Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரமிப்பூட்டும் நம் பிரபஞ்சம்

பிரமிப்பூட்டும் நம் பிரபஞ்சம்

அதிகாரம் 9

பிரமிப்பூட்டும் நம் பிரபஞ்சம்

ஆயிரக்கணக்கான வருடங்களாக, நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தைக் கண்டு மக்கள் மதி மயங்கியிருக்கின்றனர். மேகமில்லாத இரவுநேர வானத்தில் கண்சிமிட்டும் நட்சத்திரங்கள், கருமையான விண்வெளியில் விதைத்த நவமணிகளாய் ஜொலிக்கின்றன. இளைய நிலா தன் இனிய கரங்களை நீட்டுகையில் பூவுலகமே மெய்சிலிர்த்து நிற்கிறது.

2பார்த்து ரசிப்பவற்றைப் பற்றி சிந்திக்கிற மக்கள் மனதில் அடிக்கடி தோன்றும் கேள்விகளே இவை: ‘விண்வெளியில் என்னதான் உள்ளது? அது எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது? இவையெல்லாம் எவ்வாறு ஆரம்பமாயின என்று நாம் அறிய முடியுமா?’ இந்தக் கேள்விகளுக்கான விடைகள் அதிமுக்கியமானவை. ஏனென்றால், மனிதனும் மற்ற ஜீவராசிகளும் நிறைந்த இந்தப் பூமி தோன்ற காரணம் என்ன, எதிர்காலம் எப்படியிருக்கும் போன்றவற்றை இன்னும் முழுமையாக அறிந்துகொள்ள இவை நமக்கு நிச்சயம் உதவும்.

3பல நூற்றாண்டுகள் முன்பு, தொலைநோக்கியின் உதவியில்லாமல் வெறும் கண்களால் பார்க்க முடிந்த சில ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மட்டுமே இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன என்று மக்கள் நினைத்தனர். ஆனால் இன்று விண்ணை ஆராயும் சக்திவாய்ந்த கருவிகள் இருப்பதால் உண்மையில் ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன என்பதை விஞ்ஞானிகள் அறிவர். ஒருவரும் கற்பனைக்கூட செய்து பார்த்திராதளவு பிரமிப்பூட்டும் காரியங்களை மனிதன் கண்டிருக்கிறான். அவற்றின் பேரளவையும் பெருஞ்சிக்கலையும் கண்டு மனித மனம் தள்ளாடுகிறது. மனிதன் பிரபஞ்சத்தைப் பற்றி இப்போது கற்றுவருபவை “அவனை வாயடைத்து நிற்க”1 செய்துள்ளன என்று நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகை கூறியது எவ்வளவு உண்மை!

பிரமிப்பூட்டும் அளவு

4சமீப நூற்றாண்டுகளில், ஆரம்பகால தொலைநோக்கிகளை வைத்து விண்ணைத் துழாவிய வானியல் வல்லுநர்கள் (astronomers) மேகம்போன்ற, தெளிவற்ற சில உருவங்களைக் கண்டனர். அவை, அருகிலுள்ள வாயுக்களின் மேகக்கூட்டங்களே என்று நினைத்துக் கொண்டனர். ஆனால் 1920-களில் இன்னும் பெரிய, அதிக சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் உபயோகத்திற்கு வந்த பிறகு இந்த “வாயுக்கள்” உண்மையில் என்னவென்பதை அறிந்தனர். அவை பேரளவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையுமான நட்சத்திர மண்டலங்கள் (galaxies) ஆகும்.

5ஏராளமான நட்சத்திரங்களும், வாயுவும், மற்ற பொருட்களும் ஒரு மையக்கருவைச் சுற்றி வருவதே நட்சத்திர மண்டலம் ஆகும். இந்த நட்சத்திர மண்டலங்கள் தீவுப் பிரபஞ்சங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏன் தெரியுமா? அவை ஒவ்வொன்றும் ஒரு தனி பிரபஞ்சம் போலவே உள்ளன. உதாரணமாக, நாம் வாழும் நட்சத்திர மண்டலமாகிய பால்வீதி மண்டலத்தை (Milky Way galaxy) எடுத்துக்கொள்ளுங்கள். சூரியன், பூமி, மற்ற கிரகங்கள், அவற்றின் துணைக்கோள்கள் ஆகியவை அடங்கிய நமது சூரிய மண்டலம் இந்த நட்சத்திர மண்டலத்தின் ஒரு பகுதி மட்டுமே. ஆனால் அது மிகவும் சிறிய பகுதியே, ஏனென்றால் பால்வீதி மண்டலத்தில் 10,000 கோடிக்கும் அதிகமான நட்சத்திரங்கள் உள்ளனவே! சில விஞ்ஞானிகளோ குறைந்தது 20,000 முதல் 40,000 கோடி இருக்கலாம் என கூறுகின்றனர்! அதுமட்டுமா, அறிவியல் பதிப்பாசிரியர் ஒருவர், “பால்வீதி மண்டலத்தில் 5 முதல் 10 லட்சம் கோடி நட்சத்திரங்கள் இருக்கலாம்”2 என்றே கூறுகிறார்.

6நமது நட்சத்திர மண்டலத்தின் விட்டம் கற்பனையைத் திணறடிக்கும் வண்ணம் மிகவும் பெரியது. எவ்வளவு தெரியுமா? நீங்கள் ஒளியின் வேகத்தில் (ஒரு நொடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர்) பயணம்செய்ய முடியுமென்றால், அதைக் கடக்க ஒரு லட்சம் வருடங்கள் எடுக்கும்! அது எத்தனை கிலோமீட்டர் தூரம்? பதிலைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது: ஒளி ஒரு வருடத்தில் 9.6 லட்சம் கோடி கிலோமீட்டர் பயணம் செய்வதால் அதை ஒரு லட்சத்தால் பெருக்கினால் உங்களுக்கு பதில் கிடைத்துவிடும். அதாவது, நம் பால்வீதி மண்டலத்தின் விட்டம் சுமார் 10,000 கோடியே கோடி கிலோமீட்டர் ஆகும்! நட்சத்திர மண்டலத்திலுள்ள நட்சத்திரங்களுக்கு இடையிலிருக்கும் சராசரி தூரம் ஏறக்குறைய ஆறு ஒளி வருடங்கள் அல்லது சுமார் 58 கோடி கோடி கிலோமீட்டர்.

7இவ்வளவு பெரிய அளவுகளையும் தூரங்களையும் கற்பனை செய்து பார்ப்பதே மனித மூளைக்கு எட்டாதது. அப்படியிருந்தும், நமது நட்சத்திர மண்டலமானது விண்வெளியில் உள்ளவற்றின் ஆரம்பம்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! இதைவிட இன்னும் அதிகம் தலைசுற்றவைக்கும் மற்றொரு விஷயமும் உள்ளது. அது என்ன தெரியுமா? இப்போது மிகவும் ஏராளமான நட்சத்திர மண்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அவை, “புல்வெளியில் நிறைந்திருக்கும் புற்களைப்போல எங்கும் உள்ளன”3 என்று சொல்லப்படுகிறது. காண முடிந்த பிரபஞ்சத்தில் மாத்திரமே ஏறக்குறைய 1,000 கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன! ஆனால் இன்றைய தொலைநோக்கிகள் காண முடிந்தவற்றிற்கும் அப்பால் ஏராளமானவை நிச்சயம் உள்ளன. இப்பிரபஞ்சத்தில் 10,000 கோடி நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாக சில வானியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்! அதுமட்டுமா, அவை ஒவ்வொன்றிலும் ஆயிரம் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் நிறைந்திருக்கலாம்!

நட்சத்திர மண்டலங்களின் கொத்துகள்

8மலைத்துவிட்டீர்களா? இன்னும் நிறைய உள்ளது. பிரமிப்பூட்டும் இந்தப் பிரபஞ்சங்கள் விண்வெளியில் தாறுமாறாக சிதறிக்கிடக்கவில்லை. மாறாக, அவை பொதுவாக ஒரு குலையில் உள்ள திராட்சைகளைப் போல திட்டவட்டமான தொகுதிகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன; அந்தத் தொகுதிகள் கொத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நட்சத்திர மண்டலங்களின் கொத்துகளில் ஆயிரக்கணக்கானவற்றை ஏற்கெனவே அடையாளம் கண்டு, புகைப்படம் எடுத்துள்ளனர்.

9சில கொத்துகளில், மற்றவற்றோடு ஒப்பிடுகையில் குறைவான நட்சத்திர மண்டலங்களே உள்ளன. உதாரணமாக, நமது பால்வீதி மண்டலம் அமைந்துள்ள கொத்தில் சுமார் இருபது நட்சத்திர மண்டலங்களே உள்ளன. இந்தத் தொகுதியில், மேகங்களற்ற இரவுநேர வானத்தில் தொலைநோக்கியின் உதவி இல்லாமலேயே பார்க்க முடிந்த நமது “அண்டைய” நட்சத்திர மண்டலம் ஒன்றுள்ளது. அது ஆன்ட்ரோமீடா (Andromeda) நட்சத்திர மண்டலமாகும்; நமது நட்சத்திர மண்டலத்தைப் போலவே அதுவும் சுருள் வடிவம் கொண்டது.

10மற்ற கொத்துகளிலோ டஜன் கணக்கான நட்சத்திர மண்டலங்கள் உள்ளன, நூற்றுக்கணக்கான ஒருவேளை ஆயிரக்கணக்கானவைக்கூட இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு கொத்தில் சுமார் 10,000 நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாக கருதப்படுகிறது! ஒரு கொத்திற்குள் அமைந்த நட்சத்திர மண்டலங்கள் மத்தியிலுள்ள சராசரி தூரம் சுமார் 10 லட்சம் ஒளி வருடங்களாக இருக்கலாம். ஒரு கொத்திற்கும் மற்றொரு கொத்திற்கும் இடையிலுள்ள தூரமோ இதைவிட நூறு மடங்கு அதிகமாக இருக்கலாம். ஒரு கொடியிலுள்ள திராட்சைக் கொத்துகளைப் போல, இந்தக் கொத்துகள் எல்லாம் ‘மாபெரும் கொத்துகளாக’ ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதற்கும் அத்தாட்சி உள்ளது. என்னே மாபெரும் அளவும் திறமையான ஒழுங்கமைப்பும் என மூக்கின் மேல் விரல் வைக்கிறோம் அல்லவா?

அதற்கொத்த ஒழுங்கமைப்பு

11கொஞ்சம் கீழே இறங்கி நமது சூரிய மண்டலத்திற்கு வருகையில் மிகவும் அருமையாக ஒழுங்கமைக்கப்பட்ட மற்றொரு ஏற்பாடு தென்படுகிறது. நடுத்தர அளவுள்ள நட்சத்திரமான சூரியனே “மையக்கரு”; பூமியும் அதனதன் துணைக்கோள்களோடே மற்ற கோள்களும் திட்டவட்டமான பாதைகளில் அதைச் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு வருடமும் அவை அந்தளவு தவறாமல் சுற்றிவருவதால் எதிர்காலத்தில் எந்தச் சமயத்தில் அவை எங்கே இருக்கும் என வானவியல் வல்லுனர்களால் துல்லியமாக கணக்கிட்டு முன்னுரைக்க முடியும்.

12மிகவும் நுண்ணிய பொருட்களான அணுக்களை உற்று நோக்குகையிலும் இதேபோன்ற துல்லியத்தைக் காணமுடிகிறது. சூரிய மண்டலத்தின் ஒழுங்கைப் பிரதிபலிக்கும் ஓர் அணு, ஒழுங்கமைப்பின் அற்புதமாகும். ஓர் அணுவில் புரோட்டான்கள், நியூட்ரான்கள் என்ற துகள்கள் அடங்கிய உட்கருவும், அதைச் சுற்றி வரும் சிறிய எலக்ட்ரான்களும் உள்ளன. சடப்பொருட்கள் அனைத்தும் இந்தக் கட்டுமான பொருட்களால் ஆனவையே. ஒரு பொருளை மற்றொரு பொருளிலிருந்து வேறுபடுத்துவது, உட்கருவிலுள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையும் அவற்றைச் சுற்றி வரும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் அமைப்புமே ஆகும். இதற்கென்றே விசேஷித்த ஒரு வரிசை உள்ளது; ஏனென்றால், சடப்பொருட்களை உண்டாக்கும் எல்லா கூறுகளும் கட்டுமான பொருட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற விதமாக இம்மியும் பிசகாத வரிசையில் அடுக்கி வைக்கப்படலாம்.

இந்த ஒழுங்கமைப்பிற்கு காரணமென்ன?

13நாம் பார்த்தபடியே இப்பிரபஞ்சத்தின் அளவு மிகவும் பிரமாண்டமானது. அதன் பிரமிப்பூட்டும் ஒழுங்கமைப்பும் அவ்வாறே உள்ளது. இப்பிரபஞ்சத்தில் மிகவும் பெரிய பொருளிலிருந்து நுண்ணிய பொருள் வரை, நட்சத்திர மண்டலங்களின் கொத்துகளிலிருந்து அணுக்கள் வரை ஒவ்வொன்றிலும் மிக மேம்பட்ட ஒழுங்கமைப்பைக் காண முடிகிறது. டிஸ்கவர் பத்திரிகை கூறியதாவது: “அதன் ஒழுங்கை ஆச்சரியத்தோடு பார்த்தோம், எங்களுடைய விண்ணியல் வல்லுநர்களும் (cosmologists) இயற்பியல் நிபுணர்களும் (physicists) ஒழுங்கமைப்பிற்கான வியக்கத்தக்க, புதிய அத்தாட்சிகளை கண்டுபிடித்த வண்ணமாகவே உள்ளனர். . . . அது ஓர் அதிசயம் என்று சொல்லிவந்தோம், இன்றோ இப்பிரபஞ்சம் முழுவதுமே ஓர் அபாரமான அற்புதம் என்றே தாராளமாக சொல்வோம்.”4 பிரபஞ்சத்தை விளக்க வானவியலில் பொதுவாக உபயோகிக்கப்படும் ஆங்கில வார்த்தையான “காஸ்மாஸ்” என்பதிலேயே ஒழுங்கமைப்பு என்ற எண்ணமும் அடங்கியுள்ளது. அதை, “ஓர் ஒழுங்கான, முரண்பாடில்லாத, முறையான பிரபஞ்சம்”5 என்று ஓர் அகராதி விளக்குகிறது.

14முன்னாள் விண்வெளி வீரரான ஜான் கிலென், “நம்மைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சத்திலுள்ள ஒழுங்கமைப்பு” பற்றியும் நட்சத்திர மண்டலங்கள் “எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய, திட்டவட்டமான விண்பாதைகளில் வலம் வருகின்றன” என்றும் கூறினார். ஆகவே அவர் இந்தக் கேள்வியை எழுப்பினார்: “இது தற்செயலாக நிகழ்ந்திருக்க முடியுமா? குப்பைக்கூளங்களின் ஒரு குவியல், விபத்தின் விளைவாகவே குறிப்பிட்ட விண்பாதைகளில் திடீரென்று தாங்களாகவே சுற்றிவர ஆரம்பித்தன என்று சொல்ல முடியுமா?” அவர் இவ்வாறு கூறி முடித்தார்: “அதை என்னால் நம்பவே முடியாது. . . . ஏதோவொரு சக்திதான் அவற்றையெல்லாம் விண்பாதைகளில் வைத்து, இன்றும் காத்துவருகிறது.”6

15இந்தப் பிரபஞ்சம் மிகவும் துல்லியமாக ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதால் விண்கோள்களை அடிப்படையாக வைத்து மனிதனால் நேரத்தைக் கணக்கிட முடிகிறது. ஆனால், வடிவமைக்கும் திறமையுள்ள, ஒழுங்கமைக்கப்பட்ட மனது இல்லையென்றால் நுட்பமாக நேரங்காட்டும் எந்தக் கடிகாரத்தையும் உருவாக்க முடியாது. இந்த வடிவமைக்கும் திறமையுள்ள, ஒழுங்கமைக்கப்பட்ட மனது, புத்திக்கூர்மையுள்ள ஒரு நபரிடம்தான் இருக்கமுடியும். அப்படியென்றால், இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் காணப்படும் சிக்கலான வடிவமைப்பு மற்றும் நம்பகத்தன்மை பற்றியென்ன? ஒரு வடிவமைப்பாளர், உருவாக்கியவர், ஒரு மனது அல்லது புத்திக்கூர்மை இருப்பதை இவை சுட்டிக்காட்டவில்லையா? அல்லது ஒரு நபர் இல்லாமல் புத்திக்கூர்மை மட்டும் தனியாக செயல்பட முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

16இந்த உண்மையை நம்மால் மறுக்கவே முடியாது: மிகவும் அருமையான ஒழுங்கமைப்பிற்கு தேவை மிகவும் அருமையான ஒழுங்கமைப்பாளர். ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்று தற்செயலாக அல்லது விபத்தின் காரணமாக ஏற்பட்டதை நம்முடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறோமா? மாறாக, ஒழுங்கமைக்கப்பட்ட எதற்கும் ஒழுங்கமைப்பாளர் ஒருவர் தேவை என்பதையே நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு அனுபவத்திலும் கவனித்திருக்கிறோம். இயந்திரம், கம்ப்யூட்டர், கட்டடம், ஏன் பென்சில், பேப்பர் ஆகிய ஒவ்வொன்றிற்கும்கூட தயாரித்தவர், ஒழுங்கமைத்தவர் ஒருவர் தேவை. அப்படியென்றால், இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் பெரும் சிக்கல் வாய்ந்த, பிரமிப்பூட்டும் ஒழுங்கமைப்பிற்கு காரணமான ஒழுங்கமைப்பாளர் ஒருவர் இருந்திருக்க வேண்டும் என்பதே நியாயமல்லவா?

சட்டத்திற்கு தேவை சட்டத்தை இயற்றியவர்

17மேலுமாக, அணுக்கள் முதல் நட்சத்திர மண்டலங்கள் வரை இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே திட்டவட்டமான இயற்பியல் சட்டங்களால் வழிநடத்தப்படுகின்றன. உதாரணமாக வெப்பம், ஒளி, ஒலி, புவியீர்ப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் உள்ளன. இயற்பியல் வல்லுநர் ஸ்டீபன் டபிள்யூ. ஹாக்கின் கூறியது போலவே: “இப்பிரபஞ்சத்தை அதிகமாக ஆராய்கையில் அது கொஞ்சம்கூட தாறுமாறாக இல்லை என்பதையே கவனிக்கிறோம்; மாறாக அது, பல்வேறு பகுதிகளில் செயலாற்றும் திட்டவட்டமான சில சட்டங்களுக்கு கட்டுப்பட்டுள்ளது. இந்தச் சிறிய சட்டங்களை எல்லாம் ஒரு பெரும் சட்டத்தின் பாகமாக இணைக்கும் சில நியமங்கள் இருக்கலாம் என ஊகிப்பது நியாயமாகவே தோன்றுகிறது.”7

18ராக்கெட் வல்லுனர் வர்னர் வான் பிரான் ஒரு படி மேலே சென்று கூறியதாவது: “பிரபஞ்சத்தின் இயற்கைச் சட்டங்கள் அவ்வளவு துல்லியமாக இருப்பதால் சந்திரனுக்கு செல்லும் ஒரு ராக்கெட்டைத் தயாரிப்பது மிகவும் எளிது. மேலும், அந்த ராக்கெட்டின் பயணத்தை ஒரு நொடியின் சிறு பகுதி அளவுக்குக்கூட துல்லியமாக திட்டமிட முடியும். இந்தச் சட்டங்களை யாரோ ஒருவர்தான் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.”8 விஞ்ஞானிகள், பூமியை அல்லது சந்திரனைச் சுற்றிவரும் ஒரு ராக்கெட்டை வெற்றிகரமாக அனுப்ப விரும்பினால் இத்தகைய சர்வலோக சட்டங்களுக்கு இசைவாக செயல்பட்டே ஆகவேண்டும்.

19சட்டங்களைப் பற்றி சிந்திக்கையில் அவற்றை உருவாக்கிய ஒருவரிடமிருந்தே அவை வந்தன என்பதை ஏற்றுக்கொள்கிறோம். “நில்” என கூறும் போக்குவரத்து குறியீடு, அந்தச் சட்டத்தை இயற்றிய யாரோ ஒருவர் அல்லது ஒரு தொகுதியான ஆட்கள் காரணமாகத்தான் வந்திருக்க முடியும். அப்படியென்றால், இப்பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களின் தொகுதிகளைப் பற்றியென்ன? ஞானமாய் இயற்றப்பட்ட இந்தச் சட்டங்கள், ஒப்பிட முடியாத புத்திக்கூர்மையுள்ள சட்ட இயக்குனர் ஒருவர் இருப்பதையே சுட்டிக்காட்டுகின்றன அல்லவா?

ஒழுங்கமைப்பாளரும் சட்ட இயக்குனரும்

20பிரபஞ்சத்தில் மிகத் தெளிவாக காணப்படும் சட்டம், ஒழுங்கு பற்றிய எல்லா விசேஷித்த நிலைமைகளையும் கூறிவிட்ட பிறகு சயன்ஸ் நியூஸ் கூறியதாவது: “இப்படிப்பட்ட குறிப்பான, துல்லியமான நிலைமைகள் தற்செயலாக வந்திருக்க முடியாதென்றே தோன்றுவதால் இந்தக் காரியங்களைப் பற்றி சிந்திக்கும் விண்ணியல் நிபுணர்கள் குழம்பிப்போகிறார்கள். இந்தக் கேள்வியை சமாளிப்பதற்கான ஒரு வழி, இந்த முழு காரியமும் திட்டமிடப்பட்டது என்றும் அதற்கு கடவுளே காரணம் என்றும் கூறுவதாகும்.”9

21பல விஞ்ஞானிகள் உட்பட அநேக மக்களும் இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் மற்றவர்களோ, புத்திக்கூர்மைதான் காரணம் என அத்தாட்சிகள் தொடர்ந்து காண்பித்து வருவதை ஏற்றுக்கொள்ள தயாராய் உள்ளனர். பிரபஞ்சம் முழுவதும் காணப்படும் இப்படிப்பட்ட பிரமாண்டமான அளவு, துல்லியம், சட்டம் ஆகியவை வெறுமனே தற்செயலாக ஏற்பட்டிருக்க முடியாது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இவையெல்லாம் மேம்பட்ட ஒரு மனதின் விளைவாகவே இருக்க வேண்டும்.

22இந்த முடிவைத்தான் பைபிள் எழுத்தாளர் ஒருவரும் குறிப்பிட்டார். நமது வானத்தைப் பற்றி அவர் கூறியதாவது: “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே.” “அவர்” யார் என்பதற்கு ‘வானங்களைச் சிருஷ்டித்து அவைகளை விரித்த’ சிருஷ்டிகர்தான் என்றும் அவரே அடையாளம் காட்டுகிறார்.​—ஏசாயா 40:26; 42:⁠5.

ஆற்றலின் பிறப்பிடம்

23சர்வலோக சட்டங்கள் சடப்பொருட்களைக் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் இந்தச் சடப்பொருட்கள் எல்லாம் எங்கிருந்து வந்தன? காஸ்மாஸ்-⁠ல் கார்ல் சாகன் இவ்வாறு குறிப்பிட்டார்: “இப்பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் நட்சத்திர மண்டலங்களோ, நட்சத்திரங்களோ, கோள்களோ, உயிரோ, நாகரிகமோ இருக்கவில்லை.” அந்த நிலையிலிருந்து இன்றைய பிரபஞ்சம் ஏற்படுவது வரை நிகழ்ந்த மாற்றங்கள், “நமக்கு பார்க்க கிடைத்தவற்றிலேயே சடப்பொருள் மற்றும் ஆற்றலின் மிகப் பிரமாண்டமான மாற்றம்”10 என அவர் விளக்குகிறார்.

24இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கான வழி இதுவே: ஆற்றல் மற்றும் சடப்பொருளின் மாற்றம் அதில் உட்பட்டிருக்க வேண்டும். E=mc2 (ஆற்றல் அளவு என்பது பொருண்மையை ஒளி விரைவின் வர்க்கத்தால் பெருக்குவதற்கு சமம்) என்ற ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற சமன்பாடு இந்தத் தொடர்பை ஆதரிக்கிறது. சடப்பொருளிலிருந்து ஏராளமான ஆற்றல் உண்டாக்கப்படுவது போலவே ஆற்றலிலிருந்து சடப்பொருள் உண்டாக்கப்படலாம் என்பது இந்தச் சமன்பாட்டிலிருந்து கிடைக்கும் ஒரு தீர்வு. சடப்பொருளிலிருந்து ஆற்றல் உண்டாக்கப்படலாம் என்பதை அணு குண்டு நிரூபித்தது. ஆகவே, வானியற்பியல் (astrophysicist) வல்லுநர் ஜோஸிஃப் கிலெக்ஸெக் கூறினார்: “ஆற்றலை சடப்பொருளாக்குவதன் மூலம் பெரும்பாலான, ஏன் அநேகமாக எல்லா அடிப்படை பொருட்களுமே உண்டாக்கப்படலாம்.”11

25ஆகவே, எல்லையற்ற ஆற்றலின் ஊற்றுமூலத்தினிடம் பிரபஞ்சத்திலுள்ள பொருளை சிருஷ்டிக்க தேவையான மூலப்பொருள் நிச்சயம் இருக்கும் என்பதற்கு அறிவியல்பூர்வ அத்தாட்சி உள்ளது. இந்த ஆற்றலின் பிறப்பிடம் உயிருள்ள, புத்திக்கூர்மையுள்ள ஒரு நபர் என்பதை முன்னர் மேற்கோள் காட்டிய பைபிள் எழுத்தாளர் குறிப்பிடுகிறார்: ‘அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் [விண்கோள்களில்] ஒன்றும் குறையாமலிருக்கிறது.’ ஆகவே பைபிளின் கண்ணோட்டத்தில், “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என ஆதியாகமம் 1:1 கூறுகையில் எல்லையற்ற ஆற்றலின் இந்தப் பிறப்பிடமே அதற்கு காரணம் என்பது தெளிவாக உள்ளது.

தாறுமாறான ஆரம்பம் இல்லை

26பிரபஞ்சத்திற்கு ஓர் ஆரம்பம் நிச்சயம் இருந்ததென இன்று விஞ்ஞானிகள் பொதுவாக ஒப்புக்கொள்கின்றனர். இந்த ஆரம்பத்தை விளக்க முற்படும் புகழ்பெற்ற ஒரு கொள்கைதான் பெருவெடிப்பு (Big Bang) கொள்கை எனப்படுவது. “பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றிய சமீபத்திய கலந்தாலோசிப்புகளில் பெரும்பாலானவை பெருவெடிப்பு கொள்கையை மையமாக வைத்தே நிகழ்த்தப்படுகின்றன”12 என்று ஃபிரான்ஸிஸ் க்ரிக் கூறுகிறார். விண்ணில் ஏற்பட்ட இந்த “வெடிப்புதான்” “சிருஷ்டிப்பின் தருணம்”13 என ஜாஸ்ட்ரோ குறிப்பிடுகிறார். ஆனால் இந்தத் ‘தருணத்திற்கு’ பிறகு நிகழ்ந்ததை விஞ்ஞானிகள் “மிகவும் விலாவாரியாக விளக்க இயலும் என உரிமைபாராட்டிக் கொண்டாலும்,” நியூ சயன்டிஸ்ட்-⁠ல் வானியற்பியல் நிபுணர் ஜான் கிரிப்பன் ஒப்புக்கொண்டது போலவே, “சிருஷ்டிப்பின் அந்தத் தருணத்தை” ஏற்படுத்தியது எது என்பது “இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது.” “ஒருவேளை கடவுளேகூட இதை செய்திருக்கலாம்”14 என்று அவர் கருதுகிறார்.

27இருந்தாலும், அந்த ‘விநாடிக்கு’ கடவுள்தான் காரணம் என்பதை அநேக விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ள தயாராய் இல்லை. ஆக, அணுக்கரு (நியூக்ளியர்) குண்டு ஒன்றின் வெடிப்பைப் போலவே இந்த வெடிப்பு தாறுமாறானதாக இருந்திருக்க வேண்டும் என்றே சொல்லப்படுகிறது. ஆனால் இவ்விதமான வெடிப்பு இன்னும் மேம்பட்ட ஒழுங்கமைப்பில் விளைவடையுமா? யுத்த காலத்தில் நகரங்களின் மேல் விழும் குண்டுகள், அருமையாக வடிவமைக்கப்பட்ட கட்டடங்கள், தெருக்கள், போக்குவரத்து சட்டங்கள் அடங்கிய குறியீடுகள் ஆகியவற்றை உருவாக்குகின்றனவா? மாறாக அப்படிப்பட்ட வெடிப்புகளால் அழிவும், ஒழுங்கிண்மையும், அலங்கோலமும், சிதைவுமே ஏற்படுகின்றன. அதிலும், வெடி மருந்தில் அணுக்கரு பொருள் உபயோகிக்கப்பட்டால் அழிவு இன்னும் பயங்கரமாக இருக்கும். 1945-⁠ல் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகியில் ஏற்பட்டது போல இருக்கும்.

28வியப்பூட்டும் ஒழுங்கமைப்பும், வடிவமைப்பும், சட்டமும் கொண்ட பிரமிப்பூட்டும் பிரபஞ்சம் ஒரு ‘வெடிப்பின்’ காரணமாக உருவாகவே முடியாது. வல்லமையுள்ள ஒழுங்கமைப்பாளர் மற்றும் சட்ட இயக்குனரால் மட்டுமே, வல்லமையுள்ள சக்திகளைக் கட்டுப்படுத்தி அருமையான ஒழுங்கமைப்பையும் சட்டத்தையும் ஏற்படுத்த முடியும். ஆகவே, “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” என்று பைபிள் கூறுவதை அறிவியல் பூர்வ அத்தாட்சியும் நியாயவிவாதமும் உறுதியாக ஆதரிக்கின்றன.​—சங்கீதம் 19:⁠1.

29இவ்வாறாக, பரிணாமக் கொள்கை தெளிவாக பதிலளிக்க தவறிய கேள்விகளுக்கு பைபிள் திட்டவட்டமான பதில்களை அளிக்கிறது. அனைத்து காரியங்களும் தோன்றியதற்கான காரணத்தை நாமே தேடிக்கொண்டிருக்கும்படி விட்டுவிடாமல் பைபிளானது எளிமையான, புரிந்துகொள்ளத்தக்க பதில்களைத் தருகிறது. எதுவுமே தானாக உருவாக முடியாது என்ற உண்மையை அறிவியல் ஆராய்ச்சிகளிலும் நம் வாழ்க்கை அனுபவத்திலும் கண்டிருக்கிறோம் அல்லவா? அவற்றை இது ஆதரிக்கிறது. இந்தப் பிரபஞ்சம் உண்டாக்கப்பட்டபோது நாம் அங்கில்லை என்றாலும் அதை உருவாக்கிய திறமையுள்ள ஒரு கட்டட கலைஞர் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாக உள்ளது. “எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்” என பைபிள் விவாதிப்பது எவ்வளவு நியாயமாய் உள்ளது!​—எபிரெயர் 3:⁠4.

[கேள்விகள்]

1, 2. (அ) வானத்தை எவ்வாறு வர்ணிக்கலாம்? (ஆ) சிந்திக்கிற மக்கள் மனதில் எழும் கேள்விகள் என்ன, அதற்கான பதில்களால் நாம் எதை அறிந்துகொள்ள முடியும்?

3. பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவு அதிகரிப்பதால் ஏற்பட்டிருக்கும் ஒரு விளைவு என்ன?

4. 1920-களில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது?

5. (அ) நட்சத்திர மண்டலம் என்றால் என்ன? (ஆ) பால்வீதி மண்டலத்தில் எவையெல்லாம் உட்பட்டுள்ளன?

6. நமது நட்சத்திர மண்டலத்தின் விட்டம் எவ்வளவு பெரியது?

7. பிரபஞ்சத்திலுள்ள நட்சத்திர மண்டலங்களின் எண்ணிக்கை பற்றி என்ன கணிப்புகள் செய்யப்பட்டுள்ளன?

8. நட்சத்திர மண்டலங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன?

9. நாம் இருக்கும் நட்சத்திர மண்டலக் கொத்தில் அடங்கியிருப்பது என்ன?

10. (அ) ஒரு கொத்தில் எத்தனை நட்சத்திர மண்டலங்கள் இருக்கலாம்? (ஆ) நட்சத்திர மண்டலங்கள் மத்தியிலும், நட்சத்திர மண்டல கொத்துகள் மத்தியிலும் உள்ள இடைவெளி என்ன?

11. நமது சூரிய மண்டலத்தில் அதற்கொத்த என்ன ஒழுங்கமைப்பைக் காண்கிறோம்?

12. அணுக்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன?

13. முழு பிரபஞ்சத்திலுமே காணப்படும் முக்கிய பண்பு என்ன?

14. முன்னாள் விண்வெளி வீரர் ஒருவர் கூறியதென்ன?

15. இப்பிரபஞ்சத்தின் துல்லியமான வடிவமைப்பும் ஒழுங்கமைப்பும் எதைச் சுட்டிக்காட்டுகின்றன?

16. இப்பிரபஞ்சத்தைப் பற்றி நாம் எந்த முடிவுக்கு வர வேண்டும்?

17. இப்பிரபஞ்சத்தில் சட்டம் எவ்வாறு உட்பட்டுள்ளது?

18. ராக்கெட் வல்லுனர் ஒருவர் என்ன முடிவுக்கு வந்தார்?

19. சட்டங்கள் இருப்பதால் வேறு எதுவும் அவசியம்?

20. சயன்ஸ் நியூஸ் குறிப்பிட்டது என்ன?

21. சிலர் எதை ஏற்றுக்கொள்ள தயாராய் உள்ளனர்?

22. பிரபஞ்சத்தை ஆரம்பித்து வைத்தவரை பைபிள் எழுத்தாளர் ஒருவர் எவ்வாறு அடையாளம் காட்டினார்?

23, 24. சடப்பொருள் எவ்வாறு உருவாக்கப்படலாம்?

25. பிரபஞ்சத்தை சிருஷ்டிக்க தேவையான பிரமாண்டமான சக்தியின் பிறப்பிடம் எது?

26. இன்று விஞ்ஞானிகள் பொதுவாக எதை ஒப்புக்கொள்கின்றனர்?

27. பெருவெடிப்பு கொள்கையின் குறைபாடு என்ன?

28. பிரபஞ்சத்தை சிருஷ்டிக்க உதவிய வல்லமையுள்ள சக்திகளைப் பற்றி என்ன முடிவுக்கு வரவேண்டும்?

29. அறிவியல் ஆராய்ச்சிகளும் நம் வாழ்க்கை அனுபவமும் எதை உறுதிப்படுத்துகின்றன?

[பக்கம் 115-ன் சிறு குறிப்பு]

பிரபஞ்சத்தைப் பற்றி மனிதன் இப்போது கற்றுவருபவை எல்லாம் “அவனை வாயடைத்து நிற்க” செய்துள்ளன

[பக்கம் 117-ன் சிறு குறிப்பு]

நம் பால்வீதி மண்டலத்தில் 10,000 கோடிக்கும் அதிகமான நட்சத்திரங்கள் உண்டு

[பக்கம் 118-ன் சிறு குறிப்பு]

ஒரு திராட்சைக் குலையில் உள்ளதைப் போல நட்சத்திர மண்டலங்கள் கொத்து கொத்தாக அமைந்துள்ளன

[பக்கம் 122-ன் சிறு குறிப்பு]

விஞ்ஞானிகள் “ஒழுங்கமைப்பிற்கான வியக்கத்தக்க, புதிய அத்தாட்சிகளை கண்டுபிடித்த வண்ணமாகவே உள்ளனர்”

[பக்கம் 123-ன் சிறு குறிப்பு]

மிகவும் அருமையான ஒழுங்கமைப்பிற்கு தேவை மிகவும் அருமையான ஒழுங்கமைப்பாளர்

[பக்கம் 123-ன் சிறு குறிப்பு]

பிரபஞ்சமானது “திட்டவட்டமான சில சட்டங்களுக்கு கட்டுப்பட்டுள்ளது”

[பக்கம் 125-ன் சிறு குறிப்பு]

“இப்படிப்பட்ட குறிப்பான, துல்லியமான நிலைமைகள் தற்செயலாக வந்திருக்க முடியாதென்றே தோன்று[கிறது]”

[பக்கம் 114-ன் முழுபடம்]

[பக்கம் 116-ன் படம்]

சுருள் வடிவ நட்சத்திர மண்டலம்

[பக்கம் 116, 117-ன் படம்]

கட்டமிட்டு காட்டப்பட்டுள்ள நம் சூரிய மண்டலம், நட்சத்திர மண்டலத்தோடு ஒப்பிடுகையில் மிகவும் சிறியதே

[பக்கம் 119-ன் படம்]

நம் பால்வீதி மண்டலத்தைப் போலவே உள்ள ஆன்ட்ரோமீடா நட்சத்திர மண்டலம், பிரமிப்பூட்டும் நம் பிரபஞ்சத்தில் ஒரு சிறு துளி மட்டுமே; இப்பிரபஞ்சத்தில் ஏறக்குறைய 10,000 கோடி நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாக சிலர் கூறுகின்றனர்

[பக்கம் 120, 121-ன் படங்கள்]

நமது சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்கள் எல்லாம் மிக துல்லியமான விதத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றன

அணுக்கள், குட்டி சூரிய மண்டலம் போல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன

[பக்கம் 122-ன் படங்கள்]

துல்லியமாக நேரங்காட்டும் கடிகாரம் புத்திக்கூர்மையுள்ள ஒரு வடிவமைப்பாளரின் கைவண்ணமே. அப்படியென்றால், இப்பிரபஞ்சத்தில் காணப்படும் அதி உன்னதமான துல்லியம் மேன்மையான, புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்பாளரின் கைவண்ணமாக இருக்காதா?

[பக்கம் 124-ன் படம்]

ஒரு ராக்கெட் அதன் விண் பாதையில் சென்றுசேர இயக்கம் மற்றும் புவியீர்ப்பு சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும். அப்படிப்பட்ட சட்டங்களுக்கு அவற்றை இயற்றியவர் தேவை

[பக்கம் 125-ன் படம்]

போக்குவரத்து விதிகள் சிலரின் மனதில்தான் தோன்றின

சடப்பொருளும் ஆற்றலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை அணு குண்டு நிரூபித்தது

[பக்கம் 126-ன் படங்கள்]

சடப்பொருளும் ஆற்றலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை அணு குண்டு நிரூபித்தது

குண்டு வெடிப்பிற்கு பிறகு கட்டடங்கள் இன்னும் அழகாக ஒழுங்கமைக்கப்படுகின்றனவா?

[பக்கம் 127-ன் படம்]

“எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.”​—⁠எபிரெயர் 3:⁠4