கர்ப்பிணி ஆனால் திருமணமாகாதவள்
அதிகாரம் 4
கர்ப்பிணி ஆனால் திருமணமாகாதவள்
மரியாள் கருவுற்று மூன்றாம் மாதத்தில் இருக்கிறாள். கருவுற்ற ஆரம்ப காலப் பகுதியை எலிசபெத்துடன் செலவழித்தாள் என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள், ஆனால் இப்பொழுது வீட்டுக்கு, நாசரேத்துக்கு திரும்பி வந்திருக்கிறாள். விரைவில் அவளுடைய நிலைமை அவளின் சொந்த பட்டணத்திலுள்ள பொது மக்களுக்கு தெரிய வரும். அவள் உண்மையிலேயே ஓர் இக்கட்டான நிலையில் இருக்கிறாள்!
நிலைமையை மோசமாக்கியது என்னவென்றால் தச்சனாகிய யோசேப்புக்கு மனைவியாவதற்கு மரியாள் நிச்சயிக்கப்பட்டிருந்தாள். இஸ்ரவேலுக்கு கடவுளுடைய சட்டத்தின் கீழ் ஓர் ஆணுக்கு நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண் தன் விருப்பத்தோடு மற்றொரு ஆணோடு பாலுறவு கொண்டால் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்பதை அவள் அறிந்திருக்கிறாள். அவள் எவ்வாறு தன் கருவுற்ற நிலையை யோசேப்புக்கு விளக்க முடியும்?
மரியாள் மூன்று மாதங்கள் சென்றுவிட்டிருந்ததால் யோசேப்பு அவளைக் காண்பதற்கு ஆவலாய் இருக்கிறார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். அவர்கள் சந்திக்கும் போது மரியாள் ஒருவேளை அவருக்கு செய்தியை வெளியிடக்கூடும். கடவுளுடைய பரிசுத்த ஆவியினால் அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதை விளக்க தன்னால் ஆகக்கூடிய மிகச் சிறந்ததை அவள் ஒருவேளை செய்யலாம். ஆனால், நீங்கள் கற்பனை செய்கிறபடி, யோசேப்புக்கு நம்புவதற்கு இது ஒரு மிகக் கடினமான காரியமாக இருக்கிறது.
மரியாளுக்கு இருக்கும் மிகச் சிறந்த நற்பெயர் யோசேப்புக்குத் தெரியும். அவர் அவளை அன்பாக நேசிக்கிறார் என்பதுங்கூட தெளிவாயிருக்கிறது. என்றபோதிலும், அவள் என்ன உரிமைப்பாராட்டிக் கொண்டாலும், உண்மையில் அவள் ஏதோ ஒரு மனிதனால் கருவுற்றிருக்கிறாள் என்பதாக தோன்றுகிறது. அப்படியிருந்தாலும் யோசேப்பு அவள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்றோ அல்லது பொதுமக்கள் எதிரில் அவமானப்படுத்தப்படவோ விரும்பவில்லை. ஆகையால் அவளை இரகசியமாக விவாகரத்து செய்யவேண்டுமென்று தன் மனதில் முடிவெடுக்கிறார். அந்நாட்களில் திருமணம் செய்து கொள்வதாக நிச்சயித்துக் கொண்ட நபர்கள் திருமணமானவர்களாக நோக்கப்பட்டனர். ஒரு திருமண நிச்சய ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு விவாகரத்து செய்வது தேவைப்பட்டது.
பின்னர், இந்த விஷயங்களை இன்னும் சிந்தித்துக் கொண்டிருக்கையில், யோசேப்பு உறங்க செல்கிறார். யெகோவாவின் தூதன் ஒரு கனவிலே அவருக்கு தோன்றி சொல்கிறார்: “உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனை பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.”
யோசேப்பு விழித்தெழுந்த போது, அவர் எவ்வளவு நன்றியுள்ளவராயிருக்கிறார்! தாமதமின்றி தேவதூதன் என்ன கட்டளையிட்டாரோ அதன்படியே அவர் செய்கிறார். அவர் மரியாளை தன் வீட்டுக்கு கூட்டிச் செல்கிறார். யோசேப்பும் மரியாளும் இப்பொழுது அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற அறிவிப்பைக் கொடுக்கும் வகையில் இந்தப் பொதுப்படையான செயல் ஒரு திருமண விழாவாக சேவிக்கிறது. ஆனால் மரியாள் இயேசுவை கர்ப்பத்தில் கொண்டிருக்கையில் யோசேப்பு அவளுடன் பாலுறவு கொள்ளவில்லை.
பாருங்கள்! மரியாள் பிள்ளையோடு பாரமாக இருக்கிறாள், என்றபோதிலும் யோசேப்பு அவளை ஒரு கழுதையின் மேல் ஏற்றுகிறார். அவர்கள் எங்கே செல்கிறார்கள், மரியாள் பிள்ளையை பெற்றெடுக்க தயாராக இருக்கும் சமயத்தில் அவர்கள் ஏன் ஒரு பயணத்தை மேற்கொள்கின்றனர்? லூக்கா 1:39–41, 56; மத்தேயு 1:18–25; உபாகமம் 22:23, 24.
▪ மரியாள் கர்ப்பிணியாய் இருக்கிறாள் என்பதை அறிகையில் யோசேப்பின் மனநிலை என்னவாக இருக்கிறது? ஏன்?
▪ அவர்கள் இன்னும் திருமணமாகாதவர்களாக இருக்கையில் யோசேப்பு எவ்வாறு மரியாளை விவாகரத்து செய்யமுடியும்?
▪ யோசேப்பு மற்றும் மரியாளின் திருமண விழாவாக எந்தப் பொதுப்படையான செயல் சேவிக்கிறது?