Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பேச்சுத்தொடர்புகொள்ளும் வழிகள் திறந்திருக்கச் செய்யுங்கள்

பேச்சுத்தொடர்புகொள்ளும் வழிகள் திறந்திருக்கச் செய்யுங்கள்

அதிகாரம் 11

பேச்சுத்தொடர்புகொள்ளும் வழிகள் திறந்திருக்கச் செய்யுங்கள்

பேச்சுத்தொடர்பு என்பது வெறுமென பேசுவதைப் பார்க்கிலும் அதிகத்தைக் குறிக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் சொன்ன பிரகாரம்: பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறவனுக்கு உங்கள் வார்த்தைகள் விளங்குகிறதில்லையென்றால் “ஆகாயத்தை நோக்கிப் பேசுகிறவர்களாயிருப்பீர்கள்.” (1 கொரிந்தியர் 14:9, தி.மொ.) நீங்கள் சொல்வது உங்கள் பிள்ளைகளால் விளங்கிக் கொள்ளப்படுகிறதா, மேலும் அவர்கள் உங்களுக்குச் சொல்ல முயன்று கொண்டிருப்பதை நீங்கள் உண்மையில் விளங்கிக் கொள்ளுகிறீர்களா?

2மெய்யான பேச்சுத்தொடர்புக்கு எண்ணங்களும், அபிப்பிராயங்களும், உணர்ச்சிகளும் ஒரு மனதிலிருந்து மற்றொரு மனதுக்கு ஊடுகடத்தியனுப்புவது இருக்க வேண்டும். அன்பு சந்தோஷமான குடும்ப வாழ்க்கையின் இருதயமென்று அழைக்கப்படலாமென்றால், அப்பொழுது பேச்சுத்தொடர்பானது அதன் உயிர் இரத்தம் என்று அழைக்கப்படலாம். விவாகத் துணைவர்களுக்கிடையில் பேச்சுத்தொடர்பில் முறிவுகள் ஏற்படுவது தொந்தரவை விளைவிக்கும்; பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இது ஏற்படுகையில் அதற்குச் சமமாகவே, இன்னும் அதிகமாகவே கவலைக்கிடமானதாய் இருக்கிறது.

தூரமாய்ப் பார்வையைச் செலுத்துதல்

3பெற்றோருக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் இடையில் பேச்சுத்தொடர்பு வழிகளில் மிக அதிக நெருக்கடிகள் உண்டாவது, பிள்ளையுடைய வாழ்க்கையின் தொடக்க ஆண்டுகளின் போதல்ல, “இளம் வாலிபப் பருவத்திலேயே”—பதின்மூன்றிலிருந்து பத்தொன்பது வரையான ஆண்டுகளின்போதே—இவ்வாறு இருக்கப்போகிறதென்பதைப் பெற்றோர் கண்டுணர வேண்டும். தங்கள் பிள்ளைகளுடைய வாழ்க்கையின் தொடக்க ஆண்டுகள் சம்பந்தப்பட்ட வரையில் தொந்தரவுகள் இல்லாமல் இருந்ததனால், அந்தப் பிற்பட்ட ஆண்டுகளுங்கூட அவ்வாறு இருக்குமென்று அவர்கள் எதிர்பார்ப்பது நடைமுறையான உண்மையாயிராது. பிரச்னைகள் நிச்சயமாய் வரும், தெளிவான, பலன் தரத்தக்கப் பேச்சுத்தொடர்பு, அவற்றைத் தீர்ப்பதில் அல்லது குறைப்பதில் முக்கிய அம்சமாய் இருக்கக்கூடும். இதைத் தெளிவாக உணருகிறவர்களாய், பெற்றோர் முன்னால் நோக்க வேண்டும், முன்னதாகவே சிந்தனை செய்யவேண்டும், “ஏனெனில், ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது.”—பிரசங்கி 7:8.

4குடும்பப் பேச்சுத்தொடர்பு வழிகளை நிலைநாட்டி, கட்டியெழுப்பி, இயங்கிக் கொண்டிருக்க வைப்பதில் பல காரியங்கள் செல்லுகின்றன. கணவனும் மனைவியும் பற்றுறுதி, நம்பிக்கையுறுதி ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றைப் பல ஆண்டுகளினூடே படிப்படியாய் ஆழமாக்கி வரக்கூடும்; இது பேச்சுத்தொடர்பை வார்த்தைகளில்லாமலேயுங்கூட கூடியதாக்குகிறது—ஒரு பார்வைதானேயும், ஒரு புன்சிரிப்பு அல்லது ஒரு தொடுதல் தானேயும் அவர்களுக்கு மிகப் பேரளவானவற்றைப் பேசக்கூடும். தங்கள் பிள்ளைகளுடனும் இதே வகை பேச்சுத்தொடர்புக்குரிய உறுதியான ஆதாரத்தைக் கட்டியெழுப்ப அவர்கள் நோக்கமுடையவர்களாக இருக்க வேண்டும். ஒரு குழந்தையானது, பேச்சை விளங்கிக் கொள்வதற்கு முன்பாகப் பெற்றோர், பாதுகாப்புக்குரிய மற்றும் அன்புக்குரிய உணர்ச்சிகளை அதற்குத் தெரிவிக்கிறார்கள். பிள்ளைகள் வளர்ந்து கொண்டு வருகையில், குடும்பம் ஒன்றாக வேலைசெய்தும், விளையாடியும், மேலும் இவற்றிற்கு மேலாக ஒன்றாகக் கடவுளை வணங்கியும் வருகிறதென்றால், அப்பொழுது உறுதியான பேச்சுத்தொடர்பு வழிகள் நிலைநாட்டப்பட்டு வருகின்றன. என்றபோதிலும் இந்த வாய்ப்பு வழிகளைத் திறந்தவையாகவும் இயங்கிக் கொண்டிருக்கவும் வைத்து வருவது உண்மையான பிரயாசத்தையும் ஞானத்தையும் கேட்பதாயிருக்கிறது.

தன் மனதில் உள்ளவற்றைத் தெரிவிக்கும்படி உங்கள் பிள்ளையை ஊக்குவியுங்கள்

5“பிள்ளைகள் காணப்பட வேண்டும் கேட்கப்படக்கூடாது,” என்பது முதுமொழியாய் இருக்கிறது. சில சமயங்களில் இது உண்மையே. கடவுளுடைய வார்த்தை சொல்லுகிற பிரகாரம், “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு,” என்பதைப் பிள்ளைகள் கற்றுக் கொள்வது அவசியம். (பிரசங்கி 3:7) ஆனால் பிள்ளைகள் தாங்கள் கவனிக்கப்பட வேண்டுமென்ற ஆவல் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகள் தாராளமாய் மனம்விட்டுப் பேசுவதை அவசியமில்லாமல் அடக்கி வைக்காதபடி பெற்றோர் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். அனுபவங்களுக்குச் சிறு பிள்ளை பிரதிபலிப்பது பெரியவர்களின் பிரதிபலிப்பைப் போலவே இருக்கும்படி எதிர்பார்க்காதீர்கள். பெரியவன் ஒரு தனி சம்பவத்தை வாழ்க்கையின் மிகப் பரந்த காட்சியில் ஒரு சிறு பாகமாகத்தானே காண்கிறான். பிள்ளையோவெனில் உடனடியாகக் கவனத்தைக் கவரும் ஏதோ காரியத்தைப் பற்றி மிக ஆர்வ கிளர்ச்சியுற்றவனாய்த் தன்னை மறந்து அதில் முற்றிலும் ஆழ்ந்திருப்பவனாக, அநேகமாய் மற்ற எல்லாவற்றையுமே மறந்து விடுகிறான். ஒரு சிறு பிள்ளை அறைக்குள் திடீரென்று நுழைந்து ஏதோ நிகழ்ச்சியைப் பற்றி தன் தகப்பனிடமோ தாயிடமோ ஆர்வ உணர்ச்சியுடன் சொல்லத் தொடங்கக்கூடும். அந்தத் தகப்பனோ தாயோ, “பேசுவதை நிறுத்து!” என்றோ அல்லது வேறு ஏதோ கோப வார்த்தைகளைக் கோப எரிச்சலுடன் சொல்லி நிறுத்துவாராகில், பிள்ளையின் ஆர்வம் தணிந்து நொறுக்கப்பட்டதாகும். பிள்ளைத்தன பேச்சு அதிகக் கருத்துள்ளதாய் ஒருவேளை தோன்றாது. ஆனால், உங்கள் பிள்ளைகள் தங்கள் மனதில் உள்ளதை இயல்பாய் வெளிப்படுத்திக் கூறும்படி அவர்களை உற்சாகப்படுத்துவதன் மூலம், பின்னால் அவர்களுடைய வாழ்க்கையில் நீங்கள் அறிய விரும்புவதும், அவசியம் அறிய வேண்டியதுமான காரியங்களை அவர்கள் வெளிப்படுத்தாமல் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வதை நீங்கள் தவிர்க்கக்கூடும்.

6நல்ல பேச்சுத்தொடர்புக்குப் பண்பட்ட தன்மையும் மரியாதையும் உதவி செய்கிறது. பிள்ளைகள் பண்பட்டவர்களாக இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும், பெற்றோர் பிள்ளைகளுடன் கொள்ளும் தங்கள் சொந்த பேச்சுத்தொடர்பிலும் அதோடு கூட மற்ற வழிகளிலும் அவர்களுக்கு முன்மாதிரியை வைக்கவேண்டும். கண்டித்தல் அவசியமாயிருக்கும், தேவைப்படுகையில் அது கொடுக்கப்படவேண்டும், கடுமையாகவுங்கூட கொடுக்கப்பட வேண்டியதாயிருக்கலாம். (நீதிமொழிகள் 3:11, 12; 15:31, 32; தீத்து 1:13) என்றபோதிலும், பிள்ளைகள் பழக்கமாய் அடக்கப்பட்டு, இடைவிடாமல் திருத்தப்பட்டு அல்லது, அதற்கும் மோசமாக, அவர்கள் பேசுகையில் தகப்பனால் அல்லது தாயால் அவர்கள் பழித்துரைக்கப்பட்டு, மேலும் ஏளனமாகக் கேலி செய்யப்பட்டுங்கூட வந்தால், அவர்கள் அநேகமாய் பெற்றோரை அணுகுவதில் பின்வாங்குபவர்களாக இருப்பார்கள்—அல்லது தாங்கள் பேசவிரும்புகையில் வேறு எவரிடமாவது அவர்கள் செல்வார்கள். மகனோ மகளோ பெரியவர்களாக வளரும்போது அதிகமாய் இவ்வாறு நடக்கும். பின்வருமாறு நீங்கள் செய்து பாருங்கள்—இந்த நாளின் முடிவில் சற்று நின்று உங்கள் மகன் அல்லது மகளிடம் நீங்கள் செய்த உங்கள் உரையாடல்களைத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து பாருங்கள். பின்பு உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக் கொள்ளுங்கள்: நன்றியுணர்வை, ஊக்கமூட்டுதலை பாராட்டுதலை அல்லது போற்றுதலைத் தெரிவித்த காரியங்களை நான் எத்தனை தடவைகள் சொன்னேன்? மறுபட்சத்தில் இவற்றிற்கு எதிரிடையானவற்றை மறைமுகமாகக் குறிப்பிட்ட காரியங்களை, ‘அவனை அல்லது அவளைத் தாழ்த்தும்’ பாங்குள்ளவற்றை, திருப்தியில்லாமையை, எரிச்சலை அல்லது மனக்கசப்பைக் குறிப்பாகத் தெரிவித்தவற்றை நான் எத்தனை தடவைகள் சொன்னேன்? இவற்றை நீங்கள் திரும்ப நினைவுபடுத்திப் பார்ப்பது வெளிப்படுத்துகிறவற்றால் நீங்கள் வெகுவாய் வியப்படையக்கூடும்.’—நீதிமொழிகள் 12:18.

7பெற்றோருக்குப் பொறுமையும் தன்னடக்கமும் அடிக்கடி தேவைப்படுகிறது. வாலிபர்கள் சிந்திக்காமல் செயலாற்றும் போக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். சிந்தியாமல், தங்கள் மனதில் உள்ளவற்றை அவர்கள் உளறிக் கொட்டக்கூடும், ஒருவேளை பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அவ்வாறு குறுக்கிட்டுப் பேசக்கூடும். தகப்பனோ தாயோ அந்த இளைஞனை உடனடியாக அதட்டக்கூடும். என்றாலும் சில சமயங்களில் சாந்தமாகச் செவிகொடுத்துக் கேட்டு, இவ்வாறு தன்னடக்கத்தின் ஒரு முன்மாதிரியை அளிப்பது ஞானமாய் இருக்கலாம், பின்பு, சுருக்கமாய்ப் பதிலளித்து, அவன் மரியாதையாகவும் கரிசனையோடு கூடிய சிந்தனையுள்ளவனாகவும் இருக்க வேண்டிய அவசியத்தைப் பிள்ளைக்குத் தயவுடன் நினைப்பூட்டுங்கள். ஆகையால், மறுபடியுமாக இங்கேயும், “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும் கோபிக்கிறதற்குத் தாமதமாயும்” இருக்கும்படி கூறும் ஆலோசனை பொருந்தக்கூடியதாய் இருக்கிறது.—யாக்கோபு 1:19.

8உங்கள் பிள்ளைகளுக்குப் பிரச்னைகள் ஏற்படுகையில் உங்கள் வழிநடத்துதலைத் தேடும்படி அவர்கள் தூண்டப்படுகிறவர்களாக உணர வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். வாழ்க்கையில் நீங்களுங்கூட வழிநடத்துதலைத் தேடுகிறீர்கள், உங்களுக்குங்கூட ஒருவர் இருக்கிறார், அவரிடமாக நீங்கள் கீழ்ப்படிதலுடன் நோக்குகிறீர்கள் என்பதைக் காட்டுவதன் மூலம் இதைச் செய்ய நீங்கள் அவர்களை ஊக்குவிக்கலாம். தன்னுடைய பிள்ளைகள் இன்னும் சிறியவர்களாக இருக்கையிலேயே அவர்களுடன் நல்ல பேச்சுத்தொடர்பை தான் நிலைநாட்டுகிற ஒரு முறையைப் பற்றிக் கூறுபவராய் ஒரு தகப்பன் பின்வருமாறு சொன்னார்:

“ஏறக்குறைய ஒவ்வொரு இரவும் படுக்கைக்குப் போகும் நேரத்தில் நான் பிள்ளைகளுடன் ஜெபிக்கிறேன். அவர்கள் பொதுவாய்த் தங்கள் படுக்கையில் இருப்பார்கள், நான் அதன் அருகில் முழங்கால் படியிட்டு அவர்களை என் புயங்களில் அரவணைத்துக் கொள்வேன். நான் ஜெபம் செய்வேன். அநேக தடவைகளில் அதற்குப்பின் அவர்கள் ஜெபம் செய்வார்கள். அவர்கள் என்னை முத்தம் செய்து, ‘அப்பா, நான் உங்களை நேசிக்கிறேன்,’ என்று சொல்லி, பின்பு தங்கள் இருதயத்திலுள்ள ஏதோவொன்றை வெளிப்படுத்துவது அவர்களுக்குச் சாதாரணமாயிருக்கிறது. தங்கள் படுக்கையின் அனலிலும் தங்கள் தகப்பனின் அரவணைப்பின் பாதுகாப்பிலும், அவர்கள் தங்களுக்கு உதவி தேவைப்படுகிற ஏதோ தனிப்பட்ட பிரச்னையைச் சொல்வார்கள் அல்லது பாச உணர்ச்சியை எவ்வாறாவது வெளிப்படுத்திக் காட்டுவார்கள்.”

சாப்பாட்டு நேரங்களிலும் மற்றச் சந்தர்ப்பங்களிலும், உங்கள் ஜெபங்கள்—ஒரே விதமானதாய் இல்லாமல் உள்ளத்திலுள்ளவற்றை வெளிப்படுத்துபவையாய், இருதயத்திலிருந்து பேசப்பட்டு உங்கள் பரலோக சிருஷ்டிகரும் தகப்பனுமானவருடன் உண்மையான தனிப்பட்ட உறவை பிரதிபலிப்பதாய் இருக்கிறதென்றால், இது உங்கள் பிள்ளையுடன் ஆரோக்கியமான உறவு கொண்டிருப்பதற்கு அளவிட முடியாத வண்ணமாய்த் தன் பங்கைச் செய்யும்.—1 யோவான் 3:21; 4:17, 18.

மாறும் பருவ ஆண்டுகள்

9வளரிளமையானது, அல்லது வளரும் இளமை பருவமானது, பருவம் மாறும் ஒரு காலமாயிருக்கிறது, உங்கள் மகன் அல்லது மகள் இனிமேலும் சிறுபிள்ளையாய் இல்லை. என்றாலும் இன்னும் முழு வளர்ச்சியடைந்தவனாகவும் இல்லை. பருவ வயதிலிருக்கும் பிள்ளையின் உடல், மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டிருக்கிறது, இது உணர்ச்சி வேகங்களைப் பாதிக்கிறது. பருவ வயதில் இருப்பவர்களின் பிரச்னைகளும் தேவைகளும் முதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட பருவத்தினருக்கு இருக்கும் பிரச்னைகளிலிருந்தும் தேவைகளிலிருந்தும் வேறுபடுகின்றன. ஆகையால் இந்தப் பிரச்னைகளையும் தேவைகளையும் கையாள பெற்றோர் அணுகும் முறையானது ஏற்றவாறு சரி செய்யப்பட வேண்டியதாய் இருக்கிறது. ஏனென்றால் பன்னிரண்டு வயதுக்குட்பட்டவர்களுக்குப் பலன்தரத்தக்க வகையில் செயலாற்றியது வளரிளமை பருவத்திலிருக்கிறவர்களுக்கு எப்பொழுதும் செயலாற்றாது. இவர்கள் காரியத்தில் அதிகமாய்க் காரணங்கள் கொடுப்பது அவசியமாய் இருக்கிறது, இது குறைந்த அளவில் அல்ல, அதிகப்பட்ட அளவிலேயே பேச்சுத்தொடர்பைக் கேட்பதாயிருக்கிறது.

10உதாரணமாக, பாலுறவைப் பற்றி உங்கள் சிறிய பிள்ளைக்கு நீங்கள் கொடுத்த எளிய முறையான விளக்கங்கள் வளரிளமை பருவத்திலிருக்கிற பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யாது. இவர்கள் பாலுறவு தூண்டுதல்களை உணருகிறார்கள். ஆனால் சங்கடமான உணர்ச்சியானது அவர்கள் தங்கள் கேள்விகளுடன் தங்கள் தகப்பனை அல்லது தாயை அணுகுவதிலிருந்து அவர்களைப் பெரும்பாலும் தடுத்து வைக்கிறது. பெற்றோர் முதலாவதாக முயற்சியெடுக்கவேண்டும், இது பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன், முக்கியமாய் வேலையிலும் விளையாட்டிலும் அன்பு மிகுந்தத் துணைவர்களாக இருந்து வந்திருப்பதன் மூலம், நல்ல பேச்சுத்தொடர்பு வழிகளைக் கட்டியமைத்து காத்து வந்திருந்தால் தவிர, எளிதாய், இராது. பையனுக்கு விந்து நீர்மமும், பெண்ணுக்கு மாதவிடாயும் வெளிப்படத் தொடங்குவது, முன்னதாகவே அவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டிருந்தால், அதிகப்படியாய் மன அமைதியைக் குலைக்காது. (லேவியராகமம் 15:16, 17; 18:19) ஒரு தகப்பன் ஒருவேளை தன் மகனுடன் உலாவச் செல்லுகையில், தற்புணர்ச்சி பழக்கத்தைப் பற்றிய காரியத்தைப் பேச்சில் குறிப்பிட்டு, வாலிபர் பலருக்கு இதைக் குறித்ததில் குறைந்த பட்சமாவது ஏதோ பிரச்னை இருக்கிறது என்று குறிப்பிட்டு, ‘இதைப் பற்றியதில் உனக்கு எப்படியிருக்கிறது?’ என்று, அல்லது ‘உனக்கு இது ஒரு பிரச்னையாய் இருப்பதாக நீ கண்டிருக்கிறாயா?’ என்று கேட்கலாம். வளரிளமை பருவம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குடும்ப கலந்தாலோசிப்புகளிலுங்கூட கையாளப்படலாம், அப்போது தாயும் தகப்பனுமாகிய இருவருமே தங்கள் ஆலோசனையை அமரிக்கையான தளர்ந்த நிலையில் ஆனால் ஒளிவு மறைவில்லா முறையில் உதவியாகக் கொடுக்கலாம்.

வளரிளமை பருவத்தினரின் தேவைகளை விளங்கிக்கொள்ளுதல்

11“ஞானத்தைத் தேடிக் கொள், தேடியவை எல்லாம் கொடுத்து உணர்வைத் தேடுவாய்.” (நீதிமொழிகள் 4:7, தி.மொ.) பெற்றோராக, இளைஞரின் வழிகளில் ஞானமாயிருங்கள்; அவர்களுடைய உணர்ச்சிகளைக் குறித்ததில் உய்த்துணர்வைக் காட்டுங்கள். இளைஞராய் இருக்கையில் உங்களுக்கு எப்படி இருந்ததென்பதை மறந்துவிடாதீர்கள். மேலும், ஒவ்வொரு முதிய ஆளும் ஒருகாலத்தில் இளைஞராக இருந்திருந்து இளமை எப்படியிருந்ததென்று அறிந்திருக்கையில், ஓர் இளைஞனுக்கும் முதியவராயிருப்பதன் அனுபவம் ஒருபோதும் இருந்திருக்கவில்லை என்பதையும் நினைவில் வையுங்கள். வளரிளமையில் இருக்கும் இளைஞன் இனிமேலும் சிறு பிள்ளையைப் போல் நடத்தப்பட விரும்புகிறதில்லை. என்றாலும் அவன் முழு வளர்ச்சியடைந்த வாலிபனுமல்ல, ஆகவே வாலிபருக்குக் கவர்ச்சியூட்டுகிற அக்கறைகள் பல அவனுக்கு இல்லை. விளையாட்டு பண்பு அவனில் இன்னும் பேரளவாய் இருந்து கொண்டிருக்கிறது. இதற்கு அவனுக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது.

12வாழ்க்கையின் இந்தப் பருவத்தில் இளைஞருக்குத் தங்கள் பெற்றோரிடமிருந்து முக்கியமாய் வேண்டியதாயிருக்கிற சில காரியங்கள் இருக்கின்றன. தாங்கள் புரிந்து கொள்ளப்படவேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர்; முன்னிருந்ததற்கு மேலாகத் தாங்கள் தனித்தனி ஆட்களாக நடத்தப்பட வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர்; முரண்பாடற்றவையும், அவர்கள் முழு வளர்ச்சி பருவத்தை அணுகுவதைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டுள்ள வழிகாட்டும் நியமங்களும் போதனையும், அவர்களுக்கு வேண்டியவையாக இருக்கின்றன; தாங்கள் தேவைப்படுகின்றனர் நன்றியோடு மதிக்கப்படுகின்றனர் என்று உணரும் உணர்ச்சி அவர்களுக்கு வேண்டியதாய் இருக்கிறது.

13வளரிளமையில் கட்டுப்பாடுகளுக்கு ஓரளவான எதிர்ப்பு வெளிப்படத் தொடங்குவதைக் குறித்து பெற்றோர் வியப்படையக்கூடாது. இது, இளைஞர் கடைசியாக சுயாதீனத்தை நோக்கி அணுகுவதன் காரணமாகவும் விரிவான வாய்ப்பெல்லை மற்றும் தெரிவு செய்யும் உரிமையுடன் இயங்க வேண்டுமென்ற இயல்பான ஆசையின் காரணமாகவுமேயாகும். உதவியற்ற குழந்தைகளுக்குப் பெற்றோரின் இடைவிடாத கவனிப்பு தேவையாயிருக்கிறது, சிறிய பிள்ளைகளுக்குக் கவனமான பாதுகாப்பு தேவையாயிருக்கிறது, ஆனால் அவர்கள் பெரியவர்களாகி வருகையில் அவர்கள் செயல்படும் பகுதி விரிவாகிறது, குடும்ப வட்டாரத்திற்கு அப்பாலுள்ளவர்களோடு உறவு அதிகரித்து பலப்படுகிறது. ஒரு மகன் அல்லது மகள் சுயாதீனத்தை நோக்கித் தட்டித்தடவிக் கொண்டு செல்வதானது, அவனை அல்லது அவளைக் கையாளுவதை ஒருவாறு கடினமாக்கலாம். பெற்றோர், தங்கள் அதிகாரத்தைப் பிள்ளைகள் புறக்கணிக்கும்படி அல்லது உதறித்தள்ளும்படி விடமுடியாது—இது தங்கள் பிள்ளைகளின் சொந்த நன்மைக்காகவேயாகும். ஆனால் அமைதியைக் குலைக்கக்கூடிய இந்த நடத்தையை எது தூண்டி இயக்குவிக்கிறதென்பதைப் பெற்றோர் மனதில் வைப்பார்களேயானால், இதை அவர்கள் ஞானமாய்ச் சமாளித்து, பேச்சுத்தொடர்பு கெடாதபடி தொடர்ந்து காத்து வரலாம்.

14தங்கள் மகன் அல்லது மகள் அதிகப்படியாய்ச் சுதந்திரத்தை நாடச் செய்யும் தூண்டுதலை தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியவரும் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? இந்தத் தூண்டுதலானது கையில் நெருக்கமாக அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிற திருகு கம்பிச் சுருளைப் போல் இருக்கிறது. அதைத் திடீரென்று தளர்த்தி விடுங்கள், அது கட்டறுத்துத் தெறித்து சொல்லமுடியாத ஏதோ ஒரு திக்கில் பாய்ந்து விடும். மீறிய வண்ணமாய் நெடுநேரம் அதை அழுத்திப் பிடித்துக் கொண்டிருங்கள், அப்பொழுது உங்களை நீங்களே முற்றிலும் சோர்வடைய செய்வீர்கள், அதையும் ஆற்றலிழக்கச் செய்வீர்கள். அதைக் கட்டுப்பாடான முறையில் மெல்ல படிப்படியாய்ச் செல்லவிடுங்கள். அப்பொழுது அது தன்னுடைய சரியான இடத்தில் நிற்கும்.

15சுதந்திரத்தை நோக்கிய இப்படிப்பட்ட கட்டுப்பாடுள்ள வளர்ச்சியின் ஒரு முன்மாதிரியை இளம் சிறுவனாக இருந்த, இயேசுவின் காரியத்தில் நாம் காண்கிறோம். “இளம் பிள்ளை தொடர்ந்து வளர்ந்து கொண்டும் பலப்பட்டுக் கொண்டும், ஞானத்தால் நிரப்பப்பட்டும் வந்தது, கடவுளுடைய தயவும் அவன்பேரில் தொடர்ந்து கொண்டிருந்தது,” என்று லூக்கா 2:40-லுள்ள சரித்திரப் பதிவு குறிப்பிடுகிறது. அவருடைய வளர்ச்சியில் அவருடைய பெற்றோர் சந்தேகமில்லாமல் பெரும் பாகத்தை வகித்தனர், ஏனெனில், அவர் பரிபூரணமாக இருந்தபோதிலும், அவருடைய ஞானம் தானாக வந்துவிடாது. அந்த விவரம் தொடர்ந்து சொல்லுகிற பிரகாரம், அவருடைய பயிற்றுவிப்புக்கு ஆவிக்குரிய சூழ்நிலையை அவர்கள் தவறாமல் ஒழுங்காய் அளித்து வந்தார்கள். 12 வயதில் குடும்பம் எருசலேமில் பஸ்கா பண்டிகைக்கு வந்திருந்தபோது இயேசு ஆலயத்துக்குச் சென்று அங்கேயிருந்த மதப் போதகர்களுடன் உரையாடுவதில் ஈடுபட்டார். அவருடைய பெற்றோர் தங்கள் 12 வயது மகனுக்கு இந்த அளவாய் நடமாடுவதற்கான சுதந்திரத்தை அனுமதித்திருந்தார்களென்பது தெளிவாய்த் தெரிகிறது. அவர் பின்னால் விடப்பட்டிருந்ததை உணராமல் அவர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு விட்டார்கள், ஒருவேளை அவர் திரும்பிவரும் மற்ற நண்பர்களுடன் அல்லது உறவினருடன் இருப்பதாகக் கருதியிருந்திருக்கலாம். மூன்று நாட்களுக்குப் பின்பு அவர்கள் அவரை ஆலயத்தில் கண்டு பிடித்தார்கள். தன்னுடைய முதியோருக்குக் கற்பிக்க முயலுபவராய் அல்ல, “அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும் அவர்களை வினாவவும் கண்டார்கள்,” அவருடைய தாய் தாங்கள் அனுபவித்த மனவேதனையைக் குறிப்பிட்டாள். இயேசு பிரதியுத்தரமாக, மரியாதையில்லாமல் அல்ல, மரியாதையுடன் அவர்கள் புறப்பட ஆயத்தமாயிருக்கையில் தன்னை எங்கே கண்டுபிடிப்பதென்பதை அவர்கள் நிச்சயமாக அறிந்திருப்பார்களென்று தான் எண்ணினதாக உண்மையில் கூறினார். அவர் சுதந்தரமாய் நடமாடும் சுயாதீனத்தை ஓரளவு பிரயோகித்தபோதிலும், அதற்குப் பின்பு பருவ வயதிற்குள் பிரவேசிக்கையில், பெற்றோருடைய வழிநடத்துதலுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் தன்னைத் தக்கவாறு பொருத்திக் கொண்டு, “அவர்களுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்திருந்தார்” என்றும் “ஞானத்திலும் தேகவளர்ச்சியிலும் அதிகரித்துக் கடவுளுக்கும் மனிதருக்கும் பிரியராக மென்மேலும் வளர்ந்து வந்தார்,” என்றும் இந்த விவரம் சொல்லுகிறது.—லூக்கா 2:41-52.

16இதைப்போலவே, பெற்றோர், பருவ வயதுள்ள தங்கள் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும் ஓரளவான சுதந்திரத்தை அனுமதிக்கவேண்டும், அவர்கள் முழு பருவ வளர்ச்சியை நெருங்கி வருகையில் இதைப் படிப்படியாய் அதிகரித்து, அவர்கள் மேலும் மேலுமதிகமாய்த் தங்கள் சொந்தத் தீர்மானங்களைப் பெற்றோருடைய வழிநடத்துதலின் கீழும் மேற்பார்வையின் கீழும் செய்யும்படி விடவேண்டும். தொந்தரவுகள் எழும்புகையில், ஏன் அவை எழும்புகின்றனவென்பதைத் தெளிவாய் விளங்கிக்கொள்வது, சிறு காரியங்களைப் பெரிய பிரச்னைகளாக்கிக் கொள்வதைத் தவிர்க்கும்படி பெற்றோருக்கு உதவி செய்யும். பல தடவைகளில் வளரும் இளமை பருவத்திலுள்ள ஒருவன், வேண்டுமென்றே தன்னுடைய பெற்றோருக்கு விரோதமாகக் கலகஞ் செய்கிறதில்லை, ஓரளவான சுயாதீனத்தை நிலைநாட்டிக் கொள்ளவே அவன் முயலுகிறான், ஆனால் அதை எப்படிச் செய்வதென்று அறியாதவனாக அவ்வாறு செய்கிறான். ஆகையால், பெற்றோர் ஒருவேளை, அவன் செய்யும் தவறான காரியங்களைப் பெரிய பிரச்னைகளாக்கிக் கொள்ளுகிறவர்களாய்த் தவறுகள் செய்யக்கூடும். காரியம் மட்டுக்கு மீறி வினைமையானதாய் இல்லையென்றால், அதை அதிகம் பொருட்படுத்தாமல் விட்டுவிடுங்கள். ஆனால் அது மட்டுக்கு மீறி வினைமையானதென்றால், உறுதியைக் கடைப்பிடியுங்கள். ‘கொசுகை வடிகட்டுகிறவர்களாக’ அல்லது ‘ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாக’ இராதேயுங்கள்.—மத்தேயு 23:24.

17பெற்றோர் வளரிளமை பருவத்திலுள்ள தங்களுடைய குமாரர் குமாரத்திகள் மீது தாங்கள் வைக்கும் கட்டுப்பாடுகளில் நல்ல சமநிலையைக் காட்டுவதன்மூலம் அவர்களோடு சிறந்த உறவு தொடர்ந்து கொண்டிருக்க உதவி செய்யக்கூடும். “மேலிருந்து வருகிற ஞானம் முதலாவதாகச் சுத்தமுள்ளதாய்” இருக்கையில், அது ‘நியாயமுள்ளதாகவும்,’ ‘இரக்கம் நிறைந்ததாகவும்,’ ‘பாசாங்குத்தனமற்ற’தாகவுங்கூட இருக்கிறதென்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். (யாக்கோபு 3:17, NW) முற்றிலும் ஏற்கத்தகாதவை என்று பைபிள் காட்டுகிற சில காரியங்கள் இருக்கின்றன. இவற்றில் திருடுதல், வேசித்தனம், விக்கிரகாராதனை ஆகியவையும் இவற்றைப் போன்ற படுமோசமான மற்ற தவறுகளும் அடங்கியிருக்கின்றன. (1 கொரிந்தியர் 6:9, 10) மற்றப் பல காரியங்களைக் குறித்ததில் அவற்றின் சரியானத் தன்மை அல்லது தவறான தன்மையானது ஒரு காரியம் எவ்வளவு தூரமாக அல்லது எந்த அளவுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்பதன் பேரில் சார்ந்திருக்கலாம். உணவு நல்லதே என்றாலும் நாம் அளவுக்கு மீறி சாப்பிடுகிறோமென்றால் நாம் பெருந்திண்டியராகிறோம். நடனமாடுதல், விளையாடுதல், விருந்துகள் வைப்பது, அல்லது இவற்றைப் போன்ற மற்ற வகையான பொழுதுபோக்கு நடவடிக்கைகள் சிலவற்றைக் குறித்ததிலும் இவ்வாறே இருக்கிறது. பல தடவைகளில் என்ன செய்யப்படுகிறது என்பதல்ல, என்ன முறையில் அது செய்யப்படுகிறது எந்தக் கூட்டுறவில் செய்யப்படுகிறது என்பதே முக்கியமாய் இருக்கிறது. ஆகையால் நாம் உண்மையில் கண்டனம் செய்ய கருதுவது பெருந்திண்டியென்றால், சாப்பிடுவதைத்தானே நாம் கண்டனம் செய்துவிட மாட்டோம். அதைப்போலவே, பெற்றோர் உண்மையாய் எதிர்ப்பது, மட்டுக்கு மீறிய வகையில் அல்லது அளவில் கொண்டு செல்லும் வாலிப வயதுக்குரிய ஏதோ ஒரு நடவடிக்கையையே அல்லது அதற்குள் மெல்ல நுழையக்கூடிய விரும்பத்தகாத ஏதோ சூழ்நிலைமைகளையே. ஆனால் அந்த வெறும் நடவடிக்கையைத்தானே அவர்கள் முற்றிலும் கண்டனம் செய்ய விரும்பமாட்டார்கள்.—கொலோசெயர் 2:23-ஐ ஒப்பிடவும்.

18தங்களுக்கு நண்பர்கள் வேண்டுமென்ற ஆவலை எல்லா இளைஞரும் உணருகிறார்கள். ஒரு சிலரே ஒருவேளை “சிறந்த மாதிரியாகக்” கருதப்படக்கூடும், என்றாலும் உங்கள் சொந்த பிள்ளைகள் தாமே தங்களுக்குரிய பலவீன நிலைகளை உடையவர்களாக இல்லையா? சில ஆட்களின் கூட்டுறவைத் தீங்குள்ளதாக நீங்கள் கருதுவதன் காரணமாக அவர்களுடன் உங்கள் பிள்ளைகள் கூட்டுறவு கொள்வதைக் கட்டுப்படுத்தி வைக்க நீங்கள் விரும்பலாம். (நீதிமொழிகள் 13:20; 2 தெசலோனிக்கேயர் 3:13, 14; 2 தீமோத்தேயு 2:20, 21) மற்றும் சிலரைக் குறித்ததில் நீங்கள் விரும்பும் சில காரியங்களையும் விரும்பாத சில காரியங்களையும் நீங்கள் அவர்களில் காணலாம். ஏதோ ஒரு குறைவின் காரணமாக ஒருவரை முற்றிலுமாய்த் தள்ளி வைப்பதற்கு மாறாக, உங்கள் பிள்ளைகளுடைய நண்பனின் நல்ல பண்புகளுக்காக அவர்களிடம் போற்றுதலைத் தெரிவித்து அதே சமயத்தில் பலவீனப் பகுதிகளில் எச்சரிக்கையாய் இருக்கவேண்டியதன் தேவையையும் குறிப்பிட்டு, உங்கள் மகனோ மகளோ அந்த பகுதிகளில் அந்த நண்பனின் நிலையான நன்மைக்கேதுவாக நேர்மைக்குரிய வலிமையாக நிரூபிக்கும்படி ஊக்குவிக்கலாம்.

19சுயாதீன அதிகரிப்பைக் குறித்ததில் சரியான நோக்குநிலையைப் படிப்படியாய் முன்னேற்றுவிக்கும்படி பருவ வயதுள்ள உங்கள் மகனுக்கு அல்லது மகளுக்கு உதவி செய்வதற்கான ஒரு முறையானது, அதிகப்படியான சுயாதீனத்துடன் அதிகப்படியான உத்தரவாதமும் செல்லுகிறதென்பதைக் காண அவன் அல்லது அவளுக்கு உதவி செய்வதேயாகும். “எவனிடத்தில் அதிகங்கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங்கேட்கப்படும்.” (லூக்கா 12:48) பிள்ளைகள் எவ்வளவு அதிகமாய் உத்தரவாதமுள்ளவர்களாகத் தங்களைக் காட்டுகிறார்களோ, அவ்வளவு அதிகமாய் பெற்றோர் அவர்களை நம்பி பொறுப்பளிக்கக்கூடும்.—கலாத்தியர் 5:13; 1 பேதுரு 2:16.

அறிவுரையையும் திருத்தத்தையும் கொடுத்தல்

20உங்கள் நிலையை விளங்கிக் கொள்ளாமல் ஒருவர் உங்களுக்கு அறிவுரை கொடுக்கையில், அவருடைய அறிவுரை நடைமுறையான உண்மையாக இல்லை என்றே நீங்கள் உணருவீர்கள். தான் கேட்பதை நீங்கள் நிறைவேற்றும்படி உங்களை வற்புறுத்த அவருக்கு வல்லமை இருக்கிறதென்றால், இதை நீங்கள் அநீதியாக உணர்ந்து மனக்கசப்பு அடையக்கூடும். “விளங்கிக் கொள்ளும் இருதயமே அறிவுக்காகத் தேடுகிறது,” “அறிவுள்ள மனிதன் பலப்படுத்தப்பட்ட வல்லமையாக இருக்கிறான்,” என்பதைப் பெற்றோர் மனதில் வைக்க வேண்டும். (நீதிமொழிகள் 15:14; 24:5, NW) உங்கள் பிள்ளைகளின் மேல் உங்களுக்கு வல்லமை இருக்கலாம், ஆனால் அது அறிவாலும் விளங்கிக் கொள்ளும் தன்மையாலும் பலப்படுத்தப்பட்டால், அவர்களோடு பேச்சுத்தொடர்பு கொள்வதை நீங்கள் அதிக பலன் தரத்தக்க முறையில் நிறைவேற்றக் கூடியவர்களாக இருப்பீர்கள். இளைஞரைத் திருத்துகையில் விளங்கிக் கொள்ளும் தன்மையைக் காட்டத் தவறுவதானது ‘சந்ததி பிளவுக்கும்’ பேச்சுத்தொடர்பின் முறிவுக்கும் வழிநடத்தக்கூடும்.

21உங்கள் பிள்ளை தொந்தரவுக்குள் சிக்கி வினைமையான ஒரு தவறை அல்லது எதிர்பாராத நிலையில் உங்களைத் திடுக்கிட வைக்கும் ஏதோ தவறைச் செய்துவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்தத் தவறைப் பொருட்படுத்தாமல் நீங்கள் ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. (ஏசாயா 5:20; மல்கியா 2:17) மற்ற எல்லாச் சமயங்களையும்விட இப்பொழுதே உங்கள் மகனுக்கு அல்லது மகளுக்கு விளங்கிக் கொள்ளும் உதவியும் தனித்திறமை வாய்ந்த வழிநடத்துதலும் தேவையாய் இருக்கிறதென்பதைத் தெளிவாக உணருங்கள். யெகோவா தேவனைப்போல், செயல் முறையளவில் நீங்கள் பின்வருமாறு சொல்லலாம்: ‘வா, காரியங்களை நாம் சரி செய்யலாம்; நிலைமை வினைமையானதே, என்றாலும் சீர்படுத்த முடியாத நிலைக்கு மிஞ்சிவிடவில்லை.’ (ஏசாயா 1:18) கோபாவேச சீறுதல்கள் அல்லது கடுகடுத்த கண்டனங்கள் பேச்சுத்தொடர்பை அடைத்துத் தடுத்துப் போடக்கூடும். தவறு செய்கிற இளைஞரில் பலர் பின்வருமாறு சொல்லியிருக்கின்றனர்: ‘நான் என் பெற்றோருடன் பேசமுடியவில்லை—அவர்கள் என்னிடம் கடும் சீற்றங் கொண்டிருந்திருப்பார்கள்.’ எபேசியர் 4:26 பின்வருமாறு சொல்லுகிறது: “நீங்கள் கோபமாய் இருக்கிறீர்களென்றால், கோபம் உங்களை பாவத்திற்குள் வழிநடத்த விடாதேயுங்கள்.” (New English Bible) உங்கள் மகன் அல்லது மகள் சொல்வதற்கிருப்பதைக் கேட்கையில் உங்கள் உணர்ச்சி வேகங்களை அடக்கி வையுங்கள். அப்பொழுது, செவிகொடுத்துக் கேட்பதில் நீங்கள் நியாயமாய் இருப்பதானது நீங்கள் கொடுக்கும் திருத்தத்தை ஏற்பதை எளிதாக்கும்.

22ஒருவேளை அது ஒரே சம்பவமாக இராது, ஒரு காலப்பகுதியாக நடந்து கொண்டிருக்கும் தொந்தரவாக, விரும்பத்தகாத ஏதோ தன்மையைத் திரும்பத் திரும்ப வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாக இருக்கலாம். சிட்சை இன்றியமையாததாக இருக்கிறபோதிலும், பெற்றோர், பிள்ளையின் பேரில் தாங்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக வார்த்தையின் மூலமோ தூண்டப்பட்ட உணர்ச்சி வேகத்தின் மூலமோ ஒருபோதும் குறிப்பிடக்கூடாது. உங்களுடைய நீடிய பொறுமையானது உங்கள் அன்பின் ஆழத்தின் ஓரளவாயிருக்கும். (1 கொரிந்தியர் 13:4) தீமையைத் தீமையைக் கொண்டு எதிர்த்துப் போராடாதேயுங்கள், அதை நன்மையால் வெல்லுங்கள். (ரோமர் 12:21) “சோம்பேறி,” “அடங்காதவன்,” “ஒன்றுக்கும் உதவாதவன்,” “உருப்படமாட்டான்,” என்றவற்றைப் போன்ற கூற்றுகளை மற்றவர்களுக்கு முன்பாகச் சொல்லி ஓர் இளைஞனை அவமானப்படுத்துவது அவனுக்குத் தீங்கையே செய்வதாயிருக்கிறது. அன்பு நம்பிக்கையை இழந்துவிடாது. (1 கொரிந்தியர் 13:7) ஓர் இளைஞன் அவ்வளவு தூரமளவாகக் கெட்டு கடமைத் தவறுகிறவனாகி வீட்டைவிட்டே சென்றுவிடக்கூடும். பெற்றோர் இதை எவ்வகையிலும் அங்கீகரிப்பதாக காட்டாதபோதிலும், அவன் திரும்பி வருவதற்கான வழி திறந்திருக்கும்படி வைத்து வைக்கக்கூடும். எப்படி? தாங்கள் அவனையல்ல, அவனுடைய போக்கையே ஏற்கத்தகாததாக விலக்குகிறார்களென்று காட்டுவதன் மூலமே. அவன் தனக்குள் நல்ல குணங்களை உடையவனாய் இருக்கிறான் என்ற நம்பிக்கையையும், நல்ல குணங்கள் வெற்றிப் பெறுமென்ற தங்கள் எதிர்பார்ப்பையும் அவர்கள் அவனுக்குத் தொடர்ந்து வெளிப்படுத்திவரக்கூடும். காரியம் இவ்வாறிருப்பதாக நிரூபிக்கிறதென்றால், அவன் இயேசுவின் உபமானத்தில் குறிக்கப்பட்ட அந்தக் கெட்டக் குமாரனைப்போல், தான் மனஸ்தாபப்பட்டுத் திரும்பி வருவது, கடுகடுத்த அல்லது பாசமற்ற வெறுப்புடன் வரவேற்கப்படாதென்ற நிச்சயத்துடன், வீட்டை நோக்கித் திரும்பி வரக்கூடியவனாய் இருப்பான்.—லூக்கா 15:11-32.

தகுதியுள்ள தனியாளாக மதிக்கப்பட வேண்டுமென்ற ஓர் உணர்வு

23தாங்கள் ஓரளவு தெரிந்து கொள்ளப்படுவது, ஏற்கப்படுவது அங்கீகரிக்கப்படுவது இணைபகுதியாக இருப்பதாய் உணருவது ஆகியவை மனித சிருஷ்டிகள் எல்லாருக்கும் தேவையாய் இருக்கின்றன. நிச்சயமாகவே, தேவைப்படும் இந்த ஏற்பையும் அங்கீகாரத்தையும் அடைய, ஒருவன் மட்டுக்குமீறி சுயாதீனனாக முடியாது. தான் எந்தத் தொகுதியைச் சேர்ந்தவனாக இருக்கிறானோ அதால் அங்கீகரிக்கப்படுகிற நடத்தைக்குரிய கட்டுப்பாடுகளுக்குள் அவன் தங்கியிருக்க வேண்டும். பருவ வயதுள்ள இளைஞர்கள், குடும்பத்தில் தாங்கள் உரிமையுடன் சேர்ந்தவர்களாக இருக்கும் இந்த அவசியத்தை உணருகின்றனர். குடும்பத்தின் சுகநலத்திற்குத் தங்கள் பங்கைச் செய்கிறவர்களாயும், குடும்பத்தின் சில திட்டங்கள் தீர்மானங்கள் ஆகியவற்றில் பங்கு கொள்ளும்படி அனுமதிக்கப்பட்டு வருகிறவர்களாயும் குடும்ப வட்டாரத்தில் தாங்கள் மதிப்பு வாய்ந்த அங்கத்தினர்களாக இருக்கிறார்களென்று அவர்கள் உணரும்படி செய்யுங்கள்.

24“வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோப மூட்டாமலும் ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளாமலும் இருக்கக்கடவோம்,” என்று அப்போஸ்தலன் சொல்லுகிறான். (கலாத்தியர் 5:26) மகனோ மகளோ நன்றாகச் செய்கையில் தாய் அல்லது தகப்பன் போற்றுதலைக் கூறுவது இப்படிப்பட்ட ஆவி எழும்புவதைத் தடுத்து வைக்க உதவி செய்யும்; ஆனால் மேம்பட்டவனாக அடிக்கடி உயர்த்திக் காட்டப்படுகிற வேறொருவனோடு ஓர் இளைஞனை சாதகமல்லாத முறையில் ஒப்பிடுவது பொறாமையை அல்லது மனக்கசப்பை உண்டுபண்ணும். ஒவ்வொருவனும், “தன் தன் சுயகிரியையைச் சோதித்துப் பார்க்க” வேண்டும், “அப்பொழுது மற்றவனைப் பார்க்கும் போதல்ல, தன்னையே பார்க்கும் போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்,” என்று அப்போஸ்தலன் சொன்னான். (கலாத்தியர் 6:4) இளைஞனானவன், தான் இருக்கிறபடியே அதாவது, தான் என்னவாக இருக்கிறானோ, யாராக இருக்கிறானோ, என்ன செய்யக்கூடியவனாக இருக்கிறானோ, அவ்வாறே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்றும், இந்தக் காரியங்களினிமித்தமாகப் பெற்றோரால் நேசிக்கப்பட்டு வரவேண்டுமென்றும் விரும்புகிறான்.

25எல்லாப் பகுதிகளிலும் வாழ்க்கைக்குரிய பொறுப்புகளை ஏற்கும்படி பெற்றோர் தங்கள் மகனை அல்லது மகளைப் பயிற்றுவிப்பதன் மூலம் மதிக்கத் தகுதியுள்ளவனாயிருக்கும் ஓர் உணர்வைப் பெற்றோர் அவர்களில் வளர்க்க உதவி செய்யக்கூடும். அவர்கள் தங்கள் பிள்ளைகளை, நேர்மை, உண்மை, மற்றவர்களைச் சரியாக நடத்துவது ஆகியவற்றில் குழந்தை பருவத்திலிருந்தே பயிற்றுவித்து வந்திருக்கிறார்கள்; மனித சமுதாயத்தில் இந்தப் பண்புகள் எப்படிப் பொருத்திப் பிரயோகிக்கப்படுகின்றனவென்பதைக் காட்டுவதன் மூலம் இந்தத் தொடக்க அடிப்படையின் மேல் அவர்கள் கட்டியெழுப்புகிறார்கள். ஒரு வேலையின் பொறுப்பை ஏற்று அதில் நம்பத்தகுந்தவனாய் இருப்பது எப்படியென்பதும் இதில் உட்பட்டிருக்கிறது. இயேசு, பருவ வயதுள்ளவராய் இருந்தபோது “ஞானத்தில் அதிகரித்து மென்மேலும் வளர்ந்து வந்த”தானது, அவர் தம்முடைய வளர்ப்பு தகப்பனாகிய யோசேப்பின் அருகிலிருந்து ஒரு தொழிலைக் கற்றதும் உட்பட்டிருந்ததென்று தெளிவாய்த் தெரிகிறது, எப்படியெனில் அவர் 30 வயதையடைந்து தம்முடைய வெளிப்படையான ராஜ்ய வேலையைத் தொடங்கினபோதுங்கூட மக்கள் அவரைத் “தச்சன்” என்று குறிப்பிட்டார்கள். (மாற்கு 6:3) இந்த வளரும் இளமை பருவத்தின்போது வேலை செய்வதும், வேலையில் அமர்த்தினவரை அல்லது ஒரு வாடிக்கைக்காரரைத் திருப்தி செய்வதும் எதைக் குறிக்கிறதென்பதை முக்கியமாய்ப் பையன்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அந்த வேலை ஒருவேளை செய்திகள் கொண்டு செல்வதைப் போல் இயல்பில் அவ்வளவு எளிதான ஒன்றாக இருந்தாலும் சரிதான். சுறுசுறுப்பான, கவலையுள்ள, நம்பத்தக்க வேலையாளர்களாக இருப்பதன் மூலம், சுயமரியாதையையும் மற்றவர்களின் மரியாதையையும் மதித்துணர்வையும் அவர்கள் அடைகிறார்களென்றும்; இவ்வாறு அவர்கள் தங்கள் பெற்றோருக்கும் குடும்பத்துக்கும் நற்பெயரைக் கொண்டு வருகிறவர்களாக இருக்கிறது மட்டுமல்லாமல், “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கிற”வர்களாகவுங்கூட இருக்கிறார்களென்றும் அவர்களுக்குக் காட்டலாம்.—தீத்து 2:6-10.

26குமாரத்திகளுங்கூட, வீட்டுக் காரியங்களை நடத்தும் மற்றும் குடும்பத்தைக் கவனிக்கும் கலைகளைக் கற்றுக் கொண்டு குடும்பத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மதிப்பையும் போற்றுதலையும் சம்பாதிக்கக்கூடும். பைபிள் காலங்களில் ஒரு மகள் குடும்பத்திற்கு வேலை செய்யும் திறமைக்குரிய மதிப்பானது, அவள் விவாகத்தில் கொடுக்கப்படுகையில் சீதனம் அல்லது பெண்ணுக்குரிய விலையைத் தவறாமல் வாங்கும் பழக்கத்தால் விளக்கிக் காட்டப்பட்டிருக்கிறது. இது சந்தேகமில்லாமல் அந்தக் குடும்பம் அவளுடைய சேவைகளை இழப்பதைச் சரி செய்யும் இழப்பீடாக கருதப்பட்டது.—ஆதியாகமம் 34:11, 12; யாத்திராகமம் 22:16.

27இந்தக் தற்போதைய காரிய ஒழுங்குமுறையில் வாழ்க்கையின் சவால்களை எதிர்ப்பட்டு சமாளிக்க இளைஞரை தயார் செய்வதற்கு நல்ல சாதகமாக, கல்வி பயிலுவதற்குரிய வாய்ப்புகள் பயன்படுத்தப்பட வேண்டும். “நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் [நேர்மையான வேலையை, NEB] செய்யப் பழகட்டும்,” என்ற அப்போஸ்தலனின் இந்த ஊக்கமூட்டுதலில் இப்படிப்பட்ட இளைஞரும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.—தீத்து 3:14.

பைபிள் ஒழுக்கத் தராதரங்களின் பாதுகாப்பு

28சந்தர்ப்ப சூழ்நிலைமைகள் ஒருவேளை தாங்கள் வாழ்ந்துவரும் சுற்றுப்புறம் அல்லது தங்கள் பிள்ளைகள் சென்றுவரும் பள்ளி ஆகியவற்றில் தீயசெயல்களில் ஈடுபட்டு தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளுகிற சில இளைஞருடன் தங்கள் பிள்ளைகள் சகவாசம் கொள்ள வற்புறுத்தும் நிலைமையை உண்டாக்குகையில் பெற்றோர் கவலையுள்ளவர்களாக இருப்பது விளங்கிக் கொள்ளத்தக்கதே. “துர்ச் சகவாசம் நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்,” என்று பைபிள் சொல்வதன் உண்மையைப் பெற்றோர் தெளிவாக உணரக்கூடும். ஆகையால்: ‘மற்ற எல்லாரும் அதைச் செய்கிறார்கள்; நான் ஏன் செய்யக்கூடாது?’ என்று கெஞ்சும் பிள்ளையின் விவாதத்தை ஏற்க அவர்கள் மனமற்றவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை எல்லாரும் அவ்வாறு செய்கிறவர்களாக இரார்கள், என்றபோதிலும், அது தவறாக அல்லது விவேகமற்றதாக இருக்கிறதென்றால், உங்கள் பிள்ளை அதைச் செய்வதற்கு இது போதிய காரணமாக இல்லை. ‘பொல்லாத மனுஷர் மேல் [அல்லது பிள்ளைகள் மேல்] பொறாமை கொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே. அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும் அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும். வீடு [வீட்டார்] ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலை நிறுத்தப்படும்.’—1 கொரிந்தியர் 15:33; நீதிமொழிகள் 24:1-3, தி.மொ.

29பள்ளியினூடேயும் வாழ்க்கையினூடேயும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டிக் கொண்டு முன்னே சென்று கொண்டிருக்க முடியாது. என்றபோதிலும், உங்கள் வீட்டாரை ஞானத்தால் கட்டியமைப்பதன் மூலம், அவர்களை வழிநடத்துவதற்கு, ஸ்தாபிக்கப்பட்ட நல்ல ஒழுக்க தராதரங்களையும் சரியான நியமங்களையும் நீங்கள் அவர்களுடன் அனுப்பலாம். “ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள் போல்” இருக்கின்றன. (பிரசங்கி 12:11) பூர்வ காலங்களில் இந்தத் தாற்றுக் கோல்கள் கூர் நுனியையுடைய நீண்ட கோல்களாக இருந்தன. மிருகங்கள் சரியான திசையில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும்படி அவற்றைக் குத்தித் தூண்டிக் கொண்டிருக்க இவை பிரயோகிக்கப்பட்டன. கடவுளுடைய ஞானமான வார்த்தைகள் நம்மைச் சரியான வழியில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கச் செய்து வரும், நாம் வழி தவறிப் போவோமானால் நம்முடைய வழியை மாற்றிக் கொள்ள நம்முடைய மனச்சாட்சி நம்மைக் குத்தும்படி செய்விக்கும். உங்களுடைய பிள்ளைகளின் நிலையான சுகநலத்திற்காக, இப்படிப்பட்ட ஞானத்தை அவர்களோடுகூட அனுப்புங்கள். வார்த்தையின் மூலமும் முன்மாதிரியின் மூலமும் இதை அவர்களுக்குக் கொடுங்கள். உண்மையான மதிப்புகளின் ஒரு தொகுதியைப் படிப்படியாய்ப் புகட்டுங்கள். உங்கள் பிள்ளைகள் தங்களுடைய தனிப்பட்ட தோழர்களாகத் தாங்கள் தெரிந்து கொள்ளுகிற மற்றவர்களில் இதையே தேடுவார்கள்.—சங்கீதம் 119:9, 63.

30இந்த எல்லாவற்றிலும், இந்த நியமங்கள் மதிக்கப்பட்டு பின்பற்றப்படுகிற ஒரு வீட்டு சூழ்நிலை இருக்கிறதென்றால், சிறந்த ஒழுக்கப் பண்புகளை அதிக நன்றாய்ப் படிப்படியாகப் புகட்டக் கூடுமென்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் என்ன மனப்பான்மைகளை உடையவர்களாக இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதே மனப்பான்மைகளை நீங்கள் உடையவர்களாக இருங்கள். உங்கள் சொந்த வீட்டில், குடும்ப வட்டாரத்திற்குள், பெரியவர்கள் தங்களை விளங்கிக்கொள்வதையும், அன்பையும் மன்னிப்பையும், நீதி மற்றும் நியாயத்தோடுங்கூட பாதுகாப்பான ஓரளவு சுயாதீனத்தையும் சுதந்திரத்தையும், மேலும் தங்களுக்குத் தேவைப்படும் உணர்ச்சியாகிய அங்கீகரிக்கப்பட்ட மற்றும் இணைபகுதியாகச் சேர்ந்துள்ள உணர்ச்சியையும் உங்கள் பிள்ளைகள், கண்டடைந்தவர்களாக இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். கடவுளால் கொடுக்கப்பட்ட ஒழுக்க தராதரங்களின் தொகுதியைக் குடும்ப வட்டாரத்திற்கு அப்பால் தங்களோடுகூட கொண்டு செல்லும்படி, இந்த வழிகளின் மூலமாய் அதை அவர்களுக்குக் கொடுங்கள். நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய இதைப் பார்க்கிலும் மேன்மையான பரம்பரை சொத்து வேறு எதுவும் இல்லை.—நீதிமொழிகள் 20:7.

[கேள்விகள்]

1, 2. பேச்சுத்தொடர்பு என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது?

3. பிள்ளையுடைய வாழ்க்கையின் எந்தப் பருவத்தின்போது பேச்சுத்தொடர்பில் பிரச்னைகளைப் பெற்றோர் எதிர்பார்க்க வேண்டும்?

4. குடும்பப் பேச்சுத்தொடர்பு எல்லாம் உரையாடுதல் முறையாகவே இருக்க வேண்டுமா? விளக்குங்கள்.

5-7. (எ) பேசுவதிலிருந்து ஒரு பிள்ளையை நிறுத்துவதைப் பற்றியதில் பெற்றோர் கவனமாயிருப்பது ஏன் நல்லது? (பி) பண்பட்ட தன்மையையும் மரியாதையையும் பற்றி பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படிக் கற்றுக் கொடுக்கக்கூடும்?

8. வழிநடத்துதலுக்காகத் தங்கள் பிள்ளைகள் தங்களிடம் வரும்படி பெற்றோர் எப்படி ஊக்குவிக்கலாம்?

9. சிறு பிள்ளைகளினுடையவற்றோடு ஒப்பிடுகையில் வளரிளமை பருவத்தினரின் பிரச்னைகளையும் தேவைகளையும் பற்றி என்ன சொல்லப்படலாம்?

10. (எ) பாலுறவு சம்பந்தப்பட்டதைப் பற்றிய எளிய முறையான விளக்கங்கள் வளரிளமை பருவத்திலுள்ளவர்களுக்கு ஏன் போதுமானவையாக இல்லை? (பி) பாலுறவு சம்பந்தப்பட்டதைப் பற்றி பெற்றோர் தங்கள் பிள்ளையுடன் எப்படிக் கலந்து உரையாட முற்படக்கூடும்?

11. வளரிளமை பருவத்தினர் முதிய ஆட்களிலிருந்து என்ன விதங்களில் வேறுபடுகின்றனர்?

12. பருவ வயதுள்ள பிள்ளைகள் தங்கள் பெற்றோரால் எவ்வாறு நடத்தப்படும்படி விரும்புகின்றனர்?

13. பருவ வயதுள்ள பிள்ளைகள் பெற்றோரின் கட்டுப்பாடுகளுக்கு எப்படிப் பிரதிபலிக்கின்றனர்? ஏன்?

14. அதிகப்படியான சுதந்திரத்தை நாடும் பிள்ளையின் ஆசையைப் பெற்றோர் எப்படி வெற்றிகரமாய்க் கையாளக்கூடும்?

15. இயேசு வாலிபப் பருவத்திற்கு வளர்ந்து கொண்டிருந்தது பெற்றோரின் வழிநடத்துதலின் கீழிருந்ததென்று எது காட்டுகிறது?

16. வளரிளமை பருவத்திலிருக்கும் ஒரு பிள்ளையோடு பெற்றோர் பிரச்னைகளை அனுபவிக்கையில், அவர்கள் எதை மனதில் வைக்க வேண்டும்?

17. வளரிளமை பருவத்திலுள்ள பிள்ளைகளின் பேரில் கட்டுப்பாடுகளை வைக்கையில் என்ன காரியங்களைப் பெற்றோர் கவனத்திற்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்?

18. கூட்டாளிகளைப் பற்றியதில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை எப்படி எச்சரிக்கலாம்?

19. லூக்கா 12:48-ல் குறிப்பிட்டு வைக்கப்பட்டிருக்கிற நியமத்திற்கிசைய, சுயாதீனத்தைப் பற்றிய சரியான நோக்குநிலையைக் கொண்டிருக்க பிள்ளைகள் எப்படி உதவி செய்யப்படலாம்?

20. பேச்சுத்தொடர்பு முறிவைத் தவிர்க்க, பிள்ளைகள் மேல் வல்லமை அல்லது அதிகாரத்தைத் தவிர வேறு என்ன தேவையாயிருக்கிறது?

21. வினைமையான தவறுசெய்தலில் உட்பட்டவர்களாகியிருக்கிற பிள்ளைகளை பெற்றோர் எப்படிக் கையாள வேண்டும்?

22. தங்கள் பிள்ளையின் பேரில் நம்பிக்கை இழந்துவிட்டதாகப் பெற்றோர் ஏன் ஒருபோதும் குறிப்பிடக்கூடாது?

23. வளரிளமை பருவத்தினர், தாங்கள் குடும்பத்தின் மதிப்பு வாய்ந்த அங்கத்தினர் என்று உணருவது ஏன் முக்கியமானது?

24. ஒரு பிள்ளை மற்றப் பிள்ளையைப் பற்றி பொறாமையுள்ளதாகாதபடி பெற்றோர் என்ன செய்வதைத் தவிர்க்க வேண்டும்?

25. மதிக்கத் தகுதியுள்ளவனாயிருக்கும் ஓர் உணர்வை வளர்த்து வர தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர் எப்படி உதவி செய்யக்கூடும்?

26. ஒரு மகள், குடும்பத்தின் மதிப்புள்ள ஓர் அங்கத்தினள் என்பதை எந்தப் பூர்வ பழக்கம் உண்மையென்று ஒப்புக்கொண்டது?

27. கல்வி பயிலுவதற்குக் கிடைக்கும் வாய்ப்புகள் ஏன் நல்ல அனுகூலத்திற்கேதுவாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்?

28, 29. (எ) கூட்டுறவு சகவாசங்களைப் பற்றியதில் பைபிள் என்ன அறிவுரை கொடுக்கிறது? (பி) இந்த அறிவுரைக்குச் செவிகொடுக்க, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படி உதவி செய்யக்கூடும்?

30. கடவுளால் கொடுக்கப்பட்ட ஒழுக்க தராதரங்களின் தொகுதியை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படிக் கொடுக்கக்கூடும்?