Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

போதை மருந்துகள்—வாழ்க்கையை உண்மையிலேயே அனுபவிப்பதற்கு திறவுகோலா?

போதை மருந்துகள்—வாழ்க்கையை உண்மையிலேயே அனுபவிப்பதற்கு திறவுகோலா?

அதிகாரம் 15

போதை மருந்துகள்—வாழ்க்கையை உண்மையிலேயே அனுபவிப்பதற்கு திறவுகோலா?

ஒருவேளை உங்கள் வீட்டில்—அமைதியூட்டும் அல்லது நோவகற்றும் மருந்துகள், “கிளர்ச்சியூட்டும் மாத்திரைகள்”—போன்ற ஏதோ வகையான போதை மருந்துகள் இருக்கலாம், ஏனென்றால் இன்று நம்மில் பலர் போதை மருந்து பீடிக்கப்பட்ட சமுதாயத்தில் வாழ்கிறோம். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில் இந்தப் போதை மருந்து தொழில், இரண்டாம் உலகப்போர் முதற்கொண்டு முப்பது மடங்குகளுக்கு மேலாக அதிகரித்திருக்கிறது. ஒரு சமீப ஆண்டில் “[ஐக்கிய மாகாணங்களிலுள்ள] ஒவ்வொரு ஆண், பெண், பிள்ளையும் ‘கிளர்ச்சியுற்ற,’ ‘ஓய்வுற்ற’ அல்லது ‘வெளியேறிய’ நிலையில் ஒரு முழு மாதம் வைப்பதற்கும்” போதிய மனநிலை மாற்றும் போதை மருந்துகள் வைத்தியர்களால் குறித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று டாக்டர் மிட்செல் S. ரோசென்தால் கூறினார்.

2பெரும்பாலும் இந்தப் போதை மருந்துகள், வயதுவந்தவர்களுக்குக் குறித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சில நாடுகளில் இளைஞர்கள் ‘தங்களைக் களிப்புறச் செய்வதற்கு’ இவற்றின் ஒரு பெரும் பங்கை உட்கொண்டு வருகின்றனர். மேலும் ஹெரோய்ன், LSD, கஞ்சா உட்பட, பொதுவாய் மருத்துவ உபயோகத்திற்காகச் செய்யப்படாத மற்ற போதை மருந்துகளையுங்கூட அவர்கள் பயன்படுத்துகிறார்கள். சில இளைஞர்கள் பின்வருமாறு விவாதிக்கும் மனப்போக்குள்ளவர்களாக இருக்கலாம்: “பெரியவர்கள் மாத்திரைகளையும் உட்கொள்ளுகிறார்கள், புகையிலை பயன்படுத்துகிறார்கள், குடிவெறிக்குள்ளாகிறார்கள் என்றால், நான் ஏன் கஞ்சா புகைத்து அல்லது போதை மருந்துகள் உட்கொண்டு களிக்கக்கூடாது?” நீ என்ன நினைக்கிறாய்? போதை மருந்துகள் வாழ்க்கையை அதிக நிறைவாய் அனுபவித்துக் களிப்பதற்கு திறவுகோலாக இருக்கின்றனவென்று நீ நினைக்கிறாயா?

பலர் நாடும் போதை மருந்துகள்

3இன்பத்திற்காக ஆட்கள் நாடும் போதை மருந்துகளின் தொகை வெகு விரிவாய் இருக்கிறது. இவற்றைப் பற்றி நீ ஏற்கெனவே அதிகம் கேள்விப்பட்டிருக்கலாம். அவை யாவை என்பதைப் பற்றித் திரும்ப கவனிக்க ஒரு சில விநாடிகள் எடுத்துக்கொள்.

4பார்பிச்சுரேட்டுகள் இருக்கின்றன, இவை “ஓய்வுதருபவை,” என்பதாகச் சில சமயங்களில் அழைக்கப்படுகின்றன. இவை அமைதிப்படுத்தும் மருந்துகள், தூக்கம் வருவிக்க மருத்துவர்கள் இவற்றைக் குறித்துக் கொடுக்கக்கூடும். இவற்றில் இரண்டு டஜனுக்கு மேற்பட்ட வகைகள் இருக்கின்றன, ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே ஒவ்வொரு ஆண்டும் 525 டன்களுக்கு (476 மெட்ரிக் டன்களுக்கு) மேலாக இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாகம் சட்ட விரோதமான வழிவகைகளில் செலவிடப்படுகிறது.

5மேலும் “கிளர்ச்சியூட்டும் மாத்திரரைகள்” அல்லது “எழுச்சியூட்டுபவை” என்று பொதுவாய் அறியப்படுகிற பல கிளர்ச்சியூட்டும் மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. அம்பெட்டமின்கள் இவற்றில் முக்கியமானவை. மிகுந்த பசியை அடக்க, களைப்பைக் குறைக்க அல்லது சோர்வை அகற்ற, சில மருத்துவர்கள் இவற்றை உட்கொள்ளும்படி குறித்துக் கொடுக்கின்றனர். என்றபோதிலும், சட்டப்பூர்வமாய் உற்பத்தி செய்யப்படுகிற அம்பெட்டமின்களில் பாதி பாகம் சட்ட விரோத வழிவகைகளுக்குள் செல்கின்றனவென்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

6மாயக் காட்சிகளைக் கொண்டு வருகிற டஜன்கள் கணக்கான போதை மருந்துகளில் LSD a என்பதானது மிக அதிக வலிமை வாய்ந்தது. சமீப ஆண்டுகளில் “இரகசியமாய் இயங்குகிற” பல உற்பத்திச் சாலைகள் இதை உண்டாக்கத் தொடங்கியிருக்கின்றன. இதைப் பயன்படுத்துகிறவர்களின்பேரில் இது மந்திர மாயமான பாதிப்புகளை உண்டுபண்ணுகிறது. முக்கியமாய் பார்வை நிலைமாறச் செய்யப்படுகிறது. இது கடைசியாக உட்கொள்ளப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட பின்புங்கூட பொய்த் தோற்றங்களும் மாயக் காட்சிகளும் ஏற்படக்கூடும். ஒரு “கெட்ட பயணத்தில்” ஒருவன் காணும் தோற்றங்கள் அவனுக்குப் பயங்கர திகிலூட்டக்கூடும்.

7கஞ்சா என்பதானது கன்னபிஸ் என்ற செடியிலிருந்து செய்யப்படுகிற மிக விரிவாய்ப் பயன்படுத்தப்படும் போதை மருந்துகளில் ஒன்றாகும். இதைப் புகைக்கிற ஆட்கள் எவராவது உனக்குத் தெரியுமா? இதன் பாதிப்பு LSD-யைப் பார்க்கிலும் சற்று வலிமைக் குறைந்ததாக இருக்கிறபோதிலும், இதுவுங்கூட புலனுணர்வுகளின் மாறாட்டத்தை உண்டுபண்ணுகிறது. ஒருவன் கஞ்சா புகைத்துக்கொண்டிருக்கையில், ஐந்து நிமிடங்கள் ஒரு மணிநேரத்தைப் போல் தோன்றலாம். தொனியும் நிறங்களும் கடுமையாக்கப்பட்டதாய்த் தோன்றலாம்.

8ஹெரோய்ன் என்பதானது அபினிச் சத்துவிலிருந்து செய்யப்படுகிறது. இது அபின் தரும் கசகசாச் செடி வகையிலிருந்து வருகிறது. இது முக்கியமாய் அபாயகரமான போதை மருந்து. ஒரு சில தடவைகள் மாத்திரமே அதை ஊசியின் மூலம் உட்கொண்டபின் ஆட்கள் அதன் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகிவிடக்கூடும். அதை மேலுமதிகமாக உட்கொண்டால் தவிர, அதைவிட்டு விலகுவதில் பயங்கர வலிகளுக்கு உட்படுவார்கள். ஹெரோய்ன் உட்கொள்ளும் கெட்ட பழக்கத்திற்குள்ளாகையில் அது, கற்றுக்கொள்வதற்கான அவர்களுடைய மனவுறுதியையும் திறமையையும் அழித்துப்போடக்கூடும். தங்களைப் படிப்படியாய் அழித்துப்போடுகிற ஒரு துர்ப்பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகிறார்கள். நியு யார்க் காங்கிரஸ் ஆள் ஒருவர் பின்வருமாறு எழுதினார்: “ஹெரோய்ன் நம்முடைய பள்ளி ஒழுங்குமுறையின் இயக்கத்தை அழித்துவிட்டது.”

9நிச்சயமாகவே, வாழ்க்கையிலிருந்து மிக அதிகத்தைத் தாங்கள் அடையும்படி செய்யுமென்று மக்கள் பலர் எண்ணுகிற மற்ற போதை மருந்துகளும் இருக்கின்றன. இவற்றில் ஒன்று கொக்கேய்ன். புகையிலையிலுள்ள நிக்கோட்டீன் மற்றொன்று. இந்த போதை மருந்துகளை நீ பயன்படுத்தவேண்டுமா? முந்தின அதிகாரத்தில் நாம் பார்த்த பிரகாரம், பைபிள், மதுபானங்களின் மிதமான உபயோகத்தைக் கண்டனம் செய்கிறதில்லை, இவை ஒருவனைத் தளர்வுறச் செய்து, அவனுடைய இருதயத்தைக் களிகூரச் செய்யும். அப்படியானால், வாழ்க்கையை அதிகத் திருப்தியுள்ளதாக்கும் முயற்சியில், இந்தப் பல வகை போதை மருந்துகளில் எவற்றையாவது உபயோகிப்பது தகுந்த அல்லது ஞானமான காரியமாய் இருக்குமா?

அவற்றிற்கு ஓர் இடம் இருக்கிறதா?

10தெளிவாகவே, போதை மருந்துகளுக்கு அவற்றிற்குரிய இடம் இருக்கிறது. ஒருவேளை உடல்நல சிக்கல்களின் காரணமாக மருத்துவர் உனக்கு இவற்றில் ஒன்றை சில சமயங்களில் குறித்துக் கொடுக்கலாம். நீ கடும் வேதனையில் இருக்கிறாய் என்றால், உன்னுடைய நோவைத் தணிப்பதற்கு மருத்துவர் மார்பின் ஒரு வேளைக்கு மாத்திரம் கொடுக்கக்கூடும். மருத்துவ சிக்கல்களையுடைய சில நோயாளிகளுக்கு பார்பிச்சுரேட்டுகளும் அம்பெட்டமின்களும் சந்தேகமில்லாமல் உதவி செய்திருக்கின்றன. மேலும், கடை முடிவு நிலையில் இருக்கும் புற்றுநோய் நோயாளிகளின் கடும் வேதனையைத் தணிக்கும் உதவியாகச் சில இடங்களில் ஹெரோய்ன் பயன்படுத்தப்படுகிறது.

11ஆனால், மறுபட்சத்திலோ, போதை மருந்துகள் இலட்சக்கணக்கான ஆட்களுக்குப் பயங்கர தீங்கு செய்து கொண்டிருக்கின்றன. அறிவிப்பின்படி ஐக்கிய மாகாணங்களில் ஏறக்குறைய பத்து இலட்சம் பேர் பார்பிச்சுரேட் உட்கொள்ளும் துர்ப்பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் 3,000-த்திற்கு மேற்பட்டவர்கள் இதை அளவுக்கு மீறி உட்கொள்வதால் மரித்துக் கொண்டிருக்கின்றனர். ஹெரோய்ன் துர்ப்பழக்கத்திற்கு அடிமையாவது, ஒவ்வொரு நாளும் பல மரணங்கள் ஏற்படுவதில் விளைவடைவது மட்டுமல்லாமல் பத்தாயிரக்கணக்கான ஆட்கள் பயங்கர குற்றவாளிகளாக மாறும்படியும் செய்திருக்கிறது. தங்கள் செலவு மிகுந்த பழக்கங்களை ஆதரிக்க, இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், நியு யார்க் நகரத்தில், ஒவ்வொரு நாளும் சராசரி 30,00,000 டாலர்களுக்கு மேற்பட்ட மதிப்பான உடைமைகளைக் களவாடுகிறார்கள்!

12இது எதைக் குறிக்கிறது? போதை மருந்துகளை ஒழித்துக்கட்ட வேண்டுமா? அவசியமில்லை, ஏனென்றால் போதை மருந்துகளில் பல, நல்ல நோக்கத்தைச் சேவிக்க பயன்படுத்தப்படக்கூடும். ஆனால் பிரச்னை என்னவென்றால், எங்கும் விரிவாய் அவை தவறாகப் பயன்படுத்தப்படுதலே அல்லது அவற்றின் தகாப் பிரயோகமேயாகும். நோய்க்குச் சிகிச்சை உட்படாத போதும், மருத்துவ உபயோகத்துக்கு ஒருபோதும் கருதப்படாத மிகுந்த அளவுகளிலும் இலட்சக்கணக்கான ஆட்கள் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவற்றைப் பயன்படுத்துகிறவன் பெரும்பாலும் ஒரு வெறும் கனவு காணும் உணர்ச்சியை அடைய அல்லது ஏதோ ஒரு வகையான மயக்கவெறி மகிழ்ச்சி நிலைக்குள் செல்லவுங்கூட விரும்புகிறான். இப்படிப்பட்ட உபயோகம் சரிதானா?

உடலின் பேரில் பாதிப்பு

13பல போதை மருந்துகள் மருத்துவரின் மருந்து சீட்டு இருந்தால் மாத்திரமே கிடைக்கக்கூடியவையாக இருப்பதும் பல நாடுகளில் இவற்றில் சில சட்ட விரோதமானவையாகவுங்கூட இருப்பதும் உனக்கு அநேகமாய்த் தெரிந்திருக்கலாம். ஏன் என்று உன்னை நீயே கேட்டுக்கொள். இது நம்மெல்லாருடைய பாதுகாப்புக்காகவே. ஆம், போதை மருந்துகள் அபாயகரமானவையாக, மரணத்தையுங்கூட கொண்டுவருபவையாக இருக்கக்கூடும், செயல்முறையளவில் அவை இருபக்கமும் கருக்குள்ள ஒரு பட்டயமாக இருக்கின்றன, வேறு சந்தர்ப்பங்களில் தீங்கு செய்ய அல்லது கொல்லவுங்கூடியவையாக இருக்கின்றன. மருந்து பொருளியலின் பேராசிரியர் ஒருவரால் சேர்த்து எழுதப்பட்ட போதை மருந்துகள் என்ற புத்தகம் பின்வருமாறு விளக்குகிறது:

14“எல்லாப் போதை மருந்துகளும் நச்சுப் பொருட்கள், எல்லா நச்சுப் பொருட்களும் போதை மருந்துகள். ஆங்கிலத்தில் நச்சுப்பொருள் ‘poison’ (பாய்சன்) என்பதும், ஒரு வேளைக்குரிய மருந்துநீர் ‘potion’ (போஷன்) என்பதும் ஒரே மூல சொல்லிலிருந்து வருவது தற்செயலான ஒன்றல்ல. அவ்வாறே ஆங்கிலத்தில் ‘pharmacy’ (பார்மஸி), அதாவது மருந்துகடை என்பதும் ‘pharmacology’ (பார்மக்காலஜி), அதாவது மருந்து பொருளியல் என்பதும் கிரேக்கச் சொல்லாகிய pharmakon  (பார்மகான்) என்பதை அடிப்படையாகக் கொண்டிருப்பதாய் நாம் காண்கிறோம், இந்தக் கிரேக்கச் சொல் தொடக்கத்தில் சுகப்படுத்தும் ஒரு வேளை மருந்தளவு என்றும் கொல்லும் நச்சு அளவு என்றும் இந்த இரு அர்த்தத்தையும் கொண்டிருந்ததும் தற்செயலல்ல.”

15ஆகையால் நீ, நோய்வாய்ப்பட்டிருக்கையிலும், ஒரு போதை மருந்தை உட்கொள்வது மதிப்பிடப்பட்ட அபாயமாகவே இருக்கிறது. ஆனால் உன் உயிரை மதிப்பதனால் நீ இந்த அபாயத்தை ஒரு வேளை துணிந்து ஏற்று, நோவு தணிப்பதற்காக அல்லது உன்னுடைய உடல் நலக் கேடான நிலையை அபிவிருத்தி செய்வதற்காக ஒரு போதை மருந்தை உட்கொள்ளக்கூடும். ஆனால் “கிளர்ச்சி மிகுந்த நிலை” என்பதாக அழைக்கப்படுகிறதை உண்டுபண்ணி, மெய்ம்மையை மறந்து, ஏதோ கனவுக் காட்சி உலகத்துக்குள் செல்லும்படி உன்னைச் செய்விக்க ஒரு போதை மருந்தை நீ விழுங்குவதோ, ஊசியின் மூலம் உட்செலுத்துவதோ, புகைப்பதோ அல்லது முகர்வதோ சரியாகுமா? இது, கடவுளால் கொடுக்கப்பட்ட உன்னுடைய அதிசயமான உடலை நம்முடைய சிருஷ்டிகர் நோக்கங் கொண்டதற்கு இசைவாகப் பயன்படுத்துவதாய் இருக்கிறதா?

16இதைப் பற்றிச் சிந்தித்துப் பார். நீ யாருக்காவது மிக நேர்த்தியான ஒரு பரிசை, ஒரு புதிய மோட்டார் காரை கொடுக்கக்கூடியவனாக இருந்தாய் என்று வைத்துக் கொள்வோம். இந்தப் பரிசை அந்த ஆள் வேண்டுமென்றே தகாப் பிரயோகம் செய்வானென்றால் நீ எப்படி உணருவாய்? உதாரணமாக, ஒருபோதும் எண்ணெய் போடாமலே அல்லது எண்ணெய் மாற்றாமலே அதை இயங்க வைக்க முயன்று, அங்குமிங்கும் எருவைக் கொண்டு செல்வதற்கு அதை அவன் பயன்படுத்தினானென்றால் உனக்கு எப்படியிருக்கும்? உன்னுடைய பரிசை இப்படிப்பட்ட முட்டாள்தனமான முறையில் தகாப் பிரயோகம் செய்ததற்காக நீ ஒருவேளை அவன்பேரில் கோபமாய் அல்லது வெறுப்படைந்தவனாய் இருக்கலாம் அல்லவா? அப்படியானால், நம்முடைய அதிசயமான உடலை நாம் தவறான முறையில் பயன்படுத்துகிறவர்களாய், “இன்பத்தை” அல்லது “உணர்ச்சிக் கிளர்ச்சியை” நாடி, தேவையில்லாமல், ஏதோ நச்சுப் பொருளால் நிரப்பிவருவோமானால் யெகோவா தேவன் எப்படி உணருவார் என்று நீ நினைக்கிறாய்? அவருடைய வார்த்தை பின்வருமாறு நம்மை ஊக்கப்படுத்துவதன் மூலம் இதை நமக்கு அறிவிக்கிறது: “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவ பயத்தோடே பூரணப்படுத்தக் கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1) ஆகவே, “இன்பத்திற்காக” அல்லது “உணர்ச்சிக்காக” நாடித் தேடுகிறவர்களாய் நம்முடைய உடலை அசுசிப்படுத்துகிற ஒரு போதை மருந்தை நம்முடைய உடலுக்குள் உட்கொண்டு வருவோமானால், நாம் கடவுளுடைய சித்தத்துக்கு இசைவாக வாழ்கிறவர்களாய் இருக்க முடியாது.

17இந்தக் குறிப்பையும் கவனித்துப் பார். குடிவெறியைப்பற்றி சிருஷ்டிகர் கொடுத்திருக்கும் அறிவுரையை நாம் முன்னால் கலந்தாலோசித்திருக்கிறோம். மட்டுக்குமீறி குடிப்பதனால், தன்னை அடக்கியாளும் சக்தியை இழக்கிற ஒருவன், தன்னைத்தானே இழிவுபடுத்திக்கொள்ளுகிறான், பல தடவைகளில் அசுத்தமும் முட்டாள் தனமுமானவனாகி, தன்னைச் சுற்றியுள்ள ஆட்கள் சங்கட நிலைக்குள்ளாவதற்குக் காரணமாயிருக்கிறான். நம்மை உண்டாக்கினவர் சரியாகவே குடிவெறியைக் கண்டனம் செய்கிறார், இதைப் பற்றி எவ்வித சந்தேகமுமில்லை. ஆகவே, ஒருவன் ஹெரோய்ன், கஞ்சா அல்லது வேறு ஏதாவது போதை மருந்தை உட்கொண்டு தன்னடக்கத்தை இழந்தானென்றால், அப்பொழுது கடவுளுடைய கருத்து வேறுபட்டதாக இருக்குமா? போதை மருந்தை உட்கொண்டதால் ஏற்படும் எதிர்விளைவு, மதுபானத்தை உட்கொள்வதால் உண்டாகும் அதே எதிர்விளைவாக இராதபோதிலும், மதுபானத்தால் குடிவெறியடைந்தவர்களைப் போலவே அல்லது அதற்கும் மேலாகவே ஒருவன் தன்னடக்கத்தை இழக்கக்கூடும். ஆகவே பைபிளில் காணப்படுகிற விவேகமும் நியாயமுமான அறிவுரையிலிருந்து போதை வெறியூட்டும் கிளர்ச்சிகளுக்காக போதை மருந்துகளைப் பயன்படுத்தாமல் இருப்பதன் மதிப்பை நாம் காணக்கூடியவர்களாக இருக்கிறோம்.

புகையிலை பயன்படுத்துவதைப் பற்றியதென்ன?

18“அப்படியானால், தீங்கு விளைவிக்கக்கூடிய போதை மருந்தாகிய நிக்கோட்டீன் அடங்கியுள்ள புகையிலை பயன்படுத்துவதைப் பற்றியதென்ன? வயது வந்த கோடிக்கணக்கான ஆட்கள் தாங்கள் சொல்லிக்கொள்ளுகிற பிரகாரம் ‘இன்பத்திற்காகப்’ புகைக்கின்றனர். இது சரிதானா?” என்ற கேள்விகளை நீ ஒருவேளை கேட்கலாம். இல்லை, அது சரியல்ல. ஐக்கிய மாகாணங்களில் விற்கப்படும் சிகரெட் பெட்டிகளில் தோன்றுகிற பின்வரும் எச்சரிக்கை இதற்கு அத்தாட்சியாய் இருக்கிறது: புகைத்தல் உங்கள் உடல்நலத்திற்கு அபாயகரமானது. நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சரி, இந்தக் காரியம் உண்மையாயிருக்கிறது. அப்படியானால், ஏன் பெரியவர்கள் இத்தனை அநேகர், அறிந்தும் வேண்டுமென்றே புகைப்பதன் மூலம், இளைஞருக்கு ஒரு கெட்ட முன்மாதிரியை வைத்து அதே சமயத்தில் தங்கள் சொந்த உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ளுகிறார்கள்? பெரும்பாலும் அந்தக் கெட்ட பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகியிருப்பதன் காரணமாகவே. சயன்ஸ் உவோர்ல்ட் என்ற பத்திரிகையில் வந்த அறிக்கை பின்வருமாறு விளக்குகிறது:

19“கெட்ட பழக்கத்திற்கு அடிமையாவதை உண்டுபண்ணுகிற . . . இந்தப் போதை மருந்து நிக்கோட்டீன் ஆகும். . . . நிக்கோட்டீன் இல்லாத போது, உடல் அதற்காகப் ‘பசியுள்ளதாகிறது.’ அது அவ்வளவு மிகப் பசியடைவதனால் உடல், அதில்லாமல் ‘நோய்ப்பட்ட நிலைக்’குள்ளாகிறது. விலகல் குறிகள்—நோய்ப்பட்ட ஓர் உணர்ச்சி—தொடங்குகிறது. . . . இந்தக் குறிகளில் சில மந்த தூக்கநிலை, தலைவலிகள், வயிறு கோளாறுகள், வியர்த்துக் கொட்டுதல், ஒழுங்கற்ற இருதயத் துடிப்புகள் ஆகியவை.”

20தெளிவாகவே, புகைத்தல் ஒருவனின் உடலைக் கெடுத்துப் போடுகிறது; ‘மாம்ச அசுத்தங்களிலிருந்து’ தங்களைச் சுத்திகரித்துக்கொள்ள வேண்டுமென்று கிறிஸ்தவர்களுக்கு நம்முடைய சிருஷ்டிகர் சொல்லுகிறவற்றில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. ஆகவே புகைக்கிற பெரியவர்கள் போதை மருந்தை உட்கொண்டு தங்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிற இளைஞரைக் குற்றப்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக நீ ஒருவேளை உணரலாம். அது உண்மையே. பெற்றோர் நிக்கோட்டீனை உட்கொள்பவர்களாய்த் தங்களைத் தொடர்ந்து கெடுத்துக்கொண்டு வருகையில், போதை மருந்துகளைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி தாங்கள் சொல்வதைத் தங்கள் பிள்ளைகள் கவலையுடன் ஏற்கும்படி அவர்கள் எப்படி எதிர்பார்க்கக்கூடும்? என்றபோதிலும் மற்றவர்கள் என்ன செய்தாலும்சரி சொன்னாலும்சரி, நாம் ஒவ்வொருவரும் அவரவருடைய செயல்களுக்கு அவரவர் தனித்தனியே கணக்குக் கேட்கப்படுவோம். மேலும், ஒரு கிறிஸ்தவன் புகைப்பது தவறு என்று உணர்த்துகிற வேறு ஒன்றையுங்கூட கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது.

21பைபிள் பின்வருமாறு கட்டளையிடுகிறது: “உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக.” (மத்தேயு 22:39) ஆனால் மற்றவர்கள் முன்னிலையில் நீ புகைத்து அதே சமயத்தில் பிறனிடத்திலும் எப்படி அன்புகூரக்கூடும்? மெடிக்கல் டிரிப்யூன் பத்திரிகை பின்வருமாறு விளக்குவதைக் கருத்தில் கொண்டு இதை நாங்கள் கேட்கிறோம்: “சிகரெட் புகைப்பது அதைப் புகைக்கிறவனின் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல்—வெறுமென பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் குற்றமற்றவருக்குங்கூட தீங்குசெய்யக்கூடும்.” பிரசித்திப் பெற்ற ஒரு மருத்துவ பத்திரிகையும் பின்வருமாறு குறிப்பிட்டது: “காற்றோட்டம் சரியாயிராத இடத்தில், புகைக்கிறவனிடமிருந்து, புகைக்காதவன் கவலைக்கிடமான அளவில் உடல்நல தீங்குக்கு உட்படுத்தப்படுவான்.” புகைத்தல், புகைக்கிறவனைச் சுற்றியுள்ள ஆட்களுக்குங்கூட தீங்கு செய்வதால், நீ புகைத்துக்கொண்டு அதே சமயத்தில் உன் அயலானை உண்மையில் நேசிக்க முடியாதென்பது தெளிவாக இருக்கிறதல்லவா?

கஞ்சா வேறுபட்டதா?

22கஞ்சா புகைப்பதை மதுபானங்களைக் குடிப்பதோடு ஒப்பிடும் மனப்பான்மையை உடையவர்களாகச் சில இளைஞர் இருக்கிறார்கள். தங்கள் பெற்றோர் அல்லது மற்ற பெரிய ஆட்கள் மதுபானத்தை உட்கொண்டு ‘கிளர்ச்சி மிகுந்தவர்களாவதை’ அவர்கள் ஒருவேளை கண்டு, இதே விதமான பாதிப்புகளை உண்டுபண்ண கஞ்சா புகைத்தலில் எந்த வேறுபாடுமில்லை என்ற முடிவுக்கு வரலாம். இது சரிதானா?

23மதுபானங்களின் மிதமான உபயோகத்தை பைபிள் அனுமதிக்கையில், மிதமீறி குடிப்பதை அது கண்டனம் செய்து, “வெறியர் . . . கடவுளின் ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை,” என்று சொல்லுகிறது. (1 கொரிந்தியர் 6:9, 10, தி.மொ.) என்றபோதிலும், தாங்கள் கஞ்சாவை மிதமாகப் பயன்படுத்துவதாகவும், குடிவெறிக்கு ஒப்பான பாதிப்பை உண்டுபண்ணும் அளவுக்கு ஒருபோதும் பயன்படுத்துவதில்லை என்றும் இளைஞர் பலர் சொல்லக்கூடும். என்றாலும் கஞ்சாவானது மதுபானத்திலிருந்து வேறுபட்டதாய் இருக்கிறது. மதுபானத்தை உன் உடல், அதன் உயிரணுக் கட்டத்தில் (திசுக்களில்) “எரி”க்கக்கூடிய “எரி பொருளாக” மாற்றக்கூடும். இது ஓர் உணவாகும். ஆனால் உன் உடல் கஞ்சாவை பயன்படுத்த முடியாது. மேலுமாக, மது உன் உடல் அல்லது மூளை உயிரணுக்களில் நீண்ட நேரப் பகுதிகள் தங்கியிருப்பதில்லை. சில மணி நேரங்களில் அது உடலிலிருந்து கலைந்து செல்லும்படி செய்யப்படுகிறது. கஞ்சாவின் நச்சுப் பொருளோவெனில் விரைவில் கடந்து போவதில்லை, மேலும், உடலில் தீங்கான விளைவுகளை உண்டுபண்ணுகிறது. மருத்துவர் மற்றும் அறுவை மருத்துவரின் கொலம்பியா சர்வகலாசாலையிலிருந்து ஆறு மருத்துவர் நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையின் பதிப்பாசிரியருக்கு எழுதின ஒரு கடிதத்தில் பின்வருமாறு விளக்கினர்:

“கஞ்சா, நச்சுப் பொருட்கள் அடங்கியதாய் இருக்கிறது . . . அவை, கொழுப்பில் மாத்திரமே கரையக்கூடியவை, மேலும், மூளை உட்பட உடலின் உயிரணுக்கட்டங்களின் DDT-யைப் போல் பல வாரங்களாகவும் மாதங்களாகவும் சேமித்து வைக்கப்படுகிறது. இந்தப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கு இந்த உயிரணுக் கட்டங்களுக்கிருக்கும் கொள்திறம் மிகப் பெரியதாய் இருக்கிறது—இது, பழக்கமாய்ப் புகைப்பவர்களில் இவற்றின் தீங்கான தாமத பாதிப்புகளை விளக்குகிறது. இந்தப் பொருட்களை வாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பயன்படுத்துகிற எவரும் போதை மருந்துகளிலிருந்து விடுதலையானவர்களாக இருக்க முடியாது.”

24இவ்வாறு டுலேன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ராபர்ட் ஹீத் என்பவர் மதுபானத்தையும் கஞ்சாவையும் ஒப்பிடுவதை “முட்டாள்தனம்” என்று இகழ்ந்து கூறுகிறார். மதுபானம் “தற்காலிகமான பாதிப்பை” உடையதாய் இருக்கிறது. “கஞ்சா விடாது தொடருகிற பாதிப்பையுடைய சிக்கல் வாய்ந்தது,” என்று அவர் கூறுகிறார். ஆகவே, டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ் பின்வருமாறு குறிப்பிடுகிற பிரகாரம், மிதமாகவுங்கூட கஞ்சாவைப் பழக்கமாய்ப் பயன்படுத்துவது கெட்ட பாதிப்புகளை உண்டுபண்ணக்கூடுமென்பதில் சந்தேகமில்லை: “மருத்துவ ஆராயச்சியாளர் புதிய கண்டுபிடிப்புகளை அறிவிக்கின்றனர், அது, கஞ்சாவும்—அதன் அண்ணனும் [ஹார்ஷிஷூம்]—பழக்கமாய், வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் பயன்படுத்தி வந்தாலுங்கூட உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட ஆரோக்கியத்துக்கு நிச்சயமாகவே அபாயகரமானவை என்று தெரிவிக்கின்றன.”

25மெய்யாகவே, நம்முடைய சிருஷ்டிகர் நமக்குக் கொடுத்திருக்கிற வழிகாட்டும் நியமங்களுக்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம். அவர் நம்மை நேசிக்கிறார், இந்தக் காரணத்தினாலேயே, நம்முடைய நிலையான சந்தோஷத்துக்கும் சுகநலத்துக்கும் உதவி செய்யாமல் அதற்குப் பதிலாக நம்முடைய உடலை அசுத்தப்படுத்தி, இவ்வாறாக நமக்குத் தீங்கு செய்பவற்றைத் தவிர்க்கும்படி அவர் நம்மை ஏவுகிறார். நோய்ப்பட்டிருக்கும் ஓர் ஆளுக்கு சில போதை மருந்துகள் ஒருவேளை நன்மை செய்யக் கூடியவையாக இருக்கலாம், ஆனால் இன்பத்தை நாடித் தேடி அவற்றை உட்கொள்ள மனம் சாய்கிறவர்களுக்கு அவை தீங்கு மாத்திரமே செய்யக்கூடும். வாழ்க்கையை உண்மையிலேயே அனுபவிப்பதற்கு அவை திறவுகோலாகாது.

[அடிக்குறிப்புகள்]

a லைசெர்ஜிக் ஆசிட் டையெதிலமைட்.

[கேள்விகள்]

1, 2. (எ) உனக்குத் தெரிந்திருக்கிற ஆட்களுக்குள் போதை மருந்துகள் எவ்வளவு விரிவாகப் பயன்படுத்தப்படுகின்றன? (பி) இளைஞராகிய நீங்கள் போதை மருந்துகள் ஏன் பயன்படுத்துகிறீர்கள்?

3-9. (எ) “இன்பத்தி”ற்காக அல்லது சந்தோஷத்திற்காக பயன்படுத்தப்படுகிற போதை மருந்துகள் யாவை? இவற்றைப் பயன்படுத்துகிறவர்களை இவை எவ்வகைகளில் பாதிக்கின்றன? (பி) இந்தப் பாதிப்புகள் உண்மையென்று உறுதி செய்பவையாய் இந்தப் போதை மருந்துகளால் பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்கள் எவையாவது உனக்குத் தெரியுமா?

10-12. (எ) ஓர் ஆளுக்கு உதவி செய்ய டாக்டர் ஒரு போதை மருந்தை எப்படிப் பயன்படுத்தக்கூடும்? (பி) ஆனால் போதை மருந்துகளைத் தகாப் பிரயோகம் செய்வது மக்களுக்கு எப்படிப் பயங்கர தீங்கை விளைவிக்கக்கூடும்?

13-17. (எ) மருத்துவ இலக்கியங்களில் காட்டப்பட்டிருக்கிறபடி, எல்லா போதை மருந்துகளும் உண்மையில் யாவை? (பி) ஆகவே மருத்துவ நோக்கங்களுக்குங்கூட இவற்றின் உபயோகம் ஏன் துணிந்து மேற்கொள்ளும் அபாயமாக இருக்கிறது? (சி) வெறுமென இன்பத்திற்காக அல்லது ‘கிளர்ச்சிமிக்க நிலை’க்காக போதை மருந்துகளை எவ்வகையிலாவது பயன்படுத்துவதைக் கடவுள் எவ்வாறு கருதுகிறார் என்பதைப் பின்வரும் வேத வசனங்கள் எப்படிக் காட்டுகின்றன? விளக்குங்கள்: 2 கொரிந்தியர் 7:1; ரோமர் 13:13; 12:1.

18-21. (எ) புகைப்பது ஒருவருடைய உடல்நலத்திற்கு அபாயகரமானதென்று நன்றாய்த் தெரிந்திருக்கிறபோதிலும் ஏன் இத்தனை பல ஆட்கள் புகைக்கின்றனர்? (பி) ஒரு கிறிஸ்தவன் புகைப்பது தவறு என்பதற்குக் குறைந்தபட்சம் இரண்டு காரணங்களையாவது கொடுங்கள்.

22-25. (எ) கஞ்சாவை மிதமாய்ப் பயன்படுத்துவதுங்கூட உடலைப் பாதிப்பது, மதுபானத்தின் பாதிப்பிலிருந்து எப்படி வேறுபடுகிறது? (பி) தீங்கான பழக்க வழக்கங்களுக்கு எதிராக நம்மை எச்சரிப்பதில், கடவுள் எப்படி, நம்முடைய வாழ்க்கையை மிக நன்றாய்ப் பயன்படுத்திக்கொள்ள நமக்கு உண்மையில் உதவி செய்கிறார்? (ஏசாயா 48:17; சங்கீதம் 16:11; நீதிமொழிகள் 3:1-7)

[பக்கம் 108-ன் முழுபடம்]

[பக்கம் 113-ன் படம்]

வயதில் பெரியவர்களாயிருக்கும் இலட்சக்கணக்கானோர் புகைப்பதுதானே நீங்கள் புகைப்பதற்குக் காரணமாய் இருக்கிறதா?