Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெரும் பிளவுகள்—இவற்றை பரிணாமம் இணைக்க முடியுமா?

பெரும் பிளவுகள்—இவற்றை பரிணாமம் இணைக்க முடியுமா?

அதிகாரம் 6

பெரும் பிளவுகள்​—⁠இவற்றை பரிணாமம் இணைக்க முடியுமா?

மனிதன் தோன்றுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே பல்வகை உயிரினங்கள் வாழ்ந்ததற்கான நம்பத்தக்க அத்தாட்சியைப் புதைப்படிவங்கள் அளிக்கின்றன. ஆனால், உயிர் தோன்றியதைப் பற்றியும் அதிலிருந்து புதிய வகைகள் உருவானதைப் பற்றியும் பரிணாமம் சொல்வதை புதைப்படிவங்கள் ஆதரிப்பதில்லை. உயிரினங்கள் மத்தியிலான இடைவெளிகளை இணைக்கும் இடைமாறுபாட்டு புதைப்படிவங்கள் (transitional fossils) இல்லாததைப் பற்றி ஃபிரான்ஸிஸ் ஹிட்சிங் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எல்லா முக்கிய கட்டங்களிலும் புதைப்படிவங்கள் காணாமல் போகின்றன.”1

2விலங்கினங்களின் பெரும் பிரிவுகள் மத்தியிலுள்ள இடைவெளிகளையே முக்கிய கட்டங்கள் என அவர் குறிப்பிடுகிறார். முதுகெலும்பற்ற உயிரினத்திலிருந்து மீன் பரிணமித்ததாக கருதப்படுவது இதற்கு ஓர் உதாரணம். ஆனால், “மீன்கள், வானத்திலிருந்து குதிப்பதைப் போல திடீரென்று புதைப்படிவ பதிவுகளில் குதிக்கின்றன. மாயமாய், திடுதிப்பென்று, முழு வடிவில் குதிக்கின்றன”2 என்று ஹிட்சிங் கூறுகிறார். விலங்கியல் நிபுணர் என். ஜே. பெரில், மீன் பரிணமித்ததைப் பற்றி சொந்தமாய் விளக்கமளித்தார். அதேசமயத்தில், “ஒரு கருத்தில் இது ஒரு விஞ்ஞான புனைக்கதையே”3 என்றும் சொல்லிவிட்டார்.

3மீன்கள் நில நீர்வாழ் உயிரிகளாகவும் (amphibian), நில நீர்வாழ் உயிரிகளில் சில ஊர்வனவாகவும், ஊர்வன பறவைகளாகவும் பாலூட்டிகளாகவும் மாறின, கடைசியில் சில பாலூட்டிகள் மனிதர்களாக மாறிவிட்டன என்பதே பரிணாமக் கொள்கையின் ஊகம். ஆனால் புதைப்படிவ பதிவு இந்த ஊகங்களை ஆதரிக்கவில்லை என முந்தைய அதிகாரத்தில் சிந்தித்தோம். இந்த அதிகாரத்திலோ, அவ்வாறு ஊகிக்கப்பட்ட இடைமாறுபாட்டு நிலைகள் எவ்வளவு பிரமாண்டமான பிளவுடையவை என்பதற்கு கவனத்தை ஒருமுகப்படுத்துவோம். நீங்கள் இதை வாசிக்கையில், இப்படிப்பட்ட மாற்றங்கள் குருட்டுத்தனமான நிகழ்வால் தானாகவே நிகழ முடியுமா என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.

மீனுக்கும் நில நீர்வாழ் உயிரிக்கும் இடையிலுள்ள பிளவு

4முதுகெலும்பு இல்லாதவற்றிலிருந்து மீன்களை வேறுபடுத்திக் காட்டுவது அவற்றின் முதுகெலும்பே. ஒரு மீன், நிலத்திலும் நீரிலும் வாழும் பிராணியாக மாறுவதற்கு முதுகெலும்பில் பெரும் மாற்றங்கள் நிகழ வேண்டியிருந்திருக்கும். அதாவது இடுப்பெலும்பு ஒன்று சேர்க்கப்பட வேண்டும். ஆனால், நில நீர்வாழ் உயிரிகளின் இடுப்பெலும்பு எவ்வாறு உருவானது என காட்டும் புதைப்படிவ மீன் எதுவுமே இல்லை. தவளைகள், தேரைகள் போன்ற நில நீர்வாழ் உயிரிகள் சிலவற்றின் முதுகெலும்பு அடையாளம் காண முடியாதளவு முற்றிலும் மாற வேண்டியிருந்திருக்கும். அதுமட்டுமா, மண்டையோட்டு எலும்புகளும் வித்தியாசப்படுகின்றனவே. மேலும் பரிணாமத்தின்படி, நில நீர்வாழ் உயிரிகள் தோன்ற வேண்டுமென்றால் மீனின் துடுப்புகள், மணிக்கட்டுகளும் விரல்களும் மூட்டுகளும் உடைய கை, கால்களாக மாறவேண்டும்; தசைகளும் நரம்புகளும்கூட பெரும் மாற்றமடைய வேண்டும். செவுள்கள் நுரையீரல்களாக மாறவேண்டும். மீன்களில் இரத்தத்தைச் செலுத்துவது இரண்டு அறைகளுள்ள இதயமே, நில நீர்வாழ் உயிரிகளுக்கோ மூன்று அறைகளுள்ள இதயம் உள்ளது.

5மீனுக்கும் நில நீர்வாழ் உயிரிக்கும் மத்தியிலுள்ள இடைவெளியை இணைக்க வேண்டுமென்றால் செவிப் புலன் பெருமளவு மாற்றமடைய வேண்டும். பொதுவாகவே, மீன்கள் அவற்றின் உடல் மூலமாகவே சப்தத்தை உணர்கின்றன, ஆனால் பெரும்பாலான தவளைகளுக்கும் தேரைகளுக்கும் செவிப்பறை உள்ளது. அதுமட்டுமா, நாக்கும்கூட மாற வேண்டியிருக்குமே! வெளியே நீட்டக்கூடிய நாக்கு எந்த மீனுக்கும் இல்லை, ஆனால் தேரை போன்ற நில நீர்வாழ் உயிரிகளுக்கு அப்படிப்பட்ட நாக்கு உள்ளது. கூடுதலாக, நில நீர்வாழ் உயிரிகளின் கண்விழிகளை மூட ஒரு சவ்வு இருப்பதால் அவை கண் சிமிட்டும் இயல்புடையவை; அந்தச் சவ்வு கண்களை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

6நில நீர்வாழ் உயிரிகளை ஏதாவது ஒருவகை மீனின் மூதாதையோடு இணைக்க பெருமுயற்சிகள் செய்யப்பட்டும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. லங்பிஃஷ் (lungfish) என்ற மீன் இதற்கு மிகச் சிறந்த ஆதாரம் என நம்பப்பட்டது. ஏனென்றால், அதற்கு செவுள்களோடுகூட காற்றுப்பை (swim bladder) ஒன்றும் உள்ளது; தண்ணீருக்கு வெளியே இருக்கும் சமயத்தில் சுவாசிக்க அந்தப் பையை உபயோகிக்கும். அதைப் பற்றி மீன்கள் என்ற ஆங்கில புத்தகம் கூறுவதாவது: “இவற்றிற்கும் நிலத்தில் வாழும் முதுகெலும்புள்ள பிராணிகளைத் தோற்றுவித்த நில நீர்வாழ் உயிரிகளுக்கும் மத்தியில் ஏதாவது நேரடியான தொடர்பு இருக்கும் என நினைக்கத் தோன்றலாம். ஆனால் எந்தத் தொடர்பும் கிடையாது, அவை முற்றிலும் ஒரு தனிப்பட்ட தொகுதியே.”4 லங்பிஃஷ், சீலகாந்த் (coelacanth) ஆகிய இரண்டு மீன்களையுமே பரிணாமத்திற்கு உதாரணமாக சொல்ல முடியாது என டேவிட் அட்டென்பரோ கூறுகிறார்; ஏனென்றால் “அவற்றின் மண்டையோட்டு எலும்புகள், நில நீர்வாழ் உயிரிகளின் முதல் புதைப்படிவ மண்டையோட்டிலிருந்து முற்றிலும் வேறுபடுவதால் ஒன்றிலிருந்து மற்றொன்று வந்திருக்கவே முடியாது”5 என்றும் கூறுகிறார்.

நில நீர்வாழ் உயிரிகளுக்கும் ஊர்வனவற்றிற்கும் இடையிலுள்ள பிளவு

7நில நீர்வாழ் உயிரிகளுக்கும் ஊர்வனவற்றிற்கும் மத்தியிலுள்ள இடைவெளியை இணைக்க முயலுவது வேறு பெரும் பிரச்சினைகளை உருவாக்குகிறது. ஓடுள்ள முட்டை தோன்றுவதே அதில் மிகவும் சிக்கலான ஒன்று. ஊரும் பிராணிகளுக்கு முன்பிருந்தவை மிருதுவான, ஜெல்லி போன்ற முட்டைகளை தண்ணீரில் இட்டன; இவ்வாறு அந்த முட்டைகள் உடலுக்கு வெளியே கருவுற்றன. ஊரும் பிராணிகளோ நிலத்தில் வாழ்வதால் நிலத்தில் முட்டையிடுகின்றன. ஆனாலும் முட்டைக்குள்ளிருக்கும் கரு வளருவதற்கு தண்ணீர் நிறைந்த ஒரு சூழல் அவசியம். என்ன செய்வது? ஓடுள்ள முட்டையே இதற்கான தீர்வு. ஆனால் கருவுறுதலிலும் ஒரு பெரும் மாற்றம் தேவைப்பட்டது. அந்த முட்டையை சுற்றி ஓர் ஓடு உருவாவதற்கு முன் கருவுற வேண்டும், அதுவும் உடலுக்கு உள்ளேயே. இதை நிறைவேற்ற புதிய இனப்பெருக்க உறுப்புகள், புதிய இனச்சேர்க்கை முறைகள், புதிய இயல்புணர்வுகள் (instincts) ஆகியவை தேவைப்பட்டன. இவை எல்லாம் சேர்ந்து நில நீர்வாழ் உயிரிகளுக்கும் ஊரும் பிராணிகளுக்கும் மத்தியில் மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்துகின்றன.

8முட்டையைச் சுற்றி ஓடு உருவாவதற்கு இன்னும் மிகப் பெரிய மாற்றங்கள் தேவைப்பட்டன. அவை, முட்டைக்குள் ஊரும் பிராணி வளர்ந்து பின்னர் ஏற்ற காலத்தில் வெளி வருவதை தேவைப்படுத்தும் மாற்றங்களாகும். உதாரணமாக, பனிக்குட உறை (amnion) போன்ற பல்வேறு சவ்வுகளும் பைகளும் முட்டைக்குள் தேவை. கரு வளருவதற்கு தேவையான திரவம் இப்பைக்குள் உள்ளது. பூழ்ப்பை (allantois) என்ற மற்றொரு சவ்வைப் பற்றி ஊரும் பிராணிகள் என்ற புத்தகம் விவரிப்பதாவது: “பூழ்ப்பையானது கருவின் எச்சங்களைப் பெற்று சேகரித்து வைக்கிறது; அது ஒருவித பைப்போல சேவிக்கிறது. ஓட்டின் வழியாக வரும் ஆக்ஸிஜனைப் பெற்று, கருவிற்கு எடுத்து செல்லும் இரத்தக் குழாய்களும் அதில் உள்ளன.”6

9சிக்கலான மற்ற வேறுபாடுகளுக்கும்கூட பரிணாமத்தால் பதிலளிக்க முடியவில்லை. மீன் மற்றும் நில நீர்வாழ் உயிரிகளின் முட்டையிலுள்ள கருக்கள் அவற்றின் எச்சங்களை கரையும் யூரியாவாக சுற்றியுள்ள தண்ணீரில் வெளிவிடுகின்றன. ஆனால் ஊரும் பிராணிகளின் ஓடுள்ள முட்டைக்குள் யூரியா இருந்தால் அந்தக் கருவைக் கொன்றுவிடும். ஆகவே, ஓடுள்ள முட்டைக்குள் மிகப் பெரிய வேதியியல் மாற்றம் நிகழ்கிறது. அதாவது, எச்சங்கள் எல்லாம் கரையாத யூரிக் அமிலமாக பூழ்ப்பை உறைக்குள் சேகரிக்கப்படுகின்றன. இதைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள்: ஊரும் பிராணியின் வளர்ந்துவரும் கருவிற்கு முட்டைக்குள்ளிருக்கும் மஞ்சள் கருவே (yolk) உணவாகும். இது, முட்டையிலிருந்து வெளியே வருவதற்கு முன் கரு முழு வளர்ச்சியடைய உதவுகிறது. நில நீர்வாழ் உயிரிகளிலோ அதன் குஞ்சுகள் முழுவதும் வளர்ச்சியடைந்த நிலையில் வெளியே வருவதில்லை. முட்டையிலிருந்து வெளியே வர விசேஷமான ஒரு முட்டைப் பல்லும் அந்தக் கருவிற்கு உள்ளது. அதை உபயோகித்து தன் சிறைக்குள்ளிருந்து ‘விடுதலையாகி’ வெளியே வருகிறது.

10நில நீர்வாழ் உயிரிக்கும் ஊரும் பிராணிக்கும் மத்தியிலுள்ள இடைவெளியை இணைக்க இன்னும் அதிகம் தேவை. அந்த மிகப் பெரிய பிளவை இணைக்க அநேக சிக்கலான மாற்றங்களும் தேவை; இவையெல்லாம் குருட்டுத்தனமாக நிகழ முடியாது என்பதை நிரூபிக்க இந்த உதாரணங்களே போதுமானவை அல்லவா? இதன் காரணமாக பரிணாமவாதி ஆர்ச்சி கார் பின்வருமாறு புலம்பியதில் ஆச்சரியம் ஏதுமுண்டோ? “முதுகெலும்பு பிராணிகளின் புதைப்படிவ பதிவில் பெரும் ஏமாற்றமளிக்கும் ஒரு விஷயம்: ஊரும் பிராணிகள் ஆரம்ப காலத்தில், அதாவது ஓடுள்ள முட்டை உருவான சமயத்தில், எப்படி பரிணமித்தன என்பதைப் பற்றி எந்தத் தகவலையும் கொடுக்காததே.”7

ஊரும் பிராணிக்கும் பறவைக்கும் இடையிலுள்ள பிளவு

11ஊரும் பிராணிகள் குளிர் இரத்தம் கொண்டவை; அதாவது அவற்றின் உடல் வெப்பநிலை வெளியிலுள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல் அதிகரிக்கும் அல்லது குறையும். மறுபட்சத்தில் பறவைகளோ வெப்ப இரத்த பிராணிகளாகும். வெளியிலுள்ள தட்பவெப்ப நிலை என்னவாக இருந்தாலும் அவற்றின் உடல் வெப்பநிலை அநேகமாக ஒரே சீராக இருக்கும். குளிர் இரத்தம் கொண்ட ஊரும் பிராணிகளிலிருந்து வெப்ப இரத்த பிராணிகளான பறவைகள் தோன்றியதன் புதிரை விடுவிக்க சில பரிணாமவாதிகள் என்ன செய்தனர் தெரியுமா? (ஊரும் பிராணிகளாய் இருந்த) சில டினோசார்கள் வெப்ப இரத்த பிராணிகளாய் இருந்தன என்று இப்போது கூறுகின்றனர். ஆனால் ராபர்ட் ஜாஸ்ட்ரோ கூறுவது போல, “மற்ற எல்லா ஊரும் பிராணிகளைப் போலவே டினோசார்களும் குளிர் இரத்த பிராணிகள்”8 என்பதே பொதுவான கருத்து.

12குளிர் இரத்த ஊரும் பிராணிகளிலிருந்து வெப்ப இரத்த பறவைகள் வந்தன என்ற இந்த நம்பிக்கை பற்றி பிரான்ஸ் நாட்டு பரிணாமவாதி லெகாம்டே டூ நோயி இவ்வாறு கூறினார்: “இது இன்று, பரிணாமத்தின் மிகப் பெரிய புதிர்களில் ஒன்று.” மேலும், “பறவைகளின் ஒவ்வொரு இயல்புகளும் படைப்பையே பறைசாற்றுவது அதிருப்தியளிக்கும் விஷயம்”9 என்றும் அவர் ஒப்புக்கொண்டார். அது பரிணாம கொள்கைக்கு அதிருப்தியளிக்கும் விஷயம் தானே!

13ஊரும் பிராணிகளும் பறவைகளும் முட்டையிடுகின்றன என்பது உண்மையே. ஆனாலும், பறவைகள் மட்டுமே அவற்றை அடைகாக்க வேண்டுமல்லவா? அவை அதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. அநேக பறவைகளுக்கு அவற்றின் மார்பில் அடைகாக்கும் பகுதி (brood spot) ஒன்று உள்ளது. அந்த இடத்தில் இறகுகளே இருக்காது, மாறாக முட்டைகளுக்கு உஷ்ணமளிக்க இரத்தக் குழாய்கள் பின்னிப் பிணைந்திருக்கும். சில பறவைகளுக்கு அடைகாக்கும் பகுதி இல்லை என்பதால் மார்பு பகுதியிலிருந்து இறகுகளை அவையே பிடிங்கிவிடுகின்றன. மேலுமாக, பறவைகள் அடைகாக்க வேண்டுமென்றால் பரிணாமம் அவற்றிற்கு புதிய சில இயல்புணர்வுகளை அளிக்க வேண்டியிருக்கும்; அதாவது, கூடு கட்டி, குஞ்சு பொரித்து, அவற்றிற்கு உணவளிக்க வேண்டிய இயல்புணர்வுகள். இவை எல்லாவற்றிற்குமே திறமை, கடின உழைப்பு, ஆபத்தை துணிச்சலுடன் எதிர்ப்படுவது போன்ற சுயநலமற்ற, சுயதியாக, கவனமான நடத்தை தேவை. இவை அனைத்தும், ஊரும் பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் மத்தியிலுள்ள மிகப் பெரிய பிளவையே சுட்டிக்காட்டுகின்றன அல்லவா? ஆனால் இன்னும் அநேக விஷயங்கள் உள்ளன.

14இறகுகள் பறவைகளுக்கு மட்டுமே சொந்தமானவை. ஊரும் பிராணிகளின் செதிள்கள் தற்செயலாக இந்த வியப்பூட்டும் அமைப்புகளாக மாறிவிட்டன என்று சொல்லப்படுகிறது. ஓர் இறகின் மையத் தண்டில் (shaft) வரிசையாக அநேக சுணைகள் (barbs) உள்ளன. ஒவ்வொரு சுணையிலும் அநேக சிறு சுணைகளும் (barbules) ஒவ்வொரு சிறு சுணையிலும் அநேக நுண் சுணைகளும் (barbicels) சிறிய கொக்கிகளும் (hooklets) உள்ளன. புறாவின் ஓர் இறகை மைக்ரோஸ்கோப்பில் ஆராய்ந்த பிறகு அதில், “நூறாயிரக்கணக்கான சிறு சுணைகளும் கோடிக்கணக்கான நுண் சுணைகளும் சிறிய கொக்கிகளும்”10 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கொக்கிகளே ஓர் இறகின் எல்லா பகுதிகளையும் ஒன்றாக சேர்த்து, தட்டையான பரப்பை ஏற்படுத்துகின்றன. ஓர் இறகைவிட சிறந்த காற்றுத்துருத்தி (airfoil) எதுவுமில்லை, அதைப்போன்ற சிறந்த வெப்பத்தடை பொருளும் இல்லை. அன்னப்பறவை அளவிலான ஒரு பறவைக்கு சுமார் 25,000 இறகுகள் உள்ளன.

15இந்த இறகுகளின் சுணைகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்துவிட்டால் அவற்றை அலகால் கோதிவிடுகின்றன. அவ்வாறு செய்யும்போது அலகுகள் அந்தச் சுணைகள் மீது அழுத்தம் கொடுப்பதால் சிறு சுணைகளில் உள்ள கொக்கிகள், ஜிப்பிலிருக்கும் பற்களைப் போல ஒன்றோடு ஒன்று அழகாக இணைகின்றன. பெரும்பாலான பறவைகளுக்கு வாலின் அடிப்பகுதியில் எண்ணெய் சுரப்பி ஒன்று உண்டு; ஒவ்வொரு இறகையும் பதப்படுத்த தேவையான எண்ணெய்யை அந்தச் சுரப்பியிலிருந்தே எடுக்கின்றன. சில பறவைகளுக்கோ எண்ணெய் சுரப்பிகள் கிடையாது, மாறாக சில விசேஷ இறகுகள் உண்டு. நுனியில் விரிந்திருக்கும் அவை, இறகுகளை பதப்படுத்த மென்மையான பவுடர்போன்ற துகள்களை உண்டுபண்ணுகின்றன. அதோடு, வருடத்திற்கு ஒருமுறை சிறகு உதிர்த்தல் (molting) மூலம் இறகுகளைப் புதுப்பிக்கின்றன.

16இறகைப் பற்றிய இவ்வளவு உண்மைகளையும் அறிந்துகொண்ட பிறகு, அது தோன்றிய விதத்தை விவரிக்க எடுக்கப்படும் வினோதமான முயற்சியை கவனியுங்கள்: “இந்த பிரமிப்பூட்டும் வடிவமைப்பு எப்படி பரிணமித்தது? அடிப்படையில் ஊரும் பிராணியின் செதில்தான் ஓர் இறக்கையாக மாறியது என்பதை​—⁠அதாவது, லேசாக இணைக்கப்பட்ட நீளமான ஒரு செதிலின் வெளிப்புற ஓரங்கள் தேய்ந்து, விரிவடைந்து, இன்றுள்ள அதிக சிக்கல் வாய்ந்த உறுப்பாக பரிணமித்தது என்பதை​—⁠ஏற்றுக்கொள்வதில் கஷ்டமே இல்லை.”11 ஆனால் இது உண்மையிலேயே அறிவியல்பூர்வமான விவரிப்பாய் தோன்றுகிறதா? அல்லது விஞ்ஞான புனைக்கதை ஒன்றை வாசிப்பதைப் போல் உள்ளதா?

17கூடுதலாக, பறவை பறப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ளதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். ஊரும் பிராணிகளின் எலும்புகள் கெட்டியானவை, பறவைகளின் எலும்புகளோ மெல்லியதாகவும் உள்ளுக்குள் காலியாகவும் உள்ளன. ஆனாலும் பறப்பதற்கு உறுதி தேவை அல்லவா? ஆகவே, விமானத்தின் இறக்கைகளுக்குள் இருக்கும் குறுக்கு பட்டைகள் (struts) போன்ற தடுப்புகள் பறவையின் எலும்புகளுக்குள் உள்ளன. எலும்புகள் இவ்வாறு வடிவமைக்கப்பட்டிருப்பது மற்றொரு முக்கிய நோக்கத்தையும் சேவிக்கிறது. பறவைகளுக்கே உரிய தனிச்சிறப்புமிக்க அற்புதமான சுவாச மண்டலத்தை (respiratory system) விளக்கவும் அது உதவுகிறது.

18பறவைகள் பல மணிநேரம் அல்லது பல நாட்கள் தொடர்ந்து பறக்கையில், தசையாலான இறக்கைகள் அடித்துக்கொண்டே இருப்பதால் அவை பெருமளவு உஷ்ணத்தை உண்டாக்குகின்றன. அவற்றின் உஷ்ணத்தைத் தணிக்க வியர்வை சுரப்பிகள் இல்லாததால் அந்தப் பிரச்சினையை பறவைகள் எவ்வாறு சமாளிக்கின்றன? காற்றால் குளிரூட்டப்படும் “எஞ்சின்” அவற்றிற்கு உள்ளது. அநேகமாக உடலின் ஒவ்வொரு முக்கிய பகுதிக்குள்ளும், காலியாக உள்ள எலும்புகளுக்குள்ளும் காற்றுப் பைகளின் அமைப்பு உள்ளது. இவ்வாறு காற்று உள்ளுக்குள்ளே சுற்றி வருவதால் உடலின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது. கூடுதலாக, முதுகெலும்புள்ள மற்ற எந்தப் பிராணியையும்விட காற்றிலிருந்து ஆக்ஸிஜனை மிகவும் திறம்பட்ட விதத்தில் எடுத்துக்கொள்ள அந்தக் காற்றுப் பைகள் பறவைகளுக்கு உதவுகின்றன. இது எவ்வாறு?

19ஊரும் பிராணிகளிலும் பாலூட்டிகளிலும் விரிந்து சுருங்கும் துருத்திகளைப்போல (bellows) இயங்கும் நுரையீரல்களே காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுகின்றன. ஆனால் பறவைகளிலோ, மூச்சை உள்ளிழுக்கும்போதும் வெளிவிடும்போதும் நுரையீரல் வழியாக தொடர்ந்து சுத்தமான காற்று சென்றுகொண்டே இருக்கும். சுலபமாக புரிந்துகொள்ள வேண்டுமானால் அந்த அமைப்பு இப்படித்தான் செயல்படுகிறது: பறவை மூச்சை இழுக்கும்போது காற்று சில பைகளுக்குள் செல்கிறது; இவை நுரையீரலுக்குள் துருத்திகள்போல சேவிக்கின்றன. காற்று, நுரையீரலிலிருந்து மற்ற பைகளுக்குள் சென்று அங்கிருந்து வெளியேற்றப்படுகிறது. அதாவது, ஒரு பஞ்சு வழியாக தண்ணீர் தொடர்ந்து செல்வதைப் போலவே நுரையீரல் வழியாக சுத்தமான காற்று ஒரே திசையில் தொடர்ச்சியாக சென்றுகொண்டே இருக்கிறது. நுரையீரலிலுள்ள இரத்த நுண் குழாய்களிலோ (capillaries) இரத்த ஓட்டம் எதிர் திசையில் செல்கிறது. இவ்வாறு இரத்த ஓட்டமும் காற்றோட்டமும் எதிரும் புதிருமாக செல்வதே பறவையின் சுவாச மண்டலத்தை விசேஷித்த ஒன்றாக்குகிறது. இதன் காரணமாகவே, அவை 6,000 மீட்டருக்கும் அதிக உயரத்தில் பல நாட்கள் தொடர்ந்து பறந்து, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் இடப்பெயர்ச்சி செய்கையில் அடர்த்தியற்ற காற்றைக்கூட அவற்றால் சுவாசிக்க முடிகிறது.

20பறவைக்கும் ஊரும் பிராணிக்கும் மத்தியிலுள்ள இடைவெளியை அதிகரிக்கும் மற்ற விஷயங்களும் உள்ளன. அதில் ஒன்று பார்வை. தொலைநோக்கி போல் செயல்படும் கழுகுகளின் கண்கள் முதல் பூதக்கண்ணாடி போல் செயல்படும் வார்ப்ளர்களின் கண்கள் வரை பல வகைகள் உள்ளன. மற்ற எந்த உயிரினத்தையும்விட பறவைகளின் கண்களில் அதிகமான உணர் செல்கள் (sensory cells) உள்ளன. பறவைகளின் பாதங்களும் வித்தியாசமானவை. அவை மரத்தில் வந்து உட்காருகையில் விரல்கள் உடனேயே கிளையைப் பற்றிக்கொள்ள அவற்றின் தசைநாண்கள் (tendons) உதவுகின்றன. ஊரும் பிராணிகளுக்கு ஐந்து விரல்கள் இருக்கையில் பறவைகளுக்கோ நான்கு மட்டுமே உண்டு. மேலுமாக அவற்றிற்கு குரல்நாண்களும் (vocal cords) கிடையாது. ஆனால் சிரிங்க்ஸ் (syrinx) என்ற விசேஷமான ஓர் அமைப்பு அவற்றின் தொண்டையில் உள்ளது. அதன் உதவியாலேயே பாடும் பறவை (nightingales), நையாண்டிப் பறவை (mocking birds) போன்றவை இனிமையான பாடல்களைப் பாடுகின்றன. ஊரும் பிராணிகளுக்கு மூன்று அறைகள் கொண்ட இதயமே உண்டு, பறவைகளின் இதயத்திலோ நான்கு அறைகள். ஊரும் பிராணிகளுக்கு இல்லாத மற்றொரு விசேஷ அம்சம் பறவைகளின் அலகுகளே. அதிலும், கொட்டைகளை உடைக்க, கலங்கலான தண்ணீரிலிருந்து உணவை பிரித்தெடுக்க, மரங்களைத் துவாரம்போட, ஊசியிலை மரங்களின் காய்களை உடைக்க என எத்தனை எத்தனை வகைகள்! இவ்வளவு விசேஷித்த வடிவமைப்பு இருந்தும், ஊரும் பிராணியின் மூக்கிலிருந்து அலகு தானாகவே பரிணமித்தது என்றுதானே சொல்கிறார்கள்! அப்படிப்பட்ட விளக்கம் உங்களுக்கு நியாயமானதாக தோன்றுகிறதா?

21“புராதன இறக்கை” அல்லது “புராதன பறவை” என அர்த்தம் கொள்ளும் ஆர்க்கியாப்டிரிக்ஸ்-ஐ (Archaeopteryx) ஊரும் பிராணிக்கும் பறவைக்கும் மத்தியிலான இணைப்பாக பரிணாமவாதிகள் ஒரு சமயம் கருதினர். ஆனால் இன்று அநேகர் அவ்வாறு கருதுவதில்லை. பறக்கும் திறன்கொண்ட இறக்கைகளில் முழு வளர்ச்சியடைந்த இறகுகள் இருப்பதையே அதன் எஞ்சிய புதைப்படிவங்கள் தெளிவாக காட்டுகின்றன. அதன் இறக்கைகளிலும் கால்களிலும் உள்ள எலும்புகள் மெல்லியதாகவும் உள்ளே காலியாகவும் உள்ளன. அதற்கு இருப்பதாக கூறப்படும் ஊரும் பிராணிகளின் தோற்றங்களை இன்றுள்ள பறவைகளிலும் காணமுடிகிறது. அது பறவைகள் வாழ்ந்த காலத்திற்கு முந்தைய காலத்தை சேர்ந்தது என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், ஆர்க்கியாப்டிரிக்ஸ்-⁠ன் புதைப்படிவம் காணப்படும் அதே காலத்திய பாறைகளில் மற்ற பறவைகளின் புதைப்படிவங்களும் காணப்படுகின்றன.12

ஊரும் பிராணிக்கும் பாலூட்டிக்கும் இடையிலுள்ள பிளவு

22ஊரும் பிராணிக்கும் பாலூட்டிக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசங்கள் அவற்றின் மத்தியில் பெரும் பிளவை உண்டாக்குகின்றன. “பாலூட்டி” என்ற பெயரே மிகப் பெரிய ஒரு வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டுகிறது: உயிருடன் பிறக்கும் குட்டிகளுக்கு பாலூட்டுவதற்காக அவற்றிற்கு பால் சுரப்பிகள் உள்ளன. “வியர்வை சுரப்பிகளே [பால்சுரப்பிகளாக] மாறியிருக்கலாம்”13 என தியோடோசியஸ் டோப்ஸான்ஸ்கி கூறினார். ஆனால் ஊரும் பிராணிகளுக்கு வியர்வை சுரப்பிகள்கூட கிடையாதே! அதுமட்டுமல்ல, வியர்வை சுரப்பிகளிலிருந்து வெளிவருவது உணவு அல்ல, கழிவுப் பொருட்களே. ஊரும் பிராணிகளின் குட்டிகளைப் போலில்லாமல், பாலூட்டிகளின் குட்டிகள் தாயிடமிருந்து பாலை உறிஞ்சிக் குடிப்பதற்கான இயல்புணர்வையும் தசைகளையும் பெற்றுள்ளன.

23ஊரும் பிராணிகளில் காணப்படாத மற்ற அம்சங்களும் பாலூட்டிகளில் உள்ளன. தாய் பாலூட்டிகளில், இன்னும் பிறவாத குட்டிகளுக்கு உணவளித்து, அவற்றின் வளர்ச்சியில் உதவ, அதிக சிக்கல் வாய்ந்த சூல்கொடியும் (placenta) உள்ளது. ஊரும் பிராணிகளுக்கோ அது இல்லை. ஊரும் பிராணிகளில் உதரவிதானம் (diaphragm) இல்லை; ஆனால் மார்பு பகுதியை வயிற்றிலிருந்து பிரிக்கும் உதரவிதானம் ஒன்று பாலூட்டிகளுக்கு உண்டு. பாலூட்டிகளின் காதுகளில் உள்ள கார்டி (Corti) என்ற உறுப்பு ஊரும் பிராணிகளின் காதுகளில் கிடையாது. இந்தச் சிறிய, சிக்கலான உறுப்பில் 20,000 குச்சிகளும் 30,000 நரம்பு நுனிகளும் (nerve endings) உள்ளன. பாலூட்டிகளின் உடல் வெப்பநிலை ஒரே சீராக இருக்கும், ஆனால் ஊரும் பிராணிகளுக்கோ அவ்வாறு இருப்பதில்லை.

24பாலூட்டிகளின் காதுக்குள் மூன்று எலும்புகள் உள்ளன, ஆனால் ஊரும் பிராணிகளிலோ ஒன்றுதான் உள்ளது. “அதிகப்படியான” அந்த இரண்டு எலும்புகள் எங்கிருந்து வந்தன? பரிணாமக் கொள்கை அதை இவ்வாறு விளக்க முற்படுகிறது: ஊரும் பிராணிகளின் கீழ்த்தாடையில் குறைந்தது நான்கு எலும்புகள் உள்ளன, ஆனால் பாலூட்டிகளுக்கு இருப்பதோ ஒன்றுதான். ஆகவே, ஊரும் பிராணிகள் பாலூட்டிகளாக பரிணமித்தபோது எலும்புகள் இடம் மாறியதாக கூறப்படுகிறது. ஊரும் பிராணியின் கீழ்த்தாடையில் உள்ள சில எலும்புகள் பாலூட்டியின் நடு காது பகுதிக்கு சென்று அங்குள்ள மூன்று எலும்புகளாயின; இதன் காரணமாக பாலூட்டியின் கீழ்த்தாடைக்கு ஒரே ஒரு எலும்பு மட்டுமே மிஞ்சியது. ஆனால் இந்த நியாயவிவாதத்தை ஆதரிப்பதற்கு எந்தப் புதைப்படிவ அத்தாட்சியும் இல்லாததே பிரச்சினையாகும். இது வெறும் ஊகமே.

25எலும்புகள் சம்பந்தப்பட்ட மற்றொரு பிரச்சினையும் உள்ளது: ஊரும் பிராணிகளின் கால்கள் உடலின் பக்கவாட்டில் அமைந்துள்ளதால் அவற்றின் வயிறு தரையில்படும் விதத்தில் அல்லது தரைக்கு மிக அருகில் உள்ளது. பாலூட்டிகளிலோ கால்கள் உடலுக்கு கீழே இருப்பதால் உடலானது தரையிலிருந்து உயரத்திலுள்ளது. இந்த வித்தியாசத்தைப் பற்றி டோப்ஸான்ஸ்கி கூறியதாவது: “இந்த மாற்றம் பார்ப்பதற்கு சிறியதாக தோன்றலாம். ஆனால் இது, எலும்புக்கூடு மற்றும் தசைகளின் அமைப்பில் பெரும் மாற்றத்தைத் தேவைப்படுத்தியுள்ளது.” பிறகு, ஊரும் பிராணிகளுக்கும் பாலூட்டிகளுக்கும் மத்தியிலுள்ள மற்றொரு பெரிய வித்தியாசத்தை ஒப்புக்கொள்பவராக அவர் கூறினார்: “பாலூட்டிகளின் பற்கள் மிகவும் சிக்கலானவை. ஊரும் பிராணிக்கு முளை போன்ற (peg-like) எளிமையான பற்களே உள்ளன. பாலூட்டிகளின் பற்களோ, கடிக்க, பிடிக்க, துளைக்க, வெட்ட, உணவை இடிக்க அல்லது அரைக்க என பல்வேறு காரியங்களைச் செய்ய ஏற்றவாறு அமைந்துள்ளன.”14

26கடைசியாக ஒரு செய்தி: நீர் நிலவாழ் உயிரிகள் ஊரும் பிராணிகளாக பரிணமித்ததாய் கூறப்படுகையில், அவை யூரியாவாக வெளியேற்றிய கழிவுப்பொருட்கள் யூரிக் அமிலமாக மாறியதைக் கண்டோம். ஆனால் ஓர் ஊரும் பிராணி பாலூட்டியாக பரிணமித்ததாக சொல்லப்படும் விஷயத்தில் இது தலைகீழாக மாறியது. பாலூட்டிகளும், நீர் நிலவாழ் உயிரிகளைப் போலவே கழிவுகளை யூரியாவாக வெளியேற்ற ஆரம்பித்தன. வேறு வார்த்தைகளில் சொன்னால், பரிணாமம் பின்னோக்கி சென்றது; கொள்கையளவில் அவ்வாறு நிகழவே கூடாது.

பிளவுகளிலேயே மெகா பிளவு

27சரீரத்தைப் பொறுத்தவரையில் பாலூட்டிகளின் பொதுவான விவரிப்பே மனிதனுக்கும் பொருந்துகிறது. ஆனாலும் ஒரு பரிணாமவாதி இவ்வாறு கூறினார்: “மனிதனை ‘வெறும் ஒரு மிருகம்’ என கருதுவதைவிட படுமோசமான தவறு வேறு எதுவுமே இருக்க முடியாது. மனிதன் விசேஷித்தவன். பேச்சு, மரபு, கலாச்சாரம், வளர்ச்சியிலும் பெற்றோரின் பாதுகாப்பிலும் செலவிடப்படும் வெகு நீண்ட காலம் போன்ற அநேக விஷயங்களில் அவன் மற்ற எல்லா மிருகங்களையும்விட மிகவும் வித்தியாசமானவன்.”15

28இந்தப் பூமியிலுள்ள மற்ற எல்லா மிருகங்களிலிருந்தும் மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது அவனுடைய மூளையே. மனித மூளையிலுள்ள சுமார் 10,000 கோடி நரம்பணுக்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல், சுமார் 2 கோடி புத்தக தொகுப்புகளை நிரப்பிவிடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! சிந்தனை சக்தியும் பேச்சு திறமையும், மனிதனை வேறெந்த மிருகத்திலிருந்தும் பெருமளவு வேறுபடுத்திக் காட்டுகின்றன. சேகரிக்கும் அறிவை பதிவு செய்யும் திறமையும் மனிதனுக்கு மட்டுமே உள்ள மிகவும் விசேஷித்த பண்பு. இந்த அறிவைப் பயன்படுத்துவதால் பூமியிலுள்ள எல்லா உயிரினங்களிலும் தலைசிறந்து விளங்குகிறான். அதுமட்டுமா, நிலாவிலும் கால் பதித்திருக்கிறானே! மனித மூளை, “வித்தியாசமானது, நாம் அறிந்திருக்கும் பிரபஞ்சத்திலுள்ள வேறு எதைக் காட்டிலும் கற்பனை செய்ய முடியாதளவு சிக்கல் வாய்ந்தது”16 என ஒரு விஞ்ஞானி சொன்னது எவ்வளவு உண்மை!

29மனிதனுக்கும் மிருகத்திற்கும் மத்தியிலுள்ள இடைவெளியை மிகவும் அதிகமாக்கும் மற்றொரு விஷயம் அவனுக்கிருக்கும் ஒழுக்கநெறி மற்றும் ஆன்மீக உணர்வு. அன்பு, நீதி, ஞானம், வல்லமை, இரக்கம் போன்ற குணங்களிலிருந்தே இவை பிறக்கின்றன. மனிதன் ‘கடவுளுடைய சாயலாகவும் அவருடைய ரூபத்தின்படியேயும்’ படைக்கப்பட்டுள்ளதாக கூறும்போது ஆதியாகமம் இதையே குறிப்பிடுகிறது. மனிதனுக்கும் மிருகத்திற்கும் மத்தியிலுள்ள பிளவுகளில் எல்லாம் இந்தப் பிளவே மெகா பிளவு ஆகும்.​—⁠ஆதியாகமம் 1:⁠26.

30ஆக, உயிரினங்களின் பெரும் பிரிவுகள் மத்தியில் மிக அதிகமான வித்தியாசங்கள் இருப்பது தெளிவாய் உள்ளது. அநேக புதிய வடிவமைப்புகள், திட்டமிடப்பட்ட இயல்புணர்வுகள், குணங்கள் ஆகியவை அவற்றை பிரித்துக் காட்டுகின்றன. இவை எல்லாமே குருட்டுத்தனமாக தோன்றியிருக்கும் என நினைப்பது கொஞ்சமாவது நியாயமாக தொனிக்கிறதா? புதைப்படிவ பதிவு இந்தக் கருத்தை ஆதரிப்பதில்லை என நாம் பார்த்துவிட்டோம். இடைவெளிகளை இணைக்க எந்தப் புதைப்படிவத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஹாய்ல் மற்றும் விக்ரமசிங்கே கூறுகிற விதமாகவே: “புதைப்படிவ பதிவுகளில் இடைப்பட்ட வகைகளைக் காண முடிவதில்லை. காரணம் என்ன என்று இப்போது நமக்கு புரிகிறது. அப்படிப்பட்ட ஒன்று இல்லவே இல்லை.”17 காதுகொடுத்துக் கேட்போருக்கு புதைப்படிவ பதிவு சொல்வது: “அற்புதமான படைப்பே.”

[கேள்விகள்]

1. புதைப்படிவ பதிவிலுள்ள இடைவெளிகளைப் பற்றி என்ன சொல்லப்படுகிறது?

2. இடைவெளிகளைப் பற்றி மீன்களின் புதைப்படிவங்கள் என்ன காட்டுகின்றன?

3. விலங்கினங்கள் மத்தியிலுள்ள பெரும் பிரிவுகளைப் பரிணாம கொள்கை எவ்வாறு வரிசைப்படுத்துகிறது?

4, 5. மீன்களுக்கும் நில நீர்வாழ் உயிரிகளுக்கும் மத்தியிலுள்ள மிகப் பெரிய வேறுபாடுகளில் சில யாவை?

6. மீன்களுக்கும் நில நீர்வாழ் உயிரிகளுக்கும் இணைப்பாக கருதப்பட்ட பிராணிகள் யாவை, ஆனால் அவை ஏன் இணைப்பே அல்ல?

7. நில நீர்வாழ் உயிரியிலிருந்து ஊரும் பிராணி தோன்றுவதை விளக்குவதில் என்ன பெரிய சிக்கல் உள்ளது?

8, 9. ஓடுள்ள முட்டைக்கு வேறு என்ன அம்சங்களும் தேவை?

10. ஒரு பரிணாமவாதி என்னவென்று புலம்பினார்?

11, 12. ஊரும் பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் மத்தியிலுள்ள மிகப் பெரிய வித்தியாசம் என்ன, இந்தப் புதிரை விடுவிக்க சிலர் எவ்வாறு முயலுகின்றனர்?

13. பறவைகள் முட்டைகளை அடைகாக்க என்ன செய்கின்றன?

14. ஊர்வனவற்றின் செதிள்களிலிருந்து இறகுகள் வந்திருக்க முடியாது என சொல்வதற்கு அவற்றில் என்ன அருமையான நுணுக்கங்கள் உள்ளன?

15. இறகுகளை பறவைகள் எவ்வாறு பேணிக் காக்கின்றன?

16. இறகுகள் தோன்றியதைப் பற்றி பரிணாமவாதி ஒருவர் என்ன கூறினார்?

17. ஊரும் பிராணியின் எலும்பிலிருந்து பறவையின் எலும்பு எவ்வாறு வித்தியாசப்படுகிறது?

18. பறவைகள் நீண்ட தூரம் பறக்கையில் உஷ்ணத்தைத் தணிக்க என்ன அமைப்புகள் உதவுகின்றன?

19. அடர்த்தியற்ற காற்றைக்கூட பறவைகளால் எவ்வாறு சுவாசிக்க முடிகிறது?

20. பறவைக்கும் ஊரும் பிராணிக்கும் மத்தியிலுள்ள இடைவெளியை அதிகரிக்கும் மற்ற விஷயங்கள் யாவை?

21. ஆர்க்கியாப்டிரிக்ஸ்-ஐ ஊரும் பிராணிக்கும் பறவைக்கும் மத்தியிலான இணைப்பாக ஏன் கருத முடியாது?

22. “பாலூட்டி” என்ற பெயரே ஊரும் பிராணிக்கும் பாலூட்டிக்கும் மத்தியிலுள்ள என்ன வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டுகிறது?

23, 24. ஊரும் பிராணிகளிடம் இல்லாத மற்ற என்னென்ன அம்சங்கள் பாலூட்டிகளிடம் உள்ளன?

25. ஊரும் பிராணிகளுக்கும் பாலூட்டிகளுக்கும் மத்தியில் வேறு என்ன வேறுபாடுகள் உள்ளன?

26. கழிவுகளை வெளியேற்றும் விஷயத்தில் பரிணாமம் எவ்வாறு பின்னோக்கி சென்றிருக்க வேண்டும்?

27. எது “படுமோசமான தவறு” என ஒரு பரிணாமவாதி கூறினார்?

28. மனித மூளை மிருகங்களிடமிருந்து அவனை எவ்வாறு வேறுபடுத்திக் காட்டுகிறது?

29. மனிதனுக்கும் மிருகத்திற்கும் மத்தியிலுள்ள பிளவை மெகா பிளவாக்கும் விஷயம் எது?

30. புதைப்படிவ பதிவு உண்மையில் சொல்வதென்ன?

[பக்கம் 72-ன் சிறு குறிப்பு]

நில நீர்வாழ் உயிரிகளின் இடுப்பெலும்பு எவ்வாறு உருவானது என காட்டும் புதைப்படிவ மீன் எதுவும் இல்லை

[பக்கம் 81-ன் சிறு குறிப்பு]

“மனிதனை ‘வெறும் ஒரு மிருகம்’ என கருதுவதைவிட படுமோசமான தவறு வேறு எதுவுமே இருக்க முடியாது”

[பக்கம் 73-ன் பெட்டி/படங்கள்]

உயிரினங்களின் பெரும் பிரிவுகள் மத்தியில் எந்தத் தொடர்புமே இல்லை. “எல்லா முக்கிய கட்டங்களிலும் புதைப்படிவங்கள் காணாமல் போகின்றன” என்று ஒரு விஞ்ஞானி கூறினார்

[படங்கள்]

ஒவ்வொன்றும் ‘அதனதன் இனத்தின்படியே’ பிறப்பிக்கின்றன

மீன்

நில நீர்வாழ் உயிரி

ஊர்வன

பறவை

பாலூட்டி

மனிதன்

[பக்கம் 76-ன் பெட்டி/படங்கள்]

“[ஊரும் பிராணியின்] செதில்தான் ஓர் இறக்கையாக மாறியது என்பதை ஏற்றுக்கொள்வதில் கஷ்டமே இல்லை” என பரிணாமவாதிகள் கூறுகின்றனர். ஆனால் உண்மைகளோ அதற்கு எதிர்மாறானதே

[படங்கள்]

கிளி

பாரடைஸ் பறவை

மயில்

[வரைப்படம்]

மையத் தண்டு

சுணைகள்

நுண் சுணைகள்

சிறு சுணைகள்

[பக்கம் 71-ன் படம்]

“மீன்கள், வானத்திலிருந்து குதிப்பதைப் போல திடீரென்று புதைப்படிவ பதிவுகளில் குதிக்கின்றன”

[பக்கம் 72-ன் படங்கள்]

மீன்கள் மற்றும் தவளைகளின் முதுகெலும்புகள் மிகவும் வித்தியாசமானவை

[பக்கம் 75-ன் படம்]

பறவைகளின் “ஒவ்வொரு இயல்புகளும் படைப்பையே பறைசாற்றுவது அதிருப்தியளிக்கும் விஷயம்”

[பக்கம் 78-ன் படங்கள்]

கழுகின் கண் ஒரு தொலைநோக்கி, வார்ப்ளரின் கண் ஒரு பூதக்கண்ணாடி

[பக்கம் 79-ன் படங்கள்]

ஆர்க்கியாப்டிரிக்ஸ், ஊர்வனவற்றிற்கும் பறவைக்கும் மத்தியிலான இணைப்பு அல்ல

[பக்கம் 80-ன் படம்]

பாலூட்டிகளின் குட்டிகள் உயிருடன் பிறந்து, அவற்றின் தாயிடம் பால் குடிக்கின்றன

[பக்கம் 82-ன் படங்கள்]

“புதைப்படிவ பதிவுகளில் இடைப்பட்ட வகைகளைக் காண முடிவதில்லை. காரணம் . . . அப்படிப்பட்ட ஒன்று இல்லவே இல்லை”

மீன்

நில நீர்வாழ் உயிரி

ஊர்வன

பறவை

பாலூட்டி

மனிதன்

[பக்கம் 74-ன் வரைப்படம்/படங்கள்]

நில நீர்வாழ் உயிரிகளின் ஜெல்லி போன்ற முட்டைகளுக்கு ஓடுகள் கிடையாது

ஊர்வனவற்றின் முட்டைகளுக்கோ பாதுகாப்பான ஓடு உண்டு

[வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஓடுள்ள முட்டையின் குறுக்கு வெட்டு தோற்றம்

பூழ்ப்பை

கரு

முட்டை ஓடு

ஆல்புமின்

பனிக்குட உறை

பிரிபடலம்

மஞ்சள் கரு

காற்றுப் பகுதி

முட்டை சவ்வு