Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 94

சிறு பிள்ளைகளை அவர் நேசிக்கிறார்

சிறு பிள்ளைகளை அவர் நேசிக்கிறார்

இயேசு தம்முடைய கைகளால் ஒரு சிறு பையனை அணைத்துக் கொண்டிருப்பதைப் பார். இதைப் பார்த்ததும், இயேசுவுக்கு சிறு பிள்ளைகள் மீது ரொம்ப ரொம்ப அக்கறை இருக்கிறதென்று உன்னால் சொல்லிவிட முடியும். இங்கே நிற்பவர்கள் இயேசுவின் அப்போஸ்தலர்கள். இவர்களிடம் இயேசு என்ன பேசிக் கொண்டிருக்கிறார் தெரியுமா? நாம் பார்க்கலாம்.

இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் நீண்ட தூரம் பயணம் செய்துவிட்டு இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறார்கள். வழியில் அப்போஸ்தலர்களுக்குள் ஒரு சண்டை நடந்தது. அதனால் இயேசு அவர்களிடம்: ‘வழியில் நீங்கள் எதைப் பற்றி சண்டை போட்டுக் கொண்டிருந்தீர்கள்?’ என்று கேட்கிறார். உண்மையில், அவர்கள் எதைப் பற்றி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் என்று இயேசுவுக்குத் தெரியும். ஆனால் அப்போஸ்தலர்கள் அதை அவரிடம் சொல்வார்களா என்று பார்க்கத்தான் அவர் அந்தக் கேள்வியைக் கேட்கிறார்.

அப்போஸ்தலர்கள் வாயே திறக்கவில்லை, ஏனென்றால் தங்களில் யார் மிகப் பெரியவன் என்பதைப் பற்றியே அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். சில அப்போஸ்தலர்கள் மற்றவர்களைவிட அதிக முக்கியமானவர்களாக இருக்க விரும்பினார்கள். அப்படி எல்லோரையும்விட பெரியவனாக இருக்க ஆசைப்படுவது சரியல்ல என்பதை அவர்களுக்கு இயேசு எப்படி எடுத்துச் சொல்வார்?

ஒரு சிறு பையனை அழைத்து, அவனை எல்லோர் முன்பாகவும் நிறுத்துகிறார். பிறகு தம்முடைய சீஷர்களிடம்: ‘இதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன், நீங்கள் எல்லோரும் சிறு பிள்ளைகளைப் போல மாறினால் தவிர, கடவுளுடைய ராஜ்யத்திற்குள் ஒருபோதும் போக மாட்டீர்கள். இந்தப் பிள்ளையைப் போல் ஆகிறவனே கடவுளுடைய ராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான்’ என்கிறார். இயேசு இதை ஏன் சொன்னார் என்று உனக்குத் தெரியுமா?

சிறு பிள்ளைகள் மற்றவர்களைவிட பெரியவர்களாக இருக்க வேண்டும் அல்லது அதிக முக்கியமானவர்களாய் இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட மாட்டார்கள். எனவே இந்த விதத்தில்தான் பிள்ளைகளைப் போல அப்போஸ்தலர்கள் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும், பெரியவர்களாக அல்லது முக்கியமானவர்களாக இருப்பதைப் பற்றி சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது.

சிறு பிள்ளைகள் மீது தமக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதை இயேசு வேறு பல சமயங்களிலும் காட்டியிருக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு, இயேசுவைப் பார்ப்பதற்காக சிலர் தங்களுடைய பிள்ளைகளை அழைத்து வருகிறார்கள். அப்போது, அப்போஸ்தலர்கள் அவர்களைத் தடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் இயேசு தம்முடைய அப்போஸ்தலரிடம்: ‘பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்க வேண்டாம். கடவுளுடைய ராஜ்யம் அவர்களைப் போன்ற ஆட்களுக்குத்தான் சொந்தம்’ என்கிறார். பிறகு, அந்தப் பிள்ளைகளைத் தூக்கி வைத்துக்கொண்டு, அவர்களை ஆசீர்வதிக்கிறார். இயேசு சிறு பிள்ளைகளை நேசிக்கிறார் என்பதை அறியும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது அல்லவா?