Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் துன்பத்தை அனுமதிக்க காரணமென்ன?

கடவுள் துன்பத்தை அனுமதிக்க காரணமென்ன?

அதிகாரம் 16

கடவுள் துன்பத்தை அனுமதிக்க காரணமென்ன?

சிருஷ்டிகர் இருப்பதை அநேகர் சந்தேகிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்ன தெரியுமா? இவ்வுலகில் மலிந்துகிடக்கும் துன்பமே என பொதுவாக அநேகர் கூறுகின்றனர். பல நூற்றாண்டுகளாகவே கொடுமையும், இரத்தம் சிந்துதலும், துன்மார்க்கமும் கோடிக்கணக்கான அப்பாவி மக்களுக்கு சொல்லிலடங்கா துன்பத்தைக் கொண்டுவந்துள்ளன. ஆகவேதான் பலர் இவ்வாறு கேட்கின்றனர்: ‘கடவுள் ஒருவர் இருந்தால் இதையெல்லாம் ஏன் அனுமதிக்கிறார்?’ பைபிளின் விவரங்கள் சிருஷ்டிப்பு பற்றிய உண்மைகளோடு ஒத்திருப்பதை நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம் அல்லவா? ஆகவே, வல்லமையுள்ள ஒரு சிருஷ்டிகர் நீண்ட காலமாகவே இவ்வளவு ஏராளமான துன்பத்தை அனுமதிப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளவும் பைபிளால் நமக்கு உதவ முடியுமா?

2இந்தக் கேள்விக்கு பதிலளிக்க தேவையான பின்னணியை ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களில் காண்கிறோம். துன்பமில்லாத ஓர் உலகம் படைக்கப்பட்டதைப் பற்றி அது விவரிக்கிறது. முதல் மனிதனும் மனுஷியும் பரதீஸ் போன்ற சூழ்நிலையில் வாழ்க்கையை ஆரம்பித்தனர், அது ஏதேன் என்றழைக்கப்பட்ட அழகான தோட்ட வீடாகும். பூரிப்பளிக்கும் சவால் மிகுந்த வேலையும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்தப் பூமியைப் “பண்படுத்தவும் காக்கவும்” வேண்டும் என அவர்களிடம் சொல்லப்பட்டது. அதுமட்டுமா, “சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும்” கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.​—ஆதியாகமம் 1:28; 2:⁠15.

3கூடுதலாக, முதல் மானிட ஜோடி பரிபூரண உடலுடனும் மனதுடனும் படைக்கப்பட்டதால் அவர்களுக்கு எந்தவித குறைபாடும் இருக்கவில்லை. ஆகையால் வியாதி, வயோதிகம் அல்லது மரணம் காரணமாக அவர்கள் கஷ்டப்பட வேண்டிய அவசியமே இருக்கவில்லை. மாறாக, பூமியில் அமைந்த ஒரு பரதீஸில் முடிவே இல்லாத வாழ்க்கை என்ற பிரகாசமான நம்பிக்கை அவர்கள் முன்பிருந்தது.​—உபாகமம் 32:⁠4.

4அந்த முதல் ஜோடியிடம், “பலுகிப் பெருகி, பூமியை நிரப்”புங்கள் என்றும் சொல்லப்பட்டது. அவர்களுக்கு குழந்தைகள் பிறக்கையில் மனித குடும்பத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும். எல்லாருமாக சேர்ந்து பரதீஸின் எல்லைகளை விரிவாக்கி முழு பூமியையும் பூங்காவனம் போல ஆக்குவார்கள். இவ்வாறாக, மனித இனம் பரிபூரண ஆரோக்கியத்துடன் பூங்காவனமான பூமியில் ஒரே ஒன்றுபட்ட குடும்பமாக திகழும்.

கடவுளுடைய ஆட்சியை ஏற்பதற்கான தேவை

5ஆனால் இந்த ஒத்திசைவு தொடர வேண்டுமென்றால் முதல் மானிட ஜோடி ஒரு காரியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதாவது, மனித விவகாரங்களைக் கையாள தங்கள் சிருஷ்டிகருக்கே உரிமையிருப்பதை ஏற்க வேண்டும். அவருடைய பேரரசுரிமையை ஏற்றுக்கொள்வதை இது உட்படுத்தியது. ஏன்? அதுவே சரியானது என்பதே முதல் காரணம். ஒரு பொருளை உருவாக்கியவருக்கு அதன்மீது ஓரளவு அதிகாரம் செலுத்த உரிமையுள்ளது. இந்த நியமம், சொத்துரிமைப் பற்றிய சட்டங்களில் பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, மற்றொரு முக்கிய காரணத்திற்காகவும் மனிதர்கள் தங்கள் சிருஷ்டிகரின் வழிநடத்துதலை ஏற்க வேண்டிய அவசியம் உள்ளது. அதாவது, சிருஷ்டிகரின் உதவியில்லாமல் தங்களைத் தாங்களே வெற்றிகரமாக ஆண்டுகொள்ளும்படி மனிதர்கள் படைக்கப்படவில்லை. சாப்பிடுவதும், தண்ணீர் குடிப்பதும், சுவாசிப்பதும் உயிர் வாழ எவ்வளவு முக்கியமோ அதைப் போலவேதான் இதுவும். “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும்” பைபிள் கூறியது உண்மை என சரித்திரம் நிரூபிக்கவில்லையா? (எரேமியா 10:23) மனிதனுடைய சிருஷ்டிகர் அவனுக்காக கொடுத்துள்ள வழிகாட்டுதலுக்கு அவன் கீழ்ப்படியும் வரை, முடிவில்லாத, வெற்றிகரமான, சந்தோஷமான வாழ்க்கையை அவன் அனுபவிப்பான்.

6அதோடுகூட, தெரிவுசெய்யும் சுயாதீனத்துடனேயே மனிதர்கள் படைக்கப்பட்டனர். அவர்கள் ரோபோக்களைப் போல செயல்படும்படியோ, மிருகங்கள் அல்லது பூச்சிகளைப் போல வெறுமனே இயல்புணர்வினால் தூண்டப்படும்படியோ படைக்கப்படவில்லை. ஆனாலும் இது முழுமையான சுதந்திரம் அல்ல, மட்டுப்பட்ட சுயாதீனமே. கடவுளுடைய சட்டங்கள் என்ற வரம்புக்குள் அதை நியாயமான விதத்தில் உபயோகிக்க வேண்டும்; அவருடைய சட்டங்களும் நமது நன்மைக்கே அல்லவா? இந்த நியதியைப் பற்றி பைபிள் கூறுவதைக் கவனியுங்கள்: “சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.” (1 பேதுரு 2:16) மனித உறவுகளை வழிநடத்த சட்டங்கள் இல்லையென்றால் அது பெரும் குழப்பத்தில் விளைவடையும், அனைவருடைய உயிருக்குமே பயங்கரமான சேதம் ஏற்படுத்தும்.

7ஆகவே மட்டுப்பட்ட சுயாதீனத்தை நாம் அனைவருமே விரும்புவோம் என்றாலும் முழுமையான சுதந்திரம் விரும்பத்தக்கது அல்லவே. ஒரு குழந்தைக்கு அளவுக்கு அதிகமான சுதந்திரத்தை கொடுத்தால் அவன் பிஸியான ஒரு தெருவில் விளையாட ஆரம்பித்துவிடுவான் அல்லது சூடாயிருக்கும் அடுப்பில் தன் கையை சுட்டுக்கொள்வான். நமது சிருஷ்டிகரின் வழிநடத்துதல் இல்லாமல் முழு சுதந்தரத்தோடு நம்முடைய எல்லா தீர்மானங்களையும் நாமே செய்தால் அது சகல விதமான பிரச்சினைகளுக்கும் வழிநடத்தும். முதல் மனிதர்களின் விஷயத்திலும் இதுதான் நடந்தது அல்லவா? சுதந்திரம் என்ற தங்கள் பரிசை தவறாக உபயோகிக்க அவர்கள் தெரிவு செய்தனர். தங்கள் சிருஷ்டிகரிடமிருந்து பிரிந்து சுதந்திரமாய், “கடவுளைப்போல்” ஆகிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டனர். எது சரி, எது தவறு என்பதைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என நினைத்தனர்.​—ஆதியாகமம் 3:⁠5, NW.

8முதல் மனிதர்கள் தங்கள் சிருஷ்டிகரைவிட்டு விலகியபோது அவர்களுக்கு என்ன நிகழ்ந்தது? ஒரு மின் விசிறியை அதன் மின் இணைப்பிலிருந்து துண்டித்துவிட்டால் என்ன நடக்குமோ அதுதான் நடந்தது. மின்சாரத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் வரையில் மின் விசிறி ஓடும். இணைப்பு துண்டிக்கப்படும்போதோ கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து கடைசியில் முற்றிலும் நின்றுவிடும். ஆதாமும் ஏவாளும் ‘ஜீவஊற்றாகிய’ தங்கள் சிருஷ்டிகரிடமிருந்து விலகியபோது அவர்களுக்கும் அதுவே சம்பவித்தது. (சங்கீதம் 36:9) தங்கள் சிருஷ்டிகரிடமிருந்து விலகி சுதந்திரமாக இருக்க அவர்களே விரும்பி தெரிவு செய்ததால் அவர்களுடைய தெரிவின் முழு விளைவையும் உணர்ந்துகொள்ளும்படி கடவுள் அவர்களை சுதந்திரமாக விட்டுவிட்டார். “[கடவுளை] விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டு விடுவார்” என்ற பைபிள் நியமத்திற்கு இசைவாகவே இது உள்ளது. (2 நாளாகமம் 15:2) சிருஷ்டிகரின் ஆதரவளிக்கும் வல்லமை இனியும் இல்லாத காரணத்தால் அவர்களுடைய மனங்களும் உடல்களும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைய ஆரம்பித்தன. காலப்போக்கில், அவர்கள் வயோதிபராகி மரணம் அடைந்தனர்.​—ஆதியாகமம் 3:19; 5:⁠5.

9ஆதாமும் ஏவாளும் கடவுளிடமிருந்து சுயாதீனமாக இருக்க தெரிவு செய்தபோது பரிபூரணத்தை இழந்தனர். அவர்களுக்கு குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே இவ்வாறு நடந்துவிட்டது. ஆகவே, பின்னர் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தபோது அவர்களும் தங்கள் பெற்றோரைப் போலவே அபூரணமானவர்களாக இருந்தனர். இவ்வாறு முதல் மனிதர்கள் குறைவுள்ள மாதிரி படிவம்போல் ஆனார்கள். அவர்களிலிருந்து வந்த எல்லாமே குறைவுள்ளதாக இருந்தன. இதன் காரணமாகவே நாம் அனைவரும் அபூரணர்களாக பிறக்கிறோம்; வியாதி, வயோதிகம், மரணம் போன்ற குறைபாடுகளைப் பெற்றுக்கொள்கிறோம். இந்த அபூரண தன்மையோடு சிருஷ்டிகர் மற்றும் அவருடைய சட்டங்களிலிருந்து விலகியதும் சேர்ந்து கொண்டதால் மனித தவறுகள் என்ற மதகுகள் திறவுண்டன. அதனால்தான் துன்பம், துயரம், வியாதி, மரணம் போன்றவை மனித சரித்திரத்தை நிரப்பியுள்ளன.​—சங்கீதம் 51:5; ரோமர் 5:⁠12.

10அப்படியென்றால், துன்மார்க்கம் ஆரம்பிப்பதற்கு மனிதர்கள்தான் முழுக்க முழுக்க காரணமா? இல்லை, அதற்கு பின்னால் இன்னும் அதிகம் உள்ளது. புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகளாக படைக்கப்பட்டது மனிதர்கள் மட்டுமேயல்ல. பரலோகத்தில் ஏற்கெனவே எண்ணற்ற ஆவி சிருஷ்டிகளைக் கடவுள் படைத்திருந்தார். (யோபு 38:4, 7) தெரிவுசெய்யும் சுயாதீனம் அவர்களுக்கும் இருந்தது, சிருஷ்டிகருடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ள அவர்களும் தெரிவு செய்யலாம். ஆனால், அந்த ஆவி சிருஷ்டிகளில் ஒருவன் சுதந்திர மனப்பான்மை பற்றியே சிந்திக்க தெரிவு செய்தான். அவனுடைய ஆசை துளிர்விட்டு, வளர்ந்து, கடவுளுடைய அரசுரிமையை எதிர்க்கும் அளவுக்கு முற்றிவிட்டது. கடவுளுடைய சட்டத்தை மீறினாலும் ‘அவர்கள் சாகவே சாவதில்லை’ என்று ஆதாமின் மனைவியாகிய ஏவாளிடம் அவன் உறுதியளித்தான். (ஆதியாகமம் 3:4; யாக்கோபு 1:13-15) சிருஷ்டிகரின் உதவி இல்லாமலே அவர்களால் தொடர்ந்து சந்தோஷமாய் வாழமுடியும் என மறைமுகமாக சொன்னான். சட்டத்தை மீறுவதனால் நிலைமைகள் இன்னும் முன்னேறி அவர்கள் கடவுளைப்போல ஆகிவிடுவார்கள் என்றும் சொன்னான். இவ்வாறு, கடவுளுடைய சட்டங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறி ஆக்கினான், கடவுள் அவர்களை ஆளும் விதத்தைப் பற்றி சந்தேகத்தைக் கிளப்பிவிட்டான். அவர்களுடைய சிருஷ்டிகருக்கு அவர்கள்மீது ஆளுகை செய்ய உரிமை உள்ளதா என்பதையே கேள்விக்குறி ஆக்கிவிட்டான். இவ்வாறு தவறாக பிரதிநிதித்துவம் செய்ததால் “எதிர்ப்பவன்” என அர்த்தப்படும் சாத்தான் என்றும் “பழிதூற்றுபவன்” என அர்த்தப்படும் பிசாசு என்றும் பெயர் பெற்றான். கடந்த 6,000 வருடங்களாக சாத்தானின் இந்த மனப்பான்மையே மனிதவர்க்கத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. அதனாலேயே ‘ஆளுகை செய் அல்லது அழித்துப்போடு’ என்ற மனப்பான்மையை வளர்த்துவிட்டுள்ளான்.​—லூக்கா 4:2-8; 1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 12:⁠9.

11ஆனால், சட்டத்தை மீறிய இந்த மானிட மற்றும் ஆவி சிருஷ்டிகளை கடவுள் ஏன் ஆரம்பத்திலேயே அழித்துப்போடவில்லை? புத்திக்கூர்மையுள்ள மற்ற எல்லா சிருஷ்டிகளுக்கு முன்பாகவும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விவாதங்கள் எழுப்பப்பட்டன என்ற உண்மையிலேயே இதற்கான பதில் அடங்கியுள்ளது. அதில் ஒரு விவாதத்தில் பின்வரும் கேள்விகள் உட்பட்டுள்ளன: கடவுளுடைய அரசுரிமையிலிருந்து பிரிந்திருந்தால் நித்திய நன்மைகள் கிடைக்குமா? கடவுளுடைய வழிநடத்துதல் அவர்களுக்கு சிறந்ததாக இருக்குமா அல்லது மனிதர்களின் சொந்த வழிநடத்துதல் அவர்களுக்கு நன்மை பயக்குமா? சிருஷ்டிகரின் உதவியில்லாமல் மனிதர்களால் இந்த உலகை வெற்றிகரமாக ஆளுகை செய்ய முடியுமா? சுருங்கச் சொன்னால், கடவுளுடைய வழிநடத்துதல் மனிதர்களுக்கு உண்மையில் தேவையா? இந்தக் கேள்விகளுக்கு பதில்கள் தேவைப்பட்டன. காலம் கடந்துசெல்ல அனுமதித்தால்தான் பதில்களைப் பெறமுடியும்.

ஏன் இவ்வளவு நீண்ட காலம்?

12இந்த விவாதங்களைத் தீர்க்குமுன் ஏன் இவ்வளவு காலம் கடந்துசெல்ல கடவுள் அனுமதித்தார்? இன்றுவரை சுமார் 6,000 வருடங்கள் உருண்டோடிவிட்டனவே! வெகு காலத்திற்கு முன்பே ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்தில் இவற்றைத் தீர்த்திருக்க முடியாதா? கடவுள் வெகு காலத்திற்கு முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால், அனைவருக்கும் சமாதானத்தையும் செழுமையையும் அள்ளித்தரும் நடைமுறையான ஓர் அரசாங்கத்தையும் அதற்கு தேவையான தொழில் நுட்பத்தையும் வளர்க்க மனிதர்களுக்கு போதுமான காலத்தை அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கும். ஆகவே கடவுள் ஞானமுள்ளவராய், எழுப்பப்பட்ட விவாதங்களைத் தீர்க்க நேரமெடுக்கும் என்பதை அறிந்து அந்தக் காலத்தையும் அனுமதித்தார்.

13பல நூற்றாண்டுகளாகவே எல்லாவித அரசாங்கங்கள், சமூக, பொருளாதார அமைப்புகள் போன்றவற்றை மனிதன் முயற்சி செய்து பார்த்திருக்கிறான். அதோடுகூட, அணு சக்தியை உபயோகிப்பது, நிலாவுக்கு பயணம் செய்வது உட்பட அநேக தொழில்நுட்ப முன்னேற்றங்களில் சாதனை புரியவும் மனிதர்களுக்கு போதுமான அவகாசம் கிடைத்துள்ளது. இதனால் விளைந்திருப்பது என்ன? மனிதவர்க்கம் முழுவதற்கும் உண்மையான ஆசீர்வாதமாக அமையும் ஓர் உலகை அவர்களால் ஏற்படுத்த முடிந்திருக்கிறதா?

14இல்லவே இல்லை. மனிதன் எவ்வளவோ முயற்சி செய்தும் உண்மையான சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அனைவருக்கும் கொடுக்க முடியவில்லை. மாறாக, இவ்வளவு காலத்திற்கு பிறகும் நிலைமைகள் முன்பிருந்ததைவிட இன்னும் மோசமாகிக்கொண்டேதான் போகின்றன. குற்றச்செயல், யுத்தம், குடும்ப முறிவு, ஏழ்மை, பசி போன்றவை ஒவ்வொரு நாடாக சீரழித்து வருகின்றன. மனிதவர்க்கம் உயிர்வாழ்வதே கேள்விக்குறியாகி வருகிறது. பேரழிவை ஏற்படுத்தும் வல்லமை படைத்த அணுஆயுத ஏவுகணைகள் ஏறக்குறைய முழு மனிதவர்க்கத்தையுமே அழித்துவிடலாம். ஆகவே, ஆயிரக்கணக்கான வருடங்கள் முயற்சி செய்தும், மனிதர்கள் பல நூற்றாண்டுகளாக சேகரித்து வைத்துள்ள அனுபவம் இருந்தும், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தும் மனிதவர்க்கம் அதன் அடிப்படை பிரச்சினைகளைக்கூட சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறது.

15அவர்கள் பூமியையும் விட்டுவைக்கவில்லை, அதுவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மனிதன் தன் பேராசையாலும் அசட்டை மனப்பான்மையாலும் பாதுகாப்பளிக்கும் காடுகளை வெட்டித் தள்ளவே, சில இடங்கள் பொட்டல் காடுகளாக மாறியுள்ளன. இரசாயனங்களும் மற்ற கழிவுப் பொருட்களும் நிலம், நீர், காற்று ஆகியவற்றைக்கூட மாசுபடுத்தியுள்ளன. பூமியில் உயிரின் நிலைமை பற்றி 2,000 வருடங்களுக்கு முன்பு பைபிள் முன்னுரைத்தது இன்று மிகவும் பொருத்தமாக உள்ளதல்லவா? “இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது.”​—ரோமர் 8:⁠22.

என்ன நிரூபிக்கப்பட்டுள்ளது?

16இந்தக் காலப்பகுதியில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சந்தேகத்திற்கு இடமின்று எதை நிரூபித்துள்ளன? சிருஷ்டிகரை நிராகரிக்கும் மனித ஆட்சி திருப்தியளிக்காது என்பதையே. மனிதனை உண்டாக்கியவரை அசட்டை செய்தால் பூமியின் விவகாரங்களை வெற்றிகரமாக கையாள முடியாது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளது. ஆளுகை செய்ய மனிதன் எடுக்கும் முயற்சிகளைப் பைபிள் இவ்வாறு கூறுகிறது: “மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகி[றான்].” நேர்மையான இந்தக் கூற்று உண்மையென சரித்திரம் தொடர்ந்து நிரூபித்துள்ளது அல்லவா?​—பிரசங்கி 8:⁠9.

17மனித முயற்சிகள் எல்லாம் எவ்வளவாய் கேடு விளைவித்துள்ளன! மாறாக, சிருஷ்டிகரின் சட்டங்களால் வழிநடத்தப்படும் இப்பிரபஞ்சத்தில் ஒழுங்கும் துல்லியமும் எவ்வளவாய் மின்னுகின்றன! கடவுளுடைய மேற்பார்வையை அசட்டை செய்வது சீரழிவிற்கு வழிநடத்தியிருப்பதால் மனிதர்களுடைய காரியங்களைக் கையாள அவர்களுக்கும் இப்படிப்பட்ட வழிநடத்துதல் தேவை என்பது தெளிவாய் இல்லையா? காற்று, நீர், உணவு போன்றவை நமக்கு அவசியமானது போலவே கடவுளுடைய வழிநடத்துதலும் நமக்கு அவசியம் என்பது எல்லா காலத்திற்குமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.​—மத்தேயு 4:⁠4.

18மனித ஆட்சி சம்பந்தப்பட்ட விவாதங்களை தீர்க்க போதுமான காலம் அனுமதிப்பதன் மூலம் எதிர்காலத்திற்கும் ஒரு நிலையான முந்நிகழ்ச்சியைக் கடவுள் ஸ்தாபித்துள்ளார். இதை, உச்சநீதி மன்றத்தின் ஓர் அடிப்படை வழக்கிற்கு ஒப்பிடலாம். பின்வரும் விவாதம் எல்லா காலத்திற்குமாக தீர்க்கப்பட்டுவிட்டது: கடவுளை நிராகரிக்கும் மனித ஆட்சியால் பூமியில் சந்தோஷமான நிலைமைகளைக் கொண்டுவரவே முடியாது. ஆகவே எதிர்காலத்தில், தெரிவு சுயாதீனம் உள்ள யாராவது ஒருவர் கடவுள் செயல்படும் முறைகளுக்கு எதிராக சவால்விட்டால் அவருடைய குற்றச்சாட்டை நிரூபிக்க இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் இருக்காது. கடவுள் தற்போது அனுமதித்துள்ள சுமார் 6,000 வருடங்களில், நிரூபிக்கப்பட வேண்டிய எல்லா காரியங்களுமே நிரூபிக்கப்பட்டுவிட்டன. இனி நித்திய எதிர்காலத்திற்கும், பூமியில் வாழ்க்கையின் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் குலைத்துப்போட அல்லது இப்பிரபஞ்சத்தில் வேறு எங்கும் கடவுளுடைய அரசுரிமையில் குறுக்கிட எந்தக் கலகக்காரனும் அனுமதிக்கப்பட மாட்டான். பைபிள் அழுத்தம் திருத்தமாக கூறுவது போலவே, “துன்பம் இரண்டாவது முறை தலைதூக்காது.”​—நாகூம் 1:⁠9, NW.

கடவுளின் தீர்வு

19இவ்வாறாக, கடவுள் படைத்த ஓர் உலகில் துன்பம் நிறைந்திருப்பதற்கு நியாயமான காரணத்தை பைபிள் கொடுக்கிறது. அதுமட்டுமா, கடவுள் வெகு சீக்கிரத்தில் தம்முடைய மகா வல்லமையைப் பயன்படுத்தி துன்பத்திற்கு காரணமானவர்களை நீக்கிவிடுவார் என்றும் பைபிள் தெள்ளத்தெளிவாக கூறுகிறது. நீதிமொழிகள் 2:21, 22 இவ்வாறு கூறுகிறது: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.” ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கடவுள் கெடுத்துவிடுவார்,’ இது நிச்சயம். (வெளிப்படுத்துதல் 11:18) கடைசியில், பிசாசாகிய சாத்தான் நீக்கப்படுவதையும் அது உட்படுத்துகிறது. (ரோமர் 16:20) கடவுளுடைய அருமையான படைப்பாகிய இப்பூமியை துன்மார்க்கர் இனியும் கெடுத்துப்போட அவர் அனுமதிக்கமாட்டார். அவருடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிய மறுப்பவர்கள் துடைத்தழிக்கப்படுவார்கள். கடவுளுடைய சித்தத்தை செய்பவர்கள் மட்டுமே தொடர்ந்து வாழ்வார்கள். (1 யோவான் 2:15-17) களைகள் நிறைந்த ஓரிடத்தில் பூச்செடிகளை நீங்கள் நடுவீர்களா? அல்லது கோழிகளையும் நரிகளையும் ஒரே கூண்டில் சேர்த்து அடைப்பீர்களா? கடவுளும் அதைப்போலவே, நீதியுள்ள மனிதருக்காக பரதீஸைத் திரும்ப நிலைநாட்டுகையில் துன்மார்க்கர் அங்கு நடமாட அனுமதிக்கமாட்டார்.

20பல நூற்றாண்டுகளாக துன்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களில் வழிந்தோடிய கண்ணீர் ஏராளம் ஏராளம். என்றாலும் அது ஒரு நல்ல நோக்கத்தை சேவித்துள்ளது. உங்கள் குழந்தைக்கு இருக்கும் பெரும் உடல்நல பிரச்சினையை குணப்படுத்த வேதனைமிக்க ஒரு அறுவை சிகிச்சை செய்ய நீங்கள் அனுமதிப்பதற்கு இதை ஒப்பிடலாம். அச்சமயம் ஏற்படும் வலியைவிட நீண்ட கால நன்மைகள் ஏராளமானவை அல்லவா? அதோடுகூட மனிதர்களுக்கும் இந்தப் பூமிக்கும் கடவுள் வைத்துள்ள எதிர்காலம், கடந்தகால கசப்பான நினைவுகளை எல்லாம் மனத்திரையிலிருந்து துடைத்தழித்துவிடும்: “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” (ஏசாயா 65:17) இவ்வாறாக, கடவுள் பூமி முழுவதையும் ஆளுகை செய்கையில் அதில் வாழ்பவர்களுடைய மனங்களிலிருந்து அவர்கள் இதுவரை எதிர்ப்பட்ட துயரங்கள் எல்லாம் சுவடே தெரியாமல் மறைந்துவிடும். அப்போது நிலவும் சந்தோஷங்கள், கசப்பான எண்ணங்களை எல்லாம் அழித்துவிடும். ஏனென்றால், “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின . . . சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்.”​—வெளிப்படுத்துதல் 21:4, 5.

21வரவிருக்கும் இந்தப் புதிய உலகத்தை “மறு சிருஷ்டிப்பு” என இயேசு கிறிஸ்து அழைத்தார். (மத்தேயு 19:28, NW) முன்னர் துன்பத்தாலும் மரணத்தாலும் பீடிக்கப்பட்டவர்கள், கடவுளுக்கு உண்மையிலேயே தங்கள்மீது அக்கறையிருப்பதை அப்போது கற்றுக்கொள்வர். ஏனென்றால், அக்காலத்திலே பிரேதக்குழிகளில் உள்ளவர்கள் உண்மையிலேயே மறுபடியும் சிருஷ்டிக்கப்படுவதை அவர்கள் காண்பர். “ஞாபகார்த்த கல்லறைகளில் உள்ளவர்கள் அனைவரும் . . . வெளியே வருவார்கள்,” அதாவது பூமியில் வாழ உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என இயேசு கூறினார். (யோவான் 5:28, 29, NW) இந்த விதத்தில், கடவுளுடைய நீதியுள்ள ஆட்சிக்கு கீழ்ப்படிந்து பூங்காவனமான சூழ்நிலையில் என்றென்றுமாக வாழும் பாக்கியத்தைப் பெற மரித்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும். அந்தச் சூழ்நிலையையே இயேசு ‘பரதீஸ்’ என்று அழைத்தார்.​—லூக்கா 23:⁠43.

22மிருக ஜீவன்கள்கூட சமாதானமாய் வாழும். “ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்,” மேலும் “ஒரு சிறுபையன் அவைகளை நடத்துவான்” என்றும் பைபிள் கூறுகிறது. கடவுளுடைய புதிய உலகில் மிருகங்கள் அவற்றின் மத்தியிலோ மனிதர்களுக்கோ ‘தீங்கும் செய்யாது கேடும் செய்யாது.’​—ஏசாயா 11:6-9; 65:⁠25.

23இவ்வாறு ரோமர் 8:20 கூறுகிற விதமாகவே எல்லா அம்சங்களிலும், “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்.” காலப்போக்கில் இந்தப் பூமியானது ஒரு பூங்காவனமாக மாறும்; வியாதி, துயரம், மரணம் போன்றவை இல்லாத பரிபூரண மக்கள் அதில் வாழ்வார்கள். துயரங்கள் கடந்தகால கதையாகிவிடும். கடவுளுடைய பூமிக்குரிய சிருஷ்டிப்பின் எல்லா அம்சங்களும் அவருடைய நோக்கத்திற்கு முற்றிலும் இசைவாக செயல்படும். அவருடைய அழகிய பிரபஞ்சத்தைப் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக சீர்கெடுத்த அசிங்கமான கறை முற்றிலுமாக துடைத்தழிக்கப்பட்டுவிடும்.

24கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார், இந்தப் பிரச்சினையை அவர் எவ்வாறு தீர்ப்பார் என்பதற்கு பைபிள் இந்தக் காரணத்தையே தருகிறது. இருந்தாலும் சிலர் மனதில் இந்தக் கேள்வி எழலாம்: ‘பைபிள் சொல்வதை நான் எப்படி நம்புவது?’

[கேள்விகள்]

1. சிருஷ்டிகர் இருப்பதை சந்தேகிப்பதற்கு எது காரணமென பொதுவாக மக்கள் கூறுகின்றனர்?

2. முதல் மானிட ஜோடிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட சூழ்நிலையைப் பைபிள் எவ்வாறு விவரிக்கிறது?

3. ஆதாம், ஏவாளுக்கு முன் என்ன நம்பிக்கை வைக்கப்பட்டது?

4. மனிதருக்கும் பூமிக்குமான கடவுளுடைய நோக்கம் என்ன?

5. மனிதர்கள் கடவுளுடைய ஆட்சியை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது?

6, 7. (அ) கடவுள் மனிதர்களுக்கு என்ன விதமான சுயாதீனத்தைக் கொடுத்தார், ஏன்? (ஆ) முதல் மனிதர்கள் என்ன தவறான தெரிவைச் செய்தனர்?

8. ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய ஆட்சியிலிருந்து விலகியபோது என்ன நடந்தது?

9. முதல் மனிதர்களின் தவறான தெரிவால் மனிதவர்க்கம் முழுவதும் எவ்வாறு பாதிக்கப்படலானது?

10. (அ) ஆவியுலகில் என்ன கலகம் ஏற்பட்டது? (ஆ) அப்படிப்பட்ட ஒரு காரியம் எவ்வாறு நடக்க முடியும்?

11. கலகக்காரர்களைக் கடவுள் ஆரம்பத்திலேயே ஏன் அழித்துப்போடவில்லை?

12. கடவுள் ஆரம்பத்திலேயே தலையிட்டிருந்தால் அவருக்கு எதிராக என்ன குற்றச்சாட்டு எழுந்திருக்கும்?

13, 14. கடவுளிடமிருந்து சுதந்திரம் எதில் விளைவடைந்துள்ளது?

15. மனிதனுடைய கலகத்தின் காரணமாக இந்தப் பூமிக்கு என்ன ஏற்பட்டுள்ளது?

16, 17. இவ்வளவு நீண்ட காலம் கடந்து சென்றது எதை நிரூபித்துள்ளது?

18. விவாதங்களைத் தீர்க்க காலத்தை அனுமதித்தது எதிர்காலத்திற்கு எவ்வாறு ஒரு நிலையான முந்நிகழ்ச்சியை வைத்துள்ளது?

19. துன்மார்க்கம் என்ற பிரச்சினைக்கு கடவுளின் தீர்வு என்ன?

20. கடந்தகால துயரங்கள் எவ்வாறு நீக்கப்படும்?

21. மரித்தவர்களுக்கும் என்ன வாய்ப்பு கொடுக்கப்படும்?

22. மிருக ஜீவன்கள் மத்தியில் என்ன நிலைமை திரும்பவும் நிலவும்?

23. கடவுளுடைய சிருஷ்டிப்பு முழுவதும் என்ன நிலைக்கு திரும்பும்?

24. பைபிளைப் பற்றி சிலர் என்ன கேள்வி எழுப்பலாம்?

[பக்கம் 188-ன் சிறு குறிப்பு]

அநேகரின் கேள்வி: ‘கடவுள் ஒருவர் இருந்தால் இதையெல்லாம் ஏன் அனுமதிக்கிறார்?’

[பக்கம் 190-ன் சிறு குறிப்பு]

சிருஷ்டிகரின் உதவியில்லாமல் மனிதர் தங்களைத் தாங்களே வெற்றிகரமாக ஆண்டுகொள்ளும்படி படைக்கப்படவில்லை

[பக்கம் 190-ன் சிறு குறிப்பு]

சுதந்திரம் மட்டுப்பட்டதே, முழுமையானது அல்ல

[பக்கம் 192-ன் சிறு குறிப்பு]

தவறானதையே சிந்தித்துக் கொண்டிருப்பது ஒருவரை தவறு செய்ய வழிநடத்தும்

[பக்கம் 193-ன் சிறு குறிப்பு]

எழுப்பப்பட்ட விவாதங்களை முற்றிலுமாக தீர்க்க நேரம் தேவை

[பக்கம் 194-ன் சிறு குறிப்பு]

“இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது”

[பக்கம் 196-ன் சிறு குறிப்பு]

கடவுளுடைய அருமையான படைப்பாகிய இப்பூமியை துன்மார்க்கர் இனியும் கெடுத்துப்போட அவர் அனுமதிக்கமாட்டார்

[பக்கம் 198-ன் சிறு குறிப்பு]

எல்லா அம்சங்களிலும் ‘சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கும்’

[பக்கம் 189-ன் படம்]

பூங்காவனமான பூமியில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பு முதல் மனிதர்களுக்கு இருந்தது

[பக்கம் 191-ன் படங்கள்]

மின் விசிறியின் இணைப்பு துண்டிக்கப்படும்போது அது கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து கடைசியில் முற்றிலும் நின்றுவிடுவதைப் போலவே, ஆதாமும் ஏவாளும் ஜீவஊற்றாகிய தங்கள் சிருஷ்டிகரிடமிருந்து விலகினபோது முதுமையடைந்து இறந்தனர்

[பக்கம் 194-ன் படங்களி]

இத்தனை நூற்றாண்டுகள் கழித்தும், உலக நிலைமைகள் இன்னும் மோசமாகவே உள்ளன

[பக்கம் 195-ன் படம்]

உச்சநீதி மன்றத்தின் ஓர் அடிப்படை வழக்கைப் போல, போதுமான காலத்தைக் கடவுள் அனுமதித்திருப்பதால் எதிர்காலத்திற்கான ஒரு முந்நிகழ்ச்சியை வைத்துள்ளார்

[பக்கம் 197-ன் படம்]

கடவுளுடைய புதிய உலகில் நிலவும் சந்தோஷங்கள், மக்கள் இதுவரை எதிர்ப்பட்ட துன்பங்களை எல்லாம் துடைத்தழித்துவிடும்