விவாதத்தின் முக்கிய நபர்
அதிகாரம் 41
விவாதத்தின் முக்கிய நபர்
சீமோன் வீட்டில் இயேசு உபசரிக்கப்பட்டதற்குப்பின், சீக்கிரத்திலேயே, அவர் கலிலேயாவுக்கு இரண்டாவது பிரசங்க பிரயாணத்தை ஆரம்பித்துவிடுகிறார். இந்தப் பிராந்தியத்துக்கு முதல் தடவை பிரயாணப்பட்டு வந்தபோது, அவருடைய முதலாவது சீஷர்களான பேதுரு, அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவான் அவருடனிருந்தார்கள். ஆனால் இப்பொழுது 12 அப்போஸ்தலர்களும் ஒரு சில பெண்களும் அவரோடு செல்கிறார்கள். இவர்களில், மகதலேனா மரியாளும், சூசன்னாளும், ஏரோது ராஜாவின் காரியக்காரனின் மனைவியான யோவன்னாளும் இருந்தனர்.
இயேசுவினுடைய ஊழியத்தின் முன்னேற்ற வேகம் தீவிரமடைகையில், அவருடைய நடவடிக்கைகளைப் பற்றிய விவாதமும் தீவிரமடைகிறது. பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் இயேசுவினிடத்தில் கொண்டுவரப்படுகிறான். பிசாசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக இயேசு அவனை சொஸ்தமாக்கிய போது, ஜனக்கூட்டத்தார் மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள். அவர்கள், “தாவீதின் குமாரன் இவர்தானோ?” என்று சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
இயேசு தங்கியிருந்த வீட்டைச் சுற்றி ஜனங்கள் திரளான எண்ணிக்கையில் கூடிவந்ததால் அவருக்கும் அவருடைய சீஷர்களுக்கும் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதிருந்தது. ஒருவேளை வாக்குப்பண்ணப்பட்ட “தாவீதின் குமாரனாக” இவர் இருப்பாரோ என்று கருதுகிறவர்களைத் தவிர, அவருடைய நற்பெயரை கெடுப்பதற்காகவே எருசலேமிலிருந்து பயணப்பட்டு வந்த வேதபாரகரும் பரிசேயர்களும் அங்கு இருக்கிறார்கள். இயேசுவைச் சுற்றி சுழன்று கொண்டிருந்த கொந்தளிப்பைப் பற்றி இயேசுவின் உறவினர்கள் கேள்விப்படும் போது, அவரைப் பிடித்துக் கொண்டுப் போக அவரிடத்துக்கு வருகிறார்கள். என்ன காரணத்துக்காக?
ஆம், இயேசுவின் சொந்த சகோதரர்கள்தாமே அவர் கடவுளுடைய குமாரன் என்பதை இன்னும் நம்பவில்லை. மேலுமாக, அவர் நாசரேத்தில் வளர்ந்து வந்த போது அவர்கள் அறிந்திருந்த இயேசுவுக்கும், இப்பொழுது அவர் உருவாக்கியிருந்த பெருங்குழப்பத்துக்கும் வாக்குவாதங்களுக்கும் முற்றிலும் சம்பந்தமில்லாதிருந்தது. ஆகவே இயேசு ஏதோ மனக்கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதாக அவர்கள் நம்புகிறார்கள். “அவர் மதிமயங்கியிருக்கிறார்” என்ற முடிவுக்கு அவர்கள் வருகிறார்கள். அவரைப் பிடித்து அவரை அழைத்துக் கொண்டுப்போக அவர்கள் விரும்புகிறார்கள்.
ஆனாலும் இயேசு பிசாசு பிடித்திருந்தவனை சொஸ்தமாக்கிவிட்டிருக்கிறார் என்பதற்குரிய அத்தாட்சி தெளிவாக இருக்கிறது. இது உண்மையில் நடந்தது என்பதை மறுதலிக்கமுடியாது என்று வேதபாரகரும் பரிசேயரும் அறிந்திருக்கிறார்கள். ஆகவே இயேசுவின் பெயரைக் கெடுப்பதற்காக அவர்கள் ஜனங்களிடம்: “இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல” என்கிறார்கள்.
அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து இயேசு வேதபாரகரையும் பரிசேயரையும் தம்மிடத்தில் அழைத்து அவர்களிடம்: “தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப் போம்; தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்க மாட்டாது. சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத்தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்” என்கிறார்.
செயலறச் செய்யும் என்னே ஒரு நியாயம்! பரிசேயர்கள் தங்களைச் சேர்ந்தவர்களும் பிசாசுகளைத் துரத்துவதாக உரிமைப் பாராட்டுவதன் காரணமாக, இயேசு கேட்கிறார்: “நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்?” வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால், இயேசுவுக்கு எதிராக அவர்களுடைய குற்றச்சாட்டு அவரைப் போன்றே அவர்களுக்கும்கூட பொருந்தும். இயேசு அடுத்து எச்சரிப்பதாவது: “நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.”
பிசாசுகளைத் துரத்துவது சாத்தான் மீது தமக்கிருக்கும் அதிகாரத்தின் அத்தாட்சியாக இருப்பதை விளக்குவதற்கு இயேசு சொல்கிறார்: “அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.” பரிசேயர்கள் வெளிப்படையாகவே இயேசுவுக்கு விரோதமாக இருந்து, தங்களை சாத்தானுடைய ஏஜென்டுகளாக காண்பித்து வருகிறார்கள். அவர்கள் அவரிடமிருந்து இஸ்ரவேலரைச் சிதறடிக்கிறார்கள்.
இதன் விளைவாக இயேசு, “ஆவியானவருக்கு (பரிசுத்த ஆவிக்கு, NW) விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை” என்று இந்தச் சாத்தானிய விரோதிகளை எச்சரிக்கிறார். அவர் விளக்குகிறார்: “எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால், அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.” தெளிவாகவே, கடவுளுடைய பரிசுத்த ஆவியின் அற்புதமான கிரியையினால் செய்யப்பட்டதற்கு, கெட்ட எண்ணத்தோடு சாத்தானை காரணமாக குறிப்பிடுவதன் மூலம் அந்த மன்னிக்கமுடியாத பாவத்தை வேதபாரகர்களும் பரிசேயர்களும் செய்துவிட்டார்கள். மத்தேயு 12:22–32; மாற்கு 3:19–30; யோவான் 7:5.
▪ இயேசுவின் இரண்டாவது கலிலேயப் பயணம் எவ்விதமாக முதலாவதிலிருந்து வித்தியாசப்படுகிறது?
▪ இயேசுவின் உறவினர்கள் அவரைப் பிடிக்க ஏன் முற்படுகிறார்கள்?
▪ பரிசேயர்கள் இயேசுவின் அற்புதங்களை எவ்விதமாக சந்தேகிக்க முற்படுகிறார்கள்? இயேசு எவ்விதமாக அவைகளை மறுத்து வாதிடுகிறார்?
▪ பரிசேயர்கள் என்ன குற்றமுள்ளவர்களாக இருக்கிறார்கள்? ஏன்?