Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் பைபிளை நம்ப முடியுமா?

நீங்கள் பைபிளை நம்ப முடியுமா?

அதிகாரம் 17

நீங்கள் பைபிளை நம்ப முடியுமா?

பைபிள், பழங்காலத்தில் வாழ்ந்த ஞானிகளால் எழுதப்பட்ட புத்தகம்தானே என்றே அநேகர் நினைக்கின்றனர். “பைபிளில் காணப்படும் அதன் எழுத்தாளர்களின் நோக்குநிலைகள், அவர்களுடைய காலத்தில் பிரபலமாயிருந்த எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் கருத்துகளையுமே பிரதிபலிக்கின்றன; ஆகவே அவை அந்தக் காலத்திலிருந்த அறிவின் எல்லைக்குள் மட்டுப்பட்டவையே”1 என பல்கலைக்கழக பேராசிரியர் ஜெரால்ட் ஏ. லாரீ அடித்துக் கூறினார். ஆனால் பைபிளோ கடவுளால் ஏவப்பட்ட ஒரு புத்தகம் என்றே உரிமை பாராட்டுகிறது. (2 தீமோத்தேயு 3:16) இது உண்மையென்றால், பைபிளின் பல்வேறு பகுதிகள் எழுதப்பட்ட காலத்தில் பிரபலமாயிருந்த தவறான கருத்துகள் அதில் நிச்சயம் இருக்கக்கூடாது. தற்போதைய அறிவு பெருக்கத்தின் வெளிச்சத்தில் பைபிளை ஆராய்ந்தால் அது தாக்குப்பிடிக்குமா?

2இந்தக் கேள்வியை கலந்தாலோசிக்கையில் பின்வரும் விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்: அறிவு பெருகுகையில் புதிய தகவலுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் இசைவாக மனிதர்கள் தங்களுடைய எண்ணங்களை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இதைப் பற்றி சயன்டிஃபிக் மன்திலி ஒரு முறை இவ்வாறு கூறியது: “அறிவியலின் எந்தத் துறையோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் வெறுமனே ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரைகள், அத்துறையின் நவீன கருத்துகளைப் பிரதிபலிக்குமென எதிர்பார்க்க முடியாது.”2 ஆனால் பைபிளோ சுமார் 1,600 வருட காலப்பகுதியில் எழுதப்பட்டு சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டுவிட்டது. இன்று அது எவ்வளவு துல்லியமாக உள்ளது?

பைபிளும் அறிவியலும்

3பைபிள் எழுதப்பட்ட சமயத்தில், விண்வெளியில் பூமியின் நிலை பற்றி அநேக ஊகங்கள் நிலவின. உதாரணமாக, ஒரு பெரிய கடலாமை மேல் நிற்கும் நான்கு யானைகள்தான் பூமியைத் தாங்குகின்றன என்று சிலர் நம்பினர். ஆனால் பைபிள் எழுதப்பட்ட காலத்தில் நிலவிய இப்படிப்பட்ட வினோதமான, அறிவியல்பூர்வமற்ற கருத்துகளைப் பிரதிபலிப்பதற்கு பதிலாக அது எவ்வளவு தெளிவாக கூறுகிறது பாருங்கள்: ‘வெறும் வெளியில் உத்தரமண்டலம் விரித்தவர் [கடவுளே], தொங்கவிட்டார் பூவுலகை, ஆதாரம் ஒன்றுமிலை.’ (யோபு 26:7, தி.மொ.) இந்தப் பூமி எந்தக் காணக்கூடிய ஆதாரத்தின்மீதும் நிறுத்தப்படவில்லை என்பதை 3,000-⁠த்திற்கும் அதிக வருடங்களுக்கு முன்பே பைபிள் சரியாக கூறிவிட்டது. இந்த உண்மை, புவியீர்ப்பு மற்றும் அசைவு சட்டங்கள் பற்றி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதற்கு இசைவாகவே உள்ளது அல்லவா? “யோபுவுக்கு இந்த உண்மை எப்படி தெரியும் என்ற கேள்வி, பரிசுத்த வேதாகமம் ஏவப்பட்டதை நிராகரிப்பவர்களால் எளிதில் பதிலளிக்க முடியாத ஒன்றாகும்”3 என மத வல்லுனர் ஒருவர் கூறினார்.

4பூமியின் வடிவம் பற்றி தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா கூறுகிறது: “பிரபஞ்சத்தின் மத்தியில் அமைந்த உறுதியான, தட்டையான மேடை என்பதே பூமியைப் பற்றி மனிதனுக்கிருந்த ஆரம்பகால எண்ணமாகும். . . . பூமி ஓர் உருண்டை என்பது மறுமலர்ச்சி காலப்பகுதி வரை பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.”4 தட்டையான பூமியின் விளிம்பிற்கு சென்றால் விழுந்துவிடுவோமோ என்றுகூட ஆரம்பகால கடற்பிரயாணிகளில் சிலர் பயந்தனர்! ஆனால் திசைக்காட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மற்ற முன்னேற்றங்கள் செய்யப்பட்ட பிறகு கடலில் வெகுதூரம் பிரயாணம் செய்வது சாத்தியமானது. “அநேகர் நினைத்ததுபோல இந்தப் பூமி தட்டையல்ல, உருண்டையே என்பதற்கு இந்தக் கடற்பயணங்கள் நிரூபணம் அளித்தன”5 என்று மற்றொரு என்ஸைக்ளோப்பீடியா விளக்குகிறது.

5ஆனால் இந்தக் கடல் பயணங்களுக்கு வெகு முன்னரே, சுமார் 2,700 வருடங்களுக்கு முன்பே பைபிள் இவ்வாறு கூறியது: ‘அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்.’ (ஏசாயா 40:22) டேவிட்சனின் அனாலிடிகல் ஹீப்ரூ அண்ட் சால்டீ லெக்ஸிகன் என்ற புத்தகம் கூறுவதுபோல, “உருண்டை” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தையான சூக் (chugh), “கோளம்” எனவும் அர்த்தப்படலாம். ஆகவே மற்ற மொழிபெயர்ப்புகள், ‘கோளமாகிய பூமி’ (டூவே வர்ஷன்) மற்றும் ‘வட்டமான பூமி’ (மொஃபட்) என்று கூறுகின்றன. இவ்வாறாக, பைபிள் எழுதப்பட்ட சமயத்தில் பிரபலமாயிருந்த தட்டையான பூமி என்ற தவறான கருத்து அதைப் பாதிக்கவில்லை. பைபிளின் கருத்து மிகவும் சரியாக இருந்தது.

6ஆறுகள் எல்லாம் கடல்களிலும் பெருங்கடல்களிலும் போய் சங்கமித்தாலும் அவை நிரம்புவதில்லை என்பதை மனிதர் பல காலங்களாகவே கண்டுள்ளனர். இதற்கு காரணம், அதே அளவான தண்ணீர் பூமியின் விளிம்பிலிருந்து வெளியே சிந்திவிடுவதே என சிலர் நம்பினர். பூமி உருண்டை என கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு வரை இவ்வாறுதான் நினைத்தனர். ஆனால், சூரியனானது ஒவ்வொரு வினாடியும் கடல் பரப்பிலிருந்து கோடிக்கணக்கான காலன் தண்ணீரை நீராவியாக மேலே “பம்பு” செய்கிறது என்பதைப் பின்னர்தான் அறிய வந்தனர். இவை மேகங்களாக உருவாகி, காற்றினால் நிலப்பகுதிகளுக்கு மேல் அடித்துச் செல்லப்பட்டு, அங்கே ஈரப்பதமானது மழையாகவும் பனியாகவும் பெய்கிறது. இந்தத் தண்ணீர் ஆறுகளில் போய் சேர்ந்து மறுபடியும் கடல்களுக்கே ஓடுகிறது. இந்த அற்புதகரமான சுழற்சி பற்றி பூர்வகாலத்தில் ஒருவரும் அறியாதிருக்க பைபிள் அதைப் பற்றிக் கூறியது: “ஒவ்வொரு நதியும் கடலிலே ஓடி விழுந்தும் கடல் நிரம்பாது. நதிகள் உற்பத்தியான இடத்திற்கே தண்ணீர் திரும்பி, மறுபடியும் ஓட ஆரம்பிக்கிறது.”​—பிரசங்கி 1:7, டுடேஸ் இங்லீஷ் வர்ஷன்.

7இப்பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி பைபிள் கூறுவதாவது: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” (ஆதியாகமம் 1:1) ஆனால், பிரபஞ்சத்திற்கு ஆரம்பம் இருக்கவில்லை என அநேக விஞ்ஞானிகள் அடித்துக் கூறியதால் இது அறிவியல் ஆதாரமற்றது என ஒதுக்கித்தள்ளினர். என்றாலும் புதிய தகவல்களை சுட்டிக்காட்டுபவராய் ராபர்ட் ஜாஸ்ட்ரோ இவ்வாறு விவரிக்கிறார்: “பிரபஞ்சத்திற்கு ஏதோவொரு கருத்தில் ஆரம்பம் இருந்தது என்பதே இந்த வினோதமான வளர்ச்சிகளின் சாராம்சமாய் தோன்றுகிறது; காலத்தின் போக்கில் ஏதோவொரு குறிப்பிட்ட நொடியில் அது ஆரம்பமானது.” இப்போது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் பெரு வெடிப்பு கொள்கை பற்றியே ஜாஸ்ட்ரோ இங்கு குறிப்பிடுகிறார்; அதைப் பற்றி அதிகாரம் 9-⁠ல் வாசித்தது உங்களுக்கு நினைவிருக்கிறது அல்லவா? அவர் தொடருகிறார்: “உலகத்தின் ஆரம்பம் பற்றிய விண்ணியல் அத்தாட்சி பைபிளின் கருத்திற்கே வழிநடத்துவதை இப்போது காண்கிறோம். விவரங்கள் வேறுபடுகின்றன, ஆனால் விண்ணியல் மற்றும் பைபிளின் ஆதியாகமப் பதிவில் சொல்லப்பட்ட விவரங்களின் அடிப்படை விஷயங்கள் எல்லாம் ஒன்றே.”6

8இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு என்ன பிரதிபலிப்பு இருந்திருக்கிறது? “விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள்” என ஜாஸ்ட்ரோ எழுதுகிறார். “அறிவியல் கண்டுபிடித்துள்ள அத்தாட்சி, நமது தொழிலில் நம்பப்படும் விஷயங்களுக்கு முரணாக இருக்கையில் விஞ்ஞானிகள் பிரதிபலிக்கும் முறையானது அறிவியல்பூர்வ மனது செயல்படும் விதம் பற்றிய அக்கறையூட்டும் உதாரணமாக உள்ளது; அந்த அறிவியல் மனது மிகவும் நியாயத்தன்மை உள்ளதென சொல்லப்படுகிறது. நமது நம்பிக்கைகள், கிடைக்கும் அத்தாட்சிகளோடு முரண்படுகையில் நாம் எவ்வாறு பிரதிபலிப்போமோ அவ்வாறேதான் விஞ்ஞானியும் பிரதிபலிக்கிறார். அப்போது நாம் எரிச்சலடைகிறோம், எந்த முரண்பாடுமே இல்லை என்பதைப் போல நடிக்கிறோம் அல்லது அர்த்தமற்ற சொற்றொடர்களை உபயோகித்து அதை மறைக்க முயலுகிறோம்.”7 ஆனால் “அறிவியல் கண்டுபிடித்துள்ள அத்தாட்சி,” பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி விஞ்ஞானிகள் வெகு காலமாக நம்பி வந்ததற்கு முரணாக இருந்தபோதிலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பைபிளில் எழுதப்பட்டிருந்ததை அது உறுதி செய்கிறது என்பதே உண்மை.

9நோவாவின் நாட்களில் மாபெரும் ஜலப்பிரளயம் ஏற்பட்டதென பைபிள் கூறுகிறது. அது பூமியின் உயர்ந்த மலைகளை எல்லாம் மூடி நோவாவின் மாபெரும் பேழைக்கு வெளியே இருந்த எல்லா மனிதர்களையும் அழித்துப்போட்டது. (ஆதியாகமம் 7:1-24) இந்த விவரப்பதிவை அநேகர் ஏளனம் செய்துள்ளனர். ஆனால் உயர்ந்த மலைகளில் சிப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதோடுகூட, பனிக்கட்டி நிறைந்த மண் குவியல்களில் காணப்படும் புதைப்படிவங்களும் சடலங்களும், சில காலத்திற்கு முன்பு மாபெரும் வெள்ளம் ஏற்பட்டதை நிரூபிக்கும் கூடுதலான அத்தாட்சி அளித்துள்ளன. த சாட்டர்டே ஈவினிங் போஸ்ட் குறிப்பிட்டதாவது: “இந்த மிருகங்களில் அநேகம் கொஞ்சம்கூட அழுகாத, முழுமையான, சேதமடையாத நிலையில், நின்றுகொண்டோ மண்டியிட்ட நிலையிலோ காணப்படுகின்றன. . . . நாம் இதுவரை நினைத்திருந்ததற்கு முற்றிலும் எதிரான ஒரு காட்சி இப்போது புலப்படுகிறது. கடும் குளிரில் வாழ்வதற்கு ஏற்ப விசேஷமாய் படைக்கப்படாத பெரிய, நன்கு கொழுத்த மிருக கூட்டங்கள் வெயில் கொஞ்சும் புல்வெளிகளில் மேய்கின்றன . . . தாக்குதலுக்கான எந்த வெளிப்புற அடையாளமும் இல்லாமல் அவை எல்லாம் திடீரென்று, அதுவும் கடைசி கவளத்தை விழுங்குவதற்கு முன்பே கொல்லப்பட்டன; பிறகு, அவற்றின் உடலிலுள்ள செல்கள் ஒவ்வொன்றும் கச்சிதமாக பாதுகாக்கப்படும் அளவுக்கு சட்டென்று உறைந்துபோயின.”8

10இது ஜலப்பிரளயத்தின்போது நிகழ்ந்ததற்கு இசைவாகவே உள்ளது. பைபிள் அதைப் பின்வரும் வார்த்தைகளில் விவரிக்கிறது: “மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.” அந்த மழை “பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகின[து],” அதோடு துருவ பிரதேசங்களில் உறைய வைக்கும் காற்றும் நிச்சயமாக வீசியிருக்கும். (ஆதியாகமம் 1:6-8; 7:11, 19) அந்தப் பகுதிகளில்தான் வெப்பநிலை மாற்றம் மிக வேகமாகவும் தீவிரமாகவும் நிகழ்ந்திருக்கும் அல்லவா? அதனால்தான் பல்வேறு உயிரினங்கள் உறைபனி குவியல்களில் அமிழ்ந்துபோய் அப்படியே பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. சைபீரியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் தோண்டியெடுக்கப்பட்ட ரோமம் நிறைந்த யானை அதில் ஒன்று; அதன் படத்தைத்தான் இந்தப் பக்கத்திலே பார்க்கிறீர்கள். அதன் வாயிலும் வயிற்றிலும் இன்னமும் புல் இருந்தது, உறைநிலையிலிருந்து மீண்ட பிறகு அதன் மாம்சம் இன்னமும் சாப்பிடும் நிலையில் இருந்தது.

11பைபிளை நாம் எவ்வளவு நுணுக்கமாக ஆராய்கிறோமோ, அதன் குறிப்பிடத்தக்க துல்லியமான தன்மை அவ்வளவு அதிகமாக வியப்பூட்டுகிறது. இந்தப் புத்தகத்தின் 36, 37-⁠ம் பக்கங்களில் பார்த்தது போல, சிருஷ்டிப்பின் படிகள் என பைபிள் கூறுவது இப்போது அறிவியல் உறுதி செய்யும் அதே வரிசையில் உள்ளது. பைபிள் வெறுமனே மனிதர்களால் எழுதப்பட்டது என்றால் இந்த உண்மையை விளக்குவது கடினமாகிவிடும். அறிவு அதிகரிக்கையில் பைபிளிலுள்ள அநேக விவரங்கள் உண்மையென நிரூபிக்கப்படுவதற்கு இது மற்றொரு உதாரணம் மட்டுமே. “பைபிளின் மதத்திற்கு இருப்பதைப்போல வேறு எந்த அறிவியல் துறைக்கும் இந்தளவுக்கு அதிகமான அத்தாட்சிகள் இல்லை”9 என புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான ஐசக் நியூட்டன் கூறினார்.

பைபிளும் ஆரோக்கியமும்

12ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல நூற்றாண்டுகளாகவே பேரளவு அறியாமை நிலவியது. ஒரு மருத்துவர் இவ்வாறு கூறினார்: “இன்றும்கூட பெரும்பாலான மக்கள் மத்தியில் அதிகளவான மூடநம்பிக்கைகள் உள்ளன. உதாரணமாக, பக்கை (buckeye) என்ற தாவரத்தை பாக்கெட்டில் வைத்திருந்தால் மூட்டுவாதத்தைத் தவிர்க்கலாம், தேரைகளைக் கையில் பிடித்தால் மருக்கள் உண்டாகும், சிவப்பு மெல்லிய கம்பளித் துணியைக் கழுத்தில் சுற்றிக்கொண்டால் தொண்டை வலியைச் சுகப்படுத்தலாம்” போன்றவை. ஆனாலும் அவர் கூறினார், “இத்தகைய கூற்றுகள் எதையும் பைபிளில் காணமுடிவதில்லை என்பதே மிகவும் குறிப்பிடத்தக்கது.”10

13பூர்வகாலத்தில் பின்பற்றப்பட்ட அபாயகரமான மருத்துவ சிகிச்சை முறைகளை, பைபிள் கூறுவதோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும் குறிப்பிடத்தக்கதே. உதாரணமாக பூர்வ எகிப்தியர்களின் மருத்துவ சாசனமான பப்பைரஸ் ஏபர்ஸ், பல வியாதிகளுக்கு நிவாரணியாக மலத்தை உபயோகிக்கும்படி கூறுகிறது. புதிதாக கறந்த பாலோடு மனித மலத்தைச் சேர்த்து, காயத்தின் பொருக்கு உதிர்ந்த பிறகு வெடிப்புகளில் பூச வேண்டும் என்கிறது. சிலாம்பை நீக்குவதற்கான ஒரு பரிகாரம் இவ்வாறு கூறுகிறது: “புழுவின் இரத்தம், சமைத்து எண்ணெயோடு சேர்; எலி, கொன்று, சமைத்து, எண்ணெயில் வடிகட்டு; கழுதையின் சாணம், கறந்த பாலோடு சேர். காயத்தில் தடவு.”11 அப்படிப்பட்ட சிகிச்சை மோசமான தொற்றுகளில் விளைவடையும் என இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

14மலத்தைப் பற்றி பைபிள் என்ன கூறுகிறது? “நீ மலஜலாதிக்குப் போகும்போது, [குழிதோண்டும் கருவியால்] மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்து போனதை மூடிப்போடக்கடவாய்” என அது கூறியது. (உபாகமம் 23:13) ஆகவே, மலத்தை மருத்துவ சிகிச்சைக்கு உபயோகிக்கும்படி கூறாமல் கழிவுப்பொருட்களை எச்சரிக்கையுடன் நீக்கிப்போடும்படியே பைபிள் கூறுகிறது. ஈக்கள் வந்தமரும்படி மலத்தை திறந்தவெளியில் விட்டுவைப்பதன் அபாயம் பற்றி இந்த நூற்றாண்டு வரையாக அறியப்படாமல் இருந்தது. இதனால், ஈக்களால் கடத்தப்படும் பயங்கரமான நோய்கள் பெருகி அநேகர் மரிப்பதில் விளைவடைந்துள்ளது. ஆனால் இந்தக் காலங்கள் முழுவதிலும் இதற்கான எளிய பரிகாரம் பைபிளில் எழுதப்பட்டிருந்தது, 3,000-⁠க்கும் அதிக வருடங்களுக்கு முன்பே இஸ்ரவேலர்கள் அதைத்தான் பின்பற்றி வந்தனர்.

15கடந்த நூற்றாண்டில் மருத்துவர்கள், பிரேத அறையில் பிரேத ஆய்வுக்கு பிறகு சோதனைகள் செய்வதற்காக நேரே பிரசவ அறைகளுக்கு செல்வார்கள். அப்போது அவர்கள் தங்கள் கைகளைக்கூட கழுவமாட்டார்கள். ஆக, இறந்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் தொற்றுகள் பரவினது, இதனால் இன்னும் பலர் இறந்தனர். கைகளைக் கழுவ வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்திக் காட்டப்பட்ட பிறகும்கூட மருத்துவ துறையிலிருந்த அநேகர் இப்படிப்பட்ட சுகாதார முறைகளை எதிர்த்தனர். அவர்களை அறியாமலேயே பைபிளில் காணப்பட்ட ஞானத்தை அசட்டை செய்துவந்தனர். ஏனென்றால், இறந்தவர்களைத் தொடுபவர்கள் தீட்டுப்படுவார்கள் என்றும் அவர்கள் தங்களையும் தங்கள் உடைகளையும் கழுவ வேண்டும் என்றும் இஸ்ரவேலருக்கான யெகோவாவின் சட்டம் கூறியது.​—எண்ணாகமம் 19:11-22.

16யெகோவா ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கைக்கு அடையாளமாக இவ்வாறு கூறினார்: ‘ஆண் பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்.’ பின்னர் இஸ்ரவேல் தேசத்தாரிடம் இந்தத் தேவை மறுபடியும் கூறப்பட்டது. (ஆதியாகமம் 17:12; லேவியராகமம் 12:2, 3) ஏன் எட்டாம் நாளில் செய்யப்படவேண்டும் என்பதற்கு எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை, ஆனால் இப்போது நாம் அறிந்திருக்கிறோம். இரத்தத்தை உறையச் செய்யும் வைட்டமின் கே (vitamin K) அந்தச் சமயத்தில்தான் போதுமான அளவு உற்பத்தியாகி இருக்குமென மருத்துவ ஆராய்ச்சி காட்டுகிறது. இரத்தம் உறைய உதவும் மற்றொரு பொருளான புரோதுராம்பின் (prothrombin), அந்தக் குழந்தையின் வாழ்வில் எப்போதும் இருப்பதைவிட எட்டாவது நாளில்தான் மிகவும் அதிகளவில் இருக்கும் என்றும் தோன்றுகிறது. இந்த அத்தாட்சியின் அடிப்படையில்தான் டாக்டர் எஸ். ஐ. மேக்மில்லன் பின்வரும் முடிவுக்கு வந்தார்: “விருத்தசேதனம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான நாள் எட்டாம் நாளே.”12 இது வெறுமனே தற்செயலாய் நிகழ்ந்ததா? இல்லவே இல்லை. அதைப் பற்றி நன்கு அறிந்த கடவுள் கொடுத்த தகவலே இது.

17மனப்பான்மையும் உணர்ச்சிகளும் சரீர ஆரோக்கியத்தை எவ்வளவாய் பாதிக்கும் என்பது நவீன அறிவியலின் மற்றொரு கண்டுபிடிப்பாகும். ஓர் என்ஸைக்ளோப்பீடியா விவரிக்கிறது: “உறுப்புகளின் செயல்பாடுகளும் அவற்றின் அமைப்புகளும் ஒரு நபரின் மனநிலையோடு நெருங்கிய தொடர்புடையவை என்பது 1940 முதல் அதிகமதிகமாக தெளிவாகி வந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட உறுப்புகளில் திசு மாற்றங்கள்கூட ஏற்படலாம்.”13 ஆனால் மனப்பான்மைக்கும் சரீர ஆரோக்கியத்திற்கும் உள்ள இந்த நெருங்கிய தொடர்பு பற்றி பைபிள் வெகு காலத்திற்கு முன்பே குறிப்பிட்டது. உதாரணமாக, “சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி” என்று அது கூறுகிறது.​—நீதிமொழிகள் 14:30; 17:⁠22.

18ஆகவே, சீரழிக்கும் உணர்ச்சிகளிலிருந்தும் மனப்பான்மைகளிலிருந்தும் விலகியிருக்கும்படியே பைபிள் கூறுகிறது. “வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல் . . . சீராய் நடக்கக்கடவோம்” என அது அறிவுறுத்துகிறது. மேலுமாக, “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இரு[ங்கள்].” (ரோமர் 13:13; எபேசியர் 4:31, 32) பைபிள் முக்கியமாய் அன்பை வலியுறுத்துகிறது. “இவை எல்லாவற்றின் மேலும் . . . அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று அது கூறுகிறது. அன்பை பெருமளவு ஆதரித்து பேசியவரான இயேசு கிறிஸ்து தம் சீஷர்களிடம், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்று கூறினார். அவருடைய மலைப் பிரசங்கத்தில், “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்” என்றும்கூட கூறினாரே. (கொலோசெயர் 3:12-15; யோவான் 13:34; மத்தேயு 5:44) இது கோழைத்தனம் என்று கூறி அநேகர் ஏளனம் செய்யலாம், ஆனால் அதற்கான எதிர் விளைவை அவர்கள் அனுபவிக்கிறார்கள். அன்பற்ற தன்மையே, மனரீதியான கோளாறுகளுக்கும் மற்ற பிரச்சினைகளுக்கும் ஒரு முக்கிய காரணம் என்று அறிவியல் கண்டுபிடித்துள்ளது.

19பிரிட்டனின் மருத்துவ இதழான லான்செட் ஒரு முறை இவ்வாறு கூறியது: “அன்பிற்கு, மனதைப் பாதுகாத்து திரும்பவும் நிலைநாட்டும் வல்லமை உள்ளது; இதுவே மனவியலின் மிகவும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.”14 அதைப் போலவே மன அழுத்த நிபுணரான டாக்டர் ஹான்ஸ் செல்யே இவ்வாறு கூறினார்: “அல்சர், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை, வெறுக்கப்படும் ஆளுக்கு அல்லது வெறுப்பைத் தூண்டும் எஜமானுக்கு ஏற்படாது. மாறாக வெறுக்கிறவன் அல்லது தனக்குள் வெறுப்பை வளர்க்கும் ஆளுக்கே அவ்வாறு ஏற்படும். ‘உன் அயலானை நேசி’ என்பதே கொடுக்கப்பட்டதிலேயே மிகவும் ஞானமான மருத்துவ ஆலோசனைகளில் ஒன்றாகும்.”15

20உண்மையில், நவீன கண்டுபிடிப்புகளோடு ஒப்பிடுகையில் பைபிளின் ஞானம் முன்னேற்றப் பாதையில் வெற்றி நடைபோடுகிறது. டாக்டர் ஜேம்ஸ் டி. ஃபிஸ்ஸர் ஒருமுறை இவ்வாறு எழுதினார்: “மிகவும் திறமை வாய்ந்த மனவியல் வல்லுனர்களாலும் மனநோய் நிபுணர்களாலும் மனநலம் பற்றி இதுவரை எழுதப்பட்ட எல்லா அதிகாரப்பூர்வ கட்டுரைகளையும் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து, வார்த்தை ஜாலங்களை எல்லாம் நீக்கிவிட்டு மெருகேற்றுங்கள். இது, வாசனைத்திரவியங்களை எல்லாம் விட்டுவிட்டு இறைச்சியை மட்டுமே எடுத்துக்கொள்வதைப் போல உள்ளது. இவ்வாறு கிடைத்த கலப்படமற்ற சுத்தமான அறிவியல் அறிவை, உயிருடன் இருப்பவர்களிலேயே மிகவும் திறமை வாய்ந்த கவிஞனை இரத்தனச் சுருக்கமாக சொல்லச் சொல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது மலைப்பிரசங்கத்தின் மிகவும் அலங்கோலமான, அரைகுறையான சுருக்கமே உங்கள் கையில் இருக்கும்.”16

பைபிளும் சரித்திரமும்

21டார்வின் தன்னுடைய பரிணாம கொள்கையை பிரசுரித்த பிறகு பைபிளின் சரித்திரப்பூர்வ பதிவு பெருமளவு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர் லியோனார்ட் வூலி இவ்வாறு விளக்கினார்: “பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் பிடிவாதமான விமர்சகர்களின் ஒரு தொகுதி உருவானது. அவர்கள், பழைய ஏற்பாட்டின் ஆரம்ப புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள எல்லாவற்றிற்குமே சரித்திரப்பூர்வ அத்தாட்சி இல்லையென மறுக்க எப்போதும் தயாராய் இருந்தனர்.”17 சாலொமோன் காலம் அல்லது அதற்கு பிறகும்கூட எழுதுவது புழக்கத்திற்கு வரவில்லை என்றும் சில விமர்சகர்கள் வாதாடியுள்ளனர். ஆகவே, நிகழ்ச்சிகள் நடந்த பிறகு பல நூற்றாண்டுகள் கழித்தே அவை எழுதப்பட்டதால் பைபிளின் ஆரம்ப விவரப்பதிவுகளை நம்பவே முடியாது என்கின்றனர். இந்தக் கொள்கையை ஆதரிக்கும் ஒருவர் 1892-⁠ல் இவ்வாறு கூறினார்: “மோசேக்கு முந்தைய விவரிப்புகள் கூறுபவை கட்டுக்கதையே என்பதை நிரூபிக்க அந்தக் காலமே போதுமானது. அந்தக் காலம் எழுத்தறிவு இல்லாத ஒரு காலமாகும்.”18

22ஆனால், மோசேயின் காலத்திற்கு வெகு முன்னரே எழுதுதல் சர்வசாதாரணமாய் இருந்ததற்கு சமீப காலங்களில் ஏராளமான புதைபொருள் அத்தாட்சிகள் குவிந்துள்ளன. “எபிரெய மொழியின் எழுத்து வடிவங்கள், முற்பிதாக்கள் காலத்திலிருந்தே கானானிலும் மற்ற அண்டை அயல் நாடுகளிலும் புழக்கத்திலிருந்ததை நாம் மறுபடியும் வலியுறுத்த வேண்டும். மேலுமாக, அந்த எழுத்துக்களின் வடிவங்கள் வேகமாய் மாறி வந்ததும் அவை பொது உபயோகத்திலிருந்ததைத் தெளிவாக காட்டுகின்றன”19 என்று புதைபொருள் ஆராய்ச்சியாளரான வில்லியம் ஃபாக்ஸ்வெல் ஆல்பிரைட் விவரித்தார். மற்றொரு புகழ்பெற்ற சரித்திர ஆசிரியரும் புதைபொருள் ஆராய்ச்சியாளருமான ஒருவர் இவ்வாறு கூறினார்: “எப்படி எழுதுவது என்பதை மோசே அறிந்திருந்தாரா என்ற கேள்வியை எழுப்பியிருப்பதே முட்டாள்தனமானது என இப்போது நாம் அறிந்திருக்கிறோம்.”20

23புதிய தகவல்கள் கிடைக்க கிடைக்க பைபிளின் சரித்திரப்பூர்வ பதிவு உண்மையென திரும்பத் திரும்ப உறுதி செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, அசீரிய அரசனாகிய சர்கோனைப் பற்றி ஏசாயா 20:1-⁠ல் உள்ள பைபிள் பதிவின் மூலமாக மட்டுமே வெகு காலமாக அறியப்பட்டிருந்தது. ஆகவே முந்தைய நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில், பைபிள் அவரைப் பற்றி கூறுவது சரித்திரப்பூர்வமானதல்ல என விமர்சகர்கள் குறைகூற ஆரம்பித்துவிட்டனர். ஆனால் பின்னர், சர்கோனுடைய பிரமாண்டமான அரண்மனையின் இடிபாடுகள் கோர்ஸாபாத்தில் தோண்டியெடுக்கப்பட்டன; அதோடு, அவருடைய ஆட்சியைப் பற்றி குறிப்பிடும் அநேக கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காரணமாக அசீரிய ராஜாக்களிலேயே மிகவும் நன்றாக அறியப்பட்டவர்களில் ஒருவரானார் சர்கோன். இஸ்ரேலைச் சேர்ந்த சரித்திராசிரியர் மோஷே பர்ல்மேன் இப்படி எழுதினார்: “பழைய ஏற்பாட்டின் சரித்திரப்பூர்வ பகுதிகளின் உண்மைத்தன்மையைக்கூட சந்தேகித்த விமர்சகர்கள் திடீரென்று தங்களுடைய கருத்துகளை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தனர்.”21

24சர்கோனின் கல்வெட்டுகளில் ஒன்று, முன்னர் பைபிள் பதிவின் மூலமாக மட்டுமே அறியப்பட்டிருந்த ஒரு விவரத்தைக் கூறுகிறது. அது இவ்வாறு வாசிக்கிறது: “யாம் சமாரியாவை முற்றுகையிட்டு கைப்பற்றினோம். 27,290 பேரை கொள்ளைப் பொருளாக எடுத்துச்சென்றோம்.”22 அதைப் பற்றிய பைபிள் பதிவு 2 இராஜாக்கள் 17:6-⁠ல் இவ்வாறு கூறுகிறது: “ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்தில் அசீரியா ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோ[னான்].” இந்த இரண்டு பதிவுகளும் இவ்வளவாய் ஒத்திருப்பதைப் பார்த்த பர்ல்மேன் குறிப்பிட்டார்: “வெற்றி தோல்வி கண்ட இரு தரப்பினரின் வரலாற்று பதிவேடுகளிலும் இரண்டு விவரிப்புகள் உள்ளன. அதில் ஒன்று மற்றொன்றைக் கிட்டத்தட்ட கண்ணாடியைப் போல பிரதிபலிக்கிறது.”23

25அப்படியென்றால், பைபிள் பதிவுகளும் சரித்திர பதிவுகளும் எல்லா விவரங்களிலுமே ஒத்திருக்கும் என எதிர்பார்க்க முடியுமா? முடியாது. அதற்கான காரணத்தைப் பர்ல்மேன் குறிப்பிடுகிறார்: “பூர்வகால மத்திய கிழக்கில் (சில சமயம் நவீன காலங்களிலும்கூட), இரண்டு தரப்பிலும் இவ்விதமாக ஒத்திருக்கும் ‘யுத்த அறிக்கைகளைப்’ பார்ப்பது அரிதே. இஸ்ரவேலும் அதன் அண்டை நாடுகளில் ஒன்றும் யுத்தம் செய்கையில், அதிலும் இஸ்ரவேல் தோற்றுப்போன சமயங்களில்தான் இது உண்மையாய் நிரூபித்தது. இஸ்ரவேல் வென்றபோதோ, தோற்றுப்போனதைப் பற்றிய எந்தவொரு குறிப்புமே எதிரியின் பதிவேடுகளில் இருக்கவில்லை.”24 (நேரேழுத்துக்கள் எங்களுடையவை.) ஆகவே, சர்கோனின் மகனான சனகெரிப் இஸ்ரவேலுக்கு எதிராக படையெடுத்தது பற்றி அசீரிய பதிவுகள் மூச்சே விடாதது ஆச்சரியமான ஒன்றல்ல. அது எந்தப் படையெடுப்பு?

26அரசனாகிய சனகெரிப் இஸ்ரவேலுக்கு எதிராக படையெடுத்த காட்சிகளை சித்தரிக்கும் படங்கள் அவருடைய அரண்மனை சுவர்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதைப் பற்றிய எழுதப்பட்ட விவரங்களும்கூட கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு களிமண் பட்டகம் (prism) இவ்வாறு வாசிக்கிறது: “யூதனாகிய எசேக்கியாவோ எமது நுகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, நாமோ அவனுடைய 46 வலுவான பட்டணங்களைச் சூழ்ந்துகொண்டோம் . . . அவனுடைய ராஜாங்க வீடாகிய எருசலேமிலேயே, கூண்டில் அடைப்பட்ட கிளிபோல அவனை சிறைப்படுத்தினோம். . . . அவனுடைய நாட்டை தரைமட்டமாக்கினோம், ஆனாலும் (அவனுடைய) ஆண்டவனாய் அவன் எனக்கு கட்டவேண்டிய கப்பத்தையும் கட்ரூ பரிசுகளையும் (தீர்வை) அதிகரித்தோம்.”25 இவ்வாறாக சனகெரிப்பின் இந்த விவரிப்பு, அசீரியர்கள் வெற்றிபெற்றதாக பைபிளில் கூறப்படும் பதிவோடு மட்டுமே ஒத்துள்ளது. ஆனால் எதிர்பார்த்தபடியே, அவர் எருசலேமைக் கைப்பற்ற தவறியது, ஒரே இரவில் அவருடைய வீரர்களில் 1,85,000 பேர் கொல்லப்பட்டதால் தன் நாட்டிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது போன்ற உண்மைகளை அவர் குறிப்பிட தவறுகிறார்.​—2 இராஜாக்கள் 18:13-19:36; ஏசாயா 36:1-37:⁠37.

27சனகெரிப் படுகொலை செய்யப்பட்டதையும் அதைப் பற்றி சமீபத்திய கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துவதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். சனகெரிப்பின் குமாரர்களில் இரண்டு பேர், அத்ரமலேக்கு மற்றும் சரேத்சேர், அவரைப் படுகொலை செய்தனர் என்று பைபிள் கூறுகிறது. (2 இராஜாக்கள் 19:36, 37) இருந்தாலும், பாபிலோனிய அரசன் நபோனிடஸ் மற்றும் பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபிலோனிய ஆசாரியன் பெரோசஸ்ஸின் விவரிப்புகள் என கூறப்படும் இரண்டு பதிவுகளுமே, படுகொலை செய்வதில் ஒரே ஒரு மகன் மட்டுமே உட்பட்டிருந்தான் என கூறுகின்றன. இதில் எது சரி? சனகெரிப்பிற்கு பின் அரசனான அவருடைய மகன் எசரத்தோனின் பட்டக துண்டு ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பற்றி கூறுபவராய் ஃபிலிப் பைபர்ஃபெல்ட் இவ்வாறு எழுதினார்: “பைபிள் பதிவே உண்மையென நிரூபிக்கப்பட்டது. எசரத்தோனின் கல்வெட்டுகள் மூலம் அதன் நுணுக்கமான விவரங்களிலும்கூட அதுவே சரியென உறுதிசெய்யப்பட்டது. அசீரிய பாபிலோனிய சரித்திரம் பற்றி பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி பாபிலோனிய ஆதாரங்களைவிட அதிக துல்லியமாய் நிரூபித்தது. பைபிளுக்கு இசைவாக இல்லாத, சமகாலத்திய மற்ற ஆதாரங்களையும்கூட இதை வைத்து மதிப்பிடும் அளவுக்கு இந்த உண்மை அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.”26

28ஒரு காலத்தில் பெல்ஷாத்சார் பற்றிய விஷயத்திலும், அறியப்பட்ட பூர்வீக ஆதாரங்கள் அனைத்துமே பைபிளுக்கு முரணாக இருந்தன. பாபிலோன் வீழ்ச்சியடைந்தபோது பெல்ஷாத்சாரே அதன் அரசராக இருந்தார் என பைபிள் கூறுகிறது. (தானியேல் 5:1-31) ஆனால் அதிகாரப்பூர்வ பதிவுகள் பெல்ஷாத்சார் பற்றி மூச்சுவிடவே இல்லை; அந்தச் சமயத்தில் நபோனிடஸ்தான் அரசராக இருந்தார் என்றே கூறுகின்றன. ஆகவே, பெல்ஷாத்சார் என்ற ஒருவர் இல்லவே இல்லை என குறைகூறுபவர்கள் வாதாடினர். ஆனால் சமீப காலங்களில், நபோனிடஸின் ஒரு மகனே பெல்ஷாத்சார் என்றும் அவரும் தன் தகப்பனோடு உடன் அரசராக பாபிலோனில் ஆட்சி செய்தார் என்றும் காட்டுகிற பூர்வீக சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பெல்ஷாத்சார் இரண்டாவதாக இருந்ததால்தான் அவர் தானியேலிடம் “ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பான்” என சொன்னதாக பைபிள் கூறுகிறதென்பது தெளிவாக இல்லையா? (தானியேல் 5:16, 29) பைபிள் புத்தகமான தானியேலையும் மற்ற பூர்வீக சாசனங்களையும் ஒப்பிடுகையில் யேல் பல்கலைக்கழக பேராசிரியர் ஆர். பீ. டாக்கர்டீ இவ்வாறு கூறினார்: “பைபிள் விவரப்பதிவு பெல்ஷாத்சாரின் பெயரை உபயோகிக்கிறது, அவருக்கு ராஜரீக அதிகாரம் இருந்ததென கூறுகிறது, அந்த ராஜ்யத்திலே இரட்டை ஆளுமை முறை இருந்ததை ஒப்புக்கொள்கிறது. இந்தக் காரணங்கள் நிமித்தமாக அதுவே மிகச் சிறந்ததென சொல்லப்படலாம்.”27

29பைபிளில் குறிப்பிடப்பட்ட ஒரு மனிதனின் சரித்திரப்பூர்வ அத்தாட்சியை நிரூபிக்கும் மற்றொரு கண்டுபிடிப்பு செய்யப்பட்டது. அதைப் பற்றி, 1979-⁠ல் இஸ்ரவேலிலுள்ள செசரியாவில் நிகழ்ந்த புதைபொருள் ஆராய்ச்சியில் பங்குகொண்ட மைக்கேல் ஜே. ஹாவர்ட் இவ்வாறு எழுதினார்: “பிலாத்துவைப் பற்றி 1,900 வருடங்களாக சுவிசேஷங்கள் மூலமாகவும் ரோம மற்றும் யூத சரித்திர ஆசிரியர்களின் தெளிவற்ற சில குறிப்புகள் மூலமாகவும் மட்டுமே நாம் அறிந்திருந்தோம். அவருடைய வாழ்க்கை பற்றி அநேகமாக ஒன்றுமே அறியப்படாதிருந்தது. அப்படி ஒருவர் இல்லவேயில்லை என்றே சிலர் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். ஆனால் 1961-⁠ல் இத்தாலிய புதைபொருள் குழு ஒன்று செசரியாவில் உள்ள பூர்வீக ரோம அரங்கின் இடிபாடுகளில் வேலை செய்துகொண்டிருந்தது. அப்போது, படிகட்டுகளில் ஒன்றாக உபயோகிக்கப்பட்ட ஒரு கல்லை தொழிலாளி ஒருவர் புரட்டிப் போட்டார். பின்புறத்தில், கொஞ்சம் சிதைந்திருந்த இந்த வாக்கியம் லத்தீனில் எழுதப்பட்டிருந்தது: ‘செசரைன்சிபஸ் டைபீரியம் பொன்டியஸ் பைலெடஸ் பிரெஃபாக்டஸ் யுதேயே.’ (யூதேயாவின் தேசாதிபதியான பொந்தியு பிலாத்து, டைபீரியம் செசரியா மக்களுக்கு.) இது பிலாத்து இருந்தாரா இல்லையா என்ற சந்தேகத்திற்கு மரண அடி கொடுத்தது. . . . கிறிஸ்துவை சிலுவையில் அறையும்படி உத்தரவிட்ட மனிதனின் வாழ்க்கை பற்றிய சமகாலத்திய, கல்வெட்டு சார்ந்த அத்தாட்சி முதன் முறையாக கிடைத்துள்ளது.”28​—யோவான் 19:13-16; அப்போஸ்தலர் 4:⁠28.

30பூர்வீக பைபிள் விவரப்பதிவுகளின் சிறுசிறு விவரங்களைக்கூட நவீன கண்டுபிடிப்புகள் ஆதரித்துள்ளன. உதாரணமாக பைபிள் கூறுவதற்கு முரணாக, அவ்வளவு முன்னான காலத்திலேயே ஒட்டகங்களை வீட்டு பிராணிகளாக உபயோகிக்க ஆரம்பிக்கவில்லை என வெர்னர் கெல்லர் 1964-⁠ல் எழுதினார். ஆகவே, “ரெபேக்காவை அவளுடைய சொந்த ஊரான நாகோரில் நாம் முதன் முதலில் சந்திக்கும் அந்தக் காட்சியின் பின்னணியைக் கொஞ்சம் மாற்ற வேண்டும். கிணற்றருகே அவள் தண்ணீர் ஊற்றிய, அவளுடைய வருங்கால மாமனாரான ஆபிரகாமுக்கு சொந்தமான ‘ஒட்டகங்கள்’ உண்மையில் கழுதைகளே.”29 (ஆதியாகமம் 24:10) ஆனால், 1978-⁠ல் இஸ்ரேலிய மிலிட்டரி தலைவரும் புதைபொருள் ஆராய்ச்சியாளருமான மோஷே தயான், அக்காலத்திலேயே ஒட்டகங்கள் “போக்குவரத்திற்காக உபயோகிக்கப்பட்ட” அத்தாட்சியைக் குறிப்பிட்டு காண்பித்தார். இவ்வாறு பைபிள் விவரிப்பே துல்லியமானதாக நிரூபித்தது. “பொனீஷியாவில் உள்ள பைப்லாஸில் கண்டுபிடிக்கப்பட்ட, கிமு பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சித்திரம் மண்டியிட்டிருக்கும் ஓர் ஒட்டகத்தைக் காட்டுகிறது” என தயான் விளக்கினார். “மேலும் மெசொப்பொத்தாமியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, முற்பிதாக்கள் காலத்தைச் சேர்ந்த உருளை வடிவ முத்திரைகளில் ஒட்டக ஓட்டிகள் காணப்படுகின்றனர்.”30

31பைபிள் சரித்திரப்பூர்வமாய் துல்லியமானது என்பதை நிரூபிக்க ஏராளமான அத்தாட்சிகள் மலைபோல் குவிந்த வண்ணம் இருக்கின்றன. எகிப்தியர்கள் சிவந்த சமுத்திரத்தில் படுதோல்வி அடைந்தது, இன்னும் மற்ற தோல்விகள் போன்றவை சரித்திரப் பதிவேடுகளில் இல்லை என்பது உண்மையே. அதுவும் ஆச்சரியம் தரும் விஷயம் அல்ல, ஏனென்றால் ஆட்சியாளர்கள் தங்கள் தோல்விகளை பதிவு செய்யும் பழக்கம்தான் கிடையாதே! இருந்தாலும், சாலொமோனின் மகனான ரெகொபெயாம் அரசாண்ட காலத்திலே பார்வோன் சீஷாக் யூதாமீது படையெடுத்து வெற்றி கண்டதைப் பற்றி எகிப்திலுள்ள கார்னாக் ஆலய சுவர்களில் பதிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி 1 இராஜாக்கள் 14:25, 26-⁠ல் பைபிள் கூறுகிறது. அதுமட்டுமல்ல, மோவாபிய அரசனான மேசா இஸ்ரவேலுக்கு விரோதமாக கலகம் செய்தது பற்றி மோவாபிய கல் என அழைக்கப்படுவதில் அவரே எழுதி வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவரப்பதிவை பைபிளில் 2 இராஜாக்கள் 3:4-27-⁠ல் வாசித்துப் பார்க்கலாம்.

32நீங்கள் அருங்காட்சி சாலைகளுக்கு செல்லும் பழக்கமுடையவரா? அப்படியென்றால், பைபிள் விவரப்பதிவுகளை ஆதரிக்கும் சுவர் சித்திரங்கள், கல்வெட்டுகள், சிலைகள் ஆகியவற்றை நிச்சயம் காணலாம். இஸ்ரவேல் மற்றும் யூதாவின் அரசர்களான எசேக்கியா, மனாசே, உம்ரி, ஆகாப், பெக்கா, மெனாகேம், ஓசெயா ஆகியோர் அசீரிய அரசர்களின் ஆப்புவடிவ எழுத்துக்களின் பதிவுகளில் காணப்படுகின்றனர். அரசனாகிய யெகூ அல்லது அவருடைய தூதர்களில் ஒருவர் சல்மனாசாருக்கு கப்பம் கட்டுவதாக கருப்பு நிற நான்முக கல்லில் (Black Obelisk) சித்தரிக்கப்பட்டுள்ளது. பைபிள் கதாபாத்திரங்களான மொர்தெகாய் மற்றும் எஸ்தர் அறிந்திருந்த சூசான் அரண்மனையின் உட்புற அலங்கரிப்பு இன்று பார்வைக்காக மறுபடியும் அமைக்கப்பட்டுள்ளது. பைபிள் விவரப்பதிவுகளில் காணப்படும் ஆரம்பகால ரோம இராயர்களான அகஸ்து, திபேரியு, கிலவுதியு ஆகியோரின் சிலைகளையும் பொருட்காட்சி சாலைகளுக்கு செல்பவர்கள் பார்க்கலாம். (லூக்கா 2:1; 3:1; அப்போஸ்தலர் 11:28; 18:2) மேலும், திபேரியு இராயனின் உருவம் பதித்த வெள்ளி தினாரி நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரி கட்டுவது பற்றி பேசுகையில் இயேசு இதைப்போன்ற ஒரு நாணயத்தைத்தான் கேட்டார்.​—மத்தேயு 22:19-21.

33நவீனகால இஸ்ரேலுக்கு விஜயம் செய்யும், பைபிளை நன்றாக அறிந்த ஒருவருக்கு ஆச்சரியம்தான் காத்திருக்கிறது. பைபிளானது அந்தத் தேசத்தையும் அதன் அமைப்பையும் மிகவும் துல்லியமாக விவரிப்பதைக் கண்டு அவர் மூக்கின்மேல் விரல் வைப்பார். சீனாய் தீபகற்பத்தில் நடத்தப்பட்ட புவி வளரியல் ஆராய்ச்சியின் தலைவரான டாக்டர் ஸீயேவ் ஷெர்மர் ஒருமுறை இவ்விதமாக கூறினார்: “எங்களிடம் மேப்புகளும் புவி வடிவ இயல் (geodetic) சர்வே வரைபடங்களும் உள்ளன. ஆனால் பைபிளும் இந்த வரைபடங்களும் முரண்படும்போது நாங்கள் பைபிளையே பின்பற்ற விரும்புகிறோம்.”31 பைபிளிலுள்ள சரித்திர பதிவுகளை உங்கள் கண்களால் காண விரும்புகிறீர்களா? இன்று எருசலேமில், சுமார் 533 மீட்டர் நீளமுள்ள, 2,700-⁠க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பே கற்பாறை நடுவே குடையப்பட்ட ஒரு சுரங்க பாதைக்குள் நீங்கள் காலார நடந்து செல்லலாம். அது, நகரின் மதில்களுக்கு வெளியே மறைவாக அமைந்திருந்த கீயோன் ஊற்றிலிருந்து நகரத்திற்குள் உள்ள சீலோவாம் குளத்திற்கு தண்ணீரைக் கொண்டு வருவதன் மூலம் நகரின் தண்ணீர் சப்ளையைப் பாதுகாப்பதற்காக வெட்டப்பட்டது. சனகெரிப் நகரத்தை முற்றுகையிடுவான் என எதிர்பார்த்த எசேக்கியா அந்நகருக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக இந்தச் சுரங்கத்தை எவ்வாறு வெட்டினான் என பைபிள் கூறுகிறது.​—2 இராஜாக்கள் 20:20; 2 நாளாகமம் 32:⁠30.

34பைபிளின் துல்லியத்தன்மையை அவசரப்பட்டு குறைகூறுவது முட்டாள்தனமானது என்பதற்கு இவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே. இதைப்போன்ற இன்னும் ஏராளமானவை உள்ளன. ஆகவே பைபிளின் நம்பகத்தன்மைமீது சந்தேகம் ஏற்பட, பைபிள் கூறுவது அல்லது உறுதியான அத்தாட்சிகள் காரணமல்ல மாறாக தவறான தகவல் அல்லது அறியாமையே இதற்கு காரணமாகும். “புதைபொருள் ஆராய்ச்சி அதன் முடிவை இன்னும் கூறிவிடவில்லை. ஆனால், இதுவரை கிடைத்துள்ள அத்தாட்சிகள் விசுவாசம் குறிப்பிட்டு காட்டுவதையே ஆதரிக்கின்றன. அதாவது, அறிவு பெருகுகையில் பைபிளுக்கு நன்மைதான் ஏற்படுமே ஒழிய வேறல்ல என்பதையே நிரூபிக்கின்றன”32 என பிரிட்டிஷ் பொருட்காட்சி சாலையின் முன்னாள் இயக்குனரான ஃபிரெட்ரிக் கென்யன் எழுதினார். புகழ்பெற்ற புதைபொருள் ஆராய்ச்சியாளரான நெல்சன் குலுயெக் கூறினார்: “எந்தவொரு புதைபொருள் கண்டுபிடிப்பும் பைபிள் விவரிப்பிற்கு முரணாக இருந்ததே இல்லை என ஆணித்தரமாக கூறலாம். பைபிளிலுள்ள சரித்திரப்பூர்வ வாக்கியங்களை தெளிவாக அல்லது நுணுக்கமான விவரங்களில் உறுதிசெய்யும் அநேக புதைபொருள் கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டுள்ளன.”33

நேர்மைத்தன்மையும் ஒத்திசைவும்

35பைபிள் எழுத்தாளர்களின் நேர்மைத்தன்மையே அது கடவுளிடமிருந்து வந்ததென்பதை நிரூபிக்கும் மற்றொரு அத்தாட்சியாகும். தவறுகளை அல்லது குறைபாடுகளை ஒப்புக்கொள்வது, அதிலும் எழுத்தில் ஒப்புக்கொள்வது மனித இயல்புக்கு முரணானது. பெரும்பாலான பூர்வீக எழுத்தாளர்கள் தங்களுடைய வெற்றிகளையும் நற்குணங்களையுமே பார்த்துப் பார்த்து எழுதி வைத்தனர். இருந்தாலும், மோசே “கட்டளைகளை மீறி” நடந்ததினால் இஸ்ரவேலரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் வழிநடத்திச் செல்லும் வாய்ப்பை தான் இழந்ததைப் பற்றி அவரே எழுதினார். (உபாகமம் 32:50-52; எண்ணாகமம் 20:1-13) யோனா தன்னுடைய ஏறுமாறான குணத்தைப் பற்றி தானே குறிப்பிட்டார். (யோனா 1:1-3; 4:1) பவுல் தான் முன்பு செய்த தவறுகளை எல்லாம் ஒப்புக்கொண்டார். (அப்போஸ்தலர் 22:19, 20; தீத்து 3:3) கிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருந்த மத்தேயு, அப்போஸ்தலர்கள் சில சமயங்களில் விசுவாசக் குறைவைக் காண்பித்தனர், முதன்மையாய் இருக்க விரும்பினர், இயேசுவைக் கைது செய்தபோது அவரைவிட்டு ஓடிவிட்டனர் என்பதை எல்லாம் எழுதினார்.​—மத்தேயு 17:18-20; 18:1-6; 20:20-28; 26:⁠56.

36பைபிள் எழுத்தாளர்கள் சில விவரங்களை தவறாக பிரதிநிதித்துவம் செய்தார்கள் என்று கூறினால், தங்களைப் பற்றியே சாதகமற்ற தகவலைக் கொடுப்பதாக அர்த்தமாகாதா? தங்களுடைய தவறுகளையே எழுதி வைத்தவர்கள் மற்ற விஷயங்களைப் பற்றியா பொய் சொல்லப்போகிறார்கள்? ஆகவே, பைபிள் எழுத்தாளர்களின் நேர்மைத்தன்மையே அவர்களுடைய கூற்றிற்கு அத்தாட்சி அளிக்கிறது. தாங்கள் எழுதுகையில் கடவுளே அவர்களை வழிநடத்தினார் என அவர்கள் கூறுவது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் அல்லவா?​—2 தீமோத்தேயு 3:⁠16.

37ஒரு மையக் கருத்தைச் சுற்றியே அமைந்த பைபிளின் உட்புற ஒத்திசைவும்கூட அது உண்மையில் கடவுளுடைய வார்த்தை என்பதற்கு கூடுதலான சான்றளிக்கிறது. பைபிளின் 66 புத்தகங்களும், 16 நூற்றாண்டுகளாக சுமார் 40 வித்தியாசமான எழுத்தாளர்களால் எழுதப்பட்டது என்று வெறுமனே கூறுவது மிகவும் சுலபம். ஆனால் அந்த உண்மை எவ்வளவு குறிப்பிடத்தக்கது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! உதாரணமாக, ரோம பேரரசின் காலத்தில் ஒரு புத்தகம் எழுத ஆரம்பிக்கப்பட்டு, முடியரசர்களின் காலத்திலும் தொடர்ந்து நவீனகால குடியரசுகளின் காலம்வரை எழுதப்படுகிறது என வைத்துக்கொள்ளுங்கள். போர் வீரர்கள், ராஜாக்கள், ஆசாரியர்கள், மீனவர்கள், அதுமட்டுமல்ல ஓர் இடையனும் ஒரு மருத்துவரும்கூட அதை எழுதினார்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒரே திட்டவட்டமான கருவைச் சுற்றியே இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? ஆனாலும் பைபிள் இதேபோன்ற ஒரு காலப்பகுதியில், பல்வேறுபட்ட அரசியல் ஆட்சிகளின் மத்தியில், இந்தப் பின்னணியிலுள்ள எல்லா மனிதர்களாலுமே எழுதப்பட்டது. இருந்தாலும் முழு பைபிளுமே ஒத்திசைவானது. அதன் அடிப்படை செய்தி, ஆரம்பம் முதல் முடிவு வரை அதே வீரியத்துடன் உள்ளது. இது, “தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” என பைபிள் கூறுவதை ஆதரிக்கவில்லையா?​—2 பேதுரு 1:20, 21.

38நீங்கள் பைபிளை நம்ப முடியுமா? அது கூறுவதாக மற்றவர்கள் சொல்வதை வெறுமனே ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, நீங்களே நன்றாக ஆராய்ந்து பார்த்தால் அதை நம்புவதற்கான காரணம் இருப்பதை நிச்சயம் காண்பீர்கள். பைபிள் உண்மையில் கடவுளால் ஏவப்பட்டது என்பதை நிரூபிக்க இன்னும் உறுதியான அத்தாட்சியும்கூட உள்ளது. அதைப் பற்றித்தான் அடுத்த அதிகாரத்தில் சிந்திக்கப் போகிறோம்.

[கேள்விகள்]

1. (அ) பைபிளுடைய உரிமை பாராட்டலுக்கு விரோதமாக அதைப் பற்றி அநேகர் என்ன நினைக்கின்றனர்? (ஆ) என்ன கேள்வி எழும்புகிறது?

2. அறிவியல் விஷயங்கள் பற்றி மனிதர்கள் எழுதுபவை புதிய தகவலால் அடிக்கடி எவ்வாறு பாதிக்கப்படுகின்றன?

3. பூமியின் ஆதாரம் பற்றி பூர்வ மக்கள் என்ன நினைத்தனர், ஆனால் பைபிள் கூறுவது என்ன?

4, 5. (அ) பூமியின் வடிவம் பற்றி ஒரு காலத்தில் மக்கள் என்ன நம்பினர், அது என்ன பயத்தை ஏற்படுத்தியது? (ஆ) பூமியின் வடிவம் பற்றி பைபிள் என்ன கூறுகிறது?

6. பூர்வகாலங்களில் அறியப்படாதிருந்த எந்த அற்புதகரமான சுழற்சி பற்றி பைபிள் விவரிக்கிறது?

7, 8. (அ) பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி பைபிள் கூறுவதே சரியென எவ்வாறு நிரூபிக்கப்பட்டுள்ளது? (ஆ) இந்தப் புதிய தகவல் பற்றி சில விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் பிரதிபலிப்பு என்ன, ஏன்?

9, 10. (அ) மாபெரும் ஜலப்பிரளயம் பற்றி பைபிள் என்ன கூறுகிறது? (ஆ) பைபிள் கூறுவதே உண்மை என்பதை நிரூபிக்க இப்போது என்ன அத்தாட்சி உள்ளது?

11. அறிவு அதிகரிக்கையில் பைபிளிலுள்ள வேறு எந்த விஷயமும் உறுதி செய்யப்பட்டுள்ளது, அதனால் சில விஞ்ஞானிகளும் என்ன முடிவுக்கு வந்துள்ளனர்?

12. ஆரோக்கியம் பற்றிய பொதுவான மூடநம்பிக்கைகளையும் பைபிளில் காணப்படும் கூற்றுகளையும் பற்றி ஒரு மருத்துவர் என்ன கூறினார்?

13. பூர்வீக எகிப்தியர்கள் என்ன அபாயகரமான மருத்துவ சிகிச்சை முறைகளைப் பின்பற்றினர்?

14. கழிவு நீக்கம் பற்றி பைபிள் கூறுவதென்ன, இதனால் எவ்வாறு பாதுகாப்பு கிடைத்துள்ளது?

15. இறந்தவர்களைத் தொடுவது பற்றிய பைபிளின் ஆலோசனை பின்பற்றப்பட்டிருந்தால் அநேகரின் மரணத்திற்கு வழிநடத்திய எந்த மருத்துவ பழக்கம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்?

16. எட்டாம் நாளிலே விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டதில் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஞானம் எவ்வாறு புலப்படுகிறது?

17. அறிவியலின் வேறு எந்தக் கண்டுபிடிப்பு பைபிளை ஆதரித்துள்ளது?

18. சீரழிக்கும் உணர்ச்சிகளிலிருந்து விலகி அன்பைக் காட்டும்படி பைபிள் எவ்வாறு வலியுறுத்துகிறது?

19. அன்பைப் பற்றி நவீன அறிவியல் எதைக் கண்டுபிடித்துள்ளது?

20. மலைப்பிரசங்கத்தில் கிறிஸ்து கூறிய போதனைகளை மனநோய் ஆலோசனையோடு ஒரு மருத்துவர் எவ்வாறு ஒப்பிட்டார்?

21. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு, பைபிளின் சரித்திரப்பூர்வ அத்தாட்சி பற்றி விமர்சகர்கள் எவ்வாறு உணர்ந்தனர்?

22. முற்கால மக்களின் எழுதும் திறமை பற்றி இப்போது என்ன அறிந்திருக்கிறோம்?

23. அரசனாகிய சர்கோன் பற்றி என்ன கண்டுபிடிக்கப்பட்டது, அதனால் முன்பிருந்த கருத்துகளில் என்ன மாற்றம் ஏற்பட்டது?

25. பைபிள் பதிவுகளும் சரித்திர பதிவுகளும் எல்லா அம்சங்களிலுமே ஒத்திருக்கும் என நாம் ஏன் எதிர்பார்க்கக் கூடாது?

26. சனகெரிப் இஸ்ரவேலுக்கு எதிராக படையெடுத்தது பற்றிய அவருடைய விவரிப்பையும் பைபிளின் விவரிப்பையும் ஒப்பிடும்போது எவ்வாறு உள்ளது?

27. சனகெரிப்பின் படுகொலை பற்றிய பைபிளின் விவரமும் பூர்வீக சரித்திர பதிவுகளும் கூறுவது எவ்வாறு ஒத்திருக்கிறது?

28. பெல்ஷாத்சாரைப் பற்றி கூறுவதில் பைபிள் உண்மையென எவ்வாறு நிரூபிக்கப்பட்டுள்ளது?

29. பொந்தியு பிலாத்து பற்றி பைபிள் கூறுவதை நிரூபிக்கும் என்ன அத்தாட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

30. ஒட்டகங்கள் உபயோகிக்கப்பட்டதைப் பற்றிய பைபிள் விவரப்பதிவை ஆதரிக்கும் என்ன விஷயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

31. பைபிள் சரித்திரப்பூர்வமாய் துல்லியமானது என்பதை நிரூபிக்க வேறு என்ன அத்தாட்சியும் உள்ளது?

32. இன்று அருங்காட்சி சாலைகளுக்கு செல்பவர்கள் பைபிள் விவரப்பதிவுகளை உறுதிசெய்யும் எதை அங்கு காண முடியும்?

33. பைபிள் துல்லியமானது என்பதற்கு இஸ்ரேல் நாடும் அதன் அமைப்புகளும் எவ்வாறு அத்தாட்சி அளிக்கின்றன?

34. பைபிளின் துல்லியத்தன்மைப் பற்றி சில புகழ்பெற்ற வல்லுனர்கள் என்ன கூறியுள்ளனர்?

35, 36. (அ) பல்வேறு பைபிள் எழுத்தாளர்கள் தங்களுடைய எந்தக் குறைபாடுகளை ஒப்புக்கொண்டனர்? (ஆ) பைபிள் கடவுளிடமிருந்தே வந்ததென இந்த எழுத்தாளர்கள் கூறுவதை அவர்களுடைய நேர்மைத்தன்மை எவ்வாறு ஆதரிக்கிறது?

37. பைபிள் உண்மையில் கடவுளால் ஏவப்பட்டது என்பதற்கு அதன் உட்புற ஒத்திசைவு ஏன் அவ்வளவு உறுதியான அத்தாட்சியாகும்?

38. ஒருவர் பைபிளை நம்ப வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

[பக்கம் 202-ன் சிறு குறிப்பு]

“விண்ணியல் மற்றும் பைபிளின் ஆதியாகமப் பதிவில் சொல்லப்பட்ட விவரங்க[ள்] . . . ஒன்றே”

[பக்கம் 204-ன் சிறு குறிப்பு]

மூடநம்பிக்கை பற்றிய வாக்கியங்களே பைபிளில் இல்லாதது குறிப்பிடத்தக்கது

[பக்கம் 206-ன் சிறு குறிப்பு]

ஒருவரின் மனப்பான்மைக்கும் சரீர ஆரோக்கியத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றி பைபிள் வெகு காலத்திற்கு முன்பே குறிப்பிட்டது

[பக்கம் 215-ன் சிறு குறிப்பு]

தவறுகளை அல்லது குறைபாடுகளை ஒப்புக்கொள்வது, அதிலும் எழுத்தில் ஒப்புக்கொள்வது மனித இயல்புக்கு முரணானது

[பக்கம் 215-ன் சிறு குறிப்பு]

முழு பைபிளுமே ஒத்திசைவானது

[பக்கம் 201-ன் வரைப்படம்]

இந்தத் தண்ணீர் சுழற்சி பற்றி பைபிள் விவரிக்கிறது; பூர்வகாலத்திலோ இதை அறிந்தவர் ஒருவருமில்லை

[பக்கம் 200-ன் படம்]

பூமியின் அஸ்திவாரம் இதுதான் என பூர்வகாலத்தில் சிலர் நம்பினர்

[பக்கம் 203-ன் படம்]

சைபீரியாவில் தோண்டி எடுக்கப்பட்ட உறைந்துபோன, ரோமம் நிறைந்த யானை. ஆயிரக்கணக்கான வருடங்களுக்குப் பிறகும் அதன் வாயிலும் வயிற்றிலும் இன்னமும் புல் இருந்தது, உறைநிலையிருந்து மீண்ட பிறகு அதன் மாம்சம் இன்னமும் சாப்பிடும் நிலையில் இருந்தது

[பக்கம் 205-ன் படம்]

முந்தைய நூற்றாண்டில், இறந்தவர்களைத் தொட்ட பிறகு டாக்டர்கள் தங்கள் கைகளை எப்பொழுதுமே கழுவவில்லை; அதனால் இன்னும் மற்றவர்கள் மரணத்தைத் தழுவ நேரிட்டது

சவக்கிடங்கு

பிரசவ அறை

[பக்கம் 207-ன் படம்]

பைபிள் அன்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது, நல்ல மருத்துவ ஆலோசனையும் இதை ஒப்புக்கொள்கிறது

[பக்கம் 209-ன் படம்]

வெகு காலமாக பைபிள் பதிவின் மூலமாய் மட்டுமே அறியப்பட்டிருந்த சர்கோன் அரசனின் சுண்ணாம்பு பாறை சித்திரம்

[பக்கம் 210-ன் படங்கள்]

நினிவேயிலிருந்த சனகெரிப் ராஜாவின் அரண்மனை சுவரில் காணப்படும் சித்திரம், யூத நகரமான லாகீசிலிருந்து வரும் கொள்ளைப்பொருளை அவர் பெறுவதை சித்தரிக்கிறது

சனகெரிப் ராஜா இஸ்ரவேல்மீது படையெடுத்ததை விவரிக்கும் களிமண் பட்டகம்

[பக்கம் 211-ன் படங்கள்]

சனகெரிப்பின் மகனான எசரத்தோனின் வெற்றிச் சின்னம் 2 இராஜாக்கள் 19:37-ஐ உண்மையென நிரூபிக்கிறது: “அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்”

பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார் என்பதை உறுதிசெய்யும் செசரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு

[பக்கம் 212-ன் படங்கள்]

சீஷாக், யூதாமீது வெற்றி பெற்றதாக பைபிளில் காணப்படும் விவரப்பதிவை உறுதிசெய்யும் சுவர் சித்திரம்

மோவாபிய அரசனான மேசா இஸ்ரவேலுக்கு எதிராக கலகம் செய்ததை குறிப்பிடும் மோவாபிய கல்; இது பைபிளில் விவரிக்கப்பட்டுள்ளது

[பக்கம் 213-ன் படங்கள்]

அரசனாகிய யெகூ அல்லது ஒரு தூதுவர், மூன்றாம் சல்மனாசார் ராஜாவுக்கு கப்பம் கட்டும் காட்சி

இயேசு கிறிஸ்து பிறந்தபோது இராயனாயிருந்த அகஸ்துவின் பளிங்குக்கல் மார்பளவு சிலை

திபேரியு இராயனின் பெயர் பொறிக்கப்பட்ட வெள்ளி தினாரி நாணயம்; இதைப் போன்ற ஒன்றைத்தான் கிறிஸ்து கேட்டார்

[பக்கம் 214-ன் படம்]

அசீரிய முற்றுகையின்போது எருசலேமிற்கு தண்ணீர் வழங்குவதற்காக அரசனாகிய எசேக்கியா வெட்டிய சுரங்கப்பாதையின் உட்புறம்