Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எருசலேமுக்கு ஓர் இரகசிய பயணம்

எருசலேமுக்கு ஓர் இரகசிய பயணம்

அதிகாரம் 65

எருசலேமுக்கு ஓர் இரகசிய பயணம்

அது பொ.ச. 32-ன் இலையுதிர் காலம். கூடாரப் பண்டிகை சமீபமாயிருக்கிறது. யூதர்கள் அவரைக் கொலை செய்ய முயற்சி செய்த பொ.ச. 31-ன் பஸ்காவிலிருந்து, இயேசு தம் கிரியைகளை அதிகமாக கலிலேயாவில் கட்டுப்படுத்தியிருக்கிறார். அச்சமயத்திலிருந்து யூதர்களின் மூன்று வருடாந்தர பண்டிகைகளுக்கு ஆஜராவதற்கு மட்டுமே அநேகமாக இயேசு எருசலேமுக்குச் செல்கிறார்.

இயேசுவின் சகோதரர்கள் இப்பொழுது அவரை துரிதப்படுத்துகிறார்கள்: “இவ்விடம் விட்டு யூதேயாவுக்குப் போம்.” எருசலேம் யூதேயாவின் முக்கிய நகரமாகவும், முழு தேசத்துக்கும் வணக்க மையமாகவும் இருக்கிறது. அவருடைய சகோதரர்கள் விவாதிக்கிறார்கள்: “பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்ய மாட்டான்.”

யாக்கோபு, சீமோன், யோசே, யூதா ஆகியோர் தங்களுடைய மூத்த சகோதரனாகிய இயேசு, உண்மையில் மேசியா என்பதாக நம்பாதிருந்தாலும், பண்டிகைக்காக கூடி வந்திருக்கும் அனைவருக்கும் அவர் தம்முடைய அற்புதமான வல்லமைகளை காண்பிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். என்றபோதிலும், இயேசு அபாயத்தை அறிந்தவராய் இருக்கிறார். “உலகம் உங்களைப் பகைக்க மாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சி கொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது” என்று சொல்கிறார். ஆகையால் இயேசு தம் சகோதரர்களிடம் சொல்கிறார்: “நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; . . . நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை.”

கூடாரப் பண்டிகை ஓர் ஏழு-நாள் கொண்டாட்டமாக இருக்கிறது. எட்டாம் நாளில் பயபக்தியான கிரியைகளோடு அது முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது. அந்தப் பண்டிகை வேளாண்மை ஆண்டின் முடிவைக் குறிப்பிடுகிறது, அது அதிக களிகூருவதற்கும் நன்றி செலுத்துவதற்குமுரிய காலமாயிருக்கிறது. பயணம் செய்யும் முக்கிய தொகுதியினரோடு ஆஜராவதற்கு இயேசுவின் சகோதரர்கள் புறப்பட்டு அநேக நாட்களுக்குப் பின், பொது மக்களின் பார்வைக்கு விலகி, அவரும் அவருடைய சீஷர்களும் இரகசியமாய் செல்கின்றனர். அநேக ஜனங்கள் யோர்தான் நதிக்கு அருகே செல்லும் வழியாய் செல்வர். அந்த வழியைத் தவிர்த்து அவர்கள் சமாரியாவுக்குள் செல்லும் வழியை எடுக்கின்றனர்.

இயேசுவுக்கும் அவரோடு செல்பவர்களுக்கும் ஒரு சமாரிய கிராமத்தில் தங்குவதற்கு இடம் தேவையாயிருப்பதால், தயாரிப்புகளைச் செய்வதற்கு அவர் தூதுவர்களை முன்னே அனுப்புகிறார். என்றபோதிலும், ஜனங்கள், அவர் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்ததும் இயேசுவுக்கு எதையும் செய்ய மறுக்கின்றனர். கடுங்கோபமடைந்தவர்களாய், யாக்கோபும் யோவானும் கேட்கின்றனர்: “ஆண்டவரே, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா?” அப்பேர்ப்பட்ட ஒரு காரியத்தை யோசனையாக கூறியதால், இயேசு அவர்களைக் கண்டிக்கிறார், அவர்கள் மற்றொரு கிராமத்துக்கு பயணம் செய்கின்றனர்.

சாலை வழியாய் அவர்கள் நடந்து சென்று கொண்டிருக்கையில், ஒரு வேதபாரகன் இயேசுவிடம் சொல்கிறான்: “போதகரே, (NW) நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன்.”

“நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை” என்று இயேசு பிரதிபலிக்கிறார். அந்த வேதபாரகன் அவரைப் பின்பற்றுபவனாக ஆனால், அவன் இன்னல்களை அனுபவிப்பான் என்று இயேசு விளக்குகிறார். இம்முறையான வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதற்கு வேதபாரகன் அதிக பெருமையுள்ளவனாக இருக்கிறான் என்று குறிப்பதாக தெரிகிறது.

மற்றொரு மனிதனிடம் இயேசு சொல்கிறார்: “என்னைப் பின்பற்றி வா.”

“முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம் பண்ண எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும்” என்று அந்த மனிதன் பதிலளிக்கிறான்.

“மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும்” என்று இயேசு பதிலளிக்கிறார், ஆனால் “நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கி.” அந்த மனிதனின் தகப்பன் இன்னும் மரிக்கவில்லை என்பது தெளிவாக இருக்கிறது, ஏனென்றால் அவ்வாறு மரித்திருந்தால், அவருடைய மகன் இங்கேயிருந்து இயேசுவுக்கு செவிகொடுத்துக் கொண்டிருப்பது கூடாத காரியமாயிருக்கும். தன் தகப்பனின் மரணம் வரை காத்திருப்பதற்கு மகன் நேரம் கேட்பது தெளிவாக இருக்கிறது. கடவுளுடைய ராஜ்யத்தை தன் வாழ்க்கையில் முதலிடத்தில் வைப்பதற்கு அவன் தயாராயில்லை.

எருசலேமை நோக்கி அவர்கள் சாலையில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கையில், மற்றொரு மனிதன் இயேசுவிடம் சொல்கிறான்: “ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக் கொண்டு வரும்படி எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும்.”

அதற்கு இயேசு பதிலளிக்கிறார்: “கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல.” இயேசுவின் சீஷர்களாக ஆக விரும்புகிறவர்கள் ராஜ்ய சேவையின் மேல் தங்கள் கண்களை ஒருமுகப்படுத்த வேண்டும். உழுபவன் தொடர்ந்து நேராகப் பார்த்துச் செல்லவில்லையென்றால் வரிவரியான நீண்ட பள்ளங்கள் கோணலாகி விடுவது போல, இந்தப் பழைய ஒழுங்கு முறையை பின்னிட்டுப் பார்க்கிற எவரும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் பாதையிலிருந்து இடறி விழுவர். யோவான் 7:2–10; லூக்கா 9:51–62; மத்தேயு 8:19–22.

▪ இயேசுவின் சகோதரர்கள் யார், அவர்கள் அவரைக் குறித்து எவ்வாறு உணருகின்றனர்?

▪ சமாரியர்கள் ஏன் அவ்வளவு முரட்டுத்தனமாய் இருக்கின்றனர், யாக்கோபும், யோவானும் என்ன செய்ய விரும்புகின்றனர்?

▪ என்ன மூன்று சம்பாஷணைகளை இயேசு சாலையில் கொண்டிருக்கிறார், சுய–தியாகமான சேவையின் அவசியத்தை அவர் எவ்வாறு அழுத்திக் காண்பிக்கிறார்?