Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளுடைமைகளை நீ எப்படி நோக்குகிறாய்

பொருளுடைமைகளை நீ எப்படி நோக்குகிறாய்

அதிகாரம் 21

பொருளுடைமைகளை நீ எப்படி நோக்குகிறாய்

எல்லா விதமான பல்வேறுபட்ட வகைகளுமான ஆயிரக்கணக்கான சிறந்த பரிசுகள் சொல்லர்த்தமாய் நிறைந்துள்ள ஒரு வீட்டை நீ கற்பனை செய்து பார்க்க முடியுமா? அங்கே வாழவும், அந்த வீட்டின் தலைவராக உன் தகப்பனிடமிருந்து இந்தப் பரிசுகள் பலவற்றைப் பெற்றுக்கொள்ளவும் நீ பிரியப்படுவாயா? உண்மையில், நீ ஏற்கெனவே இப்படிப்பட்ட ஒரு வீட்டில்—இந்தக் கிரகமாகிய பூமியில்—வாழ்ந்து கொண்டிருக்கிறாய், யெகோவா தேவன் அதை வியப்பூட்டும் பல்வேறு வகையான நல்ல பொருட்களால் நிரப்பியிருக்கிறார்.

2ஆனால் வினோதமாய், இந்தப் பொருள் சம்பந்த ஏற்பாடுகளிலிருந்து முழு மகிழ்ச்சியனுபவத்தை நாம் அடைவது—உண்மையில், வாழ்க்கையிலிருந்து தானேயும் முழு மகிழ்ச்சியனுபவத்தை நாம் அடைவது—அவற்றை நம்முடைய வாழ்க்கையின் பெரிய காரியமாக்காமல் இருப்பதன் பேரிலேயே மிக அதிகமாய்ச் சார்ந்திருக்கிறது. இது எப்படியாகும்? ஏனென்றால் பொருளுடைமைகளைப் பார்க்கிலும் எவ்வளவோ மிகுந்த மதிப்பு வாய்ந்த மற்றக் காரியங்கள் இருக்கின்றன.

3பொருளுடைமைகளுக்கு மிகப் பேரளவான முக்கியத்துவத்தைக் கொடுக்கிற சில இளைஞரை நீ சந்தேகமில்லாமல் அறிந்திருப்பாய். கண்ணைக் கவரும் ரேடியோ அல்லது டேப் ரெக்கார்டர், ஸ்டீரியோ இணைப்பு, தனிப்பட்ட உடை வகைகள், நிழற்படக் கருவி, மோட்டார் ஸ்கூட்டர் அல்லது தங்கள் சொந்த மோட்டார் கார் ஆகியவற்றைக் கொண்டிருப்பதைச் சிலர் மிக உயர்வாய் மதிப்பதாகத் தோன்றுகிறது. சிலர், தங்கள் பள்ளி படிப்புக்கோ, தங்கள் குடும்பத்திற்கோ அல்லது வேறு எந்தக் காரியங்களுக்கோ அக்கறை காட்டுவதைப் பார்க்கிலும் இவற்றிற்கே மிகப் பேரளவான அக்கறை காட்டுகின்றனர். மேலும் இப்படிப்பட்ட பொருளுடைமைகள் உன்னிடம் எவ்வாறு இருக்கின்றவோ அவற்றைக் கொண்டே உன்னையும் மற்றவர்களையும் மதிப்பிடவும் அவர்கள் மனம் சாய்வார்கள். இது அறிவுள்ள காரியமா?

4சற்று நின்று இதைப்பற்றி யோசித்துப்பார். இப்படிப்பட்ட பொருளுடைமைகளை நீ வைத்திருப்பது அல்லது வைத்திராதது, ஓர் ஆளாக நீ எப்படிப்பட்டவனாய் இருக்கிறாயோ அதில் உண்மையில் ஏதாவது வேறுபாட்டை உண்டாக்குகிறதா? அவற்றை உடையவனாக இருப்பாயானால் நீ மேம்பட்ட ஓர் ஆளாக இருக்கிறாயா அல்லது அவை இல்லையென்றால் நீ மோசமான ஆளாக இருக்கிறாயா? உண்மையில், மிக அதிக விலை மதிப்புள்ள உடைமைகளாகவும், ஓர் ஆளாக உன்னுடைய தகைமையை உண்மையில் தீர்மானிப்பவையாகவும் உனக்கு மிக அதிக திருப்தியையும் சந்தோஷத்தையும் கொண்டுவரக் கூடியவையாகவும் இருப்பவை வேறு வகையானவை. இந்த மேம்பட்ட விலைமதிப்புள்ள உடைமைகளில் சில எவையாக இருக்குமென்று நீ எண்ணிப் பார்க்கக்கூடுமா?

அதிக விலை மதிப்புள்ள உடைமைகள்

5அறிவைப் பற்றியதென்ன? உதாரணமாக, மற்றொரு மொழியை அறிந்திருப்பதன் மதிப்பை, ஸ்டீரியோவை அல்லது ஒரு டிரான்ஸிஸ்டர் ரேடியோவை உடைமையாகக் கொண்டிருப்பதன் மதிப்போடு ஒத்துப்பார். இந்தப் பொருட்களைக் கொண்டிருப்பதில் தவறு எதுவும் இல்லை என்பது மெய்யே, மேலும்—உன்னுடைய மொழியில்—மற்ற ஆட்கள் பேசுவதையும் பாடுவதையும் கேட்டு நீ மகிழ்ச்சி அனுபவிக்கலாம். ஆனால் இரண்டாவதொரு மொழியைத் தெரிந்திருக்கும் அறிவைக் கொண்டு, தற்போது நீ அறிந்திருக்கிற மொழியில் மாத்திரமே நீ பேசக் கூடியதைப் பார்க்கிலும் அதிகமாக பூமியிலுள்ள இன்னும் பத்துக்கோடியளவான மக்களோடு நீ தானேயும் பேசக்கூடியவனாய் இருப்பாய். அந்த மொழியைப் பயன்படுத்துகிற ஆட்கள் நீ வாழுமிடத்திற்கு ஒருவேளை வரக்கூடும். அல்லது மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்பு உனக்கு எப்பொழுதாவது கிடைக்குமானால், இப்படிப்பட்ட அறிவு அந்தப் பயண மகிழ்ச்சியனுபவத்தோடு பேரளவான மகிழ்ச்சியைக் கூட்டக்கூடும்.

6அதைப்போலவே காரியங்களை எப்படிச் செய்வது என்பதைப் பற்றிய அறிவை அடைவதும் இருக்கிறது. எப்படி நன்றாய்ச் சமைப்பது, திறமையுள்ள தையல் வேலை செய்வது, திறமை வாய்ந்த தச்சனாயிருப்பது, அல்லது இயந்திர சம்பந்த பழுதுபார்த்தலில் தேர்ந்தவனாக இருப்பது ஆகியவற்றைக் கற்றுக்கொள்வது எவ்வளவு பெரும் மதிப்பு வாய்ந்ததென்பதை எண்ணிப்பார். ஏதோ வெறும் பொருளுடைமைகளைக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும், இந்தத் திறமைகள், உன் வாழ்க்கையில் பயன்தரும் ஏதோவொன்றைச் செய்வதில் உனக்கு மிகப் பேரளவான எதிர்கால மதிப்பு வாய்ந்தவையாக இருக்கக்கூடும்.

7எல்லாவற்றைப் பார்க்கிலும் மிக அதிக மதிப்பு வாய்ந்தது கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய அறிவேயாகும். இது ஏன் உண்மையாயிருக்கிறது? ஏனென்றால் இதைக் கொண்டு இருதயம் நொறுங்குண்டவர்களுக்கும் நம்பிக்கை இழந்தவர்களுக்கும்—இன்னிசையும் ஸ்டீரியோ கருவியும் ஒருபோதும் கொண்டுவர முடியாத வண்ணமாய்—நீ ஆறுதலையும் நம்பிக்கையையும் கொண்டு வரலாம். உண்மையில் கடவுளுடைய சத்தியத்தின் அறிவைக் கொண்டு உயிர்களையுங்கூட நீ காப்பாற்றலாம். எந்தப் பொருளுடைமை இதைச் செய்யக்கூடுமென்று நீ நினைக்கிறாய்? ஞானி பின்வருமாறு சொல்லி, தான் சிபாரிசு செய்வதை வாங்கும்படி இளைஞரை ஊக்கப்படுத்துவதில் அதிசயம் ஒன்றுமில்லை: “விலை கொடுத்துச் சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; ஞானம், போதகம், உணர்வையும் அப்படியே. நீதிமானைப் பெற்ற தந்தை மிக மகிழ்வான், ஞானவானைப் பெற்றவன் அவனிமித்தம் களிப்பான். உன் தகப்பனும் உன் தாயும் களிப்படைக, உன்னைப் பெற்றெடுத்தவளும் மகிழுக.”—நீதிமொழிகள் 23:23-25, தி.மொ.

8பொருளுடைமைகளைக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் ஒரு நற்பெயர் அல்லது நன்மதிப்பு எவ்வளவு அதிக விலை மதிப்புள்ளதென்பதையுங்கூட எண்ணிப்பார். நீ தன்னலமற்றவன், நேர்மையுள்ளவன், சுறுசுறுப்பாய் உழைக்கிறவன், நம்பத்தக்கவன், மரியாதையுள்ளவன் என்று அறியப்பட்டால், எந்த விசேஷித்த வகையான உடையும் செய்யக்கூடியதற்கு மிக மேலாக, இது உன்னை மகிழ்ச்சியுடன் வரவேற்பதற்குரிய தோற்றமுள்ளவனாக்கக்கூடும். இப்படிப்பட்ட நற்பெயரானது பெரும் மதிப்புவாய்ந்த நண்பனாக அல்லது உடன் வேலை செய்பவனாக அல்லது தொழிலாளியாக உன்னை மற்றவர் நாடித் தேடக்கூடும்படி செய்விக்கும். இது தங்களை வந்து பார்க்கும்படி அல்லது தங்களோடு காரியங்களைச் செய்யும்படி, தங்களோடு நல்ல காரியங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி அழைப்புகளை உனக்குக் கொண்டு வரக்கூடும். ஒரு டெலிவிஷன் கருவி தானேயும் செய்யக்கூடியதைப் பார்க்கிலும் மிக மேம்பட்ட அளவில் தனிமைக்குரிய எந்தப் பிரச்னையையும் இது தீர்க்குமல்லவா?

9மெய்யாகவே, நாம் மதித்துணரப்படுகிறோமென்ற, மற்றவர்களுடைய கவனத்துக்குரியவர்களாக இருக்கிறோமென்ற, நாம் உயிரோடிராவிட்டால் மற்றவர்கள் இழந்திருப்பதாக உணரும் ஏதோவொன்றை அவர்களுடைய வாழ்க்கைக்கு நம் பங்காகச் செய்து வருகிறோமென்ற நிச்சயத்தை நாம் உடையவர்களாக இருப்பதன்பேரில் நம்முடைய சந்தோஷத்தின் பெரும்பாகம் சார்ந்திருக்கிறது. பொருளுடைமைகள் நிறைந்தவனாக நீ இருப்பதைப் பார்க்கிலும் நல்ல பண்புகள் நிறைந்தவனாக இருப்பதே, மிகச் சிறந்த ஆட்களால் நீ வெகுவாய் மதித்துணரப்படும்படி செய்விக்கும். ஞானமொழிகளடங்கிய புத்தகம் சொல்லுகிற பிரகாரம்: “சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள், ராஜா அவனுக்கு சிநேகிதனாவான்.”—நீதிமொழிகள் 22:11.

10இளைஞனான தீமோத்தேயு, அப்போஸ்தலனாகிய பவுலின் மிஷனரி பிரயாணங்களில் உற்சாகமூட்டும் பல இடங்களுக்கு அவனுடன் செல்லும்படி தெரிந்தெடுக்கப்பட்ட சிலாக்கியத்தைப் பெற்றிருந்தான். இது தீமோத்தேயுவின் பொருளுடைமைகளின் காரணமாக அல்ல, ஆனால், சின்ன ஆசியாவில் இரண்டு பட்டணங்களில் இருந்த கிறிஸ்தவர்களால் அறிவிக்கப்பட்ட அவனுடைய நல்ல பண்புகளின் காரணமாகவேயாகும். இதன் பலனாக தீமோத்தேயு அடைந்த அந்த அனுபவம் விலை மதியாததாக இருந்தது. இது அவன் பின்னால் பொறுப்புள்ள முக்கிய வேலை நியமிப்புகளை ஏற்பதற்கும், மேலும் இந்த அப்போஸ்தலன் தானேயும் மிகுந்த நம்பிக்கை வைக்கக்கூடிய வகையான ஆளாக அவனிருப்பதற்கும் அவனைத் தகுதியுள்ளவனாக்கிற்று. தீமோத்தேயு பொருளுடைமைகளைத் தன் வாழ்க்கையில் பெரிய காரியமாக்கிக் கொள்ளவில்லை என்பதானது, பவுல் தீமோத்தேயுவை மக்கெதோனியாவின் பிலிப்பியிலிருந்த சபைக்கு அனுப்பினபோது சொன்ன பின்வரும் வார்த்தைகளிலிருந்து காணப்படுகிறது: “உங்கள் காரியங்களில் உண்மையாய்க் கவலைப்படுகிறதற்கு அதே மனதுள்ளவன் வேறொருவனும் என்னிடத்திலில்லை. அவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்கானவைகளை தேடாமல் தங்களுக்கானவைகளையே தேடுகிறார்கள் . . . அவன் [தீமோத்தேயுவின்] உத்தமத்தை அறிந்திருக்கிறீர்கள்.”—பிலிப்பியர் 2:19-23, தி.மொ.

11உண்மையான நண்பர்கள், நீ என்ன வைத்திருக்கிறாய் என்பதற்காக அல்ல, நீ எப்படிப்பட்டவனாய் இருக்கிறாய் என்பதற்காகவே உன்னை மதிப்பார்கள். “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.” (நீதிமொழிகள் 17:17) இதற்கும் மேலாக, யெகோவாவுடைய சேவையை உன் வாழ்க்கையில் பெரிய காரியமாக்குவாயானால் யெகோவா தாமே உன்னுடைய நண்பராக இருப்பார். “யெகோவா ஒருவன் வழியிலே பிரியங்கொண்டால் சத்துருக்களையும் அவர் மித்திரராக்குவார்.”—நீதிமொழிகள் 16:7, தி.மொ.

12மேலும், அறிவு, நற்பண்பியல்பு, மெய்யான நண்பர்கள் ஆகிய இப்படிப்பட்ட காரியங்கள் களவாடப்படக்கூடியவையுமல்ல, காலப் போக்கிலும் உபயோகத்தாலும் தங்கள் மதிப்பை இழந்து தேய்ந்து அழிந்து போகிறவையுமல்ல. ஆனால் உன் பொருளுடைமைகளை மக்கள் களவாடவோ அழித்துப் போடவோகூடும். ஆகவே கடவுளுடைய குமாரன் ஞானமாய்ப் பின்வருமாறு அறிவுரை கூறினார்: “பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.” (மத்தேயு 6:20, 21) கடவுளுடன் நீ ஒரு நல்ல பெயரை உடையவனாக[ளாக] இருந்து அதைக் காத்து வருவாயானால் உன்னுடைய எதிர்கால சந்தோஷம் உறுதியான நம்பிக்கையுடையதாகவும், நிச்சயமாகவும் இருக்கும். அவருடைய புதிய ஒழுங்கில் இந்தப் பூமியில் அடங்கியிருக்கும் நல்ல காரியங்களின் எல்லாச் செல்வங்களையும் நிறைவாக அனுபவித்து மகிழக்கூடியவனாய்[ளாய்] நீ இருப்பாய்.

உறுதியையும் ஞானத்தையும் காட்டு

13ஆகையால், நீ உன் வாழ்க்கையைப் பொருளுடைமைகளைச் சுற்றிக் கட்டும்படி தற்போதைய வியாபார ஒழுங்குமுறைகள் தங்களுடைய பெரும் சக்தி வாய்ந்த விளம்பரங்களைக் கொண்டு உன்னை வற்புறுத்தி இயக்குவதற்கு நீ ஏன் இடங்கொடுக்க வேண்டும்? அவர்களைச் செல்வந்தராக்கி, முடிவில், வாழ்க்கையில் உண்மையாக பயனுடைய காரியங்களைக் குறித்த வரையில், உன்னை நீ ஏன் ஏழையாக்கிக் கொள்ள வேண்டும்? பொருளாசையின் இழப்பை எதிர்த்து நிற்பதற்கு மெய்யான உறுதியை நீ காட்டி, பொருளுடைமைகளைப் பார்க்கிலும் அதிக விலை மதிப்புள்ள காரியங்களைத் தேடுவதன்மூலம் வாழ்க்கையை மிக நன்றாய்ப் பயன்படுத்திக் கொள்ள தீர்மானமாய் நீ ஏன் இருக்கக்கூடாது?

14முக்கிமாய் இப்பொழுது இது இன்றியமையாததாய் இருக்கிறது. இந்தத் தற்போதைய ஒழுங்குமுறை, அதன் எல்லா வியாபார நடவடிக்கையுடனும், அதன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறதென்று பைபிள் தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன. பொருள் சம்பந்த காரியங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதானது, நம்முடைய கவனத்தை வேறு வழியில் திருப்பி, நமக்குக் கண்ணியாக நிரூபிக்கும். இந்த ஒழுங்குமுறைக்குள் அமிழ்ந்து கிடக்கிறவர்களாக நாம் நம்மைக் காணக்கூடும், மேலும் கடவுள் அதை நீக்கிச் சுத்திகரித்து தம்முடைய புதிய ஒழுங்கைக் கொண்டு வருகையில் அதோடு துடைத்தகற்றப்பட்டுப் போவோம். இயேசு எச்சரித்தப் பிரகாரம்: எவ்வித பொருளாசைக்கும் இடங்கொடாதபடி எச்சரிக்கையாயிருக்கப்பாருங்கள். ஒருவனுடைய ஜீவன் அவனுடைய செல்வப் பெருக்கத்திலில்லை.”—லூக்கா 12:15, தி.மொ.

15இது, நாம் எவ்வித பொருளுடைமைகளையும் கொண்டிருக்கக் கூடாதென்பதல்ல. ஆனால் அவை நம்முடைய வாழ்க்கையை அடக்கியாள நாம் விரும்புகிறதில்லை. மேலும் மெய்யான மகிழ்ச்சிக்கு உண்மையில் உதவி செய்யக்கூடிய பொருளுடைமைகளையும் நம்முடைய இலக்கை அடைவதில் நமக்கு மெய்யாகவே தடங்கல் செய்யக்கூடியவற்றையும் வேறுபடுத்தக் காணக்கூடியவர்களாக நாம் இருக்கவேண்டும். அப்படியானால், உனக்கு என்ன பொருளுடைமைகள் இருந்தாலும், அவற்றை மற்றவர்களின் நன்மைக்காகவும் முக்கியமாய் உன் சிருஷ்டிகரைக் கனப்படுத்தவும் பயன்படுத்த வேண்டுமென்பதை உன் குறிக்கோளாக வைத்துக்கொள்.

[கேள்விகள்]

1-4. (எ) இளைஞர் பலர் வைத்திருக்க விரும்புகிற பொருளுடைமைகள் சில யாவை? (பி) பொருள் சம்பந்தமான காரியங்களில் அளவுக்கு மீறிய அழுத்தம் வைப்பது எப்படி ஆட்களைப் பற்றிய மாறாட்டமான நோக்கைக் கொண்டிருக்க ஒருவனைச் செய்விக்கும்?

5-7. (எ) இரண்டாவதொரு மொழியை அல்லது காரியங்களை எப்படிச் செய்வதென்பதைத் தெரிந்திருக்கும் இந்த அறிவு எப்படி பொருளுடைமைகளைப் பார்க்கிலும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கக்கூடும்? (பிரசங்கி 7:12) (பி) கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய அறிவு ஏன் இன்னும் அதிக மதிப்பு வாய்ந்தது? (நீதிமொழிகள் 15:2; 1 தீமோத்தேயு 4:16)

8-12. (எ) நீ வைத்திருக்கிற பொருளுடைமைகளைப் பார்க்கிலும், நீ எப்படிப்பட்ட பண்பியல்புள்ள ஆளாக இருக்கிறாய் என்பது ஏன் மேம்பட்ட மதிப்புடையது? பைபிள் இதை எப்படிக் காட்டுகிறது? (பி) ஆகையால் என்ன பண்புகளை நம்மில் வளர்த்துவர நாம் முயல வேண்டும்? (கலாத்தியர் 5:22, 23)

13-15. (எ) பொருளுடைமைகளுக்கான ஆசை உன் வாழ்க்கையை அடக்கியாண்டதால் நீ யாரைச் செல்வந்தராக்குவாய்? ஆனால் நீ எப்படி இழக்கிறவனாவாய்? (மத்தேயு 6:33) (பி) பொருளுடைமைகளை எவ்வாறு நோக்குவதானது சமநிலையான ஒரு கருத்தாக இருக்கிறது?