Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திடீர் மாற்றங்கள்—பரிணாமத்திற்கு ஆதாரமா?

திடீர் மாற்றங்கள்—பரிணாமத்திற்கு ஆதாரமா?

அதிகாரம் 8

திடீர் மாற்றங்கள்​—⁠பரிணாமத்திற்கு ஆதாரமா?

பரிணாமக் கொள்கையை எதிர்த்து நிற்கும் மற்றொரு பிரச்சினையும் உள்ளது. அது எவ்வாறுதான் நடந்திருக்கக் கூடும்? ஒரு வகை உயிரினம் மற்றொரு வகையாக பரிணமிப்பதற்கு வழிநடத்தியதாக கூறப்படும் அந்த அடிப்படை வழிமுறைதான் என்ன? அதில் முக்கிய பங்கு வகிப்பது உயிரணுவின் உட்கருவில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் என பரிணாமவாதிகள் கருதுகின்றனர். திடீர் மாற்றங்கள் (mutations) என்றழைக்கப்படும் “தற்செயல்” மாற்றங்களே அவற்றில் முக்கியமானவை. பாலணுக்களில் உள்ள மரபணுக்களும் குரோமோசோம்களுமே இந்தத் திடீர் மாற்றங்களில் உட்பட்டிருக்கும் பகுதிகள் என நம்பப்படுகிறது. அப்போதுதான் அவற்றில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுவது எளிதாயிருக்கும் அல்லவா?

2“திடீர் மாற்றங்கள் . . . பரிணாமத்திற்கு ஆதாரம்”1 என்று த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. அதைப் போலவே, திடீர் மாற்றங்களைப் பரிணாமத்திற்கான “மூலப் பொருட்கள்”2 என தொல்லுயிரியல் நிபுணரான ஸ்டீவன் ஸ்டான்லி அழைத்தார். திடீர் மாற்றங்கள், “பரிணாம வளர்ச்சிக்கு அத்தியாவசியம்”3 என மரபியல் நிபுணர் பியோ கொல்லரும் குறிப்பிட்டார்.

3ஆனால், எல்லாவிதமான திடீர் மாற்றங்களும் பரிணாமத்திற்கு கைகொடுக்காது. “சாதகமான திடீர் மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ”4 வேண்டிய அவசியத்தைப் பற்றி ராபர்ட் ஜாஸ்ட்ரோ குறிப்பிட்டார். கார்ல் சாகன் மேலுமாக கூறினார்: “மரபுவழியில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் அப்படியே கடத்தப்படுகின்றன. பரிணாமத்திற்கு தேவையான மூலப் பொருட்களை அவை அளிக்கின்றன. உயிர்வாழ்வதைச் சாத்தியமாக்கும் அந்தச் சில திடீர் மாற்றங்களை சுற்றுச்சூழல் தெரிவு செய்கிறது. இவ்வாறு தொடர்ச்சியான சிறிய மாற்றங்களால் ஓர் உயிரினம் மற்றொன்றாக மாறுகிறது; ஒரு புதிய இனம் உருவாகிறது.”5

4அதுமட்டுமா, “நிறுத்த சமநிலை” கொள்கைக்கு தேவைப்படும் வேகமான மாற்றங்கள் ஏற்படுவதற்கும் திடீர் மாற்றங்களே உதவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. “கட்டுப்படுத்தும் முக்கிய மரபணுக்களில் (regulatory genes) ஏற்படும் திடீர் மாற்றங்களே, அவர்களுடைய பெரும் தாவல் கொள்கைக்கு (quantum-leap theory) தேவைப்பட்ட மரபணு ஏணியாக அமையலாம் என சில பரிணாமவாதிகள் நம்புகின்றனர்” என்று சயன்ஸ் டைஜஸ்ட்-⁠ல் எழுதுகையில் ஜான் கிலைட்மேன் கூறினார். ஆனால் பிரிட்டனைச் சேர்ந்த விலங்கியல் நிபுணர் காலின் பாட்டர்சன் இவ்வாறு கூறினார்: “ஊகங்கள் ஏராளம். இந்தக் கட்டுப்படுத்தும் முக்கிய மரபணுக்களைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது.”6 இந்த ஊகங்களை ஒதுக்கி வைத்தால், பரிணாமத்தில் உட்பட்டுள்ளதாக கூறப்படும் திடீர் மாற்றங்கள் ஒரு நீண்ட காலப்பகுதியின்போது நிகழ்ந்த, சிறிய, தற்செயலான மாற்றங்களே என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

5திடீர் மாற்றங்கள் எவ்வாறு ஆரம்பமாகின்றன? அவற்றில் பெரும்பாலானவை, உயிரணுவின் இயல்பான இனப்பெருக்க சமயத்தில் நிகழ்கின்றன என்று நினைக்கப்பட்டது. ஆனால் கதிர்வீச்சு, ரசாயனங்கள் போன்ற வெளிப்புற காரணிகளாலும் அவை ஏற்படலாம் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அவை எவ்வளவு அடிக்கடி நிகழ்கின்றன? ஓர் உயிரணுவில் மரபணு பொருட்களின் பெருக்கம் எப்போதுமே நிலையானது. ஓர் உயிரினத்தில் ஏற்படும் உயிரணு பெருக்கத்தோடு ஒப்பிடுகையில் திடீர் மாற்றங்கள் அவ்வளவு அடிக்கடி நிகழ்வதில்லை. என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா கூறியபடியே: “மரபணுவை உண்டாக்கும் டிஎன்ஏ சங்கிலிகள்” பெருகுவது “எப்போதுமே துல்லியமானது. தவறாக அச்செடுப்பதோ நகலெடுப்பதோ அத்திப்பூத்தார்போல் நிகழும் விபத்துகளே.”7

உபயோகமானவையா, ஆபத்தானவையா?

6உபயோகமான திடீர் மாற்றங்களே பரிணாமத்திற்கான அடிப்படை என்றால் அவற்றில் எத்தனை சதவிகிதம் உபயோகமானவை? இதைப் பற்றி பரிணாமவாதிகள் மத்தியில் ஏராளமான ஒருமைப்பாடு உள்ளது. உதாரணமாக, கார்ல் சாகன் கூறுகிறார்: “அவற்றுள் பெரும்பாலானவை ஆபத்தானவை அல்லது அழிக்கும் தன்மை கொண்டவை.”8 பியோ கொல்லர் கூறுவதாவது: “திடீர் மாற்றங்களில் பெரும்பாலானவை, மாற்றப்பட்ட மரபணுவுள்ள நபருக்கு ஆபத்தானவையே. வெற்றிகரமான அல்லது உபயோகமான ஒவ்வொரு திடீர் மாற்றத்திற்கும், ஆபத்து விளைவிக்கும் ஆயிரக்கணக்கான மாற்றங்கள் நிகழ்வதாக ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”9

7“நடுநிலையான” திடீர் மாற்றங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டால், உபயோகமானவை என கூறப்படுபவற்றைவிட ஆபத்தான மாற்றங்களே பல ஆயிரத்திற்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் அதிகம் உள்ளன. என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா பின்வருமாறு கேட்கிறது: “தற்செயல் மாற்றங்கள் நிகழும் சிக்கல் நிறைந்த எந்த அமைப்பிலும் இப்படிப்பட்ட விளைவுகளைத் தானே எதிர்பார்க்க முடியும்?”10 அதனால்தான், மரபணுக்களால் ஏற்படும் நூற்றுக்கணக்கான வியாதிகளுக்கு திடீர் மாற்றங்களே காரணம் என்று சொல்லப்படுகிறது.11

8திடீர் மாற்றங்களின் ஆபத்தான தன்மை காரணமாகவே என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா இவ்வாறு ஒப்புக்கொள்கிறது: “பரிணாமத்திற்கான மூலப் பொருட்களை அளிப்பது திடீர் மாற்றங்கள்தான் என்பதே பொதுவான கருத்து, ஆனால் திடீர் மாற்றங்களில் பெரும்பாலானவை உயிரினத்திற்கு ஆபத்தாக நிரூபிப்பதே உண்மை. இந்த இரண்டையும் ஒப்புரவாக்குவது மிகவும் கடினம். உயிரியல் பாடப் புத்தகங்களில் காணப்படும் மாற்றத்திற்குள்ளான உயிரினங்களின் சித்திரங்கள் இயற்கைக்கு மாறானவற்றின் ஒரு தொகுதியே. இவ்வாறு திடீர் மாற்றங்கள், ஆக்கபூர்வமான செய்முறையாக அல்ல அழிவுக்குரியதாகத்தான் தோன்றுகின்றன.”12 மாற்றத்திற்குள்ளான பூச்சிகளை இயல்பானவற்றோடு போட்டிக்கு வைக்கையில் விளைவு எப்போதுமே ஒரே மாதிரிதான் இருந்தது. அதைப் பற்றி ஜி. லெட்யார்ட் ஸ்டெப்பின்ஸ் கூறினார்: “மாற்றத்திற்குள்ளான உயிரிகள், பல அல்லது சில சந்ததிகளுக்குள்ளாகவே முற்றிலும் இல்லாமல் போகின்றன.”13 அவற்றால் போட்டியிட முடியவில்லை. ஏனென்றால், அவை முன்னேற்றமடையவில்லை மாறாக வலுவிழந்து, குறைபாடுள்ளவை ஆயின.

9“பெரும்பாலான திடீர் மாற்றங்கள் மோசமானவையே” என அறிவியல் எழுத்தாளர் ஐசக் அசிமோவ் உயிரின் ஊற்றுக்கண்கள் (The Wellsprings of Life) என்ற தன் புத்தகத்தில் ஒப்புக்கொண்டார். இருந்தாலும் இவ்வாறு அடித்துக் கூறினார்: “மொத்தத்தில், பரிணாமம் முன்னோக்கியும் மேல் நோக்கியும் செல்ல அவை நிச்சயம் உதவுகின்றன.”14 ஆனால் இது உண்மையா? 1,000 தடவையில் 999 தடவைக்கும் அதிகமாக ஆபத்தில் விளைவடையும் ஒரு செயலை உபயோகமானது என்று சொல்வீர்களா? நீங்கள் ஒரு வீடு கட்ட விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வேலையை ஒருமுறை சரியாக செய்வதற்குள் ஆயிரக்கணக்கான தவறுகளைச் செய்யும் ஒரு கட்டட கலைஞனை நீங்கள் வேலைக்கு அமர்த்துவீர்களா? ஒருமுறை சரியான தீர்மானம் செய்வதற்குள் ஆயிரக்கணக்கான விபத்துகளை ஏற்படுத்தும் ஓட்டுனரோடு நீங்கள் பயணம் செய்வீர்களா? அறுவை சிகிச்சையின்போது ஒவ்வொரு முறையும் சரியான செயலை செய்வதற்குள் ஆயிரக்கணக்கான தவறுகளைச் செய்யும் ஒரு டாக்டரை உங்களுக்கு ஆபரேஷன் செய்ய அனுமதிப்பீர்களா?

10மரபியல் நிபுணர் டோப்ஸான்ஸ்கி ஒருமுறை இவ்வாறு கூறினார்: “மிகவும் மென்மையான ஒரு கருவியில் விபத்து அல்லது தற்செயல் மாற்றம் ஏற்பட்டால் அதில் முன்னேற்றம் ஏற்படுமா? ஒருவருடைய வானொலி பெட்டிக்குள் அல்லது கைக்கடிகாரத்திற்குள் ஒரு குச்சியை வைத்துக் குத்தினால் அது இன்னும் நன்றாக வேலை செய்யுமா என்ன?”15 ஆகவே, உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக் கொள்ளுங்கள்: உயிரினங்களில் காணப்படும் வியப்பேற்படுத்தும் சிக்கலான உயிரணுக்கள், உறுப்புகள், கை கால்கள், செய்முறைகள் எல்லாமே அழிவுக்கு வழிநடத்தும் ஒரு செயலினால் உருவாயின என்று சொல்வது நியாயமாக தோன்றுகிறதா?

திடீர் மாற்றங்களால் புதிதாக ஏதாவது உருவாகிறதா?

11திடீர் மாற்றங்கள் அனைத்துமே உபயோகமாக இருந்தாலும் புதிதாக ஏதாவதொன்றை அவை உருவாக்குமா? முடியவே முடியாது. ஏற்கெனவே உள்ள ஒரு பண்பு திடீர் மாற்றத்தினால் வேறுபாடு அடையும் அவ்வளவுதான். திடீர் மாற்றத்தின் விளைவாக வேறுபாடு ஏற்படுமே தவிர புதிதாக எதுவுமே தோன்றாது.

12உபயோகமான திடீர் மாற்றத்தினால் என்ன ஏற்படக்கூடும் என்பதற்கு த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா ஓர் உதாரணம் தருகிறது: “வறண்ட பகுதியிலுள்ள செடியில் மாற்றமடைந்த ஒரு மரபணு இருக்கலாம், அதன் விளைவாக அது நீளமான, உறுதியான வேர்களை வளர்த்துக்கொள்ளலாம். இந்தச் செடியின் வேர்கள் அதிகமான தண்ணீரை உறிஞ்ச முடியுமாதலால் அந்த இனத்தைச் சேர்ந்த மற்ற செடிகளைவிட இது உயிர் வாழ்வதற்கு அதிக சாத்தியம் உள்ளது.”16 ஆனால் புதிதாக ஏதாவது தோன்றியுள்ளதா? இல்லை, அது இன்னமும் அதே செடியாகத்தான் உள்ளது. வேறு ஒன்றாக பரிணமிக்கவில்லை.

13திடீர் மாற்றங்களால், ஒருவருடைய முடியின் நிறம் அல்லது தன்மை மாறலாம். ஆனால் முடி எப்போதும் முடியாகத்தான் இருக்கும். அது ஒருபோதும் இறகாக மாறாது. திடீர் மாற்றங்களால் ஒருவருடைய கையில் வேறுபாடுகள் ஏற்படலாம். இயற்கைக்கு மாறான விரல்கள் அதில் இருக்கலாம். சில சமயம் கையில் ஆறு விரல்கள் அல்லது வேறு ஏதாவது குறைபாடு இருக்கலாம். ஆனால் அது எப்போதும் கையாகத்தான் இருக்கும். வேறு எதுவாகவும் மாறுவது கிடையாது. புதிதாக எதுவும் தோன்றுவதில்லை, தோன்றவும் முடியாது.

பழ ஈ ஆய்வுகள்

14திடீர் மாற்ற ஆய்வுகள், ட்ரோசோஃபிலா மெலனோகாஸ்டர் (Drosophila melanogaster) என்ற சாதாரண பழ ஈக்களில் செய்யப்பட்ட அளவிற்கு வேறு எதிலுமே செய்யப்படவில்லை. விஞ்ஞானிகள், 1900-களின் ஆரம்பத்திலிருந்தே இந்த ஈக்களில் லட்சக்கணக்கானவற்றின் மீது எக்ஸ் கதிர்களை பாய்ச்சியிருக்கிறார்கள். இதனால், திடீர் மாற்றங்களின் விகிதம் இயல்பாக ஏற்படுவதைவிட நூறு மடங்கு அதிகரிக்கிறது.

15இத்தனை பத்தாண்டுகளாக செய்யப்பட்ட ஆய்வுகள் எதைக் காட்டுகின்றன? டோப்ஸான்ஸ்கி ஒரு விளைவைச் சுட்டிக்காட்டினார்: “பெரும் எண்ணிக்கையான மரபியல் ஆய்வுகள் ட்ரோசோஃபிலா ஈக்களை வைத்துத்தான் செய்யப்பட்டன. இயற்கையான ஈக்களோடு ஒப்பிடுகையில், மாற்றத்திற்குள்ளான இந்த ஈக்கள் வாழும் திறத்திலும், கருவளத்திலும், ஆயுட்காலத்திலும் சந்தேகத்திற்கு இடமின்றி தரம் குறைந்தவையே.”17 இந்தத் திடீர் மாற்றங்களால் புதிதாக எதுவுமே தோன்றவில்லை என்பது மற்றொரு கண்டுபிடிப்பாகும். இப்படிப்பட்ட பழ ஈக்களில் குறைபாடுள்ள இறகுகள், கால்கள், உடல்கள், மற்ற சிதைவுகள் இருந்தன, ஆனால் அவை தொடர்ந்து பழ ஈக்களாகவே இருந்தன. மாற்றத்திற்குள்ளான பழ ஈக்களை ஒன்றோடு ஒன்று இனக்கலப்பு செய்கையில், அநேக சந்ததிகள் கழித்து சில சாதாரண பழ ஈக்கள் தோன்றி, முட்டை பொரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை இயற்கையான நிலையிலேயே விடப்பட்டிருந்தால், மாற்றத்திற்குள்ளான இந்தப் பலவீனமான ஈக்களைவிட சாதாரண ஈக்களே உயிர்வாழ்ந்திருக்கும். இவ்வாறு, பழ ஈக்கள் ஆரம்பத்தில் எந்த உருவத்தில் இருந்தனவோ அந்த உருவத்தை அப்படியே அழியாது தொடர்ந்து பாதுகாக்கும் தன்மை பெற்றவை.

16மரபுவழிக் குறியீடான (hereditary code) டிஎன்ஏ, அதில் ஏற்படும் மரபணு கோளாறுகளைத் தானாகவே சரிசெய்து கொள்ளும் விசேஷித்த தன்மை கொண்டது. இதன் காரணமாக ஓர் உயிரினம் என்னவாக இருக்கும்படி திட்டமிடப்பட்டுள்ளதோ அவ்வாறே தொடர்ந்திருக்க உதவுகிறது. மரபணு கோளாறை “இடைவிடாமல் சரிசெய்யும் நொதிகள், ஒவ்வொரு உயிரினத்தின் உயிரையும் அது அடுத்தடுத்த சந்ததிக்கு தொடர்ந்து கடத்தப்படுவதையும்” பாதுகாக்கின்றன என்று சயன்டிஃபிக் அமெரிக்கன் கூறுகிறது. அந்தப் பத்திரிகை இவ்வாறு கூறியது: “குறிப்பாக, டிஎன்ஏ மூலக்கூறுகளில் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டால் அவசரநிலை பிரதிபலிப்பு ஏற்படலாம்; அச்சமயம், சரிசெய்யும் நொதிகள் பெருமளவில் உண்டாக்கப்படுகின்றன.”18

17ஆகவே, மதிப்பிற்குரிய மரபியல் நிபுணரான காலஞ்சென்ற ரிச்சர்ட் கோல்டுஷ்மிட் பற்றி டார்வின் மறுபடியும் சோதிக்கப்படுகிறார் (Darwin Retried) என்ற புத்தகத்தின் ஆசிரியர் இவ்வாறு கூறினார்: “பல வருடங்களாக பழ ஈக்களில் திடீர் மாற்றங்களைக் கவனித்த பிறகு கோல்டுஷ்மிட் நொந்துபோனார். அந்த மாற்றங்கள் நம்பிக்கையிழக்கும் அளவு மிகவும் குறைவாக இருந்ததால், ஓராயிரம் திடீர் மாற்றங்களை ஒரே இனத்தில் ஏற்படுத்தினாலும்கூட ஒரு புதிய இனம் உருவாகாது என அவர் புலம்பினார்.”19

புள்ளியுள்ள அந்துப்பூச்சி

18இங்கிலாந்தைச் சேர்ந்த புள்ளியுள்ள அந்துப்பூச்சி (peppered moth), முன்னேறி வரும் பரிணாமத்திற்கு ஒரு நவீனகால எடுத்துக்காட்டு என்று பரிணாம புத்தகங்களில் அடிக்கடி சொல்லப்படுகிறது. தி இன்டர்நேஷனல் வைய்ல்டுலைஃப் என்ஸைக்ளோப்பீடியா கூறியது: “மனிதன் கண்ணார கண்டவற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க பரிணாம மாற்றம் இதுதான்.”20 ஓர் இனத்தின் பரிணாமத்தைக்கூட டார்வினால் நிரூபித்துக்காட்ட முடியாதது அவருக்கு பெரும் ஏமாற்றமாக இருந்ததைக் கூறிய பிறகு ரெட் ஜயன்ட்ஸ் அண்ட் ஒய்ட் ட்வார்ஃப்ஸ் என்ற தன் புத்தகத்தில் ஜாஸ்ட்ரோ இவ்வாறு கூறினார்: “அவருக்கு தேவையான அத்தாட்சியளிக்கும் உதாரணம் அவர் கண்களுக்கு முன்பாகவே இருந்ததை அவர் அறியவில்லை. இது மிகவும் அபூர்வமான உதாரணமாகும்.”21 அவர் குறிப்பிட்டது புள்ளியுள்ள அந்துப்பூச்சியைப் பற்றித்தான்.

19புள்ளியுள்ள அந்துப்பூச்சிக்கு அப்படி என்னதான் நடந்தது? ஆரம்பத்தில், இந்த அந்துப்பூச்சிகளில் கறுப்பு நிறமுள்ளவற்றைவிட மங்கல் நிறமுள்ளவை அதிகமாக இருந்தன. இந்த மங்கல் நிறமுள்ளவை மங்கிய மரப்பட்டைகளில் வித்தியாசம் தெரியாமல் கலந்துவிட்டதால் பறவைகளிடமிருந்து சுலபமாக தப்பிக்கொண்டன. ஆனால் தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களில் பல வருடங்களாக ஏற்பட்ட தூய்மைக்கேட்டின் காரணமாக மரப்பட்டைகள் கறுத்துப்போயின. இப்போது அந்த அந்துப்பூச்சிகள் மங்கிய நிறத்தில் இருந்தது அவற்றிற்கு பாதகமாக அமைந்தது, ஏனென்றால் பறவைகள் அவற்றை எளிதில் கண்டுபிடித்து தின்றுவிடும். இதன் காரணமாக, அதன் மாற்றம் ஏற்பட்ட வகையாக கருதப்பட்ட கறுப்புநிற அந்துப்பூச்சிகள் தப்பிக்கொண்டன. புகையால் கறுப்பாகியிருந்த மரப்பட்டைகளில் பறவைகளால் அவற்றை சுலபமாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே, கறுப்புநிற வகையே வேகமாக பெருக ஆரம்பித்தது.

20ஆனால் புள்ளியுள்ள அந்துப்பூச்சி வேறொரு வகை பூச்சியாக மாறிக்கொண்டிருக்கிறதா என்ன? இல்லை, அது இன்னமும் புள்ளியுள்ள அந்துப்பூச்சிதான், அதன் நிறம் மட்டும்தான் கொஞ்சம் மாறியிருந்தது. ஆகவே, பரிணாமத்தை ஆதரிக்க இந்த உதாரணத்தைப் பயன்படுத்துவது “இழிவானது” என மருத்துவ பத்திரிகையான ஆன் கால் கூறியது. அது தொடர்ந்து கூறியதாவது: “இது, நிற மாறாட்டத்திற்கு மிகச் சிறந்த உதாரணம். ஆனால் அது பரிணாமத்திற்கு பொருத்தமற்ற அத்தாட்சியாகும்; ஏனென்றால், அது ஆரம்பத்திலும் அந்துப்பூச்சிதான் முடிவிலும் அந்துப்பூச்சிதான், புதிய இனம் ஒன்றும் உருவாவதில்லை.”22

21அந்துப்பூச்சி பரிணமிக்கிறது என்ற இந்தத் தவறான உரிமைபாராட்டலைப் போலவே மற்ற அநேக உதாரணங்களும் உள்ளன. உதாரணமாக, சில கிருமிகள் உயிரி எதிர்ப்பிகளுக்கு (antibiotics) எதிர்ப்பு சக்தி உள்ளவையாய் இருப்பதால் பரிணாமம் நடைபெறுகிறதென கூறுப்படுகிறது. ஆனால் அதிக எதிர்ப்பு சக்தியுள்ள கிருமிகள் அதே வகையாகத்தான் உள்ளன, வேறொரு வகையாக பரிணமிக்கவில்லையே! இந்த வேறுபாடும், திடீர் மாற்றத்தினால் அல்ல மாறாக ஆரம்பத்திலிருந்தே சில கிருமிகள் எதிர்ப்பு சக்தியுள்ளவையாய் இருந்ததே காரணமாக இருக்கலாம் என்றும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. மருந்துகளால் மற்றவை கொல்லப்பட்ட பிறகு, எதிர்ப்பு சக்தியுள்ளவை பெருகி ஆதிக்கம் செலுத்தின. விண்வெளியிலிருந்து பரிணாமம் என்ற புத்தகம் கூறுகிறபடி, “ஏற்கெனவே உள்ள மரபணுக்கள்தான் தெரிவு செய்யப்படுகின்றனவே அல்லாமல் வேறு எதுவும் நிகழவில்லை என்றே நாங்கள் கருதுகிறோம்.”23

22விஷங்களுக்கு எதிராக சில பூச்சிகள் தடுப்பு சக்தி வளர்த்துக்கொள்ளும் விஷயத்திலும் இதுவே உண்மையாக இருக்கலாம். ஒன்று, விஷங்கள் அந்தப் பூச்சிகளைக் கொன்றுவிடுகின்றன அல்லது கொல்லத் தவறுகின்றன. செத்துப்போனவை எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள முடியவில்லை, ஏனென்றால் அவை செத்துவிட்டன. மற்றவை உயிரோடு இருப்பதால் அவை ஆரம்பத்திலிருந்தே தடுப்பு சக்தியுள்ளவை என அர்த்தப்படும். இப்படிப்பட்ட தடுப்பு சக்தி சில பூச்சிகளில் மட்டுமே காணப்படும் மரபணு காரணியாகும், மற்றவற்றிலோ இது இல்லை. எப்படியிருந்தாலும், அந்தப் பூச்சிகள் அதே இனமாகத்தான் தொடர்ந்திருந்தன. அவை வேறொன்றாக மாறவில்லை.

“தங்கள் தங்கள் இனத்தின்படியே”

23ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் காணப்படுவதையே திடீர் மாற்றங்கள் மறுபடியும் உறுதிசெய்கின்றன. அதாவது, உயிரினங்கள் “தங்கள் தங்கள் இனத்தின்படி” மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன. ஒரு செடியோ மிருகமோ சராசரியிலிருந்து அதிக தூரம் விலகிச்சென்று விடாதபடிக்கு அதன் மரபணுக் குறியீடு தடைசெய்வதே இதற்கு காரணம். மிகவும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கலாம் (உதாரணமாக, மனிதர்கள், நாய்கள் அல்லது பூனைகள் மத்தியில் காணப்படுவது போல), ஆனாலும் ஓர் உயிரினம் மற்றொன்றாக மாறும் அளவிற்கு நிச்சயம் இருக்காது. திடீர் மாற்றங்கள் பற்றி இதுவரை செய்யப்பட்ட ஒவ்வொரு ஆய்வும் இதையே நிரூபிக்கிறது. அதேபோல, உயிர்த்தோற்றம் (biogenesis) என்ற சட்டமும் நிரூபிக்கப்படுகிறது. அதாவது, உயிர் மற்றொரு உயிரிலிருந்தே தோன்ற முடியும், தாயும் சேயும் ஒரே ‘இனத்தை’ சேர்ந்தவை என்பதே அந்தச் சட்டம்.

24இனப்பெருக்க ஆய்வுகளும்கூட இதையே உறுதி செய்கின்றன. கலப்பு இனப்பெருக்கம் மூலம் பல்வேறு மிருகங்களையும் தாவரங்களையும் மாற்றிக்கொண்டேயிருக்க விஞ்ஞானிகள் முயன்றுள்ளனர். காலப்போக்கில் புதிய உயிரினங்களை உருவாக்க முடியுமா என்று பார்க்க விரும்பினர். என்ன விளைவுகளுடன்? ஆன் கால் அறிவிக்கிறது: “சில சந்ததிகள் கழித்து ஓர் உச்சக்கட்டம் எட்டப்படுகிறது, அதற்கு மேல் எந்த முன்னேற்றம் செய்வதும் சாத்தியமற்றது, எந்தப் புதிய இனமும் உருவாகவில்லை என்பதை இனப்பெருக்க ஆய்வாளர்கள் கண்டுள்ளனர் . . . ஆகவே, இனப்பெருக்க முறைகள் பரிணாமத்தை ஆதரிப்பதற்கு மாறாக அதை எதிர்ப்பதாகவே தோன்றுகின்றன.”24

25 சயன்ஸ் பத்திரிகையிலும் இதே போன்ற விஷயம்தான் சொல்லப்பட்டுள்ளது: “தோற்றத்திலும் மற்ற அம்சங்களிலும் சிறிய மாற்றங்களுக்கு உள்ளாகும் திறமை இனங்களுக்கு உள்ளது. ஆனால் இது வரம்பிற்குட்பட்டதே. நீண்டகால கண்ணோட்டத்தில் அது ஒரு சராசரியைச் சுற்றியே மாறிவருவதை காணமுடிகிறது.”25 ஆகவே, உயிரினங்கள் முந்தைய சந்ததியிலிருந்து பெறுவது தொடர்ந்த மாற்றத்திற்கான வாய்ப்புகளை அல்ல, மாறாக (1ஸ்திரத்தன்மையையும் (2வரம்பிற்குட்பட்ட வேறுபாடுகளையுமே பெறுகின்றன.

26ஆகவே, மூலக்கூறுகள் முதல் உயிரணுக்கள் வரை (Molecules to Living Cells) என்ற புத்தகம் கூறுவதாவது: “ஒரு காரட்டிலுள்ள அல்லது ஓர் எலியின் கல்லீரலிலுள்ள உயிரணுக்கள், எண்ணற்ற இனப்பெருக்க சுழற்சிகளுக்கு பிறகும் அவற்றிலுள்ள திசுக்களையும் உயிரின அடையாளங்களையும் காத்துக்கொள்கின்றன.”26 உயிரணு பரிணாமத்தில் கூட்டு வாழ்வு (Symbiosis in Cell Evolution) என்ற புத்தகமும் இவ்வாறு கூறுகிறது: “எல்லா உயிரினங்களும் . . . வியக்கத்தக்க பற்றுமாறா தன்மையுடனேயே இனப்பெருக்கம் செய்கின்றன.”27 சயன்டிஃபிக் அமெரிக்கன் இவ்வாறு கூறுகிறது: “உயிரினங்களில் ஏராளமான வகைகள் உள்ளன; ஆனால் அந்த வகை, ஒரு குறிப்பிட்ட வம்சாவளியில் குறிப்பிடத்தக்க அளவு நிலையாய் உள்ளது: எத்தனை சந்ததிகள் கடந்துபோனாலும் பன்றிகள் பன்றிகளாகவும் ஓக் மரங்கள் ஓக் மரங்களாகவுமே இருக்கும்.”28 ஓர் அறிவியல் எழுத்தாளர் பின்வருமாறு எழுதினார்: “ரோஜா செடிகளில் எப்போதுமே ரோஜாக்கள்தான் பூக்கின்றன, கெமிலியா பூக்கள் அல்ல. வெள்ளாடுகள் வெள்ளாட்டுக் குட்டிகளைத்தான் ஈனுகின்றன, செம்மறியாட்டுக் குட்டிகளை அல்ல.” திடீர் மாற்றங்களால் “பரிணாமம் முழுவதையும் விளக்க முடியாது; மீன்கள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் ஆகியவை ஏன் உள்ளன என்பதை அதனால் விளக்க முடியாது.”29

27ஓர் இனத்தில் பல வேறுபாடுகள் காணப்படுவது, பரிணாமம் பற்றிய டார்வினின் ஆரம்பகால எண்ணங்கள் எதினால் பாதிக்கப்பட்டன என்பதை விளக்குகின்றன. டார்வின் காலபாகஸ் தீவில் இருக்கையில் ஃபின்ச் (finch) என்ற ஒரு வகை குருவியைக் கண்டார். தென் அமெரிக்க கண்டத்திலுள்ள பறவை இனத்தைச் சேர்ந்தவைதான் இந்தப் பறவைகளும்; அங்கிருந்து அவை ஒருவேளை இடம்பெயர்ந்திருக்கலாம். ஆனாலும் வினோதமான சில வேறுபாடுகள் இருந்தன, உதாரணமாக அவற்றின் அலகுகளின் வடிவம் வேறுபட்டது. இதோ, பரிணாம முன்னேற்றம் என்று டார்வின் அறிவித்துவிட்டார்! ஆனால், ஓர் உயிரினத்தின் மரபணு அமைப்பு அவ்வினத்திற்குள்ளேயே வேறுபாட்டிற்கு இடமளிக்கும் என்பதற்கான உதாரணம்தான் இது என்பதை அவர் பாவம் அறியவில்லை. ஃபின்ச்சுகள் தொடர்ந்து ஃபின்ச்சுகளாகவே இருந்தன. அவை வேறொன்றாக மாறவில்லை, மாறவும் போவதில்லை.

28ஆகவே, ஆதியாகமம் சொல்வது அறிவியல்பூர்வ உண்மைகளோடு முழுவதும் இசைவாக உள்ளது. நீங்கள் விதை விதைத்தால் அவை “தங்கள் தங்கள் இனத்தின்படி” மட்டுமே உற்பத்தி செய்கின்றன. இந்தச் சட்டம் அவ்வளவு நம்பத்தக்கதாகையால் நீங்கள் நம்பிக்கையுடன் ஒரு தோட்டம் போடலாம். பூனைகள் குட்டிப்போடுகையில் பூனைகள்தான் பிறக்கின்றன. மனிதர் பெற்றோராகையில் அவர்களின் குழந்தைகள் எப்போதுமே மனித இனம்தான். நிறம், அளவு, வடிவம் ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளன, ஆனால் அவை அந்த வகையின் வரம்பிற்குட்பட்டவையே. இதற்கு எதிர்மாறாக உள்ள ஏதாவது ஓர் உதாரணத்தையாவது நீங்கள் கண்ணால் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் மட்டுமல்ல, ஒருவருமே பார்த்ததில்லை.

பரிணாமத்திற்கு ஆதாரம் அல்ல

29முடிவு தெளிவானதே. தற்செயல் மரபணு மாற்றம் எவ்வளவு அதிகமாக நிகழ்ந்தாலும் ஒரு வகை உயிரினம் மற்றொன்றாக மாற முடியாது. பிரான்ஸ் நாட்டு உயிரியல் வல்லுநர் ஷான் ராஸ்தான் ஒரு முறை கூறியதுபோலவே, “மரபுவழியில் ஏற்பட்ட இந்தத் ‘தவறுகளால்,’ ஏராளமான வடிவங்களும், நுணுக்கங்களும், அதிசயிக்க வைக்கும் அதன் ‘மாற்றங்களும்’ நிறைந்த இந்த முழு உலகை உருவாக்கியிருக்க முடியும் என்று நான் நினைத்துப் பார்ப்பதுகூட கற்பனைக்கு எட்டாத காரியம். இதற்கு, இயற்கை வழித்தேர்ந்தெடுப்பின் உதவி கிடைத்திருந்தாலும், உயிரின் மீது செயல்பட பரிணாமத்திற்கு ஏராளமான நூற்றாண்டுகள் கிடைத்திருந்தாலும் அது நிகழ்ந்திருக்காது என்றே நினைக்கிறேன்.”30

30அதைப் போலவே, திடீர் மாற்றங்களில் வைக்கும் நம்பிக்கை பற்றி மரபியல் வல்லுனர் சி. எச். வாடிங்டன் இவ்வாறு கூறினார்: “இந்தக் கொள்கை எப்படிப்பட்டது தெரியுமா? புரியக்கூடிய ஆங்கிலத்தில் பதினான்கு வரிகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நேரத்தில் ஒரு எழுத்தை மாற்றுங்கள். அர்த்தம் தரக்கூடிய வார்த்தைகளை மாத்திரம் வைத்துக்கொண்டு மற்றதை நீக்கிவிடுங்கள். இவ்வாறே தொடர்ந்து செய்தால் கடைசியில் ஷேக்ஸ்பியரின் பதினான்கு வரி கவிதைகளில் (sonnets) ஒன்றைப் பெறுவீர்கள் என்று சொல்வதைப் போன்று உள்ளது. . . . அது முட்டாள்களின் பேச்சாக எனக்கு தோன்றுகிறது, நாம் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என நினைக்கிறேன்.”31

31ஆகவே, உண்மையானது பேராசிரியர் ஜான் மூர் கூறிய விதமாகவே உள்ளது: “இம்மியும் பிசகாத ஆராய்ச்சிக்கும் ஆய்வுக்கும் பிறகு, . . . இயற்கை வழித்தேர்ந்தெடுப்பின் உதவி பெற்ற பரிணாம வளர்ச்சிக்கு மரபணு திடீர் மாற்றங்களே மூலப் பொருட்கள் என விடாப்பிடியாக சொல்லிக்கொண்டிருப்பது . . . கட்டுக்கதை சொல்வதேயாகும்.”32

[கேள்விகள்]

1, 2. எந்த வழிமுறை பரிணாமத்திற்கு அடிப்படை என்று கூறப்படுகிறது?

3. பரிணாமத்திற்கு, எப்படிப்பட்ட திடீர் மாற்றங்கள் தேவை?

4. விரைவான பரிணாம மாற்றங்களில் திடீர் மாற்றங்கள் உட்பட்டிருக்கலாம் என்பதில் என்ன சிக்கல் எழுகிறது?

5. திடீர் மாற்றங்கள் எவ்வாறு ஆரம்பமாகின்றன?

6, 7. திடீர் மாற்றங்களில் உபயோகமாய் இருப்பவற்றைவிட ஆபத்தானவை எத்தனை சதவிகிதம்?

8. ஒரு என்ஸைக்ளோப்பீடியா கூறியதை உண்மை விளைவுகள் எவ்வாறு உறுதி செய்கின்றன?

9, 10. திடீர் மாற்றங்களால் பரிணாமம் நிகழ்கிறது என்ற ஊகம் ஏன் ஆதாரமற்றது?

11-13. திடீர் மாற்றங்களால் புதிதாக ஏதாவது ஒன்று தோன்ற முடியுமா?

14, 15. பழ ஈக்களை வைத்து பல பத்தாண்டுகளாக செய்யப்பட்ட ஆய்வுகள் எதைச் சுட்டிக்காட்டுகின்றன?

16. உயிரினங்களைப் பாதுகாக்க மரபுவழிக் குறியீடு எவ்வாறு உதவுகிறது?

17. திடீர் மாற்ற ஆய்வுகளால் கோல்டுஷ்மிட் ஏன் நொந்துபோனார்?

18, 19. புள்ளியுள்ள அந்துப்பூச்சி பற்றி என்ன உரிமைபாராட்டப்படுகிறது, ஏன்?

20. புள்ளியுள்ள அந்துப்பூச்சி பரிணமிக்கவில்லை என்பதை ஓர் ஆங்கில மருத்துவ பத்திரிகை எவ்வாறு விளக்கியது?

21. உயிரி எதிர்ப்பிகளுக்கு சில கிருமிகள் எதிர்ப்பு சக்தி வளர்த்துக்கொள்வதாக கூறப்படும் திறமையைப் பற்றி என்ன சொல்லப்படலாம்?

22. சில பூச்சிகள் விஷங்களுக்கு தடுப்பு சக்தியுள்ளவையாய் இருப்பது, அவை பரிணமிக்கின்றன என்று அர்த்தப்படுத்துகிறதா?

23. ஆதியாகமத்தின் என்ன நியதியைத் திடீர் மாற்றங்களும்கூட ஆதரிக்கின்றன?

24. உயிரினங்கள் “தங்கள் தங்கள் இனத்தின்படி” மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன என்பதை இனப்பெருக்க ஆய்வுகள் எவ்வாறு உறுதி செய்கின்றன?

25, 26. உயிரினங்களிலுள்ள இனப்பெருக்க வரம்புகளைப் பற்றி அறிவியல் புத்தகங்கள் என்ன சொல்கின்றன?

27. காலபாகஸ் தீவுகளிலுள்ள ஃபின்ச்சுகளைப் பற்றி டார்வின் என்ன தப்புக்கணக்கு போட்டுவிட்டார்?

28. “தங்கள் தங்கள் இனத்தின்படியே” என்ற ஆதியாகம நியதியோடு அறிவியல்பூர்வ உண்மைகள் முழுமையாக ஒத்திருக்கின்றன என்று எவ்வாறு சொல்ல முடியும்?

29. திடீர் மாற்றங்களைப் பற்றி பிரான்ஸ் நாட்டு உயிரியல் வல்லுநர் ஒருவர் கூறியதென்ன?

30. திடீர் மாற்றங்களைப் பற்றி மரபியல் வல்லுனர் ஒருவர் என்ன கூறினார்?

31. திடீர் மாற்றங்களே பரிணாமத்திற்கான மூலப் பொருட்கள் என்ற கருத்தை ஒரு பேராசிரியர் என்னவென்று அழைத்தார்?

[பக்கம் 99-ன் சிறு குறிப்பு]

“திடீர் மாற்றங்கள் . . . பரிணாமத்திற்கு ஆதாரம்”

[பக்கம் 100-ன் சிறு குறிப்பு]

திடீர் மாற்றங்கள், மரபணுத் தொகுதியில் ஏற்படும் ‘விபத்துகளோடு’ ஒப்பிடப்படுகின்றன. ஆனால் விபத்துகளால் நன்மையல்ல, ஆபத்துதான் ஏற்படும்

[பக்கம் 101-ன் சிறு குறிப்பு]

“திடீர் மாற்றங்கள், ஆக்கபூர்வமான செய்முறையாக அல்ல அழிவுக்குரியதாகத்தான் தோன்றுகின்றன”

[பக்கம் 105-ன் சிறு குறிப்பு]

“ஓராயிரம் திடீர் மாற்றங்களை ஒரே இனத்தில் ஏற்படுத்தினாலும்கூட ஒரு புதிய இனம் உருவாகாது”

[பக்கம் 107-ன் சிறு குறிப்பு]

“அது பரிணாமத்திற்கு பொருத்தமற்ற அத்தாட்சியாகும்”

[பக்கம் 107-ன் சிறு குறிப்பு]

திடீர் மாற்றங்கள் இந்தத் தகவலையே உறுதி செய்கின்றன: உயிருள்ளவை “தங்கள் தங்கள் இனத்தின்படி” மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன

[பக்கம் 108-ன் படங்கள்]

“இனப்பெருக்க முறைகள் . . . பரிணாமத்தை ஆதரிப்பதற்கு மாறாக அதை எதிர்ப்பதாகவே தோன்றுகின்றன”

[பக்கம் 109-ன் சிறு குறிப்பு]

“எத்தனை சந்ததிகள் கடந்துபோனாலும் பன்றிகள் பன்றிகளாகவும் ஓக் மரங்கள் ஓக் மரங்களாகவுமே இருக்கும்”

[பக்கம் 110-ன் சிறு குறிப்பு]

திடீர் மாற்றங்களால் “பரிணாமம் முழுவதையும் விளக்க முடியாது”

[பக்கம் 110-ன் சிறு குறிப்பு]

“அது முட்டாள்களின் பேச்சாக எனக்கு தோன்றுகிறது, நாம் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என நினைக்கிறேன்”

[பக்கம் 112, 113-ன் பெட்டி/படம்]

உண்மைகளுக்கு இசைவானது எது?

முந்தைய அதிகாரங்களை வாசித்த பிறகு பின்வரும் கேள்வியைக் கேட்க நீங்கள் தூண்டப்படவில்லையா: உண்மைகளுக்கு இசைவாக இருப்பது எது? பரிணாமமா அல்லது படைப்பா? பரிணாமம், படைப்பு, நிஜ உலகில் காணப்படும் உண்மைகள் ஆகியவை கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

பரிணாமம் படைப்பு நிஜ உலகில் காணப்படும்

முன்னுரைத்தவை முன்னுரைத்தவை உண்மைகள்

தற்செயல் வேதியியல் உயிர் அதற்கு முன்பிருந்த (1) உயிர் அதற்கு முன்பிருந்த

பரிணாமத்தின் விளைவாக உயிரிலிருந்துதான் வருகிறது; உயிரிலிருந்துதான் வருகிறது;

உயிரற்றவற்றிலிருந்து உயிர் புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகரால் (2) சிக்கல் வாய்ந்த

பரிணமித்தது (தன்னியல் ஆரம்பத்தில் படைக்கப்பட்டது மரபணுக் குறியீடு தற்செயலாய்

உயிர்தோற்றம்) உருவாக சாத்தியமே இல்லை

புதைப்படிவங்களில்: புதைப்படிவங்களில்: புதைப்படிவங்களில்:

(1) எளிய உயிரினங்கள் (1) சிக்கலான உயிரினங்கள் (1) சிக்கல் வாய்ந்த உயிரினங்கள்

கொஞ்சம் கொஞ்சமாக பெருமளவில் திடீரென்று பெருமளவில் திடீரென்று

தோன்ற வேண்டும்; தோன்ற வேண்டும்; தோன்றுகின்றன; (2) ஒவ்வொரு

(2) முந்தையவற்றோடு (2) முக்கிய இனங்களுக்கு புதிய இனமும் முந்தையவற்றிலிருந்து

இணைக்கும் இடைமாறுபாட்டு மத்தியில் பெரும் பிளவுகள் வித்தியாசமானது; இடைமாற்று

வகைகள் இருக்க வேண்டும் இருக்க வேண்டும்; வகைகளே இல்லை

இடைமாற்று வகைகள் இருக்காது

புதிய இனங்கள் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக தோன்றும் பலவித வேறுபாடுகள்

தோன்றுவது; பல்வேறு புதிய இனங்கள் எதுவும் இல்லை; இருந்தபோதிலும் கொஞ்சம்

இடைமாறுபாட்டு நிலைகளில் அறைகுறையான எலும்புகளோ, கொஞ்சமாக தோன்றும் புதிய

அறைகுறையான எலும்புகளும் உறுப்புகளோ கிடையாது, இனங்கள் எதுவுமே இல்லை;

உறுப்புகளும் ஆரம்பமாவது மாறாக எல்லாம் அறைகுறையான எலும்புகளோ,

முழுமையாக உருவானதே உறுப்புகளோ இல்லை

திடீர் மாற்றங்கள்: முடிவான திடீர் மாற்றங்கள், சிக்கல் சிறிய திடீர் மாற்றங்கள்

விளைவு நன்மையளிக்கிறது; நிறைந்த உயிருக்கு ஆபத்தானவை, பெரும் திடீர்

புதிய தோற்றங்கள் ஆபத்தானவை; புதிதாக மாற்றங்களோ அழிவுண்டாக்குபவை;

உருவாகின்றன எதுவுமே தோன்றுவதில்லை புதிதாக எதுவும்

விளைவடையாது

முரட்டுத்தனமான, மனிதனும் நாகரிகமும் மனிதனும் நாகரிகமும்

மிருகத்தனமான ஒரே சமயத்தில் தோன்றின; ஒரே சமயத்தில் தோன்றின;

ஆரம்பத்திலிருந்து நாகரிகம் ஆரம்பமே சிக்கல் குகைகளில் வாழ்ந்தவர்களும்

படிப்படியாக தோன்றுதல் வாய்ந்தது நாகரிகத்தின் பாகமானவர்களே

மிருகங்களின் எளிய மனிதன் தோன்றிய சமயத்திலேயே மனிதன் தோன்றிய சமயத்திலேயே

ஒலிகளிலிருந்து நவீனகால, மொழிகளும் தோன்றின; மொழியும் தோன்றியது;

சிக்கலான மொழிகள் பூர்வகால மொழிகள் அநேக சமயங்களில் நவீன

தோன்றின சிக்கல் வாய்ந்தவை, மொழிகளைவிட பூர்வகால

முழுமையானவை மொழிகளே அதிக

சிக்கல் வாய்ந்தவை

பல லட்சக்கணக்கான சுமார் 6,000 வருடங்கள் மிகவும் பழைய, எழுதப்பட்ட

வருடங்கள் முன்பே முன்புதான் மனிதன் பதிவுகள் சுமார் 5,000

மனிதன் தோன்றினான் தோன்றினான் வருடங்களே பழமையானவை

. . . நியாயமான முடிவு

பரிணாமமும் படைப்பும் முன்னுரைத்தவற்றை நிஜ உலகில் காணப்படுவதோடு ஒப்பிட்டுப் பார்த்தால், உண்மைகளுக்கு இசைவானது எது, முரணானது எது என்பது தெள்ளத்தெளிவாக இல்லையா? நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களும் வெகு காலத்திற்கு முன்பு வாழ்ந்தவற்றைப் பற்றிய புதைப்படிவ பதிவும் கொடுக்கும் அத்தாட்சி ஒரே முடிவையே சுட்டிக்காட்டவில்லையா? உயிர் படைக்கப்பட்டது; அது பரிணமிக்கவில்லை என்ற முடிவே அது.

அறியப்படாத, புராதன ‘திரவத்தில்’ உயிர் ஆரம்பமாகவே இல்லை. மனிதக் குரங்குபோன்ற மூதாதைகளிலிருந்து மனிதன் தோன்றவில்லை. மாறாக உயிரினங்கள், தனித்தனி குடும்ப வகைகளாக எக்கச்சக்கமான எண்ணிக்கைகளில் படைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் அதனதன் ‘இனத்திற்குள்ளேயே’ பல வேறுபாடுகளுடன் இனப்பெருக்கம் செய்யலாம்; ஆனால் பல்வேறுபட்ட இனங்களைப் பிரிக்கும் எல்லைகளை அவற்றால் கடக்க முடியாது. அந்த எல்லையை உயிரினங்கள் மத்தியில் தெளிவாகவே காண முடிகிறது; மலட்டுத்தன்மையின் மூலம் அந்த எல்லைகள் திட்டவட்டமாக பாதுகாக்கப்படுகின்றன. இனங்கள் மத்தியிலான வேறுபாடுகள், ஒவ்வொரு இனத்திற்கும் உள்ள தனிச்சிறப்பான மரபணுக் குறியீட்டின் காரணமாக பாதுகாக்கப்படுகின்றன.

இருந்தாலும், படைப்பு முன்னுரைத்தவற்றை ஆதரிக்கும் உண்மைகள் மட்டுமே ஒரு சிருஷ்டிகர் இருப்பதை நிரூபிப்பதற்கான சான்றுகளல்ல. பூமியில், ஏன் முழு பிரபஞ்சத்திலுமே மலிந்து கிடக்கும் வியப்பூட்டும் வடிவமைப்புகளையும் சிக்கல் நிறைந்த அதிசயங்களையும் சிந்தித்துப் பாருங்கள்! உன்னதமான புத்திக்கூர்மை இருப்பதற்கு இவையும் நிரூபணங்களே. நம்மை வாய்பிளக்க வைக்கும் பிரமாண்டமான அண்டம் முதல் நுண்ணுயிரிகளின் உலகிலுள்ள மிகவும் சிக்கலான வடிவங்கள் வரை எல்லாமே அந்த அதிசயங்களில் ஒரு சிறு துளி மட்டுமே. பின்வரும் பல அதிகாரங்களில் இவற்றிலேயே நாம் அதிக கவனம் செலுத்துவோம்.

[பக்கம் 102-ன் படங்கள்]

ஒரு வேலையை ஒருமுறை சரியாக செய்வதற்குள் ஆயிரக்கணக்கான தவறுகளைச் செய்யும் ஒரு கட்டட கலைஞனை நீங்கள் வேலைக்கு அமர்த்துவீர்களா?

ஒருமுறை சரியான தீர்மானம் செய்வதற்குள் ஆயிரக்கணக்கான விபத்துகளை ஏற்படுத்தும் ஓட்டுனரோடு நீங்கள் பயணம் செய்வீர்களா?

ஒவ்வொரு முறையும் சரியான செயலை செய்வதற்குள் ஆயிரக்கணக்கான தவறுகளைச் செய்யும் ஒரு டாக்டரை உங்களுக்கு ஆபரேஷன் செய்ய அனுமதிப்பீர்களா?

[பக்கம் 103-ன் படம்]

டோப்ஸான்ஸ்கி: “ஒருவருடைய வானொலி பெட்டிக்குள் . . . ஒரு குச்சியை வைத்துக் குத்தினால் அது இன்னும் நன்றாக வேலை செய்யுமா என்ன?”

[பக்கம் 104-ன் படங்கள்]

பழ ஈக்களை வைத்து செய்யப்பட்ட பரிசோதனைகளில் திடீர் மாற்றத்திற்குள்ளான அநேக அறைகுறையான ஈக்கள் உருவாகின, ஆனாலும் அவை எல்லாம் பழ ஈக்களே

சாதாரண பழ ஈ

திடீர் மாற்றத்திற்குள்ளான ஈக்கள்

[பக்கம் 106-ன் படங்கள்]

புள்ளியுள்ள அந்துப்பூச்சியின் நிறத்தில் ஏற்படும் மாற்றம் பரிணாமம் அல்ல, மாறாக ஓர் அடிப்படை இனத்தில் காணப்படும் வேறுபாடு மட்டுமே

[பக்கம் 108-ன் சிறு குறிப்பு]

நாய் குடும்பத்தில் அநேக வேறுபாடுகள் உண்டு, ஆனாலும் நாய்கள் எப்போதும் நாய்களாகவே உள்ளன

[பக்கம் 109-ன் படங்கள்]

மனிதக் குடும்பத்தில் பெரும் வேறுபாடுகள் உள்ளன, ஆனாலும் மனிதர்கள் “தங்கள் இனத்தின்படி” மட்டுமே சந்ததியை உருவாக்குகின்றனர்

[பக்கம் 111-ன் படங்கள்]

காலபாகஸ் தீவில் டார்வின் கண்ட ஃபின்ச் வகை குருவிகள் ஃபின்ச்சுகளாகவே இருந்தன; ஆகவே அவர் கண்டது பரிணாமம் அல்ல, வேறுபாடு மட்டுமே