையான திருப்தியளிக்கும் ஒரு நிறைவேற்ற உணர்ச்சியை உங்களுக்குக் கொண்டுவரக்கூடும். சங்கீதம் 127:3 பின்வருமாறு சொல்வதோடு நீங்களும் முழு இருதயத்தோடுகூடிய நன்றியுணர்வுடன் சேர்ந்து கொள்ளக்கூடும்: “கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.”

[அடிக்குறிப்புகள்]

a இறைச்சிகள், பச்சை மற்றும் மஞ்சள் காய்கறிகள் போன்றவை.

b மாவுப் பொருள் நிறைந்த உணவுகள் மற்றும் சர்க்கரை மிகுதியாக அடங்கிய பொருட்கள் உட்பட்டவை.

[கேள்விகள்]

1-4. (எ) கருப்பையில் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றிய மிக வியக்கத்தக்க அம்சங்கள் சில யாவை? (பி) இந்தக் காரியங்களைப் பற்றிய அறிவு எப்படி சங்கீதம் 127:3-ஐ நன்றியுடன் மதித்துணர உங்களுக்கு உதவி செய்கிறது?

5-8. கர்ப்பந்தரித்து நான்காவது வாரமான முதற்கொண்டு குழந்தை பிறக்கும் வரையாக, கருப்பையில் நடந்து வரும் சில காரியங்கள் யாவை?

9. குழந்தை கருப்பைக்கு வெளியே வாழ்வதற்கு என்ன மாற்றங்கள் விரைவில் நடந்தேற வேண்டும்?

10. கருப்பையில் குழந்தையின் இந்த மிக வியக்கத்தக்க வளர்ச்சியை ஆழ்ந்து கவனிக்கையில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பற்றி எவ்வாறு உணரவேண்டும்?

11. ஒரு குடும்பத்தைத் தொடங்குவதைப் பற்றிச் சிந்தனை செய்து கொண்டிருக்கிறவர்கள் என்ன கேள்விகளைத் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும்? ஏன்?

12-14. ஒரு பெண் கருத்தரித்தவளாகையில், பின்வரும் காரியங்களைக் குறித்ததில், எப்படிக் குழந்தை ஆரோக்கியமுள்ளதாய் வளர்ந்து வருவதற்கு ஏதுவாகத் தன் பங்கைச் செய்யக்கூடும்: (எ) தன்னுடைய திட்டமான உணவு? (பி) சாராய வகை, புகையிலை, போதைப் பொருட்கள் ஆகியவற்றைத் தான் உபயோகிப்பது? (சி) தன் உணர்ச்சி வேகங்களை அடக்கியாளுவது?

15, 16. பேறுகாலத்தை எங்கே வைத்துக்கொள்ளப் போகிறீர்கள் எவ்வகையானதைத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் என்பவற்றைப் பற்றி என்ன தீர்மானங்கள் செய்யப்பட வேண்டியதாயிருக்கலாம்?

17-19. பிறந்தவுடன் கூடிய சீக்கிரத்தில் குழந்தை தாயுடன் இருப்பது உசிதம் என்பதைப் பற்றியதில் ஆராய்ச்சி என்ன வெளிப்படுத்தியிருக்கிறது?

20. இந்தக் காரியங்களில் ஞானமான தீர்மானம் செய்ய வேறு எதுவும் மனதில் வைக்கப்படவேண்டும்?

21, 22. தாய்ப்பால் ஊட்டுவதன் நன்மைகள் சில யாவை?

23. பிள்ளையைப் பயிற்றுவிப்பதைப் பற்றிய என்ன நியமங்கள் சங்கீதம் 127:4, 5-ல் குறிப்பாக உணர்த்தப்படுகின்றன?

24. (எ) பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன வகையான குடும்ப சூழ்நிலைமையை உண்டுபண்ண பிரயாசப்பட வேண்டும்? (பி) இது ஏன் முக்கியமானது?

25, 26. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அதிக நேரத்தையும் கவனத்தையும் கொடுப்பது ஏன் நியாயமானது?

27. பிள்ளையின் முன்னேற்றத்தை வழிநடத்துவதில் பிள்ளையின் சொந்தத் தனி சுபவாம் ஏன் கவனத்திற்குள் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்?

28. தன் பிள்ளைகளுக்காக யாக்கோபு கொண்டிருந்த அக்கறையைப் பற்றி ஆதியாகமம் 33:5, 13, 14-ல் சொல்லப்பட்டிருக்கிற விவரத்திலிருந்து நாம் எப்படி நன்மையடையக்கூடும்?

29. பிள்ளைகளைப் பெறும் இந்தக் காரியம் ஏன் முன்னதாகவே கவலையுடன் ஆழ்ந்து ஆலோசிக்கப்பட வேண்டும்?

30. (எ) ஒரு பிள்ளை உண்மையில் கடவுளுக்கு உரியதாயிருக்கிறதென்று நாம் ஏன் சொல்லக்கூடும்? (பி) இது பெற்றோரின் நோக்குநிலையை எப்படிப் பாதிக்க வேண்டும்?

31, 32. (எ) பெற்றோர் கடவுளுக்கு முன்பாக என்ன பொறுப்பை உடையவர்களாக இருக்கிறார்கள்? (பி) இந்தப் பொறுப்பைச் சரியானபடி நிறைவேற்றி வருவதனால் உண்டாகும் பலன் என்ன?

[பக்கம் 93-ன் படம்]

இப்பொழுது நெருங்கியிருத்தல் பிற்காலத்தில் சந்ததிப் பிளவைத் தவிர்க்கிறது