Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விசேஷித்த ஒரு கிரகத்தின் அத்தாட்சி

விசேஷித்த ஒரு கிரகத்தின் அத்தாட்சி

அதிகாரம் 10

விசேஷித்த ஒரு கிரகத்தின் அத்தாட்சி

நம்முடைய கிரகமாகிய பூமி உண்மையில் ஓர் அற்புதமே! விண்ணில் உலாவரும் ஓர் அரிய, அழகான இரத்தினமே! விண்ணிலிருந்து பார்க்கையில் பூமியின் நீலநிற வானங்களும் வெண்ணிற மேகங்களும், இப்புவியை “தங்கள் கண்களுக்கு புலப்பட்டதிலேயே மிகவும் கவர்ச்சியான பொருளாக்கியது”1 என விண்வெளி வீரர்கள் அறிக்கை செய்துள்ளனர்.

2ஆனால் சொக்கவைக்கும் அழகைவிட அதில் இன்னும் அதிகம் உள்ளது. “அது மிகப் பெரிய அறிவியல் சார்ந்த விண்ணியல் புதிர், அதைப் புரிந்துகொள்வதற்கான நம் முயற்சிகளை எல்லாம் முறியடிக்கிறது, அதுவே இந்தப் பூமி” என லூயிஸ் தாமஸ் டிஸ்கவர்-⁠ல் எழுதினார். “அது எவ்வளவு வினோதமானது, வியப்பூட்டுவது என்பதை இப்போதுதான் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளோம்; அது நம் மதியை மயக்குகிறது, சூரியனைச் சுற்றிவரும் பொருட்களிலேயே கொள்ளை அழகுடையது, வளிமண்டலம் என்ற நீலநிற குமிழி அதைச் சூழ்ந்துள்ளது, தான் சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜனைத் தானே தயாரிக்கிறது, காற்றிலுள்ள நைட்ரஜனை தன் சொந்த மண்ணில் நிலைப்படுத்துகிறது, தனக்கென்று வானிலையைத் தானே உருவாக்கிக் கொள்கிறது”2 என்றும் அவர் தொடர்ந்து வர்ணித்தெழுதினார்.

3பின்வரும் செய்தியும் அக்கறைக்குரியதே: சூரிய மண்டலத்திலுள்ள அனைத்து கிரகங்களிலும் பூமியில் மட்டுமே விஞ்ஞானிகள் உயிரைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த உயிரினங்களின் வகைகள்தான் அப்பப்பா எத்தனை எத்தனை! நுண்ணுயிரிகள், பூச்சிகள், தாவரங்கள், மீன்கள், பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் என்ற அற்புதமான வகைகளும் உண்டு. அதுமட்டுமா, இந்த உயிரினங்களை எல்லாம் கட்டிக்காக்க தேவையான அனைத்து வளங்களும் நிறைந்த மாபெரும் பண்டகசாலைதான் இந்தப் பூமி. “பூமி இப்பிரபஞ்சத்தின் ஓர் அற்புதம், ஈடற்ற ஒரு கோளம்”3 என பூமி (The Earth) என்ற புத்தகம் சொன்னது எவ்வளவு உண்மை!

4இந்தப் பூமியின் ஈடிணையற்ற தனிச்சிறப்புக்கு இதோ ஓர் உதாரணம்: உயிரின் வாசனையே இல்லாத வறண்ட பாலைவனத்தில் நீங்கள் பயணம் செய்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். திடீரென்று ஓர் அழகான வீட்டைக் காண்கிறீர்கள். அந்த வீட்டில் குளிர்சாதன வசதி, அனலூட்டும் வசதி, தண்ணீர் வசதி, மின்சாரம் என சகல சௌகரியங்களும் உள்ளன. அதன் குளிர்சாதன பெட்டியிலும் அலமாரிகளிலும் உணவு நிரம்பி வழிகிறது. அதன் அடித்தளத்தில் எரிபொருளும் தேவையான மற்ற பொருட்களும் உள்ளன. இப்பொழுது, இந்தப் பொசுக்கும் பாலைவனத்தில் இவையெல்லாம் எங்கிருந்து வந்தன என்று நீங்கள் ஒருவரிடம் கேட்பதாக வைத்துக்கொள்ளுங்கள். “அவை எல்லாம் தானாகவே வந்துவிட்டன” என அந்த நபர் கூறினால் உங்களுக்கு எப்படியிருக்கும்? நீங்கள் அதை நம்புவீர்களா? அல்லது அதை வடிவமைத்து, கட்டிய ஒருவர் கட்டாயம் இருக்கவேண்டும் என கண்ணை மூடிக்கொண்டு முடிவு செய்துவிடுவீர்களா?

5விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ள மற்ற எந்த கிரகத்திலும் உயிரே இல்லை; ஆனால் பூமியிலோ உயிர் பூத்துக் குலுங்குகிறது. ஒளி, காற்று, வெப்பம், தண்ணீர், உணவு ஆகியவற்றை அளிக்கும் வெகு சிக்கலான, அருமையான சமநிலையிலுள்ள அமைப்புகள் அவற்றைக் கட்டிக்காக்கின்றன. இந்தப் பூமி மாபெரும் ஒரு வீட்டைப்போல, உயிரினங்கள் சௌகரியமாக வாழ்வதற்காகவே பார்த்துப் பார்த்துப் படைக்கப்பட்டிருப்பதற்கான எல்லா அத்தாட்சிகளையும் கொண்டுள்ளது. ஆகவே, “எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்” என பைபிள் எழுத்தாளர் ஒருவர் கூறுவது எவ்வளவு நியாயமானது அல்லவா? மிகவும் பெரிய, அதிக வியக்கத்தக்க ‘வீடாகிய’ நம் கிரகமாகிய பூமியை வடிவமைத்து கட்டிய ஒப்பற்ற ஞானமுள்ள ஒரு கடவுள் நிச்சயம் இருந்தாக வேண்டும்.​—எபிரெயர் 3:⁠4.

6இந்தப் பூமியையும் அதிலுள்ள உயிர்களையும் விஞ்ஞானிகள் அதிகமாய் ஆராய்கையில் அது உண்மையில் மிகவும் அருமையாய் வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காண்கின்றனர். “இந்தப் பிரபஞ்சத்தை ஆராய்ந்து, நம் நன்மைக்காக இணைந்து செயலாற்றிய இயற்பியல் மற்றும் வானியல் விபத்துகளைக் கண்டுணர்கையில், நாம் இங்கு வரப்போகிறோம் என இந்தப் பிரபஞ்சம் முன்கூட்டியே எப்படியோ அறிந்திருந்தது என்றே தோன்றுகிறது”4 என்று சொல்லி சயன்டிஃபிக் அமெரிக்கன் ஆச்சரியப்படுகிறது. சயன்ஸ் நியூஸ்கூட பின்வருமாறு ஒப்புக்கொண்டது: “இவ்வளவு திட்டவட்டமான, துல்லியமான நிலைமைகள் தற்செயலாக வந்திருக்க முடியாதென்றே தோன்றுகிறது.”5

சூரியனிலிருந்து சரியான தூரத்தில்

7பூமியில் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான அநேக துல்லியமான நிலைமைகளுள் ஒன்று, சூரியனிலிருந்து கிடைக்கப் பெறும் ஒளியும் வெப்பமுமே. சூரியனின் ஆற்றலில் கொஞ்சத்தை மட்டுமே இந்தப் பூமி பெறுகிறது. ஆனாலும் உயிர் வாழ்வதற்கு அதுவே மிகவும் சரியான அளவாகும். பூமி சூரியனிலிருந்து மிகவும் சரியான தூரத்தில் அதாவது சுமார் 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருப்பதே இதற்கு காரணம். இந்தப் பூமி, சூரியனுக்கு சற்று அருகில் அல்லது சற்று தொலைவில் இருந்தால் யாரும், எதுவும் வாழமுடியாத அளவுக்கு உலைக்கலத்தைப் போல அதிக உஷ்ணமாய் அல்லது உறையவைக்கும் ஃப்ரீஸரைப் போல அதிக குளிராய் ஆகிவிடும்.

8பூமி வருடத்திற்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி வருகையில், மணிக்கு சுமார் 1,06,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகிறது. இந்த வேகத்தின் காரணமாகத்தான் பூமி, சூரியனின் ஈர்ப்பு சக்தியை சமாளித்து சரியான தூரத்தில் இருக்க முடிகிறது. இந்த வேகம் குறையுமானால் பூமி சூரியனிடம் இழுக்கப்படும். காலப்போக்கில் பூமியானது, சூரியனுக்கு வெகு அருகிலுள்ள கிரகமாகிய புதன் போல தகிக்கும் வெட்டாந்தரையாக மாறிவிடும். புதன் கிரகத்தின் பகல்நேர வெப்பநிலை எவ்வளவு தெரியுமா? 315 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகும்! மறுபட்சத்தில், பூமியின் இந்த வேகம் அதிகரிக்குமானால் அது சூரியனிலிருந்து விலகி சென்றுவிடும். அப்போது, சூரியனிலிருந்து வெகு தொலைவிலுள்ள கிரகமாகிய புளூடோ போல உறைந்த பனிக்காடாகிவிடும். புளூடோவின் வெப்பநிலை உறைநிலைக்கு கீழே சுமார் 184 டிகிரி செல்சியஸ்.

9அதுமட்டுமல்ல, ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் ஒரு முறை பூமி அதன் அச்சில் தவறாமல் தன்னைத் தானே சுற்றிக்கொள்கிறது. அதனால் ஒழுங்கான அடிப்படையில் ஒளியும் இருளும் மாறி மாறி வருகின்றன. ஆனால், வருடத்திற்கு ஒரு முறையே பூமி அதன் அச்சில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டால் எப்படியிருக்கும்? அப்போது பூமியின் ஒரு பகுதி மட்டுமே வருடம் முழுவதும் சூரியனை நோக்கியிருக்கும். அதனால் அந்தப் பகுதி சூளையைப்போல சூடாகிவிடும், சூரியனிடமிருந்து விலகியிருக்கும் மறுபகுதியோ உயிரற்ற பனிக்காடாகிவிடலாம். இந்தப் பயங்கரமான சூழ்நிலைகளில் எந்த உயிரினமுமே வாழமுடியாது.

10பூமி அதன் அச்சில் சுழலும்போது சூரியனோடு ஒப்பிடுகையில் 23.5 டிகிரி சாய்ந்துள்ளது. பூமி மட்டும் சாய்ந்தில்லை என்றால் பருவகால மாற்றங்களுக்கே இடமில்லை. சீதோஷ்ண நிலை எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும். இதன் விளைவாக உயிர் வாழ முடியாமல் போகாது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் வாழ்க்கையில் சலிப்பு தட்டிவிடும், அதோடு அநேக இடங்களில் பயிர் விளையும் முறைகள் வெகுவாக மாற்றமடையும். பூமி இன்னும் அதிகமாக சாய்ந்திருந்தால் தாங்கமுடியாத கோடைகாலமும் மிதமிஞ்சிய குளிர்காலமும் ஏற்படும். ஆனால் 23.5 டிகிரி சாய்ந்திருப்பதால் கண்ணுக்கு விருந்தளிக்கும் பல்வேறு நிறங்களுடைய பருவகால மாற்றங்கள் நிகழ்கின்றன. பூமியின் பல்வேறு பகுதிகளில் இவை மனிதனின் மனதை மகிழ்விக்கின்றன. புத்துணர்ச்சி அளிக்கும் வசந்தகாலத்தில் செடிகளும் மரங்களும் துயிலெழுந்து, பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் புத்தாடை தரிக்கின்றன. உஷ்ணமான கோடைகாலத்தில் வீட்டிற்கு வெளியே பல்வேறு வேலைகளில் ஈடுபட முடிகிறது. இனிமையான இலையுதிர் காலத்தில் பட்டாடை உடுத்தும் இலைகளின் வண்ணமயமான கோலங்களை கண்களால் பருகுகிறோம். சில்லென்ற குளிர்காலத்தில் பனிமூடிய மலைகளும், காடுகளும், நிலப்பகுதிகளும் மனதைக் கொள்ளைக் கொள்கின்றன.

வியப்பூட்டும் வளிமண்டலம்

11நம் பூமியைச் சூழ்ந்திருக்கும் வளிமண்டலமும் விசேஷித்த, வியப்பூட்டுகிற ஒன்று. சூரிய மண்டலத்திலுள்ள மற்ற எந்த கிரகத்திற்கும் இச்சிறப்பு கிடையாது. சந்திரனுக்கும்கூட கிடையாது. அதனால்தான் அங்கு செல்லும் விண்வெளி வீரர்கள் உயிரைக் காத்துக்கொள்ள விண்வெளி உடை அணிகின்றனர். ஆனால் பூமியில் இருக்கும்போது எவ்வித விண்வெளி உடையும் தேவையில்லை. ஏனென்றால் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான வாயுக்கள் நம் வளிமண்டலத்தில் சரியான கலவைகளில் உள்ளன. அவற்றில் சில வாயுக்கள் தனியாய் இருக்கையில் நச்சுத்தன்மை வாய்ந்தவை. ஆனால், இந்த வாயுக்கள் பாதுகாப்பான அளவில் காற்றில் கலந்திருப்பதால் அவற்றை சுவாசித்தாலும் எந்தத் தீங்கும் இல்லை.

12அதிலுள்ள ஒரு வாயு ஆக்ஸிஜன்; அது நாம் சுவாசிக்கும் காற்றில் 21 சதவிகிதம் உள்ளது. அது இல்லையேல் மனிதர்களும் மிருகங்களும் சில நிமிடங்களில் இறக்க நேரிடும். ஆனால் ஏராளமான ஆக்ஸிஜன் இருந்தாலும் நம் உயிருக்கு ஆபத்து. ஏன்? சுத்தமான ஆக்ஸிஜனை அதிக நேரம் முகர்ந்தால் அது அபாயகரமானது. கூடுதலாக, அதிக ஆக்ஸிஜன் இருந்தால் பொருட்கள் எளிதில் தீப்பிடித்துவிடும். வளிமண்டலத்தில் அதிகமான ஆக்ஸிஜன் இருந்தால் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உடனே பற்றிக்கொண்டுவிடும். ஆங்காங்கே எளிதில் நெருப்பு எரிய ஆரம்பித்து, அணைப்பதற்குள் பெரும்பாடாகிவிடும். எனவே, மற்ற வாயுக்களுடனும் முக்கியமாய் வளிமண்டலத்தில் 78 சதவிகிதம் உள்ள நைட்ரஜனுடனும் கலந்திருப்பதால் ஆக்ஸிஜனின் அடர்த்தி குறைக்கப்பட்டிருப்பது எவ்வளவு ஞானமான ஒன்று! ஆனால் அடர்த்தியை குறைப்பது மட்டுமே நைட்ரஜனின் வேலை அல்ல, அது இன்னும் அதிகத்தை செய்கிறது. இடிமின் புயல் சமயங்களில் பூமி முழுவதையும் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மின்னல்கள் தாக்குகின்றன. இந்த மின்னல்களால் கொஞ்சம் நைட்ரஜன் ஆக்ஸிஜனோடு சங்கமிக்கிறது. இதன் விளைவாக ஏற்படும் சேர்மங்கள் மழையினால் பூமிக்கு அடித்துவரப்பட்டு, தாவரங்கள் அவற்றை உரமாக பயன்படுத்துகின்றன.

13வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடு ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அவ்வளவு குறைவாக இருந்து என்ன பயன் என்றா கேட்கிறீர்கள்? அது இல்லையென்றால் தாவரங்கள் இறந்துவிடும். தாவரங்கள் உட்கிரகிக்க அந்தச் சிறிய அளவு போதுமானது, அதற்கு பதிலாக தாவரங்கள் ஆக்ஸிஜனைத் தருகின்றன. மனிதர்களும் மிருகங்களும் ஆக்ஸிஜனை சுவாசித்து, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளிவிடுகின்றன. வளிமண்டலத்தில் அதிகளவான கார்பன்-டை-ஆக்ஸைடு இருந்தால் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஆபத்தாகிவிடும். அதன் அளவு குறைந்தால் தாவர வகைகள் வாழ முடியாது. தாவர, மிருக மற்றும் மனித வாழ்க்கைக்கு தேவையான என்னே அருமையான, துல்லியமான, சுயமாய் இயங்கும் சுழற்சி செயல்படுகிறது!

14வளிமண்டலம் உயிரைக் காப்பது மட்டுமல்ல, பாதுகாப்பான ஓர் உறையாகவும்கூட சேவிக்கிறது. தரையிலிருந்து சுமார் 24 கிலோமீட்டர் மேலே ஓசோன் என்ற மெல்லிய படலம் உள்ளது; அது சூரியனிலிருந்து வரும் ஆபத்தான கதிர்களை வடிகட்டிவிடுகிறது. ஓசோன் படலம் இல்லையென்றால் இந்தக் கதிர்கள் பூமியிலுள்ள உயிர்களைக் கொன்றுவிடலாம். எரி நட்சத்திரங்களின் தாக்குதலிலிருந்து பூமியைக் காப்பதும் இந்த வளிமண்டலமே. எரி நட்சத்திரங்கள் வளிமண்டலத்தினூடே பயணம் செய்கையில் எரிந்துவிடுவதால் அவற்றில் பெரும்பாலானவை தரையை வந்தடைவதே இல்லை; அவைதான் பார்ப்பதற்கு வானத்திலிருந்து எரிந்து விழும் நட்சத்திரங்களாக காட்சியளிக்கின்றன. வளிமண்டலம் இல்லையென்றால், கோடிக்கணக்கான எரி நட்சத்திரங்கள் பூமியின் பல பாகங்களைத் தாக்கி பெருமளவு உயிர் சேதமும் பொருள் சேதமும் ஏற்படுத்திவிடும்.

15வளிமண்டலம் பாதுகாப்பான ஓர் உறையாக இருப்பதோடு பூமியின் வெப்பம் விண்வெளியின் குளிரில் கறைந்துபோய் விடாதபடிக்கும் பாதுகாக்கிறது. வளிமண்டலமும்கூட புவியீர்ப்பின் காரணமாகவே பூமியைவிட்டு விலகிவிடாமல் அதன் இடத்தில் உள்ளது. இதை சாதிப்பதற்கு போதுமான அளவு புவியீர்ப்பு மட்டுமே உள்ளது; இதைவிட அதிகமாக இருந்தால் நம்மால் தாராளமாக நடமாட முடியாமல் போய்விடும்.

16வளிமண்டலம் உயிருக்கு அத்தியாவசியமானது மட்டுமல்ல, வர்ணஜாலம் புரியும் வானம் மனதைக் கொள்ளைக் கொள்ளும் தன்மையும் உடையது. அதன் நேர்த்தியும் பரப்பெல்லையும் கற்பனை வளத்திற்கே சவால்விடுகிறது. எல்லையற்ற சிறப்பும் வண்ணக்கோலங்களும் நிறைந்த வானம் பூமியைச் சூழ்ந்துள்ளது. தங்க முலாம் பூசிய கீழ்வானம், பொழுது விடிந்துவிட்டதை அறிவிக்கிறது. இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, சிவப்பு, ஊதா போன்ற பல வர்ணங்கள் பூசிய மேல்வானம், அந்த நாளுக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்புகிறது. ஓர் அருமையான வசந்த கால அல்லது கோடைகால வானில், அலைகடலென திரண்டுவரும் பஞ்சுபோன்ற மேகங்கள் தவழ்ந்து விளையாடுகின்றன. இலையுதிர் காலத்தில் காணப்படும் ஆட்டுமயிர் போன்ற சுருள் சுருளான மேகக்கூட்டங்கள் குளிர்காலம் வருவதை முன்னறிவிக்கின்றன. மாணிக்கக் கற்களை வாரியிறைத்தாற்போன்ற நட்சத்திரம் நிறைந்த இரவுநேர வானம் “கண்சிமிட்டி” நெஞ்சைக் கொள்ளைக் கொண்டுவிடுகிறது, நிலவொளியில் நனைந்த இரவு நேரம் மதிமயக்கும் அழகு கொண்டது.

17எந்தக் கோணத்தில் பார்த்தாலும், நம் பூமியின் வளிமண்டலம் வியப்பூட்டும் ஒன்றுதான்! இது, த நியூ இங்லண்ட் ஜர்னல் ஆஃப் மெடிஸன் என்பதில் ஓர் எழுத்தாளர் எழுதியது போலவே உள்ளது: “ஒட்டுமொத்தமாக பார்த்தால், வானம் ஓர் அற்புதகரமான படைப்பே. அது பிரயோஜனமானது, படைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுகிறது. இயற்கையிலுள்ள மற்ற எதையும் போலவே அதுவும் முழுமையாக நம்பத்தக்கது. அதன் அழகுக்கு அழகூட்ட நாம் என்ன செய்யலாம் என கற்பனையிலும்கூட நினைத்து பார்க்கமுடியாது என்றே நினைக்கிறேன். மிஞ்சி மிஞ்சிப் போனால், சில சமயங்களில் இங்கிருக்கும் ஒரு மேகத்தை கொஞ்ச தூரம் தள்ளிவைக்கலாம் அவ்வளவுதான்.”6 இந்தக் கூற்றைக் கேட்கையில், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இப்பேர்ப்பட்ட சிறப்புவாய்ந்த காரியங்களைக் கண்ட ஒரு மனிதனின் வார்த்தைகள் நம் நினைவுக்கு வருகின்றன. அவை, “பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைக[ள்]” என்பதை அவர் உணர்ந்தார். “வானங்களைச் சிருஷ்டித்து; அவைகளை விரித்[]” சிருஷ்டிகரைப் பற்றித்தான் அவர் கூறிக்கொண்டிருந்தார்.​—யோபு 37:16; ஏசாயா 42:⁠5.

தண்ணீர்​—⁠விசேஷித்த பொருள்

18உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பண்புகள் கொண்ட தண்ணீர் இந்தப் பூமியில் ஏராளம் உண்டு. மற்ற எந்தப் பொருளையும்விட இதுவே பெருமளவில் உள்ளது. அதன் நன்மையான பல்வேறு பண்புகளில் ஒன்று, பூமியின் சீதோஷ்ண நிலையில் அது வாயு (நீராவி), திரவம் (தண்ணீர்), திடப்பொருள் (பனிக்கட்டி) என்ற மூன்று நிலைகளிலும் காணப்படுவதே ஆகும். அதோடு, மனிதர்கள், மிருகங்கள் மற்றும் தாவரங்களுக்கு தேவைப்படும் ஆயிரக்கணக்கான மூலப் பொருட்கள் இரத்தம் அல்லது தாவரச் சாறு (sap) போன்ற ஒரு திரவத்தில்தான் எடுத்துச் செல்லப்பட வேண்டும். இதற்கு மிகவும் பொருத்தமான திரவம் தண்ணீர் மட்டுமே, ஏனென்றால் மற்ற எந்த திரவத்தையும்விட அதிகமான பொருட்களைக் கரைக்கும் தன்மை அதற்கு உண்டு. தண்ணீர் இல்லையேல் ஊட்டச்சத்து இல்லை, ஏனென்றால் உயிரினங்கள் அனைத்தும் உணவுப் பொருட்களைக் கரைக்க தண்ணீரையே சார்ந்துள்ளன.

19உறையும் தன்மையிலும்கூட தண்ணீர் விசேஷித்தது. குளங்களிலும் கடல்களிலும் உள்ள தண்ணீர் குளிரடைகையில் பாரமாகி அமிழ்கிறது. இதன் காரணமாக, கீழே உள்ள பாரம் குறைந்த, வெதுவெதுப்பான தண்ணீர் மேலெழும்புகிறது. ஆனால், தண்ணீர் உறைநிலையை அடைகையில் இந்தச் செயல் அப்படியே தலைகீழாக மாறுகிறது! இப்போது குளிரடைந்த தண்ணீர் பாரம் குறைந்து மேலெழும்புகிறது. பனிக்கட்டியாக உறைகையில் அது மிதக்கிறது. இந்தப் பனிக்கட்டி, கீழே உள்ள வெதுவெதுப்பான தண்ணீர் உறைந்துபோகாமல் பாதுகாக்கும் வெப்பத்தடையாக செயல்படுகிறது; இவ்வாறு தண்ணீரில் வாழும் ஜீவராசிகள் உயிர் பிழைக்கின்றன. இந்த விசேஷித்த பண்பு இல்லையென்றால் ஒவ்வொரு குளிர்காலத்திலும் அதிகமதிகமான பனிக்கட்டி உருவாகி கீழே மூழ்கிவிடும்; அவை கீழே இருப்பதால் கோடைகால சூரியன் அவற்றை உருக்கவும் முடியாது. அதனால் வெகு சீக்கிரத்தில், ஆறுகள், குளங்கள், கடல்கள் ஆகியவற்றிலுள்ள பெருமளவான தண்ணீர் உறைந்த பனிக்கட்டி ஆகிவிடும். இந்தப் பூமியே, உயிர் வாழ முடியாதளவுக்கு உறைந்த பனிக்காடு ஆகிவிடும்.

20ஆறுகள், குளங்கள், கடல்கள் ஆகியவற்றிலிருந்து வெகு தொலைவில் அமைந்த பகுதிகள் உயிர்காக்கும் தண்ணீரைப் பெறும் விதமும் விசேஷித்தது. சூரியனின் வெப்பத்தினால் ஒவ்வொரு வினாடியும் ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் நீராவியாக மாறுகிறது. காற்றைவிட எடை குறைவான இந்த நீராவி மேலே மிதந்துசென்று வானத்தில் மேகங்களை உருவாக்குகிறது. இந்த மேகங்கள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு சரியான சூழ்நிலையில் இந்த ஈரப்பதம் மழையாக பொழிகிறது. மழைத் துளிகளும் ஒரு குறிப்பிட்ட அளவு வரைதான் பெரிதாகின்றன. இப்படி இல்லாமல் மழைத் துளிகள் பூதாகரமான அளவுகளில் விழுந்தால் எப்படியிருக்கும்? கேட்கவா வேண்டும், சர்வ நாசம்தான்! மாறாக, மழை சரியான அளவிலும் மிகவும் மென்மையாகவும் பெய்கிறது. அதனால் ஒரு சிறிய புல் அல்லது மிகவும் மென்மையான மலர்கூட சேதமடைவதில்லை. என்னே திறமையான, கரிசனையான வடிவமைப்பைத் தண்ணீரில் காண முடிகிறது!​—சங்கீதம் 104:1, 10-14; பிரசங்கி 1:⁠7.

‘செழுமையான விளை நிலம்’

21பைபிளின் ஓர் எழுத்தாளர் கடவுளைப் பற்றி, “தம்முடைய ஞானத்தினால் செழுமையான விளை நிலத்தை உறுதியாக ஸ்தாபித்தவர்” என்று விவரித்தார். (எரேமியா 10:12, NW) பூமியின் மண்ணாகிய இந்தச் ‘செழுமையான விளை நிலம்’ மிகவும் வியக்கத்தக்கதே. அதன் அமைப்பில் ஞானத்தைக் காணமுடிகிறது. தாவரங்கள் வளர தேவைப்படும் தன்மைகள் நிலத்தில் உள்ளன. தாவரங்கள் நிலத்திலுள்ள ஊட்டச்சத்தையும் தண்ணீரையும் காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடையும் கிரகித்து ஒளியின் உதவியுடன் உணவு தயாரிக்கின்றன.​—எசேக்கியேல் 34:26, 27-ஐ ஒப்பிடுக.

22மனிதர்களும் மிருகங்களும் உயிர் வாழத் தேவையான இரசாயன தனிமங்களும் நிலத்தில் உள்ளன. ஆனால் இந்தத் தனிமங்களை உடலுக்கு உகந்தவையாக மாற்றுவதும் தாவரங்களே. இதற்கு உதவிசெய்ய நுண்ணியிரிகள் உள்ளன. ஒரு சிறிய கரண்டியளவு மண்ணிலேயே அவற்றில் கோடிக்கணக்கானவை உள்ளன, அதுவும் எண்ணற்ற விதவிதமான வடிவங்களில்! இவை சருகுகள், புல், மற்ற கழிவுப் பொருட்கள் போன்றவற்றை உபயோகமுள்ளவையாக மாற்ற உழைக்கின்றன அல்லது தண்ணீரும் காற்றும் உள்ளே நுழைய முடியும் விதத்தில் நிலத்தை தளர்த்திவிடுகின்றன. சில பாக்டீரியாக்கள் நைட்ரஜனை, தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான சேர்மங்களாக மாற்றுகின்றன. நிலத்தைக் குடைந்து செல்லும் புழுக்களும் பூச்சிகளும் தொடர்ச்சியாக வேலைசெய்வதால் கீழ்மண் துகள்கள் மேலே கொண்டுவரப்பட்டு மேல்மண் அதிக வளம் பெறுகிறது.

23தவறாக பயன்படுத்தப்படுதல், இன்னும் மற்ற காரணங்கள் நிமித்தமாக சிறிது நிலம் நாசமடைந்திருப்பது உண்மையே. ஆனால் இச்சேதம் நிரந்தரமானதல்ல. இந்தப் பூமிக்கு தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் வியக்கத்தக்க சக்தி உள்ளது. நெருப்பு அல்லது எரிமலை வெடிப்புகள் நிலத்தை பாழாக்கிய இடங்களில் இதைத் தெளிவாக பார்க்க முடிகிறது. காலப்போக்கில் இந்த இடங்களில் தாவரங்கள் செழித்தோங்க ஆரம்பித்துவிடுகின்றன. மேலும், தூய்மைக்கேடு தடுக்கப்பட்டால் பாழான பொட்டல் காடுகூட மறுபடியும் பசுமை கொஞ்சும் நிலைக்கு திரும்பிவிடும். எல்லாவற்றையும்விட முக்கியமாக, நிலம் கேடடையும் அடிப்படை பிரச்சினையை நீக்கிப்போடுவதற்காக, “பூமியைக் கெடுத்தவர்களைக் கெடு”த்துப்போட வேண்டுமென்பதே இப்பூமியின் சிருஷ்டிகருடைய நோக்கமாகும். அதோடு, ஆதியிலே மனிதவர்க்கத்தின் நித்திய வீடாக இப்பூமியைத் தாம் உருவாக்கியதைப் போலவே இதைப் பாதுகாப்பதும் அவருடைய நோக்கம்.​—வெளிப்படுத்துதல் 11:18; ஏசாயா 45:⁠18.

வெறும் தற்செயல் நிகழ்ச்சி அல்ல

24இதுவரை சொல்லப்பட்டவற்றை மனதில் வைத்து பின்வரும் காரியங்களையும் சிந்தித்துப் பாருங்கள்: பூமிக்கு ஒளி, உஷ்ணம் ஆகியவற்றின் வடிவில் சக்தியைத் தரும் ஊற்றுமூலமாகிய சூரியனிலிருந்து அதை சரியான தூரத்தில் இருக்க செய்தது குருட்டுத்தனமான தற்செயல் நிகழ்ச்சியா? பூமி, சூரியனைச் சுற்றி சரியான வேகத்திலும், 24 மணிநேரத்திற்கு ஒரு முறை அதன் அச்சில் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதும், சரியான கோணத்தில் சாய்ந்திருப்பதும் வெறுமனே தற்செயலாக நிகழ்ந்தனவா? சரியான அளவு வாயுக்களின் கலவையுடன், உயிர் வாழ உதவும், பாதுகாப்பளிக்கும் வளிமண்டலத்தைப் பூமிக்கு தந்தது தற்செயல் நிகழ்ச்சியா? உணவு வளர தேவையான நிலமும் தண்ணீரும் இந்தப் பூமியில் இருப்பதற்கு காரணம் தற்செயல் நிகழ்வா? அருஞ்சுவைகளும் விதவித வண்ணங்களும் நிறைந்த இத்தனை அநேக பழங்கள், காய்கறிகள், மற்ற உணவுகள் ஆகியவை தானாகவே வந்துவிட்டனவா? வானம், மலைகள், நீரோடைகள், ஏரிகள், பூக்கள், மரங்கள், செடிகள், இன்னுமநேக ஆனந்தம் தரும் உயிரினங்கள் போன்றவற்றிற்கு கொள்ளை அழகைக் கொட்டிக் கொடுத்தது தற்செயல் நிகழ்ச்சியா?

25இவையெல்லாம் குருட்டுத்தனமான தற்செயல் நிகழ்ச்சியால் வந்திருக்க முடியாது என்ற முடிவுக்கே அநேகர் வந்துள்ளனர். மாறாக, கவனமான, புத்திக்கூர்மையுள்ள, நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டதற்கான தெள்ளத்தெளிவான அத்தாட்சியையே எங்கும் காண்கின்றனர். இதை உணர்ந்தவர்களாய் இவற்றின் நன்மைகளைப் பெறுகிறவர்கள், “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்”துவதே நியாயம் என நினைக்கிறார்கள். ஏனென்றால், அவரே “வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவ[ர்].”​வெளிப்படுத்துதல் 14:⁠7.

[கேள்விகள்]

1, 2. நம் கிரகமாகிய பூமியைப் பார்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

3. பூமி என்ற புத்தகம் நம் கிரகத்தைப் பற்றி என்ன சொல்கிறது, அதற்கு காரணமென்ன?

4. பூமியின் ஈடிணையற்ற தனிச்சிறப்பை நிரூபிக்க என்ன உதாரணத்தைப் பயன்படுத்தலாம், நாம் என்ன முடிவுக்கு வருவோம்?

5. பைபிளிலுள்ள எந்த உதாரணம் நம் கிரகமாகிய பூமிக்கு மிகவும் பொருத்தமானது?

6. ஞானமாக வடிவமைக்கப்பட்டதற்கான அத்தாட்சியை இந்தப் பூமியில் காணமுடிகிறது என சிலர் எவ்வாறு ஒப்புக்கொண்டுள்ளனர்?

7. சூரியனிலிருந்து மிகவும் சரியான அளவு ஆற்றலை ஒளியாகவும் வெப்பமாகவும் இந்தப் பூமி எவ்வாறு பெறுகிறது?

8. பூமி சூரியனைச் சுற்றிவரும் வேகம் ஏன் அவ்வளவு முக்கியமானது?

9. பூமி அதன் அச்சில் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுழல வேண்டியது ஏன் முக்கியம்?

10. பூமி சாய்ந்திருப்பதால் சீதோஷ்ண நிலையும் பயிர்களும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன?

11. பூமியின் வளிமண்டலத்தை விசேஷித்ததாக்குவது எது?

12. (அ) மிகவும் சரியான அளவு ஆக்ஸிஜன் மட்டுமே இருக்கிறது என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது? (ஆ) நைட்ரஜனின் முக்கிய வேலை என்ன?

13. உயிர் சுழற்சியில் சரியான அளவு கார்பன்-டை-ஆக்ஸைடின் பங்கு என்ன?

14, 15. வளிமண்டலம் பாதுகாப்பான ஓர் உறையாக எப்படி சேவிக்கிறது?

16. வானத்தின் அழகைப் பற்றி என்ன சொல்லலாம்?

17. வானத்தைப் பற்றி ஓர் எழுத்தாளர் என்ன சொன்னார், அதற்கான பாராட்டு யாரைச் சேரும்?

18. தண்ணீரை விசேஷித்த திரவமாக்கும் அதன் சில பண்புகள் யாவை?

19. உறையும் தண்ணீருக்கு என்ன விசேஷமான பண்பு உள்ளது, அது ஏன் அவ்வளவு முக்கியம்?

20. மழை எப்படி உருவாகிறது, மழைத் துளிகளின் அளவு திறமையான வடிவமைப்பை எவ்வாறு சுட்டிக்காட்டுகிறது?

21, 22. ‘செழுமையான விளை நிலத்தின்’ அமைப்பில் என்ன ஞானம் வெளிப்படுகிறது?

23. பழைய நிலைக்கு திரும்பும் என்ன சக்திகள் இந்த நிலத்திற்கு உண்டு?

24. குருட்டுத்தனமான தற்செயல் நிகழ்ச்சி பற்றி என்னென்ன கேள்விகள் கேட்கலாம்?

25. ஈடற்ற நம் கிரகத்தைப் பற்றி அநேகர் என்ன முடிவுக்கு வந்துள்ளனர்?

[பக்கம் 129-ன் சிறு குறிப்பு]

“பூமி இப்பிரபஞ்சத்தின் ஓர் அற்புதம், ஈடற்ற ஒரு கோளம்”

[பக்கம் 135-ன் சிறு குறிப்பு]

ஆக்ஸிஜன் இல்லையேல் மனிதர்களும் மிருகங்களும் சில நிமிடங்களில் இறக்க நேரிடும்

[பக்கம் 137-ன் சிறு குறிப்பு]

“வானம் ஓர் அற்புதகரமான படைப்பே”

[பக்கம் 137-ன் சிறு குறிப்பு]

தண்ணீர் இல்லையேல் மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடும்

[பக்கம் 141-ன் சிறு குறிப்பு]

இந்தப் பூமி, நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டதற்கான தெள்ளத்தெளிவான அத்தாட்சியைக் கொண்டுள்ளது

[பக்கம் 128-ன் முழுபடம்]

[[பக்கம் 131-ன் படம்]

பூமி தன் கோளப் பாதையில் சுற்றிவரும் வேகத்தின் காரணமாக சூரியனிலிருந்து சரியான தூரத்தில் உள்ளது

[பக்கம் 136-ன் படம்]

இரவுநேர வானம் நெஞ்சைக் கொள்ளைக் கொள்ளும் தன்மை படைத்தது

[பக்கம் 138-ன் படம்]

தண்ணீர் குளிரடைகையில் அமிழ்கிறது ஆனால் உறைவதற்கு சற்றுமுன்னர் மேலெழும்புகிறது. இதனால் இந்தப் பூமி ஓர் உறைந்த கிரகமாக மாறுவது தடுக்கப்படுகிறது

[பக்கம் 139-ன் படம்]

சூரியனிலிருந்து ஒளி, காற்றிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடு, நிலத்திலிருந்து தண்ணீர் மற்றும் இரசாயன தனிமங்கள் அற்புதகரமாக ஒன்றுசேர்ந்து உணவு தயாராகிறது

[பக்கம் 140-ன் படங்கள்]

இயல்பான நிலைக்கு திரும்பும் அற்புதகரமான சக்தி இப்பூமிக்கு உண்டு. சிறிது காலத்திலேயே புதிய வளர்ச்சி ஏற்பட ஆரம்பிக்கிறது

[பக்கம் 141-ன் படம்]

குருட்டுத்தனமான தற்செயல் நிகழ்வா நம்முடைய சந்தோஷத்திற்காக இத்தனை அநேக அருமையான காரியங்களைக் கொடுத்தது?

[பக்கம் 130-ன் அட்டவணை/படம்]

எந்த வீட்டையும் உருவாக்க ஒரு வடிவமைப்பாளரும் கட்டட கலைஞரும் தேவையென்றால் அருமையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட, கடும் சிக்கல் வாய்ந்த நம் பூமிக்கும் அப்படிப்பட்ட ஒருவர் தேவையில்லையா?

[அட்டவணை]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

செங்கல்

கண்ணாடி ஓடு

மர ஓடுகள்

வடிகால்

வடிகால் குழாய்

வெளிப்புற

பூச்சு

மரப்பட்டை

மர தடுப்பு

A, A-10

13, 1

12, 12

E, E, E, E

[பக்கம் 132, 133-ன் வரைப்படம்/படங்கள்]

பூமி சாய்ந்திருப்பதன் காரணமாக கண்ணைக் கவரும் பருவகாலங்களைப் பெறுகிறோம்

கோடைகாலம்

இலையுதிர் காலம்

குளிர்காலம்

வசந்த காலம்

[வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

23.5 டிகிரி சாய்வு

[பக்கம் 134-ன் வரைப்படம்/படங்கள்]

சில வாயுக்கள் தனியாய் இருக்கையில் நச்சுத்தன்மை வாய்ந்தவை, ஆனால் வளிமண்டலத்தில் மற்றவற்றோடு கலந்திருக்கையில் அவை உயிர் காக்கின்றன

பூமியின் வளிமண்டலத்தின் கலவை

78% நைட்ரஜன்

21% ஆக்ஸிஜன்

1% மற்ற அனைத்து வாயுக்கள்

[வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

வளிமண்டலமானது, கொடிய கதிர்வீச்சுகளிலிருந்தும் எரி நட்சத்திரங்களிலிருந்தும் இப்பூமியைப் பாதுகாக்கிறது