Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 91

ஒரு மலைமேல் இயேசு கற்பிக்கிறார்

ஒரு மலைமேல் இயேசு கற்பிக்கிறார்

இயேசு இங்கே உட்கார்ந்திருப்பதைப் பார். கலிலேயாவிலுள்ள ஒரு மலையில் இந்த ஜனங்கள் எல்லோருக்கும் அவர் கற்பித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ரொம்ப பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் அவருடைய சீஷர்கள். இவர்களில் 12 பேரைத் தம்முடைய அப்போஸ்தலர்களாக தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த அப்போஸ்தலர்கள் இயேசுவின் முக்கிய சீஷர்கள். இவர்களுடைய பெயர்கள் உனக்குத் தெரியுமா?

அங்கே சீமோன் பேதுருவும் அவருடைய சகோதரன் அந்திரேயாவும் இருக்கிறார்கள், யாக்கோபும் யோவானும்கூட அங்கே இருக்கிறார்கள், இவர்களும் சகோதரர்கள்தான். மற்றொரு அப்போஸ்தலனுக்கும் யாக்கோபு என்று பெயர். சீமோன் என்ற இன்னொருவர் இருக்கிறார். யூதாஸ் என்ற பெயரில் இரண்டு அப்போஸ்தலர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் யூதாஸ் காரியோத்து என்றும், இன்னொருவர் ததேயு என்றும் அழைக்கப்படுகிறார். பிலிப்பு, நாத்தான்வேல் (பற்தொலொமேயு என்றும் பெயர்), மத்தேயு, தோமா ஆகியோரும் இருக்கிறார்கள்.

சமாரியாவிலிருந்து திரும்பி வந்த பிறகு, இயேசு முதல் தடவையாக: ‘பரலோக ராஜ்யம் நெருங்கி வந்திருக்கிறது’ என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். அந்த ராஜ்யம் என்னவென்று உனக்குத் தெரியுமா? அது கடவுளுடைய உண்மையான அரசாங்கம். இயேசுவே அதன் ராஜா. அவர் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்து பூமிக்குச் சமாதானத்தைக் கொண்டு வருவார். கடவுளுடைய ராஜ்யம் இந்த முழு பூமியையும் ஓர் அழகிய பரதீஸாக மாற்றும்.

அந்த ராஜ்யத்தைப் பற்றித்தான் இயேசு இங்கே ஜனங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறார். அதோடு, ஜெபிக்க வேண்டிய விதத்தைப் பற்றி விளக்குகிறார். ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய பெயர் மகிமைப்படுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம், பரலோகத்தில் செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக’ என்று ஜெபிக்கும்படி சொல்கிறார். இதைக் ‘கர்த்தருடைய ஜெபம்’ என்று பலர் அழைக்கிறார்கள். வேறு சிலரோ ‘பரமண்டல ஜெபம்’ என்று அழைக்கிறார்கள். இந்த முழு ஜெபத்தையும் உன்னால் சொல்ல முடியுமா?

ஒருவரையொருவர் எப்படி நடத்த வேண்டும் என்றும்கூட ஜனங்களுக்கு இயேசு கற்பித்துக் கொண்டிருக்கிறார். ‘மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாயோ அதையே நீ அவர்களுக்குச் செய்’ என்று அவர் சொல்கிறார். மற்றவர்கள் உன்னை அன்பாக நடத்தும்போது நீ சந்தோஷப்படுவாய் அல்லவா? அதனால், நாமும் மற்றவர்களை அன்பாக நடத்த வேண்டும் என்று இயேசு சொல்கிறார். பரதீஸ் பூமியில் எல்லோரும் இப்படி அன்பாக நடந்துகொள்ளும்போது எவ்வளவு அருமையாக இருக்கும் இல்லையா?