Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவும் வானசாஸ்திரிகளும்

இயேசுவும் வானசாஸ்திரிகளும்

அதிகாரம் 7

இயேசுவும் வானசாஸ்திரிகளும்

கிழக்கிலிருந்து அநேக மனிதர் வருகிறார்கள். அவர்கள் வான சாஸ்திரிகள்—நட்சத்திரங்களின் நிலையைக் கணித்து அர்த்தம் சொல்லுகிறவர்களாகத் தங்களை உரிமைப் பாராட்டும் மக்கள். கிழக்கில் அவர்களுடைய வீட்டில் இருந்தபோது, ஒரு புதிய நட்சத்திரத்தைப் பார்த்து அதைப் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டருக்குப் பின்பற்றி எருசலேமுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

வானசாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்தபோது, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்” என்று அவர்கள் கேட்கிறார்கள்.

எருசலேமிலிருக்கும் ஏரோது ராஜா, இதைக் கேள்விப்பட்டு மிகவும் கலக்கமடைகிறான். எனவே அவன் பிரதான ஆசாரியர்களை கூப்பிட்டு, கிறிஸ்து எங்கே பிறப்பார் என்று கேட்கிறான். தங்களுடைய பதிலை வேதவசனங்களை ஆதாரமாகக் கொண்டு, “பெத்லகேமில் பிறப்பார்” என்று பதிலளிக்கிறார்கள். அதைக் கேட்டபோது ஏரோது வானசாஸ்திரிகளை தன்னிடம் கூட்டிவரச் செய்து அவர்களை நோக்கி: “நீங்கள் போய், பிள்ளையைக் குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்து கொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள்” என்றான். ஆனால் அந்தப் பிள்ளையைக் கொன்று போடுவதற்காக அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே ஏரோதின் விருப்பம்!

அவர்கள் போனபிறகு, ஓர் அதிசயமான காரியம் நடக்கிறது. கிழக்கில் அவர்கள் பார்த்த நட்சத்திரம், அவர்களுக்கு முன்னே பிரயாணம் செய்கிறது. தெளிவாகவே, இது சாதாரண நட்சத்திரம் அல்ல, ஆனால் இது அவர்களை வழிநடத்துவதற்காக விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்டது. யோசேப்பும் மரியாளும் தங்கியிருக்கும் வீட்டின் மேல் நிற்கும் வரை வான சாஸ்திரிகள் அதை பின்தொடருகிறார்கள்.

வானசாஸ்திரிகள் வீட்டிற்குள் நுழையும்போது, மரியாளையும் அவளுடைய இளம் பிள்ளையாகிய இயேசுவையும் பார்க்கிறார்கள். அப்போது அவர்களெல்லாரும் அவருக்கு முன்பாக பணிந்து கொள்கிறார்கள். அவர்களுடைய பைகளைத் திறந்து, பொன்னையும், தூபவர்க்கத்தையும், வெள்ளைப்போளத்தையும் பரிசுகளாக கொடுக்கிறார்கள். அதற்குப் பிறகு, அவர்கள் பிள்ளை எங்கே இருக்கிறது என்று ஏரோதிடம் சொல்ல திரும்பும் போது, அவர்கள் அங்கே போகவேண்டாமென்று கடவுளால் ஒரு தரிசனத்தில் எச்சரிக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் தங்களுடைய சொந்த தேசத்திற்கு வேறு வழியாக செல்கிறார்கள்.

வானசாஸ்திரிகளை வழிநடத்திய வானத்தில் நகர்ந்துசென்ற நட்சத்திரத்தை ஏற்பாடு செய்தது யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அந்த நட்சத்திரம் அவர்களை பெத்லகேமிலிருந்த இயேசுவினிடமாக நேரடியாக வழிநடத்தவில்லை என்பதை நினைவில் வையுங்கள். அதற்கு பதிலாக, அவர்கள் இயேசுவை கொல்ல நினைத்த எருசலேமிலிருந்த ஏரோது ராஜாவோடு தொடர்புகொள்ள வைத்தது. கடவுள் குறுக்கிட்டு ஏரோது ராஜாவிடம் இயேசு எங்கிருக்கிறார் என்று சொல்ல வேண்டாமென்று வானசாஸ்திரிகளை எச்சரிக்காமலிருந்திருந்தால் அவன் அப்படி செய்திருப்பான். கடவுளுடைய எதிரியான பிசாசாகிய சாத்தான் இயேசுவை கொல்ல விரும்பினதால் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற அந்த நட்சத்திரத்தை உபயோகித்தான். மத்தேயு 2:1-12; மீகா 5:2.

▪ வானசாஸ்திரிகள் பார்த்த அந்த நட்சத்திரம் ஒரு சாதாரண நட்சத்திரம் அல்ல என்று எது காட்டுகிறது?

▪ வானசாஸ்திரிகள் இயேசுவை பார்த்த சமயம் அவர் எங்கே இருக்கிறார்?

▪ வானசாஸ்திரிகளை வழிநடத்த சாத்தான் அந்த நட்சத்திரத்தை ஏற்பாடு செய்தான் என்று நாம் அறிந்திருப்பது ஏன்?